Saturday, August 24, 2019

மூவர் கோயில் கொடும்பாளூர்



——   முனைவர். ப. தேவி அறிவு செல்வம்


            விராலிமலைக்கு  அருகே  புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவில் திருச்சி-மதுரை  சாலையில் கொடும்பாளூர் அமைந்துள்ளது. சங்ககாலம் முதலே  புகழ்பெற்ற இவ்வூர் கொடும்பை நகர் என்றும் அழைக்கப்பட்டதை அறிகிறோம். 



கோயில் அமைப்பு:
            பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மூவர் கோயிலானது, தெற்கு வடக்காக மேற்கு நோக்கிய நிலையில் இரண்டு கோயில்கள் முழுமையானதாகவும் மற்ற ஒரு கோயில் அடித்தளத்தை மட்டும் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 

            மூவர் கோயிலின் மூன்று கோயில்களுக்கும் பொதுவான மகா மண்டபம், நந்தி மண்டபம், பலிபீடமும் மற்றும் பிரகார சுற்றில் 16 பரிவார தெய்வங்களுக்கான சன்னிதியின் அஸ்திவாரங்கள் மட்டுமே உள்ளன. மேற்கே ஒரு கோபுரமும் இருந்த அடையாளம் காணப்படுகிறது.

            இது அதிட்டானம் முதல் கலசம் வரை கல்லாலான கல் கோயிலாகும். இக்கோயில் சதுரவடிவ இரு தள விமான அமைப்பு உடையதாக உள்ளது.  முழுமையாக உள்ள  ஒரு கோயிலின் கருவறை உள்ளே மட்டும் ஆவுடையார் இல்லாத லிங்க வடிவில் மூலவர் உள்ளார். விமானத்தின் உள் பகுதியானது உள் கூடாகக் காணப்படுகிறது.



சிற்பங்கள்:
            இந்த இரண்டு கோயில்களின் கோட்டங்களிலும் மற்றும் விமானத்திலும் காலசம்ஹாரமூர்த்தி, கங்காதரர்,அந்தகாசுர வதை மூர்த்தி, உமா சகிதர்கஜசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், போன்ற சிற்பங்கள் உள்ளன.   கண்ட பகுதியின் நான்கு மூலைகளிலும் நந்தி காணப்படுகிறது.  துவார பாலகர்களும் மகரத் தோரணமும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

அதிட்டானத்தின் சிறப்பு:
            பாதபந்த அதிட்டானத்தில் ஜகதியானது பத்ம ஜகதியாகவும், குமுதம் விருத்தம் ஆகவும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பட்டிகை வரி வியாள வரியாகக் காட்டப்பட்டுள்ளது. கருவறை சுவரின் மேலே பூதகண வரிசை அமைக்கப்பட்டுள்ளது. 

            இருபதாம் நூற்றாண்டில் இக்கோயில்  புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்படும் போது கட்டுமான கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருப்பது சில இடங்களில் பொருத்தமில்லாததாகக் காணப்படுகிறது.



தொடர்பு:
முனைவர். ப. தேவி அறிவு செல்வம்,
மருந்தாக்கவியல் பேராசிரியை மதுரை.
https://www.facebook.com/devipharm

Sunday, August 11, 2019

அத்திவரதர்


—  ருத்ரா இ.பரமசிவன்


ஆகா!
மனம் குளிரக்கண்டேன்
அவன் தோற்றம்.
நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.
தொண்ணூறு டிகிரி கிடைக்கோடும்
தொண்ணூறு டிகிரி நெடுங்கோடும்
காட்டிய ஜியாமெட்ரியில்
கை வழியே நெய் வழியும் 
தேனமுதத் தோற்றமாய் கண்டேன்.
ஆழ்வார்கள் எனும்
மனத்தினுள் ஆழ்வார்கள்.
ஆழ்ந்து அகழ்ந்து முத்தெடுத்து
திருவாய் மொழியைக் கடல் ஆக்கினார்கள்.
அடியேன் வெறும் சிற்றெறும்பு
அத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ?
தோற்றம் என்றாலும் அழகன்.
தோற்றம் இல்லை என்றாலும் அழகன்.
கூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.
தனி முத்திரையோடும்செல்ல வழியில்லை.
கண்டவர்களைக் கண்டேன்.
விண்டவர்களை வியந்தேன்.
அத்திவரதா! ஆட்கொள் அய்யா!
என்று 
ஈனக்குரல் எழுப்பினேன்.
இடியொன்று முழங்கியது.
அத்திவரதன் பேசுகிறேன்.
என் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.
உன் தரிசனத்தில்
என் ஏக்கம் எப்போது தீரும்?
அந்தப்பல்லியும் 
அந்தப் பூச்சியும் 
அந்தப் பூவும் புல்லும்
அந்த நோயும் 
அந்த நோய் தருகின்ற 
நுண்ணுயிரியும்
எல்லாம் ஒன்று தான்.

கோடி மக்களின் உயிர்
ஒரே கோட்டில் தான்
எல்லாம் ஒன்று தான்
என்று சொன்ன மனிதனின்
"சொல்லின்" தரிசனம்
கன பரிமாணமாய்
என் முன் எப்போது வந்து நிற்கும்?
என் ஏக்கம் 
எப்போது தீர்ப்பாய்?
மனிதா! உரை!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

Saturday, August 10, 2019

ஆவணம் விழா – 2019



——    துரை.சுந்தரம்


முன்னுரை:
            தொல்லியல் கழகம் தோன்றி இருபத்தெட்டு ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் அதன் இருபத்தொன்பதாம் ஆண்டின் கருத்தரங்கம், 2019, ஆகஸ்டு 3,4 தேதிகளில் கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் அக்கழகம் ஆண்டுதோறும் வெளியிடும் “ஆவணம்” இதழ், முப்பதாவது இதழாக மலர்ந்தது. தமிழகத்தில் புதிதாகக் கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் மற்றும் முன்னர் பதிவு செய்யப்படாத கல்வெட்டுகள், ஓலை/செப்பேடுகள் ஆகியன இந்த இதழில் முறையான வடிவத்தில் பதிவு செய்யப்படுகின்றன. ஆய்வுக் கட்டுரைகளுக்கு இதில் இடமில்லை. உலகின் பல பகுதிகளிலும் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த நிறுவனங்கள் இந்நூலை ஒரு பார்வை நூலாக ஏற்றுக்கொண்டுள்ளன. கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர் என்னும் முறையில் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுவருவதோடு, புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்து இந்த ஆவணம் இதழில் பதிவு செய்துகொண்டும் வருகின்ற சூழலில், நான் “இருந்து வாழும்”  கோவை நகரிலேயே விழா நடைபெறுகையில் அந்நிகழ்வில் நான் அறிந்துகொண்ட தொல்லியல், வரலாறு தொடர்பான செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ளும் விழைவே இப்பதிவு.

(குறிப்பு :  மேலே, நான் “இருந்து வாழும்”  கோவை நகர் என்று குறிப்பிட்டுள்ளதைக் காண்க. கோவையில்  “வசித்து வருகிறேன்” என்று சொல்வதற்கும், “இருந்து வாழும்”  என்பதற்கும் ஓர் அழகிய வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளில், ஒருவர் பெயரைக் குறிப்பிடுகையில், அவர் இன்ன ஊரினர் என்னும் குறிப்பு தவறாமல் இடம் பெறுதல் வழக்கு. குளத்தூருடையான், நல்லூருடையான் என்று ஊர்ப்பெயரை முன்னொட்டாகச் சொல்லிய பின்னரே அவருடைய இயற்பெயர் குறிக்கப்பெறும். இறைவரின் பெயரும் அவர் உறைகின்ற ஊர்ப்பெயரை இணைத்தே சுட்டப்பெறும். அவிநாசி ஆளுடையார், மன்னியூராண்டார் என வருவதை நோக்குக. நான் அண்மையில் கண்டறிந்த ஒரு கல்வெட்டு குட்டகம் என்னும் ஊரில் உள்ள ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு. அதில், எறுளங்கோதை என்னும் அழகியதொரு பெயர் ஒரு பெண்மணிக்கு அமைந்ததும், அவள் குடவோடு என்னும் ஊரில் “இருந்து வாழும்” ஒருவரின் மனைக்கிழத்தி என்று குறிப்பிடப்படுவதும் மிகவும் கவர்ந்தவை. எனவே, ”வசிக்கும்”  என்பதன் அழகிய தமிழ் வடிவமான “இருந்து வாழும்”  என்னும் சொல்லைப் பயன்படுத்தினேன்.)


முதல் நாள் நிகழ்வுகள்:
தலைமையுரை: செயலர் திரு. கண்ணையன் --
            தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் தொடங்கின. கழகத்தின் செயலரான முனைவர். சு. இராசவேலு அவர்கள் அனைவரையும் வரவேற்ற பின்னர், நிகழ்ச்சியின் களமான பூ.சா.கோ. கலைக்கல்லூரியின் செயலர் முனைவர். தி. கண்ணையன் (இவர் ஒரு பொறியாளர்) தம் தலைமை உரையில்,  பழமை மீட்டெடுக்கப்பட்டுப் போற்றப்படுகின்ற நிலை வந்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். உணவு முறையில் பழமை திரும்பியுள்ளது. மதிப்பு உணரப்பட்டுள்ளது. முற்காலத்து மனிதன் மணலில் எழுதிப்பார்த்திருக்கவேண்டும். அவன் எழுதிய முறை X,Y – GRAPHICAL WAY வடிவில் அமைந்திருக்கவேண்டும். கல்லூரி மாணாக்கர், உலா செல்கையில் மரங்களில் தம் பெயரைச் செதுக்கி வைத்துச் செல்கின்றனர்.  இதுவும் பழங்கால மனிதனின் வெளிப்பாட்டெச்சம் எனலாம். பண்டு, கல்வெட்டுகளைப் பொறித்துவைத்த சிற்பக் கலைஞர்கள் எத்துணை ஈடுபாட்டுடனும் எவ்வளவு நேரமெடுத்தும் எழுதியிருப்பர் என வியந்தெண்ணத் தோன்றுகிறது.

நோக்கவுரை: திரு. எ.சுப்பராயலு --
            கழகம் தோற்றம் பெறச் செய்த முதல் நிலை அமைப்பாளரான முனைவர் திரு. எ. சுப்பராயலு அவர்கள் தம் நோக்கவுரையில் கழகத்தின் நோக்கம் பற்றிக் கூறினார். இருபத்தொன்பது ஆண்டுகள் இயங்கிவிட்ட இந்நிலையில் கழகத்தின் இயக்கத்தில் எங்கு தொய்வு ஏற்பட்டுவிடுமோ என்னும் ஐயம் எழுந்தது. காரணம் வயது முதிர்ந்தவர்களின் ஓய்வு. ஆனால், அவ்வாறில்லை. கழகத்தின் தொடர்ந்த இயக்கம் குறித்து நம்பிக்கை உள்ளது. கல்லூரியின் செயலர் குறிப்பிட்ட X,Y – GRAPHICAL WAY வடிவம் தொல்லியலில் குறிப்பிடப்பெறுகின்ற குறியீடுகளே (GRAFFITI).  1700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துகள் பொறிக்கப்பட்ட செக்குக் கல்வெட்டு அண்மையில் கண்டறியப்பட்டு இந்த ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அறச்சலூர்த் தமிழிக் கல்வெட்டை ஒத்த காலம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

            முறையான தொல்லியல் அறிவு பரவலாகப் போகவேண்டும். வரலாற்றுக்குப் பயன்படுகின்ற செய்திகள் மட்டுமே மக்களைச் சென்றடையவேண்டும். நாளிதழ்களில் பல செய்திகள் வெளியிடப்படுகின்றன. நாளிதழில் மிகைப்படுத்தப்பட்ட  செய்திகள் விரும்பப்படுதல் இயல்பு. ஆகவே, வரலாற்றுச் செய்திகள் இடம்பெறும்போது மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், நல்ல செய்திகள் என வேறுபடுத்திப் பிரித்துப்பார்க்கவேண்டும். முடியுமட்டும் நம்பக்கூடிய வரலாற்றுச் செய்திகளையே பிரித்தெடுத்து ஆவணம் இதழில் பதிவு செய்கிறோம். வரலாற்றாளர் செய்திகளை அணுகும்போது முதலில், செய்தி நம்பக்கூடியதா என்றும், வரலாற்று உண்மை (HISTORICAL FACT) அதில் இருக்கிறதா என்றும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் (CORROBORATION). தொல்லியல் கழகம் வரலாற்றாளர்களுக்கு உதவும் பணியில் முப்பது ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

            பழைய சின்னங்களைக் காப்பாற்றுவதும் போற்றுவதும் வேண்டும். ஆர்வலர்கள் இதற்கு உதவ வேண்டும். நேற்றிருந்த கல்வெட்டுகள் இன்றில்லை. கருநாடகத்தின் வடக்கு கனரா மாவட்டத்தில் அசோகனின் கல்வெட்டு ஒன்று கிடைத்துப் பிறகு உடைத்தெறியப்பட்ட செய்தியைச் செவியுறுகிறோம். கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளையும் சிறிது சிறிதாக அழித்துவருகிறார்கள். பொதுமக்களின் ஒத்துழைப்போடு கல்வெட்டுகளைப் பாதுகாக்கும் செயலில் ஈடுபடவேண்டும். தற்போது, மரபு நடைப் பயணங்கள் பெருகி வருகின்றன. அவற்றை வரலாற்று மையங்கள் பல நடத்துகின்றன. இம்மையங்களுக்குள் நட்பில்லை; பகைமை வளர்கிறது என்று கேள்விப்படுகிறோம். WHATS APP போன்ற ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் செய்திகள் பகிரப்படுகின்றன. இது போன்ற பகிர்வுகளில் ஆரோக்கியமான நோக்கும், ஒத்துழைப்பும் இருக்கவேண்டும்.

ஆவணம் இதழ் மற்றும் நூல்கள் வெளியீடு:
            ஆவணம் முப்பதாவது இதழ் கழகத்தின் தலைவர் திரு. செந்தீ நடராசன் அவர்களால் வெளியிடப்பெற்றது. அடுத்து,  சென்னைப் பல்கலையில் தொல்லியல் துறையில் பணி நிறைவு செய்த பேராசிரியர் ப. சண்முகம் அவர்கள் எழுதிய ”பெரிய பட்டினம் காசுகள்”  என்னும் நூல் வெளியிடப்பட்டது. நூலாசிரியர் பேசுகையில்,  ”கீழக்கரை அருகில் அமைந்த இவ்வூரில் சங்க காலக் காசுகளும், இடைக்காலச் சோழர் காசுகளும் கிடைத்துள்ளன. சீன அறிஞர் நொபுரு கரசிமா அவர்களும் சுப்பராயலு அவர்களும் இணைந்து எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதியில் ஆய்வு செய்கையில் ஊர் மக்கள் இவ்விருவரிடமும் நிறையக் காசுகளைத் தந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். சுப்பராயலு அவர்கள் நூலாசிரியரிடம் இக்காசுகளைக் கொடுத்துள்ளார். காசுகளை ஆய்வது அத்துணை எளியதல்ல. அவற்றைத் தூய்மைப் படுத்தவேண்டும். நீண்ட காலம் சென்று தற்போது தம் ஆய்வுகளின் அடிப்படையில் மேற்படி நூலை வெளியிட்டுள்ளார். சங்ககாலக் காசுகளாகச் சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும் சோழர் காலக் காசுகளும் கிடைத்துள்ளன. எனவே, பெரிய பட்டினம் சங்ககால ஊராகவும், இடைக்காலச் சோழர் காலத்தில் ஒரு துறைமுகமாகவும் விளங்கியதையும் அறிகிறோம். வணிகப்பகுதியாக  இருந்த ஊர். நூற்றைம்பது காசுகளை ஆய்ந்து ஆசிரியர் இந்நூலில் எழுதியுள்ளார். NUMISMATICS  என்னும் நாணயவியலாளர்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும். எழுத்துகளின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்யும் வரலாற்றாளர்களுக்கும் இந்நூல் பயன்படும். 

            அடுத்து, வில்லியனூர் வெங்கடேசன் அவர்கள் எழுதிய “காரைக்கால் கல்வெட்டுகள்”  நூல் வெளியிடப்பெற்றது.   பின்னர் வாழ்த்துரை நிகழ்ச்சியில் (கோவை) சிரவை ஆதீனம் அவர்களும், கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான முனைவர் பத்மாவதி அவர்களும் உரையாற்றினர். ஆதீனம் அவர்கள், தம் உரையில், கோயில்களின் தொன்மை குறித்தும், தஞ்சைக் கோயிலின் நுழைவாயிலின் அகலம் சார்ந்த சிறப்பு குறித்தும் பேசினார். திருப்பெருந்துறைக் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகச் சிறப்பானவை என்றும், சிற்பக் கட்டுமானத்தில் குறைகள் ஏற்படின் அக்கற்களை அகற்றிச் செம்மைப்படுத்த மாற்றுக்கற்களும் இருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.



            சீனாவில் கிடைத்த தமிழ்க்கல்வெட்டு பற்றி திரு. சுப்பராயலு அவர்களின் விளக்கம்:
அண்மையில், முனைவர் சு.இராசகோபால் அவர்கள் சீனாவில்-தமிழ்க்கல்வெட்டு பற்றிய முக நூல் பதிவினை சுப்பராயலு அவர்களின் ஆய்வுப்பார்வைக்கு அனுப்பியிருந்தார். கல்வெட்டில் ஒரு சைவப்பாடல் இருக்கிறது. 
பாடல் வரிகள் வருமாறு :
வையம் நீடுக மாமழை மன்னுக
மெய்விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறுசிறக்கவே

            கல்வெட்டில் பாடலுக்கு முன் இரண்டு கிரந்த எழுத்துகள் உள்ளன. அவை “ஹர:” பாடல் சிவ மதத்தைப் போற்றுவதாக அமைந்துள்ளது. சீனாவில் குவான் ஜோ (QUANZHOU) என்னுமிடத்தில் கிடைத்துள்ளது.

குப்ளாய் கான்  காலக் கல்வெட்டு:
            இதே ஊரில், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னர் இன்னொரு கல்வெட்டு கிடைத்தது. அது பற்றி SOUTH INDIAN STUDIES பதிப்பில் நீண்டதொரு கட்டுரையைத் தி.நா.சுப்பிரமணியன் எழுதினார். அதிலும் கல்வெட்டு முதலில் “ஹர”  என்னும் இறை வாழ்த்துடன் தொடங்குகிறது. மங்கோல் (MONGOL) அரசன் செங்கிஸ்கானின் (GENGHIS KHAN) பேரன் குப்ளாய்கான் (KUBLAI KHAN) என்பவன். குப்ளாய் கான் என்பது எல்லாருக்கும் தெரிந்த பெயர். அவனுக்குச் “செகசை கான்”  என்னும் பெயரும் உண்டு. இது சடங்குக்காக வைத்த பெயர். அவன் ” திருமேனிக்கு நன்றாக” என்று கல்வெட்டில் வருவது அவனுடைய உடல் நலத்துக்காக எனப் பொருள் படும்.  “திருக்கானீசுவரம்”  என்னும் கோயில் எடுப்பித்த செய்தி. அரசனின் பின்னொட்டுப் பெயரான கான் (KHAN) என்பதன் அடிப்படையில் கோயிலின் பெயர் கானீசுவரம் என்று வழங்கப்பட்டது. கல்வெட்டில் வரும் “பர்மான்”  என்பது அரசனின் ஆணை (உத்தரவு) எனப்பொருள்படும் பாரசீகச் (PERSIAN) சொல்லாகும். (பின்னூட்டமாகக் கருத்துத் தெரிவித்த ஒருவர் “பர்மான்” என்பது “ப்ரமாண்” என்பதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்). கல்வெட்டு கிடைத்த இடத்தில் சிற்பங்கள் இருந்தன. ஆனந்த குமாரசாமி இதைப்பற்றி எழுதியுள்ளார். குப்ளாய் கானின் தூதுவர் பாண்டி நாட்டுக்கு வந்ததாகவும், பாண்டிநாட்டிலிருந்து தூதுவர் சீனத்துக்குச் சென்றதாகவும் செய்தி உள்ளது. கல்வெட்டில், சீன எழுத்துகள் பன்னிரண்டு உள்ளன. கரஷிமாவின் மாணவர் இதைக் கரஷிமாவுக்குக் காட்டியுள்ளார். ஆனால், சீன எழுத்துகள் இதுவரை படிக்கப்படவில்லை. சீனப் பேராசிரியர்களுக்கே படித்தல் கடினம். காரணம், பிற மொழிச் சொற்கள் சீனத்துக்கு மாறும்போது மிகப்பெரிய அளவில் மாற்றம் பெறும்.

            தற்போதைய சீனக் கல்வெட்டில் வரும் பாடல் பெரியபுராணம் நூலில் காணப்படுகிறது. இப்பாடல் சேக்கிழார் இயற்றியது அல்ல. இது, கே. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பில் சேர்க்கப்பட்ட ஒரு தனிப்பாடலாகும். ஓம்படைக்கிளவி போன்ற கருத்தில் சேர்க்கப்பட்ட தனிப்பாடல் எனலாம். திருக்குறள் நூலின் பதிப்பின் இறுதியில் அமையும் திருவள்ளுவ மாலை போன்ற பாடல் பகுதி எனலாம். (தமிழ் நாட்டில் வேறொரு கல்வெட்டிலும் இப்பாடல் வருகின்றது). இரு சீனக் கல்வெட்டுகளும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை.  மேற்படி குவான் ஜோ (QUANZHOU) நகரில் கோயில் இடிபாடுகள், துண்டுச் சிதறல்கள் முந்நூற்றுக்கும் மேலாகக் கிடைத்துள்ளன. தமிழகத்திலிருந்து கல்தச்சர்கள் சீனாவுக்குச் சென்று கோயில் சிற்பங்களைச் செய்திருக்கிறார்கள் கலைப் பண்பாட்டுப் பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இப்பணியில் பல ஆண்டுகள் அவர்கள் சீனாவில் தங்கியிருத்தல் வேண்டும். 12-13 –ஆம் நூற்றாண்டுகளில் இந்நகரம் சிறந்த துறைமுகமாக விளங்கியிருக்கிறது. பல நாட்டு வணிகர்களும், பல மதத்தவர்களும் இந்நகரின் தெற்குப்பகுதியில் குடியிருப்பு அமைத்து வாழ்ந்திருக்கிறார்கள். தமிழர் கட்டிய சிவன் கோயிலின் கட்டுமானத் துண்டுகள் -  தூண்கள், சிற்பங்கள் ஆகியவை - இங்குள்ள புத்தக் கோயில்களில் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பல தற்போது இந்நகரின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 

            ஊடகங்களில் அரைகுறையாகவும், வேகமாகவும் பல செய்திகள் (முழுப்புரிதலின்றி ?)  வெளியாகின்றன.

            15-ஆம் நூற்றாண்டில் சீனக்கப்பல்கள் இந்தியப் பகுதிக்கு வந்து போயுள்ளன. இந்தியக் கப்பல் தலைவர் பொறித்த சில கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ளன. இவை யாவும் மூன்று மொழிகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளாகும். தமிழ், சீனம், பாரசீகம் ஆகியவை அம்மொழிகள். ஒரு கல்வெட்டு கோழிக்கோட்டில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தூண் கிடைக்கவில்லை. இலங்கையில், தெற்கு கல்லெ (GALLE)  என்னுமிடத்தில் மற்றொரு கல்வெட்டு கிடைத்துள்ளது. 

கட்டுரை வாசித்தல் – அமர்வு:
            அடுத்து, கட்டுரை வாசித்தலுக்கான அமர்வு தொடங்கியது. அமர்வுக்குத் தலைவர் திரு. பூங்குன்றன் அவர்கள்.

அ) மணிகண்டன் -  நாணயவியல் ஆய்வாளர், சென்னை.
            இவர் தமக்குக் கிடைத்த ஒரு தங்க நாணயப்படத்தைக் காட்சிப்படுத்தி, அது முதலாம் இராசராசனின் நாணயம் என்னும் கருத்தை முன்வைத்தார். அதில் உள்ள புலியின் தோற்றம் இதுவரை மற்ற நாணயங்களில் கண்டிராத தோற்றம் என்பதும், நாணயத்தில் எழுதப்பட்டுள்ள “ ராஜ – உ டை “  என்னும் எழுத்துகளே என்பதும் அவர் சுட்டிய காரணங்கள். ஆனால், இவரது கருத்து முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ”உடையார்”   என்னும் முழுச் சொல் நாணயத்தில் காணப்படவில்லை.  மேலும், “ உ டை “  என்று கட்டுரையாளர் படித்த இரு எழுத்துகள் எழுத்துகளாகத் தோன்றவில்லை.  எண்களின் குறியீடாகத் தோன்றுகிறது என்பதாக ஐயங்கள் எழுந்தன. புலியின் உருவமும் சிங்கத்தையே நினைவூட்டியது. அதன் வாலின் நுனியில் காணப்படுகின்ற சிறு குஞ்சம் போன்ற அமைப்பு, சிங்கத்துக்கு அமைவதும், புலிக்கு இவ்வமைப்பு இல்லாததும் ஆய்வுக்குரியது.   

“ராஜ உ  டை”  

ஆ) முத்து பழனியப்பன் – அறநிலையத்துறை அலுவலர் (பணி நிறைவு)
            இவர், கல்வெட்டில் வருகின்ற குடி நீங்கா தேவதானம் பற்றிய தம் கருத்துகளை முன்வைத்தார். தேவதானம் என்பது கோயிலுக்குக் கொடையாக அளிக்கப்படும் நிலம் ஆகும். இந்நிலக்கொடை இறையிலியாக அளிக்கப்படும். அதாவது அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரிகளிலிருந்து நீக்கம் பெற்ற நிலம். சில போது, இவ்வகை நிலக்கொடை “குடி நீங்காத் தேவதானம்”  என்று குறிப்பிடப்பெறும். நிலங்களைச் சார்ந்து உழுகுடிகள் இருப்பர்.  இவர்கள் உழுது பயிரிட்டு அவ்வுழைப்பு தரும் வருவாயில் வாழ்பவர்கள். தேவதானமாக ஒரு நிலம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில், அந்நிலத்தைச் சார்ந்த உழுகுடிகளை மாற்றாமல் தொடர விடுகின்ற நிலையில் அந்நிலம் குடி நீங்காத் தேவதானம் எனப்படும். ஆனால் கட்டுரையாளர், குடி நீங்காத் தேவதானம் என்பது குடிவாரம் என்னும் சொல் குறிக்கும் நிலம் என்னும் பார்வையில் கருத்து வைத்தார்.  RIGHT TO PERMANENT OCCUPANCY என்னும் கருதுகோளை ஒட்டிப் பேசினார். இக்கருத்தும் ஏற்கப்படாமல் முரண் கருத்துகள் வெளிப்பட்டன.

இ) சுபாஷ் சந்திரபோஸ் -  குறியீடுகள் மற்றும் சிந்து முத்திரைகள் – ஆய்வாளர்
            இவர் தமது ஆய்வுகளை “தொ(ல்)லியல்”  என்னும் பெயரில் காட்சிப்படுத்தினார். சிந்து சமவெளி முத்திரைக் குறியீடுகளைத் தமிழகத்தில் ஆங்காங்கே கிடைக்கும் பானைக் குறியீடுகளோடு ஒப்பிடுதல், சிந்துக் குறியீடுகளைப் படித்தல் ஆகிய தம் செயல்பாடுகளை எடுத்துச் சொன்னார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  “தொலியல்” ,  உமி நீங்கிய அரிசி என்று சில தொடர்களைக் கையாண்டு ஆய்வுக்கட்டுரையாளர் கூறியவை இக்கட்டுரை ஆசிரியருக்கு விளங்கவில்லை) 


            கடந்த 25 ஆண்டுகளாக அவர் செய்துவந்துள்ளதைக் குறிப்பிட்டார். சிந்துக் குறியீடுகள் எந்த மொழியைச் சார்ந்தவை என்பது நூறு ஆண்டுகளாகச் ‘சர்ச்சை’யாக இருந்து வருகின்றது. ”மோ” , “ச”  எழுத்துகளை அவர் அடையாளம் கண்டதும்,  எகிப்து நாட்டில் கிடைத்த குறியீடுகளுக்கும், சிந்துக் குறியீடுகளுக்கும் உள்ள ஒப்புமையைக் கண்டறிந்ததையும் அவர் காட்டியவாறு கீழுள்ள படங்களில் காணலாம்.

            அவருடைய ஆய்வில் படித்தறிந்த சில தரவுகளின் படங்களை , அவர் காட்சிப்படுத்தினார்.  அவை  பார்வைக்கு:


ஈ)  முனைவர் செல்வகுமார் - நாங்கூர் அகழாய்வு
            இவர், சீர்காழி அருகில் உள்ள நாங்கூரில் செய்த அகழாய்வு பற்றி விளக்கினார்.  காவிரிப்படுகையில் அமைந்த ஊர்ப் பெயர்களின் ஆய்வினையும் செய்துள்ளார்.  நாங்கூர் சங்ககால ஊராக அறியப்படுகிறது. இது ஒரு வைணவத் திருத்தலம். திருமங்கையாழ்வாரோடு தொடர்புப் படுத்தப்படுகிறது. கரிகாலச் சோழன் நாங்கூர் வேளிரின் மகளை மணமுடிக்கக் கேட்டான் என்றொரு செவிவழிச் செய்தி  நிலவுகிறது. மூன்று குழிகளில் நடந்த அகழாய்வின்போது சங்ககாலத்தைச் சேர்ந்த கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள் இங்குக் கிடைத்தன.  மற்றும், செங்கற்கள், சுடுமண் பொம்மைகள், வளையல்கள் ஆகியனவும் கிடைத்துள்ளன.  இங்கு கிடைத்த வளையல்கள் மாந்தையில் கிடைத்த வளையல்கள் போன்றுள்ளன.  மீன், ஸ்வஸ்திகா ஆகிய குறியீடுகளும் இங்கு கிடைத்தன. 

உ) முனைவர். கே. பன்னீர்செல்வம் – இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை (ASI)
            கல்வெட்டுகளில் இயற்கைச் சீற்றங்கள்.
இவர் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய தம் செய்திகளை முன்வைத்தார். வரலாற்றுக் காலத்திலிருந்து இயற்கைச் சீற்றங்கள்,  பெருங்காற்று, பெரும் நெருப்பு, பெரும் வறட்சி,  பூகம்பம் ஆகிய பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன. இலக்கியங்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.

            விண்டு முன்னிய புயனெடங்காலக்…..கல்சேர்ப்பு மாமழை
                        -  பதிற்றுப்பத்து 84-22

            புயல்மேகம்போற்றிருமேனியம்மான்
                        -  திருவாய்- 8,10,2

            மாமேகம் பெய்த புயல்    
                        -  சீவக சிந்தாமணி 2476

            கல்வெட்டுகளிலும் இயற்கைச் சீற்றங்கள் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தென் ஆர்க்காடு மாவட்டம் திருக்கஞ்சி ஊர்க்கோயில் கல்வெட்டில் (AR No.215/1919),
“திரிபுவனமாதேவிச் சதுர்வேதிமங்கலத்து ஏரி நிறையேரியிலே பெருங்காற்றடித்துக் குலையழிந்து கெட்டமையில்”
என்று கூறப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கனின் 40-ஆம் ஆட்சியாண்டில் – கி.பி. 1110 -  பொறிக்கப்பட்டது. இதே ஊர்க்கோயிலின் மற்றுமொரு கல்வெட்டில் (AR No.216/1919) ,

“ கற்படையின்றியே நிறை ஏரியிலே பெருங்காற்றடித்து கரையழிந்து கெட்டமையில் இவ்வேரி குலோத்துங்க சோழந் கற்படையுஞ்செய்து மண்கல்லிக் கரையூட்டுகைக்கும் ஏரி மாவிரைக்குஞ் சிலவாக நிலநிமந்தமாக விடுக…”
என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 1114. ஒரே ஏரி நான்கு ஆண்டுகளுக்குள் இரு முறை பெருங்காற்றினால் கரை அழிந்துபோனமை அறிகிறோம். இதேபோல், கிளிவளநல்லூரில் (இன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்துக் கிளியனூர்), பெருங்காற்று, பெருமழை காரணமாக ஊரின் பெரிய ஏரி, பெரிய மதகு, சிற்றேரி ஆகியவற்றின் கரை அழிந்துபோன செய்தியைக் கல்வெட்டு (AR No. 154/1919) தெரிவிக்கிறது. காலம் விசயநகர அரசர் மல்லிகார்ச்சுனர் ஆட்சி. கி.பி. 1450.

            தஞ்சை மயிலாடுதுறை பரசலூர் கிராமத்துக் கோயிலில் நெருப்புப்பட்டு பழந்தேவதான நிலங்களின் ஆவணங்கள் அழிந்துபோனதை ஒரு கல்வெட்டு கூறுகிறது.

“இது துரித காலங்களிலே நெருப்புப்பட்டு அழிந்து போகயில்”  என்பது கல்வெட்டு வரி.

            மழையின்றிப் பெரும் வறட்சி ஏற்பட்டபோது, வேளாண்நிலம் பாக்குத் தோட்டமாக மாற்றப்பட்டதாக அரியலூர் பெரியதிருக்கோணக்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை புஞ்சை என்னும் கிராமத்துக் கோயில் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. முதல் கல்வெட்டின் காலம் கி.பி. 1127. அரசன் விக்கிரம சோழன். இரண்டாம் கல்வெட்டின் காலம் 1162. அரசன் இரண்டாம் இராசராசன்.

            பெருமழையால் அழிவு நேர்ந்ததைக் குடமூக்கு (குடந்தை) நாகேசுவரர் கோயில் கல்வெட்டும், வந்தவாசி மருதாடு ஊர்க்கோயில் கல்வெட்டும், மயிலாடுதுறை வழுவூர்க் கோயில் கல்வெட்டும் கூறுகின்றன.  கல்வெட்டுகளின் காலம் முறையே 1014, 1345, 1402 ஆகும். அரசர்கள் முறையே முதலாம் இராசேந்திரன், இராசநாராயண சம்புவராயர், இரண்டாம் வீரபுக்கண உடையார் ஆவர்.

            “வெண்ணாட்டு நாகக்கோட்டகம் வதி வாய்க்கால் கண்ணாற்றுச் சதிரவாறு சுற்றுக்குலையுமின்றி வெள்ளங்கொண்டநமையில்ச் சேதமாய் வருகையில்”   என்பது திருநாகேசுவரம் கோயில் கல்வெட்டின் வரிகள்.

            “பெருவெள்ளத்திலே உடைந்து இன்னாள்வரையும் அடைக்க முதலில்லாமற் கிடக்கையில் இவ்வேரி அடைக்க..”   என்பது மருதாடு ஊர்க்கோயிலின் கல்வெட்டு வரிகள்.

            திருவண்ணாமலைக் கோயில் கல்வெட்டு அவ்வூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தைப் பற்றிக்கூறுகிறது.

            “பிறபவ வருஷம் ஆடி மீ 16-ஆந்தேதி பூகம்பம்மாகையில் மதிள் அடிமட்டிராக விழுந்து போகையில்…”    என்பது கல்வெட்டு வரி.

ஊ) முனைவர் இரமேஷ் – ஜம்பை பள்ளிச் சந்தல் கல்வெட்டு பற்றி.
            ஜம்பையில் சமணப்பள்ளி இருந்துள்ளதன் காரணமாக இங்குள்ள ஒரு பகுதிக்குப் பள்ளிச் சந்தல் என்னும் பெயர் அமைந்தது. இங்கு ஏரியை அடுத்துள்ள வயற்பகுதியில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆறு பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது. சக்கன் வைரி என்பவன் ஏரி வெட்டிக்கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. ஏரியைப் பாதுகாக்க நிலக்கொடையும் அளிக்கிறான். இவ்வகை நிலக்கொடை “ஏரிப்பட்டி”  எனப்படும்.  “காடு வெட்டி  கட்டைகொண்டு புத்தறை அறுத்து”   என்பது கல்வெட்டு வரிகள். காடு அழித்துப் புதிய தரை நிலம் (புத்தரை) உருவாக்குகின்றனர். கட்டை என்பது மரத்தின் வேர்ப்பாகம். ”கட்டைகொண்டு”   என்பது மரத்தின் வேரோடு காடு அழிக்கப்பட்டதைக் குறிக்கும். கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு இக்கல்வெட்டு விசயாலய சோழன் காலத்தது எனக் கருதலாம். விசயாலயனின் ஆட்சிக்காலம் கி.பி. 848-871 எனவும் கி.பி. 850-871 எனவும் இரு வகையான கருத்துள்ளது. கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்திரண்டு என்றிருப்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 871 என்று கொள்ளலாம். கல்வெட்டில், குறிப்பாக  ”அ” எழுத்து மிகவும் பழமையான வடிவத்தில் உள்ளது. எனவே, முதலாம் பராந்தகனின் காலத்துக்கும் முன்னர் கருதுமாறுள்ளது. கல்வெட்டு ஜம்பையின் பழம்பெயராக  வாளையூர் எனக்குறிக்கிறது.  

ஏரிக் கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம் :
1  (ஸ்வஸ்தி)ஸ்ரீ  கோப்பரகேசரி ப
2  (ன்) மற்க்கு  யாண்டு இருபத்
3  .....ன்றாவது வாணகோப்பாடி
4  ....னையூர் நாட்டார் பெரும்பள்ளி 
5  பள்ளிச் சந்தத்து சக்கன் வயிரி ....
6  ...ந்த ஏரிக்கீழ்ச் சக்கன்  காடுவெட்டி
7  க்கட்டை கொண்டு புத்தறை அறுத்து அவ்வே
8  .....ஏரிப்பட்டியாகச் செய்த நிலம் எல்லை
9  ..........சா0ஸநம்  வெட்டின அருகிற்
10  ...............  ம்  வடக்கெல்லை ஏரி கரையடி
11  ...மேல்பாற்கெல்லை வெம்பொ(ற்/டு) குழியு...
12  .... பாற்கெல்லை கீழ்க்கடைக்கொம்பில் ....
13  ..................... கு வருந்திசையிலும் நடுவு
14  (பட்ட நில)ம்  உண்ணிலமொழிவின்றி ...
15  (டிக) ........ சந்தமுடைய பூமிய 
16  ........ பெற்று இவ்வேரிப்(பட்டி)...
17  ...............  க்கடி வயிர ....(ணன்) இ(து)
18  ...............  தலைமேலன.....
19  .......     க ம  ..... ந  உ-

            கல்வெட்டின் பாடத்தைக் கொண்டு, சக்கன் வயிரி என்பவன் ஏரி வெட்டியதாகப் பொருள் கொள்ளமுடியவில்லை. ஏரியைப் பேணுவதற்காக ஏரிக்கீழ் இருக்கும் நிலத்தில் காடு வெட்டித் திருத்திய நிலத்தை “ஏரிப்பட்டி”யாகக் கொடை அளித்தான் என்றே தோன்றுகிறது. கல்வெட்டை ஆய்ந்த இரமேஷ் அவர்களைத் தொடர்புகொண்டு ஐயம் தீர்க்கவேண்டும். ஐயம் தீர்க்கும் முயற்சியில் கல்வெட்டின் தெளிவான ஒளிப்படத்தை அவரிடமிருந்து பெற்றேன்.  ஏரியைச் சக்கன் வயிரி வெட்டினான் என்பது உறுதியாகவில்லை என்றே கருதுகிறேன். ”புத்தறை அறுத்து” என்று கல்வெட்டில் வருகிறது. இது, புல் முளைத்த தரைப்பகுதியைச் சீராக்கியதையே குறிக்கும் என்பது கல்வெட்டு அறிஞர் திரு. பூங்குன்றன் அவர்களின் கருத்து. ஆட்சியாண்டு இருபத்திரண்டு அல்ல என்றும் தோன்றுகிறது. ஐயங்கள் பற்றிய விளக்கம் திரு.இரமேஷிடமிருந்து கிடைத்த பின் சரியான கருத்து தெரியவரலாம்).

            அடுத்து இன்னொரு கல்வெட்டு இரண்டாம் இராசராசனின் ஆறாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ஜம்பையில் உள்ள சமணப்பள்ளியில் அஞ்சினான் புகலிடம் அமைத்ததைக் கல்வெட்டு குறிக்கிறது. நேமிநாதன் என்பவன் (துரவு) கிணறு அமைத்ததையும் கல்வெட்டு குறிக்கிறது.

அஞ்சினான் புகலிடம் 

கல்வெட்டின் பாடம்:   
1.  ஸ்வஸ்திஸ்ரீ ராஜராஜதேவற்கு யாண்டு ஆறாவது சம்பையாந வீரராஜேந்த்ர பு
2.  ரத்து ஸ்ரீகண்டராதித்தப் பெரும்பள்ளிப் பள்ளிச் சந்தத்து ஸ்ரீகண்டராதித்தப்
3.  பெரும்பள்ளி பள்ளியுடையாந் நேமிநாதந் இட்ட துரவு சோளதுங்கந் ஆளவந்
4.  தாந் அஞ்சிநாந் புகலிடம்  

தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு:
            முதல் நாள் நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக, தி.நா.சுப்பிரமணியன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்த அறக்கட்டளையை நிறுவியவர் மறைந்த கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.

            சொற்பொழிவினை ஆற்றியவர்,  தமிழகத்தின் புகழ்பெற்ற நாணயவியல் ஆய்வாளர் திரு. ஆறுமுக சீதாராமன் அவர்கள். நிறைய நாணயங்களின் படங்களைக் காட்சிப்படுத்தி அவற்றிலுள்ள எழுத்துகளைப் பார்வையாளர்களுக்குப் புரியும் வகையில் படித்துக்காட்டினார். நாணயங்களைப் பற்றிய புலமை கைவரப்பெறுதல் எளிதல்ல.  அவர் காட்சிப்படுத்தி விளக்கிய காசுகளின் எண்ணிக்கை மிகுதி. தனிக்கட்டுரையாக விரியும் தன்மையது. இங்கே ஒரு சில காசுகளைப் பற்றி மட்டும் குறிப்புகளைத் தந்து இக்கட்டுரையைக் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்ச்சியோடு முடிக்கின்றேன். கருத்தரங்கின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி மற்றுமொரு கட்டுரையாக அமையும். 

1.   பாண்டியர் காசு -  பெருவழுதி
இக்காசு, சங்ககாலப் பாண்டியர் காசு. எழுத்து பிராமி எழுத்து. பட்டிபுரோலு வகைப் பிராமி எழுத்தைச் சேர்ந்தது. அதாவது நெடிலுக்குரிய குறியீடு கொண்டிருக்கும்; குறிலாகப் படிக்கவேண்டும். இதில் “பெருவாழுதி” என்றே எழுதப்பட்டுள்ளது.

2.   சேரர் காசு - குட்டுவன் கோதை
சேரர் காசு. பிராமி எழுத்து. “கு” எழுத்தில் உகரத்தைக் குறிக்கும் குறியீடு வலப்புறமாக எழுதப்படுவதற்கு மாறாக இடப்புறமாக எழுதப்பட்டுள்ளது.

3.   பல்லவன் காசு - மாமல்லன்
காசின் முன்பக்கம் காளை உருவம்; பின்பக்கம் சங்கு உருவம்.  கிரந்த எழுத்துகளில் ”மாமல்ல”   என்று எழுதப்பட்டுள்ளது. “ல்ல”  என்பது கூட்டெழுத்து. 

4.   சோழர் காசு -  ராஜேந்திர சோழன்
சோழ கிரந்தத்தில்  ”ராஜேந்த்ர சோழந்”   என்று எழுதப்பட்டுள்ளது.  இரண்டு மீன்கள், அமர்ந்த புலி, வில்  ஆகியவை உள்ளன.

5.   பாண்டியர் காசு  (13-ஆம் நூற்றாண்டு )  -  சோணாடுகொண்டான்
காசின் முன்பக்கம் நிற்கும் மனிதன். பின் பக்கம் “சோணாடுகொண்டான்”  தமிழில்.


6.   கோனேரிராயன் காசு -  15-ஆம் நூற்றாண்டு
முன்பக்கம் காளையும், குத்து வாளும்.  குத்துவாளுக்கு மாலை அணிவிக்கப்பட்டுளது. பின்பக்கம் “கோனேரிராயன்”  தமிழில்.

7.   தஞ்சை நாயக்கர் காசு -  விசையரகுனாத
காசின் முன்பக்கத்தில் நின்ற கோலத்தில் திருமகள்; பின்பக்கத்தில் தமிழில் “விசையரகுனாத”.

8.   மதுரை நாயக்கர்  காசு  -   மங்கம்மா
காசின் முன்பக்கத்தில் வீணையுடன் கலைமகள்;  பின் பக்கத்தில் “மங்கம” என்று தெலுங்கு எழுத்தில். 
(கட்டுரை ஆசிரியர் குறிப்பு :   மூன்றாவது எழுத்து  ஆய்வுக்கட்டுரையாளர் சற்றுப் பிழையாகக் காட்டியுள்ளார் என்பது கருத்து. தெலுங்கு எழுத்தில் “க”  [GA]  எழுத்து , படத்தில் காண்பிக்கப்பட்ட ஆங்கில "A"  வடிவத்தில் இடைக்கோடு  இன்றித் தலைகீழ் "U"  வடிவில் எழுதப்படும்.)

9.   சேதுபதி காசு
காசின் முன்பக்கம் மயிலின் மேல் ஆறுமுகம்; பின்பக்கம் தமிழில் “சேதுபதி”.

10.   ஆங்கிலேயர் காசு -   யிது னாற்பது காசு
காசின் முன்பக்கம் , தெலுங்கிலும் தமிழிலும். பின் பக்கம்  பாரசீகம், ஆங்கிலம்.





தொடர்பு:  துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
doraisundaram18@gmail.com, அலைபேசி : 9444939156.

                 


Thursday, August 8, 2019

சங்க இலக்கியத்தில் யானைமலை

— திருத்தம் பொன்.சரவணன்



முன்னுரை:
          யானைமலை - மதுரை மாவட்டத்தில் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மதுரைக்கு வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இம்மலை அமைந்துள்ளது. இதன் நீளம் சுமார் 4000 மீ; அகலம் 1200 மீ; உயரம் 400 மீ. இம்மலையை சற்று தூரத்திலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பது போலத் தோன்றுவதால் இது யானைமலை எனப் பெயர் பெற்றுள்ளது. இம்மலைக்கு நரசிங்கமங்கலம் என்ற பெயரும் உண்டு. இம்மலையின் உச்சியில் குகைத் தளம் காணப்படுகிறது. இக்குகைத் தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. 


          யானைமலையில் நரசிங்கப் பெருமாளின் திருவுருவம் பாறையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, முருகப் பெருமானுக்கு இலாடன் கோயில் எனும் குடைவரை கோவிலும் இங்கு உள்ளது. இக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகள், முற்காலப் பாண்டியர், சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் எனக் கூறுகிறது. கி. பி. 9 - 10 நூற்றாண்டுகளில், சமண சமயத் துறவியான அச்சணந்தி என்பவரால், தீர்த்தங்கரர்களில் மகாவீரர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி சிற்பங்கள் யானைமலையில் செதுக்கப்பட்டது. மதுரையை ஆண்ட விசயநகர மன்னர்கள் காலக் கல்வெட்டில் யானைமலையை "கசகிரி" என்று சமற்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இச் செய்திகளை எல்லாம் தமிழ் விக்கிப்பீடியாவில் காணமுடிகிறது. ஆனால், சங்க காலத்திலேயே அதாவது ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இம்மலையானது சிறப்பாகப் பேசப்பட்டுள்ளது.. சங்க இலக்கியத்தில் இம்மலையைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இலக்கியத்தில் யானைமலை:
          பல்வேறு கல்வெட்டுக்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு இருப்பதனை மேலே கண்டோம். கல்வெட்டுக்கள் மட்டுமின்றி, தமிழ் இலக்கியங்களிலும் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் தாம் எழுதிய மதுரைப் பதிகத்தில், யானைமலையில் சமணர்கள் பள்ளிகளை அமைத்துத் தங்கி இருந்த செய்தியைக் கூறியுள்ளார். பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. இவையெல்லாம் பிற்கால இலக்கியச் செய்திகள் ஆகும். இனி, சங்க இலக்கியங்களில் யானைமலையைப் பற்றி என்னென்ன செய்திகள் கூறப்பட்டுள்ளன என்று காணலாம்.

சங்க இலக்கியங்களில் யானைமலை:
          சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

          சங்கப் பாடல்கள் யானைமலையைக் குறிப்பிடும்போது, பிடி மடிந்தன்ன குறும்பொறை, பிடி மடிந்தன்ன கல், பிடி துஞ்சு அன்ன அறை ஆகிய சொற்றொடர்களால் உணர்த்துகின்றன. ஒரு பெண்யானையானது படுத்து உறங்குவதைப் போலத் தோன்றும் மலை என்பதே இச் சொற்றொடர்களின் பொருளாகும். இனி, இப்பாடல்கள் கூறும் செய்திகளை விளக்கத்துடன் காணலாம்.

அகநானூற்றுப் பாடல்கள்:
          மதுரை மருதன் இளநாகனார் இயற்றிய அகப்பாடல் 269 ல் யானைமலை பற்றிய விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளது. இப்பாடலில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

          யானைமலைப் பகுதியானது சங்ககாலத்தில் முல்லைநிலமாக விளங்கியது. இப் பகுதியில் முல்லைநில மக்களாகிய ஆயர் / கோவலர் வாழ்ந்தனர். ஆடுமாடுகளை மேய்ப்பதற்கு ஏதுவாக யானைமலையைச் சுற்றிலும் பரந்த பசும் புல்வெளி இருந்திருக்க வேண்டும் அல்லவா?. இப்படிப்பட்ட பரந்த பசும் புல்வெளிகளை இன்றும் கூட யானைமலையைச் சுற்றிலும் காணலாம். 



          ஆயர்களின் ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்து செல்வதும் ஆயர்கள் கள்வருடன் போர்செய்து அவற்றை மீட்டு வருவதும் சங்ககாலத் தமிழரின் நடைமுறை ஆகும். இத்தகைய நடைமுறை ஒன்றினைத் தான் இப்பாடல் விரிவாகக் கூறுகிறது. தங்களது ஆடுமாடுகளைக் கள்வர் கவர்ந்துசெல்ல, அவற்றை மீட்பதற்காகத் தலையில் சிவந்த கரந்தைப் பூமாலையினையும் கால்களில் கழல்களையும் அணிந்து கையில் கூரிய வேல் தாங்கி வீரர்கள் தயாராயினர். கரந்தைப் போருக்குக் கிளம்பும் முன்னர், வீரமரணம் எய்திய முன்னோர்களின் நடுகல்லை வழிபட்டனர். இந்த நடுகல்லானது செயற்கையாக நடப்படாமல் நட்டதைப்போலவே இயற்கையாக அகலமாகவும் உயரமாகவும் விளங்கியதொரு கல்லாகும். இதற்கு முன்னால் கரந்தைப் போருக்குச் சென்று வீரமரணம் எய்திய முன்னோர்கள் அனைவரின் பெயரும் இக் கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தது. இக் கல்லானது படுத்திருக்கும் யானையைப் போலவே தோன்றுகின்ற யானைமலையை ஒட்டியே அமைந்திருந்தது. முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அக்கல்லினை நீரால் கழுவி ஈரமஞ்சளைப் பூசி வழிபட்டனர். இச் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… ஏறு உடை இன நிரை பெயர பெயராது
செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்
பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின்
நட்ட போலும் நடாஅ நெடும் கல்
அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி
நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின்
செம் பூ கரந்தை புனைந்த கண்ணி
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால்
இளையர் பதி பெயரும் அரும் சுரம் இறந்தோர் …… அகம். 269

          மேற்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள மலையானது மதுரையில் இருக்கும் யானைமலை தானா இல்லை வேறு ஏதாவதொரு மலையா என்ற ஐயப்பாட்டினை இப்பாடலை இயற்றிய ஆசிரியரின் ஊர் ஆகிய மதுரை என்ற பெயர் தெளிவாக்கி விடுகிறது.

          அடுத்ததாக, பரணர் இயற்றிய அகப்பாடல் எண் 178 ஐக் காணலாம். யானைமலையின் அருகில் நீர் ஊறுகின்ற மிகப்பெரிய சுனை ஒன்று இருந்தது. யானைமலையில் பெய்யும் மழைநீரெல்லாம் கீழே இறங்கி கடலில் பல ஆறுகள் கலப்பதைப் போல இந்த சுனையில் ஒன்று சேர்ந்தன. வயிரம் போல ஒளிர்ந்த கூரிய பற்களையும் மூங்கில் வேர்போன்ற மயிரினையும் கொண்ட காட்டுப்பன்றி ஒன்று சேப்பங் கிழங்குகளைத் தோண்டி எடுத்து உண்டபின்னர் அருகிலிருந்த சுனைநீரைப் பருகியது. பின்னர், அடர்ந்து வளர்ந்திருந்த செடிகொடிகளுக்கு இடையில் காட்டுப்பன்றி புகுந்து சென்றபோது வெண் கூதாள மலர்களின்மேல் அதன் உடல் உரசவும், அம்மலர்களிலிருந்து பொன்னிறத் தாதுக்கள் பன்றியின் உடல்மேல் உதிர்ந்தன. அந்நிலையில் அப்பன்றியைப் பார்ப்பதற்குப் பொன் துகள்கள் ஒட்டியிருக்கும் கட்டளைக் கல்லைப் போலத் தோன்றியதாகப் புலவர் பாடுகிறார்.



          இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் “பிடி மடிந்தன்ன கல்” என்பது யானைமலையினையும் “ஊறுநீர்ப் படார்” என்பது நீர்ச் சுனையினையும் குறிப்பதாகும். இச் சுனையினை யானைமலையின் கீழே இன்றும் காணலாம். யானைமலையின் கீழே இருக்கும் இச்சுனையானது ஏனைய குளம் குட்டைகளைப் போன்றதல்ல. இது நீர் ஊறும் பள்ளமாக விளங்கியதால் தான் பல ஆயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும் வற்றிப் போகாமல் உள்ளது. இச் சுனையானது அருகில் உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேற்காணும் செய்திகளைக் கூறும் அகப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
….. வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின்
வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர் பன்றி
பறை கண் அன்ன நிறை சுனை பருகி
நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு
யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர் படாஅர்
பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன
வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக
பொன் உரை கட்டளை கடுப்ப காண்வர ….. - அகம். 178

கலித்தொகைப் பாடல்:
          கலித்தொகையின் 108 ஆம் பாடலிலும் யானைமலை பற்றிய செய்திகள் உள்ளன. யானைமலையானது முல்லைநில மக்கள் ஆகிய ஆயர் / கோவலர் வாழ்ந்த பகுதியாக விளங்கியது என்று முன்னர் கண்டோம். கலித்தொகையின் 108 ஆவது பாடலும் முல்லைநில மக்களைப் பற்றியே கூறுகின்றது.



          பெண்யானை ஒன்று படுத்திருப்பதனைப் போலவே தோன்றும் யானைமலையைச் சுற்றிலும் இயற்கையானது செழிப்புடன் விளங்கியதைக் கலித்தொகைப் பாடலின் மூலம் அறிய முடிகிறது. மாடுகளை மேய்த்துக்கொண்டு கோலுடன் செல்லும் ஆயன் மகன் ஒருவன் வழியில் ஒரு ஆயர்குலப் பெண்ணைக் கண்டு காதல் வயப்படுகிறான். அவளை விரும்புவதாகக் கூறி அவளது அழகைப் புகழ்கிறான். அவளோ அவனது காதலை ஏற்க மறுத்து வீடு செல்ல விரும்புகிறாள். அவள் வீட்டுக்கு விரைவதைத் தடுக்கும் ஆயனோ வெயில் அதிகமாக இருப்பதால் குளுமை மிக்க யானைமலைக்குச் செல்லலாம் என்றும் அங்கே சுனைநீரில் விளையாடியும் மலர்களைப் பறித்துச் சூடியும் சோலையில் தங்கிப் பொழுதைக் கழித்தும் மாலையில் வீடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை கூறுகிறான். மிக நீளமான அப்பாடலிலிருந்து குறிப்பிட்ட சில வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

…….. வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை
மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன
வெயிலொடு எவன் விரைந்து சேறி உது காண்
பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின்
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி
பனி பூ தளவொடு முல்லை பறித்து
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி
பனி பட செல்வாய் நும் ஊர்க்கு ….. – கலி. 108

          மேற்காணும் பாடல் வரிகளிலிருந்து யானைமலையைப் பற்றிய சுவையான சில செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது. வெட்டப்பட்ட நுங்கின் கண்களைப் போலத் தோன்றும் சிறிய பல நீர்ச்சுனைகள் யானைமலையின் மேலே இருந்தன என்றும் தளவம், முல்லை, காயா போன்ற பலவித மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் யானைமலையைச் சூழ இருந்தன என்றும் ஆயர்கள் தமது வீடுகளில் வெண்ணெய் கடையும் ஓசையானது எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டே இருந்தது என்றும் இப்பாடலின் வரிகள் மூலம் தெரிய வருகிறது. யானைமலையின் மேல் இருந்த சுனைகளையே பின்னாளில் வந்த சமணர்கள் தமக்கான படுக்கைகளாகச் செதுக்கி மாற்றியிருக்கக் கூடும்.

நரசிம்மர் குடைவரை:
          மேற்காணும் கலித்தொகைப் பாடலிலிருந்து அறியப் பெறுவதும் சங்ககாலம் தொட்டு இன்றுவரையிலும் நிலைபெற்று மக்களால் வணங்கப்பட்டு வருவதுமாகிய நரசிம்மர் குடைவரை இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்த நரசிம்மர் குடைவரையானது யானைமலையில் உள்ள கல்லின்மேல் செதுக்கப்பட்ட திருமால் வடிவமாகும்.



          முல்லைநில மக்களின் தெய்வமாகிய திருமாலின் வடிவத்தைச் சங்க காலத்திலேயே யானைமலையில் செதுக்கி வைத்து வழிபட்ட செய்தியை மேற்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவது வியப்பூட்டுவதாக உள்ளது. அச் செய்தியினைக் கூறும் பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

…… மாயோய் நின்னின் சிறந்தார்
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி
மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியை
தலையினால் தொட்டு உற்றேன் சூள் …. கலி.108

          தன்னை நம்பாத ஆயர்குலப் பெண்ணிடம் நம்பிக்கையை உண்டாக்கி அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதற்காக, திருமாலின் அடியினைத் தனது தலையால் தொட்டு ஆயன் மகன் சூள் உரைப்பதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. இப்பாடலில் வரும் “ மலையொடு மார்பு அமைந்த செல்வன் “ என்பது “ மலையுடன் தனது மார்பு / உடல் அமையப்பெற்ற செல்வன் “ என்ற பொருளைத் தருவதாகும். அனைத்துச் செல்வங்களையும் உடையவன் / தருபவன் என்ற பொருளில் கடவுளரைச் செல்வன் என்ற பெயரால் பொதுவாகக் குறிப்பிடுவது சங்ககால வழக்கம் ஆகும். சான்றாக, சிவபெருமானை ஆலமர்செல்வன் என்று சங்க இலக்கியம் சுட்டுகிறது. மேற்காணும் பாடலில், ஆயன் தனது தலையினால் செல்வனின் திருவடிகளைத் தொட்டு வணங்கிச் சூள் உரைப்பதாகக் கூறுவதால் அச்செல்வன் வேறு யாருமல்ல திருமால் தான் என்பது உறுதியாகிறது.

முடிவுரை:
          இதுவரை மேலே கண்ட பல சான்றுகளிலிருந்து சங்க காலத்திலேயே யானைமலை விரிவாகப் பேசப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம். யானைமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல கரந்தைப் போர்கள் நடந்திருக்கும் என்பதால் போரில் மரணம் அடைந்தோரின் உடல்கள் அப்பகுதியில் தான் புதைக்கப்பட்டு இருக்க வேண்டும். யானைமலையைச் சுற்றிலும் அகழ்வாய்வு செய்வதன் மூலம் புதைந்துபோன அந்த நடுகல் கிடைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, சங்ககாலம் பற்றியும் தமிழரது தொன்மை பற்றியும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் பல தொல்பொருள் எச்சங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு இப் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளானது இக் கட்டுரையின் மூலம் தமிழக அரசுக்குப் பணிவுடன் முன்வைக்கப் படுகிறது.  




தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/





Sunday, August 4, 2019

தமிழ் மொழி போதுமே தா



 ——    திருத்தம் பொன்.சரவணன்



இமிழ்திரைக் கடல்சூழ் உலகம் முழுவதும் 
இமையெனக் காத்திடும் உமையொரு பாக
அமிழ்தெனக் களிப்பினும் அகமகிழ் வில்லை
தமிழ்மொழி போதுமே தா.


தொடர்பு:  திருத்தம் பொன்.சரவணன் (vaendhan@gmail.com)





---

தூத்துக்குடியில் கி.பி 17ம் நூற்றாண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனி செயலாக்கமும் வரலாற்று ஆய்வின் தேவைகளும்

 — முனைவர்.க.சுபாஷிணி


            கி.பி. 1658 முதல் 1661 வரையிலான பாதிரியார் பிலிப் பால்டியூஸ் அவர்களது குறிப்புக்கள் தூத்துக்குடி பரதவ மக்களின் சமூக நிலையைப் பற்றிய முக்கியத் தரவுகளை வழங்குகின்றன.


            டச்சுக்காரர்கள் போர்த்துக்கீசியர்களிடமிருந்து தூத்துக்குடி துறைமுகப் பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த தேவாலயங்களிலிருந்த கிருத்துவ தெய்வ வடிவங்களை அகற்றி தேவாலயத்திற்குள் கிருத்துவக் கோட்பாட்டின் 10 கட்டளைகளைப் பிரதானமாக வைத்து கிருத்துவ நெறிகளை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள முயன்றிருக்கின்றனர். அதுமட்டுமன்றி இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது தேவாலயம் ஓரளவு சேதமும் அடைந்திருந்தது. இது தூத்துக்குடி பரதவ மக்களுக்கு டச்சுக்காரர்கள் மேல் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது என்று பதிவு செய்கிறார் பால்டியூஸ்.  தேவாலயத்தின்  மணியை அடித்து மக்களை ஒன்று திரட்டி தேவாலயத்திற்கு அழைத்து டச்சுக்காரர்கள் புதிய முறையில் வழிபாட்டை அறிமுகப்படுத்திய  பொழுது, மக்கள் டச்சுக்காரர்களை தமது எதிரிகளாகப் பார்ப்பதாகக் கூறியதைப் பாதிரியார் பால்டியூஸ் பதிகின்றார்.

            தனது சமய முயற்சி தூத்துக்குடியில் தோல்வியடைந்ததை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து அவர் வேறு பகுதிக்குச் சென்ற பின்னர் ரெவரண்ட் ஜோன் ஃபெரைரா அல்மெய்டா (Rev. John Fereira Almeyda) என்ற லிஸ்பன் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த போர்த்துக்கீசியர் அங்கு சமய போதனை செய்ய வந்ததாகவும், ஆனால் அவரும் தனது முயற்சியில் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடுகின்றார். அதுமட்டுமன்றி அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் எடுக்கப்பட்டு தனது சமயத்திலிருந்து விலகியவர் எனக் குற்றம் சுமத்தப்பட்டதாகவும், அது மட்டுமன்றி அவரது உருவ பொம்மை கொடும்பாவி கோவாவில் எரிக்கப்பட்டதாகவும் அறிகின்றோம். ஆக, இக்காலகட்டத்தில் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்துவமே இப்பகுதியில் ஆழமாக வேரூன்றி இருந்தது என்று அறியமுடிகின்றது.

            தூத்துக்குடி பரதவ மக்களின் முக்கியத் தொழிலாக அன்றைய நிலையில் முத்துக்குளித்தலும் மீன் பிடித்தலும், கைத்தறி நெய்தலும் இருந்தன. இன்று முத்துக்குளித்தல் பெருமளவில் குறைந்து விட்டது என்றாலும் ஆழ்கடலில் மூழ்கி சங்கெடுக்கும் தொழில் இன்றும் நடைபெறுகின்றது.

            முத்துக்களைப் பற்றி பாதிரியார் பால்டியூஸ் இப்படி விவரிக்கின்றார். முத்துக்கள் ஒரு வகை சிப்பி ஓட்டுக்குள் இருக்கும். இவ்வகை சிப்பிகளைச் சாப்பிட முடியாது. ஓரளவு ஆழ்கடலுக்குள் மூழ்கிச் சென்று தான் இந்த சிப்பிகளைப் பொறுக்கி எடுத்து வர வேண்டும். முத்து எடுத்தல் தொழில் என்பது, ஆண்டின் எல்லா நாட்களிலும் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில மாதங்களில் தான் இவை நடைபெறும். சில நேரங்களில் சிப்பிக்குள் மணல் மட்டுமே நிறைந்திருக்கும். முழுமையாகத் தயாராகாத நிலையிலேயே எடுக்கப்பட்ட சிப்பிகள் இவை. இவற்றினால் பலனில்லை. முத்துக்குளிக்கும் பரதவர்கள் திறமையானவர்கள். அவர்கள் ஒரு சில சிப்பிகளை மட்டும் முதலில் கொண்டு வந்து சோதித்து பின்னர் எப்பகுதியில் சிப்பிகளைப் பொறுக்கி எடுக்கலாம் என முடிவு செய்து கொள்வார்கள். அப்படி முத்துக்கள் தயாரான சிப்பிகள் இருப்பது தெரிந்து விட்டால் அவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கடற்கரை பகுதிகளில் கூடாரம் அமைத்துத் தங்கி விடுவார்கள். முத்துக்குளித்தல் காலகட்டம் முடிவுக்கு வரும் வரை அவர்கள் அங்கேயே தங்கியிருப்பார்கள்.

            டச்சு கிழக்கிந்திய கம்பெனி இவர்களது ஆழ்கடல் முத்துக்குளித்தல் தொழிலுக்குச் சில பாதுகாப்பு முயற்சிகளை அச்சமயத்தில் ஏற்படுத்தித் தந்ததாகவும், இதனால் முத்துக்குளித்தல் வியாபாரத்தில் வரும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களுக்கு மக்கள் வழங்கினர் என்றும் அவரது குறிப்புக்கள் சொல்கின்றன. ஆக, டச்சு கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் ஈட்டும் ஒரு பகுதியாக இப்பகுதி இருந்துள்ளதை நாம் மறுக்க முடியாது.

            பொதுவாகவே பரதவ மக்கள் தூத்துக்குடி சந்தையிலேயே தங்கள் முத்துக்களை அன்று வியாபாரம் செய்தனர். பல நாட்டு வணிகர்களும் அப்பகுதிக்கு வந்து முத்துக்களை வாங்கிச் செல்வது இயல்பாக நடந்திருக்கின்றது. முத்துக்களை நீக்கிய உடைந்த சிப்பிகளின் துகள் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இவை ஒருவித மருந்து தயாரிப்பிற்குப் பயன்பட்டதாகத் தெரிகின்றது.

            தூத்துக்குடியில் மேலும் ஒரு முக்கியத் தொழிலாக நீண்ட காலம் கைத்தறி தொழிலிருந்தது. இதன் சான்றாக சாயர்புரம் பகுதியில் இன்றும் தறிகள் இயங்கும் ஒலியை நாம் கேட்கின்றோம்.   விவசாய நிலங்களில் அரிசி மற்றும் காய்கறி உற்பத்தியும் தூத்துக்குடி பகுதியில் மக்களின் தொழிலாக இருந்தது என்று பாதிரியார் பிலிப் பால்டியூஸ் சுட்டிக்காட்டுகின்றார்.

            தூத்துக்குடி மாவட்டத்தில் 19ம் நூற்றாண்டில் இறுதியில் நிகழ்த்தப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகள் தொடங்கி அண்மைய அகழாய்வுகள் வரை இப்பகுதியில் பல்வேறு இனக்குழு மக்கள் வந்து புழங்கிச் சென்றதற்கான நீண்ட கால சான்றுகளைப் பறைசாற்றுகின்றன. அதன் தொடர்ச்சியினைப் பாதிரியார் பால்டியூஸின் குறிப்புக்களின் வழி கி.பி 17 வாக்கிலும் காண்கின்றோம். இதன் அடிப்படையில் நோக்கும் போது தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய இடம் பிடிக்கும் ஒரு மிக முக்கிய நகரங்களில் தூத்துக்குடி சிறப்பிடம் பெறுகின்றது. இங்கு இதுகாறும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வுகளும் சரி, சமூகப் பண்பாட்டுத்தளத்திலான ஆய்வுகளும் சரி, மிகச் சிறிய அளவிலேயே நிகழ்த்தப்பட்டுள்ளது என்றே கருதக் கூடியதாக அமைகின்றது. இது வருத்தப்பட வேண்டிய விடயம். மிக விரிவான அகழாய்வுப் பணிகளும் மக்கள் வாழ்வியல் கூறுகளை வெளிப்படுத்தும் சமூக மானுடவியல் கண்ணோட்டத்திலான ஆய்வுகளும் அறிவியல்பூர்வமான கருதுகோள்களின் அடிப்படையில் இப்பகுதியில் நிகழ்த்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. இதனைத் தமிழக கல்வி ஆய்வு நிறுவனங்களும், தமிழக அரசின் கீழ் இயங்கும் தொல்லியல் துறையும் கவனத்தில் எடுக்க வேண்டியது மிக அவசியம்.


குறிப்பு:   "A Description of EAST INDIA Coast of  MALABAR and CORMANDEL with their adjacent Kingdoms & Provinces & of the Empire of  CEYLON  and of the Idolatry of the Pagans in the EAST INDIES”  - Philip Baldaeus, Minister of the Word of God in Ceylon, Printed in Amsterdam, 1672.




Friday, August 2, 2019

பிலிப்பஸ் பால்டியூஸ் (டச்சு) அவர்களின் தூத்துக்குடி குறிப்புகள் (1658-1661)

 ⁠— முனைவர்.க.சுபாஷிணி


            "பிலிப்பஸ் பால்டியூஸ்  தயாரிப்பில் தமிழ் இலக்கணம் - தமிழ் இங்கே மலபார் மொழி எனக் குறிப்பிடப்படுவதையும், ஓலைச்சுவடி எழுத்தாணி தமிழ் நிலத்தில் எழுதும் முறை ஆகியன விளக்கப்பட்டிருப்பதையும் இங்கு காணலாம் - கி.பி.1672."





            பிலிப்பஸ் பால்டியூஸ் (Philip Baldaeus) தனது மிகப்பெரிய ஆவணப்படைப்பான "A Description of EAST INDIA Coast of  MALABAR and CORMANDEL with their adjacent Kingdoms & Provinces & of the Empire of  CEYLON  and of the Idolatry of the Pagans in the EAST INDIES" என்ற நூலில்  தனது பயண அனுபவங்களையும், செயல்பாடுகளையும், தான் உள்வாங்கிய கருத்துக்களையும் மிக விரிவாகக் குறிப்பிடுகின்றார். அன்றைய தமிழகத்தின் தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகள்  மதுரை நாட்டிலிருந்தது என்ற வகையில் குறிப்புகள் இந்த நூலில் வழங்கப்பட்டுள்ளன.

            பிலிப்பஸ் பால்டியூஸ் ஹாலந்து (இன்றைய நெதர்லாந்து) நாட்டைச் சேர்ந்த  சீர்திருத்துவ கிறித்துவ  (Dutch Reformed Church) மத போதகர்.  இந்த வகை சீர்திருத்தக் கிருத்துவம் என்பது  கத்தோலிக்க கிருத்துவத்தில் மேலும் புதிய சீர்திருத்தச் சிந்தனைகளை உருவாக்கி வளர்ந்த ஒரு கிளைசமயம். இவர் தத்துவம், கீழைதேச மொழிகள், சமயம் ஆகிய துறைகளில் கல்விகற்று தேர்ச்சி பெற்று பின்னர்  தனது சமயப் பணியை மேற்கொள்ள டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். தனது பணிக் காலத்தில், கிழக்காசிய நாடுகள் பலவற்றில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்றாலும் தனது பெரும்பாலான காலத்தை அன்றைய சிலோனிலும் இந்தியாவிலும் கழித்தவர். அதிலும் குறிப்பாகத் தமிழ் மொழியை நன்கு கற்று தமிழ்ப் பண்பாட்டினையும் சமூகம் சார்ந்த செய்திகளையும் டச்சு, ஜெர்மன் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதியவர் என்ற பெருமை இவருக்குண்டு.  மரியாவோன் காசல் என்பவரையும் பின்னர் எலிசபெத் ட்ரிபொலெட் என்பவரையும் இவர் திருமணம் செய்ததாக இவரைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

            டச்சு கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு அமைச்சராகப் பணியேற்றுக் கொண்ட பின்னர் தனது சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் இலங்கையிலிருந்து தமிழகம் வரும்போது தூத்துக்குடியில் தனது அனுபவங்களை அவர் விவரிக்கும் செய்திகள் நமக்கு அக்காலத்தைய சூழலை விளக்கும் சான்றுகளாக அமைகின்றன. தூத்துக்குடியிலிருந்து தொண்டி, நாகப்பட்டினம், தரங்கம்பாடி, புலிக்கட், என இவரது பயணம் மிக விரிவானது.

            தூத்துக்குடியில் முதலில் அவர் சந்தித்த உள்ளூர் மக்கள் பரதவ சமூகத்தவர்கள். இவர்கள் இப்பகுதியில் முன்னரே கோலோச்சியிருந்த போர்த்துக்கீசியர்களின் தாக்கத்தினால் கத்தோலிக்க கிருத்துவ சமயத்தை ஏற்றிருந்தனர். ஓரிரு கத்தோலிக்க தேவாலயங்களும் அக்காலகட்டத்தில் அங்கே உருவாக்கப்பட்டிருந்தன.

            இந்த மதம் மாறிய தமிழர்கள் தங்கள் கத்தோலிக்க மத நம்பிக்கையில் “வெறித்தனமாக கண்மூடித்தனமாக” நம்பிக்கை  கொண்டிருந்தனர் என்றும், தனது புதிய சீர்திருத்த சமயத்தை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி தனது பக்கம் அவர்களை ஈர்ப்பது எளிமையான காரியமாக இல்லை என்றும் தனது நூலில் இவர் குறிப்பிடுகின்றார்.   அவர்களுக்கு முத்துக்களைக் கோர்த்து அணிகலன்கள் செய்வதற்கும், சிலுவைகளைச் செய்வதற்கும் தான் தெரிகிறதே தவிரக் கிருத்துவ சமயத்தின் அடிப்படை தத்துவ விசயங்கள் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகின்றார்.

            1661ம் ஆண்டு இவரை டச்சு கிழக்கிந்திய அரசு தூத்துக்குடியிலிருந்து கோவளம் பகுதி வரை பயணித்து இங்குக் கடற்கரை பகுதிகளிலுள்ள கிருத்துவ தேவாலயங்கள் எவ்வகையில் இயங்குகின்றன என ஆய்வு செய்து தங்கள் புதிய சமயக் கொள்கையை எவ்வாறு இவர்களிடையே புகுத்தலாம் என அறிந்து வரப் பணித்தார் என்றும், புதிய சமயத்தை அவர்களிடையே அறிமுகப்படுத்துவது எளிதல்ல என்று தாம் உணர்ந்ததாகவும் இவர் குறிப்பிடுகின்றார். ஏனெனில் பரதவ மக்கள் போர்த்துக்கீசியர் அறிமுகப்படுத்திய கத்தோலிக்க கிருத்துவத்தில் மிகத் தீவிர நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகின்றார்

            1658ம் ஆண்டு தூத்துக்குடி கடற்கரை  பகுதி டச்சுக்காரர்கள் வசம் வந்தது. இதன் அடிப்படையில் இங்கு இயங்கிய தேவாலயங்களில் மாற்றுச் சித்தாந்தத்தைப் போதிக்கும் முயற்சிகள் இக்கால கட்டத்தில் நிகழ்ந்ததைப் பாதிரியார் பால்டியூஸ் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

            பாதிரியார் பால்டியூஸ்  இம்மக்களை ஈர்க்க போர்த்துக்கீசிய மொழியிலேயே வழிபாடுகளைத் தொடங்கினார்.  அந்த  முயற்சியும் பலனளிக்கவில்லை.

            1658ல் இலங்கையில் நிகம்புவிலிருந்து வந்த டச்சு படைகள் தூத்துக்குடி பகுதியைத் தாக்கி தமது ஆளுமைக்குள் கொண்டு வந்தன.  அந்த சமயத்தில் தூத்துக்குடியில் பல நூறு கிராமங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் அவற்றிற்குப் பாதுகாப்பாக மதில் சுவர் இல்லையென்றும்,  சாக்கடைகள் இல்லையென்றும் வாயிற்கதவுகள் அல்லது கோட்டைக்கதவுகள் இருக்கவில்லை என்றும், மூன்று மிகப்பெரிய அளவிலான  தேவாலயங்கள் மட்டுமே இருந்ததாகவும், பெரிய வீடுகள் சில வரிசையாக இருந்ததாகவும் இவரது குறிப்புக்கள் சொல்கின்றன.

            டச்சு கிழக்கிந்திய கம்பெனி இப்பகுதியில் ஒரு கோட்டை ஒன்றைக் கட்ட பல முறை முயன்றும் இது சாத்தியப்படவில்லை. இதற்குக் காரணம் நாயக்க மன்னர்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை என்றும் இதன் காரணத்தால் டச்சு கிழக்கிந்திய கம்பெனி மூன்று தேவாலயங்களில் ஒன்றில் தமது தொழிற்சாலை ஒன்றை நிறுவியது என்பது இந்த நூலின் வழி அறிய முடிகின்றது.



குறிப்பு:  "A Description of EAST INDIA Coast of  MALABAR and CORMANDEL with their adjacent Kingdoms & Provinces & of the Empire of  CEYLON  and of the Idolatry of the Pagans in the EAST INDIES”  - Philip Baldaeus, Minister of the Word of God in Ceylon, Printed in Amsterdam, 1672.