Wednesday, July 27, 2016

இறைவன்

-- இராம.கி



தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - பெயரியலின் 640 ஆம் நூற்பா  ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று புகலும். அதே தொல்காப்பியர் 641 ஆம் நூற்பாவில்,

”பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்”

என்று சொல்லுக்குத் தொடர்பாய்ப் பொருண்மை, சொன்மைப் பின்புலங்களைக் காட்டுவார். காட்டாக, “வந்தார்கள்” - வருதற் பொருண்மை. ”வந்தது” என்ற இறந்த காலக் குறிப்பும், பலர்பாற் குறிப்பும் சொன்மை வகைக்குள் அடங்கும். கள் என்னும் பன்மை “வந்தவர் மதிப்புள்ளவர்” என்றுணர்த்தும். எந்தச் சொல்லோடும் பொருண்மை, சொன்மை ஆகியவற்றை பொருத்தினாற்றான் சொல்லின் முழுப் பொருளும் விளங்கும். சிலபோது வெளிப்படாது போதலும் உண்டு. “போயும் போயும் இவனைக் காளைன்னு சொன்னாங்களே?” என்னும் போது ”தெரிபு நிலை வேறு, குறிப்பு நிலை வேறு.”
 
”தெரிபு வேறு நிலையலும் குறிப்பின் தோன்றலும்
இருபாற் றென்ப பொருண்மை நிலையே”

என்றும் 642 ஆம் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுவார். தமிழின் பன்னூறாண்டுப் புழக்கத்திற் சொல்லின் பொருண்மை  எப்பொழுதும் ஒரே மாதிரி இருந்ததில்லை. அது சங்க காலத்தில் ஒன்றாகவும், சமயகாலத்தில் இன்னொன்றாகவும் இருந்திருக்கிறது. பேரரசுச் சோழர் காலத்திலும், அண்மையிலும், அது இன்னும் மாறியிருக்கிறது.  மாறாதும் இருக்கிறது. மாறிய சொல்லான ”இறைவன்” என்பதை இக்கட்டுரையிற் பார்ப்போம்.

”பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல்தவம் செய்திலீர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே”

என்று திருமந்திரம் பாடிய காரணஞ் சொல்லுவார் திருமூலர் (திருமந்திரம், வரலாறு 63 ஆம் பாடல்). பொதுவாய்த் திருமந்திரத்தில் இறைவன், இறையவன் என்ற சொற்கள் ஏராளமாய் ஆட்சிகொள்ளும். ”இறைவனுக்கு” இற்றைக் காலத்தில் கடவுள் (திருமால், சிவன், நான்முகன், அல்லா இன்னும் வெவ்வேறு பெயர்கள்) என்ற பொருளையே கொள்ளுகிறோம். இன்னொரு பொருளான தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், தமையன், குரு), அகரமுதலிகளில் பதிவாக மட்டுமேயிருக்கிறது. அன்றாடப் புழக்கிலில்லை. அந்தப் பொருளில் தலைவன் என்பதையே இப்பொழுது ஆளுகிறோம்.

ஆழ்ந்து பார்த்தால் கடவுள் என்ற பொருண்மை சங்க கால முடிவிற் தொடங்கி [காண்க: “நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்” - என்னும் சிலப்பதிகாரம் ஊர்காண் காதை 7ஆம் வரி - சிவனைக் குறிக்கும் குறிப்பு. நுதல்விழி நாட்டத்துத் தலைவன் என்றாலும் பொருள் சிவனையே குறிக்கிறது. ], சமய காலத்திற்றான் பரவலாகப் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. சங்க காலத்தில் ”தலைவன்” என்பதே பெரிதும் விரவியிருந்தது. சங்கம் மருவிய காலத்திலும் தலைவனைக் குறித்தது தொடர்ந்திருக்கிறது. காலவோட்டத்தில் தலைவன் பொருளாட்சி நீண்டு, கடவுட் பொருண்மை ஏற்பட்டிருக்கிறது.  [கோயில்/கோவில் என்பதன் பொருண்மையிலும் இதுபோற் குழப்பம் உண்டு - அரசன் வீடா, தெய்வ இருப்பிடமா? இதே போலப் பகவன் (lord) என்ற சொல்லும் தலைவனையே முதலிற் குறித்திருக்கிறது. ”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றேயுலகு” என்ற குறளில் பகவன் என்ற சொல் தெய்வத்தைக் குறிப்பதாய் ஆய்வாளர் சொல்வதில்லை. அதைச் சற்று கீழே பார்ப்போம்.]

சிலம்பில் கடவுட் பொருண்மை கொஞ்சங் கொஞ்சமாய் விரிகிறது.  பார்க்க வழக்குரை காதை 36-40

வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;

இன்னொரு சான்று பார்க்க: அழற்படு காதை 86-87 [வேங்கடசாமி நாட்டார் அழற்படு காதையின் பல அடிகள் இடைச்செருகல் என்று ஐயுறுவார்.]

கிழவன் என்போன் கிளர் ஒளிச் சென்னியின்
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்

மொத்தமாய் எல்லாம் வல்ல பரம்பொருட் பொருண்மை கிட்டத்தட்ட கி.மு.75 க்கு அருகில் இறைவன் என்ற சொல்லிற்கு வந்தது போலும். [சிலம்பின் காலம் கி.மு.75 க்கு அருகில் என்று என் முந்தைய ஆய்வில் உறுதி செய்தேன். பார்க்க: சிலம்பின் காலம் என்ற தொடர்.  சிலம்பிற்கு 25 ஆண்டுகள் கழித்து கி.மு.50 இல்  பெரும்பாலும் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி காலத்தில் பரிபாடல் தொகுக்கப் பட்டிருக்கலாம். பார்க்க: http://valavu.blogspot.com/2010/06/2.html. கலித்தொகையும் சிலம்பையொட்டியோ, சிலம்பிற்குப் பின்னோ தொகுக்கப் பட்டிருக்கலாம்.]

கி.மு.75 -ற்கு முந்தைய சங்கப் பாடல்களில் தலைவன் (lord) என்ற பொருளே பெரிதும் பயின்று வந்திருக்கிறது. இப்பொருள் நீட்சி கடவுள், பகவன் என்ற சொற்களிலும் இருக்கின்றன. கடவுள் என்ற சொல்லும் முதலிற் தலைவனையே குறித்தது. பின்னாற்றான் எல்லாம் வல்ல பரம்பொருளைக் குறித்தது. பகவன்(> பகவான்) என்ற சொல்லும் வடபுலங்களில் பெரிதும் ஆளப்பட்ட சொல்; இதுவும் சமயத் தலைவனையே குறித்தது. ஆங்கிலத்தில் great lord என்று சொல்கிறார்களே, அதுவும் பகவனும் ஒரே பொருள. புத்தரைப் பகவான் என்றே அவரைப் பின்பற்றியோர் அழைப்பர். மகாவீரரும் இப்படி அழைக்கப் பட்டார். இந்தக் காலத்தில் வடபுலத்தில் ஏராளமான சாமியார்களைப் பகவான் என்றே அழைப்பர். தென்புலத்தில் அப்படி அழைப்பது மிகக் குறைவு. எல்லாம் வல்ல பரம்பொருள் மட்டுமே பகவன் என்று தெற்கே நாம் எண்ணிக் கொள்வோம்.  இதே போலப்

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்”

என்ற குறளில் இறைவன் என்ற சொல் ”எல்லாம் வல்ல பரம்பொருளைக் குறித்ததா?” என்றால், ”அல்ல, சமயத் தலைவனைக் (தீர்த்தங்கரரைக்) குறித்தத்து” என்று சொல்ல வேண்டியிருக்கிறது. திருக்குறளை ஆய்ந்தறிந்தோர், அதைச் சமண நூல் என்றே சொல்லுவர். (இது ஆசீவகம், செயினம், புத்தம் என்றவற்றில் ஏதொன்றாகவோ, அல்லது அவற்றின் கலவையாகவோ இருக்கலாம். அந்த உரையாடலுக்குள் நான் போகவில்லை. ஆசீவகம் என்று சொல்லப் புகுவதை பல செயினரும் மறுப்பர். அதே நேரம் ஆசீவகம் என்று ஆய்வதில் புதிய பார்வைகள் நமக்குத் தோன்றுவதையும் மறுக்க முடியவில்லை.) சமணம் என்று ஏற்கத்தயங்குவோர் குறளைச் சிவநெறி நூல், எந்த மதமுஞ் சாராத பொதுநூல், தமிழர் நூல் என்றெல்லாஞ் சொல்லுவர். [திருக்குறளின் கருத்தைத் தம்வயப்படுத்தி ஒவ்வொருவருஞ் சொந்தங் கொண்டாடுவதே அதன் சிறப்புப் போலும்.]

ஆசீவகம், செயினம், புத்தம் என்னும் இம்மூன்று நெறிகளும் ”எல்லாம் வல்ல பரம்பொருள் உண்டு” என்பதை நம்பாத அல்லது அக்கேள்வி பற்றிக் கவலா மதங்கள். அதேபொழுது ”ஆன்மாக்களுக்குத் தனியே இருப்புண்டு” என்று நம்புபவை. (ஆன்மாவை முற்றிலும் மறுத்தது உலகாய்தமும், அதன் வழிவந்த சாருவாகமும், தொடக்க காலச் சாங்கியமுமே. பிற்காலச் சாங்கியம் ஆன்மாவை ஏற்றுக் கொண்டது.) ”ஊழ், வினைப்பயன், தவம் என்பதைப் பொறுத்து ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் வெவ்வேறு உடம்போடு மீண்டும் மீண்டும் பிறந்து உழல்கிறது. பிறப்பும், அது தொடர்ந்த மாந்த வாழ்வும் துன்பமானதே. (இன்னாதம்ம இவ்வுலகம். இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரே! - ஆழ்ந்த ஆசீவகப் பாடல். புறநானூற்றிற் பல பாடல்கள் ஆசீவகத் தோற்றம் காட்டுகின்றன. அதை இன்னொரு நாள் சொல்லுவேன். ) மீண்டும் பிறவாமை என்பதே வீடுபேறு” என்று அடிப்படைக் கருத்தை இம்மூன்று நெறிகளும் மிக்குயர்ந்த உண்மையாய் உரைக்கும். நாளாவட்டத்தில் ”மீண்டும் பிறவாத வீடுபேறு” என்ற கருத்தியல், எல்லாம் வல்ல பரம்பொருளை நம்பும் மதங்களுக்கும் உகந்த கருத்தாய் ஆகிவிட்டது.

எல்லாம் வல்ல பரம்பொருளின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த மதங்களைப் பல்வேறு ஏரணக் கேள்விகள் (logical questions) போட்டு, கிடுக்கி (criticise), மேலே சொன்ன சமண நெறிகள் தாக்க, அதன் விளைவால் நம்பா மதங்களின் மெய்யறிவியற் தெரியனங்கள் (>தெரிசனங்கள்), கொள்கைகளைத் தங்களுக்குத் தகுந்தாற்போல் நம்பும் மதங்கள் கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்மையம் ஆக்கிக் கொண்டன. இன்றைக்கு இந்தியச் சூழ்நிலையில் நம்பும் மதங்களில் நாம் பார்க்கும் மெய்யியற் கோட்பாடுகள் பலவும்  எதிர்ப் பக்கத்தில் எழுந்து இன்னொரு பக்கம் செரிக்கப் பட்டவை தாம். தொடக்கத்தில் இருந்தவையல்ல. வேதாந்தத்தின் உச்சமாய்ச் சொல்லப்படும் உபநிடதங்களின் பார்வை கூட இந்த ஊடாட்டங்களில் உருவான எதிர்வினைப் பார்வை தான்.

காட்டாக, வினைப்பயனை (karma) ஏற்காது, வினை மறுத்து (அகிரியா வாதம் பேசி) ஊழ் (pre-ordination), சூழ்நிலை (environment), இயல்பு (inherent quality), அணுவியம் (atomic nature of the bodies) என்பவற்றையே ஆழ்ந்துரைக்கும் ஆசீவகம் மொத்தம் 84 இலக்கக்கத்திற்கு வெவ்வேறு வகையான உயிரிகள் (பிறப்புக்கள்) இம் மன்பதையில் உண்டென்று பேசும். ஊழைக் காட்டிலும் வினைப்பயனை அழுத்திப் பேசும் செயினம் (தற்செயல், அணுவியம் போன்றவற்றை செயினம் முழுவதும் மறுப்பதில்லை.) 84 இலக்கம் பிறப்புக்கள் என்பதை மேலோட்டமாய்ச் சொன்னாலும், ஓர் ஆன்மா புகுந்து செல்லும் பிறப்புக்களின் எண்ணிக்கையை, வினைப்பயனை, ”கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, அவாவின்மை” ஆகிய நாலு யாமங்களாலும், இடைவிடா அணு வதையாலும் (அண்ணுதல் = நெருங்குதல்; அணு = நெருங்கிய; வதை = வதம்>வ்ரதம்) குறைக்கமுடியும் என்று புகலும். வினைப்பயனை  ஏற்கும் புத்த நெறியோ 84 இலக்கம் பிறப்புக்கள் என்பதற்கு அவ்வளவு முகன்மை தராது. நம்பா மதங்களின் இம்முடிபைச் (84 இலக்கம் பிறப்புகளை) சிவநெறியை அழுத்திச் சொல்ல வந்த திருமூலர் கூட   ஏற்றுக் கொள்ளுகிறார் (திருமந்திரம், சருவ சிருட்டி, 218 ஆம் பாடல்) என்பது திருமந்திரம் படித்தாற் புரியும்.

நம்பா மதங்களின் 84 இலக்கம் பிறப்புக்கள் பற்றிய செய்தி நம்பும் சிவநெறிக்குள் (திருமந்திரத்துள்) எப்படி வந்தது? புரியவில்லை. [இந்திய மெய்யியலில் ”84 இலக்கம் பிறப்புக்களுக்கு ஏன் இப்படி முகன்மை எழுந்தது?”  என்பது சற்று வியப்பாகவே இருக்கிறது. இப்படித்தாம் சாங்கியக் கொள்கைகள் நம்பா மதத்தில் எழுந்து, முடிவில் நம்பும் மதங்களின் ஊடே உலவத் தொடங்கின. பொதுவாய் இந்திய மெய்யியற் கோட்பாடுகள் பலவற்றிற்கும் இருபுறத் தன்மையுண்டு. ஆழ்ந்து ஆய்ந்தோரே அவற்றின் தொடக்கத்தை அறியமுடியும்.]

”கடவுள் வாழ்த்து” என்ற சொற்கட்டுக் கூடச் சங்க காலத்திற் கிடையாது. சங்க நூல்களில் வரும் கடவுள் வாழ்த்துகள் அவற்றின் தொகுப்புக் காலத்திலோ, அதற்குப் பின்னாலோ, பின்னொட்டாய்ச் சேர்த்தவை என்றே ஆய்ந்தோர் சொல்லுகிறார்கள்.

சரி, இறைவன் என்ற சொல்லிற்குத் திரும்ப வருவோம். இறை என்ற சொல்லின் நீட்சியே இறைவன் என்பதாகும். கடவுள்(திருமால், சிவன், நான்முகன்), தலைவன் (அரசன், கணவன், மூத்தோன், உயர்ந்தோர், தமையன், கணவன், குரு) என்ற பொருட்பாடுகள் இறைவன் என்ற சொல்லுக்கு இருப்பது போற் இறை என்ற சொல்லிற்கும் இருக்கின்றன.  பரம்பொருள், தலைவன் தவிர, ”உயரம், தலை, தலைமை, நடுவுநிலைமை, கடமை, முன்மை” என்ற தலைமைப் பண்பையொட்டிய இரண்டாம் வழிப் பொருள்கள் இறை என்ற சொல்லிற்கு மேலுஞ் சொல்லப்படுகின்றன. ”இறை என்ற சொல் தலைவனுக்கெப்படி ஏற்பட்டது?” என்று தெரிந்தால், ”இரண்டாம் வழிப் பொருள்கள் எப்படியேற்பட்டன?” என்பது விளங்கிப் போகும்.

அகரமுதலியில் மேலேயுள்ள பொருட்களை ஒதுக்கிப் பார்த்தால், இறைக்கு இன்னுஞ் சில பொருட்களைச் சொல்லுவர். அவற்றில் முகன்மையானவை: ”வீட்டின் கூரையிறப்பு,  சாதல், தங்கல், இருக்கை” ஆகியவையாகும். இவையெல்லாம் ”இழிதல், சரிதல், இறங்குதல்” வினைகளை உணர்த்தும் பெயர்ச்சொற்கள்.

”உடலுறுப்பின் மூட்டுவாய், கை” என்பன இறுதல் (=முடிதல்) வினையோடு தொடர்புடையன.  [சிலம்பு கானல் வரி 29 ஆம் பாடலில் இந்தப் பொருளில் இறை என்ற சொல் பயிலும்.]  விறலிறையளவு என்பது ஒவ்வொரு விரலின் இறுதிக் கணுவளவைக் குறிக்கும். இறுதிக் கணு சிறுத்ததால் சிறுமைப் பொருளும் இறைக்கு உண்டு.

இறுதலின் பிறவினையான இறுத்தலில் இருந்து ”விடை” என்ற பொருள் பிறக்கும்.

அரசன் தன் படையினர் வழி இறுக்கை(force)க் காட்டி அதிகாரஞ் செலுத்தி மக்களிடம் பெறுவது இறை  எனப்படும்.  சுங்கம் (customs tax), உல்கு (excise duty) போன்ற அரசிறைகளின் அடிப்படை வினைச்சொல் இறுக்குதலே. இறுக்கிப் பெறுவது இறை. இறுக்கைக் காட்டி மக்கள் உடன்பாட்டைப் பெறாத எவ்வரசும் வரலாற்றிற் கிடையாது.

”இறையின் ஒருபொருளாய் மாமரம் அகரமுதலிகளிற் குறிப்பிடப்படுவது ஏன்?” என்று எனக்குப் புரியவில்லை. எனவே தவிர்க்கிறேன்.

முடிவில் ஏதோடும் ஒட்டாது தனித்து நிற்கும் ஒரு பொருள் இறகு (feather) என்பதாகும். [இறகும் (feather) சிறகும் (wing) ஒன்றிற்கொன்று தொடர்புடைய ஆனால் புழக்கத்தில் சற்று வேறுபட்டவை.]

அரசன் என்றுவொருவன் உருவாவதற்கு முன், குடித்தலைவன், குழுத்தலைவன், இனத்தலைவன் என்று யாரோவொருவன் இருந்ததை மாந்தவியல் புகலும். அவனன்றி எந்தக் கூட்டமும் இயங்காது. குடிமக்கள் கூட்டத்தை வழிநடத்துபவன் இந்தத் தலைவனே. கூட்டத்தின் இடையே இந்தத் தலைவனை அடையாளம் காட்டவேண்டுமே? அதற்கு வழியென்ன? இவரெல்லாம் தம் தலையிற் கட்டிக் கொண்ட பாகைகளில் (இலை, தழை, தோல் இப்படி ஏதோவொன்றாற் தலையிற் கட்டப்பட்டவை இந்தப் பாகைகள்.) பறவை இறகுகளைச் சூடிக் கொள்வது பழக்கமாய் இருந்தது. ஒரு கூட்டத்தைத் தொலைவில் இருந்து பார்க்கும் போது இறகு செருகியவன்(ர்) தலைவன்(ர்) என்று எல்லோரும் பழக்கத்தில் அறிந்து கொள்ளுவர்.  இது ஏதோ அமெரிக்கத் திரைப் படங்களில் செவ்விந்தியர் இறகு சூடிக் கொள்ளும் காட்சி மட்டுமல்ல. கணக்கற்ற பழங்குடிகள் இது போன்ற பழக்கங்களை  வைத்திருந்தார்கள்.

இன்றைக்கும் செட்டிநாட்டுப் பக்கம் மாப்பிள்ளை அழைப்பில் பார்த்தால் மாப்பிள்ளையின் தலைப்பாகையில் இறகு குத்திக் கொண்டிருப்பது தெரியும். தலைப்பாகையிற் சூடும் நெற்றிச்சூடிகையின் வடிவமும் ஒரு பறவையிறகு போலவே அமையும். மீனாட்சி கல்யாணத்தில் சொக்கநாதருக்கு அணிவிக்கும்  பாகையைக் கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? நாட்டுப் புறங்களில் நடக்கும் கூத்தில் கதைநாயகன் சூடிக்கொள்ளும் தலைப்பாகையையும் பாருங்கள். ஏன் அரச மகுடத்தின் மேலே செருகும் இறகை இங்கு நினையுங்கள். இறகில்லாத தலைவன் உண்டா?முத்து மாலைகளையும், மணி மாலைகளையும் அணிந்து கொண்டு இடுப்பில் ஒரு சிறுதுணியைக் குறுக்கே கட்டிய சுந்தர பாண்டியனை மார்க்கோ போலோ தன் பயணக் கதையில் [The travels of Marco Polo by Aldo Ricci, Rupa& Co; 2002, pp 292- 326] விவரிப்பான். பாண்டியன் தன் மகுடத்தில் இறகு அணியாது இருந்தானோ? தெரியவில்லை. பணங்கொண்டவனையும் மன்னனையும் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது?
 
[இறகு குத்திக் கொள்ளாத கூட்டத் தலைவர்கள் கொம்பு விலங்குகளின் மண்டையோட்டை தலையிற் கவிழ்த்து மாட்டிக் கொண்டிருந்தார்கள். சிந்த சமவெளி முத்திரையொன்றில் கொம்பு கவிழ்த்த தலைவன் ஒருவன் தாமரை ஆசனம் போட்டு உட்கார்ந்திருப்பான்.  “இவன் என்ன கொம்பனோ?” என்று தமிழிற் சொலவடையுண்டே, நினைவிற்கு வருகிறதா? கொம்பன் என்றாற் தலைவன் என்றே பொருளும் இயற்கையாய் எழுந்தது.]

இறகு அல்லது இறையைத் தன் தலைமுடியியிற் செருகிய தலைவன் இறைவன் எனப்பட்டான். தலைவனின் (lord) நீட்சியாய் எல்லாம் வல்ல பரம்பொருளும் இறைவன் (Great Lord) என்று அழைக்கப் பட்டான்.

இனி ”இறகு என்ற சொல் முதலா? சிறகு என்ற சொல் முதலா?” என்று கேட்டால், "முட்டை முதலா? கோழி முதலா?" என்று திருப்பிக் கேட்கவேண்டியிருக்கிறது. பின்னால் வரும் எளிதான விளக்கங்களைக் கருதிச் சிறகு என்பதையே முதலாக நாம் கருதுகிறோம். [சிறகு என்பது சிறை என்றும், இறகு என்பது இறை என்றும் செந்தமிழ் வழக்கிற் சுருக்கப்படும்.] சிறகு என்ற சகர முதற் சொல் திராவிட மொழிகளின் இலக்கிய மொழியான தமிழிலும், அதன் நெருங்கிய கிளைமொழியான மலையாளத்திலும் மட்டுமே இருக்கின்றன. மற்ற மொழிகளில் இறகும் அதன் திரிவுகளுமே இருக்கின்றன. ம. சிறகு; க. எறகெ, எக்கி, எறங்கெ, றக்கெ, றெக்கெ; தெ.எறக, ரெக்க; து. எதிங்கெ, றெங்கெ; பட. றக்கெ; குட. றெக்கெ, தெறகெ; கோத. ரெக்; துட. தெர்க்ய்; கோண்.ரெக; நா. றெப்ப, ரெக்க; கொலா. றெப்பா; பர். ரெக்க.

இறகுக் கை - இறகால் ஆன கை - இறக்கை ஆனது. [இங்கே  இந்தக்கால விதப்பான பயன்பாட்டைச் சொல்ல வேண்டும். சிறகு என்ற சொல் wing என்பதற்கும், இறகு என்ற சொல் feather என்ற உறுப்பிற்கும் இந்தக் காலத்திற் பயன்படுத்துகிறோம்.] இறகின் தொகுதி, குறிப்பாக வாலிறகின் தொகுதி நெல்லின் கதிர்த் தொகுதிபோல் இருந்ததால் குரல் (feather, plumage, கொத்து, திரள்) எனப்பட்டது; குரல் சற்று நீண்டு கூரலும் (கொத்து) ஆகும். குட்டைத் தொகுதி கூழையும் ஆனது (மயிற் தோகை, வால்), சதம் (அதம் = தொகுதி), சதனம் (அதித்தல், மிகுதியாதல், அதனம் = தொகுதி) என எல்லாமே தொகுதிப் பொருள் உள்ளவை.

சிறகு, சிறை, என்ற சொற்கள் சகரம் முன்னெழுந்து இலக்கியத்தில் இறகையும் குறித்தன. தூவி என்ற சொல் (மறுவில் தூவி சிறுகருங் காக்கை ஐங்குறு 139; தூவல், சொக்கின் தூவலும் தேவா. 216, 4, தூர்வு>தூவு = வேரைப் போன்றது) இறகைக் குறிப்பது. தோகை (தொகுதி) என்பதை மயிலை வைத்து நாமறிவோம்.

பக்கம், பத்ரம் என்ற சொற்கள் பறத்தல் வினையையொட்டி எழுந்தவை. பறத்தல் வினையின் சொற்பிறப்பை இங்கு அறிந்தால் பக்கம், பத்ரம் என்ற சொற்கள் விளங்கிப் போகும். பறத்தலின்  சுருக்கமாய் இறகிற்குப்  பறை என்ற சொல்லும் உண்டு. [பறக்கை “துணைபறை நிவக்கும் புள்ளின மான” மலைபடு.55. இறகு “பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி” நெடுநல் 15 பல்பறைத் தொழுதி - குறுந் 175],

பிஞ்சம் என்ற சொல் பாலியிலும் வடமொழியிலும் பயிலும். தமிழோடும் தொடர்புண்டு. (மயிற் தோகை; க. பிஞ்சிய, பிஞ்சு, பின்செ, பெஞ்செ, பெஞ்செய, skt pin~ccha, புள்>பிள்>பீள் = இளங்கதிர், (பிள்)>பிள்ஞ்சு,பிஞ்சு],

வாசம் என்ற சொல்லும் இறகைக் குறிக்கும்.

சிறகு/இறகு என்ற சொல்லின் பிறப்பை அறிவதற்கு முன் பறத்தல் வினை பற்றி அறிய வேண்டும்.

பறத்தல் வினையை விலங்காண்டி மாந்தன் அறிந்தது பறவைகளைப் பார்த்தேயாகும். அவ்வினை மாந்தச் செயலால் அறியப் படுவதில்லை. பறவைகளைப் பார்த்தும், அப்படிப் பார்க்கும் போது உடன் அறியும் ஒலிக்குறிப்பாலும் எழுந்த சொல் அது.  [மொழி வளர்ச்சியில் ஒலிக் குறிப்புகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். ] எந்தப் பொருளும் இடைவிடாது விரைவாய்த் துடிக்கும் போதோ, திரும்பத் திரும்ப விடாது செய்யப் படும் போதோ, டகரம், ரகரம், றகரம், ககரம் வைத்து இரட்டைக் கிளவியாக நாம் சொல்லிக் காட்டும் ஒலிக்குறிப்புகளை இங்கு எண்ணிப் பாருங்கள்.

“படபட” என்று துடித்தது; ”பரபர” என்று விரைந்தான்; ”பறபற” என்று இறைந்தது; ”பக்பக்” என்று அடித்துக் கொண்டது. எல்லாமே விரைவைக் குறிக்கும் ஒலிக் குறிப்புச் சொற்கள். பற-த்தல் என்ற தமிழ் வினை இத்தகைய ஒலிக்குறிப்பிற் தோன்றிய சொல்தான். படபடத்தலில் எழுந்த சொல் பட்டம். வானத்தில் நாம் அனுப்பிக் கயிறு கொண்டு கட்டுப் படுத்துகிறோமே, அந்த விளையாட்டுப் பொருள். வடமொழியில் அது பத்தம்>பத்ரமாகிப் பறவையையும் குறிக்கும். பக்கு>பக்கம் என்ற சொல் தமிழில் சிறகைக் குறிக்கும்; பின் பக்கு>பக்கி என்றாகிப் பாலி மொழியில் பறவையைக் குறிக்கும். [நமக்குப் பறவை பெரிதும் பயன்படும் சொல்லென்றால் பக்கி பாலிமொழியிற் பெரிதும் பயன்படுஞ் சொல்.] பக்கி என்ற சொல் பக்ஷி ஆகி வடமொழியில் பறவையைக் குறிக்கும். தமிழில் அதை மீண்டும் கடன் வாங்கி பட்சி என்போம். எல்லாம் ஒலிக்குறிப்பால் எழுந்தவை. பக்கு (= சிறகு) என்ற சொல் அதிரொலி பெற்றுத் திரிந்து பகவான் என்ற பாலி மொழிச் சொல்லை உருவாக்கும். அதைத் தமிழிற் கடன் வாங்கி பகவன் என்று சொல்லுவோம்.

சிலுக்கும் ஒலியும் பறபறத்தலை, படபடக்கும் அசைவைக் குறிப்பதுதான். சிலுகு>சிறகு என்றாகி பறக்கும்/அசைக்கும் உறுப்பைக் குறிக்கும். எந்தச் சிறகும் விரித்துச் சுருக்கி,  அசைக்கப் படவேண்டும். இந்த மூன்றையும் செய்யும் போது எழும் சிலுக்கு ஒலியை வைத்தே உறுப்பிற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். ”சறேர்” என்று விரைந்தான் என்ற விரைவுக் குறிப்பு சிறகுக்கு நெருக்கமானது. மேலை மொழிகளிலும் flug என்னும் ஒலிக்குறிப்புத் தான் fly என்பதற்குக் காரணமாய் இருந்திருக்கிறது.

fly (v.1)
"to soar through air," O.E. fleogan "to fly" (class II strong verb; past tense fleag, pp. flogen), from W.Gmc. *fleuganan (cf. O.S., O.H.G. fliogan, O.N. flügja, O.Fris. fliaga, M.Du. vlieghen, Du. vliegen, Ger. fliegen), from PIE *pleu- "flowing, floating" (see pluvial). Notion of "flapping as a wing does" led to noun sense of "tent flap" (1810), which yielded (1844) "covering for buttons that close up a garment." The noun sense of "a flight, flying" is from mid-15c. Baseball fly ball attested by 1866. Slang phrase fly off the handle "lose one's cool" dates from 1825. To do something on the fly is 1856, apparently from baseball.

wing (n.)
late 12c., wenge, from O.N. vængr "wing of a bird, aisle, etc." (cf. Dan., Swed. vinge "wing"), of unknown origin, perhaps from a P.Gmc. *we-ingjaz and ult. from PIE base *we- "blow" (cf. O.E. wawan "to blow;" see wind (n.)). Replaced O.E. feðra (pl.) "wings" (see feather). The meaning "either of two divisions of a political party, army, etc." is first recorded c.1400; theatrical sense is from 1790. Verbal phrase wing it (1885) is from theatrical slang sense of an actor learning his lines in the wings before going onstage, or else not learning them at all and being fed by a prompter in the wings. The verb to wing "shoot a bird in the wing" is from 1802. The slang sense of to earn (one's) wings is 1940s, from the wing-shaped badges awarded to air cadets on graduation. To be under (someone's) wing "protected by (someone)" is recorded from early 13c. Phrase on a wing and a prayer is title of a 1943 song about landing a damaged aircraft.

தமிழுக்கும் பாலிக்கும் இடையிருந்த ஊடாட்டம் கூர்ந்து கவனிக்கப் படவேண்டியது.


__________________________________________________________________










இராம.கி.
poo@giasmd01.vsnl.net.in
http://valavu.blogspot.com
__________________________________________________________________
 

Sunday, July 24, 2016

கயவாகு காலம்காட்டி முறைமை - எனது கருதுகோள்


-- முகுந்தன்



தமிழக வரலாற்றைக் கணிப்பிடும்போது கயவாகு முக்கிய இடத்தைப் பிடித்துவந்துள்ளான். மகாவம்சத்தை மொழிபெயர்த்த ​​வில்ஹெம் கெய்கர் அவர்களின் கருத்துப்படி முதலாம் கயவாகு கி.பி 171 - 193 இல் வாழ்ந்துள்ளான்.
(மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா மொழிபெயர்த்த  ​​வில்ஹெம் கெய்கர் அவர்களின் "சிங்களவர் வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை" நூலின்படி)

​​இந்தக் கயவாகுவே சிலப்பதிகாரத்தில் கூறப்படும் கயவாகு - அவன் சேரன் செங்குட்டுவன் காலத்தவன் எனும் கருத்து ​"1800 ஆண்டுகளுக்கு முன் தமிழர்" எனும் நூலில் வி.கனகசபை அவர்களால் கூறப்பட்டு பலராலும் ஏற்கப்பட்டு மற்றும் மறுக்கப்பட்டு வருகின்றது.
(இராம.கி ஐயா எழுதிய "சிலம்பின் காலம்" நூலிலும் இதனை மறுக்கின்றார்.)

இதற்குக் காரணமான சிலப்பதிகார வரிகள்,

 உரை பெறு கட்டுரை:
அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் கயவாகு என்பான் நங்கைக்கு நாள் பலி-பீடிகைக் கோட்டம் முந்துறுத்து-ஆங்கு, ‘அரந்தை கெடுத்து, வரம் தரும் இவள்’ என, ஆடித் திங்கள் அகவையின், ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பல் முறை எடுப்ப, மழை வீற்றிருந்து, வளம் பல பெருகி, பிழையா விளையுள் நாடு ஆயிற்று.

வரந்தரு காதை:
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும்,
பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும்,
குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும்,
கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்,
‘எம் நாட்டு ஆங்கண் இமயவரம்பனின்
நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில்
வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட
‘தந்தேன் வரம்!’ என்று எழுந்தது ஒரு குரல்-

கி.பி 5ம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கூறப்படும் மகாவம்சத்தில் வரும் முதலாம் கயவாகு தமிழகம் வந்ததாகக் குறிப்புகள் இல்லை. ஆனால் கி.பி 17 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட இராசாவளி நூலில் கயவாகு தனது தந்தையின் காலத்தில் சோழனால் பிடித்துச்செல்லப்பட்ட 12000 பேருக்குப் பதிலாக 24000 பேரையும் பத்தினித் தெய்வத்தின் பொற்சிலம்பையும்  புத்தரின் புனித பாத்திரத்தையும் (வட்டகாமினி அபயன் காலத்தில் பாண்டியர்களால் கொண்டுசெல்லப்பட்டது ) நீலன் என்பவன் உதவியுடன் கொண்டுவந்தான் எனக் கூறுகின்றது.

பெரும்பாலானோர் அறிந்த முதலாம், இரண்டாம் கயவாகு தவிர்ந்த வேறும் சில கயவாகு பற்றி மட்டக்களப்பு மான்மிகம் கூறுகின்றது… புவனேய கயவாகு என்னும் கலிங்ககுமாரன் , சோழ இளவரசியை மணந்து, பின்பு இலங்கை வந்து ஒரு பிரதேசத்தை ஆண்டான் எனக் கூறுகின்றது. இந்த புவனேய கயவாகு மற்றும் அவன் மகன் மனுநேய கயவாகுக்கும் சிலப்பதிகாரம் கூறும் கதைக்கும் ஏதாவது தொடர்புள்ளதா எனப் பார்ப்போம்.

இலங்கை வரலாறு கூறும் தமிழ் நூல்கள்:
இலங்கையில் தமிழர் வரலாற்றை அறிவதற்கு எழுதப்பட்ட நூல்களில் கைலாய மாலை, வையாபாடல், பரராசசேகரன் உலா , இராசமுறை,  யாழ்ப்பாண வைபவமாலை , மட்டக்களப்பு மான்மியம் , பெரியவளமைப் பத்ததி, குளக்கோட்டன் கம்பசாத்திரம், கோணேசர் கல்வெட்டு , கைலாச புராணம், என்பனவையும் அடங்கும்... இவை மிகப்பிற்காலத்தில் எழுந்த நூல்கள். வரலாறு மற்றும் காலவரிசைகளில் நிறையக் குழப்பங்கள் காணப்படினும், அவற்றைக் குறைத்து மதிப்பிடவேண்டியதில்லை.

இதில் மட்டக்களப்பு மான்மியம் என்பது வழிவழியாக சுவடிகளில் எழுதப்பட்டு வந்த வரலாறு எனக் கூறப்படுகின்றது.

(நூலகம் திட்டத்தில் : http://www.noolaham.org/wiki/index.php/மட்டக்களப்பு_மான்மியம்)

இதனை முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாகக் கருதமுடியாவிட்டாலும் மற்றைய ஆவணங்கள் கூறும் விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க உதவியாக இருக்கும்.

இதனைப் பதிப்பித்த F. X. C. நடராசா பின்வருமாறு கூறுகின்றார்...
மட்டக்களப்பின் சரித்திரத்தைக் கூறும் இந்நூல் யாரால் எந்த ஆண்டில் எழுதப்பட்டதென்ற விபரங்களை நூன்முகத்தானும், மறுமுகத்தானும் அறிந்து கொள்ள முடியவில்லை. நூலின் போக்கினையும் வாக்கினையும் நோக்குமிடத்து இது பல்லோரால் பற்பல காலங்களில் எழுதிச் சேர்க்கப்பட்டதென்பது புலனாகின்றது.

ஏட்டு வடிவத்தில் மட்டக்களப்புச் சரித்திரம் இதுவரை அடங்கிக் கிடந்தது.  மயில்வாகனப் புலவரால் எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலை எழுந்தகாலத்தே இந்நூலின் ஒரு சில பகுதி எழுதப்பட்டிருக்கலாம் என்று கருத நூலிற் சில பகுதிகள் சான்று பகருக்கின்றன. இந்நூலில் ஆதி காலந்தொட்டு ஒல்லாந்தர் காலம்வரையுள்ள சரித்திரம் கூறப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கமும் ஓதப்பட்டிருக்கிறது.

மகாவம்சத்திற் கூறுபட்ட பல சங்கதிகள் இந்நூலில் ஒத்திருக்கின்றன. பாலிமொழியிலடங்கிக் கிடந்த மகாவம்சக் கதைகள் பல இந்நூலகத்தே இருக்கின்றன. மகாவம்சத்துடன் ஒத்துப்போகாத விடயங்களுமிருக்கின்றன. ஆகவே இந்நூல் மகாவம்சத்தைத் தழுவி எழுதப்பட்டதென்பதற்கு ஆதாரமில்லை. மகாவம்சத்திலுள்ள சரித்திரம் அறிந்தபின்ரே எழுதப்பட்டிருக்குமாயின் முன்பின் முரணின்றி முடிந்திருக்கும்.

விசயனும், அவன்தோழர்களும் தென்மதுரையிலிருந்து பெண்கள் பெற்றனரென்று மகாவம்சம் கூறுகின்றது. இந்நூலோ வடமதுரையிலிருந்து பெற்றதாக நவில்கின்றது.

மகாவம்சத்திற் கூறப்படும் பேரரசர்கள் பற்றியும் இந்நூல் எழுத்துரைக்கின்றிலது. பொல்லநறுவையில் ஆண்ட வேறு அரசர்களை எடுத்துரைக்கும் இந்நூலில் பராக்கிரமபாகுவைப்பற்றி ஒருவசனமுமில்லை.

ஆடகசவுந்தரியின் சரித்திரம் இந்நூலில் வேறோர் முறையிற் கூறப்பட்டிருக்கிறது. குளக்கோட்டன் கதை எதுவுமில்லை.

யாழ்ப்பாணப் பகுதியை இந்நூல் நாகதீபம், மணற்றி, மணற்றிடர், மணிபுரம் என்ற பல பண்டைப் பெயர்களால் விரித்துரைக்கின்றது.

இடப்பெயர் வரலாறுகளும் இந்நூலிற் காணப்படுகின்றன. பண்டை நூல்களில் இவ்வகை விபரம் காணுமாறில்லை.

காலவரையறை புரியாது அரசர்களை மாறுபடவுங் கூறியுண்டு.

இவ்வகைக் காரணங்களை மனதிற் கொண்டு ஆராயுமிடத்து இந்நூல் வேறோர் நூல்வழி வந்ததன்று என்பது புலனாகும். ஆகவே இந்நூல் மற்ற சரித்திர முதநூல்கள் போல் விளங்குகின்றது எனலாம்.

இந்த நூலில் பண்டைச்சரித்திரமும் உண்டு. ஒல்லாந்தர் வரையுள்ள இக்கால சரித்திரமுண்டு.

மகாவம்சம் கூறுவதுபோல் சிங்கத்தின் கதையைத் தழுவாது சிங்ககுல இளவரசன் வங்கதேசத்துப் பெண்ணைத் தூக்கிச்சென்ற மணமுடித்துப் பிள்ளைகள் பெற்றதாக இந்நூல் விரித்துரைக்கின்றது.

கலியுக ஆண்டுகளையே இந்நூல் கையாண்டு வந்திருக்கிறது. பழைய நூல்களிலேதான் இவ்வகை ஆண்டுமுறை கையாளப்படும்.

பண்டைக்காலத்தில் இலங்கை திரிசிங்கள நாடாகப் பிரிக்கப்பட்ட வரலாறு நவமான முறையிற் தரப்பட்டிருக்கிறது. எல்லாளனும் இவ்வகைப்பிரிவிற் பங்கு கொள்ளுகின்றான்.
  
இந்திய சரித்திரங்கூட இங்கு காட்டப்பட்டிருக்கின்றது. மகமது சூசினி என்பானின் நிர்ப்பாக்கியத்தால் முற்குகக் குடிகள் மூன்று படகுகளில் மட்டக்களப்பில் வந்து குடியேறினதாக எழுதப்பட்டிருக்கிறது.

இந்நூலின் வசனநடை, சொற்பிரயோகம் இவற்றை நோக்கும்போது பழைமைக்கும், புதுமைக்கும் இடனாக அமைகின்றது. வசனநடை பலபடியாக வளர்ந்து வந்திருக்கின்றது. கதை சொல்லுவது போல நீண்ட வசனங்களும், விளக்கிக் காட்டுவது போல் சிறு சிறு வசனங்களும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண வைபவமாலையின் வசனநடைவேறு, இதன் வசன நடைவேறு. வகுத்தும் தொகுத்தும் காட்டுவது போன்று நூல் நடந்து செல்கின்றது. சொற்பிரயோகங்களும் விசித்திரமானவை. இக்காலத்து வழங்கும் சங்கதச் சொற்களுமுள.

இவையெல்லாவற்றையும் நோக்குமிடத்து இந்நூல் யாரோ ஒருவரால் மாத்திரம் செய்யப்பட்ட தென்று துணிவதற்கில்லை. பல்லோராற் பற்பல காலங்களிற் செய்யப்பட்ட தென்பதே புலனாகின்றது.

இதனை எழுதியவர்கள் யாவரும் உண்மை வரலாறு அறிந்தவர்களாகவே தோற்றப்படுகின்றனர். பண்டைய வரலாறுகளில் அபிப்பிராயபேதம் இருப்பதால் அவைபற்றி உறுதியாக எதுவுஞ் சொல்லமுடியாது.

மாகோன் படையெடுத்து வந்து இலங்கையை வென்றமை யாவராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றது. இவனின் சரித்திரம் ஆதியோடந்தமாக விரித்துரைக்கப்பட்டிருக்கின்றது.

இந்நூலும் யாழ்ப்பாண வைபவமாலை நவில்வது போல் ஒல்லாந்தரின் தூண்டுதலால் எழுதப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கவும் இடந்தருகின்றது.

பெரிய கல்வெட்டு, தாதன் கல்வெட்டு, போடி கல்வெட்டு இவையெல்லாம் அகவற்பாவாலானவை. இவையும் வரலாறு கூறுவன. வசனப்பகுதியிலுள்ள சில சம்பவங்கள் செய்யுள்; நடையிற் தரப்பட்டிருக்கின்றன. ஆகவே நூல்வசனமும், செய்யுளுமாகச் செய்யப்பட்டிருக்கிறது எனலாம்

--------------------------------------------
* இங்கே கலி வருட ஆரம்பம் கி.மு 3102 என எடுத்துக்கொள்கின்றேன்.. மற்றும் இங்கே கூறப்படும் ஆண்டுக்கணக்கு சரியானதா எனவும் கூறமுடியாது...
--------------------------------------------


மட்டக்களப்பு மான்மியம் கூறும் சில தகவல்கள்:
இந்த நூல் இராவணன் - குபேரன் காலத்திலிருந்து வரலாற்றைக் கூறத் தொடங்குகின்றது..
பின்பு மகாபாரதப் போர்முடிந்தபின் அத்தினாபுரத்து நாகர் கலி ஆண்டு  800 இல் ( கி.மு.2300 ) இலங்கை வந்ததாகவும்

குருகுலத்து
அன்றிய நாகர் கூடி அத்தி நாடதனால் மீண்டு
வன்றிற விலங்கை சேர்ந்து வாழ்ந்தனர் கலி எண்ணூறில்


பின்பு விஜயனும் தோழர்களும் இலங்கையை கலி ஆண்டு 2706 இல்  ( கி.மு 396 ) அடையும்போது அங்கே  நாகர் சிற்றரசன் முல்லைத்தீவிலிருந்து ஆண்டதாகவும் பின்பு விஜயன் குவேனி எனும் இயக்கர் பெண்ணை மணந்து
காளிசேனன் எனும் அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாகவும் கூறுகின்றது...

--------------------------------------------

இந்நூல் கூறும் சில வரலாற்றுக் காலங்கள்:
அத்தினாபுரத்து நாகர் இலங்கை வருகை  - கலி ஆண்டு 800 ( கி.மு.2300 )
விஜயனும் தோழர்களும் இலங்கை வருகை  - கலி ஆண்டு 2706 இல்  ( கி.மு 396 )
கலிங்க மாகன் - கலி ஆண்டு 4250 இல்  ( கி.பி 1148 )
கஜினி முகமது - கலி ஆண்டு 4115 அளவில் (கி.பி 1013 )

மகாவம்சத்திற்கும் மட்டக்களப்பு மான்மியத்திற்குமிடையில் பல கால வேறுபாடுகள் இருப்பினும் ஒரு புதிய விடயத்தைப் பார்ப்போம்.

பிரசன்னசித்து - சரித்திரம்:
பிரசன்ன சித்து கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுப்பத்தாம் வருஷம் மட்டக்களப்புக்கு அரசுக்கு வந்த போது தேவர் சந்நிதியியற்ற விருப்புடையவனாக இருந்து வரும் காலம் புவனேயகயவாகு என்னுமொரு கலிங்ககுமாரன் சோழநாட்டிலரசியற்றி வரும் திருச்சோழனுடைய மகள் தம்பதிநல்லாள் என்பவளைப் பாணிக்கிரகணஞ் செய்து சில காலத்தின் பின்பு புத்திரனில்லாமையால் இராமேசுபரம் தரிசனை செய்து மண்டபமொன்றியற்றும்படி திரவியமுங் கொடுத்து திட்டஞ் செய்து இலங்கையில் வந்து திருக்கேதீஸ்வரம் தரிசனை செய்து தானம் தன் மனைவியும் சிறைதளங்களோடு கோணேஸ்வரர் தரிசனை செய்து நிற்கும் போது மணிபுரத்தை அரசுபுரியும் நாகர்குலத்துச் சிற்றரசனுடைய மந்திரி கொட்டாயனென்பவன் புவநேயகவாகுவை நோக்கி என்னுடைய உத்தரவில்லாமல் நீயிங்கு வரப்படாதென விளம்பினன். அதனைக் கேட்ட புவனேயகயவாகுவும் தன்னோடு வந்து சோழவீரியர்களை ஏவிக் கொட்டியன் முதலிய நாகர் குலத்துப் பிரதானிகளையெல்லாம் வெட்டிக் கொன்று செயித்துச் சிலரை அந்நகரத்தாலகற்றியும் தெட்சணாபதியைத் தன்னளவிருத்திச் சோழநாட்டு வீரியர்களைக் காவல் வைத்து மட்டக்களப்பை அரசுபுரியும் வாகூரன் புத்திரன் பிரசன்னசித்துவிடத்தில் மனைவி துணைவரோடு வந்து குலமுகமன் கொண்டாடி ஆகாரமுண்டு பிரசன்னசித்துவிடத்தில் தெட்சணாபதியை ஒப்புக்கொடுத்துச் சில நாளிருந்து புவனேகயவாகுவும் தனது நகரம் போகக் கருத்துற்ற போது பிரசன்ன சித்துவும் நாகர்முனையில் பண்டு-நாளில் சுப்பிரமணியர் ஆலயம் பாழடைந்திருப்பதால் நாட்டுச் சிற்பிகளை அழைத்துச் செப்பனிட்டுத் தரும்படி வேண்டினன். அதனை உணர்ந்த புவனேயகயவாகுவும் தனது மாமன் திருச்சோழனுக்கு மட்டக்களப்பு நாகர்முனைச் சுப்பிரமணியர் ஆலையத்தைச் செப்பனிடக் கருத்துற்றேன். அதற்குச் சிற்பிகளும் திரவியங்களும் அனுப்பும்படி திருமுகம் அனுப்பினன். திருமுகத்தை வாசித்த திருச்சோழனும் சந்தோஷமடைந்து மருகன் கேட்டபடி அனுப்பினன். சிற்பிகள் வந்து புவனேயகயபாகுவைக் கண்டு நமஸ்காரம் செய்து ஆலயத்தைச் செப்பனிட்டு புவனேயகயபாகுவும் அந்தணர் புத்தியின்படி அபிசேகஞ் செய்து திருக்கோயிலென நாமஞ் சாற்றி பிரசின்ன சித்துவிடம் ஒப்புக்கொடுத்துச் சில நாளிருக்க புவனேயகயபாகுவின் மனைவி தம்பதி நல்லாளுக்குக் கெற்பமுண்டாக பிரசின்னசித்துவும் மனமகிழ்ச்சி கொண்டு புவனேயகயபாகுவுக்கு ஒரு நாடுண்டாக்கக் கருதி, வடக்கு மக்கனல் வெட்டுவாய்காலும், தெற்கு மாணிக்க கங்கையும், மேற்குக் கடவத்தையும் கிழக்குச் சமுத்திரமாயுமுள்ள ஒரு கிராமத்தை உண்டாக்கிக் கவடா மலையில் மாளிகை உண்டாக்கி புவனேயகயபாகுவுக்குக் கைலஞ்சமாகக் கொடுத்து அரசிருக்கச் செய்து புன்னரசி என்று நாமஞ்சாற்றிக் கல்லிலும் வெட்டிவைத்து தன்னிருப்பிடஞ் சென்றான். இது நிகழ்ந்தது கலிபிறந்து மூவாயிரத்து நூற்றுமுப்பதாம் வருஷம். அதன்பின்பு புவனேயகயவாகு தன்னோடு வந்த பிரதானி சோழவீரியர் சிறைத்தளங்களாகவும், தன்னரகாயிருத்தி தனது நகரத்துள் கழனிகள் திருத்தி குடிபடைசிறைகளை வைத்து வாழ்ந்து வருங்காலம் தனது மனைவிக்குப் பிரசவ காலம் நேரிட்டது. அன்று விடாமழை பெய்ய அத்தினத்தில் புத்திரன் பிறந்தான். அப்பிள்ளைக்கு மேகவர்ணன் என்றும் மனுநேயகயவாகு என்றும் நாமஞ்சாற்றி வாழ்ந்து வருங்காலம் புத்திரனுக்கு இராச பருவகாலம் வர வங்கதேசத்துக் குலசந்திரனுடைய புத்திரி அழகுவல்லியை மணம்முடிப்பித்து உன்னரசுகிரியையும் பட்டங் கட்டிச் சிலகாலத்தின் பின் புவனேகயவாகுவும் அவர் மனைவியும் ஒரே தினத்தில் தேகவியோகம் அடைந்தனர்.

மனுநேயகயவாகுவின் சரித்திரம்:
மனுநேயகவாகு கலிபிறந்து மூவாயிரத்து நூற்றைம்பதாம் வருஷம் பட்டத்துக்கு வந்தான். இவன் உன்னரசுகிரிக்கு மேற்கிலும் தெற்கிலும் உள்ள நாடு நகரங்களை எல்லாம் தன்கைவசப்படுத்தித் திசைவாங்க அரசுபுரியுங்காலம் மட்டக்களப்பை அரசுபுரியும் பிரசன்னசித்துவின் புத்திரன் நாசகனைச் சிநேகம் கொண்டு தந்தையாலியற்றிய நாகர்முனை ஆலயத்தை அந்தணர் புத்தியின்படி செப்பனிடக் கருதிச் சோழநாட்டுச் சிற்பிகளை அழைத்து ஏழுதட்டுத் தூபியும் மதில் மண்டபங்கள் மாதர்சாலை, வாகனவீடு, கோபுரவாசல், தங்கத் தகடு பூட்டிய கொடித்தம்பம் தூபியின் மேலே ஏழு தங்கக் குடமும் நிறைந்து ஆறுவீதியும் அலங்கரித்து அந்தணரால் அபிஷேகங்கள் செய்வித்துத் தனது மாதாபிதா வமிசத்தாருக்கு வங்கதேசம் சிங்கபுரம் சோழநாடு கலிங்கநாடு இராமநாடு இவைகளை அரசுபுரியும் புரவலர்களுக்குத் தந்தை தாயுடைய சம்பவங்களும் கலிங்கர் வங்கர் சிங்கர் இலங்கையை அரசுபுரியும் நேர்மைகளும், தனது தந்தையால் முன் நாகர் முனையிலியற்றிய திருப்பணிச் சம்பவங்களும் அந்தத் திருமுகப்பணியை யான் அந்தணர் புத்தியின்படி தமிழ் மதம் ஓங்கச் சோழ நாட்டுச் சிற்பிகளை அழைத்து செப்பனிட்டு அபிசேகம் இன்னதினமெனத் திருமுகம் அனுப்பினர். அதை வாசித்தறிந்து அரசர்கள் மாணிக்கம், முத்து, இரத்தினம், நாகமணி, தங்கத்தட்டு, பாரிசாதம், சரிகைப் பட்டு இவைகளை ஏழு இராசர் கையில் கொடுத்து தங்கள் தங்கள் பந்துக்கள் நாற்பது திறைக் குடிகளையும் அனுப்பிவிட்டனர். அவர்கள் ஒருங்கு சேர்ந்து ஒரு படகில் ஏறி தென்சமுத்திரம் சார்ந்து நாகர்முனைக்கு அடுக்காயிருக்கும் களப்பு முகத்திலிறங்கி நிற்க, தாசகன் மனுநேயகவாகுனின் பிரதானிகள் அந்தணர்களோடு எதிர் சென்று முகமன் கொண்டாட அந்தணர்களை ஏழு இராசரும் நாற்பது திறைக் குடிகளும் தம்பட்டனென வாழ்த்தித் திருப்பணிக்குச் சென்று ஏழு இராசரும் அவர் அவர்கள் கொண்டு வந்த திரவியங்களையும் அரசினர்தந் பதி நல்லாள் பந்துகள் கொடுத்த பத்திரங்களையும் மனுநேயகவாகுவிடம் கொடுத்து பரிசுபுரிந்தனர். மனுநேயகயவாகுவும் வந்தவர்களை ஆசீர்வதித்து அறுசுவையுடன் அமுதளிப்பித்து அபிசேகஞ் செய்து ஆறுகாலம் பூசை நடக்கும்படி ஏழு இராசர்களையும் படையாட்சி குலத்தில் மூன்று வன்னியர்களையும் வகுத்து இருபாகை முதன்மையாக கலிங்ககுலத்து பிரசன்னசித்துவினுடைய சந்ததிகளே வரவேண்டுமென்றும், ஐந்து பண்டாரங்களும், அந்தணர். முதன்மை இராசர் இவர்களுடைய உள்ளியர் என்றும் பதினாறு சிறைகளும் காராளருடைய உள்ளியர் என்றும் மனுநேயகயவாகுவும் தாசகனும் கற்பித்தனன். பின்பு திருப்பணிக்கு ஆதாரமாக மனுநேயகவாகுவும் தாசகனும் ஏரிகள் இயற்றிக் கழனிகள் உண்டாக்கக் கருதி சங்குமண்கண்டு தலையாகவும் தாடைகிரிபாதமாகவும் இருபத்துநாலு ஏரி ஒன்றாகவும் முப்பத்திரண்டு மதகுவைத்து ஒரு ஏரி இயற்றி சமுத்திரக் கரைவரை கழனிகள் திருத்தி நீர் மிஞ்சிவந்தால் ஏரியை இரண்டாகப் பிரித்து நடுவில் கள்ளி ஓடையாய் வெட்டிச் சமுத்திரக் கரையில் கொண்டுவிட்டு நாகமுனைக்குத் திருப்பணிக்கு ஈந்து மட்டக்களப்பை அரசுபுரியும் தாசனிடத்து ஒப்புக்கொடுத்து இராசரும் வந்த திறைக் குடிகளும் தம்பட்டர் என்று அந்தணர்களைக் கண்டு பேசிய இடத்தில் அந்தணர்களைக் குடியிருத்தி பட்டையும் வரிசைகளையும் கொடுத்து மாணிக்க வைரத்தால் ஒரு கணேசவிக்கிரகமும் ஸ்தாபித்து தம்பட்டார் ஊரென நாமம் சூட்டி, தனதுமாதா தம்பதி நல்லாள் பேரில் ஒரு வாவியும் இயற்றி அந்த வாவிக்குத் தம்பதிவில் என்று நாமம் சாற்றி தாசகனிடத்து விருந்துண்டு முகமன் கொண்டாடி உன்னரசுகிரிவில் மனைவியும் வரும்சிறைத் தளங்களோடு சென்று வாழ்ந்துவரும் காலம் மனைவிக்கு சந்தானமில்லாமையால் விசனமுற்று இருக்கும்போது ஒரு பேழை சமுத்திரத்தில் அடைந்துவந்து கரை ஏறக்கண்ட வேவுகாரன் ஒருவன் உன்னரசுகிரியில் சென்று மனுநேயகயவாகுவிடத்தில் கைகட்டி நின்று. அரசே சமுத்திரக்கரையில் ஒரு அழகுசவுந்திரியமான பேழை அடைந்து கரைசேர்ந்திருக்கிறதென விண்ணப்பம் செய்தான். அதைக்கேட்ட அரசன் பிரதானிகளோடு கடற்கரைக்குச் சென்று பேழையைத் திறந்தான். அதற்குள் ஒருபெண் குழந்தையிருந்து கல கல என நகைத்தது. அதைக் கண்ட அரசன் மனமகிழ்ச்சியோடு பல்லக்கில் வைத்து உன்னரசுகிரிக்குச் சென்று தன் மனைவி கையில் கொடுத்து ஆடகசவுந்திரி என நாமம் சூட்டி நாளொருவண்ணமாய் வளர்த்துப் பேழை அடைந்த இடத்தை நகராக்கி பாலர்நகை நாடென நாமம் சாற்றிக் குடியேற்றி அந்தநாடும் மட்டக்களப்பு எல்லையான படியால் தாசகனிடத்தில் ஒப்புக்கொடுத்துத் தனது நகரம் போயினன். தாசகனும் அந்தப் பாலர் நகரைக் காட்டில் படகுகட்டும் துறையாக்கி அணையும் இயற்றினன். அதன்பின் வடநாட்டு வர்த்தகர்கள் வந்து வர்த்தகம் செய்தனர். பின்பு மனநேயகயவாகுவின் மந்திரி ஆடகசவுந்தரிக்கு ஏழுவயதில் சயனிக்கும் போது ஒருவர் தெரிசனபிரசன்னராகி இராமமந்திரம் ஒன்றும், இராமதியானமே வணக்கமொன்றும், உபதேசித்தகன்றார். உடனே விழித்து மறுநாட்காலையில் மந்திரஞ் செபித்து இராம மூர்த்தியை வணங்கி வருங்காலம் மனுனேயகயவாவுக்கு ஆடகசவுந்தரியினுடைய பூர்வ சம்பவங்களை வடநாட்டு வர்த்தகப் பிரபுக்கள் விளங்கப்படுத்தினர். மனுனேயகயவாகுவும் புத்திரிதனக்கு உரிமை உடையவளென்றும் உன்னரசுகிரியைப் பட்டங்கட்டி பரமபதம் அடைந்தனன்.

--------------------------------------------

மேலும் இரு கயவாகு:
இதில் கூறப்படும் இரு கயவாகு புவநேய கயவாகு , மனுநேய கயவாகு. அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம்..

புவனேயகயவாகு - கலி 3130  (கி.பி.28)
கலிங்கத்தைச் சேர்ந்தவன் - சோழ மன்னன் திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளை மணம் முடித்துப் பின் இலங்கை வந்தான்.

மனுநேயகயவாகு என்னும் மேகவர்ணன்  - கலி 3150  (கி.பி.48)
புவனேயகயவாகுவின் மகன் - பேழையில் வந்த குழந்தைக்கு ஆடகசவுந்தரி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

ஆடகசவுந்தரி கதை:
ஆடகசவுந்தரி வரலாறு புராணத்தன்மை நிரம்பியதாகக் காணப்படுகின்றது .. கலி 3180 – 3370 (190 ஆண்டுகள்) அளவில் ஆடகசவுந்தரி வாழ்ந்ததாகக் கூறுகின்றது… மகாவம்சம் கூறும் மகாசேனனை( கி.பி 325 – 352) மணந்து அரசாண்டதாகக் கூறும் இந்நூல் மகாசேனன் சைவ ஆலயங்களைத் திருத்தியதாகக் கூறுகின்றது. மகாவம்சம், அவன் சைவ ஆலயங்களை இடித்ததாகக் கூறுகின்றது.

சங்கமிகிந்து ( சங்கமித்திரர் ?? ) வைதூலிக சைவமதத்தை வளரச்செய்ய விரும்பியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.. மேலும் அவர் அனுராதபுர மன்னனின் சகோதரன் எனக் கூறுகின்றது.. தேரவாத மற்றும் மகாயான பௌத்த பிரிவுக்கிடையில் நடந்த பூசல்களையே அது சைவ – பௌத்த பூசல்களாகக் கூறுகின்றது எனக் கருத இடமுண்டு. இருப்பினும் வைதூலிக மதம் என்பது மகாயான பௌத்தமாக இருக்கலாம் ..

ஆடகசவுந்தரியின் பிற்கால வரலாறு மகாசேனன் காலத்தோடு ஓரளவு ஒத்துப்போகின்றது. ஆயினும் ஆடகசவுந்தரியின் மிகநீண்ட வாழ்க்கைக்காலம், மனுநேயகயவாகுவின் காலத்திற்குப் பின்னாலான தெளிவற்ற வரலாற்றால் மனுநேயகயவாகுவின் மகளையும் ஆடகசவுந்தரியையும் இணைத்துக் கூறப்பட்டதாகக் கருதலாம்.. அல்லது இருவரது பெயரும் ஒன்றாக இருந்து ஒருவராகக் கருதி வரலாறு மாற்றப்பட்டதாகவும் கருதலாம்..

கண்ணகி – கோவலன் கதை சிலப்பதிகாரம் தவிர நாட்டார் பாடல்களாகவும் வழங்கிவந்துள்ளன. அவற்றுள் கோவிலன் கதை, கண்ணகி வழக்குரை மற்றும் சிலம்பு கூறல் என்பன குறிப்பிடத்தக்கவை… அவை கண்ணகியை பாண்டிய மன்னனின் மகள் என்றும் சோதிடர் சொன்னதைக்கேட்டு பாண்டியன் குழந்தையைப் பேழையில் ஆற்றில் விட்டதாகவும் கூறும்.

பத்தினி வழிபாடு எனும் நூலில் சி. கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறுகின்றார். (இதற்கான ஆதாரங்கள் என்னவென்று தெரியவில்லை)

சந்தன மரத்தால் செய்த கண்ணகி உருவமும் ஒரு சிலம்பும் சந்தன மரப்பலகையால் செய்த பேழையில் வைத்துக் கயவாகுக்குச் செங்குட்டுவன் கொடுத்தான். பாண்டிய அரசன் வெற்றிவேற்செழியன் யானைமேல் சந்தனப் பலகையாற் செய்த பெட்டியையும் அரசனையும் ஏற்றி வேதாரணியத்தில் கொண்டுவந்து விட்டான் . அங்கிருந்து கப்பலில் காரைதீவுக்கும் கீரிமலைக்குமிடையிலுள்ள திருவடிநிலையில் இறங்கினார்கள்.

(இதையும் பாருங்கள் - அகநானூறு
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது - எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்)

(சிலம்பு கூறல் காவியத்தில் கண்ணகியின் காற்சிலம்புக்கு மாணிக்கம் எடுக்க இலங்கை வந்ததாக ஒரு கதை உண்டு.. வேறொரு இழையில் அதனைப் பார்ப்போம்)

--------------------------------------------

எனது கருதுகோள்:
இங்கே கூறப்படும் மனுநேயகயவாகு, சிலப்பதிகாரம் கூறும் கயவாகுவாக இருக்கலாம்..
இலங்கைக்குக் கண்ணகி வழிபாடு வந்ததை ஆடகசவுந்தரி ஆற்றில் பேழையில் வந்ததாகக் கூறப்பட்டிருக்கலாம்..

புவனேயகயவாகு சோழ மன்னன் திருச்சோழனின் மகள் தம்பதி நல்லாளை மணந்ததாகக் கூறப்படுவதால் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் செங்குட்டுவனுக்கும் மனுநேயகயவாகுக்கும் உறவுமுறை இருக்கலாம். அதனால் மனுநேயகயவாகு பத்தினிக் கடவுள் விழாவுக்குச் சென்றிருக்கலாம்.

சிங்கள, தமிழ் வரலாற்று நூல்களை மற்றும் ஏனைய சான்றுகளை ஒன்றிணைத்து ஒரு ஆராய்ச்சி செய்தால், மேலும் பல விடயங்களை அறியக்கூடும்.. வரலாற்றறிஞர்கள் இதுபற்றி மேலும் ஆராயவேண்டும்..



நன்றி,
முகுந்தன்


______________________________________________________
 
முகுந்தன்
mukunthan@gmail.com
______________________________________________________

Saturday, July 23, 2016

கூகள்(Google) கலாச்சர மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழ் மரபு அறக்கட்டளை - கூகள்(Google) கலாச்சர மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

தமிழ் மரபு அறக்கட்டளை நண்பர்களுக்கு வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று, ஆவண பாதுகாப்பு மின்னாக்கத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாக இன்று கூகள் நிறுவனத்தில் கூகள் கலாச்சார மையத்துடன் (Google Cultural Institute) தமிழ் மரபு அறக்கட்டளை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கின்றோம் என்ற நற்செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி தமிழ் மரபு அறக்கட்டளையின் தேர்ந்தெடுக்கப்பட டிஜிட்டல் ஆவணங்கள் கூகள் கலாச்சார மையத்தில் தனிப்பகுதியில் வெளியிடப்படும். இவை கூகள் நிறுவனத்தால், இணைய வாசிப்பாளர்களை அணுகும் வகையில் எல்லா ஏற்பாடுகளையும் கூகள் நிறுவனமே பொறுப்பெடுத்துக் கொள்ளும்.

இதற்காக ஒரு பிரத்தியேகக் குழுவை நாம் அமைக்கின்றோம். இந்தச் செயற்பாடு தொடர்பான தொடர் நடவடிக்கைகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்கின்றேன்.

கூகள் நிறுவனத்தார் தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையும் ஆர்வமும் மகிழ்ச்சியளிக்கின்றது.

இது தமிழ் மரபு அறக்கட்டளையின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்.
நமது பணிகளை இனிதே தொடர்வோம்!

என்றும் அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Friday, July 22, 2016

தேடிக்கொண்டிருக்கிறேன்

-- ருத்ரா இ.பரமசிவன்


அதைத்தான் இன்னமும்
தேடிக்கொண்டிருக்கிறேன்.
கால்சட்டை போட்டுக்கொண்டு
கோலி விளையாடிய போது அவன்
மொழியை உடைத்து விடவேண்டுமே
என்ற வெறியைத்தேடினேன்.
தட்டாம்பூச்சி சிறகுகளை
காதோடு காதாக ஒட்டிவைத்துக்கொண்டு
கிர்ரென்று அது போடும்
ஓசைக்குள்
அர்த்தம் புரியாத‌
நியாய வைசேஷிகத்தையும்
பூர்வ உத்தர மீமாம்சங்களையும்
தேடினேன் என்று
சுருக்கம் விழுந்த வயதுகளில்
நினைவுகளை சவைத்துத் துப்பும்போது
தெரிந்து கொண்டேன்.



அவளிடம் என்ன இருந்தது என்று
தெரியாமலேயே
அவளிடம் இன்று வரை
தேடிக்கொண்டிருக்கிறேன்.
வேறு வேறு கூட்டில்
இருவருக்கும்
ஆறேழு குஞ்சுகள்
சிறகடித்துக்கிடந்த போதும்
காதல் என்ற பிசின் எங்கோ
ஒட்டிக்கொண்டிருக்கிறதே
இன்னமும் அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.


தேடல் ஒரு கவிதை.
தேடல் ஒரு காதல்.
தேடல் ஒரு காமம்
தேடல் ஒரு கடவுள்.
இன்னும் எதையெல்லாம்
தேடவேண்டும்
என்று
கன்ன நரம்புகள் புடைக்க‌
தேடுவதும்
ஒரு தேடல்.
தேடலே அறிவு.

இப்படித் தேடுவது என்பது
டி.என்.ஏ, ஆர்.என்.ஏக்களின்
அமுத ஊற்றுகளின் சங்கிலி.
கடவுள் என்பவனுக்கு
இந்த ஊற்றுகளை
சுவைக்க முடியாது.
இந்தப் பிரபஞ்சத்தை வெற்றிலை மடித்து
பாக்கு புகையிலையோடு
நுண்ணிய கணிதத்தில் சுருட்டி
வாயில் போட்டு
"ப்ரேன் காஸ்மாலஜி" என்று
மூளையோடு குதப்பிக்கொள்ள‌
அந்தக் கடவுளுக்குள்
ஒரு "எட்வர்டு விட்டன்"
இறங்கித் தூர் எடுக்கவேண்டுமே.
"குவாண்டம் நுரை"கோட்பாடு வரை
சூன்யத்துள் சூன்யத்தையே
பாதாளக்கரண்டி போட்டு..
ஹிக்ஸ் போஸான் தான்
அந்த ரகசியம் என்று
ஆற்றல் பிழம்பை உடைத்து
அந்த கொட்டையை எடுக்க‌
செர்ன் எனும் அணுவுலைக்குள்
நோண்டி நொங்கு எடுக்க..
தேடிக்கொண்டிருப்பதில்
அவனையும்
எப்படி கட்டி இழுத்துக்கொண்டிருப்பது?

கும்பாபிஷேக நெய்ப்பிசுக்கில்
அவன் நாக்கினால் சப்பிக்கொண்டிருக்கட்டும்.
நான் தேடுவதில்
பிரபஞ்ச நரம்புக்கூட்டங்கள்
தாறு மாறாய் கலைந்து கிடக்கின்றன.
பேசாமல் அந்தத் தர்ப்பணங்களை
அவன் தின்று கொண்டிருக்கட்டும்.
துருப்பிடித்த ஸ்லோகங்களை
டிங்கரிங்க்கு அனுப்பி அல்லவா
நிமிர்த்திப்பார்க்க வேண்டும்.
கடவுளைக் கடவுளே
ஒரு நாள் கூட நிமிர்த்திவைத்து
பார்த்ததில்லை.
நானும் அதைத்தான் தேடுகிறேன்.
அவனுக்குப்பதில்
அவனுக்காக நான்
தேடிக்கொண்டிருக்கிறேன்...

அவன் என்னைத்தான் தேடுகிறான் என்று
தெரியாமல்
இன்னமும் நான் அவனை
தேடிக்கொண்டிருக்கிறேன்.





______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

Thursday, July 21, 2016

உன்னோடு நானிருந்த பொழுதுகள்

-- காசுமி


Inline image 1 

உன்னோடு நானிருக்கும் போதுகளில்
என்னை நான் மறக்கிறேன்
உன்னோடு நானிருக்கும் போதுகளில்
உன்னைத்தான் பார்க்கிறேன்
உன்னோடு நானிருக்கும் போதுகளில்
என்னைத்தேடி அலைகிறேன்
உன்னோடு நானிருக்கும் போதுகளில்
விண்ணைத்தான் காண்கிறேன்
உன்னோடு நானிருக்கும் போதுகளில்
உன்னுள்தான் புதைகிறேன்
உன்னோடு நானிருக்கும் பொழுதுகளில்
மட்டுமே நான் கருவுருகிறேன்




___________________________________________________________
  
காசுமி
kasume.chan@gmail.com
https://kasumichan.wordpress.com/
___________________________________________________________

Wednesday, July 20, 2016

மருங்கூர் - சங்ககாலக் கடற்கரைப்பட்டினம்


 -- சொ.  சாந்தலிங்கம், மதுரை.


சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் (227.19.21)

‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து
எல்லுமிழ் ஆவணம்


என்றும், நற்றிணையில் (258.7-10)

‘அகலங்காடி யசைநிழற் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கட் தாக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேர்க்கும்
மருங்கூர்ப் பட்டினத்து’


என்றும் மருங்கூர்ப்பட்டினம் என்னும் ஓர் ஊர் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விலக்கியச் செய்திகள் மூலம் இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதும் பெறப்படுகிறது.

இப்பட்டினம் பசும்பூண் பாண்டியனின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது என்பதிலிருந்து இது பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பட்டினம் என்பது உறுதிப்படும். இப்பட்டினம் எங்கு இருந்தது, இருக்கிறது என்பது நீண்ட நாளைய கேள்வியாக இருந்தது. அண்மைக்கால களஆய்வின் மூலம் இப்பட்டினத்தை அடையாளங் காணத்தக்க சில சான்றுகள் பெறப்பட்டுள்ளன.[1]

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் தளிமருங்கூர், திருவாடானையிலிருந்து தொண்டி செல்லும் சாலையில் வடக்கில் சற்று விலகி இருக்கும் ஊர் இது. கடலுக்கு அருகாமையில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இவ்வூரே மேலே குறிப்பிடப்பட்ட இலக்கியங்கள் கூறும் மருங்கூர் என்பதை நிறுவுவதே இக்கட்டுரை.

அண்மையில் இவ்வூர் தமிழக அரசு தொல்லியல் துறையினரால் ஆய்வு செய்யப்பட்டது. மேற்பரப்பு ஆய்வுகளின் மூலம் சங்க காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படும் கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பிற்காலப் பாண்டியர் காலத்தில் வணிகச் செழிப்பும், சமயச் சிறப்பும் பெற்ற இடமாக இருந்துள்ளமைக்கும் சான்றுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வூர் இன்று திசைகளை வைத்து இரண்டாகப் பிரிக்கப்பட்டு தெக்கூர், வடக்கூர் என்று அழைக்கப்படுகிறது. தெக்கூரிலும், வடக்கூரிலும் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோயில்கள் (கி.பி.13-ஆம் நூற்றாண்டு) அமைந்துள்ளன. இக்கோயில்கள் தெக்கீசர் கோயில் என்றும், வடக்கீசர் கோயில் என்றும் இன்றும் அழைக்கப்படுகின்றன, தெக்கீசர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் இவ்வூர் தளிமருங்கூர் என்று பெயர் கூறப்பட்டுள்ளன. வடக்கீசர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்கள் அப்பகுதியை குலமாணிக்கபுரம் என்று குறிப்பிடுகின்றன. இன்று தளிமருங்கூர் என்ற ஓரே பெயரில் அழைக்கப்படும் இவ்வூர் பிற்கால பாண்டியர் காலத்தில் மருங்கூர் என்ற வேளாண் ஊராகவும், குலமாணிக்கபுரம் எனும் வணிக நகரமாகவும் இருபிரிவாக இருந்துள்ளது. இவ்வூர்  முத்தூற்றுக் கூற்றத்தில் அமைந்திருந்தது. முத்தூற்றுக்கூற்றம் சங்க காலத்திலேயே இருந்த ஒரு நாட்டுப்பிரிவு என்பதை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம்.. முத்தூற்றுக்கூற்றத்தில் ஒழிந்திருந்த பகைவனை பாண்டிய நெடுஞ்செழியன் வெற்றிகண்டான். கி.பி.5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலாங்குறிச்சிக் கல்வெட்டிலும் முத்தூற்றுக்கூற்றம் குறிப்பிடப்படுகிறது.

குலமாணிக்கபுரம் என்னும் இவ்வூர் கல்வெட்டுகளில் நகரம் என்று குறிப்பிடப்படுகிறது. சில காலங்களுக்குப் பிறகு இதுவே நானாதேசிப்பட்டினம் என்றும் பெயர் பெற்றிருந்தது. மருங்கூர் என்பதும் குலமாணிக்கபுரம், நானாதேசிப் பட்டினம் என்னும் ஊரும் ஓரே ஊராகவே ஒருகாலத்தில் இருந்துள்ளது. மருங்கூர்ப்பட்டினம் என்று இலக்கியங்களில் கூறும் பாண்டிய நாட்டுக் கடற்கரைப் பட்டினம் கடல் ஒட்டிய பகுதிகளில் வேறு எங்கும் இல்லாத நிலையில் இவ்வூரையே சங்ககால ஊராகக்கொள்வதில் தவறில்லை. சங்ககாலத் தடயங்களான கருப்பு சிவப்புப் பானை ஓடுகள் பெருமளவில் இவ்வூரில் கிடைப்பது இவ்வெண்ணத்திற்கு வலுவூட்டுவதாக உள்ளது.

மருங்கூர்ப்பட்டினம் இருந்த இடத்தில்தான் இன்றைய அழகன்குளம் ஊர் அமைந்துள்ளது என்று அண்மைக்கால ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.[2] ஆனால் அக்கருத்து மறுபரிசீலனைக்குட்பட்டதாகும். அழகன்குளம் என்பதும் மருங்கூர்ப் பட்டினம் என்பது ஓரே சமயத்தில் சிறந்து விளங்கிய வெவ்வேறு கடற்கரை பட்டினங்கள் என்றே கொள்ளவேண்டும்.

பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்கள்
இவ்வூரின் தென்பகுதியில் தெக்கீசர் கோயில் என்றும், வடக்குப் பகுதியில் வடக்கீசர் கோயில் என்றும் இரண்டு கோயில்கள் அமைந்துள்ளன. இவ்விரண்டிலும் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுக்களும் இடம் பெற்றுள்ளன.

தெக்கீசர் கோயில்
இக்கோயில் மிகவும் இடித்த நிலையில் உள்ளது. கருவறை,அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகிய அங்கங்களைக் கொண்ட சிறிய கோயில் இது. விநாயகர், முருகன், பைரவர் ஆகிய தெய்வங்களுக்குச் சிற்றாலயங்கள் திருச்சுற்றில் அமைந்துள்ளன. கோயில் மிகவும் இடிந்த நிலையில் உள்ளதால் இங்குள்ள கல்வெட்டுக்களை முழுமையாகப் படிக்க முடியவில்லை. கருவறைத் தென்புறச் சுவரில் உள்ள ஒரு கல்வெட்டு மட்டும் படிக்கும் நிலையில் உள்ளது.

இக்கல்வெட்டின் மூலம் இக்கோயிலின் பெயர் பிரம்மீஸ்வரம் உடையார்கோயில் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது. மன்னர் பெயர் கல்வெட்டில் குறிப்பிடப்படவில்லை. பாண்டிய மன்னனுடைய ஆணையாக இக்கல்வெட்டு விளங்குகிறது. இக்கோயிலின் திருப்படி மாற்றுச் செலவினங்களுக்காக தளிமருங்கூருக்கு அருகில் இருந்த மாவூர் என்னும் பல்லவராயநல்லூரை விலைக்கு விற்று வழங்கிய செய்தி கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. வீரகேரளபுரமான நானாதேசிப் பட்டினத்து திருவிக்கரமன் சக்கரவர்த்தியான வீரபாண்டி ஜகவீர ராம சக்கரவர்த்திக்கு அஞ்சுகோட்டைப்பற்றினைச் சேர்ந்த செழியதேவனும் குலசேகர அஞ்சுகோட்டை நாடாழ்வானும் சேர்ந்த இவ்வூரை விலைக்கு விற்றுள்ளனர். விலைக் கிரயத்தொகை கோயில் பணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கலாம்.

இக்கல்வெட்டில் இடம் பெறும் மாவூர் தளிமருங்கூருக்கு அருகிலேயே தற்போது உள்ளது. பிற்காலப் பாண்டியர் காலத்தில் இவ்வூருக்கு பல்லவராசநல்லூர் என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.

வடக்கீசர் கோயில்

ஊரின் வடபகுதியில் அமைந்துள்ளதால் இது வடக்கீசர் கோயில் என மக்களால் அழைக்கப்படுகிறது. ஆனால், இங்குள்ள கல்வெட்டுக்களில் கோயிலின் பெயர் உலகநாத ஈசுவரம் என்று குறிக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு கல்வெட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டுக்கள் யாவும் கி.பி. 13 – ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையே. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவை இரண்டும் மற்றவை அவன் சமகாலத்ததாகவுமே உள்ளன. இக்கல்வெட்டுக்கள் இரண்டில் ‘குடிதாங்கி மதிதொங்கனான கங்கை நாராயண சக்கரவர்த்தி’ என்னும் அதிகாரி ஒருவன் இடம் பெறுகிறான். இவன் முன்னர் குறிப்பிடப்பட்ட தெக்கீசர் கோயில் கல்வெட்டிலும் இடம் பெறுகிறான்.

இக்கல்வெட்டுக்கள் ஓரே அரச ஆணையை அதிகாரிகள் பெற்றுத் திரும்ப கோயில் நிர்வாகிகளுக்குப் பிறப்பித்த செய்தியைத் தருகின்றன. சடையனேம்பல் என்ற ஊர் உலகநாத ஈசுவரம் கோயிலுக்காக விற்றுக் கொடுக்கப்பட்டது என்பதே செய்தியாகும். இது கங்கை நாராயணச் சக்கரவர்த்தி ஓலை என்று அரச அதிகாரியின் ஆணையாகவும் வெட்டப்பட்டுள்ளது.

வடக்கம்மன் கோயில்
வடக்கீசர் கோயிலுக்கு வடக்கில் சிறு கிராம தெய்வக் கோயில் ஒன்று உள்ளது. வடக்கம்மன் கோயில் என்று இன்று அழைக்கப்படும் இக்கோயில் ஒரு கல்வெட்டில் ’அமரர் தொழு நங்கை’ கோயில் எனப்படுகிறது. இக்கல்வெட்டின் மூலம் இக்கோயிலுக்கு இவ்வூரில் வாழ்ந்த கைக்கோளார்களில் நிரயன் சீவலஞ்சுப் பெருமான் என்பவர் செய்த ஒரு தருமம் பெறப்படுகிறது. கைக்கோளர் என்போர் நெசவுத் தொழில், துணி வணிகத்தில் ஈடுபட்ட பிரிவினராவர். இதன் மூலம் இவ்வூரின் வணிகத்தொடர்பு உறுதிப்படும்.


[1] தளிமருங்கூர் களஆய்வு இக்கட்டுரை ஆசிரியாராலும், கல்வெட்டு ஆய்வாளர்
முனைவர் வெ. வேதாசலம் அவர்களாலும் மேற்கொள்ளப்பட்டது.

[2] Abdulmajeed, A, Thulasiraman, D., and Vasanthi,
S., 1992, Alagankulam: A Preliminary Report, state Department of Archaeilogy, Madras,p.2.  




________________________________________________________


 Dr. C. Santhalingam
Mobile No: 9894687358,
Email ID: csantham@hotmail.com, pchrmadurai@gmail.com
________________________________________________________