Saturday, September 26, 2015

மயிலாடும்பாறைக் கல்வெட்டு

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.


விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூர் வட்டம், பொ. மெய்யூர்

என்னும் சிற்றூரில்  மயிலாடும்பாறை என ஊர் மக்கள் குறிப்பிடும் பாறையில் ஒரு கல்வெட்டைக் கண்டிருக்கிறார் அவ்வூரைச் சேர்ந்த ச.குப்பன் என்பவர். அக்கல்வெட்டின் ஒளிப்படத்தை அனுப்பியிருந்தார்.

அது ஓர் அருமையான கல்வெட்டு. இராசராசனின் தமையன் ஆதித்த கரிகாலன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு. கல்வெட்டில் ஆதித்த கரிகாலன் ”வீரபாண்டியனைத் தலைகொண்ட கோப்பரகேசரி” எனக்குறிப்பிடப்பெறுகிறான்.

ஒளக் கண்டனாகிய சிங்க முத்தரையன் என்பவன் ஊருக்கான ஏரியைப் பராமரிப்பதற்காக அரைக்(காணி) நிலம் வரி நீக்கிக் கொடுத்ததோடு  ஏரியின் மேலைப் பகுதியில் கல்லால் ஆகிய தூம்பும் செய்து கொடுத்துள்ளான்.  ஏரியைப் பராமரிக்க அளிக்கப்படும் நிலக்கொடை

“ஏரிப்பட்டி” என்று குறிப்பிடப்படுகிறது.  ”பட்டி” என்பது நிலத்தைக்குறிக்கும். சில நடுகற்களில் வருகின்ற “உதிரப்பட்டி” என்னும் சொல்லை ஒப்பிடுக. இறந்த வீரனின் குடும்பத்தாருக்கு (இரத்த உறவு உள்ளவர்) நிலம் கொடையாக அளிக்கப்படுவதை “உதிரப்பட்டி” என்பார்கள். கல்வெட்டுப்பாடமும் கல்வெட்டுப்படமும் கீழே தரப்பட்டுள்ளன.



ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டியனைத்தலை
கொண்ட கோப்பரகேசரி ப(ந்)மற்கு யாண்டு
............வது மிலாடுக்குறுக்கைக் கூற்றத்து
..... உடைய ...ஒளகண்டனாகிய சிங்க
....னேன்  இவூர்க்கு நஞ்செயரை
..(ஏ)ரிப்பட்டியாக இறைஇழிச்சி உ(ப)
யஞ்செய்த அட்டிக்குடுத்தேன் சிங்க(மு)
தரையனேந் இத்தர்மம் ரக்‌ஷித்தான் பா
தம் என்றலைமேலன இதிறக்கினான் கெ
ங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்
தார் செய்த பாவமெல்லாங்கொள்வான்
மேலை கற்றூபும் இட்டாருமிவரே


”கற்றூபும்” எனப்பிழையாகப் பொறித்திருக்கிறார்கள். “கற்றூம்பும்” என்பதே சரி. கல்+தூம்பு=கற்றூம்பு.

 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________


சோழர் ஆட்சியில் தென்னிந்தியா: முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு





சோழர் ஆட்சியில் தென்னிந்தியா
முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு



கலை மற்றும் பண்பாட்டு மரபுக்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (Indian National Trust for Arts and Cultural Heritage) சார்பில் கோவை அன்னலட்சுமி ஓட்டல் அரங்கில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் முனைவர் எ.சுப்பராயலு அவர்கள் 11.09.2015 அன்று நிகழ்த்திய சொற்பொழிவின் உரை வடிவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

 ”சோழர் ஆட்சியில் தென்னிந்தியா”  என்னும் நூலின் தலைப்பையே இங்கு பேசுவதற்கும் தந்துள்ளார்கள். இந்தத் தலைப்பு பெரியதொரு தலைப்பு; விரிவாகப் பேசவேண்டியதொன்று. அது இயலாது என்பதால், சோழர் ஆட்சியில் மக்கள் பண்பாடு, கலை, நிருவாகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சோழருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் இங்கே காணவிருக்கிறோம்.

 சங்கச்சோழர்கள்:
 தென்னிந்திய வரலாற்றில்-குறிப்பாகத் தமிழக வரலாற்றில்- சோழர் பங்கு பெரிது. சங்ககாலச் சோழரைப்பற்றி நம் அனைவர்க்கும் நன்கு தெரியும். புகழ்மிக்க கரிகால் வளவனைத் தெரியாதார் இரார். பின்னால் வந்த இடைக்காலச் சோழர்கள், சங்ககாலத்துச் சோழர்களைத் தங்கள் முன்னோர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அதேபோல, சங்ககாலச் சோழரின் வழிவந்தவர்கள் தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்து வடக்கே சென்று இராயலசீமா பகுதியை ஆட்சிசெய்தார்கள் என்றும் அவர்களுடைய நாடு  ரேணாடு என்னும் பெயர்கொண்டது என்றும் வரலாற்றுக் கருத்து உண்டு. ரேணாடு, ரேணாண்டு என்றும் வழங்கியது. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டில் இவர்களது செப்பேடுகளில் முதன் முதலாகச் சங்ககாலக் கரிகாலன் பற்றிய குறிப்பு வருகின்றது. அதில் காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த கரிகாலன் காவிரியின் கரையை உயர்த்தினான் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இச்செப்பேடுகள் தெலுங்கு மொழியில் அமைந்தவை.

 இடைக்காலச்சோழர் – சோழர் கலைப்பாணி:

 சங்ககாலச் சோழர்களை அடுத்து இரண்டாவது சோழர் ஆட்சியைத் தொடங்கியவன் விசயாலயச்சோழன் ஆவான். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 850-870. அவனது ஆட்சியில் தொடங்கிய சோழர் ஆட்சி கி.பி.1250 வரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த வரலாறு. சோழர் ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பண்பாடு, கலை, இலக்கியம், நிருவாகம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள். சோழர் விட்டுச் சென்றது என்ன என்றொரு கேள்வி எழுந்தால், விடை சோழர்களுக்கே உரிய கோயில்கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பதாகும். சோழர்கலைப்பாணி என்பது அவர்களின் அரிய அடையாளம். குறிப்பாக, சோழர்களின் செப்புத்திருமேனிகள் அவர்களது கலைப்பாணியைப் பறைசாற்றும். உலகின் பல நாடுகளுக்கும் அவை சென்றுள்ளன. திருட்டு வழியாகச் சென்றவை மிகுதி.

1992-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் அமெரிக்கச் செல்வரான ராக்கபெல்லர் தம்முடைய சேர்ப்பாகக் (collection)  காட்சியில் வெண்கலத்தால் ஆன புத்தர் படிமம் ஒன்றையும் வைத்திருந்தார். இப்படிமம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தது; கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் குறிப்பும் இருந்தது. படிமத்தின் பதுமப்பீடத்தில் தமிழ் எழுத்துகள் காணப்படவே, அதனை ஒளிப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் அது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இராசேந்திரப்பெரும்பள்ளியைச் சேர்ந்த அக்கசாலைப்பெரும்பள்ளி கோயிலுக்கு திருவுத்சவத்துக்காகச் செய்த அக்கசாலை ஆழ்வார் என்னும் பெயரமைந்த திருமேனி என்றும் தெரிய வந்தது.  தொல்லியல் ஆவணங்களை ( சிலைகள், செப்பேடுகள் போன்றவை ) நம்முடைய அருங்காட்சியகங்களை விட வெளி நாடுகளில் நல்லமுறையில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டில் நம் அரசும், அருங்காட்சியகங்களும் தொல்லியல் ஆவணங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு குறைவு.

 முதலாம் இராசேந்திரனின் கரந்தைச்செப்பேட்டை (இருபத்திரண்டு ஏடுகளைக்கொண்டது) தமிழ் நாட்டு அருங்காட்சியகத்தில் கிடங்கில் குப்பையோடு குப்பையாகப் போட்டுவைத்திருக்கிறாகள். பழம்பொருளுக்கும் நல்லபல ஆவணங்களுக்கும் நாம் கொடுக்கும் மதிப்பு இதுதான். லெய்டன் செப்பேடு நன்கு பாதுகாக்கப்பட்டுவருகிறது. காரணம், அது டச்சுக்காரர்கள் மூலம் லெய்டன் சென்றது. லெய்டன் பல்கலை நூலகத்தில் அது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதைப்பார்வையிட விருப்பம் தெரிவித்தபோது, தேர் போன்ற ஒரு வண்டியில் பட்டுத்துணியின் மீது அழகாக வைத்துக் கொண்டுவந்து காண்பித்தனர். இந்த நிலை, இந்திய அருங்காட்சியகங்களுக்கு இல்லாமல் போனது. அவற்றுக்குப் போதிய அரசுப்பண உதவி மற்றும் அரசு ஊழியர் கிடைப்பதில்லை.

 சோழர் கல்வெட்டுகள்:
 இந்தியாவில் ஏறத்தாழ 60,000 கல்வெட்டுகள்  படியெடுக்கப்பட்டு தொல்லியல் அலுவலகங்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.. அவற்றில் பாதி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ளன. இவற்றில் பாதி தமிழகத்தில் உள்ளன. இவற்றில் பாதி (15000 கல்வெட்டுகள்) சோழருடையவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அளவில் சோழருடைய கல்வெட்டுகளே மிகுதி. அடுத்து எண்ணிக்கையில் இருப்பவை விஜயநகர அரசர் கல்வெட்டுகளாகும். அவை மூன்று மொழிகளில் அமைந்துள்ளன.

 சோழர் கல்வெட்டுகளைப் பல கோணங்களில் ஆராயலாம். முதலில் அவற்றை ஆராய்ந்தவர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களே. 1940-இல் “The Cholas” என்னும் ஆய்வு நூலை எழுதினார். அப்போதிருந்த ஆய்வு முறை, தற்போதுள்ள ஆய்வு முறைகளினின்றும் வேறானது. அவர், ”குடிவழி வரலாறு” என்னும் Dynastic History  முறையை நன்றாகச் செய்திருக்கிறார். தற்போது சமூகப்பொருளாதார வரலாற்று முறையில் (Socio Economic History – Statistical Methodology) ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முடிவுகளும் ஒரு பொதுப்படையான நிலையில் (Generalisations) இருப்பன. ஆராய்ச்சி வளர்ந்துகொண்டே உள்ளது.

 கல்வெட்டுகள், பெரும்பாலும் கோயில் சுவர்களில் உள்ளவை, கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை பற்றியவையே. எல்லாவகைச் சமூகத்தாரும் கொடை அளித்துள்ளார்கள் என்பதால் கோடாமை (bias) இன்றி சமூகப்பொருளாதார வரலாறு அறியப்படாது. கொடைகள், தொடக்கத்தில் பொருளாதாரம் சார்ந்து பணம், தங்கம், கால் நடைகள் ஆகிய வடிவங்களிலேயே கொடுக்கப்பட்டன. போகப்போக நிலத்தை அல்லது நிலவருவாயைக் கொடுப்பது நடைமுறைக்கு வந்தது. பின்னர், நிலம் முழு உரிமையாகக் கொடுக்கப்பட்டது. இதைத் திருநாமக்காணி என்பர். கோயில் இறைவர்தாம் நில உடைமையாளர். கோயில் “டிரஸ்டி”கள்  இவ்வகைக் கொடைகளை நிருவாகம் செய்தனர். நிலங்களைப்பற்றி நிறையச் செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. நிலத்தின் வகை, விளை திறன் போன்ற ஊர்ப்புறப் பொருளாதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. நிலங்கள் இருக்கும் ஊர்கள் ஆராயப்பட்டதில், நிலவியல் அடிப்படையில் ஊர்கள் அவற்றின் இருக்கைகள் சேர்ந்தது நாடு என அழைக்கப்பட்டதை அறிகிறோம். கி.பி. 6 முதல் கி.பி. 10 நூற்றாண்டுவரை ஊர் மற்றும் நாடு என்னும் பிரிவுகள் இருந்துள்ளன.

 இராசராசனின் நிலச்சீர்திருத்தங்கள் – நில அளவீடு:
 முதலாம் இராசராசன் இந்த நிலப்பிரிவுகளில் மாற்றத்தை எற்படுத்துகிறான். சில நாடுகளை இணைத்து வளநாடு எனப்பிரிக்கிறான். அதுவரையில், நாடு என்னும் பிரிவிலிருந்த நாட்டு நிலக்கிழார்கள் சேர்ந்த அமைப்பான நாட்டார் என்போரது தன்னாதிக்கம் அல்லது தன்னாட்சி என்பது மேலோங்கியிருந்த நிலை மாறியது. அவர்கள் அரசுக்கு வரி செலுத்தினாலும் அவர்களுக்கென்று உரிமைகள் இருந்தன. வளநாடு உருவானதும் அவர்களது தனி உரிமைகள் குறைந்தன. வளநாட்டில், நீர் வாய்க்கால்களின் இருபுற நிலங்கள் கூறாக்கப்பட்டு இரு புறமும் இரு வளநாடுகள் ஆக்கப்பட்டன. இராசராசனின் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலில் நிலங்கள் அளக்கப்பட்டன. இது நிகழ்ந்தது அவனது 16-ஆம் ஆட்சியாண்டில்; அதாவது கி.பி. 1001-இல். அப்போது சில மாற்றங்களைச் செய்கிறான். சோழ நாட்டின் மையப்பகுதியான காவிரி “டெல்டா”  பகுதியில் நிறைய ஊர்களும், பிரமதேயங்களும் உருவாக்கப்பட்டன. பிரமதேயங்கள் என்பவை பிராமண ஊர்களாகும். காவிரி “டெல்டா”வில் 1300 ஊர்கள் இருந்தன; 70 நாடுகள் இருந்தன. 250 ஊர்களில் பிராமணக்குடியிருப்புகள் இருந்தன. எல்லா ஊர்களிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன.

இந்த ஊர்களில் நிலங்கள் அளக்கப்பட்டன. அளவையில் (Survey) , ஊர்களில் இருந்த மொத்த நிலங்களும் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் உரிமையாக இருந்தது என்பது கணிக்கப்பட்டது. ஊர் நத்தமும் கணக்கிடப்பட்டது. விளைச்சலை அடிப்படையாக வைத்து ஒரு பூ நிலம், இரு பூ நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. நில அளவையில் வேலி, மா, காணி, மாகாணி, முந்திரி என்பவை முக்கியமானவை. ஒரு வேலி நிலம் இன்றைய அளவீட்டில் 6.6 ஏக்கர் அல்லது 2.25 ஹெக்டேர் பரப்புடையதாகலாம்.

 நிலங்கள் தரம் வாரியாக நிர்ணயம் (Standardisation) செய்யப்பட்டன. மொத்தம் பதினாறு தரங்கள் இருந்தன. நிலங்களின் தரத்தை மாற்றும்போது “மடக்கு” என்று குறித்தார்கள். ஒரு தரத்து நிலத்துக்கு வரியாக வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல் என வரையறை செய்யப்படுகிறது. தோராயமாக ஓர் ஊர் என்பது 40 வேலிகள் கொண்டதாகவும் 3000 கலம் நெல் விளைச்சலைக் கொண்டதாகவும் கொள்ளலாம். இந்த வளமிக்க காவிரி டெல்டா நிலப்பகுதிதான் சோழர்களின் பெருமைக்கும் அவர்களின் படையெடுப்புகளுக்கும் பெருந்துணையாக நின்றது. இப்பகுதியின் 1000 ஊர்களிலிருந்து 87000 மெட்ரிக் டன் நெல் அரசனுக்கு வரியாகச் சென்றது எனக்கொள்ளலாம். நெல் பணமாக மாற்றப்பட்டும் அரசனின் கருவூலம் சென்றது. கி.பி. 1000 முதல் கி.பி. 1100 வரையிலான காலம் சோழரின் உயர்வான காலம். இக்காலகட்டத்தில், ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி பெரியது. இராசராசன் காலத்தில் வென்ற பகுதிகளை நேரடி ஆட்சிக்குக் கொணர்தல் பெரிய பணி. இப்பணியால் மண்டலங்கள் உண்டாயின. குறுநில அரசுகளின் நிலப்பகுதிகள் கையகப்படுத்தப்பெற்று மண்டலங்களாக மாற்றப்பட்டன.

 மண்டலங்களின் பெயரில் சோழ மண்டலம் என்ற பின்னொட்டு இணைந்தது. தொண்டை நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம் ஆனது. ஈழம் (ஈழத்தின் வடபகுதி), ஈழமான மும்முடிச்சோழமண்டலம் என்றாயிற்று. வேங்கிச் சாளுக்கியர் நாடு (ஆந்திரப்பகுதி), உத்தமச்சோழமண்டலம் ஆனது. ஆனால், பாண்டிய நாடு மட்டும் சோழமண்டலம் என்னும் பின்னொட்டைப் பெறவில்லை. அது, இராஜராஜப் பாண்டிநாடு என்று அழைக்கப்பட்டது. சோழமண்டலம் என்னும் பெயரே வெளியுலகத்தினருக்கு அறிமுகமாயிற்று. எனவே, போர்த்துகீசியர், இத்தாலியர் ஆகியோர் ”கோரமண்டல்” என்று குறிப்பிடலாயினர். சோழமண்டலம் என்னும் பெயரே “ச்சோரமண்டல்” என்றும் பின்னர் “கோரமண்டல்” என்றும் திரிந்தது. போர் எனில், கூடவே அழிவும் அங்குண்டு. சோழர்களின் போர்களாலும் நிறைய அழிவுகள் ஏற்பட்டன. எனவே, நிலப்பகுதிகள் மறு சீரமைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் உட்படுத்தப்பட்டன. இந்திய விடுதலைக்குப்பின் வல்லப பாய் படேல் சமஸ்தானங்களை இணைத்தது போன்றதொரு பணி.

 கடாரப்படையெடுப்பு:
 தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் நீண்ட காலமாகத் தொடர்பு இருந்துவந்துள்ளது. பர்மா, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சுமத்திரா (இந்தோனேசியா), பிலிப்பைன்ஸ் ஆகிய இந்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் இப்பகுதியுடன் தொடர்பு இருந்தது. ஸ்வர்ணபூமி என்னும் இப்பகுதிக்கு வங்காளம், குஜராத், தமிழகம் ஆகிய இடங்களிலிருந்து குடி பெயர்ந்திருக்கின்றனர். ஜாவா என்னும் கடாரப்பகுதி காழகம் என்று குறிப்பிடப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த புத்த யாத்திரிகர்கள் - கடல் வழியாக வந்தவர்கள் – நிறையக்குறிப்புகள் இட்டுச்சென்றிருக்கிறார்கள். பல குறிப்புகள் பழைய பிராகிருத எழுத்துகளில் உள்ளன. தாய்லாந்தில் ஒரே ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. தமிழி அல்லது பிராமி எழுத்தில் அமைந்த இக்கல்வெட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. “பெரும் பதன் கல்” என்னும் பொறிப்பு அதில் உள்ளது. பொன்னை உறைத்துப்பார்க்கும் உறைகல்லாக அது இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. “பதன்” என்பது “பத்தன்” என்பதைக்குறிக்கலாம். “பத்தன்” என்பது பொற்கொல்லனைக் குறிப்பதாகும். ”தமராக்” என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு கோயில் அருகில் குளம் வெட்டியது பற்றிய ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், மணிக்கிராமத்தார் என்ற வணிகக்குழு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. சுமத்திராவின் மேற்குக்கரையில் இருக்கும் பாரூஸ் துறைமுக நகரில் சில கோயில்கள் உள்ளன. அங்குள்ள கல்வெட்டில் “வாரோசான தேசிப்பட்டணம்” என்னும் குறிப்புள்ளது. கற்பூரம் போன்ற வாசனைப்பொருள்கள் தமிழகத்திலிருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளன. ஜாகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள  தமிழ்க்கல்வெட்டு, நானாதேசிகள் என்ற வணிகர்கள் அங்கு தங்கியிருந்தமை பற்றிக் கூறுகிறது.

 பர்மாவில் உள்ள 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு  ஒன்று மலைமண்டலத்து வணிகரின் கொடையைப்பற்றிக் கூறுகிறது. மலைமண்டலம் என்பது கேரளப்பகுதியைக் குறிக்கும். நானாதேசிகள் என்னும் வணிகக்குழுவினர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசிவந்துள்ளனர். ஆனால், கல்வெட்டுகளைத் தமிழ் மொழியிலேயே பொறித்துள்ளனர். ஜாவாவில் உள்ள ஒரு கல்வெட்டில் ஜாவா, தமிழ் ஆகிய இரு மொழிகளும் காணப்படுகின்றன. அக்கல்வெட்டில், தென்னிந்திய வணிகர் பற்றிய செய்தியும் அஞ்சுவண்ணத்தார் எழுவர் பெயரும் காணப்படுகின்றன.

 கி.பி. 1005-இல் ஸ்ரீவிஜயத்து அரசன் சூளாமணிவர்மன் தமிழகதின் நாகப்பட்டினத்தில் புத்தவிகாரை ஒன்றைக்கட்டினான். ஸ்ரீவிஜயம் என்பது சுமத்திரா, மலேசியா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். லெய்டன் செப்பேடு என்னும் ஆனைமங்கலச்செப்பேட்டில் இச்செய்தி உள்ளது. இராசராசன் இந்தப் புத்தவிகாரைக்கு ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாகக் கொடை அளித்துள்ளான். செப்பேட்டில், ஸ்ரீவிஜய அரசன், கிடாரத்தரையன் சூளாமணி பந்மன் என்று குறிப்பிடப்பெறுகிறான். புத்த விகாரை, சூளாமணி பந்ம விஹாரத்துப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இராசேந்திரன் இந்தக்கொடை பற்றிய செப்பேட்டை முழுமையாக்கி கி.பி. 1014-இல் தந்துள்ளான். கி.பி. 1021 வரை சோழருக்கும் ஸ்ரீவிஜயத்துக்கும் இடையில் நட்பு நிலவியது.

கி.பி. 1025-இல் இராசேந்திரன் தென்கிழக்காசிய நாடுகளின்மேல் படையெடுப்பு நிகழ்த்தியது எதற்காக என்பதும் அப்படையெடுப்பின் விளைவுகள் யாவை என்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கவை. மரக்கலங்களைக்கொண்டு கடல் வழியே  தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வணிகம்  செய்த வணிகர்களுக்கும் மலாய் கடலோடி மக்களுக்கும் (Maritime people) எதோவொருவகை உரசல் அல்லது பூசல் ஏற்பட்டுள்ளது எனத்தெரிகிறது. இந்தச் சிக்கலால் இராசேந்திரன் படையெடுப்பு நிகழ்த்தியிருக்கிறான். ஆனால், இது பற்றி அங்கு கல்வெட்டுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல் இராசேந்திரனின் தம்பியான வீரராசேந்திரன் காலத்திலும் தொடர்ந்திருக்கக்கூடும்; வீரராசேந்திரன் காலத்திலும் இப்படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. மலாய் மொழியில் கப்பல், வங்கம் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயம், கடாரம் எனவும், அஜே என்னும் பகுதி இலாமுரி தேசம் எனவும், நிகோபார் தீவுகள் நக்கவாரம் எனவும் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், ஸ்ரீவிஜயம் 1000 கி.மீ. தொலைவும், நிகோபார் 1500 கி.மீ. தொலைவும், அஜே 300 கி.மீ. தொலைவும் கொண்டவை. மற்ற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 6000 கி.மீ. தொலைவு படையெடுப்பின்போது கடல்வழிப்பயணம் நிகழ்ந்துள்ளது.

எந்தவகைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன, கப்பல்கள் எங்கு கட்டப்பட்டன என்பது போன்ற செய்திகளுக்குப் போதுமான சான்றாதாரங்கள் இல்லை. ஒரு சில குறிப்புகளே கிடைக்கின்றன. மரக்கலம், தோணி ஆகியவை பற்றிய குறிப்புகள் கிருஷ்ணபட்டினத் துறைமுகத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. பாரூஸ் கல்வெட்டில், மரக்கலநாயன் என்னும் குறிப்புள்ளது. மரக்கலங்களை இயக்கிய கப்பல் தலைவனுக்கு இப்பெயர் வழங்கியது எனலாம். மரக்கலநாயன் என்னும் இச்சொல் பின்னர் மரக்கலராயர் எனவும், மரைக்காயர் எனவும் திரிந்தன. மங்களூரிலிருந்து தொடங்கி, கேரளக் கடற்கரையில் பல இடங்களில் படகு கட்டுமிடங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் மன்னார் பகுதியில் படகு கட்டுமிடங்கள் இருப்பதாகத்தெரியவில்லை. கோயில்களில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளை எழுதிவைத்தவர்கள், இராசேந்திரனின் படையெடுப்பு பற்றியோ மரக்கலங்கள் மூலம் சென்ற கடல்வழிப் பயணத்தைப்பற்றியோ எழுதவில்லை என்பது வியப்பானது. ஆனால், Manuscripts எனப்படும் ஓலை ஆவணங்களில் இது பற்றித் தகவல் கிடைக்ககூடும். ஓலை ஆவணங்கள் முந்நூறு, நானூறு ஆண்டுகள் நிலைத்து நிற்பவை. நிறையத் தகவல்கள் கொண்டவை. இவை ஆராயப்படவேண்டும். ஆனால், ஓலைச்சுவடிகள் இங்கே நன்கு பாதுகாக்கப்படுவதில்லை. அழிவை எதிர்கொண்டிருப்பவற்றுள் (Endangered species) ஓலைச்சுவடிகளும் அடங்கும்.

இங்கிலாந்தில், ஓலைச்சுவடிகள் போன்றவை ஒளிப்பட ஆவணங்களாக (Photo documentation) மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. சீன, ஜப்பான் நாடுகளில் கி.பி. 500-இலிருந்து கிடைக்கும் ஓலை ஆவணங்களைப் பாதுகாக்கின்றார்கள். தமிழகத்தில், கி.பி. 1700 முதல் கி.பி. 1900 வரையிலான இருநூறு ஆண்டுகாலகட்டத்தைச் சேர்ந்த மோடி ஆவணங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் படிக்க ஆள்கள் இல்லை. எனவே, ஓலை ஆவணங்களுக்கு முதன்மை அளித்து ஆவன செய்யவேண்டிய பணி உள்ளது.

 







சொற்பொழிவுக்கருத்துகளைக் கட்டுரை ஆக்கம் செய்தவர்:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.




 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________

Saturday, September 19, 2015

கொங்கவிடங்கீசுவரர் கோவில்

--து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.

உடுமலை அருகே ஒரு சிற்றூர். அங்கே ஒரு சிவன் கோவில். ஏறத்தாழ இன்றைக்கு எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்பது உறுதி. ஏனெனில், கி.பி. 1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் காணப்படுகிறது. கொங்கு நாட்டை ஆண்ட கொங்குச் சோழ அரசன் வீரராசேந்திரன், கொங்கு நாட்டில் வடகொங்கு, தென்கொங்கு ஆகிய இரு பகுதிகளையும் ஆண்ட அரசன் ஆவான். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரை என வரலாற்று அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இவன் காலத்துக் கி.பி.1221-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவிலில் இருப்பதனால், இக்கோவில் எண்ணூறு ஆண்டுப்பழமையானது என்பதை உறுதி செய்ய இயலுகிறது.



கொங்கவிடங்கீசுவரர் கோவில்:

முற்றிலும் கற்களால் ஆன கற்றளியாகக் கட்டப்பட்ட இக்கோவில், சோழர் காலத்துப்பாணியில் அமைந்த கருவறை, அர்த்தமண்டபம் ஆகிய இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. கருவறையில் குடி கொண்டுள்ள இறைவர் லிங்கத்திருமேனியர். இந்த லிங்கத்திருமேனிக்கு ஒரு சிறப்புண்டு. தானாய்த் தோன்றிய இறைத்திருமேனி. உளி கொண்டு செதுக்கப்படாத லிங்கத்திருமேனியை “விடங்கர்”  என அழைப்பது மரபு. அந்த மரபில் இவ் இறைவரும் ” விடங்கீசுவரர் “ என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கொங்கு நாட்டில் அமையப்பெற்ற சிவன் கோவில்களில் “ கொங்கு “ என்னும்  நிலத்தின் பெயரைத் தாங்கியுள்ள கோவிலைக்காண்பது அரிது. இந்தக் கோவில் அத்தகைய அருமையை உடையது. இறைவர், இந்த அருமையைத் தாங்கி, “ கொங்கவிடங்கீசுவரர் “  என்று அழைக்கப்படுகிறார்.


பழங்காலத்தில் கோவில்களின் நிலை:

பழங்காலத்தில் கோவில்களின் நிலை என்ன, சிறப்பும் பயன்பாடும் என்ன என்பதைச் சற்றுக் காண்போம். கோவில்கள் அரசர்களால் கட்டுவிக்கப்பட்டன. அரசர்கள், மக்களிடமிருந்து பெற்ற வரி வருமானங்களையும், போர் மூலம் கவர்ந்த பொன்னையும் பொருளையும் கோவில்களைப் பேணுவதில் செலவிட்டனர். அரசர்கள், கோவிலுக்கு நிலங்களைத் தானமாக அளித்ததோடல்லாமல் அந்நிலங்களின் வரிகளை நீக்கி னர். இவை இறையிலி நிலங்கள் எனப்பட்டன. அரசியரும் தனிப்பட்ட முறையில் கோவில்கள் எழுப்பினர்; கொடைகள் வழங்கினர்; திருப்பணிகள் செய்தனர்.

குடிமக்களும் கோவில்களுக்குக் கொடைகள் பல அளித்தனர்.  குடிமக்களில் பலவகைப் பிரிவினரும் இதில் அடங்குவர். வேளாண்குடிகள், சிறு வியாபாரிகள், பெரு வணிகர்கள், தேவரடியார்கள் போன்ற பலரும் கோவில் பணிகளுக்காகக் கொடைகள் வழங்கியுள்ளனர். அரசு அதிகாரிகளும் பெருமளவில் தானங்கள் வழங்கியுள்ளனர். கோவில்களில் நாள்தோறும் நடைபெறும் வழிபாட்டுக்காகவும், சந்தியாதீபம் எனப்படும் விளக்கெரிக்கவும் மற்றும் பல்வேறு பணிகளுக்காகவும் இக்கொடைகள் பயன்பட்டன.

வழக்கமாக ஒவ்வொரு கோவிலும் கருவறை, அர்த்தமண்டபம் என்னும் நடுமண்டபம், முன்மண்டபம் இவற்றைக் கொண்டிருக்கும். கோவிலைச் சுற்றிலும் ஒரு திருச்சுற்றும் (பிராகாரம்) மதிலும் இருக்கும். பெரிய கோவில்களில் ஒன்றுக்கு மேற்பட்ட திருச்சுற்றுகள் அமைவதுண்டு. இத்திருச்சுற்றுகளில் அரசர், அரசரைச் சார்ந்தோர் முதலியோர் எடுப்பித்த சிறிய கோவில்கள் இடம்பெறும். பெரிய கோவில்களை நிருவாகம் செய்யத் தனிக்குழுவினர் இருந்தனர். ஸ்ரீ காரியம் செய்வார், கோவில் தானத்தார், ஊர்ச்சபையினர், மாகேசுவரர் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். வழிபாட்டுப்பொறுப்பில் சிவப்பிராமணர்களும் கோவிலின் பிற பணிகளுக்குப் பணியாளர்களும் இருந்தனர். கோவிலுக்கென்று தனியே கருவூலம் இருந்தது. இது ஸ்ரீ பண்டாரம் என்று அழைக்கப்பட்டது. கோவிலின் வரவு செலவு கணக்குகள் கோவில் கணக்கர் பொறுப்பில் இருந்தன.

கோவிலின் பல்வேறு பணிகளுக்குப் பணியாளர்கள் இருந்தனர் என்று மேலே குறிப்பிட்டோம். அப்பணியாளர்கள் திருஅலகிடுதல், திருமெழுக்கிடுதல், பூத்தொடுத்தல், மடைப்பள்ளிப்பணி ஆகிய பணிகளைச் செய்தனர். அலகிடுதல் என்பது துடைப்பம் கொண்டு கோவிலைத் தூய்மை செய்தலைக்குறிக்கும். மெழுகிடுதல் என்பது சாணத்தால் தரையை மெழுகித் தூய்மை செய்தலைக்குறிக்கும். இவ்வகைப்பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் ஆண்கள், பெண்கள் ஆகிய இருபாலரும் பணியமர்த்தப்பட்டிருப்பினும், குறிப்பிட்ட பணிகளுக்குத் தேவரடியார் என்று அழைக்கப்பட்ட பெண்கள் இருந்தனர். அலகிடுதல், மெழுக்கிடுதல், பூத்தொடுத்தல் ஆகியவை தவிர தேவாரம், திருவாசகம் ஓதுதல்(திருப்பதியம் பாடுதல்), நடனம் ஆடுதல், அம்மனை எழுந்தருளுவிக்கும்போது அம்மனுக்குக் கவரி வீசுதல் ஆகியவற்றை இந்தத் தேவரடியார்கள் செய்தனர். இவர்கள் பதியிலார், தளிச்சேரிப்பெண்டுகள் என்று அழைக்கப்பட்டனர். ஏறக்குறைய எல்லாக்கோயில்களிலுமே தேவரடியார்கள் தொண்டு செய்து வந்தனர் எனத் தெரிகின்றது.

கோயில்களில் நாள்தோறும் ஆறு சந்திப் பூசை வழிபாடு நிகழ்ந்தது.  விழாக்கள் பல கொண்டாடப்பட்டன. ஒவ்வொரு மாதத்திலும் மாத விழாக்களும், ஆண்டுக்கொருமுறை பெருவிழாவும் (பிரம்மோத்சவம்) நடைபெற்றன. சிவராத்திரி, சங்கராந்தி, உத்தராயணம், மற்றும் கிரகணங்கள் நிகழ்ந்த நாள்கள் ஆகிய சிறப்பு நாள்களிலும் விழாக்கள் எடுக்கப்பட்டன. மன்னர்கள் பிறந்த நட்சத்திரங்களிலும் விழா எடுக்கப்பட்டது. விழாக்களின்போது தேவரடியார்கள்  சாந்திக்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக்கூத்து ஆகிய கூத்துகள் நிகழ்த்தினர். (கூத்து நிகழ்த்தும் ஆண்களும் இருந்தனர்.) சமய நூல்கள் கோயில்களில் படிக்கப்பட்டன. அரசர்களும் கோயில் விழாக்களை நேரில் கண்டு களித்ததாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.

கோயில்கள் இறைவழிபாட்டு இடங்களாக மட்டுமன்றி சமுதாயப்பணிகள் நடைபெற்ற இடங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் விளங்கின. இன்னலுற்ற மக்களுக்குப் புகலிடங்களாகவும் பயன்பட்டன. வறட்சியிலும், பஞ்சத்திலும் குடிமக்களுக்குக் கோயில்களிடமிருந்து பொருளுதவி கிடைத்தது. பஞ்சம் தீர்ந்தபிறகு கடன் திருப்பித் தரப்பட்டது. கோயில்களில் நந்தா விளக்கு, சந்தியா தீபம் ஆகிய நிவந்தங்களுக்காக விடப்படும் ஆடுகள் (ஒவ்வொரு விளக்குக்கும் தொண்ணூறு ஆடுகள் என்ற கணக்கில்) இடையர்களுக்குத் தரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரங்களாக அமைந்தன. விளக்குகளுக்கான எண்ணையைக் கோயிலுக்கு வழங்கவேண்டியது அவர்கள் பொறுப்பு.

மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றண்டிலேயே காணப்படுகிறது. மக்களில் ஒரு சிலர், கோயில் பணிகளுக்காகத் தம்மையே கோயிலுக்கு அடிமையாக விற்றுக்கொண்டமையும் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படுகிறது.

கொங்கவிடங்கீசுவரர் கோவில் கல்வெட்டுகள்:

கோயில்களைப்பற்றிய சிறப்புகளையும் செயல்பாடுகளையும் மேலே விளக்கமாக உரைத்ததன் நோக்கம் இச்செயல்பாடுகளில் ஒரு சிலவேனும்  கொங்கவிடங்கீசுவரர் கோயிலிலும் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நம் எண்ணத்தில் பதியவேண்டும் என்பதுதான். ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளாக எத்துணை ஆயிரம் மக்கள் இக்கோயிலினுள்ளே நடமாடி இறைவனை வழிபட்டிருப்பர். வழிபாடும் விழாவுமாக எத்துணை உயிர்ப்புடன் கோயில் விளங்கியிருக்கும். ஆனால், அந்த உயிர்ப்பு காணாமல் ஒழிந்து போய் கோயில் தற்போது சிதைந்து அதன் சீர்மை இழந்து, கருவறையும் அர்த்தமண்டபமும் மட்டிலுமே இடிந்துவிட்ட கட்டுமானங்களாய் எஞ்சியிருப்பதைக்காண்போர் நெஞ்சம்  கலக்கமுறும். திருச்சுற்று இல்லை; சுற்று மதில் இல்லை; திருச்சுற்றில் எழுந்தருளப்பெற்ற சிறு கோவில்கள் (சன்னதிகள்) இல்லை. வெற்றுப் பாழும் இடிந்த கூரையும் ஆங்காங்கே எறிந்து கிடக்கும் கட்டுமானக் கற்களும் அழிவுக் கோலம் காட்டுகின்றன. கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் என்பார் கூறுவதை நோக்குங்கள்:

“நான் ஒரு பழமைப்பித்தன். அருமையான ஆலயங்களைக் கண்டால் ஆனந்தக் கண்ணீர் விடுவேன். இடிந்த கோயில்களைக் கண்டால் நானும் இடிந்து போய்விடுவேன். பாழடைந்து இடிந்து கிடக்கும் ஆலயங்களுக்குச் சென்று அப்பிரகாரங்களில் சிறிதாவது படுத்துப்புரளுவதில் ஒரு ஆனந்தம்.”

இத்தகைய அழிவின் விளிம்பிலும் கோயிலின் கருவறைச் சுவர்கள் மற்றும் அர்த்தமண்டபச் சுவர்கள் ஆகியன கல்வெட்டுகளின் கருவூலங்களாய்த் திகழ்கின்றன. தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமய வரலாற்றையும், சமுதாய வரலாற்றையும்  அறிய உதவும் மூலப்பொருள்களுள் ஒன்றாய் விளங்குவன கல்வெட்டுகளே. அத்தகு கல்வெட்டுகள் பத்து இங்குள்ளன. முதல் கல்வெட்டு, ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து அஞ்சாதகண்ட பிரமாராயன் என்பவர் இக்கோயிலில் சுப்பிரமணியப் பிள்ளையாரை எழுந்தருளிவித்தார் என்னும் செய்தியைக் கூறுகிறது. பிரமாராயன் (பிரமமாராயன் எனவும் கூறப்படுவர்) என்பது அரசு அதிகாரிகளில் மிக உயர்ந்த பதவியைக் குறிக்கும் சொல். படைத்தளபதியாகவும் மந்திரியாகவும் பொறுப்புடையவர். இவர் வடுகக்கொத்து என்னும் படைப்பிரிவில் ஒரு படைத்தளபதியாக இருந்தார் என்று கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் தென்கொங்கு நாட்டில் உடுமலை அருகில் கடத்தூரில் அமைந்துள்ளது; ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது தொண்டை நாடு. முதன்மைச் சோழரின் (தஞ்சைச் சோழரின்) படைத்தளபதி ஒருவர் இக்கோயிலுக்குச் செய்திருக்கிறாரென்றால் கோயிலின் சிறப்பான நிலையை உணரலாம்.



அடுத்த கல்வெட்டு, தாராபுரத்துக் கீரனூர் ஊரைச்சேர்ந்த அரசு அதிகாரிகள் இருவர் கீரனூர் வாகீசுவரமுடையார் சிவன் கோயிலுக்கு நிலம் கொடையாக அளித்ததைக் குறிப்பிடுகிறது. கீரனூர் கோயிலுக்கு அளித்த கொடை கடத்தூர் கோயிலில் காணப்படுவது ஏன் என்னும் கேள்வி எழலாம். கொடையாகக் கொடுத்த நிலம் கடத்தூரில் அமைந்திருந்தது என்பதுதான் செய்தி. கோயிலுக்கு அளித்த நிவந்தங்களை அக்காலத்தே முறையாக ஆவணப்படுத்தியமைக்கு இக்கல்வெட்டும் ஒரு சான்று. கடத்தூர் கொங்கு நாட்டின் ஒரு பிரிவான கரைவழி நாட்டில் அமைந்திருந்தது எனக் கல்வெட்டு கூறுகிறது. மூன்றாம் கல்வெட்டு, கொங்கவிடங்கீசுவரர் கோயிலுக்கு சந்தியா தீபம் எரிப்பதற்காகக் காசு இரண்டு அச்சு ஒருவர் கொடையாக அளித்ததைக் கூறுகிறது. காசு கோயில் பண்டாரத்தில் ஒடுக்கப்பட்டது. அக்காசினைக்கொண்டு காரைத்தொழு என்னும் ஊரில் நிலம் வாங்கப்பட்டு அந்நிலதின் விளைச்சலில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஆண்டு முழுதும் சந்தியா தீபம் எரிக்கப்பட்டது.  கோயிலுக்கென்று தனியே கருவூலம் (பண்டாரம்) இருந்ததைக் கல்வெட்டு மூலம் அறிகிறோம். அடுத்த கல்வெட்டிலும் இதுபோலவே சந்தியா தீபத்துக்காகக் காசு கொடுக்கப்பட்டு நிலம் வாங்கப்பட்ட செய்தி கூறப்படுகிறது. ஐந்தாவது கல்வெட்டு, சோழமாதேவி ஊரில் நிலம் கொடையாகத் தந்து, கொங்கவிடங்கீசுவரர் கோயிலில் அவிநாசிக்கூத்தரையும் நாச்சியாரையும் எழுந்தருளச்செய்துள்ளனர் என்னும் செய்தியைச் சொல்லுகிறது. கூத்தர் என்பது நடராசரையும், நாச்சியார் என்பது அம்மனையும் குறிப்பதாகும். எனவே, கொங்கவிடங்கர் கோயிலில், கோயில் நடைமுறைகளை நாம் மேலே விவரித்ததற்கிணங்க அம்மன் சன்னதி, முருகன் சன்னதி, நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் எழுப்பப்பட்ட செய்தியினை அறிகிறோம்.

அடுத்து ஆறாம் கல்வெட்டு மிகவும் சிறப்புடைய ஒன்று. மக்கள் பலர் தம் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்று இறைவன் முன்பு வேண்டுதல் (பிரார்த்தனை) செய்துகொண்டு காணிக்கை செலுத்திக்கொள்ளும் வழக்கம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்துள்ளதை மேலே குறிப்பிட்டோம். அது போன்ற ஒரு நிகழ்வுக்குச் சான்றாக இக்கல்வெட்டு உள்ளது. கி.பி. 1233-ஆம் ஆண்டுக்குரிய இக்கல்வெட்டு, அரசன் வீரராசேந்திரனின் கிரகதோஷம் நீங்க வேணும் என்று அரசனின் அதிகாரிகளுள் ஒருவனான அணுத்திரப்பல்லவரையன் என்பான் இறைவர் அமுதுபடிக்கு அமுதுபடிப்புறமாகக் கண்ணாடிப்புத்தூரில் நிலம் கொடையாக வழங்கினான் என்று தெரிவிக்கிறது. அதனால் அரசன் வீரராசேந்திரனுக்குக் கிரக தோஷம் பிடித்திருந்தது என்பதும் அக்கால மக்கள் சோதிடத்தையும் வான சாத்திரத்தையும் அறிந்திருந்தார்கள் என்பதும் புலப்படும். அடுத்த கல்வெட்டு, ”கோட்டையில் சேனாபதிகளில் அவிமானராமப் பல்லவரையன்” என்பான் விரதம் முடித்த வினாயகப் பிள்ளையாருக்கு அமுதுபடிக்காக அரசனின் சரக்கில் (கருவூலத்தில்) பொன் முதலாக வைக்கிறான். இப்பொன்னுக்கு அரசன் நிலம் ஒதுக்கி இந்த நிலத்துக்கு வரிவிலக்கும் அளிக்கிறான். இந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் பிள்ளையார் கோயில் வழிபாட்டுக்குச் செலவிடப்படுகிறது. இந்தக் கல்வெட்டிலும் ஒரு சிறப்பான பகுதி உள்ளது. ”கோட்டையில் தெற்கில் அரசின் கீழ் நம் பேரால் விரதமுடித்த வினாயகப்பிள்ளையாற்கு அமுது படிக்கு”  என்று கல்வெட்டுவரி இருப்பதால் இந்தப்பகுதியில் “கோட்டை” ஒன்று அமைந்திருந்தது என்பது அறியப்படுகிறது. தற்பொழுதும்கூட இவ்வூர் மக்கள் ஊரில் ஒரு பகுதியைக் கோட்டை என்று அழைக்கிறார்கள்.

அடுத்துவரும் ஏழாவது கல்வெட்டு சமுதாய வரலாற்றைச் சொல்லும் சிறப்பான கல்வெட்டாகும். தென்கொங்கில் கம்மாளர்களுக்கு அரசன் வழங்கிய சிறப்புரிமைகளை இக்கல்வெட்டு கூறுகிறது. உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களுக்கும் இடையில் சமுதாய வேறுபாடும் பகைமையும்  கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் காலகட்டத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதாக தொல்லியல் வரலாறு கூறுகிறது. கம்மாளர்கள்  சமுதாயச் சூழ்நிலையில் உரிமைக் குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் எனத்தெரியவருகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச் செய்து கொடுக்கும் நிலையில் கம்மாளர் இருந்ததால், கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும் எனலாம். வெள்ளாளர்களுக்கிருந்த உரிமைகள் கம்மாளர்களுக்கு இருந்ததில்லை. அவர்கள் செருப்பணிந்து வெளியே செல்ல முடியாது. தங்கள் வீடுகளுக்குச் சாந்து (காரை) இட்டுக்கொள்ள இயலாது. தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளுக்கு இரட்டைச் சங்கு ஊதுவதற்கில்லை. பேரிகை (drums) என்னும் இசைக்கருவி கொட்டுவிக்க முடியாது. தம் வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ள முடியாது. இவ்வகையான ஏற்றத் தாழ்வு உரிமைக்குறைகளைக் களைய கம்மாளர்களின் முறையீட்டின்மேல் அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் முடிந்தது. அத்தகைய சிறப்புரிமைகளைக் கம்மாளர்க்கு அரசன் வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.

மிகுதியுள்ள இரண்டு கல்வெட்டுகளில் ஒன்று, திருமடை வளாகத்தில் இருக்கும் தபசி சுந்தர நன்னெறி காட்டினான் என்பவர் கொங்கவிடங்கர் கோயிலுக்கு நந்தாவிளக்கு ஒன்றுக்காகப் பதினாறு காசு கொடை அளித்துள்ளான் என்றும், மற்றொன்று, கடத்தூரிலிருந்த மன்றாடிகளில் காவன் சோழன் என்பான் இறைவற்கு மகுடம் சாத்தினான் என்றும் கூறுகின்றன. திருமடை வளாகம் என்பது கோயிலைச் சுற்றியிருக்கும் வசிப்பிடத்தையும், மன்றாடி என்பது கால்நடை வளர்ப்போரையும், தபசி என்பது துறவிகளான சிவனடியார்களையும் குறிப்பன.

இவ்வாறு, அரிய வரலாற்றுச் செய்திகளைத் தம்முள் கொண்டிருக்கும் கல்வெட்டுகள் இன்றும் நல்ல நிலையில் சிதைந்து போகாமல் படிக்கும் அளவுக்கு உள்ளன என்பது பெரிய பேறு. ஆனால், அழிவைத் தொட்டுக் கொண்டிருக்கும் கட்டுமானங்கள் சிதைந்து விழத்தொடங்குமானால் அரிய கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கும் கற்கள் ஒவ்வொன்றாகக் காணாமல் போகும் அச்சமான சூழ்நிலை உள்ளது. மீண்டும் கல்வெட்டறிஞர் குடந்தை சேதுராமன் அவர்கள் கூறுவதை இங்கே தந்துள்ளேன்:

“ நான் ஒரு கல்வெட்டுப் பித்தன். கல்வெட்டுகளைப் படிக்கும்போதெல்லாம் என்னை மறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் அம்மன்னர்கள் வாழ்ந்த காலத்திற்கே சென்றுவிடுவேன். “

கொங்கவிடங்கீசுவரர் கோவிலும் அதன் கல்வெட்டுகளும் நம்மைக் கி.பி. 13-ஆம் நூற்றாண்டுக்கே அழைத்துச் சென்றாலும் கோவில் அதன் உயிர்ப்பு இன்றிப் பாழ்பட்டு நிற்பதைக் காண்கையில் நாமும் இடிந்து போகாமல் கோயில் அதன் பழைய கட்டுமானத்துக்கு மீட்சி பெற என்ன செய்யலாம் என்பதில் எண்ணம், செயல் இரண்டினாலும் முயலவேண்டும். கோயில்களைப்பேணும்  அரசுத்துறை, தொல்லியல் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து ஆவன செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

குறிப்பு : REACH FOUNDATION , சென்னைக்கு (ஆகஸ்டு,2014-இல்) இக்கட்டுரையை அனுப்பிவைத்து, கோயிலுக்குப் புத்துயிர் அளிக்க எதேனும் செய்ய இயலுமா எனக்கேட்டிருக்கிறேன். 


துணை நின்ற நூல்கள் :
◆ கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் – தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
◆ தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர் கே.கே.பிள்ளை.
◆ தமிழக கலைகளும் கல்வெட்டுகளும் – டாக்டர் மா. இராசமாணிக்கனார்.

 ________________________________________________________


து.சுந்தரம்
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.
doraisundaram18@gmail.com
அலை பேசி : 9444939156.doraisundaram18@gmail.com
________________________________________________________