Friday, March 31, 2017

அரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல்


-- அறம் கிருஷ்ணன்

தேன்கனி கோட்டைக்கு அருகே சந்தனப்பள்ளியில் அரசகுலப் பெண்கள் போர்செய்யும் காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதல் முறையாகக் கண்டுபிடிப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டைக்கு அருகில் உள்ள சந்தனப்பள்ளி எனும் ஊரில் அரச குலத்தைச்சேர்ந்த பெண்கள் போர் செய்யும்காட்சி கொண்ட நடுகல் தமிழகத்தில் முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தேன்கனிகோட்டையை சேர்ந்த திரு. சுகுமார் கொடுத்த தகவலின்பேரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அறம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த அறம்கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சீனிவாஸ்இராசு, காமராஜ், சிவக்குமார், முருகேசபாண்டியன் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட்ட  களஆய்வில் இந்த புதிய நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.




ஓசூரை சுற்றியுள்ள கிராமங்களான குடிசெட்லு, கொத்தூர், சின்னகொத்தூர், தேர்பேட்டை, உளிவீரனள்ளி, கெலமங்கலம், பைரமங்கலம், பாராந்தூர், தளி, அஞ்செட்டி போன்ற இடங்களில் எல்லாம் குறைந்தது இருபத்தைந்து நடுகல்லாவது இருக்கும். பாரந்தூரில் பாம்பு கடித்து இறந்து போனதற்காக வைக்கப்பட்டுள்ள நடுகல், தேர்பேட்டையில் இருக்கும் யானை குத்தப்பட்டான் கல், பஸ்தியில் இருக்கும் புலிகுத்தப்பட்டான் கல், சின்னகொத்தூரில் இருக்கும் குதிரை குத்தப்பட்டான்கல் என இப்படி பலவகையான நடுகற்கள் இருந்தாலும் இது புதுவகையான நடுகல்லாகும்.





தேன்கனிகோட்டையிலிருந்து பயணித்து இடதுபுறம் திரும்பி பெட்டமுகிலம் போகும் சாலையில் பத்து கி.மீ தூரம் பயணம் செய்தால் சந்தனப்பள்ளி வருகிறது. ஊர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சற்றுதூரம் தள்ளி இடதுபுறம் திரும்பி விவசாய நிலம் வழியே நடந்து சென்றால் பன்னியம்மன் ஏரிகோடி வருகிறது. இங்குதான் இந்த வகையான நடுகல் இருக்கிறது. கல்வீடு அமைப்பில் செய்யப்பட்ட அமைப்பில் இடதுபுறக் கல்லில் இக்கற்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல் மூன்று பெண்சிற்பங்கள் மூன்று குதிரையின் மீது அமர்ந்துள்ள நிலையில் செதுக்கப்பட்டுள்ளது.மூன்று பெண்களின் வலது கரத்தில் சிறிய ஆயுதமும் இடது கரம் மேல்நோக்கி மடிந்த நிலையிலும் செதுக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் மூன்றாவது பெண்சிற்பங்களுக்கு மேல் குடைபிடிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு பெண்களும் அரசிக்கு அடுத்த நிலையிலிருந்து போர் செய்பவர்களாக இருக்க வேண்டும்.நடுவில் உள்ள பெண்சிற்பம் அரசியாக இருக்க வேண்டும். அவரின் தலைக்கு மேல் மட்டும் வெண்கொற்றக்குடை பிடிக்கப்பட்டுள்ளது. 





இவ்வூரைப் பெண்ணரசி ஆட்சி செய்திருக்க வேண்டும். அப்படி ஆட்சி செய்யும்போது ஏற்பட்ட சண்டையில் இம்மூவரும் இறந்திருக்க வேண்டும். போரில் இறந்து போன இவர்களின் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்க வேண்டும். மேலும் ஒரு போர் வீரர் வாளும், கேடயத்துடன் முன்வரிசையில் நிற்கிறார். அரசியின் பாதுகாப்புப் படைவீரராக இருக்க வாய்ப்பிருக்கிறது. இச்சிற்பங்களின் மேற்புறத்தில்  சிறுசிறு கோடுகள் நிறையச் செதுக்கப்பட்டுள்ளதை பார்க்கும் போது போர் நடந்த இடம் போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னொரு நடுகல்லும் இரண்டு பெண்கள் குதிரையின் மேல் இருப்பதுபோல் சிற்பம் உள்ளது. இன்னொரு வகையில் பார்க்கும்போது விஜயநகரப்பேரரசின் இரண்டாம் கம்பண்ணனின் மனைவி மதுரை விஜயத்தின் போது அரசனின் உடன் சென்று போரில் ஈடுபட்டதுண்டு. அப்படியும் கூட இக்கற்சிலை இருக்கலாம் என்று திரு.வீரராகவன் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். திரு.Dr. பூங்குன்றன் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பலரும் இது நடுகல்வகையைச் சார்ந்ததுதான் என்றும் திரு.தி.சுப்பிரமணியன் அவர்கள் இது சதிக்கல்லாக இருக்கவும் வாய்ப்பிருப்பதாக கருத்துரைத்தார்.

இதுவரை கண்டறியப்பட்ட அனைத்து நடுகல்லிலும் ஆண்சிற்பம் வாளோடு நிற்பதும், அருகில் பெண்சிற்பம் நிற்பது போலத்தான் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் மூன்று பெண்சிற்பங்கள் குதிரையின்மேல் அமர்ந்து போர் செய்வது போல் காட்டப்பட்டுள்ளது இங்குதான் முதன் முறையாகக் காணமுடிகிறது. இவற்றைப் பாதுகாக்க தொல்லியல் துறையும் மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும்.



______________________________________________________


அறம் கிருஷ்ணன்
தலைவர்-அறம் வரலாற்று ஆய்வு மையம் ஒசூர்
Krishnan A Krishnan A
https://www.facebook.com/krishnana.krishnana.9
______________________________________________________

Saturday, March 25, 2017

எழுத்துக்களை ரத்த சதையாக்கிய அசோகமித்திரன்



- ருத்ரா இ பரமசிவன்

 

thanks to: http://blogs.timesofindia.indiatimes.com/wp-content/uploads/2016/04/ashokmitran.jpg


"எனக்குப் பிடிக்காதது என்றால்
'தண்ணீர்', 'கரைந்த நிழல்கள்'
ஆகியவற்றைச் சொல்லலாம்.
என்னவோ அவற்றை எழுதி விட்டேன்."

இது ஒரு நேர்காணலில்
அசோகமித்ரன் அவர்கள் சொன்னது.
இது இந்து மதத்தின்
அடி மனத்து தத்துவம்.
குழந்தைகள் பூக்கள்.
குழந்தைகள் தெய்வங்கள்.
அதெல்லாம் சரி தான்.
ஆனால் அந்தக் குழந்தைகளை
அங்கங்கே வீசிவிட்டு
என்னுடன் வா
என்று
முனிபுங்கவர்கள்
தங்கள் பத்தினிகளை
இழுத்துக்கொண்டு போனதை
சினிமாக்களில் பார்த்திருக்கிறேன்.
தம் படைப்புகள்
வெறும் ரத்த சதையாலான‌
மாம்சங்கள்.
பிரம்மம் எனும்
எல்லாம் இறந்த (கடந்த) நிலைக்குப்போக‌
இடைஞ்சல்களாக இருப்பவை இவை.
இவற்றை விட உயர்ந்த
அந்த மாம்சம் (மீ மாம்சம்)
அடைவதே முக்தி.
இந்த இந்து அடிப்படைவாதமே
எல்லாவற்றையும்
மறுக்கும் வெறுக்கும் காரணிகள்
ஆகிப்போகின்றன.

அசோகமித்திரனுக்கு
அவருடைய
"கரைந்த நிழல்கள்"
ஏன் பிடிக்கவில்லை என்பதற்கு
விரிவான "நேர்காணல்கள்"பற்றிய‌
விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
இருப்பினும்
ஜெமினி ஸ்டுடியோவில்
அமரர் வாசன் அவர்கள் குறிப்பிட்டது போல்
எழுத்தாளனுக்கு தனிப்பகிர்வாக‌
இலக்கியம் படைக்கும் வேலையில்லை.
அவர் திரைப்படங்களுக்கு
"கதை இலாகாக்களே"
முக்கிய ஆணிவேர்.
அப்படி அந்த ஸ்டுடியோவில்
அந்நியப்பட்டுப்போன‌ உணர்வை
"கரைந்த நிழல்களில்"அவர் காட்டியிருக்கலாம்.
ஆயினும்
மிக மிக இலக்கியத்தரம் வாய்ந்த‌
நாவல் எதுவென்றால்
கரைந்த நிழல்கள் மட்டுமே.
ஒரு நாவலை
அப்படியே வரிக்கு வரி காட்டும்
திரைஇலக்கியத்தை
காட்டிய படைப்பாளிகள்
சத்யஜித்ரே..அடூர் கோபாலகிருஷ்ணன்
போன்றவர்கள் மட்டுமே ஆகும்.
எனவே அவரது
கரைந்த நிழல்களில்
எழுத்தின் உயிர்ப்பு
சினிமாக்கதைகளில் வசூல்களால்
கரைந்தே போய்விடுகின்றன‌
என்பதை உட்கருத்தாய் அல்லது ஏக்கமாய்
சொல்லியிருக்கலாம்.
நிழல் என்பதே "ஒன்றின் நிழல்" தான்.
ஆனால்
நிழலின் நிழல் என்றால்
அதன் நாளத்துடிப்புகள்
அதன் பசித்தீயின் நாக்குகள்
அதன் அவமான அவலங்கள்
எல்லாம்
எப்படியிருக்கும் என்பதே
அவரது அந்த உயிரோட்டமான நாவல்.
திரைக்குப்பின்னே
திரைக்குப்பின்னேயும் இருக்கிற‌
திரைக்குப்பின்னே
மீண்டும் மீண்டும்
இப்படி பலத்திரைகள்
உரிக்கப்பட்டதற்குப் பின்னே
உள்ள‌
அந்த ரத்தம் வடியும் காயங்களின்
நிர்வாணமே அந்த நாவல்.
நிழல் தரும் ஆலமரம் அந்தத் தயாரிப்பாளர்.
அவர் தலைமறைவாகி விடுகிறார்.
நிழல்களின் காலை வெட்டிவிடுவதைப்போன்ற‌
அவற்றின் முகங்களையே அகற்றிவிடுகின்ற‌
ஒரு சூன்யத்தின் அவஸ்தைகளை
எழுத்துகளுக்குள் மின்சாரம் பாய்ச்சியிருக்கிறார்.
அறுபதுகளின் உயர்ந்த எழுத்தாளர்.
எழுத்துக்களை ரத்த சதையாக்கியவர் அசோகமித்திரன்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு உயிர்த்து
தளும்பும் எழுத்துகளின்
அணைக்கட்டுகள் அவர் படைப்புகள்.
அந்த அசோகன் கல்வெட்டுகளில் இருக்கிறார்.
இந்த அசோகன் சொல்வெட்டுகளில்
தன்னைச் செதுக்கிக்கொண்டிருக்கிறார்.

______________________________________________________
 

கவிஞர் ருத்ரா இ.பரமசிவன்
ruthraasivan@gmail.com
______________________________________________________
 

Friday, March 24, 2017

கொல்லிமலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு தரும் செய்தி


நூ த லோ சு, மயிலை:
இணைய உலாவினில் கண்ட கொல்லி மலை அறப்பளீசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்றின்  படம் கருப்புவெள்ளைப் படமாக  மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனில் உள்ள வரிகளின் செய்தி என்ன சொல்கிறது? இக்கல்வெட்டு  எந்தக் காலகட்டம் சார்ந்தது ?

 



 
ref: http://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/arapaleeswarar-temple-kolli-hills.html
image: http://4.bp.blogspot.com/-c61CHOwxQcY/VnveF44HqnI/AAAAAAAAVOM/RptEEpa4hvc/s640/IMG_0662.jpg



கல்வெட்டு அறிஞர் திரு துரை  சுந்தரம், கோவை: 


கல்வெட்டுப் பாடம் :

1  மாஹேச்வரருமாய் ஆராய்ந்து தண்டமுங் கொண்டு முட்...
2  (த)ந்மம் இறக்குவான் வழி ஏழச்சமறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீ பா(தம்)
3  (ள்)வது மழபெருமாள் மருமகள் கண(லை?)  தாதியார் (அணிமக்க/    அணிமுரி ?) 
4  நாளுக்குத் திருவி(ள)க்குக்கும் தகணிக்கும்   கொல்லிமலை  நாட்டார்............
5  யேழச்சம் மறுவாந் ரக்ஷித்தாந் ஸ்ரீபாதமென் தலை மேல(ன)
6  ந்திக்கு  திரு .................க்கும் ..........

 
மாகேசுவரர்  என்போர் கோயில் நிவந்தங்களைக் கண்காணிக்கும் நிர்வாகிகள்.
முதலிலேயே, ஒரு நிவந்த தன்மததைத் தடுப்பவன் ஏழு பிறவிகளிலும் 
எச்சம் (மக்கள் பரம்பரை) இல்லாமல் போவான் என்றும், தன்மத்தைக் 
காப்பவன் பாதத்தைத் தலைமேல் வைத்து வணங்குவேன் என்றும் குறிப்பிட்டுவிட்டுப் பின் பகுதியில் கோயிலுக்கு அளிக்கும் விளக்குக் கொடை பற்றிக் கல்வெட்டு  கூறுகிறது. கொல்லிமலை நாட்டார் பொறுப்பில் கொடை தரப்படுகிறது போலும்.  கொடை,  திருவிழா நாள்களுக்கும் சேர்த்தே தரப்படுவதாகத் தெரிகிறது. கொடையாளி ஒரு பெண்மணி என்பது 
குறிப்பிடத்தக்கது. அவள், மழபெருமாள் என்பவரின் மருமகள் என்று 
கருதலாம். அணிமக்க/ அணிமுரி   என்று படிக்கும் வண்ணம் உள்ள 
எழுத்துகளின் பாடம் ஐயமாக உள்ளது. காலம் சோழர் காலமாக இருக்கலாம்.
எனில், 11-13  நூ.ஆ. எனக்கொள்ளலாம்.
குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகளும் “ஸ்ரீ”  யும் கிரந்த எழுத்துகள்.