Friday, January 20, 2017

மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 8 ஜனவரி 2017

 
தமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டு மின்னிதழ் - மின்தமிழ்மேடை வெளியீடு


மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 8 ஜனவரி 2017


           
வணக்கம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் இணையும் ஒரு அங்கமாக நமது மின்னிதழ் வெளியீடு அமைகின்றது.

காலாண்டு இதழாக ​கடந்த 2015 ஆண்டின்  ஏப்ரல் முதல் ​வெளிவரும்​ இந்த மின்னிதழில் தமிழ் மரபு அறக்கட்டளையின் மடலாடற் குழுமமான மின்தமிழில் வெளியிடப்பட்ட சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படு​கின்றன.

இன்று வெளியிடப்படும் இந்தக் காலாண்டின் மின்னிதழான "மின்தமிழ்மேடை வெளியீடு: காட்சி 8 ஜனவரி 2017"  இதழுடன்  இரண்டாண்டுகள் நிறைவடைகின்றது என்பது மகிழ்ச்சி தரத்தக்க ஒரு நிகழ்வு.





இதழை வாசிக்க!​


இந்த வெளியீட்டின் கருப்பொருளாக அமைவது "தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்" என்பதாகும்.

நம் மின்னிதழை வாசித்து கருத்து பகிர்ந்து கொள்க!

அன்புடன்
தேமொழி
[தமிழ் மரபு அறக்கட்டளை]​



Sunday, January 15, 2017

தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்

தலையங்கம்: தமிழரின் மரபு வளங்களைக் காப்போம்

வணக்கம்.


அறிவுத்தேடல் கொண்ட சிந்தனை புதியன படைக்கும் ஆற்றலைக் கொடுக்கும். மனிதன் ஆதிகாலம் தொட்டு தனக்குத் தெரியாததைத் தெரிந்து கொள்ள முனைப்புடன் செயல்பட்டதாலும், அப்படிச் செயல்படும் போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும் தீர்க்கவும் வழிகளைத் தேடியதாலும் தான் மனித குல நாகரிகம் என்பது தோன்ற ஆரம்பித்தது. அப்படித்தோன்றிய நாகரிகங்கள் தாம் படிப்படியாக மனித வாழ்வில் பல்வேறு தளங்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்தகைய மாற்றங்களில் ஒன்றே அறிவியல் வளர்ச்சி.

நம்பிக்கைகள் சார்ந்து இயங்கும் தளத்திலிருந்து மாற்றாக, ஆராய்ந்து அறிந்து கொள்ளும் மனப்பாங்குடன் மனிதன் ஈடுபட முனைந்ததன் விளவே அறிவியல் கண்டுபிடிப்புக்கள். ஒவ்வொரு நொடியும் உலகின் எங்கோ  ஒரு இடத்தில் புதிய கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த உலகமும் இது சூழ்ந்திருக்கும் பிரபஞ்சமும் எல்லையிலா சவால்களை மனித குலத்திற்கு அளிக்கும் வல்லமை பொருந்தியனவாக இருக்கின்றன. அந்தச் சவால்களை எதிர்நோக்க மனிதகுலம் சிந்திக்கும் திறனோடு செயல்பட வேண்டியது இன்றியமையாதது.

தமிழ்ச்சமூகத்தில் பாரம்பரியம் என்ற சொல்லைத் தவறாகப்பயன்படுத்தும் ஒரு போக்கினைக் கடந்த  காலங்களில் காண்கின்றோம். கண்மூடித்தனமாக சில நம்பிக்கைகளை ஏற்றுக் கொண்டு அறிவிற்கு எந்த இடத்தையும் தராது செயல்படும் போக்கை “பாரம்பரியம்” பேணுதல் எனத் தவறாகப் பிரச்சாரம் செய்ததன் விளைவே இத்தகைய சிந்தனை முடக்கம் ஏற்பட்டதற்குக் காரணமாக அமைகின்றன. இதற்கு மாற்றம் ஏற்படுத்த வேண்டுமென்றால் மீண்டும் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்த வேண்டியது தேவையாகின்றது. அத்தகைய அறிவுத்தேடலுக்கு ஆதாரங்களை வழங்கும் களஞ்சியங்களாக அமைபவை நூலகங்களும் அருங்காட்சியகங்களுமாகும்.





தமிழர் சூழலில் அருங்காட்சியகங்கள் என்றால்  பள்ளி மாணவர்கள் குழுவாகச் சென்று ஏதாவது பொருட்களைப் பார்த்து விட்டு வரும் கூடங்கள் என்ற ஒரு கருத்து நிலவுகின்றது. ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவன தான் நூலகங்களும் அருங்காட்சியகங்களும் என்ற மனப்போக்கு உறுதியாக பெரும்பாலான தமிழ் மக்கள் மனதில் படிந்திருக்கின்றது. இத்தகைய போக்கு மாற வேண்டுமெனில் அருங்காட்சியகங்கள் பற்றிய பல தகவல்களை இளம் வயதிலேயே சிறார்களுக்கு ஊட்ட வேண்டியது நம் கடமை என்பதனை உணர்ந்து 2016ம் ஆண்டு இறுதி தொடக்கம், தமிழ் மரபு அறக்கட்டளை பள்ளி/கல்லூரி அருங்காட்சியகம் என்ற ஒரு கருத்தினை முன்னெடுத்திருக்கின்றோம்.


இந்த முயற்சியின் விளைவாக 206 டிசம்பர் மாதத்திலும் ஜனவரி 2017 லும் கீழ்க்காணும் பள்ளிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை , “பள்ளி/கல்லூரி அருங்காட்சியகங்களை” தொடக்கியுள்ளோம்.

·         சிவகங்கை மாவட்டம், மணலூர், அழகுமலர் மெட்ரிகுலேஷன் பள்ளி
·         மதுரை வன்னிவேலம்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி
·         மதுரை சங்கரலிங்காபுரம், அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி
·         பாளையங்கோட்டை, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
·         ஈரோடு, குமாரபாளையம், எஸ்.எஸ்.எம். கலை அறிவியல் கல்லூரி
·         ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி

வருகின்ற மாதங்களில் இந்த முயற்சி படிப்படியாக ஏனைய கல்விக்கூடங்களிலும் முன்னெடுக்கப்படும்.
தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு ஏற்பட்டுள்ள சட்ட ரீதியான தடையை எதிர்த்து இளைஞர் சமூகம் எழுச்சியுடன் குரல் கொடுக்கும் நேரமிது.

இது நம்பிக்கை தரும் ஒரு அறிகுறி!

அறிவார்ந்த, சிந்திக்கும் ஆற்றலைக் கொண்ட இளம் சமூகத்தை உருவாக்க  தமிழ் மரபு அறக்கட்டளை முன்னெடுக்கும் இந்தக் கல்விக்கூடங்களில் அருங்காட்சியகம் என்ற கருத்தினை செயல்படுத்த எம்மோடு இணைந்து கொள்ள அனைவரையும் அழைக்கின்றோம். வருக!




அன்புடன்
முனைவர். சுபாஷிணி

தமிழ்த்தாய் வாழ்த்து


 
 
தமிழ்த்தாய் வாழ்த்து


கற்றறி புலவருள் மகிழா களியா 
நிச்சலு முறைதரு கனியே! சுவையே! 
கட்டி விளையுமொரு கழையே! அளியேம்-உளமூறும்

கட்செவி யணியிறை யெனவே முதிரா 
முத்தமிழ் துறைவளர் கடலே! மலையே! 
கற்பக  மெனவிழை வனவே தருவாய்-பெருதேவி!

உற்றன விடரவை களையா மறவா 
திச் சிறுவர் கடமை யயலார் பழியா
துச்சமி கவடைய வருள்வாய் கலையே-இணையாக

ஒத்தவெ னுமொழிகள் விழவே யுலவா 
தித்தரை யதுதனில் நிலையா வளர்வாய்! 
ஒப்பிலை யெனநனி புகழ்வார் மொழிநூல்-உரைகாரர்

சுற்றிய   வுடைதிரு மணிமே கலையே 
முச்சியி லணிவது சிதறா மணியே 
தொக்கபல் சிறுவர்கள் பெறவே தருவாய்-கலைமானே! 

தொத்தும லர்களணி பொழில்சூழ் வளமார் 
தெற்குறு மலைபெறு குறுமா முனிவோன் 
சொற்கு மிகமகிழு மொழியா மணமார்- சிறுகாலே! 

தெற்றன மறைவளர் குறளா ரமையே! 
எட்டலர் தொகைவிரி மலரார் கொடியே!
செப்புற நிலமக டனிமா மகளே -தமிழாயே!

செப்ப முடையவர்கள் உளமே எனவே 
இக்கழகமு முயர் நலமே யுறவே 
திக்குள வரைஇறை என வாழியவே-இனிதாயே!


மு. வே. மா. வீ. உலகவூழியன், 
வாடாக்கரங்தை

[ஆண்டு - 1926 தை/ஜனவரி]
(பக்கம் 369)
____________________________________________

தமிழ்ப் பொழில்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்துத் திங்கள் வெளியீடு
துணர்: 1  ❖ குரோதன - தை  ❖ மலர்: 10
____________________________________________

91 ஆண்டுகளுக்கு  முன்னர் [ஆண்டு - 1926, தை/ஜனவரி]  மு. வே. மா. வீ. உலகவூழியன் அவர்கள் எழுதி தமிழ்ப் பொழிலில் வெளியான தமிழ்த்தாய் வாழ்த்து.

சங்கநூல்களில் 'கரும்பு'

-- நூ.த.லோக சுந்தரம்


Inline image 1

சங்கநூல்களில் 'கரும்பு ' எனும் சொல் பயன்பாட்டின் நிரல்தனைக்  கீழே காண்க ...


சங்கநூல்களில் 'கரும்பு'


ஆலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே        
புயற்புனிறு போகிய பூமலி புறவின் [120]              
 – மலைபடுகடாம்

மழைகண் டன்ன ஆலைதொறு ஞெரேரெனக் [340]
கழைகண் ணுடைக்குங் கரும்பி னேத்தமும்   
 – மலைபடுகடாம்

வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பின்  எந்திரம்  கட்பி னோதை
அள்ளற் றங்கிய பகடுறு விழுமங்
கள்ளார் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே [260]               
 – மதுரைக் காஞ்சி

விளைவறா வியன்கழனிக்
கார்க்கரும்பின்  கமழ் ஆலை த்
தீத்தெறுவிற் கவின்வாடி [10]                                   
 – பட்டினப்பாலை

மலரணி வாயிற் பலர்தொழ கொடியும் [160]
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின்  ஓண்பூப் போல       
 – பட்டினப்பாலை

தலைதவச் சென்று தண்பணை எடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீடி [240]   
 – பட்டினப்பாலை

கெந்திரஞ் சிலைக்குந் துங்சாக் கம்பலை [260]
விசய மடூஉம் புகைசூ ழாலைதொறுங்
கரும்பின்  தீ ஞ்சாறு விரும்பினிர் மிசைமின்         
 – பொருநர் ஆற்றுப்படை

அறைக் ரும்பின் அரி நெல்லின்
இனக் களமர் இசை பெருக
வற ளடும்பி னிவர் பகன்றைத் [195]                               
 – பொருநர் ஆற்றுப்படை

மீனெய் யொடு நறவு மறுகவும் [215]
தீங் கரும்போடு  அவல் வகுத்தோர்                       
 – பொருநர் ஆற்றுப்படை   

கவலை முற்றங் காவ நின்ற  [30]
தேம்படு கவுள சிறுகண் யானை
யோங்குநிலைக் கரும்பொடு கதிர்மிடைந்தியாத்த
 – முல்லைப்பாட்டு
      
இலங்குபூங் கரும்பின் ஏர்கழை இருந்த
வெண்குருகு நரல வீசும்
நுண்பல் துவலைய தண்பனி நாளே                               
 – அகநானுறு 13

பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇக்
காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும்
தீம்புனல் ஊர திறவதாக                                           
 – அகநானுறு 156
 
துவலை தூவல் கழிய அகல்வயல்
நீடுகழைக் கரும்பின் கணைக்கால் வான்பூக்
கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர        
 – அகநானுறு 217

களவன் மண்அளைச் செறிய அகல்வயல்
கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ            
 – அகநானுறு 235

இருங்கதிர் அலமரும் கழனிக் கரும்பின்
விளைகழை பிழிந்த அம்தீஞ் சேற்றொடு                       
 – அகநானுறு237

கரும்புண  மலர்ந்த பெருந்தண் நெய்தல்
மணிஏர் மாண்நலம் ஒரீஇப்
பொன்நேர் வண்ணம் கொண்டஎன் கண்ணே                    
 – அகநானுறு 290

தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனிக்
கரும்பமல்  படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்  
 – அகநானுறு256

இருங்கல் அடுக்கத்து என்னையர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல்                
 – அகநானுறு 302

ஆர்குருகு உறங்கும் நீர்சூழ் வளவயற்
கழனிக் கரும்பின்சாய்ப்புறம் ஊர்ந்து                   
 – அகநானுறு 306

காஞ்சிஅம் குறுந்தறி குத்தித் தீஞ்சுவை
மென்கழைக் கரும்பின் நன்பல மிடைந்து           
 – அகநானுறு 346

பனிப் பகன்றைக் கனிப் பாகல்
கரும்பு  அல்லது காடு அறியாப்
பெருந் தண்பணை பாழ் ஆக                                     
 – புறநானூறு 16

அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய் கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல                                     
 – புறநானூறு 22

இரும் பனையின் குரும்பை நீரும்
பூங் கரும்பின் தீஞ் சாறும்                                        
 – புறநானூறு 24

புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்                          
 – புறநானூறு 28

தோடு கொள் வேலின் தோற்றம் போல
ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்                     
 – புறநானூறு35

படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பின்கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்                                     
 – புறநானூறு 42

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்பு  இவண் தந்தும்நீ
ர்அக இருக்கை ஆழி சூட்டிய                                           
 – புறநானூறு 9
                                           
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்                         
 – புறநானூறு 137

கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்                             
 – புறநானூறு 322

அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்
கரும்பு அன்  ஊரன் காதல் மகனே                        
 – புறநானூறு 381

வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்
வன் பாலான் கருங்கால் வரகின்                                    
 – புறநானூறு 384

ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின                                     
 – புறநானூறு 386

விருந்திறை நல்கி யோனே - அந்தரத்து
அரும்பெறல் அமிழ்த மன்ன       
கரும்பு இவண் தந்தோன் பெரும்பிறங் கடையே
 – புறநானூறு 392

கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை                                                  
 – கலித்தொகை 40

பூங் குழாய் செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய்
விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல்
கரும்பு  எழுது தொய்யிற்குச் செல்வல் 'ஈங்கு ஆக
இருந்தாயோ' என்று ஆங்கு இற                                           
 – கலித்தொகை 63

உழுவது உடையமோ, யாம், உழுதாய்
சுரும்பு இமிர் பூங் கோதை அம் நல்லாய் யான் நின்
திருந்து இழை மென் தோள் இழைத்த, மற்று இ·தோ,
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே
துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த [15]
குவளையும், நின் உழவு அன்றோ இகலி
முகை மாறு கொள்ளும் எயிற்றாய் இவை அல்ல,
என் உழுவாய் நீ, மற்று இனி
எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு
முற்று எழில் நீல மலர் என உற்ற,
இரும்பு ஈர் வடி அன்ன, உண்கட்கும், எல்லாம்                            
 – கலித்தொகை 64

வரி தேற்றாய், நீ' என, வணங்கு இறை அவன் பற்றித்,
தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ -
புரிபு நம் ஆயத்தார் பொய் ஆக எடுத்த சொல்                             
 – கலித்தொகை 76

எல்லா 'கடாஅய கண்ணால், கலைஇய நோய் செய்யும்
நடாஅக் கரும்பு  அமன்ற தோளாரைக் காணின்,
விடாஅல், ஓம்பு' என்றார், எமர்                                             
 – கலித்தொகை 112

இன் துணை அன்றில் இரவின் அகவாவே -
அன்று, தான் ஈர்த்த கரும்பு  அணி வாட, என்
மென்தோள் ஞெகிழ்த்தான் துறை [30]                                           
 – கலித்தொகை131

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு  ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல்
தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் [33]                                
 – கலித்தொகை 143

சினைப்பசும் பாம்பின் சூன்முதிர்ப் பன்ன
கனைத்த கரும்பின் கூம்புபொதி யவிழ                           
 – கலித்தொகை 35

சூன்முதிர் பேடைக் கீனி லிழைஇயர்
தேம்பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நாறா வெண்பூக் கொழுதும்
யாண ரூரன் பாணன் வாயே                                                 
 – குறுந்தொகை 85

நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்                                     
 – குறுந்தொகை 149

பழூஉப்பல் அன்ன பருவுகிர்ப் பாவடி
இருங்களிற் றினநிரை யேந்தல் வரின்மாய்ந்
தறைமடி கரும்பின் கண்ணிடை யன்ன                                      
 – குறுந்தொகை 180

ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன                                       
 – குறுந்தொகை 198

யாஅங் கொன்ற மரஞ்சுட் டியவிற்
கரும்பு மருண் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை யன்னபால் வார்பு                                        
 – குறுந்தொகை 198

உணலாய்ந் திசினா லவரொடு சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்குமலைக் கவாஅற்
கரும்பு நடு பாத்தி யன்ன
பெருங்களிற் றடிவழி நிலைஇய நீரே                                                 
 – குறுந்தொகை 262

ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன                                           
 – குறுந்தொகை 198

உழுந்துடைக் கழுந்திற் கரும்பு டைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்                                            
 – குறுந்தொகை 384

அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி
கை புதைஇய வளை
ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணைமென் தோள்                    
 – பரிபாடல் 7

நீசிவந்(து) இறுத்த நீர்அழி பாக்கம்
விரிபூங் கரும்பின் கழனி புல்எனத்
திரிகாய் விடத்தரொடு காருடை போகி                                              
 – பரிபாடல்13

திண் தேர் வழியின் செல நிறுப்பார்கண்டக்
கரும்பு  கவழம் மடுப்பார் நிரந்து
பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே [35]   
குருகு எறி வேலோய் நின் குன்றக் கீழ் நின்ற
இடை நிலம்: யாம் ஏத்தும் ஆறு
மலைச் சிறப்பு  வழுதியுடன் ஏறியோர் கண்டவை
குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும்
கரும்பு  கருமுகக் கணக்கு அளிப்போரும்
தெய்வப் பிரமம் செய்குவோரும் [40]                                                          
 – பரிபாடல் 19

காலம் அன்றியும் கரும்பு  அறுத்(து) ஒழியா(து)
அரிகால் அவித்துப் பலபூ விழவின் [15]                                                  
 – பரிபாடல் 30

மாமலை முழக்கின் மான்கணம் பனிப்பக்
கால்மயங்கு கதழ்உறை ஆலியொடு சிதறிக்
கரும்பு அமல் கழனிய நாடுவளம் பொழிய                                            
 – பரிபாடல் 50

நெறிபடு மருப்பின் இரும்கண் மூரியொடு [15]
வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்                                                    
 – பரிபாடல்67

அறைஉறு கரும்பின் தீம்சேற்(று) யாணர்
வருநர் வரையா வளம்வீங்(கு) இருக்கை
வன்புலம் தழீஇ மென்பால் தோறும்                                                            
 – பரிபாடல் 75

சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல்
ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்
பல்வேல் பொறையன் வல்லனால் அளியே. [5]                                       
 – பரிபாடல் 87

பூத்த கரும்பின் கா ய்த்த நெல்லிற்
கழனி யூரன் மார்பு
பழன் மாகற்க எனவேட் டேமே                                                            
 – ஐங்குறுநூறு 4

கரைசேர் வேழம் கரும்பின் பூக்கும்
துறைகேழ் ஊரன் கொடுமை நன்றும்                                                 
 – ஐங்குறுநூறு 12

இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்                                                  
 – ஐங்குறுநூறு 18

கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்றும்
தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்                                                
 – ஐங்குறுநூறு 55

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்
சுரும்புபசி களையும் பெரும்புன லூர                                               
 – ஐங்குறுநூறு 65

பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர்
கரும்பு  குணிலா மாங்கனி யுதிர்க்கும்                                      
 – ஐங்குறுநூறு 87

பெரு பெயர் கூடல் அன்ன நின் 10
கரும்பு டைத் தோளும் உடைய வால் அணங்கே                                   
 – நற்றிணை 39

பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள்
கரும்பு டைப் பணைத் தோள் நோக்கியும் ஒரு திறம்                           
 – நற்றிணை298

மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த
இரும் பல் மெல் அணை ஒழிய கரும்பின்
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி                                               
 – நற்றிணை 366

விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்
கரும்பின் கோ து ஆயினேம் யாம்                                              
 – திணை மொழி ஐம்பது 38

சிறையில் கரும்பி னை க்  காத்தோம்ப லின்னா
உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா                                   
 – இன்னா நாற்பது 4

அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்
பெரும்பயனும் ஆற்றவே கொள்க கரும்பூர்ந்த
சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்
கோதுபோல் போகும் உடம்பு                                                       
 – நாலடியார் 33

கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்                                       
 – நாலடியார் 34
                 
இரும்பார்க்குங் காலராய் ஏதிலார்க் காளாய்க்
கரும்பார் கழனியுட் சேர்வர் - சுரும்பார்க்கும்                                     
 – நாலடியார் 121   

கனைகடல் தண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை
நுனியின் கரும்பு தின் றற்றே - நுனிநீக்கி                                        
 – நாலடியார் 137

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்                              
 – நாலடியார்155

தீங்கரும்பீன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தாங்கு - ஓங்கும்                                        
 – நாலடியார் 198

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங்
குருத்திற் கரும்புதின் றற்றே - குருத்திற்கு                                   
 – நாலடியார் 210

அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி பாண கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை                                               
 – நாலடியார் 399

நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக்கு அணியென்ப தாமரை பெண்மை                                   
 – நான்மணிக்கடிகை 10

போதினான் நந்தும் புனைதண்தார் மற்றதன்
தாதினான் நந்துஞ் கரும்பெல்லாம் - தீதில்                                   
 – நான்மணிக்கடிகை 49

கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி
இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால்                      
 – நான்மணிக்கடிகை136  

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்                                                          
 – திருக்குறள் 1078

சுரும்புஉணக் கிடந்த நறும்பூஞ் சேக்கைக்
கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி
முதிர்க்கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் [30]                   
 – சிலம்பு 2 மனையறம்படுத்த காதை

மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் [80]
கலங்கலும் உண்டுஇக் காரிகை ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்                        
 – சிலம்பு 10 நாடுகாண் காதை

பைங்கொடிப் படலையும் பலவின் பழங்களும்
காயமும் கரும்பும் பூமலி கொடியும் [45]                  
 – சிலம்பு 25 காட்சிக் காதை வள்ளைப் பாட்டு

தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்
பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர்                      
 – சிலம்பு 29  வாழ்த்துக் காதை

 காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்                  
 – மணிமேகலை 1 விழாவறை காதை

தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும்[40]
நெல்லும் கரும்பும் நீரும் சோலையும்
நல்வழி எழுதிய நலம் கிளர் வாயிலும்                   
 – மணிமேகலை  6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை

கரும்பு உடைத் தடக் கைக் காமன் கையற
அரும் பெறல் இளமை பெரும்பிறிதாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆய் இழை தனக்குச்
சிறை தக்கன்று செங்கோல் வேந்து!' எனச் [30]               
  – மணிமேகலை  23  சிறை விடு காதை   

செந்நெலங் கரும்பினொ(டு) இகலும் தீஞ்சுவைக்
கன்னலம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும்            
 – வளையாபதி 43

கண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்
தொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா                     
 – சூளாமணி   

இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்                
 – சூளாமணி

________________________________________________________ 









நூ த லோ சு (நூ.த.லோக சுந்தரம்)
மயிலை
selvindls61@gmail.com
________________________________________________________  

Friday, January 6, 2017

கீழடி



- ருத்ரா இ பரமசிவன்






தமிழன் எலும்புக்கூடு மட்டும் அல்ல‌
கீழே கிடப்பது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன் அவன் கண்ட கனவுகள்
அந்த வீடுகள் முற்றங்கள்.
கலை வடிவ மண் பாண்டங்கள்.
இன்னும் எல்லாம் தான்.
கற்காலம் என்பது தமிழனுக்கு
வெறும் கற்காலம் அல்ல.
சிந்தனை ஒளித்துண்டுகளாய்
சிலிர்த்துக்கிடக்கும்
"சொற்காலம்" அவனுக்கு அது.
மக்கிய மண்ணின் அடியில்
நெளியும் புழுக்களும்
தமிழின் உயிர் மெய் வரிகளை
உழுது காட்டி வைத்திருக்கும்!
நாகரிகம் என்னும் சொல்லே
நகர்தல் கொண்டு குடியிருப்புகள்
அமைத்து "நகரம்" நிறுவி
வாழ்ந்த தமிழ்ச்சொல்லின்
ஒலிப்பு தானே.
இதையே சமஸ்கிருதம் ஆக்கி
நம் சிந்தனைப்படிவங்களை
"டிங்கரிங்" செய்து
தோரணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள்
நம் வட இந்திய ஆட்சியாளர்கள்.
சிந்து வெளியின்
நம் தொல் தமிழ் மீது
வேதச்சாயம் பூச முடியுமா
என்று கோடி கோடி ரூபாய்களை
கொட்டிக்கொண்டிருப்பவர்கள்.
கீழடி என்னும்
மற்றுமொரு சிந்துவெளியில்
அவர்களுக்கு அக்கறை இருக்குமா என்ன?
தமிழ் தொன்மை பற்றி அங்கே
எவருக்கும் எந்த நினைப்புமே இல்லை.
இருந்திருந்தால்
சீனாக்காரர்களோடு இவர்களும்
இலங்கை மகிந்த ராஜபக்சேகளிடம்
கை கோர்த்து
அந்த ஈழ யுத்தத்தில்
லட்சம் தமிழர்களை
அங்கே உள்ள மண்ணின் கீழடியில்
ஈசல் குவியலாய்
பிணங்கள் ஆக்கியிருப்பார்களா?
அதனால்
நிதியில்லை என கைவிரிக்கிறார்கள்.
தமிழ் அகழ்வாராய்ச்சி அறிஞர்களே!
ஒரு சின்ன வேலை செய்யுங்கள்.
சீதையை பார்க்க இலங்கைக்குப் பறக்கும்
அனுமன்
இந்த கீழடியில் தவறவிட்டு விட்ட‌
ராமனின் ஒரு கணையாழியும்
இங்கு கிடைத்திருக்கிறது
என்று ஒரு சிறு குறிப்பை
யூகமாக எழுதிவையுங்கள்.
உடனே
பல லட்சம் கோடிகள்
நிதி ஒதுக்கப்படும்!



படம் உதவி:
முனைவர் காளைராசன்
மேலதிகமான படங்கள்
https://drive.google.com/drive/folders/0B02g7RFB0HureWF6S1o5S2xWRk0?usp=sharing
இந்த முகவரியில் உள்ளன.





______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________