Saturday, January 30, 2021

பசித்திரு, தனித்திரு, விழித்திரு

 பசித்திரு, தனித்திரு, விழித்திரு


- முனைவர் தி.சுரேஷ்சிவன்


'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரிகள் ராமலிங்க வள்ளலார் உள்ளத்தில் எழுந்த உணர்வை நமக்கு காட்டுபவை. எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னால், பறப்பன, நடப்பன, நீந்துவன என சக உயிர்களை கொன்று தின்றும் வழக்கத்தை முற்றிலும் எதிர்த்தவர் வள்ளலார்.  இறந்த உயிரினத்தின் உடலை புதைப்பதற்கு என் வயிறு இடுகாடு இல்லை என்று சொன்னவர். 

ராமலிங்கம் எனும் இயற்பெயருடைய வள்ளலார், தனது வாழ்வில் மூன்று நிலைகளை கடந்தவர். முதலில் நடராஜ வழிபாடு. 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்' அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்'என்று பாடியவர். பின்னர் அருவுருவ வழிபாடு, சிவலிங்கம் மற்றும் ஜோதி வழிபாட்டினை செய்து திருநீறு பூசி நின்றார். பிறகு சுத்த சன்மார்க்கம் என்ற நெறியில் எந்த சின்னமும் இடாமல், அன்பு எனும் சக்தியை உயிர்களிடத்தில் செலுத்த அறிவுறுத்தி நின்றார். 

சிறுவயதில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் ஆன்மிக கல்வியை படித்த வள்ளலார், கந்தக் கோட்டம் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு தெய்வப் பிறவியாக உருவெடுத்தார்.  பின்னர் வடலுார் சென்று 'தரும சாலை' தொடங்கி ஏழை எளியோருக்கு இலவசமாக உணவளித்தார். இன்றளவும் அந்த அன்னதானம் தொடர்ந்து வருகிறது.

ஜாதிய பாகுபாடுகளை சாடினார். எல்லா மதத்தினைரையும் அரவணைத்து 'சர்வசமய சமரச சுத்த சன்மார்க்கம்'என்ற மார்க்கத்தை தோற்றுவித்தார். வள்ளலாரின் சிந்தனை, அவர் காலத்தில் பலருடைய ஒப்புதலை பெறவில்லை என்பதால், 'கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்றும் வருத்தப்பட்டார்.  ஆனால் தற்போது உலகம் எங்கும் இவருடைய பாடல்கள் பாடப்படுகின்றன, சீர்திருத்தங்கள் பின்பற்றப்படுகின்றன.

திருவருட்பா:
இவருடைய பாடல்கள் மொத்தம் ஆறாயிரம். இவை ஆறு திருமுறைகளாக தொகுக்கப்பட்டு உள்ளன. இன்றும் தமிழிசை வாணர்களால் இசையரங்குகளில் பாடப்பட்டு வருகின்றன.  தமிழ்நாட்டில் வள்ளலார் பற்றி அறியோதோரே இல்லை என்றளவுக்கு 'திருவருட்பா' புகழ் பெற்ற நுாலானது.

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் படித்தே, வள்ளலார் இத்தகைய நிலையடைந்தார். சைவ சமய நெறியில் தொடக்க காலத்தில் இருந்து பின்னர், தனி வழியாக தமக்கென சன்மார்க்க நெறியை உருவாக்கினார்.

வள்ளலாரின் முக்கிய இரண்டு குறிக்கோள்கள் 1. ஜீவ காருண்யம், 2. மரணமிலாப் பெருவாழ்வு, எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருப்பது மட்டுமல்லாமல், ஆன்மிக வழியில் நின்று அறப்பணி செய்து மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

வள்ளலார் ஜோதியாக கலந்தார் என்று சொல்லுவர். தன்னுடைய உடலை யோக நெறியில் நிலைப்படுத்தி காற்றில் கரைந்து போகும் வண்ணம் ஒரு பேறினை பெற்றார் வள்ளலார். தைப்பூச நாளில் வடலுாரில் அவர் அடைந்த முக்தி நிலையை இன்றும் வழிபாடு செய்து வருகின்றனர். 

பாடல்கள்:
வள்ளலார் பாடல்களும், அவர்தம் கொள்கைகளும் மனதிற்கு இதம் தரும்.
'ஒருமையுடன் நினது திருமலரடி
நினைக்கின்ற உத்தமர் தம் உறவு  வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை  வேண்டும்'

என்று மனமுருகப்பாடி, இறைவனிடம் நம் மனது சேராவண்ணம் தடுக்கும் கருவிகளை (சக்திகளை) பட்டியலிடுவார் வள்ளலார். சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும் சமய சொற்பொழிவாளராகவும் விளங்கிய வள்ளலார், நூலாசிரியராக மொழி ஆய்வாளராக விளங்கியது தான் வியக்கவைக்கும் தன்மை. வெண்ணிற ஆடையை உடுத்துவதை வழக்கமாகக் கொண்ட வள்ளலார், கடவுளை ஜோதி வடிவாகக் கண்டு வழிபாடு செய்தார். 

பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற உபசேதத்தை செய்த வள்ளலார், எல்லா உயிர்களையும் நேசிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்து காட்டியவர். 'நமக்கு பசி என்ற ஒன்று இல்லாவிட்டால், யார் இறைவனை நினைப்பார்கள்' என்று கேட்டு, உணவை கண்டவுடன் நமக்கு மகிழ்ச்சி ஏற்படுவதை சுட்டிக்காட்டி 'உணவை' கடவுளைப் போன்று போற்ற வேண்டும் என்று கூறி அதே நிலையில் வாழ்ந்து காட்டியவர்.

இளமை பற்றி வள்ளலார்:
இந்த உடம்பில் தோன்றும் இளமை கொஞ்சகாலம் கழித்து அழிந்து விடுகிறது. உடலில் தோன்றி மறையும் இந்த இளமையானது பகலில் கொண்ட மாறுவேடம் பளிச்சென்று வெளியாகி விடுவதுபோல் அழியக்கூடியது. வஞ்சனை நெடுநாள் மறைந்திடாமல் வெளிப்படுவது போல அழியக்கூடியது.கடற்கரையின் மீதேறிய கடலின் அலைநீர் வற்றி விடுவதுபோல இளமை அழியக்கூடியது.

மாலை நேரத்தின் முன் வெளிச்சத்தில் மஞ்சள் வெயில் தோன்றிச் சிறிது நேரத்திலேயே மாறிவிடுவதுபோல இளமை அழியக்கூடியது. மேகத்தில் தோன்றும் வானவில் சற்று நேரத்திலேயே விரைந்து மறைவதைப்போல இளமை அழியக்கூடியது என வர்ணிக்கிறார் வள்ளலார்.

'நீரில் தோன்றி உடன் மறையும் நீர்க்குமிழிபோல அழியக்கூடியது இளமை. இப்படி நிலையில்லாமலிருக்கும் இளமைப் பருவத்தை நிலையெனக் கருதி, உறுதியாகப் பற்றிக் கொண்டு அழகிய பெண்கள் மீது ஆசை கொண்டு அவர்களுடைய கண்பார்வையாகிய வலையில் சிக்கி, அறிவு மயங்கி, ஆற்றல் மழுங்கித் தீய செயல்களைப் பலமுறை செய்கின்றேன்.  சிறிதளவுகூட உன் திருவடியில் அன்பு வைத்து வணங்காது அறியாமையில் திளைக்கிறேன். அனுபவம்மிக்க அருளாளர்களிடம் ஞானநுால் தத்துவங்கேட்டுச் சிந்தித்துத் தெளிவுபெற்ற மெய்யுணர்வாளர்கள் அழியக்கூடிய இளமையை விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்பாத அந்த நிலையா இளமையை நிலையென்று கருதிப் பெரிதும் அவதிப்படுகிறேன். அந்தச் சிறுமையை அகற்றி என்னை நல்வழிப்படுத்திக் காத்தருள வேண்டும்' என்கிறார் ராமலிங்க அடிகள்.

யாரிடம் வேண்டுகிறார்:
சிறுமை அகற்றும் சீராளனாகத் திகழும்  கந்தகோட்டத்துள் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமாகத் திகழும் முருகப்பனிடம்தான் வேண்டுகிறார்.

கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத விப்பெருங்
        கன்ம வுடலிற் பருவம் நேர்
        கண்டழியு மிளமைதான் பகல் வேடமோ புரைக்
        கடனீர் கொலோ கபடமோ
    உற்றொளியின் வெயிலிட்ட மஞ்சளோ வானிட்ட
        ஒருவிலோ நீர்க் குமிழியோ
        உலையனல் பெறக் காற்றுள் ஊதும் துருத்தியோ
        ஒன்றுமறியே னிதனை நான்
    பற்றுறுதியாக் கொண்டு வனிதையர்கண் வலையினில்
        பட்டுமதி கெட்டுழன்றே
        பாவமே பயில்கின்ற தல்லாது நின்னடிப்
        பற்றணுவு முற்றறி கிலேன்
    சற்றையகல் சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.
               (தெய்வமணிமாலை)

புண்ணியச் செயல்கள்:
எனவே நில்லாதனவற்றை நிலையாகக் கருதி ஏமாந்து போகாமல் நிலையான இறையருளைப் பெற வேண்டும்; அதன்வழி புண்ணியச் செயல்களைப் புரிதல் வேண்டும். அவ்வாறு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களே வானுறையும் தெய்வத்தில் வைக்கப்படுவர் என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப வாழ வேண்டும்.

நல்ல கருத்துக்களை அள்ளி வழங்கும் வள்ளலாரின் தெய்வமணிமாலையை நாளும் வாசிக்க வேண்டும். வள்ளலார் பாடியுள்ள தெய்வமணிமாலைப் பாடல் ஒவ்வொன்றும் படிப்போரை ஈர்த்து இசைவித்து, பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் தன்மையது. நீதிக் கருத்துக்களையும் புராணக் கதைகளையும், உவமைகளையும் உணர்த்துவது.


கலைமாமணி முனைவர் தி.சுரேஷ்சிவன்
செம்மொழி இசைத்தமிழ் அறிஞர், மதுரை
தினமலரில் பதிவு செய்த நாள்: 29.1.2021











Wednesday, January 27, 2021

அழகு பொருந்திய பாமாலை


-- முனைவர்.  ஒளவை அருள்


பதிணென் கீழ்கணக்கு நூல்களின் பாவளத்தில் பன்னிரண்டாது நூலாக தித்திப்புப் பாடல்கள் நிரம்பிய திணைமாலை நூற்றைம்பதிலிருந்து  ஒருசில பாடல்களின் சுவை அறிவோம்…

திணைமாலை நூற்றைம்பது- அறிமுகவுரை

‘திணை’ என்ற சொல்லுக்கு, ‘ஒழுக்கம்’ என்பது ஒரு பொருள்.  இச்சொல்லை, திண்+ஐ என்று பிரிக்கலாம்.  நிலைமொழியாகிய ‘திண்’ என்பதற்கு, ‘உறுதி’ என்று பொருள்.  வழிமொழியாகிய ‘ஐ’ என்பதற்கு, ‘அழகு’ என்று பொருள்.  (ஐ என்பது, இரண்டாம் வேற்றுமை உருபாகவும், அசைச் சொல்லாகவும், இடைச்சொல்லாகவும் கொள்ளப்படும்).  இங்குத் ‘திணை மாலை’ என்பதற்கு ‘உறுதியுடைய அழகு பொருந்திய பாமாலை’ என்று கொள்ளலாம்.  நூற்றைம்பது என்பது, எண்ணிக்கையைக் குறிக்கும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலையெனும் ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் ஒழுகலாற்றை வகுத்துத் தொகுத்துக் கூறுவது இந்நூல்.  கீழ்க்கணக்கு நூல்களில், அகநூல்களாக ஆறு உள.  அவற்றுள் நான்கு நூல்கள், ‘திணை’ என்ற பெயரோடு அமைந்துள்ளன.  அவற்றுள்ளும் மிகுதியான பாடல்களை உடையது இந்நூல்.

ஒழுக்கம், உரிப்பொருள் எனப்படும்.  குறிஞ்சி-புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.  முல்லை-இருத்தல் இருத்தல் நிமித்தமும், மருதம் – ஊடலும் ஊடல் நிமித்தமும், நெய்தல் – இரங்கலும் இரங்கல் நிமித்தமும், பாலை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.  இவற்றின் அடிப்படையிலேயே பாடல்கள் அமைந்துள்ளன

பாடல் 132-ன் மூன்றாமடியில் நான்காஞ்சீரும், பாடல் 146 -ன் முதலடியில் இரண்டாஞ்சீரும் சிதைந்துள்ளன.

இந்நூலின் ஆசிரியர், ‘கணிமேதாவியார்’.  ஏலாதி என்னும் நூலின் ஆசிரியரும் இவரே.  ‘கணிமேதை’ என்றும் இவரைக் கூறுவர்.  இவர், சோதிடக்கலை வல்லவரெனவும், சமணச் சமயத்தாராகக் கொள்ளத்தக்காரெனவும், ‘ஏலாதி’ அறிமுகவுரையில் கண்டனவே,


குறிஞ்சித்திணை
(தலைமகளும் தோழியும் ஒருங்கிருந்த வழிச்சென்ற, தலைமகன், தோழியை மதியுடம்படுத்தது)
            நறைபடர் சாந்தம் அறஎறிந்து, நாளால்
            உறைஎதிர்ந்து வித்தியஊழ் ஏனல் – பிறையெதிர்ந்த
            தாமரைபோல் வாள்முகத்துத் தாழ்குழலீர்!- காணீரோ
            ஏமரை போந்தன ஈண்டு. (1)

மணம் மிகுந்த சந்தன மரங்களை வேருடன் வெட்டியெடுத்துச் சீரமைத்து, நலமிகு நாளதனில், பருவமழை பெய்யுங்காலத்தையும் எதிர்கொண்டு வித்திட்டதனால், முதிர்ச்சியடைந்த திணைப்பயிர் விளைந்துள்ள மலைப்புனத்தைக் காவல் செய்யும் தலையணி வகையினை நிகர்க்கும் தாமரை மலர் போன்ற அழகு முகத்தையும், நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லிய நீண்டு வளர்ந்துள்ள கூந்தலையும் பெற்றுள்ள மெல்லியரே!  இப்போது இவ்விடத்தில் திணைப்புனம் காவல் செய்வதைக் காண்பீராக!

 
(இராக்குறி வேண்டிய தலைமகளுக்குத் தோழி, மறுத்துச் சொல்லியது)
            கறிவளர்பூஞ் சாரல் கைந்நாகம் பார்த்து
            நெறிவளர் நீள்வேங்கை கொட்கும் – முறிவளர்
            நன்மலை நாட! இரவரின் வாழாளால்,
            நன்மலை நாடன் மகள். (7)

தலைவன், தலைவியைப் பகற்பொழுதில் காணவரின், ஊரானது அலர் தூற்றும்.  அடுத்தபடி, இரவுப்பொழுதில்தான் காணவர வேண்டும்  அந்தப் பொழுதையும் ஆராய்ந்து பார்ப்பின், காட்டில் ஐந்து தலை நாகங்களும், யானைகளும் நிறைந்துள்ளன.  பதினாறடி பாயக்கூடிய வேங்கைப் புலிகளும் திரியும்.  ஆகையால் தலைவனைத் தோழி, இரவில் வர வேண்டாமெனக் கூறுகிறாள்.  இரண்டு பொழுதுகளும் வேண்டாமென்றால், என்னதான் செய்வது ?  எனவே, தலைவியை விரைந்து மணம் செய்துகொள்ள வருமாறு கூறுகிறாள்.

 
(தோழி, படைத்து மொழி கிளவியான் வரைவு கடாயது)
            பனிவரைநீள் வேங்கை பயமலைநன் நாட
            இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் – முனிவரையுள்
            நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்
            ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று. (27)

‘வேங்கை மரங்கள் சூழ்ந்த பனிபடர்ந்த மலை நாட்டுக்குத் தலைவனே!  இதுவரை தலைவியை மணம் செய்து கொள்ளாமல், களவுக் காலத்தை நீளச் செய்தாய்.  இனியும் அவ்வாறு நீளச் செய்ய மாட்டாய் என்றெண்ணி உனக்குச் சொல்வேன்.  நீ இந்த மலைச்சாரலில் வந்து செல்வதை என் அன்னை அறிந்தனள்.  இனியும் தலைவி, இற்செறிப்புக்கு ஆளாக வேண்டா.  எனவே, விரைவாகத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.  இல் வாழ்வை மேற்கொண்டு, இருவீரும் துன்பற்ற இன்ப வாழ்வை மேற்கொள்வீராக! ‘  என்று, தோழி கூறினாள்.

 
நெய்தல் திணை
(தலைமகனைத் தோழி, வரைவு கடாயது)
            திரைபாக னாகத் திமில்களி றாகக்
            கரைசேர்ந்த கானல் படையா – விரையாது
            வேந்து கிளர்ந்தன்ன வேலைநீர்ச் சேர்ப்ப! நாள்
            ஆய்ந்து வரைதல் அறம். (52)

நெய்தல் நிலத் தலைவனாம், கடற்கரைக் கானலைச் சேர்ந்தவனுமாகிய தலைமகன், திருமணம் செய்து கொள்வதை நீட்டித்து வருகின்றான்.  தலைவியைச் சந்திக்கப் பகலின் வருவதாயின், ஊரார் அலர் தூற்றுவர்.  இரவில் வருவதாயின், இடர்ப்பாடுகள் பலவும் உண்டு.  எனவே, அவனைத் தலைமகளின் தோழி எதிர்கொண்டு, நல்ல நாளொன்றைத் தேர்ந்தெடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றாள்.  அவ்வாறு வரைவினை மேற்கொள்வதே அறமுமாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றாள்.


(‘இப்பொழுது வாரல்!’ என்று, வரைவு கடாயது)
            பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது
            இரவரின் ஏதமும் அன்ன – புகஅரிய
            தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே
            ஏழை நுளையர் இடம். (59)

இரவுக் குறியிலும், பகற்குறியிலுமென இரண்டு குறியிடங்களிலும் வரவேண்டா என மறுத்துரைப்பது இடம்பெற்றுள்ளது.  தலைமகன் பகற்பொழுதில் வருவதாயின், ஊர்மக்களின் பழிச்சொல் உண்டாகும்.  அதை விடுத்து இரவுப் பொழுதில் வருவதாயின், பகற்பொழுதைப் போன்றே துன்பங்கள் பலவும் உண்டாகும்.  பகற்பொழுதின் பழிச்சொல்லானது, தலைமகனுக்கும், தலைமகளுக்குமானது.  இரவுப்பொழுதின் இடர்ப்பாடுகள், தலைமகனுக்கானது.  மேலும், ஓயாது அலைவீசிக் கொண்டிருக்கும் நெய்தலங்கானத்தில், தாழைகளோ மிகவும் செறிவாக மண்டிக்கிடக்கும்.  வந்து செல்வது, மிகவும் அரிய செயல்.  எனவே, ‘இனிமேலும் வரவேண்டா.  வரைந்து கொள்வதே வேண்டற்பாலது’ என்று தோழி அறிவுறுத்தினாள்.


பாலைத்திணை
(பருவம் காட்டி, தலைமகளைத் தோழி வற்புறுத்தியது)
            உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன்
            வெருவிவீந்து உக்கநீள் அத்தம் – வருவர்
            சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே
            இறந்துகண் ஆடும் இடம். (80)

கண் துடித்தல் என்பது, ஒருவகைச் சகுனமாகும்.  மகளிர்க்கு இடக்கண் துடிப்பதென்பது, நன்மையைச் செய்யுமென்பர்.  நெடிய பாலை நில வரியாகப் பொருள்தேடச் சென்ற தலைமகன், இன்றேனும் வருவானென்று தலைவி, நம்பிக்கை கொள்கின்றாள்.  அதனைக் குறிக்கும் சகுனமாகத் தலைவியின் இடக்கண் துடிக்கின்றது.  இதனைத் தோழியானவள், வேலைப் பழிக்கின்ற விழிகளைக் கொண்ட தலைமகளிடம் கூறி, பருவங்காட்டி வற்புறுத்தினாள்.


(தலைமகள் இற்செறிப்புக் கண்ட பின்னை, அவள் நீங்கிய புனங்கண்டு, ஆற்றானாய் மீள்கின்ற தலைமகன் சொல்லியது.  சுரத்திடைச் சென்ற செவிலித்தாய் சொல்லிய தூவம் ஆம்)
            கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர்
            நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் – சென்றாளுக்(கு)
            என்னுரைத்தீர்க்(கு) என்னுரைத்தாட்(கு) என்னுரைத்தீர்க்(கு) என்றுரைத்தாள்
            மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? (81)

சுரத்திடைச் சென்ற செவிலித்தாய், தலைவியின் பொருட்டாக, ஆங்குள்ள கொன்றை, குருந்தம் ஆகிய மரங்களையும், முல்லைக் கொடியையும் எதிர்கொண்டு பின்வருமாறு வினவுகின்றாள்.  “தலைவியைக் காட்டி, கண்டு, நீங்கள் என்னதான் சொன்னீர்கள்?  அதற்குத் தலைவியும் என்னதான் சொன்னாள்?  மீளவும் அவளிடம் நீங்கள் என்னதான் சொன்னீர்கள்?  அதன் பிறகும் தலைவி என்னதான் சொன்னாள்?”

மரங்கள் தலைவியைப் பார்த்து, “எங்களையெல்லாம் விட்டுவிட்டுச் செல்லத் துணிந்துவிட்டாயா?” என்றன.  தலைவி மரங்களைப் பார்த்து, “உங்களைப் பிரிந்து செல்லத் துணியவில்லை.  தலைவனிடம் உடன்போக்கு மேற்கொள்கின்றேன்”  என்றாள்.  மரங்கள், “உன் தாய் தேடிவரின், என்ன சொல்வது?”  என்றன.  தலைவி, “இவ்வழியாகத் தான் தலைவி உடன்போக்கு மேற்கொண்டாள்.  அவள் மகிழ்ச்சியுடன்தான் காணப்பட்டாள்.  நீங்களும் வருந்தாமல் வீடு திரும்புங்கள்” என்றாள்.  இவ்வாறு நடந்திருக்குமென்பது, செவிலித்தாயின் கற்பனை.


முல்லைத்திணை
(பருவங்கண்டு அழிந்த கிழத்தி, தோழிக்குச் சொல்லியது)
            வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான்
            வண்டினம் வாய்வீழா மாலையும் – வண்டினம்
            ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத
            வாராத நாளே வரும். (101)

தலைமகன் தோழியை நோக்கி, ‘தேன்வண்டுக் கூட்டம், கவர்ந்து கைப்பற்றிக் கொள்ளாத புல்லாங்குழல் என்பதன் மூலம் அல்லி மலரையும், வாய் மடுக்காத மாலைப் பொழுதைச் சுட்டாத மலர் மாலையையும் குறித்தன. வௌவாத ஆம்பல், வாய் வீழா மாலை, ஆராத பூந்தார் என்பனவற்றுள், வௌவாத, வீழா, ஆராத என்பவை, எதிர்மறை முகத்தான் கூறப்பட்டன.  அவற்றைப் போலவே, ஈற்றடியை ‘வாராத நாளே வரும்’ என்று, தலைவியின் உருக்கத்தை உணர்த்தியுள்ளார் புலவர்.  ‘வண்டினம்’ என்பது, மூவிடங்களில் வந்து நரே பொருள் தந்தமையால், ‘சொற்பொருள் பின்வருநிலை’ யாகும்.  ‘வௌவாத’, ‘வாய் வீழா’, ‘ஆராத’ என்பன, ‘பொருள் வருநிலை’ யாகும்.


மருதத்திணை
(பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது)
            மென்கண் கலிவய லூரன்தன் மெய்ம்மையை
            எங்கட்(கு) உரையாது எழுந்துபோய் – இங்கண்
            குலம்காரம் என்(று(அணுகான் கூடும்கூர்த்(து) அன்றே
            அலங்கார நல்லார்க்(கு) அறை. (127)

‘மென்மையான கண்ணோட்டமுடைய வளமையான மருதநிலத் தலைவன், தன்னுடைய உள்ளத்துணர்வினை எங்களிடம் சொல்லாமல் எழுந்து போனதுடன், இவ்விடத்தில் குடிகொண்ட சினமென்றெண்ணி, எம்மை நெருங்காதவனானான்.  அச்செயலானது, அளவற்ற அதிசயமானதென்ற, சிறப்புடைய தலைவனுக்கு எடுத்துரைப்பாயாக!’ என்று, பாணனிடம் தலைவி கூறினாள்.

            பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு
            மாலையாழ் ஓதி வருடாயோ? – காலையாழ்
            செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு
            நையும் இடமறிந்து நாடு. (133)

‘பாலைப் பண்ணை இசைக்கும் பாணனே! முன்பு உன் தலைவனுக்கு அந்திவேளை யாழிசைத்து, வருடியதில்லையோ?  வைகறையில் யாழிசைக்கும் இடத்தை அறியமாட்டாய் போலும்!  இப்போது வந்துள்ள உனது பொய்மைச் சொல்லுக்கு, எங்கே இரங்குவாரோ, அந்த இடத்தை அறிந்து கொண்டு, அங்குச் செல்வாயாக!’ என்று, தலைவனுக்காகத் தலைவியைக் காண வந்த பாணனிடம் தலைவி மொழிந்தாள்.

--



Sunday, January 24, 2021

ஔவையின் ஆத்திரம்

ஔவையின் ஆத்திரம்

--  முனைவர்.ப.பாண்டியராஜா


காவு என்றால் தோளில் தொங்கப்போடு என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது பண்டைய மக்கள் வழக்கம். இதிலிருந்து வந்ததுதான் காவடி என்ற சொல்.

இப்பொழுது மலைபடுகடாம் என்ற நூலிலிருந்து ஒரு காட்சியைப் பார்க்கலாம். ஒரு பாணர் கூட்டம் ஏதாவது ஒரு புரவலனைத் தேடிப் புறப்படுகிறது. முதலில் ஒரு பாணன் தன்னுடைய இசைக்கருவிகளையெல்லாம் இரண்டு சம எடை கொண்ட மூட்டைகளாகக் கட்டி, பின்னர் அவற்றைக் காவடியில் சேர்த்து தூக்குகிறான்.
             திண் வார் விசித்த முழவொடு, ஆகுளி,
             நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்,
             மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு,
             கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின்,
             இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு,
             விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ,
             நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை,
             கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி,
             நொடி தரு பாணிய பதலையும், பிறவும்,
             கார் கோள் பலவின் காய்த் துணர் கடுப்ப,
             நேர் சீர் சுருக்கிக் காய கலப் பையிர்

இங்கே முழவு, ஆகுளி, பாண்டில், கோடு, தூம்பு, குழல், தட்டை, எல்லரி, பதலை ஆகியவை இசைக்கருவிகள். இவற்றைப் பலாக்காய் மூடைகள் போல் இரண்டு மூடைகளாகக் கட்டுகிறான். இந்த மூட்டை கலப்பை எனப்படுகிறது. இது உழுகிற கலப்பை அல்ல. கலம் + பை. அதாவது இசைக் கலங்களை வைக்கும் பை. இந்தக் காலத்துச் சில பாட்டிமார் இடுப்பில் செருகியிருக்கும் சுருக்குப்பை போல் பெரிதாக இருக்கும். அதன் வாயில் நீண்ட கயிறு இருக்கும். அதை இரண்டு பக்கமும் இழுத்தால் வாய் மூடிக்கொள்ளும். இதன் கடைசி அடியைப் பாருங்கள்.

நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர்நேர் சீர் என்பது சம எடையைக் குறிக்கும்., முதலில் இரண்டு பைகளில் சம எடை உள்ளவைகளாகப் போட்டு, பின்னர் வாயை மூடுகிறான். இதுதான் சுருக்குதல். பின்பு இதனைக் கழியில் கட்டித் தோளில் தூக்கி வைக்கிறான் - அதனைக் ’காய’ என்ற சொல் குறிக்கிறது. காவு, காவிய, காய என்று வரும். காவுதல் என்றால் தோளில் சுமத்தல் என்று பொருள் என்று கண்டோம். இரண்டு சம எடைகளாகப் போட்டு, கழுத்தைச் சுருக்கி மூடி, காவடியில் கட்டி, தோளில் தூக்கிப்போட்ட இசைக்கலப் பைகளை உடையவர்களே என்று இதற்குப் பொருள். இந்தக் கலப் பைகளில் இரண்டு கயிறுகள் இருக்கும். ஒன்று காவடிக் கம்பில் தொங்க விட, அடுத்தது பையின் வாயை மூட.
இப்போது ஔவைக்கு வருவோம். ஔவையார் அதியமானிடம் பரிசில் வேண்டிச் செல்கிறார். அவரை நன்கு வரவேற்ற அதிகன் என்ன காரணத்தினாலோ பரிசில் கொடுக்கக் காலம் தாழ்த்துகிறான். 



பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஔவையார் ஒரு நாள் பொங்கி எழுந்துவிட்டார். தனது இசைக்கல மூட்டை முடிச்சுகளுடன் அவசரம் அவசரமாக வாசலை நோக்கி நடக்கிறார். அங்கிருக்கும் வாயில் காப்பவனைப் பார்த்துக் கூறுகிறார்:
வாயிலோயே வாயிலோயேவள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம்உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்துவரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கைபரிசிலர்க்கு அடையா வாயிலோயேகடு மான் தோன்றல் நெடுமான்_அஞ்சிதன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து எனவறும் தலை உலகமும் அன்றே அதனால்காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பைவாயில் காப்பவனே! பரிசிலர்க்கு அடையாமல் வரவேற்கிறாய் நீ, ஆனால் பரிசில் தராமல் ஏமாற்றுகிறான் உன் மன்னன். அவனுக்குத் தான் யார் என்று தெரியவில்லை. நான் யார் என்றும் தெரியவில்லை. உலகத்தில் அறிவும் புகழும் உடையவர்கள் செத்துப்போய்விடவில்லை என்று ஆத்திரத்துடன் கூறும் கடைசி அடியைக் கவனியுங்கள்.

காவினெம் கலனே சுருக்கினெம் கல பைகலங்களைக் கட்டித் தூக்கித் தோளில் போடுகிறேன் (காவினெம்). அதன் வாயைச் சுருக்கி மூடுகிறேன் (சுருக்கினெம்) என்கிறார் புலவர். இதனை மலைபடுகடாம் அடியுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.      நேர் சீர் சுருக்கி காய கலப்பையிர் - மலைபடுகடாம் - முதலில் பையைச் சுருக்கிப் பின்னர் தோளில் போடுதல் - இது நிதானத்தில் செய்வது. காவினெம் கலனே சுருக்கினெம் கலப் பை - ஔவையார் - முதலில் தோளில் தூக்கிப்போட்டுப் பின் பையைச் சுருக்குதல் - இது ஆத்திரத்தில் வந்த அவசரம்.இரண்டு சொற்களை மாற்றிப்போட்டுத் தன் ஆத்திரத்தை எவ்வாறு ஔவையார் வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.


‘தமிழ்மணி’ - தினமணி நாளிதழில் பதிவு செய்த நாள்: (24-1-2021-ஞாயிறு) 

Monday, January 18, 2021

தலையங்கம்: உழவுக்கும் கைத்தொழிலுக்கும் வந்தனை செய்வோம்



வணக்கம்.

மின்தமிழ் மேடை காலாண்டிதழின் வழி  உலகத் தமிழர்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.   பொதுமக்களிடையே ஆய்வுத்தரம்  நிறைந்த  வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதை தமிழ் மரபு அறக்கட்டளையின் தலையாய பணியாக இவ்வமைப்பு தொடங்கிய காலம் முதல் செயல்படுத்தி வருகின்றோம். தமிழகச் சூழலில், மிக நீண்ட காலமாக தொல்லியல் அகழாய்வுப் பணிகளிலும், வரலாற்று ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்ற அறிஞர்களின் உரைகளைப் பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்து வழங்குவதன் வழி தமிழக வரலாறு தொடர்பான  ஆய்வுப்பூர்வமான தரவுகளைக் கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சென்று சேர்க்க முடியும் என்பதைத் தமிழ் மரபு அறக்கட்டளை நம்புகின்றது. 

வரலாற்றுப் பாதுகாப்பு நடவடிக்கைகளோடு சமூக நலனை முன்னிறுத்தும் செயல்பாடுகளின் தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ’வையத்தலைமை கொள்’ பிரிவு மாற்றுப்பாலினம் மற்றும் மாற்றுப்பாலீர்ப்பு கொண்டோர் நலனைக் கருத்தில் கொண்டு மூன்று நாள் இணையவழி கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது. கலையும் வரலாறும், கலாச்சாரமும் மானிடவியலும், சமூகச் சிக்கல்களும் சாதனைகளும் என்ற மூன்று பொருண்மைகளில் இந்தியா-இலங்கை ஐரோப்பா எனப் பல பகுதிகளிலிருந்து சமூக செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்ட சிறப்பான ஒரு நிகழ்வாக இது அமைந்தது. மாற்றுப்பாலினத்தவர் சந்திக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகளை அலசியதோடு அப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை முன்னெடுக்கும் வகையிலும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்த ஒரு ஆரம்பத்தளமாக இந்த மூன்று நாள் நிகழ்வு நடந்தேறியது. இதன் தொடர்ச்சியாக, ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுப்பாலினத்தோருக்கான அறிக்கையை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் சீரிய பணியையும் ’வையத்தலைமை கொள்’ பிரிவு ஏற்று செயல்படுத்த ஆரம்பித்துள்ளது.

நவம்பர் மாதத்தில்  ’வடலூர் வரலாறு - கற்காலம் முதல் தற்காலம் வரை’ என்ற தலைப்பு கொண்ட ஆய்வு நூல் அதன் நூலாசிரியர் முனைவர்.ஜே ஆர் சிவராமகிருஷ்ணன் அவர்களது மிக நீண்டகால ஆய்வுப் பணியின் பலனாக வெளிவந்துள்ளது. இணைய வழி  நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.   இந்நூலை தமிழ் மரபு அறக்கட்டளையின் வலைத்தளத்திலிருந்து தரவிறக்கி வாசிக்கலாம்.

தமிழகம் பல சமயங்களும் தத்துவங்களும் தோன்றி வளர்ந்த ஒரு நிலப்பகுதி. சமணம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்தமைக்குப் பல சான்றுகளை இன்று கல்வெட்டுகளாகவும் சிற்பங்களாகவும் காண்கின்றோம். தமிழகத்தின்  நடுநாட்டில் சமண தடையங்கள் ஏராளம்  உள்ளன. இவற்றை ஆராய்ந்து அவை பற்றிய பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் வகையில் மூன்று நாள் தொடர் வரலாற்று ஆய்வுரைகள் இதே காலாண்டில் நிகழ்த்தப்பட்டன.  

செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட சங்கம்பீடியா வலைப்பக்கத்தின் வளர்ச்சி பற்றிய அறிவிப்பினை மைய நோக்கமாகக் கொண்ட சிறப்பு நிகழ்ச்சி டிசம்பர் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சங்கச்சோலை வலைப்பக்கத்தை உருவாக்கிய முனைவர்.ப.பாண்டியராஜா அவர்களது சிறப்புரை இந்த நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.
 
தமிழ் மரபு அறக்கட்டளையின் அருங்காட்சியகம் மற்றும் கண்காட்சிப் பிரிவின் ஏற்பாட்டில்  இளம் தொல்லுயிராளர் செல்வி அஸ்வதா பிஜுவின் `தொல்லுயிரியல் ஓர் அறிமுகம்` என்ற  உரையும்  இயற்கை சார்ந்த பாரம்பரிய கலைப் படைப்புகளை உருவாக்கும் முயற்சியை அறிமுகப்படுத்தும் வகையில் நுண்கலை ஆசிரியர் உமாபதி அவர்களது இணைய  வழி கைவினைக் கண்காட்சியும்  இக்காலாண்டில் இளையோருக்கான சிறப்பு அம்சமாக அமைந்தது. 

பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்களது திடீர் மறைவு உலகத் தமிழ் ஆய்வாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாக இந்த டிசம்பர் மாதத்தில் அமைந்தது. 2015ஆம் ஆண்டு பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களைத் தமிழ் மரபு அறக்கட்டளை `சிறந்த தமிழ் மானுடவியல் ஆய்வாளர்` என்ற சிறப்பு செய்து கௌரவித்தோம் என்பது நினைவு கூறத்தக்கது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.   (குறள் - 1032)  

உழவைப் போற்றுவது தமிழ்ப்பண்பாடு.  உழவர் திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் உலகத் தமிழர் அனைவருக்கும்  பொங்கல் வாழ்த்துகளையும் தமிழர் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி    

நெசவாளர்களும் துணிவணிகர்களும் நூல் விமர்சனம்



நூலாசிரியர்: எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)

நூல் விமர்சனம்: முனைவர்.க.சுபாஷிணி

வண்ண வண்ண ஆடைகளை விரும்பாத மனிதர்கள் தான் உண்டா? சென்ற மாதம் ஒரு சேலை வாங்கி இருப்போம். ஆனால் இன்று யாராவது அணிந்திருக்கும் சேலை அழகாகக் கண்களைக் கவர்ந்தால் அதனையும் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் எழாமலில்லை. பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் வகைவகையாக ஆடைகளை வாங்கி அணிந்து அழகு பார்ப்பதில் தனிக் கவனம் செலுத்தத் தவறுவதில்லை. சிறு குழந்தைகளிலிருந்து வயதான மூத்தவர்கள் வரை எல்லோருக்குமே மனதைக் கவர்வது மனிதர்கள் நாம் அணிந்து கொள்கின்ற வகை வகையான ஆடைகள் தான்.

ஆடைகளை வாங்கி அணிகின்ற நம் ஒவ்வொருவருக்கும் ஆடை உற்பத்தியின் பின்னால் இருக்கும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி அதிகம் கவனம் செல்வதில்லை. பொதுவாக எடுத்துக் கொண்டால் துணி நெ-நெய்வதற்குத் தேவையான நூலை உருவாக்கப் பருத்தி விவசாயம் அடிப்படையாக அமைகிறது. அதன் பின்னர் பருத்திப் பஞ்சிலிருந்து நூல் உருவாக்கம் நூலுக்குச் சாயம் ஏற்றும் தொழில், துணி உருவாக்கம், துணியில் வண்ணம் திட்டுவது, சாயத்தில் முக்குவது, துணிக்கு அச்சு செய்வது என்ற வகையில் முதல்கட்ட பணிகள் அமைகின்றன. இப்படி உருவாக்கப்பட்ட துணிகளை வெவ்வேறு வகையான ஆடைகளாகத் தைப்பது அல்லது சேலை போல உருவாக்குவது என்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமைகிறது. இதனையடுத்து இப்படித் தனித்தனியாக உருவாக்கிய ஆடைகளை வணிகம் செய்வது என்பது நிகழ்கிறது.

தமிழகம் மிக நீண்ட நெசவு பண்பாட்டைக் கொண்டிருக்கிறது. நமக்கு இன்று கிடைக்கின்ற ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட கிரேக்க வரலாற்று ஆசிரியர்களான தாலமி போன்றோரது ஆவணக் குறிப்புகளும், ரோமானிய வர்த்தக குறிப்புகளும், இன்றைய எகிப்தின் அலெக்சாந்திரியா நகர வணிகர்களின் குறிப்புகளும் இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்திலேயே தமிழக நிலத்தில் உருவாக்கப்பட்ட துணிவகைகள் ஐரோப்பியச் சந்தையில் புகழ்பெற்று பொருளாதார பலமிக்க வணிகப் பொருளாக இருந்தது என்பதை உறுதி செய்கின்றன.

மிக நீண்டகாலமாக தமிழகத் தொழில் பண்பாட்டில் மிக முக்கிய அங்கம் வகித்த ஒரு தொழிலாக நெசவுத் தொழில் அமைகிறது. நெசவுத்தொழிலைச் சார்ந்து பல்வேறு தொழில்கள் தொடர்பு கொண்டிருப்பதால் மிக விரிவான பொருளாதார தொடர்புடைய முக்கியத் தொழில் என்ற சிறப்பையும் நெசவுத்தொழில் பெறுகிறது. ஈராயிரம் ஆண்டுக்கு முற்பட்ட நெசவுத் தொழிலின் சிறப்பு பற்றி பேசும் நமக்குக் கடந்த சில நூற்றாண்டுகளில் இந்த நெசவுத்தொழில் எவ்வகையில் செயல்பட்டது என்பதைப்பற்றிய தகவல்கள் பேசப்படாமலேயே இருக்கின்றன என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும்.
கிபி 16 ஆம் நூற்றாண்டு வரலாற்றைப் பேசுகின்ற பெருவாரியான வரலாற்று ஆய்வாளர்கள் பொதுவாகப் பேசிச் செல்லும் ஆய்வுத் தளத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆய்வுத் தளத்தை மையமாகக்கொண்டு மிக விரிவான சான்றுகளுடன் முனைவர் எஸ்.ஜெசீல ஸ்டீபன் "நெசவாளர்களும் துணி வணிகர்களும் (கிபி 1502-1793 )" என்ற நூலை ஆங்கிலத்தில் வழங்கி இருக்கின்றார். இதனை மறைந்த முன்னாள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ந.அதியமான் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இந்த நூல் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.

முனைவர் ஜெயசீல ஸ்டீபன் மிக நீண்ட ஆய்வு அனுபவமும் பல்வேறு உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய அனுபவமும் கொண்டவர். இவரது ஒவ்வொரு நூலும் தமிழக வரலாற்றை மிக மிக நுணுக்கமான பார்வையுடன் மிக விரிவான பற்பல ஆவணங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில் திகழக்கூடியவை. இவருக்குள்ள பன்மொழி திறன் இவரது ஆய்வுகளுக்குக் கூடுதல் பலம். போர்த்துக்கீசிய மொழி, லத்தீன், பிரெஞ்சு மொழி, ஜெர்மானிய மொழி, ஆங்கில மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் ஆழமான திறன் கொண்டவராக இவர் திகழ்கிறார். இத்தகைய மொழி ஆளுமை இருப்பதால் இவரது ஆய்வுகள் முதன்மைத் தரம் வாய்ந்த ஆவணங்களை அலசிப் பார்த்து அதிலிருந்து சான்றுகளைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

நெசவுத்தொழில் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்ததா..? இதற்கென்று ஒரு ஆய்வு நூல் தேவையா? எனச் சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்போருக்கு ஏராளமான பதில்களை முன்வைக்கிறது இந்த நூல்.

நூலாசிரியர் இந்த நூலுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டம் என்பது ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் கால கட்டம் மட்டுமே. அதாவது கிபி 1502 ஆம் ஆண்டிலிருந்து 1793ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நெசவுத் தொழில் துணி வணிகர்களின் செயல்பாடுகள், சோழமண்டல கடற்கரையோர வணிக முயற்சிகள் இவை ஏற்படுத்திய தாக்கங்கள், ஐரோப்பியர்களுடனான வணிகத் தொடர்புகள், கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார தாக்கங்கள் என்ற வகையில் இந்த நூல் அமைகிறது.

நூல் தமிழாக்க அறிமுக உரையுடன் தொடங்குகிறது. அதனை அடுத்து ஆங்கில நூலில் ஆசிரியர் வழங்கி இருக்கின்ற நன்றியுரை இடம்பெறுகிறது. அதன்பிறகு நூலாசிரியர் பற்றிய ஒரு குறிப்பும் நூலில் பயன்படுத்தப்பட்ட சொற்குறுக்கங்கள் பட்டியலும் இடம்பெறுகின்றன. நூலை தொடங்குமுன் நூலின் மையக் கருத்திற்கான காட்சி அமைப்பு விளக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்தார் போல கிபி. 1502ஆம் ஆண்டிலிருந்து 1641ஆம் ஆண்டுகளில் தமிழகக் கடற்கரை பகுதியிலிருந்து வளைகுடா இந்தோனேசியா தீவுக்கூட்டப் பகுதிகளுக்குப் போர்த்துக்கீசியர் நிகழ்த்திய துணி வணிகம் பற்றி ஒரு தனி அத்தியாயம் வழங்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர்கள் தமிழகக் கடற்கரை துறைமுகப் பகுதிகளில் தங்கள் ஆளுமையைச் செலுத்திக் கொண்டிருந்த படியினால் தமிழக நெசவாளர்களின் துணிகளை அவர்கள் எவ்வகையில் பெற்று அதனை கிழக்காசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள் என்பதை இந்த அத்தியாயம் விரிவாகப் பேசுகிறது.

இதற்கு அடுத்தபடியாக வருகின்ற மூன்றாம் அத்தியாயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த அத்தியாயத்தின் தலைப்பு `செட்டியார் முதலியார் பிள்ளை மரக்காயர் வணிகர்கள் 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஆசியாவில் மேற்கொண்ட துணி வணிகம் மற்றும் பொருள் நிலவியல் என்பதாகும். இந்தப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்ற ஆழமான செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்த ஒரு அத்தியாயத்திற்கு மட்டுமே நூலாசிரியர் 346 அடிக்குறிப்பு சான்றுகளாக வழங்கியிருக்கின்றார் எனும்போது எத்தனை தகவல்களை இது உள்ளடக்கி இருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.

அதனையடுத்து முடிவுரை வருகிறது. நூலில் பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லடைவுகளும் அவற்றிற்கான விளக்கங்களும் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன. நூலுக்குப் பயன்பட்ட ஆய்வு நூல்களின் பட்டியல் அதனையடுத்து இடம்பெறுகின்றது. இறுதியாகப் புத்தகத்திற்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் நிலவரைப்படங்களும் தமிழகக் கடற்கரையோர முக்கிய வணிகத் தளங்களின் பெயர்களும் காட்டப்பட்டுள்ளன.

மொத்தம் 220 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக இந்த நூல் அமைகிறது.
நீண்டகாலமாகவே தமிழக சோழமண்டல கடற்கரை ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பகுதி. இடைப்பட்ட காலத்தில் அரேபியர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த தமிழகக் கடற்கரை பகுதியில் மீண்டும் வணிக முயற்சிகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவின் முக்கிய நாடுகள் மிகத் தீவிரமாகச் செயல்பட்ட காலமாக கிபி 15ம் நூற்றாண்டு தொடக்கத்தைக் கூறலாம். வாஸ்கோட காமாவின் இந்தியாவிற்கான வருகை இதுவரை மறைந்திருந்த வணிகக் கதவுகளை மீண்டும் திறப்பதாக அமைந்தது. தொடர்ச்சியாகப் போர்த்துகீசிய வணிகர்கள் கோவா மற்றும் கேரளாவின் கடற்கரை பகுதி மட்டுமல்லாது தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் வணிக முயற்சிகளைத் தொடங்கினர். போர்த்துக்கீசியர்களின் முயற்சி ஐரோப்பாவில் ஏனைய பிற நாடுகளில் வணிக ஆர்வத்தை எழுப்பியதால் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவை நோக்கி தங்கள் கவனத்தைச் செலுத்தத் தொடங்கின. ஏற்கனவே இத்தாலி வணிகர்கள் மற்றும் அரேபிய வணிகர்கள் மூலமாகத் தென்னிந்திய வணிக வளம் பற்றி ஐரோப்பாவின் ஏனைய நாடுகள் அதிகமாகவே அறிந்திருந்தனர். ஆக, போர்த்துக்கீசியர்கள் அதற்கடுத்து டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை வணிகத்திற்குத் தகுந்த இடமாகக் காணத் தொடங்கி வணிக முயற்சிகளைக் கட்டமைக்கத் தொடங்கினர்.

இந்த வணிக முயற்சிகள் தான் இன்றைக்கு நமக்கு இந்தியாவைப் பற்றி மட்டுமல்லாது மிகக் குறிப்பாகத் தென்னிந்தியாவின் நில வரைபடம் மற்றும் இலங்கையின் நில வரைபடம் தொடர்பான ஆவணங்கள் நமக்குக் கிடைப்பதற்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஆங்கிலத்தில் cartography என்று சொல்லப்படுகின்ற ஒரு தனித் துறையை ஐரோப்பியர்கள் தங்கள் கடல் பயணங்களுக்காக மிக விரிவாகப் பயன்படுத்தினார்கள். இந்தியாவுடனான வணிகம் என்பது ரோமானிய காலம் தொடங்கி முக்கியத்துவம் பெற்றதால் அப்போதிருந்தே நில வரைபடங்கள் உருவாக்கம் என்பது ஐரோப்பிய வணிகர்களது முக்கியமான ஒரு செயல்பாடாகவே இருந்தது. கி பி 16ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியா மற்றும் இன்றைய இலங்கை பற்றிய குறிப்பிடத்தக்க வரைபடங்கள் ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மட்டுமல்ல, கேமரா மற்றும் வீடியோ பதிவு செய்யும் கருவிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் தாங்கள் காண்கின்ற காட்சிகளைத் துல்லியமாக ஓவியங்களாக வரைந்து அவற்றை ஆவணப்படுத்தி வைக்கும் செயலையும் ஐரோப்பிய வணிகர்களது குழுவில் இடம் பெற்ற வரலாற்று அறிஞர்களும் பாதிரிமார்களும், செயல்படுத்தினர். இத்தகைய நில வரைபடங்களும் ஓவியங்களும் தான் இன்றைக்கு நாம் கடந்த ஐநூறு ஆண்டுகால தமிழகத்தின் சமூக நிலையையும் புவியியல் சூழலையும் அறிந்துகொள்ள நமக்கு முதன்மை நிலை ஆவணங்களாகத் திகழ்கின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது.

சோழர் காலத்துக் கல்வெட்டுக்களும் செப்புப் பட்டயங்களும் நெசவாளர்களின் நிலையை விளக்கும் செய்திகளை நமக்குத் தருகின்றன. கிபி 970லிருந்து 985 காலகட்டத்தில் ஆட்சிசெய்த சோழமன்னன் மதுராந்தக உத்தம சோழன் காலத்துச் செப்பேடு ஒன்று காஞ்சிபுரத்தில் கச்சிப்பேடு, கருவுளான்பாடி, கஞ்சகப்பாடி, அதிமானப்பாடி, ஏற்றுவழிச்சேரி ஆகிய நெசவாளர் குடியிருப்பிலிருந்த பட்டு சாலியர்களுக்கு 200 தங்க காசுகளை வைப்புத் தொகையாகக் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது. `தறிப்பட்டம்`, `தறி இறை` மற்றும் கிபி 10ம் நூற்றாண்டில் `தறி தரகு` என்னும் வரி சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நெசவாளர்களுக்கு விதிக்கப்பட்டது என்ற செய்தியையும், தஞ்சாவூர், திருச்சி ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` `தறி ஆக்கம்` என்ற இரண்டு வகை வரிகள் விதிக்கப்பட்டன என்ற செய்தியும் செங்கல்பட்டு, வட ஆற்காடு ஆகிய பகுதிகளில் `தறிப் புடவை` என்னும் வரி கி பி 11ம் நூற்றாண்டில் வசூலிக்கப்பட்டதையும் கல்வெட்டுச் செய்திகளின் வழி அறியமுடிகிறது. இவை மட்டுமன்றி `அச்ச தறி` எனக் குறிப்பிடப்படும் ஒரு வகை வரியும் `பறை தறி` அதாவது நெசவுத் தொழில் செய்யும் பறையர்கள் கட்ட வேண்டிய வரி, 'சாலிகைத் தறி` என்ற சாலிய நெசவாளர்களுக்கான ஒரு வகை வரி, `பஞ்சு பீலி` அதாவது பங்கு வணிகத்தில் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வரி என பல்வேறு வகைப்பட்ட வரி நெசவாளர்கள் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபடுபவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்த செய்திகளைக் கல்வெட்டுச் சான்றுகள் விளக்குவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இப்பகுதிக்கு நூலாசிரியர் பயன்படுத்தியுள்ள ஆய்வு நூல்களில் மிக முக்கியமாகத் தென்னிந்தியக் கல்வெட்டியல் ஆய்வு நூல்கள் பல இடம்பெறுகின்றன.

தமிழகத்தில் உருவாக்கப்பட்ட பருத்தி துணிகள் சோழர்கள் காலத்திலேயே கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா தீவுக்கூட்டங்கள், தாய்லாந்து, இன்றைய மியன்மார் ஆகிய பகுதிகளுக்கு வணிகம் செய்யப்பட்டன என்ற செய்திகளும் கிடைக்கின்றன. சீனாவுடனான மிக நீண்ட கால வணிகத் தொடர்பு சிறப்புக் கவனம் கொள்ளப்பட வேண்டியது. சீனாவில் `சாம்` அரசர்களின் ஆட்சியின் போது அதாவது கிபி 960 இருந்து 1278 காலகட்டத்தில் பல்வேறு வகை துணிகள், வண்ணம் பூசப்பட்ட ஜமக்காளங்கள், வண்ணம் பூசப்பட்ட சிவப்பு பட்டு கைக்குட்டைகள் போன்றவை தமிழக கடற்கரை வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட செய்திகளையும், சீனாவிற்கெனவே சிறப்பாக மனித உருவம், குதிரை உருவம், யானை உருவம் போன்ற விலங்குகள் உருவம் வரையப்பட்ட கைக்குட்டைகள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டன என்ற செய்தியையும் நூலில் காண முடிகிறது. கிபி 12-13ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் பாண்டியர் கால கல்வெட்டுகள் நெசவுத் தொழிலில் ஆளுமை நிறைந்த கைக்கோளர், சாலியர், நெசவாளர்களின் சாதிகளாகக் குறிப்பிடுகின்றன.




தமிழகச் சூழலில் கைக்கோளர், சாலியர், தேவாங்கர் ஆகிய மூன்று வகைப்பட்ட சமூகங்கள் பெருவாரியாக நெசவுத் தொழில் செய்யும் சமூகங்களாக அறியப்படுகின்றன. செட்டியார்கள், முதலியார், பிள்ளை, மரக்காயர் ஆகிய சமூகத்தார் துணி வணிகம் செய்யும் தொழிலை முன்னெடுத்தவர்களாக அமைகின்றனர். நூலாசிரியர் செட்டியார் சமூகத்தில் பல்வேறு வகை செட்டியார்களைக் குறிப்பிட்டு இடங்கை வலங்கை வேறுபாடுகளையும் அவர்களது வணிக முயற்சிகளையும் நூலின் பல பகுதிகளில் விளக்கிச் செல்கின்றார். அதேபோல முதலியார் சமூகத்தவர்கள் துணி வணிகத்தில் பொருளாதார பலத்துடன் கோலோச்சிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளை விரிவாக வழங்கி இருக்கின்றார். விவசாயத்தில் கவனம் செலுத்திய பிள்ளை சமூகத்தார் துணி வணிகத்திலும் ஈடுபட்டு மலாயா இந்தோனேசியா தீவுக் கூட்டங்களில் பெரும் வணிகம் நடத்திய செய்திகளையும் கீழக்கரை, காயல்பட்டினம், நாகூர், பரங்கிப்பேட்டை போன்ற பகுதிகளில் குடியேறிய மரக்காயர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய வகையில் வணிக முயற்சிகளில் வெற்றி கண்ட வரலாற்றுச் செய்தியையும் அறியமுடிகிறது.

தமிழகச் சோழமண்டல கடற்கரையில் பொருளாதார பலம் பொருந்திய ஒரு வடிவமாக நெசவுத்தொழில் அமைந்திருப்பதை அறிந்துகொண்ட ஐரோப்பிய வணிகர்கள் சோழமண்டல கடற்கரை பகுதியை தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வர மேற்கொண்ட முயற்சி மிகப் பெரிது. போர்த்துக்கீசியர்கள் வசமிருந்த வணிக செயற்பாடுகளைப் பலமிழக்கச் செய்து டச்சுக்காரர்கள் மிகத் துரிதமாக கி பி 16ம் நூற்றாண்டில் தங்கள் ஆளுமையை விரிவாக்கினர். மலாயாவின் மலாக்கா பகுதியைப் போர்த்துக்கீசியர் வசம் இருந்து கைப்பற்றி பிறகு இந்தோனேசியாவையும் கைப்பற்றி காலனித்துவ ஆட்சியையும் செயல்படுத்தினர்.

கிபி 1511 ஆம் ஆண்டு மலாயா சுல்தான்களிடம் இருந்த மலாக்காவை போர்த்துக்கீசியர் கைப்பற்றினர். ஒரு நூற்றாண்டுக்குப் பின் 1641 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுகாரர்கள் வசம் விழுந்தது. இக்காலகட்டத்தில் தமிழகத்தின் சோழமண்டல கடற்கரை பகுதிகளில் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்து அப்பகுதியில் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட பெரும் முயற்சி எடுத்தது டச்சு கிழக்கிந்திய கம்பெனி. தங்களிடம் 'கர்தாஸ்' என்ற சான்றிதழைப் பெற்ற வணிக நிறுவனங்கள் மட்டுமே வணிகம் செய்ய முடியும் என்ற அளவிற்குத் தமிழக சோழமண்டல கடற்கரையில் டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயல்பட்டது. இந்தக் 'கர்தாஸ்' என்ற சொல் இன்று மலாய் மொழியில் `கெர்த்தாஸ்` அதாவது `தாள்` என்பதைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகப் பயன்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளதைக் காணலாம். இப்படி போர்த்துக்கீசிய, டச்சு ஆதிக்கத்தில் பல ஐரோப்பிய சொற்கள் மலாய் மொழியில் புழக்கத்தில் உள்வாங்கப்பட்ட வரலாறு தனி ஆய்வுக்கு நம்மை கொண்டு செல்லும்.

ஐரோப்பிய வணிக நிறுவனங்கள், குறிப்பாக டச்சு கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரெஞ்சு அரசு ஏற்படுத்திய கட்டுப்பாடுகளைச் சமாளித்து தமிழ் வணிகர்கள் கிழக்காசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் வணிகம் நடத்திய காலகட்டமாக கிபி 16, 17, 18 ஆகிய காலகட்டங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். மிக நீண்டகாலமாக மிகத் தரம் வாய்ந்த கப்பல்களைக் கட்டக்கூடிய திறமை பெற்றவர்கள் தமிழர்கள். காற்றின் திசை அறிந்து கப்பலைச் செலுத்தக்கூடிய தொழில் திறன் தமிழ் வணிகர்களுக்குத் தொடர்ந்து இருந்தது. மிகத் தொடர்ச்சியாக வணிகக் கப்பல்களைக் கட்டி பெருமளவில் வணிக முயற்சிகளை நூற்றாண்டுகளாகச் செய்து வந்த அனுபவம் தமிழர்களுக்கு உண்டு. அதற்கு சான்றளிக்கும் வகையில் நூலாசிரியர் வழங்கியிருக்கும் தரவுகள் நமக்கு அமைகின்றன.

துணி வணிகத்தில் ஈடுபட்ட பல முக்கியஸ்தர்கள் பற்றிய செய்திகள் நூலில் நமக்குக் கிடைக்கின்றன. பாண்டிச்சேரியிலிருந்து வலங்கைப் பிரிவைச் சேர்ந்த முதலியார் வணிகர்கள் 'சங்கரபாணி` என்ற பெயர் கொண்ட ஒரு வணிகக் கப்பலை 1739ம் ஆண்டு வாக்கில் சொந்தமாக வைத்திருந்தனர். மயிலாப்பூர் பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலிருந்து பிலிப்பைன்ஸ் வரை பொருட்களை ஏற்றிச் சென்றது இந்த கப்பல். இந்தக் கப்பலின் தலைமை மாலுமியாகப் பிரகாசம் என்பவர் இருந்தார் என்றும் இந்தக் கப்பலிலேயே தங்கி வணிகம் மேற்கொண்ட வணிகராக ஜெநிவாச முதலியார் இருந்தார் என்றும் இதேபோல சார்லஸ் என்ற பெயர் கொண்ட கப்பலுக்குத் தலைமை மாலுமியாக குமரப்பிள்ளை இருந்தார் போன்ற செய்திகளையும் நூலின் வழி அறிய முடிகின்றது.


தனித்தனி தீவுகளாக நெசவாளர்கள் வணிகம் செய்வதற்குப் பதிலாக வணிகர்கள் கூட்டமைப்பை உருவாக்கி வணிகம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரெஞ்சு அரசும், டச்சு கிழக்கிந்திய கம்பெனியும் தமிழகத் துணி வணிகர்களுக்கு அழுத்தம் கொடுத்தன. அதனடிப்படையில் பழவேற்காடு, பாண்டிச்சேரி காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் துணி வணிகர்கள் கூட்டுச் சரக்கு நிறுவனங்கள் பல உருவாக்கம் கண்டன. இத்தகைய வணிக அமைப்புகளில் செட்டியார், முதலியார், நாயக்கர், வேளாளர்கள் (பிள்ளை),  மரக்காயர் ஆகியோர் அங்கம் வகித்தனர்.

கைக்கோள முதலியார் தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்து மலாயாவின் மலாக்கா பகுதியில் துணி வணிகம் செய்யத் தொடங்கினர். இவர்களில் பலர் மலாக்காவில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டனர். உள்ளூர் மலாய் பெண்களை மணந்து மலாக்கா செட்டிகள் என்ற புது இனம் ஒன்று இன்று மலேசியாவில் இருப்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு காரணமாக அமைகிறது. 1835 ஆம் ஆண்டு சென்னையில் சிந்தாதிரிப்பேட்டையில் புதிய நெசவு மையம் ஒன்றை சின்னத்தம்பி முதலியார் என்ற பெயர் கொண்ட நெசவாளர் ஒருவர் தொடங்கினார். ஆண்டியப்ப முதலியார் என்பவர் டச்சுக்காரர்களுக்குப் பரங்கிப்பேட்டையிலிருந்து துணிகளைப் பெற்றுத் தந்தார் என்ற செய்தியையும் அறிய முடிகிறது. கனகராய முதலியார் என்பவர் மிகப் பெரிய வணிகராக இக்காலகட்டத்தில் திகழ்ந்தார் என்பது நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள் வழி அறிய முடிகிறது. இப்படித் துணி வணிகம் மேற்கொண்டிருந்த கனகராய முதலியாரும், பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த வணிகர்களும் 1768 ஆம் ஆண்டு அளவில் பாண்டிச்சேரியைச் சுற்றியுள்ள பல ஊர்களில் உள்ள பல நிலங்களுக்கு உரிமையாளர்கள் ஆனார்கள் என்ற செய்தியும் அறியமுடிகிறது. துணி வணிகம் மிகப்பெரிய பொருளாதார மேம்பாட்டை இவ்வணிகர்களுக்கு அமைத்துக் கொடுத்தது.




இடையர் பிரிவைச் சேர்ந்த நைனியப்ப பிள்ளை சென்னைக்கு அருகில் உள்ள பெரம்பூரில் இருந்தவர். இவர் பாண்டிச்சேரிக்குக் குடிபெயர்ந்து அங்கு துணி வணிகத்தை மிகச்சிறப்பாக மேற்கொண்டிருந்தார். ஆனால் பிரெஞ்சு ஆளுநரான ஹெர்பாருடன் ஏற்பட்ட பிணக்கு அவருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது. மிகப்பெரிய செல்வந்தராகத் திகழ்ந்த நைனியப்ப பிள்ளையைப் பொய் குற்றம்சாட்டி சிறைக்கு அனுப்பி 1717 ஆம் ஆண்டு சிறையிலேயே அவர் இறந்து போன துயரச் சம்பவமும் நிகழ்ந்தது. இந்த வழக்கை மேல்முறையீடு செய்து பிரெஞ்சு அரசாங்கம் செய்த ஆய்வில் அவர் மீது குற்றமில்லை என்பது உறுதியாகி அவரிடம் இருந்து பறிக்கப்பட்ட சொத்துக்கள் மீண்டும் அவரது வாரிசுகளுக்கு 1719 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்ற இந்தச் செய்தியையும் நூலில் அறிய முடிகிறது.

நூலில் ஆசிரியர் மிக விரிவாக வழங்கியிருக்கும் முக்கியமான ஒரு தகவலாக ஆனந்தரங்கம் பிள்ளையின் துணிவணிக முயற்சிகளைக் கூறலாம். ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு இன்று நமக்குப் பிரெஞ்சு இந்தியாவின் மிக முக்கியமான தகவல்களை அளிக்கின்ற  ஆவணமாகத் திகழ்கின்றது. ஒரு துபாஷியாக, வணிகராக மட்டுமன்றி ஆற்காட்டில் நெசவு மையத்தைத் தொடங்கித் துணி வணிகத்தை மிக விரிவாக செய்தவர்களில் முக்கியமானவர் ஆனந்தரங்கம் பிள்ளை. பாண்டிச்சேரியில் நாணய சாலைக்குத் (அக்கசாலை) தேவையான வெள்ளியை அளிக்கும் இருவரில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார் என்பதை அறியும் போது அவரிடமிருந்த சொத்து மதிப்பை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. தமிழக வணிகர்களுக்கு மட்டுமன்றி டச்சுக்காரர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் வட்டிக்குக் கடன் கொடுக்கும் பெரிய பொருள் படைத்த மனிதராக ஆனந்தரங்கப்பிள்ளை திகழ்ந்தார். தனது இரண்டு மகன்களான அய்யாசாமி மற்றும் அண்ணாசாமி பிள்ளை இருவரும் இறந்து போனதால்  தந்தையை இழந்த தனது தம்பி மகனான ரங்கப் பிள்ளை என்பவரை தன் மகனாக வளர்த்தார். அவரும் ஆனந்தரங்கம் பிள்ளை போலவே மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். வணிகர் என்ற நிலைக்கும் மேல் நிலக்கிழார் ஆகவும் வரி வசூலிப்பவர் ஆகவும் ஆனந்தரங்கம் பிள்ளை இருந்தார். பிரெஞ்சுக் காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட போரின்போது ஆங்கிலேயர்கள் பழம் தரும் மரங்களை வெட்டி சாய்த்தும் அவர்களிடமிருந்த வீடுகளை எரித்து கதவு நிலைகளைப் பெயர்த்தும் பெரிய சேதத்தை ஏற்படுத்தினார்கள். அப்படி சேதப்பட்ட வீடுகளைச்   சரி செய்து கொடுத்து பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவினார் என்ற செய்திகளையும் அவரது நாட்குறிப்பு ஆவணங்கள் கூறுகின்றன.

பரங்கிப்பேட்டையில் மரக்காயர்களின் துணி வணிகம் பற்றி இந்த நூல் பல தகவல்களைத் தருகின்றது. அரேபியாவிலிருந்து தமிழகப் பகுதிகளில் குடியேறி உள்ளூர் மக்களை மணந்து பெருகிய இஸ்லாமிய வணிகர்கள் தான் இந்த மரக்காயர்கள் எனப்படுபவர்கள். இவர்கள் கப்பல்களுக்கு உரிமையாளர்களாகவும் தென்கிழக்காசிய நாடுகளில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்பவர்களாகும் விளங்கினார்கள் என்பதையும் இவர்களில் பெரும்பாலோர் பழவேற்காடு, கூனிமேடு, நாகூர், கீழக்கரை, காயல்பட்டினம், காயல் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தார்கள் என்ற செய்தியையும் அறியமுடிகின்றது. போர்த்துகீசியர்களுக்கும் மரக்காயர்களுக்கும் தொடர்ந்து வணிக பூசல்கள் இருந்துவந்தன. அந்த வகையில் ஒரு சர்ச்சையின் போது கோபமுற்ற போர்த்துக்கீசியர்கள் மரக்காயர்கள் கப்பல்களை 1625 ஆம் ஆண்டு கொளுத்தினர் என்ற செய்தியையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். தேவனாம்பட்டணத்தில் வசித்த மரக்காயர்கள், டச்சுக்காரர்களுடன் வணிக உறவினை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் வணிக முயற்சிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார்கள். பரங்கிப்பேட்டை, பாண்டிச்சேரி, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளிலிருந்து இந்தோனேசியாவின் ஆச்சே, சுமத்ரா,  மலாயா  ஆகிய பகுதிகளுக்குக் கப்பலில் சென்று அவர்கள் வணிகம் நடத்தினார்கள். அவர்கள் பன்மொழி திறனாளர்களாகவும் இருந்தார்கள். தமிழகத்திலிருந்து துணிகளை ஏற்றிக்கொண்டு சென்று இந்தோனேசியாவிலிருந்து தகரத்தை அவர்கள் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். மலாக்கா, இந்தோனேசியா நாடுகளின் சிற்றரசுகளின் மன்னர்களோடு நேரடி தொடர்பு வைத்திருந்தனர். அவர்களுடன் துணி வணிகத்தில் ஈடுபட்டு வந்தனர் என்ற செய்திகளும் கிடைக்கின்றன.


தமிழகக் கடற்கரை நகரமான பரங்கிப்பேட்டை  மரக்காயர்களின் மிக முக்கிய குடியிருப்பாக இருந்தமையும், கிழக்காசியா முழுமையும் மரக்காயரின் வணிகக் கப்பல்கள் துணி வணிகத்திற்காகச் சென்ற செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. 1663 ஆம் ஆண்டு இந்தோனேசியா பாந்தாமில் துணி தட்டுப்பாடு ஏற்பட்டபோது அப்பகுதியின் சுல்தான் தாமாகவே தமிழகத்துக்கு வணிகம் மேற்கொள்ள முனைந்த செய்தியும், அதற்காகப் பிரத்தியேக கப்பல்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்குத் துணி வணிகம் பெறுவதற்காக அனுப்பிவைத்த செய்திகளையும் அறிய முடிகிறது. 1667 ஆம் ஆண்டு சுல்தான் தனது சொந்தக் கப்பலைத் தமிழக துணிகளை வாங்குவதற்காகத் தயார் செய்ததையும்,   அது தொடர்ச்சியாக பரங்கிப்பேட்டைக்கு நேரடியாக வந்து துணி வணிகர்களிடம் துணிகளைப் பெற்றுச் சென்றதாகவும் அறியமுடிகிறது.  1682 ஆம் ஆண்டு பாந்தம்  பகுதியை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதால் இந்த முயற்சி தடைப்பட்டு மரக்காயர்கள் இந்தோனேசியாவின் ஆச்சே  துறைமுகத்துக்கு தங்கள் வணிகத்தை மாற்றிக் கொண்டனர். 

பரங்கிப்பேட்டை துணி வணிகர்களுக்கு மிக முக்கியமானதொரு துறைமுகமாக இருந்தது என்பது ஒருபுறமிருக்கக் கப்பல் கட்டும் தொழில் இங்கு மிகப் பெரிதாக இயங்கி வந்தமையும் கப்பல் பழுது பார்க்கும் தளமாகவும் இது விளங்கிய செய்திகளையும் அறிய முடிகிறது. கப்பல்களைச் செப்பனிடும் பணிக்கு மிகச் சிறந்த தொழில் வல்லுனர்கள் பழவேற்காட்டிலிருந்திருக்கின்றனர். இந்தியக் கடற்கரை பகுதிகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து பரங்கிப்பேட்டை கப்பல்களைச் செப்பனிட வந்திருக்கின்றார்கள் என்ற செய்திகளையும் அறிகின்றோம். இடைப்பட்ட காலத்தில், அதாவது 1696 ஆம் ஆண்டுக் குத்தகை ஆவணம் ஒன்று பரங்கிப்பேட்டைக்கு 'முகமது பந்தர்' என்ற பெயர் இருந்ததைக் குறிப்பிடுகிறது. முகலாய மன்னர்கள் மராட்டிய மன்னர்களுடன் போரிட்டு வெற்றி கண்டதால் அவர்கள் ஆட்சிக்குக் கீழ் இப்பகுதி வந்தமையால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். 1792 ஆம் ஆண்டு டச்சு ஆவணம் ஒன்றின் குறிப்பைக் காணும்போது மிக நீண்டகாலமாக பரங்கிப்பேட்டை சோழமண்டலக் கடற்கரையில் முக்கிய துறைமுகமாக விளங்கிய செய்தி அறியமுடிகிறது. 1857ஆம் ஆண்டு சோழமண்டல கடற்கரை டச்சு ஆளுநரின் அறிக்கையின் படி அவர்களின் வணிகம் மணிலா (பிலிப்பைன்ஸ்), மலாக்கா (மலேசியா),  ஆச்சே (இந்தோனீசியா), பர்மா,  சுலாவேசி ஆகிய பகுதிகளுக்கு விரிவடைந்து இருந்த செய்தியும், ஒரு ஆண்டுக்கு 200,000 பகோடாக்களுக்கு மேல் வணிகம் நடந்ததாகவும் அறிய முடிகிறது. பரங்கிப்பேட்டையில் உற்பத்தி செய்யப்பட்ட நீலவண்ண துணிகளுக்குப் பல இடங்களில் மிகுந்த வரவேற்பு இருந்தது. பரங்கிப்பேட்டையைச் சார்ந்த சீதக்காதி மரக்காயர் பிரெஞ்சுக்காரர்களிடம் வணிக உரிமம் பெற்று இந்தோனேசியாவின் ஆச்சே துறைமுகத்தில் வணிகம் மேற்கொண்டிருந்தார். பரங்கிப்பேட்டை தவிர்த்து மரக்காயர்கள் பெரும்பாலும் நாகூரில் குடியிருக்க விரும்பினர். இதற்கு முக்கிய காரணம் அக்காலகட்டத்தில் நாகப்பட்டினத்தில் அதிகமாக டச்சுக்காரர்கள் இருந்தது தான் என்றும் அறிய முடிகிறது. துணி வணிகத்தை அடுத்து நாகூர் கப்பல் கட்டும் துறைமுகமாகவும் விளங்கியது.

மரக்காயர்கள் தமிழ் பெண்களை மணந்து அவர்களின் சந்ததியினர் ஜாவா, சுமத்திரா, அம்போனியா ஆகிய பகுதிகளுக்குக் குடியேறிய செய்திகளையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். உதாரணமாக அப்துல் காதர் என்ற பெயர் கொண்ட ஏமனைச் சேர்ந்த இஸ்லாமியர் நாகூரில் குடியேறி அங்கு வசித்த தமிழ் பெண்ணை மணந்து கொண்டு பின்னர் 1747 ஆம் ஆண்டு மலேசியாவின் மலாக்காவிற்குக் குடிபெயர்ந்து வாழ்ந்தார் என்றும் அவருடைய நான்காவது மகன் மலாக்காவில் செட்டியார் வணிகரின் மகளான பெரிய ஆச்சியை மணம் செய்து கொண்டார் என்றும், அவருடைய மகன் அப்துல் காதிர் பின் முகமது இப்ராஹிம் என்ற பெயருடன் மலாக்கா துறைமுகத்தின் தலைவராக விளங்கினார் என்ற செய்தியையும் ஆவணங்களின் வழி காணமுடிகிறது. இப்படித் தமிழ் வணிகர்களுக்கும், மரக்காயர்களுக்கும் இடையே திருமண ஒப்பந்தங்கள் நிகழ்ந்த செய்திகள் வெளிப்படுகின்றன.  பல துணி வணிகர்கள் 1788ஆம் ஆண்டு பினாங்குக்கு (மலேசியா)  வணிகக் கப்பல்களைக் கொண்டு சென்று வணிகம் நடத்திய செய்தியும், பிறகு   ஆங்கிலேய அலுவலர்களின் அழைப்பின் பேரில் பினாங்கிலேயே தங்கி விட்டதாகவும் முதலில் ஏறத்தாழ ஆயிரம் குடும்பங்கள் நிரந்தரமாகத் தங்கி பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய இரண்டாயிரம் மரக்காயர்கள் நாகூரிலிருந்து பினாங்கு சென்றனர் என்றும் அறிகிறோம்.

இந்தக் காலகட்டத்தில் எனது தந்தை வழி தாத்தா நாகப்பட்டினத்திலிருந்து பினாங்கு பயணம் செய்தார் என்ற செய்தியை எனது தந்தையார் கூற நான் அறிந்திருக்கிறேன். இப்படி வணிகத்திற்காகச் சென்ற எனது தந்தை வழி குடும்பத்தார் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பினாங்கிலும் அதன்பின்னர் கெடா மாநிலத்தில் சுங்கைப் பட்டாணி பகுதியிலும் எனப் பரவி வணிகம் செய்த செய்திகள் இதனை வாசிக்கும் போது என் நினைவுக்கு வருகின்றன.

தமிழக வணிகர்கள் தமிழகத்தில் நடைமுறையிலிருந்த வணிக அறத்துடன் நடந்து கொண்டார்கள் என்ற செய்தியும், குறிப்பாகச் சென்னையிலிருந்த ஆங்கிலேயக் குடியிருப்பில் துணி வணிகர்கள் சீருடை அணிந்து வணிகம் செய்த செய்தி, இடைத்தரகர்கள் குறுக்கீடு இல்லாமல் கொள்முதல் வணிகம் சுமுகமாக நடந்த செய்திகள் மட்டுமன்றி ஏதாவது ஏமாற்றங்கள் நடைபெற்றால் அதற்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கப்பட்ட செய்தி, உதாரணமாக ஏமாற்றுத்தனம் செய்த ஆண்ட செட்டி என்பவரைத் தூணில் கட்டி இருபது கசையடி தரவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட செய்திகள் என ஆவணங்கள் வெளிப்படுத்துவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கடல் வணிகம் என்பது தமிழர்களுக்குப் புதிய ஒன்றல்ல. மிக மிக நீண்ட காலமாகக் கடலை தன்வயப்படுத்தி   பயணங்களைத்  திறமையுடன் செயல்படுத்திய தமிழர்கள் வணிகத்தில் மிக முக்கிய பங்காற்றி இருக்கின்றார்கள். ஆனால் இது பற்றிய செய்திகள் விரிவாகப் பேசப்படுவதில்லை என்பது நம்மிடையே இருக்கும் ஒரு குறை.  அந்த நிலையைப் போக்கும் வகையில் முனைவர். ஜெயசீல ஸ்டீபன் அவர்கள் எழுத்தில் வெளிவந்திருக்கும் இந்த நூல் தமிழ் வரலாற்றுக்கு மட்டுமன்றி தமிழ் வணிகம் தொடர்பான மிக முக்கிய நூலாக அமைகின்றது.  

இந்த நூல் தமிழக பல்கலைக்கழகங்களிலும் தமிழக கல்லூரிகளிலும், தமிழ்த்துறை, சமூகவியல் துறை, வரலாற்றுத் துறை, வணிகவியல் ஆகிய துறைகளில் பாடமாக வைக்கப்பட வேண்டும். இந்த நூலில் கையாளப்பட்டுள்ள ஆய்வுத் தரம் இந்த நூலை வாசிக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் பொது வாசிப்பாளர்களுக்கும் ஆய்வுகளை முன்னெடுக்க நல்ல அனுபவமாக அமையும்!


நூல்:  நெசவாளர்களும் துணி வணிகர்களும்
ஆசிரியர்:  எஸ்.ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் ந.அதியமான்)
பதிப்பு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை: ரூ210/-

Thursday, January 14, 2021

உழவும் வாழ்வும்

உழவும் வாழ்வும் 

- கோவை எழில்

உடலும் உணர்வும்
உணவும் உயிரும்
உழவின் கொடையே.

உண்மை உணர்ந்து
உலகம் சுழலும்
உவகை உடனே.

ஆனால்...
வறட்சியும் புயலும்
இயற்கையின் சீற்றமும்
மதியிலா மாந்தரும்
மனமிலா மைந்தரும்
மிதித்து அழிப்பார் உழவையே.

ஆனாலும்....
அவர்தம் வயிறும்
அனைவரின் உயிரும்
அண்டியிருப்பது உழவையே.

அதனால்....
உழவு செய்யும் உழவரையும்-அவர்
களையெடுத்த கரங்களையும்
கண்ணில் ஒற்றி நன்றி சொல்வோம் வாரீர்
ஊர்கூடி ஒன்றுகூடி மகிழ்விப்போம் வாரீர்.

பொங்கலிலே பொங்கி வரும் பொழிவாய்
செங்கதிராய் ஒளிர்ந்து வரும் செழிப்பாய்
உழவர் வாழ்வுதன்னை உயர்த்திடுவோம் பாரில்
அவர் வேதனையைத் துடைத்திடுவோம் இந்நாளில்.

எல் உமிழ் இரும்பொறை அம்பொறி கனல

 
-- ருத்ரா இ.பரமசிவன்

            எல் உமிழ்  இரும்பொறை  அம்பொறி கனல
            கடுங்கண் காட்டும் முள்படர் இலவ‌ம்
            அவிழ் இலை செறிந்த அழற்பெருங்கானம்
            எரியூர் தோற்றியும் ஓவா நடையின்
            மீமிசை ஊக்கி செல்வம் நசைஇ
            ஆறு படுத்த நெடும்பணைத்தோள!
            இவண் ஓர் இறைநெகிழ்ந்த வளையள் ஆங்கு
            கொல் அலரி படுத்த கொடுநோய் வீழ்ந்த
            நிலைகண்டு அன்னை எவன் ஆங்கு
            "ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை"
            ஓரை ஆடி ஒள் மணல் தெள்ளினை
            எனவாங்கு
            பொய்ச்சொல் பெண்டிர் முருகு வெறியாடல்
            நின் நோய் ஆற்றும் கண்டிசின் தெளினே
            என்று ஊக்கிய அன்னைக்கு சொல்லும்:
            அவன் மின்னல் அகலம் யான் தோயும் காலை
            முருகன் என்னை அவன் அய்யன் என்னை
            நத்தம் இல்லா அத்தமும் ஏகுவன்
            அவனை ஓர்ந்து யான் சேரும் மாட்டே.

__

தலைவன் பொருள் தேடி கொடிய பாலையின் காட்டுவழியில் செல்ல தலைவியோ பிரிவுத்துயரில் மிகவும் வாடுகிறாள்.  இதைக்கண்ட அன்னை அவளுக்கு முருகன் வெறியாடல் என்னும் "சாமியாட்டம்" ஏற்பாடு செய்ய தலைவியோ முருகன் வந்தாலும் சரி அவன் அப்பனே வந்தாலும் சரி நான் என் தலைவன் வழி தான் ஏகுவேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். இதை தோழி தலைவனுக்குச் சொல்வது போல் அமைந்துள்ளது இப்பாடல்.

அகநானூற்றுப் பாடல் (எண் 60) குடவாயிற்கீரத்தனார் எனும் புகழ்மிக்க புலவரால் பாடப்பட்டது.
"ஊதை ஈட்டிய உயர்மணல் அடைகரை" என்ற வரியை அப்பாடலில் எழுதியுள்ளார்.ஆழம் செறிந்த சொல்லழகு மிக்கது இவ்வரி. கடற்கரையை அடுத்த நீர்ப்பரப்பில் எழும் வாடைக்காற்று வேகமாக வீசி கரையில் மணல் மேடுகளை உருவாக்குகிறது என்று இங்கே பொருள்படும். இதில் ஓரை என்பது கடற்கரை மணலில் கூட்டம் கூட்டமாய் பெண்கள் வண்டல் மண்ணில் பாவை செய்து விளையாடுவதைக்குறிக்கும். தலைவி இப்படியெல்லம் விளையாடியதால் தான் இந்த நோய் வந்ததோ என்று அந்த வெறியாடலுக்கு ஏற்பாடு செய்கிறாள் அன்னை .தலைவியோ காதலனின் முன் எந்தக்கடவுளும் பொருட்டு இல்லை என்பதாய் காதல் பற்றி உறுதியாக இருக்கிறாள்.

இந்த சங்கத்தமிழ்க்காட்சியையே நான் சங்கத்தமிழ் நடைச்செய்யுட் கவிதை ஆக்கி இங்கு எழுதியுள்ளேன்.

Wednesday, January 13, 2021

அதுவொரு காலம்! பொங்கும் பொங்கல் நினைவுகள்

 -- இரா.நாறும்பூநாதன்


மேல பஜார் தெய்வு அண்ணன் கடையில் தான் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும். ஆனால் கடையில் நின்று கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்கு பழியாய்க்கோபம் வரும்.

"இங்கன பாரு..சும்மால்லாம் வேடிக்கை பாக்கதுக்கா அடுக்கி வச்சுருக்கோம்..வாங்க வர்றவங்களை மறிச்சுக்கிட்டு நின்னா எப்படிடே..ஒரு ஓரமா நின்னு பாருங்கன்னு சொல்லியாச்சு..கேப்பனான்கியோ.."  

தெய்வு அண்ணன் வார்த்தைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு. டிசம்பர் மாசம் கிருஸ்துமஸ் தொடங்கும் முன்பே வாழ்த்து அட்டைகள் வாங்கி கடையைச் சற்றே முன்பக்கம் நீட்டி விட்டு, பார்க்கும் வசத்தில் அடுக்கி வைத்திருப்பார்.

ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் படுத்திருப்பது..மூன்று ஸ்டார்கள்..மரியம்மை, வெறும் சிலுவை..ஏசுநாதர் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல..
இவை ஒருபக்கம் இருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டைகள் இன்னொரு பக்கம்..
தகதகக்கும் சூரியன் ..நேதாஜி,நேரு படங்கள் தாங்கிய அட்டைகள்..
பொங்கல் வாழ்த்து அட்டைகள் தாம் நிறைய. பொங்கப்பானை, கரும்பு,ஜோடி காளை மாடுகள்..மஞ்சள் குலை..
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையர்கள்..கோலம் போடும் அம்மாக்கள்..
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி பொங்கல் வாழ்த்து சொல்லும் படங்களும் உண்டு. சிவாஜி, பத்மினி படங்கள்...

பக்கத்துக்கு வீட்டு ஹிந்தி பண்டிட் சார் வந்தால் அஞ்சு நிமிசத்தில் பத்து போஸ்ட் கார்டுகளை மாத்திரம் வாங்கி விட்டுப் போய் விடுவார். ஒரு கார்டு பத்து பைசா மேனிக்கு ஒரு ரூபாயில் வேலையை முடித்துக் கொண்டு செல்வார். அந்தப் பத்து கார்டுகளைக்கூட கடைக்காரரையே தேர்வு செய்யச் சொல்வார். தெய்வு அண்ணன் ஒரே மாதிரி கார்டுகளை எடுத்துத் தருவார். " பத்தும் பத்து வெவ்வேறு ஆட்களுக்குத்தானே போகுது..அதனாலே என்ன.." என்பார்.

நான் எம்.ஜி.ஆர்.படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பேன். விலை எல்லாம் கூட கேட்டு விடுவேன். மறுநாள் வந்து பார்த்தால், அவை இருக்காது. " குடியிருந்த கோவில்", " தனிப்பிறவி" படங்கள் அதிகமாக இருக்கும்.

வீட்டில் அண்ணன்மார்கள் எல்லோரும் போஸ்ட் கார்டுகளில் இந்தியன் இங்க் கருப்பு மையால் அழகாய் பொங்கல் பானை,கரும்பு வரைந்து பெரியப்பா பையன்கள்,மாமா பையன்கள் எல்லோருக்கும் அனுப்பி விடுவார்கள். ஆறு பைசா கார்டு விலையோடு முடிந்து விடும். சுய படைப்பு வேற...ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தான், அதே மாதிரி படம் வரைஞ்சு அனுப்புற பழக்கம் எனக்கு வந்தது.

ஒரு பக்கம் படமாய் இல்லாமல், விரித்துப் பார்த்தால், உள்ளே 9 எம்.ஜி.ஆர்.சிரித்தபடி வெளியே வரும் படியாய் ஒரு வாழ்த்து அட்டை உண்டு. அதில் படகோட்டி எம்.ஜி.ஆர்.நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர்.விவசாயி எம்.ஜி.ஆர். என பல்வேறு படங்களின் தோற்றங்கள் பலவண்ணத்தில் இருக்கும். அதெல்லாம் பயங்கர விலை அப்போது..(ஒரு ரூபாய் பத்து பைசா ).

பள்ளி ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் சார் வந்தால் மாத்திரம், பார்த்துப் பார்த்து வாங்குவார். பெரும்பாலும் ஓவியர் மாதவன் வரைந்த படங்களாக இருக்கும்.(மாதவன் என்ற பெயரை அவரே முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ) அவற்றில் இருக்கும் நுட்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

5.jpeg

2.jpeg

1.jpeg

3.jpeg

6.jpeg

4.jpeg

7.jpeg

வாழ்த்து அட்டைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்ததினால், அதில் உள்ள ஜிகினா தூள்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும். பொங்கலையொட்டி சைக்கிளில் வரும் போஸ்ட்மேனிடம் " எங்களுக்கு பொங்கல் வாழ்த்து இருக்கா..?"  என்று கேட்டபடி பின்னாலேயே செல்வதுண்டு. 

கோவையிலிருந்து சிவானந்தம் அண்ணன் அனுப்புவார். வாகைக்குளத்தில் இருந்து திருமலை அத்தான் சமயங்களில். திருவெண்காட்டில் இருந்து திருநாவுக்கரசு அண்ணன்..நெய்யூரில் இருந்து போஸ் அத்தான்..அப்பாவின் நண்பர்கள் சிலர். இப்படியாய் வாழ்த்து அட்டைகள் நமக்கு மகிழ்ச்சியைச் சுமந்து வரும்.

greetings.jpeg

குறுஞ்செய்தி,வாட்ஸ்அப் வாழ்த்துக்கள் வந்து விட்டன இப்போது.
இப்போதும் வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம்..யார் வேண்டாம் என்று சொன்னது ?


வீட்டிற்கு வெள்ளையடிக்க எப்போதும் முருகேசன் அண்ணாச்சி தான் வருவார். அவருக்கு வயசு அம்பதுக்கு மேல் என்றாலும் எங்களுக்கு அண்ணாச்சி தான். வீட்டில் உள்ள சாமான்களை அவரே ஒதுங்க வச்சு வெள்ளை அடிச்ச்சபிறகு அவரே அதது இருந்த இடத்தில வச்சு விடுவார். நாம கூடமாட ஒத்தாசைக்கு இருந்தால் போதும். 

வீடு வெள்ளை அடிக்கும்போது,  சுவரில் மாட்டி இருக்கும்  பிரேம் போட்ட படங்களை எல்லாம் கழட்டி தூசி துடைச்சு ஈரத்துணியால் இன்னொரு முறை அழுத்தி துடைத்து மாட்ட வேண்டியது என்னுடைய வேலை. வெள்ளை அடிக்கும்போது தான் ஆறு மாசத்திற்கு முன்னால தொலைச்ச பொருட்கள் எல்லாம் கிடைக்கும். 

வீட்டில் இருக்கும் எல்லா சேலைத்துணிகளையும் அம்மை மூட்டை கட்டி வைத்து விடுவாள். அதுவே அம்பாரி மாதிரி குமிஞ்சு கிடக்கும். அதிலே ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு படங்களை துடைப்பதுண்டு.  தொலைஞ்ச தீப்பெட்டி படங்கள், கோலிக்குண்டுகள், கலர் குச்சிகள், என சிலவற்றை தேடி எடுத்துத் தருவாள் அக்கா. ஒரு புதையல் கிடைத்த சந்தோசத்தோடு அவற்றை தடவிப் பார்க்க சொல்லும். 

" ராசா..கொஞ்சம் நகந்துக்கிறீகளா.." என்று முருகேசன் அண்ணாச்சி பட்டாசாலை வந்து சத்தம் கொடுப்பார். சுண்ணாம்பு கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்தால், " உனக்கு அங்கன என்ன வேல..கையில பட்டு பொத்துப் போகப்போகுது.."  என்று அப்பா வாசலில் நின்று குரல் கொடுப்பார். 

பொங்கலுக்கு முதல் நாள் காவிப் பட்டை அடிக்க, முருகேசன் அண்ணாச்சியிடம்  இருப்பதில் பரவாயில்லாமல் இருக்கும் மட்டையை வாங்கி வைப்பேன். காவிப்பவுடரை தண்ணியில் கரைச்சு வெள்ளையடித்திருக்கும் படிச்சுவர்களில் முதல் நாள் இரவு கோலாகலமாக அடிக்கும் கொண்டாட்டங்கள். பிசிறின்றி அடிப்பது பெரிய கலை தான். சொட்டுப் போடாமலும் இருக்க வேண்டும். ரொம்பத் தண்ணியாய் கரைசல் இருந்தாலும் காவிப்பட்டை பளிச்சென்று இருக்காது. 

white washed wall.jpeg

மார்கழிக்குப்போடும் கோலத்திற்கு சற்றும் குறைவின்றி,  பொங்கல் திருநாளுக்கு பெரிய கோலமாய் போடும் முயற்சியில் அம்மை ஈடுபட்டிருப்பாள். அப்போது ரங்கோலி எல்லாம் கிடையாது. கோலப்பொடி கோலம் தான்.   சிறுவீட்டுப் பொங்கல் இடுவதற்கு வீட்டின் கிழக்கு முனையில், களிமண் வைத்து சின்னதாக வீடு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சமையலறை, பட்டாசாலை, தார்சா, படுக்கையறை எல்லாம் இருக்கும். அதில் சிறுபருப்பு பாயாசம் வைத்துக் கும்பிடுவோம். 

வெள்ளையடித்து முடித்தவுடன், வீட்டு உரிமையாளர் திருமேனி செட்டியாரின் மருமகன் வந்து வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு " முருகேசன் ஒழுங்காதான் அடிச்சுருக்கான்..வீட்டை உங்க வீடு மாதிரி பாத்துக்கோங்க.." என்று சொல்லி விட்டுப் போவார்.  எதிர்வீட்டின் வாசலில் குத்த வைத்திருக்கும் முருகேசன் அண்ணாச்சி அவசர அவசரமாய் தனது சொக்கலால் பீடியை அணைத்தபடி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லுவதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.