Saturday, February 29, 2020

தொல்காப்பியத்தில் நவீன சிந்தனைகள்


—   முனைவர்.ச.கண்மணி கணேசன்


          ஆசிரியர் நூலுக்கு மாணவர் கருத்துரை கூறுவது மரபுவழிப்பட்ட பணி; எனினும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இப்பணியை மேற்கொள்கிறேன். புதிய சிந்தனை, புதுப் பார்வை, புதுக்கருத்து இவற்றிலெல்லாம் மிகுந்த நாட்டம் கொண்டவர் எம் ஆசிரியை திருமதி பொ.நா.கமலா அவர்கள். ஆராய்ச்சிக்கு வயதோ உடல்நலமோ வரம்பு கட்ட முடியாது. மனத்தின் ஆர்வம் ஒன்றே ஆய்வுப்பணியைத் தொடர வைக்கவும், நிறைத்து வைக்கவும் இயலும். அந்த மனத்திட்பத்தைச் சரிவர எடுத்துக் காட்டுவதாக இந்தக் கருத்துரை அமைய வேண்டுவது இன்றியமையாதது. எனவே பொறுப்பின் கனம் மிகுதியானது என்பதைப் புரிந்து கொண்டு நூலைப் பயின்றேன். 

          தொல்காப்பியம் ஒரு படைப்பு நூல் என்று சொல்வதைக் காட்டிலும்; 'பிரதி' என்று சொல்லக் கூடிய தகுதி உடையது என்னும் கருத்தை முதல் கட்டுரை சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது. பிரதிக்குரிய பல பண்புகளுள் இசை திரிந்திசைத்தல், ஆடையின் உற்பத்தியை ஒத்திருத்தல், தந்திக் கம்பியைப் போன்ற செயற்பாடு, உபபிரதிகள் உருவாக இடந்தருதல், பல குறிகளின் சேர்க்கையாக அமைதல், மனிதமன விடுதலைக்கு வித்திடுதல், சமூக இயக்கத்திற்கு ஆதாரமாதல் என ஏழு பண்புகளைத் தொகுத்துத் தருகிறார். குறியியல், தொடர்பியல், அமைப்பியல் என்ற மூன்று கொள்கைகளை அடியொட்டிய பிற ஆறு கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. 

          இலக்கிய ஆய்வைப் பொருத்தவரை தொல்காப்பியர் உலக முன்னோடி என்பதை நிலைநாட்ட 'தொல்காப்பியமும் குறியியலும்' என்ற ஆய்வு துணை செய்கின்றது. மேனாட்டார் ஆய்வியல் வழி நம் தாய்மொழி இலக்கியத்தை நோக்க வேண்டிய தேவை என்ன என்ற சிலரது காரமான விவாதங்களுக்கு இத்தகைய ஆய்வுக்கட்டுரைகள் நல்ல சாரத்தைப் பதிலாகத் தருகின்றன. நூலாசிரியரின் நுட்பமான நோக்கும் ஆழ்ந்த சிந்தனையும் தனித்திறனும்; அவர் குறி பற்றிப் பதினைந்து கருத்துக்களைத் தொகுத்தளிப்பதிலிருந்து புலப்படுகின்றன.

          'தொல்காப்பியத்தில் அரங்கக் குறிகள்'- இக்கட்டுரையில் இடம் பெறும் புதுக் கலைச்சொற்கள் மட்டுமே தொல்காப்பியத்திற்கும் சங்க இலக்கியத்திற்கும் புறம்பானவை. ஆனால் மேலைநாட்டாரின் திறனாய்வுப் பார்வை 2000 ஆண்டுகட்கு முன்னர் நம் தொல்காப்பியர் கொண்டிருந்த பார்வை. அவரது பார்வையைத் தொடர்ந்து 2000 ஆண்டுகளாக நம் தமிழுலகம் வளர்த்துக் கொள்ளவில்லை என்ற உண்மை மனதிற்குள் கசக்கிறது. இன்று தமிழிலக்கியத்தில் மேலைநாட்டுத் திறனாய்வாளர் பின்பற்றிய பார்வைகளை மேற்கொள்வதால் இந்த நூற்றாண்டில் தமிழுக்குக் கிடைத்துள்ள வளம் கலைச்சொல்வளம் என்று சொன்னால் அது மிகையாகாது. இக்கலைச் சொற்களைக் கட்டுரையின் போக்கில் ஆங்காங்கு; ஆங்கிலக் கலைச்சொற்களை அடைப்புக்குறிக்குள் இட்டு; நூலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். தொடக்க நிலையில் இது கட்டுரையைப் புரிந்து கொள்ளத் துணை செய்கிறது. கட்டுரைச் செய்தியை நன்கு புரிந்து கொண்ட பின்னரோ சீரான ஓட்டத்திற்குச் சிறுதடையாக உள்ளது. பரற்கற்கள் உறுத்தும் பாதசாரியின் நிலையில் தவிக்க வேண்டியுள்ளது. இந்நிலை தவிர்க்க முடியாதது. எனினும் நூலின் இறுதியில் நூலாசிரியர் தமிழ் ஆய்வியலின் புதுக்கலைச்சொற் பட்டியல் ஒன்றைத் தயார் செய்து கொடுத்தால் அது இனி வரும் ஆய்வாளர்க்கு மிக்க பயனைத் தரும். 

          'தொடர்பியல் - சில நோக்குகள்' என்ற கட்டுரை இருவகைப் போக்குகளைக் கொண்டுள்ளது. முற்பகுதி மேனாட்டார் ஆய்வுக் கொள்கைகளைத் தொல்காப்பியத்தில் தேடிப் பொருத்தும் முயற்சியாக அமைகிறது. அம்முயற்சியில் முழுமையாக வெற்றியடைந்தும் உள்ளார். பிற்பகுதியில் ஒரு புது முறை; ஆய்வுக் கட்டுரையின் தரத்தை மேம்படுத்தித் தனித்துவப்படுத்துகிறது. அகப்பாடலில் ஆண்பாற்கவிஞர் அம்மூவனார் பாடலில் இடம்பெறும் தொடர்பியல் உத்தியையும் பெண்பாற் கவிஞர்கள் ஔவையார், நக்கண்ணையார் ஆகியோர் பாடல்களில் இடம் பெறும் தொடர்பியல் உத்தியையும் ஒப்பிட்டு ஆராய்கிறார். இரத்தினச் சுருக்கமாக அமையும் இவ்வாய்வுக்கு மிக ஆழமான நுட்பமான அறிவும் பயிற்சியும் தேவை. தமிழ் ஆய்வுலகில் சங்க இலக்கிய அகப்பாடல் ஆய்வு புதுக்கோணத்தில் திருப்பம் பெற இப்பார்வை துணை செய்கிறது. 

          'முன்னம்- தொடர்பியல் பணி' என்ற கட்டுரை தொல்காப்பியம் சுட்டும் 'முன்னம்' என்ற உறுப்பு பற்றிய முழுமையான விளக்கக் கட்டுரையாக அமைகிறது. அதன் பல்வேறு பரிமாணங்களைத் தொகுத்துத் தருகிறார் ஆசிரியர். பேச்சு மொழியிலும் எழுத்து மொழியிலும் முன்னம் தொடரியல் அமைப்பின் அலகாகவும்; பொருளியல் அமைப்பின் அலகாகவும் செயல்படுகிறது. அது மட்டுமின்றி இலக்கியத்தில் உடல்மொழித் தொடர்பியல் அலகாக; அதாவது மெய்ப்பாட்டியல் அலகாகப் பயின்று வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். 

          'இலக்கியக் கலையில் முன்னக்கோட்பாடு' பற்றி ஆராய்ந்து எழுதும் போது புறஇலக்கியத்தில் இடம் பெறும் குறிப்புப்பொருள், அக இலக்கியத்தில் இடம் பெறும் உள்ளுறை உவமமும் இறைச்சியும், குறிப்புமொழி எனும் இலக்கிய வகை, புதுக்கவிதையின் இருண்மை நீக்கம் ஆகியவற்றைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கிறார். 'முன்னம்' என்ற உறுப்பை ஒரு கருவியாக அளவுகோலாகக் கொண்டு உள்ளுறை உவமத்தையும் இறைச்சியையும் விளக்கி ஒப்பிடும் போது அவ்விரண்டும் கவர்மொழியில் கருத்தை விளக்கும் சிறந்த வாயில்கள் என்ற ஒற்றுமையை முதலில் எடுத்துக் காட்டுகின்றார். பின்னர் இரண்டிற்கும் இடையே உள்ள நுட்பமான வேறுபாடுகளைத் தெளிவாக வரையறை செய்து இனம் பிரித்துக் காட்டியிருப்பது இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள ஒரு புதையல் என்றால் அது மிகையாகாது. வரிக்கு வரி இருண்மை நிறைந்த புதுக்கவிதை ஒன்றைத் தெரிவு செய்து முன்னத்தின் மூலம் பொருள் விளக்கம் கொடுக்கிறார். இனிச்செய்ய வேண்டியன இன்னின்ன என்று என்று தொகுத்தும் தந்துள்ளார். இந்த ஆய்வின் மூலம் பல வளமான புது ஆய்வுகளுக்கு வழி கிட்டுகிறது. அதனால் முன்னம் பற்றிய ஆய்வின் மதிப்பு உயர்கிறது. 

          'தொல்காப்பியத்தில் அமைப்பியல் சிந்தனைகள்' உள்ளன என்று பலவேறு கோணங்களில் நோக்கிக் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார். அமைப்பியல் கோட்பாடு மேனாட்டில் தோன்றி வளர்ந்து வரும் கொள்கையாகும். நம் சமூகத்தின் பரம்பரைச் சொத்தான தொல்காப்பியத்தில் அக்கோட்பாடுகளைப் பொருத்திக் காண்கிறார். அமைப்பியல் கோட்பாடுகளில் பல கருத்து வேறுபாடுகட்கு உட்படக்கூடியவை தாம். எனினும் அவற்றை ஒதுக்கி வைக்க வேண்டிய நியதி ஏதுமில்லை. 

          மேலைநாட்டுத் திறனாய்வுக் கொள்கைகளைப் பயிலவேண்டும் என்ற முனைப்பு ஏற்படுவதே குறிப்பிடத்தக்க அம்சம் தான். முனைப்பு ஏற்பட்டபின் அவற்றைப் பயின்று புரிந்துகொண்டு நம் இலக்கியத்தில் அத்தகைய ஆய்வுகளைச் செய்து பார்ப்பது பெரிய சாதனையே. ஆராய்ச்சி உலகைப் பொருத்தவரை மரபை மீறுவது என்பது எளிதில் யாரும் ஏற்றுக் கொள்ள இயல்வது அன்று. இப்பிரதியில் உள்ள ஏழு கட்டுரைகளும் தத்தம் போக்கில் புதுக்கருத்துக்களைத் தருகின்றன. நம்முள் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன. நம் முன்னோர் மறந்தவற்றை நினைவூட்டுகின்றன. தமிழ் ஆய்வுலகில் இந்நூல் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது உறுதி. 

(குறிப்பு: டிசம்பர் 1997ல் முனைவர் பொ.நா.கமலா எழுதி பெங்களூர் காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பிற்கு 20.10.1997ல் நான் அளித்த கருத்துரை)




தொடர்பு:
முனைவர். ச.கண்மணி  கணேசன் (kanmanitamilskc@gmail.com)
முதல்வர் (ஓய்வு)
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி(தன்னாட்சி), சிவகாசி





Monday, February 24, 2020

கல்லில் தமிழிசை

கல்லில் தமிழிசை

 ——   S.A.விஜய்



      உலகிலேயே மிகப்பழமையானதும் தனித்துவமானதும் எனச் சொல்லப்படுவது, 3000 ஆண்டுகள் தொன்மை உடைய நம்முடைய தமிழிசை. தொல் தமிழர் தமக்கென அப்போதே ஒரு தனி இசைக்கோட்பாட்டு முறைமைகளைக் கொண்டிருந்தனர் என்பதே நம்முடைய பழந்தமிழ் இலக்கியங்கள் கூறும் உண்மை. அவ்வகையில், தமிழர் தம்முடைய இசையறிவை, அவர்கள் வகுத்த இசைக்கோட்பாடுகளை இலக்கிய வடிவில் ஓலைச்சுவடிகளில் மட்டும் எழுதிப் பதிப்பிக்கவில்லை, கல்லிலும் பலவாறு பதிப்பித்துள்ளனர். உலகிலேயே இசைக்கு இப்படி ஒரு அம்சம் இருக்கிறதா என அதிசயிக்கும் வண்ணம் தமிழர்கள் கல்லைப் பயன்படுத்தி ஒரு இசை/அறிவியல் சாதனையே படைத்தனர் என்றால் அது சற்றும் மிகையல்ல. அவ்வகையில், தமிழர் கல்லில் வடித்த இசைத்தகவல்கள், ஓசை/இசை எழுப்பும் அமைப்புகளைப் பற்றியதே இக்கட்டுரை.

(I) அரச்சலூர் கல்வெட்டு – கிபி 1 ஆம் நூற்றாண்டு:
      தமிழர், ஆதி முதல் தமிழ்நாடெங்கிலும் உள்ள பல்வேறு கோயில்களிலும் உள்ள கற்களில் சிற்பங்களும் உருவங்களும் அமைத்து சாதித்துள்ளனர். அவ்வகையில், பன்னெடுங்காலம் அழியாத்தன்மை கொண்ட கல்லை ஒரு கருவியாகக் கொண்டு, இசைக்கோட்பாடுகளையும், இசைக்கருவிகளையும் பல்வேறு கோவில்களில் அமைத்துள்ளனர். அவற்றில், மிகவும் தொன்மையான இசைக்கல்வெட்டு எனில் அது அரச்சலூரில் 1ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற இசைக்கல்வெட்டு ஆகும்.
“எழுத்தும் புணருத்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்”
என எழுதப்பட்டிருக்கும் அந்தக் கல்வெட்டின் கீழ் த, தா, தை, தே ஆகிய எழுத்துக்களின் கலவையில் சில வரிகள் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இவை தாள எழுத்துக்கள், நடனத்துக்கு உரியன என்பது அறிஞர்கள் கருத்தாகும். இந்த கல்வெட்டு உள்ள இடத்தில் ஒரு சமண இசைப்பள்ளி இருந்திருக்கக் கூடும் என தொல்லியல் அறிஞர் டாக்டர் ஆ. பத்மாவதி (அவரது களப்பிரர் ஆய்வு உரை காணொளிகளில்) குறிப்பிட்டுள்ளார்.

      மேலுள்ள கட்டத்தில், கல்வெட்டின் வட்டெழுத்தின் இன்றைய வடிவம் தரப்பட்டுள்ளது. வலது பக்க கல்வெட்டில் 2 & 5ஆவது வரி சிதைந்துள்ளது. நாம் இடப்பக்க கல்வெட்டை மட்டும் பார்ப்போம். ஐந்தைந்துக் கட்டங்களில்(5x5) இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. இதுபற்றி மேலும் விரிவாக, அடுத்து உள்ள கம்பைநல்லூர் கல்வெட்டைக் கண்ட பின் அலசுவோம்.

(II) கம்பைநல்லூர் கல்வெட்டு – 12ஆம் நூற்றாண்டு:
      தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கம்பைநல்லூர் என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோவிலில், அரச்சலூர் கல்வெட்டைப் போலவே நான்கு ஐந்தைந்துக் கட்டக் கல்வெட்டுகள்(5x5) காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு படியெடுத்து ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் கல்வெட்டு தான் கீழுள்ள நமசிவாய கல்வெட்டு. இதில் நமசிவாய என்ற சொல் வெவ்வேறு வரிசையில் எழுதப்பட்டுள்ளது.


      இந்த நமசிவாய கல்வெட்டை ஆராய்ந்த டாக்டர் ஆ. பத்மாவதியும், முனைவர் வீரபாண்டியனும், இது மோகனம் பண்ணை குறிப்பது எனவும், இக்கல்வெட்டின் நோக்கம், மோகனப்பண்ணின் மிகச்சரியான சுர வரிசையைக் கூறுவதாகும் என்று ஆய்ந்து கூறியுள்ளனர். அதன்படி, ஐந்துசுரப் பண்ணான முல்லைத்தீம்பாணி எனும் இக்கால மோகனத்தின் சரியான சுர வரிசைகள் ”சபரிகத” ஆகும். இக்கல்வெட்டின் அமைப்பைப் படித்து அதன் உதவியால் தான் சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை, முல்லைத்தீம்பாணி பற்றிக் கூறும் செய்தியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது என்பதும் இவர்களின் ஆய்வு முடிவாகும். மட்டுமின்றி, சிலம்பின் உதவியால் தான் இக்கல்வெட்டைப் படிக்கவும் முடிந்தது என்பதும் கூடுதல் தகவல்.

      இக்கல்வெட்டை விலங்காமொழி எனும் 11ஆம் நூற்றாண்டு மன்னன் அமைத்திருக்கக்கூடும் எனக்கூறுதற்கேற்ப, இக்கோவிலில், அவன் பெயரான ’விலங்காமொழி’ என்பதையும் ‘நமசிவாய’ கல்வெட்டைப் போலவே, எழுத்துக்களைச் செதுக்கி அமைத்துள்ளதைக் கண்டு தெரிந்துகொள்ளலாம் 


      இதே கம்பைநல்லூர் கோவிலில், இதுபோல், இன்னும் இரண்டு ஐந்தைந்துக் (5x5) எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டுக்கள் உள்ளன, ஆனால் அவை, கட்டமிடப்படாமல் எழுத்துக்கள் மட்டும் உள்ளன. அவற்றின் எழுத்துக்கள் மேலுள்ள இரண்டைப்போல் சிலம்பின் செய்யுள் கோட்பாட்டுடன் ஒத்துவரவில்லை. அவை தவறான கல்வெட்டாய் இருக்கக்கூடும் எனவேதான் அவற்றைக் கட்டம் போடாமல் விட்டிருக்கக்கூடும்.

      மேலுள்ள கம்பைநல்லூர் கல்வெட்டும் சரி, அரச்சலூர் கல்வெட்டும் சரி, ஐந்தைந்துக் கட்டங்கள்(5x5) கொண்டிருப்பதைக் கண்டால், அக்காலத் தமிழர், தாளங்களை வகுக்கவும், பண்களின் சுர வரிசை கணக்கிடவும் இதுபோன்ற கட்டங்களைப் பயன்படுத்தினர் என முடிவுக்கு வரலாம். இவ்விரண்டு கல்வெட்டுக்களுமே இன்னும் ஆழமான ஆய்வுக்குரியன.  


      புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த குடுமியான்மலை என்ற சிறு மலைமேலுள்ள 7ஆம் நூற்றாண்டு கோவிலின் வெளியே ஒரு மிகப்பெரிய இசைக் கல்வெட்டு ஒன்று உள்ளது. அதற்கு ஒரு கூரை அமைத்துப் பாதுகாக்கப்படுகிறது. இக்கல்வெட்டு 38 வரிகளைக்கொண்டு சமஸ்கிருத கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. இது பல்லவ அரசனான மகேந்திரவர்மன் காலத்தது என்பது பல அறிஞர்களின் கணிப்பு. முழுவதும் கிரந்த எழுத்தில் உள்ள இக்கல்வெட்டின் முடிவில் “இவை எட்டிற்கும் ஏழிற்கும் உரிய” என எழுதி முடிக்கப்பட்டுள்ளது. இதை “இவை யாழிற்கும் பாட்டிற்கும் உரிய” எனக்கொள்ளும் அறிஞர்களும் உள்ளனர். இக்கல்வெட்டு செய்திகளுக்கு ஸ்வராகமா (சுவர ஆகமம் எனப் பெயரிடப்பட்டுள்ளது, காந்தர்வ இசை என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ருத்ராச்சாரியார் எனும் இசையோன், இசை மாணவர்களுக்காக இக்கல்வெட்டை வடித்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த 38 வரிகளில், எழுத்துக்களை இசை vowels  ஆகப் பாவித்து, பல்வேறு விதமான கிராம மூர்ச்சனைகள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாகக் கடைசியாக 1) மத்தியம, 2) ஷட்ஜ, 3) ஷாடவ, 4) சாதாரித, 5) பஞ்சம, 6) கைசிக மத்தியம, 7) கைசிக கிராமங்கள் என ஏழு ராக முறைகள் கிடைக்கின்றன. இவற்றை முறையே ஏழ்பெரும் பண்களுடன் ஒப்பிடலாம் என, இசையறிஞர் வி.பா.க சுந்தரம், தனது 'தமிழிசைக் கலைக்களஞ்சியம்' தொகுதி இரண்டு பக்கம் 145இல் கூறியுள்ளார். 



      இக்கல்வெட்டினால் அறியக்கூடிய இறுதிச் செய்தி என்பது சற்றே குழப்பமாக இருந்தாலும், இந்தியாவிலேயே இத்துணை பெரிய இசைக்கல்வெட்டு வேறெங்கும் இல்லை என்பது இதன் தனிச்சிறப்பாகும். இக்கல்வெட்டு மேலும் ஆழமாக ஆராய்வதற்குரியது.


      குடுமியான்மலைக்கு அருகிலேயே உள்ள திருமயம் எனும் இடத்திலுள்ள குடைவரைக் கோவிலில் மற்றுமொரு இசைக்கல்வெட்டு கிடைக்கின்றது. ஆனால் இதன் சில பகுதிகள் அழிந்துபட்டுள்ளன, ஆனால் கிட்டத்தட்ட இதே வரிகள் கொண்ட மற்றொரு கல்வெட்டு, இதே திருமயத்திற்கு அருகே உள்ள மலையக்கோவிலில் அழியா நிலையில் காணக்கிடைக்கிறது.

      இரண்டிலுமே ‘பரிவாதிநிதா’ என்ற வரி முதலில் உள்ளது. முழுமையாக
“பரிவாதிநிதா
“குணஸேண ப்ரமாணஞ்
செய்த வித்யா பரிவாதிநிகற்
கற்பிக்கப்படுவது காண்
ஞ் சொல்லிய புகிற்பருக்கும் நிமி
முக்கந் நிருவத்துக்கும் உரித்து”
என்று இக்கல்வெட்டு உள்ளது. இதிலுள்ள பரிவாதிநி என்பது ப என்ற இளிச்சுரம் மற்றும் ரி2 வன் துத்தம் இணைச்சுரமாகக் கொண்டு உருவாகும் மேற்செம்பாலை பண்ணை குறிக்கிறது என்பது, வி.பா.க சுந்தரம் அவர்களின் கருத்து. இதனால் இதை ஏழ்நரம்புடைய வீணை என்று சொல்லலாம் என்கிறார் அவர். 


      மேலே காணப்படுவது, திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள ஒரு மிக அரிதான தாளச்சக்கரக் கல்வெட்டு. இது 17ஆம் நூற்றாண்டு எனச் சிலரும், 12ஆம் நூற்றாண்டு எனச் சிலரும் கூறுகின்றனர். இது, தற்கால கர்நாடக சங்கீதம் வழங்கும் 35 தாளங்களை அதன் பெயர் அங்கங்களுடன் விளக்கும் ஒரு விரிவான சக்கரம். இதன் மையப்பகுதியில் ஒரு சிறு மயில் செதுக்கப்பட்டு அதைச்சுற்றி 5 அடிப்படைத் தாளங்களைக் குறிக்கும் வகையில் ஒரு தாமரையின் ஐந்து இதழ்களும், அவை, 7 ஜாதிகளாகப் பெருகுவதை, வெளிச்சக்கரத்தில் 7 தாமரை இதழ்களாகவும் விரிவதை மேலுள்ள படத்தில் காணலாம். அந்த 5 தாளம் மற்றும் 7 சாதிகளும் சேர்ந்து மொத்தம் 35 தாளங்கள் உருவாவதை, அதற்கும் வெளியிலுள்ள இரு சக்கரங்களில் காணலாம், முதல் சக்கரத்தில், 35இல் ஒவ்வொரு தாளத்தின் குறியீடுகளையும், அதற்கும் வெளியே அதாவது இக்கல்வெட்டின் கடைசி, வெளிப்புற சக்கரத்தில் ஒவ்வொரு தாளத்தின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுவும், இந்தியாவில் (மதுரையைத் தவிர) வேறெங்கும் இல்லாத ஒரு தாளச்சக்கர அமைப்பாகும். தற்கால தாளங்களின் சில பெயர்களும் அங்கங்களும் இக்கல்வெட்டில் மாறியுள்ளது.



      அதே நெல்லையப்பர் கோவிலில், மிகவும் புகழ்பெற்ற நான்கு இசைத்தூண் தொகுப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு தூண் தொகுப்பிலும், 48 தனித்தூண்கள் சுற்றி உள்ளன, நடுவில், மையமாக, கையால் தொடமுடியாத அளவு உள்ளே ஒரு பெரிய தூண், தாங்குவதற்காக உள்ளன. வெளிப்புறத்தில் உள்ள தூண்களுக்கும் மையத்தூணுக்கும் இடையிலும், சில கையால் அணுகித் தொட்டு அசைக்கமுடியாத தூண்களும் உள்ளன. இத்தூண்கள் இன்றளவும் இயங்குகின்றன, கையால் மென்மையாகத் தூணின் நடுவில் தட்டினால் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுரங்களை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கொண்டு சில முழு ராகங்களை வாசிக்கமுடியும் எனச் சொல்லப்படுகின்றது ஆனால் இத்தூண்களின் இசைப்பண்புகளை இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத நிலை உள்ளது. கீழே, இத்தூண் தொகுப்புகளில் ஒன்றின், மேல்நோக்கிய குறுக்குவெட்டு அமைப்பு படமாகக் காட்டப்பட்டுள்ளது. இதை நோக்கினால், சில தூண்கள் வட்டமாகவும் சில சதுரமாக, சாய்சதுரமாக, 8 முக வட்டமாக, அலைவரிசை வடிவாக என இத் தூண்கள் வெவ்வேறு வடிவில் உள்ளது தெரியவரும். எந்த தூண் வெளியே உள்ளது, எது உள்ளே வாசிக்க இயலா நிலையில் உள்ளது என்பதும் தெரியவரும்.



      இத்தூண்களின் இசைப்பண்புகளை முழுமையாக ஆராய்ந்தால், கீழ்க்கண்ட தகவல்களை அறியலாம்:
தூண்களின் சுரம் மற்றும் அதிர்வெண்,
எத்தனை மண்டிலம் / கோவை ஒரு தூண் தொகுப்பில் உள்ளது,
ஒரு மண்டிலம்/கோவையில் அலகுகள் 24ஆ 22ஆ,
ஒரு தூணின் அதிர்வு அருகாமைத்தூண்களில் அதிர்வு ஏற்படுத்துகிறதா(sympathetic resonance),
அதனால் இத்தூண்களுக்கிடையே இணை கிளை நட்பு பகை உறவு உள்ளதா என ஆராயலாம்,
தூண்களின் வடிவங்கள் வெவ்வேறு, அதனால் அதன் ஒலிப்பண்பு Timbre மாறுகிறதா,
நூற்றாண்டுகளாக நிற்கும் இசைத்தூண்கள் இன்று சற்றே மாறியிருக்கும், அன்று எப்படி ஒலித்திருக்கும்,


      இத்தகைய இசைத்தூண்கள், நெல்லை அருகே உள்ள ஆழ்வார்திருநகரி கோவில் மற்றும் சுசீந்தரம் கோவிலிலும், கர்நாடக மாநில ஹம்ப்பியிலும் உள்ளன, ஆனால் அவை நெல்லை கோவில் அளவுக்கு விரிவான தூண்கள் இல்லை.

(III) மதுரை மீனாட்சியம்மன் கோவில் தாளச்சக்கரங்கள் – 17ஆம் நூற்றாண்டு:
      மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இரண்டு அரிதான தாளச்சக்கரங்கள் உள்ளன. அவற்றில் முதல் சக்கரம் கீழே உள்ள சிம்மநந்தன தாளச் சக்கரம். 35 தாளங்களில் அடங்காத தனித்துவமான தாளமான சிம்மநந்தன தாளம் மிகச்சிக்கலான, மிக நீண்டதாக 128 அட்சரங்களைக் கொண்டுள்ளது. அதைக் குறிக்கும் விதமாகக் கீழுள்ள சக்கரம் உள்ளது. 



      மதுரைக் கோவிலிலுள்ள மற்றொரு தாளச்சக்கரம், கீழுள்ள சப்த சூழாதி தாளம் என்ற 35 தாளங்களின் அங்கங்களைக் குறிக்கும் சக்கரம். இது நெல்லை கோவிலின் தாளச்சக்கரத்தை ஒத்தது எனினும் அதனளவு விரிவானது அல்ல.



      இதே மதுரைக் கோவிலிலும் இசைத்தூண்கள் உள்ளன எனவும், அவையும் நெல்லை கோவில் போல் பல சுரங்களை எழுப்ப வல்லன என்றும் செய்தி உண்டு. அது உண்மையே, ஆனால், அத்தகைய தூண்கள் இருப்பதே இக்காலத்தில் பலருக்கும் தெரியா வண்ணம் அவற்றைத் தடுப்புகள் போட்டு வைத்துள்ளனர், காரணம், மக்கள் கூட்டம் அதை இயக்கி தூண்களை பாழ்ப்படுத்திவிடாமல் பாதுகாக்கவே. இத்தூண்களும் விரிவான ஆராய்ச்சிக்கு உள்ளான தகவல்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை.

      இவை அனைத்தும் நமக்குக் கூறுவது என்னவென்றால், தமிழர்கள் தமிழ் இசையை எவ்வளவு நுட்பமாக வளர்த்திருந்தனர், அதைக் கல்வெட்டுக்களில் எவ்வளவு புதுமையாகப் பதிவு செய்துள்ளனர் என்பதே. இவற்றில்; 
ராகம்/பண்களை வகுத்துக்கூற ஒரு வழி சொல்லும் குடுமியான்மலை இசைக்கல்வெட்டு,
அங்கு திருமயத்தில் வாசிக்கப்பட்ட பரிவாதிநி வீணை, 
மதுரையிலும் நெல்லையிலும் கோவில்களில் உள்ள மூன்று வெவ்வேறு விதமான தாளச் சக்கரங்கள், 
நெல்லை, ஆழ்வார்திருநகரி, சுசீந்திரத்தில் உள்ள பல்வேறு அம்சங்களைக் கொண்ட இசைத்தூண்கள்,
பாடலுக்கும் ஆடலுக்கும் உரிய தாளங்களை வகுக்கும் அரச்சலூர் கல்வெட்டு,
இசைக்கலை மிக உயர்ந்த நிலையிலிருந்தது என மகேந்திரவர்மன் பெருமையுடன் சொல்லும் மாமண்டூர் பல்லவர் காலக் கல்வெட்டு,
கல்லில் காற்றைச் செலுத்தி ஊதி வாசிக்கக்கூடிய கல் நாகசுரம்-ஆழ்வார்திருநகரி,
ஒரு கல் பந்தை உருட்டினால் ஏழு சுரங்களை வாசிக்கும் இசைப்படிகள்(தாராசுரம்),
வெள்ளம் வந்தால், வெள்ள நீர் வடியும் வரை விடாமல் ஓசை எழுப்பும் அபாயக் கல் சங்கு – தாமிரபரணி ஆறு.

      இப்படி, வெறும் கல்லைக்கொண்டு, தமிழன், ராகம், தாளம், சுரம் இசைக்கருவிகள் ஓசை, இவற்றை உருவாக்கினர். இதுவரை இக்கட்டுரையில் கூறியுள்ள கற்படைப்புகள் போக, இசைக்கலைஞர்கள் இசைக்கருவி வாசித்து நடனமாடும் சிற்பங்களும், இன்னும் இசைப்பாடல்களைத் தாங்கிய கல்வெட்டுக்களும் தமிழகத்தில் இன்றளவும் ஆங்காங்கே உள்ளன. மறைந்த இசை அறிஞர் திரு.தண்டபாணி அவர்கள் எழுதிய ‘திராவிடர் இசை’ எனும் நூலிலும், இன்னும் சில தமிழிசை நூல்களிலும், இங்குக் கூறப்படாத இசைக் கற்படைப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அப்படியெனில், 3000 ஆண்டு பழமையான தமிழிசை, அக்காலத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையிலிருந்தது என்று எண்ணி வியக்காமல் இருக்கமுடியவில்லை. 

      உலகிலேயே வேறெந்த இசைப்பண்பாட்டிலும் கல்லை இப்படி பலவிதமாகவும் பயன்படுத்தியதில்லை எனுமளவுக்கு, கல்லில் இத்துணை இசையறிவை வடித்த தமிழன், அதைவிடப் பன்மடங்கு சொல்லில், அதாவது ஓலைச்சுவடி எழுத்தில் வடித்திருக்கிறான், அதைவிடப் பன்மடங்கு, இசையை வில்லில்(வில் யாழ் முதலிய யாழ் வகைகள்) வாசித்துள்ளான்! எனவே, அக்காலத்தமிழன் இசையில் மிகவும் உயர்ந்திருந்தான் என்பதை, தொழில்நுட்பத்தைக் கையில் வைத்துள்ள இக்காலத் தலைமுறையினராகிய நாம் உணரவேண்டும். பலப்பல ஆழமான ஆய்வுகள் பல செய்து, நம் தமிழிசையின் இசையியல் கோட்பாட்டுத்துறையை மீட்டெடுத்து உலவ விடுவதே நாம், இளங்கோ முதலான நம் இசைமேதைகளுக்குச் செய்யக்கூடிய கைமாறு ஆகும்.


References:
1) 2015.180704. Epigraphia-Indica Vol12
2) ஆய்வுப்பேழை – கா.ம.வேங்கடராமையா (1987) பக்கம் 138
3) தமிழிசையில் புதிய வெளிச்சம் – டாக்டர் ஆ. பத்மாவதி
4) The Musical Dimension of Shiva - A New Discovery – Dr. S.A.Veerapandian
5) The Ragas of Early Indian Music – Richard Widdess
6) தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி 2, பக்கம் 145 – வி.பா.க. சுந்தரம்
7) தமிழிசை இலக்கண வரலாறு – மு.அருணாசலம். பக்கம் 90 & 255
8) The Music Academy Journal 1943 – Piano in Stone, page109
9) Mridangam – Shreejayanthi Gopal – Pages 73 & 81
10) திராவிடர் இசை – ப. தண்டபாணி, பக்கம் 80



குறிப்பு:
ஆபிரகாம் பண்டிதர் 6 இசை  மாநாடுகளை நடத்தியபின்பு விழுந்த 100 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் முதன்முறை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் மீண்டும் இசை மாநாடுகள் நடத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. இது அந்த மதுரை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய  "முதலாவது உலகத் தமிழிசை மாநாடு – 2019"(14 & 15 டிசம்பர் 2019) படிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.  

தொடர்பு: இசை ஆய்வாளர் S.A.விஜய், சென்னை (vijeeth@gmail.com)








Sunday, February 23, 2020

தாமிரபரணி



—  ருத்ரா இ.பரமசிவன்


பளிங்கு நீரை
எங்கள் உயிராக்கி பயிராக்கி
மண்ணின் பரிணாமத்தை
மலர்த்திக்காட்டி ஓடுகின்ற
பொன்னின் பொருநையே
வாழி நீ வாழி!

கல்லிடைக்குறிச்சி
கள்ளிக்காடாயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

அம்பாசமுத்திரம்
வம்பாய் வறண்டு தான் கிடக்கும்
நீ வரவில்லை என்றால்!

சேரன் மாதேவி
சோறு கண்டிருப்பாளா
நீ வரவில்லை என்றால்!

நெல்லைச்சீமை
இல்லை சீமை ஆயிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

சிந்து பூந்துறையும்
சீரிழந்து நிற்கும்
நீ வரவில்லை என்றால்!

திருவைகுண்டம்
வெறும் வைகுண்டம் ஆகியிருக்கும்
நீ  வரவில்லை என்றால்!

ஆறுமுகன் ஏரி
மாறு முகம் கொண்டு பாழ் பட்டிருக்கும்
நீ வரவில்லை என்றால்!

காயல் பட்டினமும்
காய்ந்தே கிடந்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

வங்காள விரிகுடாவும்
அலை விரியாக்  கடலாகும்.
நீ வரவில்லை என்றால்!

"திருச்சீர் அலைவாய்" இல்லாத
திருமுருகாற்றுப்படைதான்
நமக்கும் கிடைத்திருக்கும்
நீ வரவில்லை என்றால்!

செலவாய் செலவாய்  எங்களுக்கு
இழப்புகள் எத்தனை வந்தாலும்
வருவாய் வருவாய் எங்களுக்கு
வருவாய் அருள்வாய் பல கோடி!

எங்கள் உயிரினும் மேலான
பொருநையே
ஊழிகள் பலவாக ஓடிவிடினும்
வாழி நீ !வாழி நீ!!
எங்கள்
நீடு வளர் பொருநையே !
வாழி நீ !வாழி நீ!!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)





Thursday, February 20, 2020

தென்னாப்பிரிக்கத் தமிழர் முனைவர்.சின்னப்பன்


2014ம் ஆண்டு ஜெர்மனியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹாம் நகருக்குச் சென்றிருந்த போது எனக்கு அறிமுகமானவர் தென்னாப்பிரிக்காவின் திரு.சின்னப்பன், திருமதி கோகி சின்னப்பன் ஆகிய இருவரும். அதற்கு அடுத்த ஆண்டு 2015ல் நான் தென்னாப்பிரிக்காவில் நடந்த தமிழ் கல்வி மேம்பாடு மற்றும் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது இவர்கள் இருவருடனும் கூடுதல் நாட்களைச் செலவிட்டு தென்னாப்பிரிக்கத் தமிழர்களைப்பற்றி அறிந்து கொண்டேன். தென்னாப்பிரிக்கத் தமிழ் மக்கள் வழிபடும் கோயில்களுக்குத் தனது வாகனத்தில் என்னையும் ஏனைய நண்பர்களையும் அழைத்துச் சென்று பல வரலாற்றுச் செய்திகளையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் பெருவாரியாக தமிழ் மொழி பேசுவதை மறந்து விட்ட சூழலில் எழுச்சியுடன் தமது தாய் மொழி தமிழை எல்லோரும் கற்க வேண்டும் என முயற்சி எடுத்தவர்களில் திரு.சின்னப்பனுக்குப் பெரும் பங்குண்டு. நேற்று அவர் காலமானார் என்ற அதிர்ச்சியளிக்கும் செய்தி கிட்டியது. கடந்த இரு ஆண்டுகளாக மீண்டும் என்னைத் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துக் கொண்டேயிருந்தனர் சின்னப்பந்கோகி தம்பதியினர். பற்பல வேலைகளின் காரணத்தால் எனது பயணம் தடைபட்டுக் கொண்டேயிருந்தது. அவ்வப்போது தொலைபேசியில் மட்டும் பேசுவது தொடர்ந்தது. இந்தச் சூழலில் திரு.சின்னப்பன் மறைந்தார் என்ற செய்தி நம் எல்லோருக்குமே பேரதிர்ச்சி.

தமிழ் மரபு அறக்கட்டளையின் நலன் விரும்பி என்பதோடு ஒவ்வொரு பெரிய திட்டங்கள் செயல்படுத்தும் போதும் திரு.சின்னப்பனும் கோகியும் எனக்கு வாழ்த்துச் சொல்லத் தவறுவதில்லை. அண்மையில் தான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தமிழில் முனைவர் பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தார். அச்செய்தியை எனக்கும் தெரிவித்து மகிழ்ந்தார்.

2015ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் உள்ள ஒரு முருகன் கோயிலுக்கு நாங்கள் சென்றிருந்த சமயம் நான் செய்த ஒரு சிறிய பதிவினை இங்கே பகிர்கிறேன். எளிய தமிழில் தென்னாப்பிரிக்கத் தமிழர் குறித்து டாக்டர்.சின்னப்பன் பேசும் சிறிய பதிவு.
https://youtu.be/YAzLbwrxE6c

திரு.சின்னப்பனின் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் தமிழ் வளர்ச்சிக்கான உழைப்பு காலத்தால் அழியாதது. அவர் காலத்தால் அழியாது நிலைத்திருப்பார்.

முனைவர்.க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை - பன்னாட்டு அமைப்பு

Monday, February 17, 2020

எனது ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள்

          தடைகளைத் தகர்த்தெறிந்து வெளிவர வேண்டியது ஊர்சுற்றிக்கு மிகவும் அவசியமாகும். உலகம் புரிந்த எந்த வாலிபருக்கும் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசை தோன்றாமல் இருக்குமா? தம் நரம்புகளில் சூடான ரத்தம் ஓடும் எவரும் தம் வீட்டு மதில் சுவர்களைத் தகர்த்தெரிந்து வெளியில் போக வேண்டுமென்று விரும்பாமல் இருக்கமாட்டார்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும். இவர்களுடைய முன்னேற்றப் பாதையில் தடைகள் ஏராளம். வெளி உலகத்தின் தடைகளை விட மனிதரின் உள்ளத்தில் தான் அதிக தடைகள் இருக்கின்றன.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்

23.1.2020

          கடந்த சில தினங்களுக்கு முன் காலை 9 மணிக்குக் கடலூரில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கைத் தொடக்கிவைத்துச் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சென்னையிலிருந்து ஒரு வாகன பயணம்; இடையில் தோழி ரேஷலும் இணைந்து கொள்வதாகத் திட்டம். அன்றைய நாள் முழுதும் கடலூரில் செலவிட்டு இரவு திரும்புவதாக எங்கள் பயணத் திட்டம் இருந்தது. கடலூருக்கு என நான் செல்வது இதுவே முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் சென்றிருந்த போது திரும்பிச் செல்லும் பாதையில் கடலூரைக் கடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது. பண்டைய தமிழக வரலாறு மற்றும் ஐரோப்பியர்கள் வருகையால் ஏற்பட்ட மாற்றம் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டிருக்கும் நகரங்களின் வரிசையில் கடலூரும் ஒன்று என்பதை நான் அறிவேன். ஆயினும் நேரில் சென்று பார்த்துவரச் சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் ஆவல் இருந்தாலும் அது சாத்திய படாமலேயே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அந்த குறையை போக்குவதாக இந்த பயணம் அமைந்தது.

          பண்டைய காலம் தொட்டே கடலூர் கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்கம் இப்பகுதியில் நிலைபெற்றது. ஜெர்மானிய பாதிரிமார்கள் தரங்கம்பாடியை அடுத்து இப்பகுதியில் தங்கள் சீர்திருத்தக் கிருத்துவ மையத்தையும் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.முதலில் கடலூருக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பின்னர் அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரியில் தங்களது வணிக மையத்தை ஏற்படுத்தி 1674 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினர். 1690ல் கடலூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். 1758ம் ஆண்டு வரை கடலூர் தென்னிந்திய மாவட்டங்களின் தலைநகரமாக பிரித்தானியக் காலனித்துவ அரசின் கீழ் அமைந்திருந்தது. இன்றும் இங்குக் காட்சி அளிக்கும் செயிண்ட் டேவிட் கோட்டையில் தான் அன்று அரசு நிர்வாகம் செய்யப்பட்டது. இது ராபர்ட் கிளைவ் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

          எனக்குக் காலை நேரப் பயணத்தில் சாலையோர கடைகளில் சூடான தேநீர் வாங்கி அருந்துவது மிகப் பிடிக்கும். வாகனம் ஓட்டி தேநீருக்காக நிறுத்தியபோது நாங்களும் இறங்கிக் கொண்டோம். நான் கசப்பாகக் காப்பியும் தேநீரும் அருந்துவதை அறிந்திருக்கும் தோழி ரேஷல் தேநீர் போடுபவரிடம் ஸ்ட்ராங் டிகாக்க்ஷன் போட்டுத் தாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார். இருவருக்குமே தேநீர் வந்தது. ஆனால் எதிர்பார்த்த சுவை இல்லை. சும்மாவே தேநீர் வாங்கியிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொண்டோம். சில நேரங்களில் இப்படித்தான் நாம் ஏதாவது ஒன்று சொல்லி இயல்பாகவே நன்றாக இருக்கும் ஒன்றை அப்படியே மாற்றி விடும் அனுபவம் ஏற்பட்டு விடுகிறது.

          ஏறக்குறைய மூன்று மணி நேர வாகன பயணம். செங்கல்பட்டு மதுராந்தகம் மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் என ஒவ்வொரு ஊராகப் பார்த்துக்கொண்டே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து எங்கள் பயணம் இருந்தது.

          விக்கிரவாண்டி தொடங்கி மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகள் பசுமையாக இருந்தன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளமான இயற்கைச் சூழலையும் விவசாய முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். நான் சென்றிருந்தபோது இப்பகுதியில் கரும்புத் தோட்டங்களில் ஆணும் பெண்ணுமாக மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகள் விவசாயம் சாலையின் இருபுறத்திலும் காணக்கூடியதாக இருந்தது.

          முதலில் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிற்பகல் 2 மணி வரை கலந்துகொண்டு, பின்னர் பெரியார் அரசுக் கல்லூரியிலும் தமிழ்த் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாலை நான்கு வாக்கில் நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டோம். உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் முனைவர் ஜானகி ராஜா ஐரோப்பியர் கால கட்டடங்கள் சிலவற்றைச் சுற்றிக்காட்டத் திட்டமிட்டிருந்தார்.

          முதலில் நாங்கள் வந்தடைந்த இடம் சில்வர் பீச் அல்லது வெள்ளி கடற்கரை. இப்படி ஒரு அருமையான கடற்கரை இங்கே இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விரிவான மணல் நிறைந்த கடற்கரை அழகாகக் காட்சியளித்தது. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து அங்குக் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அரசு கல்லூரி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வியைப் பெற மிக முக்கிய அடித்தளம் அமைக்கும் ஒரு கல்லூரி. ஆயினும் சில மாணவர்கள் பாட நேரத்தில்கூட கடற்கரையில் நேரத்தைச் செலவிடுகிறார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

          சாலையில் மெதுவாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே கடற்கரையை ரசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான படகுகள் கண்களைக் கவர்ந்தன. இறங்கி நின்றவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதே சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

          ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற  கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே ​உள்ளூர் மக்கள் ​சில​ர் தங்கியிருக்கின்றனர் என்பதற்கு​ச்​ சான்றாகப் பாய் படுக்கை​கள்​ ஆங்காங்கே தென்பட்டன.  இந்த பெரிய ​பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள்​.​ ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்ப​தை ​அப்போதைய ​சூழல் வெளிப்படுத்தியது.

          வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் ​கடலிலிருந்து பிடித்து வந்திருந்த ​கடல் உணவு வகைகளை எடுத்து​ப்​ போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளை​க்​ கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.

          படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ராபர்ட் ​கிளைவ் தங்கியிருந்த அந்த​ப்​ பாழடைந்த மாளிகையை​ப்​ பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். ​"​அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க..​"​ என.. ​கரிசனம் நிறைந்த குரல்.

          கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். ​"​இந்த​ப்​ படகுகளை​ப்​ பற்றிச் சொல்லுங்கள்​,​ எங்கே செல்கின்றன​"​ என விசாரிக்க​த்​ தொடங்கினேன். அவரது வேலையை ​ எனது பேச்​சு தடை செய்கின்ற​து என்ற எந்த கோபமும் ​இல்லாமல் ​​புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.

          ஒவ்வொரு படகும் அழகாக​த்​ தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல​.​ மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் ​6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும்​,​ மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற ​வேலையாக இருக்கின்றதே ​இந்த​ மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம்.​ என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர்.​ ​​மிகப்பெரிய பொருட்செலவும்​,​ அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்த​ப்​ புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
 ​
          கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது ​நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. ​ சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது​!​
















          படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோ​ழி ரேஷல்  ​​"படகு சவாரி செல்கிறீர்களா​"​ என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே​...​ எனக்குக் கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். ​"​இந்த​ப்​ படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே​" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்​.

          எந்த​த்​ தயக்கமும் இல்லை. ​"​வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்​",​ என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேஷல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்ப​ர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ​ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.

          ​படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. ​தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் ​என் ​மனதில் ஒலிக்கத் தொடங்கியது.

                    "ஓடும் மேகங்களே  ஒருசொல் கேளீரோ...."

          முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

                    "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்"

          பாடல் இனிமை தான்.. ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..

          பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

          படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

          தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களைக் கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயன்றோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக்கண்டு மகிழ்ந்தோம்.

          படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேஷலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

          எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்குக் காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேஷல் எங்களிருவரையும் பார்த்துக் கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம்.  அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

          எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்திலிருந்த எண்ணற்ற படகுகள் வர்ண ஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அண்மைக்கால ’புள்ளிங்கோ’ வரை எனப் படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.








          கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்குத் தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுகளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாகத் தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றிக் கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

          வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியிலிருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகிலிருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.

          எங்கள் படகை எதிர்த்துக் கொண்டு எழும்பிய பேரலை முன் பகுதியை முழுமையாக நினைத்துவிட, நாங்கள் அதற்குள் ஒருவழியாகச் சுதாரித்துக் கொண்டு படகில் நின்று கொண்டோம். நான் படகில் சுதாரித்துக் கொண்டு நின்றதைக் கவனித்த மீனவ நண்பர்,  ’நீங்கள் சமாளிக்கும் விதம் சரியான முறைதான்.. எப்படி இப்படித் தான் நிற்கவேண்டும் படகில் என்று தெரியும்’ என ஆச்சரியத்துடன் கேட்டார். நான் அவரைப் பார்த்து பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டேன். இளம் வயதில் உயர்கல்வி முடித்ததும்  நான் மலேசியாவிலிருந்தபோது ஒரு வாரக் காலம் மாணவர்களுக்கான ராணுவ பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது கடலில் பாதுகாப்பாகப் பயணம் செல்லும் சில வழிமுறைகளைக் கற்றிருந்தேன். அது இன்றுவரை மனதில் பதிந்திருப்பதும், ஆபத்தான வேளைகளில் அந்தப் பயிற்சிகள் உடனே நமக்கு கை கொடுப்பதும் இயல்புதானே.

          எங்கள் படகு மேலும் சென்று கொண்டே இருந்தது. அலைகளின் அழுத்தம் அதிகரிக்க, அதிகரிக்க, திரும்பிச் செல்வோம் என்று முடிவெடுத்துத் திரும்பத் தொடங்கினோம். அந்த சமயத்தில் பரங்கிப்பேட்டை மீனவ துறைமுகப் பகுதியைத் தாண்டி மேலும் சற்று தூரம் வந்திருந்தோம். தூரத்தில் கலங்கரை விளக்கமும் கண்களில் தென்பட்டது.








          கடலூரில் கடற்கரையோரத்தில் ஏராளமான மக்கள் வழிபாட்டில் உள்ள ஆலயங்கள் இருப்பதைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். புத்து மாரியம்மன் கோயில், முத்தாலம்மன் கோயில், பூரணி அம்மன் கோயில், கங்கை அம்மன் கோயில், அங்காளம்மன் கோயில், வெல்லாரி அம்மன் கோயில் என அங்கிருக்கும் ஒவ்வொரு மக்கள் வழிபடும் கோயில்களுக்கும் சென்று பார்த்து அவற்றின் சிறப்புகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற பேராவல் எனக்கு இருந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் போதாது என்பது தெள்ளத் தெளிவு.தூரத்திலிருந்து தெரிந்த சில கோயில்களின் கோபுரப் பகுதிகளை மட்டும் பார்த்துக்கொண்டேன்.

          படகுப் பயணத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று அலையாத்தி காடுகள் தான். குவியல் குவியலாகக் குட்டி தீவுகளாக இந்த அலையாத்தி காடுகள் அமைந்திருக்கின்றன. ’பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கின்றது’ என்று நான் சொன்னவுடன், படகை அலையாத்திக் காடுகளுக்கு அருகில் கொண்டு சென்று நான் மரங்களைத் தொட்டு ரசித்து மகிழ ஒரு வாய்ப்பினையும் வழங்கினார் அந்த மீனவ நண்பர். படகினை அப்படியே நிறுத்திவிட்டு அங்கேயே படகிலிருந்தபடியே அலையாத்திக் காடுகளை ரசித்துக் கொண்டிருக்க வேண்டும்போல் மனதில் கொள்ளை ஆசை எனக்கு. ஆனாலும் நேரம் கடந்து கொண்டே இருந்ததாலும், அன்றே நாங்கள் சென்னைக்குத் திரும்ப வேண்டும் என்ற திட்டம் இருந்ததாலும், படகுப் பயணத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற அவசரமும் எனக்கு இருந்தது.

          இத்தகைய இயற்கை வளமும் எழிலும் நிறைந்த கடலூர் பகுதியை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்காமல் வைத்திருக்கிறார்களே, என்று எனக்கு வியப்பு தான் தோன்றியது. கடலூர் போன்ற வளமிக்க ஒரு ஊரும் உழைக்கும் மக்களும் அழகிய இயற்கையும் ஐரோப்பாவிலும் அல்லது ஏனைய ஆசிய நாடுகளிலும் அமைந்திருந்தால் அதனை இந்நேரத்திற்கு மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக மாற்றி இருப்பார்கள். அதனால் அவ்வூர் மக்களுக்கும் மிகப்பெரிய பொருளாதார மேன்மை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு நான் கண்டதோ எதிர்மாறான ஒரு நிலைதான். இது துரதிர்ஷ்டமே!

          எங்கள் படகுப் பயணத்தை முடித்துக்கொண்டு எங்களை அழைத்துச் சென்ற மீனவர் நண்பருக்கு நன்றி கூறிக்கொண்டு, அவரது தொடர்பு எண்ணையும் எடுத்துக்கொண்டு விடைபெற்றுத் திரும்பினோம். கடலூரில் மேலும் சில நண்பர்களைச் சந்தித்து நகர்ப் பகுதியிலும் பயணம் செய்துவிட்டு தம்பி ஜானகிராஜா அளித்த தேநீர் விருந்தையும் சுவைத்துவிட்டு இரவு அங்கிருந்து புறப்பட்டோம். ஒருநாள் பயணம் தான் என்றாலும் கூட கடலூரில் நான் சென்ற படகுப் பயணம், வித்தியாசமான அனுபவமாக, மகிழ்ச்சியளித்த பயணங்களில் ஒன்றாகவே அமைந்தது.

          கடலூரில் அறிந்துகொள்ள இன்னும் ஏராளம் இருக்கின்றது. நிச்சயம் அடுத்த பயணத்தில் படகுப் பயணத்தோடு மக்களோடு மக்களாக அங்கேயே ஓரிரு நாள் தங்கி இருந்து அவர்கள் உணவையும் சுவைத்து, மக்களின் வழிபாட்டு வாழ்வியல் கூறுகளையும், மீனவ மக்களின் தொழில் வாழ்க்கையும் பதிவு செய்ய வேண்டும் என்ற பேரார்வம் எனக்கு இருக்கின்றது.

          இந்த ஊர் சுற்றிப் புராணம் மீண்டும் தொடரும்.. மற்றுமொரு இடத்திலிருந்து..!


"சுயமரியாதை அற்ற எவனும் உயர்தரமான ஊர்சுற்றி ஆக முடியாது. உண்மையான ஊர்சுற்றி முகஸ்துதி விரும்பமாட்டான்‌‌. உலகத்தில் எவரையுமே தன்னைவிடத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணா மனோநிலையை ஊர்சுற்றி பெற்றிருக்க வேண்டும். சமநிலை பார்வையும் நெருக்கமான நட்புறவும் அவன் கொண்டிருக்கவேண்டும்.
-  ஊர்சுற்றிப் புராணம்; ராகுல் சாங்கிருத்யாயன்







தொடர்பு: முனைவர் க. சுபாஷிணி (ksubashini@gmail.com)




இலந்தை முள் கோட்டை


இலந்தை முள் கோட்டை 

——   வே.கி. சிவகுமார்


      சுமார் 100 அடி சுற்றளவு 25 அடி உயரம், 10 அடி அகலம் வட்ட வடிவமான கோயிலில் இலந்தை முள் கொண்டு காட்டப்படும் ஒரு கோட்டை!!!

           ஆதியில் ஜெகன் மாதா ஜெயதுர்கா என்றழைக்கப்பட்ட அன்னையின் அம்சமாகக் கருதப்படும் ஆதிசக்க தேவியின் திருக்கோவில் அமைந்த இடங்களில் அந்நியர் நடமாட்டங்களைக் குறைக்கவும் சில நேரங்களில் மனித நடமாட்டமே இல்லாமல் அவ்விடங்களின் புனிதங்கள் களங்கப்படாமல் இவ்வித இலந்தை முள் கூடாரங்கள் அமைக்கப்படுகிறது.

      தமிழகத்தின் தென் மாவட்டங்களில் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற இடங்களில் வாழும் கம்பளத்து நாயக்கர் சமுதாய மக்கள் தங்களின் ஆதிகுலதெய்வமாக வழிபடும் சக்கதேவியின் ஆலயங்களைச் சுற்றி இவ்வகையிலான முள்கோட்டைகளை அமைத்து வழிபடுகின்றனர்

      குறிப்பிட்ட நாள் இடை வெளியில் மீண்டும் புனரமைக்கப்படும் இத்தகைய முள்கோட்டைகளில் தவறாது வீட்டிற்கு ஓர் ஆண்மகன் கலந்துகொள்ளவேண்டும் என்ற சட்டதிட்டங்களையும் சில சம்பிரதாய நடைமுறைகளையும் பின்பற்றுகின்றனர்.

      ஜக்கதேவியின் அவதாரமான வீரசின்னம்மாள் அம்மனுக்கு உருவ வழிபாடு கிடையாது. கோயிலின் மத்தியில் மண்பானையில் நிறைகுடம் தண்ணீர் வைத்து சிற்றாடை கட்டி, காதோலை, கருகுமணி பாசி அணிவித்து அம்மனாக அலங்கரித்து தீபம் ஏற்றி பூஜைகள் நடக்கும். பூசாரி பிச்சைவேல் பூஜைகளை நடத்துவார்.

      முதலில் ஊர் பொதுப்பொங்கல் வைக்கப்படும். அதையடுத்து வீடுதோறும் ஒரு பொங்கல் வீதம் வைத்து வழிபடுவார்கள். அன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் குழந்தை வரம் நேர்த்திக் கடனாகக் கரும்பு தொட்டில் கட்டி அம்மனுக்கு நேர்ச்சை செலுத்தி வழிபடுவார்கள்.

      தேவதந்துமி ஆகிய மங்கள வாத்தியங்கள் முழங்கப் பக்தர்கள் தெய்வீக கலையான தேவராட்டம் ஆடிக்கொண்டே ஊர் மந்தையிலிருந்து புறப்பட்டு திருவீதி உலா வந்து கோயிலை வந்தடைவர்.




தொடர்பு: வே.கி. சிவகுமார் (Siva19732001@gmail.com)






சாதியம்


"சொல்லாக்கியன்"



       இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி போன்ற பிரிவினைகளால், உலக மக்கள் முரண்பட்டு நிற்கின்றனர். இத்தகைய சமூக முரண்பாடுகள், பெரும்பாலான பொதுமக்களின் அன்றாட வாழ்வை வலிமையாக ஆக்கிரமிக்கின்றன. எனவே, சிறுபான்மையான மக்கள், அரசு அதிகாரங்களைக் கொண்டு, வெளிப்படையாக நிகழ்த்தும் சுயநல பொருளாதார கொள்ளைகளைக்கூட, பெருவாரியான மக்களால் முழுமையாக காணமுடிவதில்லை. ஒருசிலர் கண்டு, கத்திப்பேசினாலும், சமூகச்சந்தைக் கூச்சலில், தெளிவாகக் கேட்க முடிவதில்லை. சமூகம் முழுமையும் தன்னலமே ஆட்சி செய்கின்ற இக்காலத்தில், பொதுநலம்கூட, சந்தேகக் கண்ணாலேயே பார்க்கப்படுகின்றது.

       உலகின் பல்வேறு மனித இனங்கள் அனைத்தும், ஒரே மனிதக்குழுவின் பரந்து விரிந்தத் தன்மையின் விளைவுதான் என்றும், பல்வேறு மொழிக்குடும்பங்களும், மொழிகளும், ஒரு தாய்மொழியின் தங்கைகளாகத் தோன்றி, நிலத்தின் சூழல் மற்றும் வாழ்க்கைமுறை வேறுபாடுகளுக்கு இணங்க, திரிந்து மாறுபட்டு வந்துள்ளன என்றும், எல்லா மதங்களும், சாரத்தில், அகநிலையில் அல்லது புறநிலையில், இறைமையை அடைவதைப் பற்றியே கூறுகின்றன என்றும், எந்த ஒரு நிலப்பகுதியிலும், வர்க்கத்திலும், சாதியிலும், மக்கள் பிறப்பதோ, வளர்வதோ, வாழ்வதோ, குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருப்பதோ, அவர்களின் சொந்த விருப்பத்தினால் அல்ல, சூழலும் வழக்கமும்தான் என்று மானிடவியல் மூலம் அறிகின்ற போதிலும் இம்முரண்பாடுகள் தொடர்கின்றன, உச்சக் கட்டமாக, பிற இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி ஆகியனவற்றிற்கு எதிரான வன்முறைக்கும், ஏன், அழித்தொழிப்புக்கும்கூட இட்டுச் செல்கின்றன.


    இனம், மொழி, மதம், நிலப்பகுதி, வர்க்கம், சாதி முரண்பாடுகளின் வெளிப்பாடுகள் யாவும் தன்னிச்சையாக நிகழ்வன அல்ல. அவ்வமைப்புகளின் தலைமைகள், தங்கள் அடுத்த கட்ட அரசியல் அதிகார இலக்குகளுக்காக, மோதல்களுக்கான கருக்களை உருவாக்கி, வளர்த்து, ஏவிவிடுகின்றன. இம்முரண்பாடுகளில், சாதிய முரண்பாடுகள், தமிழகச் சூழலில், மிகவும் கூர்மையாக உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவை, சாரத்தில் தனிப்பட்ட சாதிய அமைப்புகளாக இயங்கி, சாதிய முரண்பாடுகளை உக்கிரப்படுத்துகின்றன. வழக்கம் போல, எல்லா முரண்பாடுகளையும் வளரவிட்டு, பொதுமக்களுக்கு வேடிக்கை காண்பித்துவிட்டு, அதிகார வர்க்கம், தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை, யாரும் கண்டும் காணாதவாறு, முன்னெடுத்துச் செல்கின்றன.  

      சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது? அதன் அடிப்படை என்ன? அது எப்படி நிலைபெற்றது? அது உளவியல் தன்னியக்கமாய் தொடர்ந்தது எப்படி? சாதியத்தின் அமைப்பு மற்றும் இயங்கியல் என்ன?  அதன் தகவமைப்புகள் எவ்வாறு நிகழ்ந்தன? அதன் இன்றைய நிலை என்ன? இவ்வாறு, சாதியத்தின் முந்தைய வரலாற்றையும் இயக்கத்தையும் அறியாமல், அதை எப்படி எதிர்கொள்வது மற்றும் தீர்ப்பது என்பதைப் புரிந்து கொள்ள முடியாது.

      வரலாறு தானாக உருவாவதில்லை, அது உருவாக்கப்படுகின்றது. ஆக்கமும், ஊக்கமும், இடைவிடாத பல்முனை முயற்சிகளைக் கொண்டே, ஒவ்வொரு வரலாறும் கட்டமைக்கப்படுகின்றது. எதிர்கால வரலாறும், அதற்கு விதிவிலக்கல்ல. சரியான நோக்கமும், திட்டமும், செயல்பாடுகளுமே, புதிய சமுதாய வரலாற்றை நிலையாகவும், உறுதியாகவும் உருவாக்குகின்றன. மீளாய்வும், விமர்சனமும், பொதுநலமும் மாற்றுப் பாதையை நிர்ணயிக்கின்றன. பல்வேறு சாதிய சக்திகளின் இயக்க திசைகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளாமல், அவற்றை மாற்றும் முயற்சிகளை உடனடியாகவும் தொடர்ந்தும் பலமுனைகளில் மேற்கொள்ளாமல், சாதிய விடுதலை என்பது சாத்தியமில்லை.

சாதி எங்கு, எப்பொழுது தோன்றியது?
      தமிழகம் மற்றும் தமிழர்களின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு, தொல்காப்பியத்தில் இருந்தே துவங்குகின்றது. தொல்காப்பியத்தின் காலம் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி, கி.மு. ஆறாம் நூற்றாண்டு. அதற்கு முன்பே, சிலபல நூற்றாண்டுகள், எழுத்தும் படைப்பும் தமிழில், தமிழகத்திலிருந்திருக்க வேண்டும் என்பது வெளிப்படை என்றாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்திய கீழடி அகழ்வாராய்ச்சி, அங்கு வாழ்ந்தவர்களின் காலம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்றாலும், அது நகர நாகரிகமாக இருப்பதாலும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு ஒத்து இருப்பதாலும், அதன் தொன்மை மிகவும் முற்பட்டதாய் இருக்க வேண்டும்.

      தொல்காப்பியத்தின் எந்த பகுதியிலும், சாதிகளைப் பற்றிய குறிப்புகள் இல்லை. சமூக உறுப்பினர்களைப் பற்றிக் கூறுகையில்;
1. அந்தணர். அவர்களுக்குரிய பொருட்களைக் கொண்டே, அவர்களின் கடமைகள் என்னவாக இருந்திருக்கும் என்று அறியமுடிகின்றது. தொல்காப்பியம், பொருள் அதிகாரம், மரபியல் நூற்பா:
            நூலே கரகம் முக்கோல் மணையே
            ஆயுங் காலை அந்தணர்க் குரிய. [615]

அந்தணரின் முதன்மையான கடமை பழம்நூல்களைக் கற்பதும், புது நூல்களை யாப்பதும், சமூகத்தின் பிற அங்கத்தினருக்கு கற்பிப்பதும் ஆகும். அவர்களின் எளிமையான உடைமைகளாக, தண்ணீர் பாத்திரமும், மூன்று கால்களைக் கொண்ட கைதாங்கியும், தரையிலிருந்து சற்று உயரத்தில் அமர்வதற்கு ஏற்ற மணையும்தான். 

2. அரசர். நேர்மையான அரசாட்சி செய்பவர். அரசரும் அந்தணரைப் போன்று, கல்வி கற்று, யாத்து, கற்பிப்பர்.

3. ஊரின் பெயர், தந்தையின் பெயர், இயற்பெயர், செய்யும் தொழிற்கருவியின் பெயரைக் கொண்டு, எவரும் அத்தொழிலுக்குரியவராய் அறியப்படுவர். சான்றாக, வேலூர் சிவனார் மகன் கந்தன் தச்சர், மேலூர் மாரியின் மகன் காரி கருமார், மாங்காடு கண்ணன் மகன் குமரன் கொல்லர் போன்றோர். போர், இவரது கடமை.

4. தலைமைப் பண்பிற்கு ஏற்றவாறும், செய்யும் சேவைகளுக்கு ஏற்றவாறும்,  பெயரிடப்படுவோர். சான்றாக, தலையாரி, சேர்வை போன்றோர். ஊர்காவல், போர், இவரது கடமை.

5. வைசியன். உணவுப் பண்டங்களை விற்பவர்.

6. வேளாண் மாந்தர். உழுவதும், பிறர்க்கு உணவளிப்பதும் இவர்தம் பணி. தூது செல்வதும், போர் செய்வதும் இவருக்கும் கடமை

7. இழிந்தோர், அதாவது, முற்கூறிய ஆறு அங்கத்தினரின் வழிவந்திருப்பினும், அவரவர்களுக்குரிய கடமைகளை ஆற்றாதவர், சோம்பித் திரிந்தோர் என ஏழு வகைப்படுத்துகின்றார்.

      இவ்வகைப்பாட்டில், சாதியக்கூறுகள் ஏதுமில்லை. திறமை மற்றும் பண்புக்கேற்ற தொழில் மற்றும் சேவையும், அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைப்பதாய் உள்ளது. பணியோ, கடமையோ அற்று, சோம்பித் திரிந்த இழிந்தோர் மட்டும் சமுதாயத்தில் மதிக்கப்படாதவர்களாய் இருந்துள்ளனர்.

      தொல்காப்பியம் தோன்றிய கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல், கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை, ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள், தமிழகம் மற்றும் தமிழரின் வரலாறு, இருட்டடிக்கப் பட்டிருந்தது. அதன் பெரும்பகுதியானது, களப்பிரர் காலம் எனப்பட்டது. களப்பிரர் ஆட்சியின் மிச்ச சொச்சங்கள் எதுவும் இல்லாதபடி, வேரறுக்கப்பட்டிருந்தது. ஆனால், சமீபத்தில், சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி கல்வெட்டின் மூலம், அந்த இருண்ட காலத்தின் மீது ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.

      பௌத்தர்களும், சமணர்களும் மேலோங்கிய காலம் களப்பிரர் காலம். அதனால்தான், அக்காலத்தில் தோன்றிய ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை அம்மதங்களின் தத்துவங்களை உள்ளடக்கி உள்ளன. திருக்குறளும், இருண்ட காலம் எனப்படும் இக்களப்பிரர் காலத்தில் தோன்றியதுதான். தமிழைப் பொறுத்து, களப்பிரர் காலம், பொற்காலம். களப்பிரர் காலம், தமிழுக்குப் பொற்காலம் என்றால், தமிழருக்கும் பொற்காலமாகவே இருந்திருக்கும். ஏனெனில், களப்பிரர் காலத்தில் பிரம்மதேய நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது. அதுவரை, அவர்கள் அடிமை வாழ்வே வாழ்ந்துள்ளனர்.

      களப்பிரர்கள் யார்? பிரம்மதேய நிலங்களைக் கைக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் எப்படி வலிமை பெற்று இருந்தனர்? கலிங்கப் போரில் வென்றாலும், அழிவின் கொடுமையைக் கண்டு, அசோகன் பௌத்தம் தழுவினான். தன்னுடைய பெரும்படையைக் கலைத்தான். விரிந்து பரந்து பௌத்தத்தை பரப்பச் செய்தான். ஒரு அணி தெற்கு நோக்கி வந்தது போலும். ஏற்கனவே, சங்கமித்திரையும், மகிந்தனும் இலங்கை சென்றிருப்பர். இலங்கைக்கு நெருக்கமான தமிழகமும், பௌத்தத்தின் ஆளுமையில் இருப்பது சிறந்தது என எண்ணி இருக்கலாம். 

      ஆனால், வடக்கில் போலவே தெற்கிலும், ஆரியர் தம்மைப் பிராமணர்கள் அல்லது அந்தணர்கள் என அழைத்துக் கொண்டு, குறுநில மன்னர்களை தம்வசப்படுத்தி விட்டு, எளிமையாக வாழ்ந்த திணை நில அந்தணர்களைப் புறந்தள்ளினர். மன்னனின் இல்லற சுகத்திற்காக, போர் வெற்றிக்காக, சுவர்க்கப் பதவிக்காக, யாகம், வேள்வி செய்வதாய் கூறி, தாம் வசதியாய் வாழ, பிறர் உழைப்பில் வாழ, பிரம்மதேய நிலங்களை தானமாய் பெற்றனர். அந்நிலங்களில் உழைத்த மக்கள் சுரண்டப்பட்டனர். கல்வி மறுக்கப்பட்டது. வறுமையில் வாடினர். இதைக்கண்ட முன்னாள் கலிங்கத்துப் படையினர், பின்னாள் பௌத்த துறவிகள், மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க முனைந்தனர். அதன் மூலம் தம் மதக்கொள்கைகளையும் பரப்ப முடியும் என்று முடிவு செய்தனர். வடக்கில், ஏற்கனவே, வைதிக மரபிற்கும் பௌத்தத்திற்கும் பெரிய முரண்பாடுகள் இருந்த வரலாறு உண்டு. எனவே, பிரம்மதேய நிலங்கள் அந்தணரிடம் இருந்து பிடுங்கப்பட்டு, உழைக்கும் மக்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டன. பௌத்த துறவிகளுக்கு பாதுகாப்பாக மாமன்னன் அசோகன் இருப்பதை அறிந்த பிராமணர்களும், குறுநில மன்னர்களும், அவர்களை எதிர்க்கத் துணியவில்லை.

      சுதந்திர உழைப்பு பெருகியது, வளமும் கொழித்தது, வாணிபம் செழித்தது, செல்வம் மிகுந்தது, வாழ்வு இனித்தது, கல்வி பரவலாகியது, உபரியால் கலை, இலக்கியம் பல்கியது. ஐம்பெருங்காப்பியங்கள் தோன்றின.  பௌத்த மடங்களும், சமண மடங்களும் பெருகின. மதங்களின் அரசு கோலோச்சியது. கேட்பாரற்ற எந்த அதிகாரமும் கேடு என்பதால், பௌத்த சமண மடங்கள் சீரழிந்தன. பெரும்பகுதியான மக்கள் உழைப்பை விடுத்து, துறவு மேற்கொண்டு, நோகாமல், சிறு அளவிலான உழைப்பவர்களைச் சார்ந்து வாழ்ந்தனர். சமுதாய உற்பத்தி குறைந்தது, பகிர்வும் அருகியது. துறவு வாழ்வு விதைத்த, விளைத்த சோம்பலால், வறுமையும், ஏழ்மையும், துன்பமும், குற்றங்களும் மிகுந்தன. திருவள்ளுவம் தோன்றியது. குடும்ப வாழ்வின் மூலமே, துறவின் இலக்கை அடையும் வழியைக் காட்டியது. உழைப்பின் அருமையைப் போற்றியது. அந்தணர், அரசர், அமைச்சர், வணிகர், வேளாண் மாந்தர் ஆகியோரின் கடமைகளை வரையறுத்தது. அறம் என்பதன் வடிவத்தையும், அன்பெனும் சாரத்தையும், அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தியது. சமூக இணக்கத்திற்கான பண்புகளையும் ஒழுக்கங்களையும், சமூக அங்கத்தினர்களுக்கு முன்மொழிந்தது. சமநிலைப்படுத்திய, ஒரு புதிய, மாதிரி சமுதாய வாழ்வியலை உருவாக்கினார்.

      பிரம்மதேயங்களை இழந்த அந்தணர்களோ, வடக்கு அல்லது மேற்கு நோக்கிச் சென்றனர்.  "உறுமீன் வருமளவு காத்த" அந்தணர், தமிழகத்தின் அகநிலை தமக்குச் சாதகமாய் இருப்பதை அறிந்து, வடக்கு மன்னர்களைக் கொண்டு போர் தொடுத்தனர். பௌத்தர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பெரும்பாலானவர்கள் இலங்கையில் தஞ்சம் புகுந்தனர். சமணர்களில் சிலர் கழுமரம் ஏறினர். அந்தணர்கள் மீண்டும் அதிகாரம் பெற்றனர், சமூக அரசாக மாறினர். பிரம்மதேயங்களை மீட்டுக் கொண்டனர். நிலமிழந்து எதிர்த்தவரை எல்லாம் சண்டாளர் என்றனர், பள்ளர், பறையர் என முத்திரை குத்தினர். பின்பும் எதிர்த்தவர்களை, சக்கிலியர் என்றனர், அருந்ததியர் என்றனர். மனுவின் சட்டம், எப்படிப்பட்ட சூழலுக்கும் பலபடி நிலைகளைத் தயாராய் வைத்திருந்தது. திணை நிலங்களில், தொழிலாலும், சேவையாலும் பெயரிடப்பட்டவர்கள் எல்லாம், சாதியின் படிநிலையில் பொருத்தப்பட்டனர், சாதிகளாக்கப்பட்டனர். அகமணமுறை சாதியத்தின்  கருவாக்கப்பட்டது. அது, சமுதாயத்தைச் சங்கிலித் தொடராய் பிளவுபடுத்தியது. பெண்களின் இயங்கு வெளி, வீட்டோடு சுருங்கியது. இயங்குகின்ற சமுதாயத்தில் எழுகின்ற மீறல்கள், சிக்கல்களால், புதுப்புது விதிகள் இயற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, தண்டிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டு, சாதியம், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் உளவியல் இயக்கமாய் தொடர்ந்தது. நியாயம், நீதி என்பன, ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறாய் உருவாகின. சாதியப் பிரிவுகளின் சமூக முரண்பாடுகள், மக்களின் பெரும்பாலான வாழ்வு நேரத்தையும், சமூக உறவுத் தளங்களையும் ஆக்கிரமித்தன. 

      சமூகப் படிநிலையின்  ஏற்றம் மற்றும் இறக்கம் தந்த அற்ப, மாயையான, கற்பிதம் செய்யப்பட்ட உயர்வு மனப்பான்மையும், தாழ்வு மனப்பான்மையுமே அவர்களை இயக்கப் போதுமான உந்துசக்தியாக இருந்தது, வாழ்வின் இலக்காய் தெரிந்தது. எனவே, சமூகம் முழுமையையும் ஆட்டிப்படைத்த, சுரண்டிய சமூகப் பொருளாதார அரசான அந்தணரை எதிர்த்தோ, அரசியல் பொருளாதார அரசான மன்னனை எதிர்த்தோ எந்த செயல்பாடும் நிகழவில்லை. ஒருசில தலைமுறைகளின் இத்தகைய சாதியம் அடிப்படையிலான வாழ்வியல் இறுகி, எல்லா தலைமுறைகளுக்கும், எல்லா படிநிலைகளுக்கும் அதாவது எல்லா சாதியினருக்கும் தொடர்ச்சியான வாழ்வியலாய் மாறிவிட்டது. இதைத் தாண்டிய சிந்தனையே எழவிடாதவாறு, ஒவ்வொரு மனமும் தன் உள்ளழுத்தத்திற்கு ஆட்படுகின்றது. போதாதென்று, தன் மற்றும் பிற சாதியினரின் சமூக அழுத்தமும் சேர்ந்து, சாதியத்தைத் தன்னிச்சையாக இயக்கி வருகின்றது. அந்தணர்கள் சமூகத்தில் வேறு இடங்களுக்கும், உயரத்திற்கும் பெயர்ந்து விட்டனர். ஆனால், சாதிய வன்கொடுமை, அந்தந்த உள்ளூர் சமுதாயத்தில் உள்ள மேல்சாதி மக்களால், கீழ்சாதியினருக்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றது. படிக்காமலிருந்தாலும் பரவாயில்லை, உழைக்காமல் சோம்பித் திரிந்தாலும் பரவாயில்லை, சாதியின் படிநிலையில் மாற்றம் வராதவாறு பார்த்துக் கொள்வதே, வாழ்வின் இலட்சியமாகவும், செயல்பாடாகவும், சில உதிரிகளுக்கு இருக்கின்றது. மரபணுவே மாற்றமாகியது போலும். ஒவ்வொரு சமூக உறுப்பினரும், தான் சமூகப்பார்வையில் சிறுமைப்பட்டுவிடுவோமோ எனப் பயந்து, தயங்கி, வெளிப்படைத் தன்மையின்றி வாழ்கின்றார்.                   

      எப்பொழுதெல்லாம், மக்கள் சாதிப்பிரிவினைகளை மறந்து ஒன்று சேர முயல்கிறார்களோ, அப்பொழுதெல்லாம், செயற்கையான பிரச்சனைகளை உருவாக்கி, வளர்த்து, குழப்பத்தை ஏற்படுத்தி, மோதலை ஏற்படுத்தி, அவ்வொற்றுமை குலைத்துவிடப்பட்டது. இதனால், அரசு அதிகாரம் என்பது மக்களை விட்டு வெகு உயரத்தில் நின்றுகொண்டது. திணைநிலங்களில், மன்னனுக்கும் மக்களுக்குமான உறவு நேரிடையாக, நெருக்கமாக இருந்தது. மக்களே மன்னனைக் கேள்விக்குள்ளாக்கினர். மக்களுக்காக, பாதுகாப்பாக, உதவியாக மன்னன் இருந்தான். சாதிய சமூக வாழ்வில், மன்னன் தூரத்தில், உயரத்தில் நிறுத்தப்பட்டான், மக்களும் அந்நியமாக்கப்பட்டார்கள். மன்னனுக்காக, வரிகளுக்காக, வன்முறைகளைத் தாங்கி மக்கள் இருந்தனர், பல நூற்றாண்டுகளாய். 

      பதினேழாம் நூற்றாண்டில் துவங்கிய ஆங்கிலேயர் ஆட்சியில், சாதியம் சற்று தளர்ந்தது. ஆனால், சிறுபான்மையாக இருந்த அவர்களுக்குச் சாதிகளைத் தாண்டிய ஒற்றுமை, அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் என எளிதில், விரைவில் அறிந்து கொண்டனர். அவர்கள் நினைத்திருந்தால், விரும்பியிருந்தால், விரைவில் சாதிகளை ஒழித்திருக்கலாம். தங்கள் நலன்களைக் காத்துக் கொள்ள, சாதிய அமைப்பை அப்படியே தொடரச் செய்தனர். ஆனால், கல்வி பரவலாக்கப்பட்டது. அது, ஒரு சிலருக்கு விழிப்பைத் தந்தது. சமூக நீதிக்கான போராட்டம் தொடங்கியது. சாதிய வாழ்வில், கூனிக் குறுகிக் குமைந்த உடல்கள், நிமிரத் தொடங்கின. பிறப்பால் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகளை மறுக்கத் தொடங்கினர். கல்வியாலும், செல்வத்தாலும், சமூக மதிப்பு உயர்வதையும் கண்டனர். மக்கள் தொகையில் பாதியான பெண்களும், கல்வி கற்கத் துவங்கினர். சமூக உழைப்பில் பெரும் பங்காற்றத் தொடங்கினர். பெண்கள் உளவியல் அடிப்படையில் விடுதலை அடைந்தனர்.

      இந்தியா விடுதலை அடைந்த பிறகும், சாதியை ஒழிப்பதற்கான சட்டங்கள் தேசிய அளவில் இயற்றப்படவில்லை. தமிழ்நாட்டில், பெரியாரின் சமூக மற்றும் சுயமரியாதை இயக்கத்தின்வழி வந்த, திராவிட முன்னேற்றக் கழகம், சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்பாடுகளை முழுமையாக முன்னெடுத்துச் செல்லவில்லை. சாதிய ஓட்டுகளைச் சார்ந்து வாழும் அரசியல்வாதிகள், சாதியைச் சங்கங்கள் மூலம் வளர்க்கிறார்களே தவிர, அதை ஒழிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கத் தயாராய் இல்லை. சாதிய தலைவர்கள், தங்கள் நலனையும், தங்களுக்கு மிக நெருக்கமானவர்களின் நலன்களையும் முன்னெடுத்துச் செல்லவே, சாதியச் சங்கங்களை பயன்படுத்திக் கொள்கின்றனர். தனித்தனி சாதியச் சங்கங்களாய் இருந்து, தங்களை காத்துக் கொள்ள முடியாது. அரசின் ஆதரவு எச்சங்கத்தினருக்கு இருக்கின்றதோ, அவர்களே வலிமை பெறுகின்றனர். தங்களின் இருப்பையும், தலைமையையும், அதிகாரத்தையும் காத்துக்கொள்வதற்காகப் பிரச்சனை எதுவும் இல்லாத காலத்திலும், எப்படியாவது ஒரு மோதலை உருவாக்கி விடுகின்றனர். ஒரு வார்த்தையேகூட, சாதிய மோதலுக்குக் காரணமாகி விடும்போது, எந்த அற்ப காரணம் கொண்டும், சாதியச் சண்டைகளை உருவாக்கி விடமுடியும். ஒற்றைப் பிரச்சனையே பல பிரச்சனைகளாக மாறவும், சங்கிலித் தொடராக நீளவும் முடியும். சாதிய வன்மம், வெடிகுண்டைப் போல் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கும்.

தீர்வு:
      எந்த ஒரு முரண்பாடுள்ள சமூகத்திலும், ஒற்றை தத்துவம் மட்டுமே நிலவுவதில்லை. ஒரு சமூகத்தின் பல்வேறு இயக்கங்களுக்கும், அதன்  பன்மையான தத்துவங்களே பின்புலக் காரணிகளாய் அமைகின்றன.  அரசின் வலிமை கொண்ட ஆளுமைமிக்க தத்துவத்தின் முன்பு, பிற தத்துவங்கள் தற்காலிகமாக அடங்கி இருக்கும். ஆனால், சமூக முரண்பாடுகள் முற்றும்போது, அடங்கி இருந்த தத்துவங்கள் வலிமை பெற்று, வீறுகொண்டு எழும். தத்துவம் தன்னுடைய முகத்தை நேரடியாகக் காட்டுவதில்லை. அது அருவத்தன்மை கொண்டதால், கற்றவர்கள் மட்டுமே அதைக் கையாள்கின்றனர். தத்துவமே வெளிப்படையான கொள்கைகளாகவும், அவற்றை அடைவதற்கான பருண்மையான செயல்பாடுகளாகவும் மாறுகின்றது.

      தத்துவம் = த் + அத்து + அம். "த்" என்றால் இருத்தல் அல்லது தேகம். உலகின் இருப்பு அல்லது மெய்யும் மனமும் ஒன்றிய மனிதன். "அத்து" என்பது, "அதன்" எனும் பொருண்மையைக் குறிக்கும், ஒரு சொல்லைச் சார்ந்து இணையும், சாரியை. "அம்" என்றால் தன்மை. எனவே, தத்துவம் என்றால், "உலகின் தன்மை" அல்லது "மனிதனின் தன்மை / இயல்பு" எனப் பொருள் கொள்ளும். உலகின் தோற்றம், அமைப்பு, மாற்றம் ஆகியவற்றைப்பற்றியும், மனிதனின் இயற்கையான இயல்பு என்பதுடன், அவன் அடைய வேண்டிய உன்னத இயல்பைப் பற்றியும், இலக்கை பற்றியும், அதை அடைவதற்கு அவன் எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் தத்துவங்கள் விரித்துரைக்கின்றன.

      வெளி, தீ, காற்று, நீர், நிலம் ஆகிய ஐந்து மூலங்களின் கலவைதான், இவ்வுலகம் என தொல்காப்பியம்கூட கூறியுள்ளது. இது, எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முன்மொழிவுதான். இவற்றுள் முதன்மையான மூலம், வெளி. வெளியின்றி, எந்த மூலமும் இருக்கக்கூட முடியாது. வெளி என்பது வெற்றிடமா அல்லது வெளிப்படாத நுண்மைப் பொருளின் இருப்பிடமா என்பதுதான் கேள்வி. இன்றைய அறிவியலின் கூற்றுப்படி, இருண்ட ஆற்றல் அல்லது கண்ணுக்குப் புலப்படாத நுண்ணியப் பொருள்தான், அண்டம் முழுமையும் ஊடுருவி உள்ளது. அதுவே வெளியாக உள்ளது. அந்த வெளிதான், புலனாகும் நுண்ணணுத் துகள்களாய் மாறி, கருகொண்ட பொருட்களாய் மாறி, பல பொருட்கள் கலந்து சிக்கலான கருவைக் கொண்டு நுண்ணுயிராக மாறி, பல நுண்ணுயிர்கள் ஒன்று சேர்ந்து, ஐந்து அறிவுகள் வரை கொண்ட விலங்குகளாய் மாறி, ஐந்து புலன்களால் பெறும் அறிவுகளின் முரண்பாட்டைத் தீர்க்க, கருவாக உருவான, ஆறாவது அறிவெனும் மனமுடைய மனிதராயும், பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. திருவள்ளுவரும், அகரம் எனும் எழுத்தே எல்லா எழுத்துகளுமாகி, சொற்களுமாகி பொருண்மை தருவது போல், வெளியை அகமாகக் கொண்ட இறைவனே, முதல் நுண்ணியப் பொருளாகத் தோன்றி, அண்டத்தில் உள்ள எல்லா பொருட்களாயும் மாறி, உயிர்களாயும் தோன்றி, வாழ்வாகவும் உள்ளான் எனக் கூறுகின்றார், தன் முதல் குறளில்:
            அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
            பகவன் முதற்றே உலகு.

      இறைமையே எல்லாமானதால், இறைமைக்குள்தான், இறைமையாகவே, எல்லாமும், எல்லாரும் இருக்கின்றோம். மனித இனம், அண்ட இயக்கத்தின் ஒரு சிறிய பகுதியே. அண்டம், சூரிய மண்டலம், உலகச்சூழல் ஆகியவற்றைச் சார்ந்தே மனித இனம் தன் இருப்பை கொள்கின்றது. உலகமோ, சூரிய மண்டலமோ அழிந்தால், மனித இனமும் சேர்ந்து அழிய வேண்டியதுதான். உலகம் தானாக அழிந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், மனிதன் தன்னுடைய பேராசையால், ஆத்திரத்தால் அழிக்காமலிருந்தால் சரி. இன்றைய நிலைமை, நாளை நிலையாமை ஆகிவிடலாம். நேற்று இருந்தது, இன்று இருக்கின்றது என்பதால், நாளையும் இருக்கும் என்ற அனுமானத்தில்தான் மனிதன் வாழ்கிறான். இறப்பு என்பது இயல்பு என அறிந்தும், இறவாமையை எண்ணுகிறான். தான், பிற உயிர்களைவிட, விலங்குகளைவிட தனிச்சிறப்புடையவன் எனக் கருதுகிறான். இயற்கையை தனக்கு ஏற்றாற்போல் மாற்றி அமைத்துக் கொள்வதுபோல், இறப்பு எனும் இயல்பையும் தன்னால் மாற்றிவிட முடியும் என முனைகிறான்.

      மனிதன் தன் அறிவாலும், சிந்தனையாலும், நிலைத்த தன்மையுடையது எதுவென தேடுகிறான். அதுவாகத் தான் மாறினால், தானும் நிலைபெற்று, அழிவின்றி, நிரந்தரமாக இருக்கலாம் என நினைக்கிறான். உடலின் இயக்கத்தையும், புலன்களின் உள்ளீட்டையும், மனத்தின் சலனத்தையும், உயிரின் துடிப்பையும் கடந்த, அப்படிப்பட்ட அகத்தேடலில், முழுமையான அசையாமையில், நுண்ணிய பொருண்மையின் இடையறாத பொழிவை, ஊடுருவுதலை, மெய்யுணர்வாய் உணர்ந்தான். அது அவனுக்கு அனந்தமாய் இருந்தது, ஆனந்தமாயும் இருந்தது. அந்த உணர்வையும் இழந்தவன், பொருண்மையும் ஆற்றலும் சலனமற்று, ஒருமையாய் உறைந்த, நிலைபேறு எய்தினான். புற உலகின் துவக்க நிலையும், இத்தகைய நிலைத்த தன்மையே எனத் துணிந்தான். இதை இறவாமை என்றான், அதை இறைமை என்றான். இறவாமையும் இறைமையும் ஒன்றே என்றான். தானும் இறைமை என்றான்.

      இந்தியாவில் தோன்றிய தத்துவ மரபுகள், சித்தரியம், பௌத்தம், சமணம்,  அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலிய அனைத்தும், இதையே ஒப்பீட்டளவில், காலத்திற்கும், கேட்போருக்கும் ஏற்றவாறு, வடிவங்களை மாற்றி மொழிகின்றன. சாரம் ஒன்றே!

      மேற்கத்திய தத்துவ தேடுதலில், ஜெர்மானியர்கள் தலைமை வகித்தனர். குறிப்பாக, பிரடெரிக் ஹெகல், தத்துவப் புலமையில் தலைசிறந்து விளங்கினார். "பிரபஞ்ச இருப்பின் காரணம், மனிதனின் மூலம், இறைவன் தன்னைத் தானே உணர்ந்து கொள்கிறான்" என்று ஹெகல் கூறினார். மனிதன் தன்னை உணர்வதன் மூலமே, இறைமை தன்னை உணரமுடியும் என்றால், முதலில், மனிதன் தன்னை உணர்வதற்கான சூழல்களை உருவாக்க வேண்டும். அவனுக்கு ஓய்வு நேரம் ஒன்று இருந்தால்தான், அதற்கான முயற்சிகளை அவன் எடுக்க முடியும். அவனுடைய அடிப்படையான வாழ்வுத் தேவைகள் நிறைவேறினால்தான், அவன் மனம் ஒன்ற முடியும். அதனால்தான் காரல் மார்க்சும், உழைப்பாளர்களின், தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணியாக வரையறுக்கப் போராடினார். விவசாய உற்பத்தியிலும், தொழில் உற்பத்தியிலும், உழைப்பாளர்கள் உயிர்பிழைக்கக்கூட போதாத அளவே கூலிகள் தரப்பட்டது. விளைச்சலும் இலாபமும் இருந்தும், தங்கள் மூலதனத்தைப் பெருக்குவதிலேயே முதலாளிகள் நாட்டம் கொண்டனர். அதற்காக, தொழிலை இயந்திரமயமாக்கி கூலியைக் குறைத்துக் கொண்டே வந்தனர்.  விற்பனைச் சந்தையைக் கட்டுப்படுத்த முடியாமல், உழைப்பாளர்களின் ஊதியத்தை மட்டுமே மேன்மேலும் சுரண்டினர். இவ்வாறு கிட்டும் பெரும் உபரி மதிப்பை, முதலாளிகள், ஆடம்பர வாழ்க்கை வாழ்வும், தொழிலை மேலும் இயந்திரமயமாக்கி உழைப்பாளர்களை மேன்மேலும் சுரண்டவுமே பயன்படுத்தினர். எனவே, உழைப்புக்கேற்ற ஊதியத்தையும் வேண்டி முன்வைத்துப் போராடினர், உழைப்பாளிகள்.

      நீண்ட நெடிய போராட்டங்கள் மூலம், பல நாடுகளில், எட்டு மணி நேர பணிக்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், கனடா உள்பட, பல நாடுகளில், பணிநேரம் 10 மணிநேரம் முதல் 12 மணிநேரம் வரை நீடிக்கப்படுகின்றது. ஒரு ஆறுதல், ஒன்றரை மடங்கு ஊதியத்தைத் தந்து, ஈடு செய்து விடுகிறார்கள் அல்லது நீண்ட ஓய்வை அளிக்கிறார்கள். இன்றும் பல நாடுகளில், குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் சில நாடுகளில்,   முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் இல்லை. உழைப்பாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான போராட்டம் நீண்டது, தொடர்வது.

      எப்படி இருந்த போதிலும், உழைத்து உயிர்வாழ்வது மட்டுமே மனித இலக்கு அல்ல, தன்னை உணர்வது மட்டுமே மனித வாழ்வல்ல. குடும்ப, சமூக வாழ்வையும், துறவு, ஆன்மீக வாழ்வையும் இணைத்து, ஒரு சமநிலைப்படுத்தப்பட்ட வாழ்வியலைத் தருகிறார், திருவள்ளுவர். வாழ்வையும் வாழலாம், தன்னையும் உணரலாம். இதைவிட ஒரு முழுமையான வாழ்வியல் தத்துவம், உலகில் வேறெதுவும் இல்லை.

      இவ்வாறு, வரலாற்றையும், தத்துவத்தையும் அறிந்து கொள்வதன் மூலம், தமக்கு நேர்ந்த சமூகப்படிநிலை செயற்கையானது என்றும், எவரும் எவரையும்விட உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ பிறப்பில் இல்லையென்றும், பிறப்பின் பயன் வாழவும், தன்னை உணர்தலுமே என்றும் உணரலாம்.

      கல்லாதவரையும், உழைக்காதவரையும் மட்டுமே கீழானவராக உரைக்கின்றார், வள்ளுவர். எனவே, சமூகப் படிநிலையில், கீழானவராக நிறுத்தப்பட்டோர், வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர், கல்வியில் சிறந்து விளங்கி, விவசாயம் மற்றும் தொழில்களில் உழைத்து, செல்வம் பெருக்கி, மனிதப் பண்புகளிலும், குணங்களிலும் சிறந்து, அதிகாரமிக்க பதவிகளில் அமர்ந்து, நேர்மையாக நடந்து, தேவையெனில் இடங்கள் பெயர்ந்து, ஒழுக்கமுள்ள குடும்ப சமூக வாழ்வை வாழ்ந்து, தன்னை உணர முயல வேண்டும். இதுவே, சாதிய கட்டமைப்பு உதிர்வதற்கான சூழல்கள். இதை நோக்கிய செயல்பாடுகளே, சாதியம் ஒழிவதற்கான முன்னெடுப்புகளாக இருக்க வேண்டும்.


-----