Wednesday, September 25, 2019

கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது . . .


 ——    ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப.




கீழடி பற்றிய உரையாடல்கள் தடம் மாறிச் சென்று விடக் கூடாது என்பதால்
வினா விடையாக இப்பதிவுகள்.‌

1.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வு பற்றிய உரையாடல்களில் தமிழ் / தொல் தமிழ் / திராவிடம் என்ற சித்தரிப்புகளில் எது மிகவும் பொருத்தமானது?

விடை:
ஐயத்திற்கே இடமில்லாமல் தமிழ்ப் பண்பாடு என்பதே பொருத்தமானது ஆகும். இந்தத் தடயங்கள் சங்க காலம் என்று அறியப்படும் கால கட்டத்தைச் சேர்ந்தது. கீழடி சங்க இலக்கியங்கள் போற்றிக் கொண்டாடும் வைகை நதிக்கரையில் மதுரைக்கு அருகே அமைந்திருப்பதாலும் வைகைக் கரையின் இருபகுதியிலும் பல அகழ்வாய்வு இடங்கள் இருப்பதாலும் இதை "வைகைக் கரை தமிழ்ப் பண்பாடு" என்று அழைப்பது பொருத்தம் என்று தோன்றுகிறது.‌ சங்க இலக்கியம் ஆகச் சிறந்த தொல் தமிழ் இலக்கியம்.‌ வைகைக்கரை அதன் முக்கியமான களம்.‌ எனவே இந்த நாகரிகம் பற்றிக் குறிப்பிடும் போது திராவிடம் என்ற‌ சொல்லைப் பயன்படுத்த ஒரு தேவையும் இல்லை. அது "புரிதல் விகாரத்தில்" போய் முடியும். அது நல்லது அல்ல.

2.
கேள்வி:
சிந்துவெளி பற்றிய உரையாடல்களில் "திராவிடம்" என்ற "தமிழ்" என்ற சொல்லாடல்களின் பொருத்தப்பாடு என்ன?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டைக் கட்டமைத்தவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு ஊகங்கள் இருந்தாலும் சிந்துவெளி மகுடத்திற்கான முக்கியமாக இரண்டு வேட்பாளர்கள் தான்.

1. "திராவிட மொழிக் குடும்பம்" ( கிழக்கு ஈரான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி நடு இந்தியாவிலும் கிழக்கு இந்தியா நேபாளம் ஆகிய இடங்களில் அங்கும் இங்கும்; தென்னகம் முழுவதும்; இலங்கையிலும் இப்போது உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகிற பல மொழிகள் அடங்கியது) என்று அறியப்படும் மொழியை / அல்லது மொழிகளைப் பேசிய பண்பாட்டினர்.

2. இந்தோ - ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த சமஸ்கிருதம் என்ற வட மொழியை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டினர்.

சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் தமிழ்த்தொன்மங்களுக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சி என்ற முறையில் ஒரு மிக ஆழமான உறவு இருந்திருக்கக்கூடிய சாத்தியம் உள்ளது.

ஆனாலும் இந்த தொடர்பு மொழியியல் அடிப்படையில் "திராவிடக் கருதுகோள்" என்றே ஆய்வாளர்களிடையே தொடக்கம் முதல் அறியப்படுகிறது. சிந்துவெளி எழுத்துப் பொறிப்புகளை இது வரை வாசிக்க இயலாததால் குறிப்பிட்ட ஒரு மொழி என்று சொல்லாமல் மொழிக்குடும்பத்தின் பொது அடையாளமாக "திராவிடம்" என்ற அடையாளத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

பிராகுயி என்ற திராவிட மொழி சிந்துவெளிப் பண்பாட்டின் கடைவாசல் பகுதிகளில் இன்றும் பேசப்படுவதாலும் கோண்டி போன்ற நடு இந்திய திராவிட மொழியின் சில பண்பாட்டுக் கூறுகள் சிந்துவெளி பொறிப்புகளுடன் நெருக்கம் காட்டுவதாலும் இத்தகைய பொதுவான சித்தரிப்பு தேவைப்படுகிறது.

சிந்துவெளிப் பண்பாடே பல்வேறு திணைகளைச் ( நிலப்பின்னணிகள்) சேர்ந்த பலவகையான சமூகப் பொருளாதார பண்பாட்டுப் பின்னணியின் கூட்டு இயக்கம் தான் என்று தோன்றுகிறது. மலை நில மக்களின் வாழ்விற்கும் கடல் கடந்து வணிகம் செய்த வணிகர்களின் வாழ்க்கைக்கும் மிகுந்த இடைவெளி இருக்கும். ஆனால் சிந்துவெளிப் பண்பாடு இந்த இரண்டு துருவங்களும் எளிதில் சேர்ந்து இயங்கிய பண்பாட்டின் தொடர்ச்சியும் நகர்மய வாழ்வின் உன்னதமான உச்சக் கட்டமும் ஆகும்.

சிந்துவெளியின் பரந்த நிலப்பரப்பிலும் பல்வேறு நகரங்களிலும் நகர அமைப்பு, செங்கல் அளவு, எடைக் கற்கள், எழுத்துப் பொறிப்புகள், முத்திரைகள் என்று பொதுக்கூறுகள் உள்ளன. இந்தத் தரக் கட்டுப்பாடு ஒரு பண்பட்ட மொழி/ தொடர்பு மொழி இல்லாமல் சாத்தியமாகாது. ஆனால் அந்த மொழி எதுவென்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை.

ஆனால் அந்த உயர் நாகரிகத்தின் தொடர்ச்சியை அந்தப் பண்பாட்டோடு பொருத்தப்பாடு கொண்ட இன்னொரு ஆவணப்படுத்தப்பட்ட அடுத்தகட்ட பண்பாட்டு மரபில் இலக்கிய மரபில் தான் தேட வேண்டும். அங்கு தான் சங்க இலக்கியம் முக்கியமான சான்றாக நிற்கிறது.

ஒருவேளை சிந்துவெளிப் பண்பாட்டின் பொது நாகரிக மொழியாகத் தமிழ் அறியப்படும், நிறுவப்படும் சூழல் வந்தால் அப்போது ஆய்வாளர்கள் சிந்துவெளிக்கான மொழி அடையாளம் குறித்துத் தெளிவாக உரையாடுவார்கள்.

அதுவரை சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி குறித்த தேடலில் "திராவிடக் கருதுகோள்" என்ற சொல்லாடல் தேவையானதும் தவிர்க்கமுடியாததும் ஆகும்.

இல்லையென்றால் அது புதிய குழப்பத்தை ஏற்படுத்தும்.

3.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வுகள் உண்மையில் எவ்வளவு முக்கியமானவை ? இந்த அகழ்வாய்வுகளின் முக்கிய பங்களிப்பு என்ன?

விடை:
கீழடி அகழ்வாய்வுகள் மிக மிக முக்கியமானவை. காரணங்கள்.

1. பழந்தமிழ் நாட்டில் நகர வாழ்வியலுக்கான முதல் அகழ்வாய்வுத் தடயம் கீழடி. இதற்கு முன் ஆதிச்சநல்லூரில் கிடைத்த புதைகுழிப் பகுதிகளில் கிடைத்த தரவுகள் மேலும் முன்னெடுக்கப்படவில்லை. அரிக்கமேடு, கொடுமணல், அழகன்குளம் போன்ற பல அகழ்வாய்வுகள் உள்நாட்டு வெளிநாட்டு வணிக மரபிற்குச் சான்றளித்தன. ஆனால் நகர வாழ்க்கை குறித்த தடயங்கள் இல்லை என்ற குறையைத் தீர்க்கிறது கீழடி.

2. இந்தியாவின் ஆகச் சிறந்த வாழ்வியல் இலக்கியமான சங்க இலக்கியம் தீட்டும் துல்லியமான சொற்சித்திரம் கற்பனையான கட்டுக்கதை அல்ல; அவற்றில் பண்பாட்டு வரலாற்றுக்கான வழிகாட்டுதல்களும் அடங்கியுள்ளன என்ற கருத்தை கீழடி மெய்ப்பிக்கிறது.

3. "தமிழி" யா தமிழ் பிராமி யா என்ற சொல்லாடல்களை விட என்பதை விட முக்கியமானது இந்த மண்ணில் தமிழ் மொழி சார்ந்த வரிவடிவத்தின் கால நிர்ணயம் கி.மு 6 ஆம் நூற்றாண்டிற்கு நகர்ந்துள்ளது என்பது தான். (இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்). அத்தகைய ஆய்வாளர்கள் சொல்வதைத் திறந்த மனதோடு செவி மடுக்க வேண்டும். இதில் முரண்பட்ட கருத்துகளுக்கு வாய்ப்பு உள்ளது என்பதை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும்.

4. நான்காம் கட்ட‌ ஆய்வில் மட்டும் 1001 பானைக்கீறல்கள் கிடைத்துள்ளன என்பது மகிழ்ச்சிக்குரியது. இவற்றில் சில சிந்துவெளி பொறிப்புகளோடு ஒத்துப் போகின்றன என்பதும் கவனத்திற்கு‌‌ உரியது. சிந்துவெளி- தமிழ்த் தொடர்பை இதை வைத்து மட்டுமே வைத்து உறுதி செய்யமுடியாது என்பது உண்மைதான். ஆனால் சிந்துவெளி- சங்க காலம் - தமிழக பானைக்கீறல்களை பொருத்திப் பார்ப்பது இது முதல் தடவை அல்ல. பல. அறிஞர்கள் இதுபற்றி ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். கீழடியில் இது மேலும் தெளிவாகிறது அவ்வளவுதான். அதே நேரத்தில் சிந்துவெளி பொறிப்பைப் போலவே இதன் பொருள் என்ன என்பது புரியாவிட்டாலும் இது முக்கியமான துணைச்சான்று என்பதை மறுக்கமுடியாது.

4.
கேள்வி:
கீழடியில் இதுவரை வெளியான அகழ்வாய்வுத் தரவுகளின் அடிப்படையில் அங்கு சமயம் மற்றும் இறைவழிபாட்டை முன்னிலைப்படுத்தும் தடயங்கள் கிடைக்கவில்லை என்பதை வைத்து வைகைக் கரை தமிழ்ப்பண்பாட்டு மக்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கையற்றவர்கள் என்ற முடிவுக்கு வர முடியுமா?

விடை :
முடியாது. ஏனெனில் கீழடியில் இது வரை தோண்டப்பட்டு இருப்பது சிறு பகுதியே. எதிர்காலத்தில் தோண்டப்படும் போது எத்தகைய சான்றுகள் கிடைக்கும் என்பதை இப்போது ஊகிக்க முடியாது.‌ அப்படியே எதுவும் கிடைத்தாலும் அடுக்கு நிலை அகழ்வாய்வின் அடிப்படையில் (Stratigraphy) எந்த அடுக்கில் என்ன கிடைக்கிறது என்பதே முக்கியமானது. அதைப் பொறுத்தே கால நிர்ணயம் மற்றும் பண்பாட்டு நிலை பற்றி முடிவு செய்வார்கள்.

சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நடுகல் வழிபாடு, மரத்தில் உறையும் தெய்வம், கொல்லிப் பாவை, கானுறை தெய்வம், அணங்கு, வேலன் வெறியாட்டு போன்ற மரபுகள் பேசப்படுகின்றன. திணை சார்ந்த கருப்பொருளாகவும் கடவுளர் அடையாளம் காட்டப்படுகிறார்கள். தாய்த் தெய்வ வழிபாட்டின் மேலதிகச் செல்வாக்கும் புலனாகிறது.

ஆனால் சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலில் நம்பிக்கைகள் பழக்கவழக்கங்கள் ( Beliefs and Faith System) இருந்தன என்றாலும் மனித வாழ்வியலின் நடைமுறை எதார்த்தமே காத்திரமாகக் கொண்டாடப்படுகிறது.

"ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே"

என்ற‌ புறநானூற்று ( 335) வரிகள் தொல்தமிழர் சமயத்தின் முன்னுரிமையைத் தெளிவாக்குகிறது. எதிரிகளிடமிருந்து தனது குடிகளைக் காக்கப் போரிட்டு மாண்ட வீரனுக்கு எழுப்பப்படும் நடுகல் தான் தமிழர் வழிபாட்டு மையப்புள்ளி என்பதை இது தெளிவுபடுத்துகிறது. அதுவே நீத்தார் பெருமையின் நிலைக்களன்.

எதுவாயினும் வைகை கரை தமிழ்ப் பண்பாட்டுக் காலத்தின் வழிபாட்டு மரபுகள், நம்பிக்கைகள், முன்னுரிமைகள், பற்றி எதிர்கால அகழ்வாய்வுகள் சான்றளிக்கக் கூடும்.

எனவே இதுபற்றி தீர்மானமான தீவிரக் கருத்துகளைத் தவிர்ப்பது நலம் என்று தோன்றுகிறது.

There is an aphorism, "Absence of evidence is not evidence of absence,"

"தடயம் கிட்டவில்லை என்பது தடயம் இல்லை என்பதற்கான தடயம் இல்லை"

இது சிந்துவெளிக்கும் கீழடிக்கும் மட்டும் அல்ல எந்தச் சூழலுக்கும் பொருந்தும்.

May like to google for:

Evidence of absence
Absence of Evidence

5.
கேள்வி :
கீழடியில் கிடைத்திருக்கிற எழுத்து‌ப் பொறிப்புகள் ஏராளமாகக் பானைக்கீறல்கள் எதைக்காட்டுகின்றன? சங்க காலக் கல்விப்பரவலாக்கத்திற்கு இதை ஒரு அடையாளமாகக் கருத இடமுண்டா?

விடை:
உறுதியாக.‌ கீழடி எழுத்துப் பொறிப்புகள் எழுதப்பட்டதாகக் கருதப்படும் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டா, ஐந்தாம் நூற்றாண்டா என்பதை விட முக்கியமானது இது தமிழக மண்ணில் முதல் கண்டுபிடிப்பு அல்ல என்பதும் தான். இது தமிழி எழுத்துப் பொறிப்புகள் ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன அவற்றின் காலகட்டம் கி.மு. மூன்றாம் - ஐந்தாம் காலகட்டத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன. எனவே இது முதல் முறை அல்ல; இதன் கால நிர்ணயம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது என்பது தான் புதிய தகவல்.

ஆனால் என் மட்டில் நான் அதை விட முக்கியமாகக் கருதுவது கீழடி வாழ்வியலுக்கும் சங்க இலக்கியத்திற்கும் இடையிலான இணக்கம்.

கல்விப் பரவலாக்கத்தின் முதல் உரைகல் (you can say " litmus test") கருத்தியல் அடிப்படையிலும் நடைமுறை எதார்த்தத்திலும் கல்வி அனைவருக்குமானதா என்பதே ‌ ஆகும்.

கீழடி பானைக் கீறல்களும் "தமிழி" எழுத்துகளும் யாரால் கீறப்பட்டது அல்லது எழுதப்பட்டது என்பதும் முக்கியம். இவை பேரரசர்களின் கல்வெட்டுகளோ செப்பேடுகளோ இல்லை. இதில் "அரசாங்கத்தின்" கரங்கள் இல்லை.

அது பானையை வனைந்த‌ குயவன் எழுதியது என்றால் அது "முதுவாய் குயவ" (Potter of the ancient wisdom) என்ற சங்க இலக்கியப் பதிவுக்குக் கிடைத்த சான்றிதழ். அது பானையை வாங்கிய பலராலும் எழுதப்பட்டது எனில் அது கல்விப் பரவலாக்கத்திற்கு உரைகல்.

இத்தகைய கல்விப்பரவலாக்கத்திற்கு சங்க இலக்கியம் காட்டும் வாழ்வியலின் அறிவு சார்ந்த அணுகுமுறை ( Knowledge based approach) முக்கியக் காரணம் ஆகும்.

இதற்கு புறநானூற்றில் வரும் ஒரு பாடல் ஒரு சோற்றுப் பதம். இதோ அந்தப் பாடல். ( புறநானூறு 183)

"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!
பிறப்போரன்ன உடன்வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்
முத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லூள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேல் பால் ஒருவனும் அவன் கண்படுமே"

—(புறம்-183)

அப்போதே "வேற்றுமை தெரிந்த" சமூகப் படிநிலை முறைகள் தலைதூக்கி இருக்கவேண்டும். ஆனால் கவிஞனாகிய தமிழ் மன்னன் அதிலும் ஆரியப் படை கடந்தவன் என்று பெயர் சூட்டிக் கொண்டவன் (நெடுஞ்செழியன் என்ற பெயர் தொல் தமிழ்க் கல்வெட்டிலேயே வருகிறது) அறிவுடையோன் காட்டும் வழியில் தான் தனது அரசு செல்லும் என்று தனது கவிதையின் மூலம் அறிவிக்கிறான். கல்விப்பரவலாக்கத்திற்கான அரசு சார்ந்த / ஆவணப்படுத்தப்பட்ட முதல் குரல் எனக்குத் தெரிந்த வரையில் இது தான்.

இந்த அறிவிப்பு எதிர்பார்ப்போ புனைந்துரையோ இல்லை என்பதைச் சங்க இலக்கியப் புலவர்களின் சமூகப்பின்னணிகளே சான்றளிக்கும்.

கொற்றவனும்...குயத்தியும்...
கணியனும்...கணக்காயனும்...
குறமகளும்..‌கொல்லனும்...
வணிகனும்..வண்ணக்கனும்...
சேரனும் சோழனும் பாண்டியனும்...
கூடிப் பாடிய கூட்டியக்கம் தான் சங்கத்தமிழ் என்ற ஆவணக்களஞ்சியம்.

கீழடியில் வெளிவரும் எழுத்துப் பொறிப்புகளும் குயவரோ பானை உரிமையாளரோ கீறிய‌ பானைக் கீறல்களும் இந்தக் கருத்தியலின் இன்னொரு உடல் மொழிதான்.

இன்னொரு வகையில் சிந்துவெளி வாழ்வியலும் சங்க இலக்கிய வாழ்வியலும் தொன்மத்தின் தொடர்ச்சியாக அடிக்கோடிடும் இயக்கங்களில் / இணக்கங்களில் இதுவும் ஒன்று.

எனவே கீழடிப் பானை எழுத்துகள் கீறல்கள் கல்விப்பரவலாக்கத்திற்கு சான்று என்பது சரியான வாதமே.

6.
கேள்வி:
தாமிரவருணி மற்றும் வைகைக் கரையோர வாழ்வியலுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டிற்கும் ஏதோ ஒரு (சமகால அல்லது சற்று பின்னரான) தொடர்பு இருந்திருக்கக்கூடும் என்பது கீழடி ஆய்வுத் தடயங்களின் அடிப்படையில் புதிதாக முன்வைக்கப்படும் புதிய வாதமா அல்லது இக்கருத்தியல் ஏற்கனவே நிலவியதா?

விடை:
இது இப்போது திடீரென்று தோன்றிய புதிய முன்மொழிவு அல்ல. இதற்கு ஏற்கனவே நீண்ட‌ பின்னணி உண்டு. ஏற்கனவே அகழ்வாய்வாளர்கள் "இருக்கக்கூடும்" என்று நினைத்ததை, பேசியதை, எழுதியதைத் தான் கீழடி அகழ்வாய்வுகள் "இருக்கிறது" என்று கண்கூடாகத் தடயங்களைச் சாட்சி வைத்து நிறுவி வருகின்றன.

அறிந்ததிலிருந்து அறியாததை அறிய முயற்சி செய்வது அகழ்வாராய்ச்சியின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாகும். அந்த அடிப்படையில் தான் இப்போது கீழடியில் நடைபெறும் அகழ்வாய்வு போன்ற அகழ்வாய்வுகளின் தேவையை 80 ஆண்டுகளுக்கு முன்பே கே. என். தீட்சித் 1939 இல் கோடிட்டுக் காட்டினார். அப்போது அவர் இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் தலைவராக இருந்தார் (Director General of Archaeological Survey of India). 1937 இல் இருந்து 1944 வரை அப்பொறுப்பிலிருந்த அவர் நிகழ்த்திய உரையொன்றை 1939 இல் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

தீட்சித்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மொகஞ்சதாரோவில் நடந்த சிந்துவெளி ஆய்விலும் ஈடுபட்டவர் அவர். சர் ஜான் மார்ஷல், மார்ட்டிமர் வீலர் போன்றோருடன் பணியாற்றியவர். எனவே சிந்துவெளிப்பண்பாடு பற்றிய ‌நேரடியான கள அனுபவம் அவருக்கு உண்டு.

பெண்கள் சங்கு வளையல்கள் அணிவது என்பது சிந்துவெளியின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். சங்கு வளையல் தொழிலை மனதில் வைத்து அகழ்வாராய்ச்சி செய்தால் சிந்துவெளிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான தொடர்பை நிறுவி விடலாம் என்ற எதிர்பார்ப்பு அப்படி ஒன்றும் மிகையான எதிர்பார்ப்பு அல்ல என்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தீட்சித் சொல்லியிருக்கிறார். அவரது கருத்து பின்வருமாறு:

"At no great distance from these newly discovered places is the Gulf of Cambay. It was at the ports of Cambay and Broach that the carnelian industry of India was concentrated and the extensive use of this material in the Indus cities renders its almost certain that further investigation in the Narbada valley will bring to light other settlements of that period.

Considering that the conch shell which is typical of the Indus valley civilization and which seems to have been in extensive use in Indus cities was obtained from south-east coast of the Madras Presidency, it would not be too much to hope that a thorough investigation of the area in Tinnevelly Dt. and the neighbouring regions such as the ancient sea port of Korkai will one day lead to the discovery of some site which would be contemporary with of even little later than the Indus civilization.” (Dikshit 1939: 13)"

இதில் கடைசி ஐந்தாறு வரிகளில் தீட்சித் தின் பட்டறிவை, தொலைநோக்குப் பார்வையை விளக்கும் வைர வரிகள். "தீட்சித்தின் தீர்க்க தரிசனம்" என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் அவர் சொன்னது ஆர்வக் கோளாற்றால் அல்ல. அனுபவ அறிவும் தரவு சார்ந்த தேடல்களின் மீதிருந்த நம்பிக்கையும் தான் இதற்குக் காரணம்.

பழங்காலத் தமிழ்நாட்டில் சங்கு அறுக்கும் / சங்கு அறுத்து வளையல் செய்யும் தொழிற் கூடங்கள் இருந்ததற்கான தடயங்கள் பல இடங்களில் கிட்டியுள்ளன. இப்போது கீழடி அகழ்வாய்வுகளிலும் சங்கு தொழில் தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன. இது தமிழ்நாட்டில் முதல் முறையும் அல்ல. சங்கு தொழிற்கூடத்திற்கான தடயம் கொடுமணலில் கிடைத்துள்ளது. அழகன்குளம் கொற்கை போன்ற இடங்களும் சான்றளிக்கின்றன.

80 ஆண்டுகளுக்கு முன்பு தீட்சித் கோடிட்டுக் காட்டியபடி " விரிவான விசாரணை" ( "thorough investigation") செய்திருந்தால் தமிழ்த்தொன்மங்கள் மட்டுமின்றி இந்தியாவின் தேதியிடப்படாத காலகட்டங்கள்/ அவற்றின் தொடர்ச்சியை எங்கு எப்படித் தேட வேண்டும் என்பதில் கூடுதல் தெளிவு கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

கீழடி போன்ற அகழ்வாய்வுகள் பாய்ச்சும் புது வெளிச்சத்தை தீட்சித் போன்ற அனுபவம் மிக்க அகழ்வாய்வாளர்களின் நெடுநோக்குப் பார்வையின் துணையோடு சீர்தூக்கிப் பார்ப்பது தரவு சார்ந்த ஆய்வுகளின் தவிர்க்க முடியாத அணுகுமுறை ஆகும்.

7.
கேள்வி:
கீழடி செங்கல் கட்டுமானங்களில் கண்டெடுக்கப்பட்ட செங்கல், சிந்துவெளி நாகரிக கால கட்டுமான செங்கல் – இவற்றுக்கு இடையே தொடர்பு ஏதும் உண்டா? இதை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

விடை:
சிந்துவெளிப் பண்பாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட செங்கற்களின் அளவை (அதாவது நீளம், அகலம், உயரம்) மட்டும் வைத்துப் பார்த்தால் சிந்துவெளிச் செங்கற்களையும் கீழடிச் செங்கற்களையும் ஒன்றெனக் கூற முடியாது.

சிந்துவெளிப் பண்பாட்டு செங்கற்களின் அளவு பெரும்பாலும் 28 செ.மீ*14 செ,மீ* 7 செ.மீ என்ற அளவில் (நீள, அகல, உயரம்) 4:2:1 என்ற விகிதத்தில் அமைந்தவை. கீழடியில் கிடைத்துள்ள செங்கற்கள் பெரும்பாலும் 36*24*6 செ.மீ என்ற அளவில் (6:4:1) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. கீழடியில் சில இடங்களில் 34*24*7 செ.மீ மற்றும் 38*24*7 செ.மீ 33*23*6 செ.மீ என்ற அளவிலும் செங்கற்கள் கிடைத்துள்ளன. ஆனால் பெரும்பாலும் 36*24*6 என்ற அளவே மிகுதியாக உள்ளது.

சிந்துவெளிப் பண்பாட்டை அறிவிக்கும் (1924) முன்னரே 1905 இல் அகழ்வாய்வு செய்யப்பட்ட, இந்தியாவின் வரலாற்றுக் காலத்தின் முதல் அகழ்வாய்வுச் செங்கல் சுவர் தடயம் என்று கருதப்படும் பீகாரிலுள்ள ராஜ்கீரில் (மௌரியப் பேரரசின் காலம்) கிடைத்த பழங்கால மதிற்சுவர்களில் பயன்படுத்தப்பட்ட செங்கல் 52*25*7 செ.மீ என்ற அளவில் (7.4: 3.5:1) என்ற விகிதத்திலும் 42*27*6 செ.மீ என்ற அளவில் 7:4.5:1 என்ற விகிதத்திலும் அமைந்துள்ளன.

இதனடிப்படையில் பார்த்தால் சிந்துவெளியின் ஆகச்சிறந்த செங்கல் பரிமாணத்தை வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவில் எந்த பிந்தையப் பண்பாடும் எட்டவில்லை என்பதே உண்மை. இதுபற்றி தனது கருத்தை கே.என் .தீட்சித் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார். அசோகர் காலத்துச் செங்கற்களின் அளவு சிந்துவெளிச் செங்கற்களை விட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆனாலும் இந்த கேள்விக்கான விடையை – சிந்துவெளிச் செங்கல்லிற்கும் கீழடிச் செங்கற்களுக்கும் இடையிலான அளவின் அடிப்படையில் நேரிடையான தொடர்பு இல்லை என்று கூறி முடித்துவிட முடியாது.‌ அளவின் அடிப்படையில் வேறுபாடு இருந்தாலும் பயன்பாட்டு ஒப்புமை (சுவர்கள், வடிகால்கள், தரைத்தளங்கள்) கவனிக்கத்தக்கது.

சிந்துவெளிப் பண்பாட்டின் மிக அடிப்படையான அடையாளம் செங்கற்களும் அச்செங்கற்களால் கட்டப்பட்ட சுவர்களும் கட்டிடங்களும் தான். சிந்துவெளிக்கு என்று ஒரு நிற அடையாளம் காட்டவேண்டும் என்றால் அது செவ்வண்ணம் தான். ஹரப்பா, மொகஞ்சதாரோ சிதைவிடங்களில் சிதறிக் கிடக்கும் செங்கற்களும் செம்பானை ஓடுகளும் தான் இதற்குச் சாட்சியம்.

சிந்துவெளிப்பண்பாடு இருந்த இடம் தெரியாமல் புதைந்ததற்குப் பின்னால் வடமொழி இலக்கியத்தில் செங்கல் அப்படி ஒன்றும் பெரிதாகப் போற்றப்படவில்லை. ஆனால் செங்கல் பற்றிய சங்க இலக்கியக் குறிப்புகளும் செங்கல் என்ற சொல்லின் பின்புலனாக விளங்கும் பொருளமைவு சார்ந்த கருத்தாக்கமும் முற்றிலும் மாறானது.

செங்கல் என்ற தமிழ்ச்சொல் ஒரே நேரத்தில் இரண்டு கருத்தைத் தெரிவிக்கும். செங்கல்லின் ஒரே அளவான செம்மை, ஒழுங்கு என்பது செங்கல்லின் தரக்கட்டுப்பாடும் தகுதியுமாகும். அதனால் தான் செங்கல்லை ஒரே அளவாக அறுப்பதற்கான அச்சு "செங்கல் கட்டளை" என்றும் கட்டளைக் கல் என்றும் அழைக்கப்படுகிறது. இரண்டாவது செங்கல்லின் செந்நிறம். அது செம்மையாகவும் இருக்கிறது; சிவப்பாகவும் இருக்கிறது. செங்கல்லின் உறுதியை உறுதி செய்வது அது சுட்டசெங்கல் என்பது தான். அதனால் தான் சுடாத செங்கல்லை ‘பச்சைக் கல்’ – (பச்சைக் குழந்தை, பச்சைக் காய்கறி என்று சொல்வது போல) - என்று சொல்கிறார்கள். செம்மைக்கும் (ஒழுங்கிற்கும்) சிவப்பிற்குமான (செந்நிறம்) வேர்நிலையான மானுட உளவியலுக்கு செம்மை, செம்பு, செப்பு, செப்புத்துறை, செந்தண்மை, செங்கோல், செங்களம், சே, சேய், சேயோன் போன்ற சொற்களின் ஆக்க முறையைத் துருவினால் தெளிவு கிடைக்கும்.

சங்க இலக்கியத்தில் செங்கல் பற்றிய துல்லியமான சொல்லாடல்கள் ஏராளம். ”சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்” (பெரும்பாணாற்றுப்படை 405) என்ற சங்க இலக்கிய ஒற்றைவரிச் சொல்லாடல் சுட்ட செங்கற்களால் ஆன சுற்றுச்சுவர் கொண்ட ஒரு நகரம் பற்றிப் பேசுகிறது. சுட்ட செங்கற்களால் ஆன குடியிருப்பிற்கு கீழடி சான்றளித்திருக்கிறது. அது மட்டுமின்றி அத்தகைய சுவர்களைச் சித்தரிக்கும் போதெல்லாம் சங்க இலக்கியம் செம்பு என்ற உலோகத்தால் செய்யப்பட்டது போன்ற சுவர் என்றே திரும்பத் திரும்பக் கூறுகிறது.

செம்பு விலையுயர்ந்த அரிய உலோகம். முழுவதும் செம்பைப் பயன்படுத்தி சுவர் எழுப்ப முடியாது. ஆனால் செம்பால் கட்டியது போன்ற சுவர் என்பது சுட்ட செங்கற்களின் செம்பு போன்ற வனப்பு, உறுதித்தன்மை, மேலும் செம்பு போன்ற ‘செந்நிறம்’ ஆகியவற்றை மனதில் வைத்து உயர்வு நவிற்சியாகக் கூறப்பட்டுள்ள ஆனால் இது உண்மையில் சுட்ட செங்கற்கள் பற்றிய சித்தரிப்பே ஆகும். "உவமை என்பது உயர்ந்ததன் மேற்றே" என்பது தொல்காப்பியம். எனவே இது பொருத்தமாகவே உள்ளது.

சங்க இலக்கியம் சொல்வதைப் போன்ற சுவர்கள் எதிர்கால அகழ்வாய்வுகளில் மேலும் கிடைக்கலாம். இப்போது தானே கீழடி போன்ற இடங்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறோம்.

எனது மதிப்பீட்டில் நான் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைத்து வருகிறேன். “சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே” என்பது தான். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் சுட்ட செங்கல் சுவர்களின் பிரமாண்டம் குறித்த சொல்லாடல் கி.மு ஆறாம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தின் செங்கல் கட்டிடங்களின் நேர்முக வர்ணனை மட்டுமல்ல; தமிழ்த் தொன்மங்களுக்குள் அதற்கு முந்தைய நெடுங்காலமாக நிலைபெற்று இருந்த ‘செங்கல் பண்பு” (Brick Culture) குறித்த மீள் நினைவுக்குமான சாட்சியமுமாகும்.

புறநானூற்றில் இருங்கோவேள் என்ற வேளிர் தலைவனின் முன்னோர்கள் அவனுக்கு 49 தலைமுறைக்கு முன்பே துவரை என்ற நகரை ஆண்டவர்கள் என்ற மீள் நினைவு இங்குக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலிலும் துவரை நகரின் சுவர் செம்பால் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. செம்பு போன்ற செங்கல் தான் அது என்பது தெளிவு.

ஆனால் இத்தகைய இலக்கிய சாட்சியம், ஆவணங்கள் வடநாட்டு ராஜகிருகம் போன்ற நகரங்களுக்கு இல்லை. சிந்துவெளிப் பண்பாட்டின் பிரமாண்டமான செங்கற் கட்டுமானங்கள் வேத இலக்கியங்கள் உள்ளிட்ட வடமொழி இலக்கியங்களுக்குத் தெரியாத ரகசியம்.

"ரிக் வேத காலத்தில் செங்கல் என்ற கட்டுமானப் பொருள் பயன்படுத்தப்பட்டதற்கான அகழ்வாய்வுத்தடயமோ மொழியியல் தடயமோ இல்லை" என்று எச். எஸ் கன்வர்ஸ் என்ற அறிஞர் குறிப்பிடுகிறார். யஜூர் வேதத்தில் இடம் பெறும் ”அக்னி சயனா” சடங்கில் தான் அதுவும் வழிபாடு சார்ந்த பயன்பாட்டுப் பொருளாகச் செங்கல்லின் பயன்பாடு முதன்முறையாகப் பதிவுபெறுகிறது என்றும் "சதபாத பிராமணத்தில்" தான் அது முழுமையாக வளர்ச்சி பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார். பிரிட்ஸ் ஸ்டால் என்ற அறிஞரும் கிட்டத்தட்ட இக்கருத்துடன் உடன்படுகிறார்.

"இஷ்ட்டிகா" என்ற வடசொல்லின் மூலமே "சுட்ட கல்" என்ற தமிழ்ச்சொல் தான் என்ற கன்வெர்சின் கருத்து ஒப்புக்கொள்ளத்தக்கதா இல்லையா என்பதை விடவும் முக்கியமானது சுட்ட செங்கல் தொழில் நுட்பத்தின் உச்சத்தைக் கொண்டாடிய செங்கல் பண்பாட்டின் எச்சத்தைச் சிந்துவெளிப் பண்பாட்டிற்குப் பின்னர் சங்க இலக்கியங்களில் தான் காணமுடிகிறது என்பது தான்.

குறிப்பாக சுட்ட செங்கல்லும், அதன் உறுதியும் வனப்பும், செம்பு போன்ற அதன் நிறப்பொலிவும் நெடும் பெரும் சுற்றுச் சுவர்களுக்கான அதன் பயன்பாடும் போற்றப்பட்டிருக்கிறது என்றால் அதற்குச் சான்றாக நிற்பது சங்க இலக்கியம் தான். வேறொன்றுமில்லை.

"சிந்துவெளி காலம் வேறு சங்க இலக்கியம் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்ட தொகுக்கப்பட்ட காலம் வேறு" என்பதை காலண்டர் பார்த்தே சொல்லிவிடலாம். அதற்குக் கரிம ஆய்வு கூடத் தேவையில்லை.

இன்றைய தேதியில் இப்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் தான் நாம் வாதிட வேண்டும். அந்த வகையில் கீழடிப்பண்பாடு சிந்துவெளி கட்டுமானங்களின் கருத்தியலோடு தொடர்ச்சி காட்டுகின்றன என்பது தான் முக்கியம். இதைச் சங்க இலக்கியம் என்ற வழித்துணையோடு வாசிக்கும் போது மேலும் தெளிவு கிடைக்கும். ஆனால் அதற்குத் திறந்த மனமும் தரவு சார்ந்த தேடலும் தேவைப்படுகிறது.

எதிர்கால அகழ்வாய்வுகள் தமிழ்த்தொன்மங்களை,நகர வாழ்வியலுக்கான காலகட்டங்களை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்று இப்போது சொல்லமுடியாது.

ஆனால், சிந்துவெளிச் செங்கல் சுவர்களுக்கும் கீழடிச் செங்கல் சுவர்களுக்கும் அளவால், கால நிர்ணயத்தால் இடைவெளி இருக்கிறது என்றாலும் இந்த இரு சுவர்களுக்கும் இடையிலான தூரத்தை நிரப்பும், விளக்கும் மரபின் தொடர்ச்சிக்கு சங்க இலக்கியம் மட்டும் தான் சான்றாக இருக்கிறது‌ என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ”செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை” யாகவும் சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பாகவும் நிமிர்ந்து நிற்கிறது தமிழ் போலவே. இதற்கு ஒரு சோற்றுப் பதமாய் வெளிவந்துள்ளன கீழடிச் செங்கல் சுவர்கள்.

சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே!

8.
கேள்வி:
கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட உறைக்கிணறு பற்றி ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகங்களிலும் இது பற்றி செய்திகள் வெளிவந்துள்ளன. உறைக்கிணறு என்பதன் முக்கியத்துவம் என்ன? இதுபற்றி சங்க இலக்கியம் குறிப்பிடுகிறதா?

விடை:
ஆமாம். சங்க இலக்கியம் உறைக்கிணறு பற்றி பின்வருமாறு கூறுகிறது.

"பறழ்ப் பன்றி பல் கோழி,
உறைக் கிணற்றுப் புறச்சேரி
ஏழகத் தகரொடு சிவல் விளையாட" (75-77)

இது பட்டினப்பாலையில் வரும் சொற்சித்திரம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் அருகே அமைந்த புறநகர்ப்பகுதியை (sub-urban habitat) பற்றிய துல்லியமான படப்பிடிப்பு இது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடந்த அகழ்வாய்வுகளில் பல்வேறு இடங்களில் உறைக்கிணறுகள் கிடைத்துள்ளன. உறையூர், பூம்புகார், அரிக்கமேடு, திருக்கோவிலூர், கொற்கை, காஞ்சிபுரம், செங்கமேடு, திருவாமுத்தூர், திருவேற்காடு, மாமல்லபுரம், திருக்காம்புலியூர் போன்ற இடங்களில் கண்டறியப்பட்டுள்ள உறைக்கிணறுகள் இதன் பரவலான பயன்பாட்டிற்குச் சான்றாகும். இப்போது கீழடியில் கிடைத்துள்ளது.

எனவே உறைக்கிணறு என்பது சங்ககால வாழ்வியலின் பொதுவான உரைகல் என்பது தெளிவாகிறது.

காவிரிப்பூம்பட்டினம் அருகே இருந்த உறைக்கிணறு அமைந்த ஒரு புறநகர்ப்பகுதி பற்றிய மேலே குறிப்பிட்ட சங்க இலக்கியச் செய்தியைக் கையில் வைத்துக்கொண்டு கீழடி அகழ்வாய்வுக் களத்திற்குச் செல்லுங்கள்.

அதற்கு முன்பு அந்த மூன்று வரிகளின் எளிய பொருளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

”அது ஒரு புறஞ்சேரி, நகரத்தை ஒட்டிய குடியிருப்புப் பகுதி. உறைக்கிணற்றோடு கூடிய அந்தக் குடியிருப்பில் பன்றிகள் பல குட்டிகளுடனும், பல வகையான கோழிகளும், ஆட்டுக் கிடாய்களும், கவுதாரிகளும் விளையாடிக்கொண்டிருந்தன.”

இப்போது கீழடியில் நமக்குக் கிடைத்திருக்கிற தடயங்களைப் பார்ப்போம். உறைக்கிணறு இருந்த கீழடியில் பன்றி, ஆடுகள் மாடுகள் வளர்க்கப்பட்டதற்கான எலும்புத் தடயங்கள் (புனே நகரிலுள்ள ஆய்வுக்கூடம் உறுதி செய்தபடி) கிடைத்துள்ளன.

காட்டுப்பன்றியின் உருவம் பொறித்த சூதுபவளம் கிடைத்துள்ளது. வேறென்ன வேண்டும்?

இப்படிப்பட்ட சூழலை நேரில் பார்த்தால் அப்படித் தான் எழுதத்தோன்றும்.
சங்க இலக்கியங்கள் புனைகதைகள் அல்ல. அன்றாட வாழ்வியலின் அழகிய படப்பிடிப்பு என்பது தான் உண்மை.

கீழடியும் தமிழகத்தின் ஏனைய அகழ்வாய்வுக் களங்களும் அழுத்திச் சொல்வது சங்க இலக்கியத்தின் நம்பகத்தன்மையைத் தான்.

இந்த உறைக்கிணற்றுக் கவிதைக்கும் உண்மையில் நம் கண்முன் அகழ்ந்தெடுக்கப்படும் இந்த உறைக்கிணறுகளும் இடையிலான சூழல் ஒருமை நமக்கு வியப்பூட்டுகின்றன. தமிழகத்தின் பல இடங்களிலும் மேலும் மேலும் தோண்டவேண்டியதன் தேவையையும் இவை அடிக்கோடிடுகின்றன.




தொடர்பு: 
ஆர். பாலகிருஷ்ணன், இ. ஆ. ப. 
-  https://www.facebook.com/profile.php?id=100011737148867&fref=nf





கீழடி

—  ருத்ரா இ.பரமசிவன்


தமிழா!
உன் காலடி கீழடியில்
உன் இமயம்.
பனை ஏடுகள்
பாதி திறந்தன.
பானை ஓடுகள்
மீதி திறந்தன.
இவர் மீறல்கள்
உன் கீறல்களில்
உடைந்து போயின.
உன் தன்மையே
உன் தொன்மை தான்.
நீ தந்த சமக்கிருதமா
உனக்கு சமாதி ஆவது?

தமிழா!
இப்போதாவது விழி.
இது தான் உன் ஒளி.
இதுவே உன் வழி.
அர்ச்சனை மந்திரங்கள்
இப்போதாவது மற!
இல்லெனில்
உன் வீடு உனக்கில்லை.
உன் கூடும் உனக்கில்லை.
பிறகு
ஏது சிறகு?

ஈசன்கள் தேடி
ஈசல்கள் ஆனாய்.
நீ கட்டிய
பெரும் கோவில்களில்
வெறும்
படிக்கட்டுகளே நீ!
சிந்து வெளி
வெளிச்சம்
உனக்கு உண்டு.
சமக்கிருதம் எனும்
"சிந்துபாத்"கிழவனா
உன் தோளில் ?
அந்தக் கீறலில்
ஒரு "அந்துவன்"உண்டு.
நம் கலித்தொகைக்
கவிஞன்
"நல் அந்துவனும்"
அதில் உண்டு.

தமிழா
இதைக்கண்டு
அறி !
இந்த நாடு எனும்
பட்டா
உனக்கே உண்டு
அறி !




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)



தொல்லியலின் அழகடி ...கீழடி


 ——    கவிஞர் அமீர்


ஆதியிலே பிறந்த மொழி
தமிழ் மொழி!
அதை
அகழ்வாய்வில் சொல்லுதடி
கீழடி!

கலாச்சாரம்
நாகரீகம்
கொடிபிடித்து முன்னெடுத்த 
தமிழ்மொழி!
அதைச் சுவரினிலே காட்டுதடி
ஈரடி வாசகத்தில் 
அதே கீழடி!

பொதிகையிலே பிறந்தது
வைகையிலே வளர்ந்தது
தொல்லுலகில்
முதன்மையானது...
அது கீழடியில் வெளிச்சமானது...

தமிழுக்கு நிகரேது
தமிழருக்குக் குறையேது
எனும் வெண்பா கேளடி...
இன்னும்
மதம்
இனம்
வெறி
அடையாளக் குறியில்லா கீழடி!
இது
தொல்லியலின் அழகடி
தொன்மைக்கு பெருமையடி!

தமிழ்ச்சாமியின்
காலடி மண்ணெடுத்து
நெற்றியிலே 
பொட்டு வைக்க வாடி
அதற்கு ஏற்ற இடம் 
இந்த கீழடி!


---





Sunday, September 22, 2019

கீழடி ஆதாரங்கள் - சில குறிப்புகள்



 ——    பேராசிரியர் அ.ராமசாமி


            கீழடிச்  சான்றுகளைச் சங்ககாலச் சான்றுகள் எனச் சொல்வதைத் தொல்லியல் ஆய்வாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவை ஒரு பழைய நாகரிகத்தின் ஆதாரங்கள். முச்சங்கம், சங்கம், இறையனார் அமர்ந்து தமிழாய்ந்தது போன்றன புராணிகம் தமிழ்நாட்டிற்குள் பரவிய காலகட்டத்துக் கருத்துகள். அதனை ஏற்று நிறுவும் முயற்சிகள், கிடைத்த அறிவியல் ஆதாரங்களையும் புராணிகத்தன்மை கொண்டவைகளாக மாற்றிவிடும்.

            கீழடிச் சான்றுகளைச் சங்கம் என்ற சொல்லோடு இணைக்காமல் பேசுவதே சரியானது.

            மொழி, இலக்கிய ஆய்வியல் காத்திரமான பங்களிப்புச் செய்த பலரும் சங்ககாலம் என்பதை ஏற்றுப் பேசுவதில்லை. சான்றோர் இலக்கியங்கள், வீரநிலைக்காலம்வீரநிலைக்கவிதைகள், செவ்வியல் கவிதைகள், செவ்வியல் இலக்கியக்காலம் போன்றவற்றையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

            இப்போது அறிவியல் ஆய்வகத்தின் வழி கீழடி  என்னும் இடத்தில் கிடைத்துள்ள தரவுகள், 2600 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட கட்டட அமைப்பும், நகர அமைப்பும், வாழ்க்கைக்கான வசதிகளும் கொண்ட நகரம் ஒன்று இருந்தது என்பதற்கான ஆதாரங்களாக ஆகியிருக்கின்றன. அங்கு வாழ்ந்தவர்கள் மண்பாண்டங்களில் எழுதினார்கள்; விலங்குகள், பறவைகள் போன்றவற்றை வரிவடிவங்களாகத் தீட்டினார்கள் என்பதோடு உலோகங்களால் செய்த கருவிகள் பயன்பாட்டிலிருந்தன. தங்கத்தில் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நகைகள் செய்தார்கள். அவை விற்பனைப்பண்டங்களாக இருந்தன. தங்களுக்குள் தொடர்புகளைச் செய்ய எழுத்துப் பயன்பாட்டைக் கொண்டிருந்தார்கள் என்று விவரிப்பதற்கான பருண்மையான ஆதாரங்கள் இவை. அதனால் வைகைக் கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் கொண்டது என்பதல்ல. அதற்கும் சில ஆயிரங்களுக்கு முன்பே தோன்றி வளர்ந்த நாகரிகம்.

            கீழடிச் சான்றுகள் வழி உறுதியாகியுள்ள தகவல்களைத் தமிழின் தொல்லிலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் ஏற்கெனவே தந்துள்ளன. கீழடி தரும் செய்திகளைத் தமிழின் தொல் இலக்கியங்களில் ஒன்றான நெடுநல்வாடை விரிவாகச் சொல்கிறது.  அது மதுரை மாநகரைப் பாடல்வெளியாகக் கொண்டது. பரிபாடலில் வையை நதியின் பெருக்கமும் பரவலும் நகரின் விரிவும் தரப்பட்டுள்ளன.

            இன்னொரு கடல் நகரமான காவிரிப்பூம்பட்டினத்து வாழ்க்கையைப் பட்டினப்பாலை விவரித்திருக்கிறது. துறைமுகம் சார்ந்த தொழிற்சாலைகளை விவரிக்கவும் செய்கிறது. முல்லைப் பாட்டில் காத்திருக்கும் தலைவியின் வீடும் கூட வசதியான வீடுதான். இவையெல்லாம் நகரநாகரிக வாழ்க்கையின் பதிவுகளைத் தருகின்றன.

            இவற்றிற்கிணையாகக் கிராமப் புறங்களையும் மலைப் பாதைப் பயணங்களையும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் போன்ற ஆற்றுப்படைகள் விவரித்திருக்கின்றன.

            குறிஞ்சிப்பாட்டு வன அறிவையும் மலைவளத்தையும் கொண்டிருந்ததை -பயன்படுத்திக்கொண்டதைத் தருகின்றது. இவையெல்லாம் பத்துப்பாட்டு என்னும் நெடும்பாடல்கள் வழி அறியப்படும் நாகரிக வாழ்க்கை.  நெடும்பாடல்களுக்கு முன்னால் எட்டுத் தொகையிலிருக்கும் குறும்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை எழுதப்பெற்ற காலம் சில ஆயிரங்களுக்கு முன்பு. அவற்றிற்கும் முன்னால் வாய்மொழித்தன்மை கொண்ட ஐங்குறுநூற்றுப் பாடல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் மொழியமைப்புக்கும் அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிபாடல் போன்றவற்றின் மொழிநடைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. வாய்மொழிப்பாடல்களில் இறுக்கம் ஏற்படச் சில நூற்றாண்டுகள் அல்லது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்பது மொழியியலும் இலக்கியவரலாறும் சொல்லும் செய்திகள்.

            இலக்கியங்கள் தரும் தகவல்களைப் போலப் பன்மடங்கு செய்திகளையும் தமிழர்களின் இயற்கை அறிவியல் பார்வையையும் மொழிபற்றிய கோட்பாட்டையும், நூலாக்கம், சமூக அமைப்பு குறித்த கருத்துகளையும் தொல்காப்பியப் பனுவல் குறிப்பிடுகின்றது. உயிரித் தோற்றவியலும் மானுடவியல் கூறும் அறிவுத்தோற்றம், குடும்பம், அரசு, கோட்டை, காப்பரண் போன்றவற்றை உருவாக்குதல் பற்றியெல்லாம் அது விரிவாகப் பேசியுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை மரபுக்கு ஆதாரமாக இருக்கும் அரிஸ்டாட்டிலின் பனுவலையொத்த பனுவலாக இருக்கிறது தொல்காப்பியப் பனுவல். ஆனால் சிக்கல் என்னவென்றால் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ்த் தொல்நூல்களின் காலத்தையும் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்ய முடியவில்லை என்பதுதான்.

இப்போது கீழடியில் கிடைத்துள்ள தொல்லியல் ஆய்வுகள் வழி உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள்;
            இலக்கியங்கள் பேசும் உண்மைகளை உறுதி செய்கின்றன என்பதில்தான் நாம் மகிழும் காரணங்கள் இருக்கின்றன. அந்த மகிழ்ச்சியைச் சங்கப்புனைவுகளோடு இணைத்துக் கெடுத்துக் கொள்வது சரியாக இருக்காது.



---



Tuesday, September 17, 2019

தோலுரித்த கலகத் திருமகன்


 ——    தேமொழி




ஏன் ஏன் என்ற வினாக்கள் 
அறியா வயதுடன் நிற்பதல்ல 
ஏன் அவர்கள் என்றும் அப்படி 
வறுமையில் உழல வேண்டும்?
ஏன் இவர்கள் என்றும் இப்படி 
உரிமையின்றி வாழ வேண்டும்?

எல்லாமும் கடவுளால் என்ற 
ஆன்மிக விளக்கம் உதவவில்லை 
செய்த பாவம், அவர்கள் விதி
என்ற விடையில் அடங்கவில்லை 
சமயம் வகுத்த சாத்திரங்கள் எனில் 
ஆராய முற்பட்டார் அந்த கலகக்காரர் 

ஆவலுடன் உரிக்கத் துவங்கினார் 
அந்த சமய வெங்காயத்தை 
அவர் அதன் தோலை உரிக்க உரிக்க 
கண்ணீர் வழிந்தது, பெரியாருக்கல்ல 
கடவுள் பெயரில் ஸ்மிருதிகள் எழுதி 
அடக்குமுறை செய்தோருக்கு 

உள்ளே ஒன்றுமில்லை என்பது உறுதியானது
ஒரு சிலரின் ஓங்கிய வாழ்விற்குப்
பல பலவீனர்கள் கொடுத்த விலை என்ற 
வஞ்சகர் திட்டம்  வெளியானது 
சூழ்ச்சிக்கார்களின் சூது புரிந்தது 
வெளியிட்டார் வெள்ளை அறிக்கையை 

கடவுள் இல்லை, இல்லை; 
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;
கடவுளை மற ! மனிதனை நினை ! 

அடங்கிக் கிடந்த ஆண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட பிரிவினருக்குப் 
போயின; போயின பதவிகள் 
அடங்கிக் கிடந்த பெண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட ஆண்களுக்குப்
போயின; போயின  நிம்மதி 

அவர் சொல்வதைப் பின்பற்றச் 
சொன்னதில்லை பெரியார்
நானே சொன்னாலும் நம்பாதே 
என்றுதான் சிந்திக்கத் தூண்டினார்
மெய்ப்பொருள் காணச் சொன்னார் 
சூழ்ச்சியைத் தோலுரித்த கலகத் திருமகன் 

ஏன்..ஏன்..மீண்டும் மீண்டும் கேள்..கேள் கண்ணே
சிந்திப்பாய் சிந்திப்பாய் சிந்திப்பாய் பெண்ணே



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)


---

Sunday, September 15, 2019

குமரிக் கண்ட குழப்பங்கள்


——  திரு. சிங்கநெஞ்சம் சம்பந்தம்


          திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் சோமசுந்தரம் ராமசாமி மற்றும் ஜே. சரவணவேல் ஆகியோர் செயற்கைக்கோள் படங்களை வைத்து மேற்கொண்ட  ஆய்வின் முடிவுகள் 2019 ஜூன் 25ஆம் தேதியிட்ட Current Science இதழில் வெளியாகியிருக்கின்றன. குமரிக்கண்டம் குறித்து இந்த ஆய்வு சொல்வது என்ன?

          "எங்களுடைய கண்டுபிடிப்பின்படி குமரிக்குத் தெற்கே சுமார் 2 -3 லட்சம் சதுர கி.மீ. பரப்புள்ள நிலப்பரப்பு இருந்திருக்கலாம். அவ்வளவுதான். மடகாஸ்கரிலிருந்து ஆஸ்திரேலியா வரை இந்த நிலப்பரப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை" என்கிறார்கள் ஆய்வாளர்கள்.”  

          லெமூரியா கருதுகோள் மேலை நாடுகளில் ஓரங்கட்டப்பட்ட வேளையில், அது நம் தமிழ்நாட்டில் புகுந்து குமரிக் கண்ட கருதுகோள் உருவாகக் காரணமாக அமைந்தது.  உரையாசிரியர்களின் இடைக்காலத்திற்குப் பின்னர்  கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகள் உறங்கியிருந்த குமரிக் கண்ட கருதுகோள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது ( உரையாசிரியர்கள் செய்த  குழப்பங்களைப்  பின்னர் பார்க்கலாம்).

          தமிழிலும், ஆங்கிலத்திலும், வடமொழியிலும் வித்தகராக விளங்கிய பரிதிமாற் கலைஞர் 1903 ஆம் ஆண்டு தான் எழுதிய ‘தமிழ் மொழி வரலாறு’ எனும் நூலில் ஐந்தாம் அத்தியாயத்தில், உரையாசிரியர் அடியார்க்குநல்லார் கூறும்  49 நாடுகளையும் பட்டியலிட்டு, அந்த நாடுகள் அடங்கிய பகுதியை “குமரி நாடு’ என்று அழைத்தார். 

          நீளத்தில் இக்கால குமரிமுனையிலிருந்துகேர்கியுலன் தீவின் தென்முனை வரையிலும் அகலத்தில் மடகாஸ்கர் தீவு முதல் கிழக்கே ஜாவா, சுமத்ரா ஆகியவற்றை அடக்கிய சந்தா தீவு வரையிலும்   குமரிநாடு பரந்து கிடந்தது என எழுதும் இவர், இதுவே இலெமுரியா நிலப்பரப்பு என்றும் உலகின் நடுப் பகுதியாகத் திகழும் இங்கிருந்துதான் மனிதன் நாலாபுறமும் பரவினான் என்றும் கூறுகிறார். அடியார்க்கு நல்லார் கூறும் எழுநூறு காதம் இவர் கருத்தில் ஏழாயிரம் மைல்கள் ஆகிறது. இந்த நூல் 1908-09 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவர்களுக்குப் பாட நூலக அறிவிக்கப் பட்டது.

          பரிதிமாற் கலைஞரின் நூலை, மறைமலை அடிகள், சோம சுந்தர பாரதியார் போன்ற சான்றோர்களும் ஆதரித்தனர்.  சோம சுந்தர பாரதியார்(1912) தன்  “தமிழகம்’” நூலிலும், பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள் 1904 ஆம் ஆண்டு “தமிழ் இலக்கியம்” எனும் நூலிலும், ஆப்ரஹாம்பண்டிதர் 1917 இல் தான் எழுதிய நூலிலும் குமரிக்கண்டத்திற்கு ஆதரவாக விரிவாக எழுதினர்.  இவர்கள் குமரிநாட்டை மாந்தன் பிறந்தகம் என்றும் தமிழ் இங்கேதான் பிறந்தது என்றும் வலியுறுத்தினர். ஸ்ரீநிவாசப்பிள்ளை (1927), கந்தையாபிள்ள(1934) ஆகியோரும்  தங்கள் நூல்களிலும் கட்டுரைகளிலும் குமரிக் கண்டம் பற்றி விரித்துரைத்தனர். அறிஞர்  கந்தையா அவர்கள் குமரிஆறு இன்றைய குமரிமுனைக்குத் தெற்கே சற்று தொலைவில் இருந்திருக்கலாம் அதற்கும் தெற்கே குமரிமலை இருந்திருக்கலாம் என்று தனது “தமிழகம்”(1934)  நூலில் குறிப்பிடுகிறார். குமரி ஆறு, குமரி மலை பற்றியெல்லாம் இவர் நூலில்தான்  பார்க்கிறோம். 

          எனவே “குமரி மலை” பற்றிய கற்பனை இதற்குச் சற்று முந்தைய காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். குமரிக் கண்டம் அழியக் காரணமாக இருந்த கடல்கோள் எப்படி உருவாகியிருக்கும் என்று இவர் சொல்வது சற்று வித்தியாசமாக இருக்கிறது 1927 ஆம் ஆண்டில் பூர்ணலிங்கம் பிள்ளை அவர்கள்குமரிக் கண்டம் அழிந்து போனதால் அங்கே வாழ்ந்த மக்கள் வடக்கே சென்று சிந்துவெளி நாகரிகத்தை ஆரம்பித்தனர் எனக் கூற, தொடர்ந்து வி.ஆர். நெடுஞ்செழியன் (1953) ஆம் ஆண்டு, சிந்து வெளிக்கு மட்டுமல்ல, குமரி மக்கள் சுமர், அரேபியா, எகிப்து, கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் சென்று குடியேறினர்  என்றார். 1927 ஆம் ஆண்டிலேயே பள்ளிப் பாட நூல்களில் குமரிக் கண்டம் இடம் பெற ஆரம்பித்து விட்டது. ஐரோப்பியர்கள் கூறிய இலெமூரியாவே தமிழர்களின் குமரிநாடு என்று   1940 ஆம் ஆண்டில் ஒன்பதாவது வகுப்பு பாட நூலில் கூறப்பட்டது. தொடர்ந்து  1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு, குமரிக் கண்டம் பற்றிய அன்றைய தமிழ் அறிஞர்கள் மற்றும்  ஆர்வலர்களின் கருத்துகள் வேகமாகப்பரவின. தமிழின் தொன்மை பற்றி ஆராய அறிஞர் மு.வ. அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் 1981 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் வரலாற்றுப் பாட நூலிலும் குமரிக் கண்டம் இடம் பெற்றது.

          1902 ஆம் ஆண்டு முகிழ்த்த குமரிக் கண்ட கருதுகோள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து, தி.மு.கழக ஆட்சியில்  செழித்தோங்கியது. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல், மதுரையில் 1980 இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் குமரி கண்டம் குறித்து, ப. நீலகண்டன் அவர்கள் இயக்கிய ஆவணப் படம் ஒன்று அன்றைய முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் திரையிடப் பட்டது. PLATE TECTONICS, கடல்கோள் என எல்லாவற்றையும் கலந்து மசாலா செய்து உருவாக்கப் பட்ட இந்த படத்தை லட்சக் கணக்கான பொது மக்களும் பார்த்து மகிழ்ந்தனர். 

          தேவநேயப் பாவணரின் (இவரது கருத்தைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) மாணவர்களில் ஒருவரான மதிவாணன் அவர்கள்(1991) குமரி நாகரிகம் 50000  ஆண்டுகளுக்கு முன் செழித்திருந்தது; பின்னர் சுமார் 16000 ஆண்டுகளுக்கு முன் படிப் படியாக பல்வேறு கடற்கோள்களால் அழிந்துபோயிற்று எனும் கருத்தை தன ஆசானின் வழி நின்று வெளியிட்டார். கொஞ்சம் யோசிக்க வேண்டும். இன்றைக்குக் கிடைத்துள்ள தொல்லியல் மற்றும் மொழியியல் தரவுகளின் அடிப்படையில் தமிழ் மொழி   50000 ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கிய வளம் பெற்றிருந்தது எனக் கூற இயலுமா? 

குமரி நாடு பற்றி பலரும் பலப்பல பேசியும் எழுதியும் வந்த போதும், அந்த கற்பனை  நிலப்பகுதியின் நீளம், அகலம், பரப்பளவு ஆகியவை பற்றி அவர்களிடம் ஒத்த கருத்து இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதைப் போலவே குமரிக் கண்டத்தை அழித்த கடல்கோள்கள் எப்போது நிகழ்ந்தன என்பது பற்றியும் குமரிக் கண்ட ஆதரவாளர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. 

குமரி முனைக்குத் தெற்கே எவ்வளவு தூரம் நீண்டிருந்தது குமரிக் கண்டம்?


•   பரிதிமாற் கலைஞர்  (1903), தனது “தமிழ் மொழியின் வரலாறு” எனும்  நூலில், ஒரு காதம் என்பது பத்து மைல், எழுநூறு காதம் என்பது ஏழாயிரம் மைல்; எனவே குமரி நாடு இன்றைய குமரி முனைக்குத் தெற்கே கெர்கியிலன் தீவு வரை இருந்திருக்கலாம் என்கிறார். கெர்கியிலன் தீவு எங்கேயுள்ளது என்பதைப் படத்தைப் பார்த்து அறிக.
•   பூர்ணலிங்கம்பிள்ளை(1904) , பரிதிமாற்கலைஞர்  அவர்களின் கருத்தையே வழி மொழிகிறார்.
•   அரசன் சண்முகனார்  (1905)  குமரி நாடு பல ஆயிரம் மைல்கள் நீண்டிருந்திருக்கும் எனக் கருதுகிறார்.
•   சோமசுந்தர பாரதியார் (1912),  சுமார் 6000 முதல் 7000 மைல்கள் வரை இருக்கலாம் எனக் கணக்கிடுகிறார்.
•   ஆப்ரகாம் பண்டிதர் (1917),  இராகவ அய்யங்கார் ஆகியோர் இந்த தூரம் 1400 முதல் 3000 மைல்கள் வரை இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.
•   ந.சி. கந்தையா பிள்ளை (1934), யாப்பருங்கல விருத்தி எனும் நூலில் குறிப்பிட்டுள்ள கணக்கின்படி, 700 காதம் என்பது   2800 மைல் எனும் முடிவுக்கு வருகிறார்.  
•   மறைமலை அடிகள் (1948) குமரிக் கண்டம் தென் துருவம் வரை நீண்டிருந்திருக்கும் எனக் கருத்து தெரிவிக்கிறார்.
•   தேவநேயப் பாவாணர் (1956) தனது “தமிழர் வரலாறு” நூலில் குமரிக் கண்டம் தென்வடலாக ஏறத்தாழ 2500 கல் நீண்டிருந்தது என்கிறார்.
இவை அனைத்திற்கும் மாறாக,
•   உ.வே.சாமிநாத அய்யர், இரு கூற்றம் அளவிற்கு சில கிராமங்கள் மூழ்கி இருக்கலாம் எனக் கருதுகிறார்.

          எழுநூறு காதத்தில் நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்தன என உரையாசிரியர் கூறுவதால் அது நீட்டல் அளவையாக இல்லாமல் பரப்பு அளவையாக இருக்க வாய்ப்புகள் உண்டு. எனின் 2800 ச.கி.மீ. (நாடு என்பது இன்றைக்கும் கொல்லிமலைப் பகுதிகளில் சிறு கிராமத்தையே குறிக்கும், எனவே அதில் ஒன்றும் சிக்கல் இல்லை).  கடற்கரையோரம் சுமார் 280 கி.மீ. துரத்திற்கு( கடற்கரையின் நீளத்தைச் சொல்கிறேன்) சுமார்  10கி.மீ. அளவிற்குக் கடல் உட்புகுந்திருந்தால் (இதற்கு வாய்ப்புகள் உண்டு) அடியார்க்கு நல்லாரின் கணக்கு சரியாகிறது. ஹோலோசீன் கடல் மட்ட உயர்வின் போது இது நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. 

          ஹோலோசீன் கடல்மட்ட உயர்வு பற்றிப் பேசுவதற்கு முன்  இலெமூரியாகண்ட  கருதுகோள்  எழ எது காரணம் அல்லது என்ன காரணம் என்பதைப் பார்த்து விடலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தொழிற்புரட்சி உச்சக் கட்டத்தை எட்டியபோது, இயந்திரங்களை இயக்க ஆற்றல் தேவைப்பட்டது. புவியியலாளர்கள் நிலக்கரி படிவங்களைக் கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். நிலக்கரி படிவங்கள் படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும். தொல்லியல் எச்சங்களும் படிவப் பாறைகளில் மட்டுமே கிடைக்கும் என்பதையும்  இங்கே குறிப்பிட வேண்டும்.  நிலக்கரியைத் தேடிச்சென்ற புவியியலாளர்களுக்கு, குறிப்பாக, தொல்லுயிரியலாளர்களுக்கு  (PALAEONTOLOGIST) பல வியப்புகள் காத்திருந்தன. பலவிதமான தொல்லுயிர் எச்சங்கள் கண்டறியப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் பூமியின் தொல்நிலஅமைப்பை (PALAEO GEOGRAPHY) அறிந்துகொள்ளும் வேட்கையைத் தூண்டின. இந்தியாவில் கிடைத்தத் தொல்லுயிர் எச்சங்களும், மடகாஸ்கர் தீவில் கிடைத்த தொல்லுயிர் எச்சங்களும் ஒன்றையொன்று பெரிதும் ஒத்திருந்தன. இவற்றுள், இலெமூர் எனும் உயிரினத்தின் தொல்லுயிர் எச்சங்களும் அடங்கும். இன்றும் இலெமூர் உயிரினம் ஆப்ரிக்கா, மடகாஸ்கர், இந்தியா போன்ற பகுதிகளில் வாழ்ந்து வருகின்றது. ஆப்ரிக்காவில் 20 வகை, மடகாஸ்கரில் 18 வகை, இந்தியாவில் மூன்று வகை    இலெமூர்கள் இருப்பதாக உயிரியலாளர்கள் சொல்கிறார்கள்.


          இன்றைக்கு சுமார் நான்காயிரம் கி.மீ. அகல கடலால் பிரிக்கப் பட்டிருக்கும் இரண்டு இடங்களில் ஒரே மாதிரியான உயிரினங்கள் வாழ்ந்தனவா? அப்படியெனில் இந்தியாவிலிருந்து மடகாஸ்கருக்கு, ஏதேனும் இணைப்பு இருந்திருக்குமோ, அந்த இணைப்பின் அல்லது பாலத்தின் வழியே உயிரினங்கள் அங்கும் இங்கும் சென்றிருக்குமோ எனும் எண்ணம் பல அறிஞர்கள் நடுவே உருவானது.

          கண்டங்கள்  LAND BRIDGE  மூலமாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனும் எண்ணம் 1850 களில் வலுப் பெற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த எர்நெஸ்ட் ஹெய்ன்ரிச் ஹேக்கல் எனும் உயிரியலாளர் மனிதன் தெற்கு ஆசியாவில் தோன்றி இந்த LAND BRIDGE வழியே ஆப்பிரிக்கா சென்றிருக்க வேண்டும் என்று எண்ணினார். 


          தொடர்ந்து பிலிப்ஸ் ஸ்க்லேட்டேர் எனும் ஆங்கிலேய விஞ்ஞானி தான் வெளியிட்ட MAMALAS OF MADAGASKAR எனும் கட்டுரையில், இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையே இருந்ததாக எண்ணப்பட்ட LANDBRIDGE ற்கு (இங்கே LANDBRIDGE எனக்குறிப்பிடப்படுவது ஒரு பெரும் நிலப் பரப்பு)    இலெமூரியா என்று நாமகரணம் சூட்டினார்.   

          இலெமூர்கள் வாழ்ந்த இடம், ஆதலின், ஸ்க்லேட்டேர் இலெமூரியா எனப் பெயரிட்டார் அவரின் கட்டுரை THE QUARTERLY  JOURNAL OF SCIENCE (1864) இதழில் வெளியானது. 

          உலகெங்கும் பேசப்பட்டது. கண்டங்களை இணைத்ததாகக் கருதப்படும் “இலெமூரியா கண்ட கோட்பாடு” தோன்ற முக்கிய காரணம், கண்டங்கள் நிலையானவை, அவை அசைவதில்லை என்னும் தவறான கருத்து அந்நாட்களில் நிலவியதுதான். 

          கண்டம் எனும் சொல்லிற்கு ‘துண்டு’ என்பது பொருள். (எ.கா. “கண்ட துண்டமா வெட்டிப் போட்டான்”,‘உப்புக்கண்டம்’ போன்றன.) இதற்கு எதிர்ச் சொல் ‘அகண்டம்’ (எ.கா. அகண்ட இந்தியா).

          தற்போது இலெமூரியா எனும் பெயர்  தமிழ்கூறும் நல்லுலகில் மிகப் பரவலாகப் பேசப்படும் பெயர். இந்த கற்பனைக் கண்டத்திற்கு இலெமூரியா என ஏன் பெயரிடப்பட்டது என்பதற்கு  உண்மைக் காரணத்தை விட்டு விட்டு நம் மக்கள் பல்வேறு கதைகள் சொல்கிறார்கள். அவற்றில் ஒன்றை மட்டும் பார்ப்போம்.

          “இந்தக்கண்டத்தில் மூலிகைகள் நிறைந்திருந்தன. அவை அனைத்தும் இலை மூலிகைகள். மூலிகை என்பது மூரிகை எனத் திரிந்தது. இலைமூலிகைஇலைமூரிகை, இலைமூரிகை - இலெமூரியா என மாறிவிட்டது.” இது ஒரு விளக்கம். இதைப்போல நிறைய உள்ளன. ஏடு இட்டோர் இயல்தான் EDITORIAL , தோற்றோர் இயல்தான் TUTORIALஎன்பதுபோல்தான் இதுவும்.).

          கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் கொடி கட்டிப் பறந்த “இலெமூரியா கண்ட கருதுகோள்” இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தோன்றிய  ‘CONTINENTAL DRIFT’   கருத்தால் சற்று ஆட்டம் காண ஆரம்பித்தது. தொடர்ந்து வந்த   ‘OCEAN FLOOR SPREADING’ கருத்துகளும் அதைத் தொடர்ந்து வந்த  PLATE TECTONICS  கருத்தும் இந்த இலெமூரியா கண்ட கோட்பாட்டினை ஓரம் கட்டி விட்டன.

          ஆனால், நம் தமிழ்நாட்டு மொழி அறிஞர்களோ, ஓரம்கட்டப்பட்ட கருதுகோளை எடுத்துக் கொண்டு, இதுதான் இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள ‘குமரிக் கண்டம்’  என்று இன்றும் சொல்லி வருகிறார்கள். கற்பனையில் தோன்றிய இந்த கண்டத்திற்கு, வடிவம் ஒன்றும் கொடுத்து வரைபடம் ஒன்றும் கொடுத்திருக்கிறார்கள். இவையெல்லாம் எந்த அடிப்படையில் செய்கிறீர்கள் என்றால், ‘இலக்கியச் சான்றுகள்’ உள்ளன என்கிறார்கள். 



குமரிக்கண்டம், குமரி நாடு, குமரிப் பரப்பு, குமரி நிலம், குமரி மலை, குமரித் தொடர், குமரி ஆறு போன்ற தொடர்களில் ஒன்று கூட தமிழின் தொன்மையான இலக்கியங்கள் என்று  கருதப்படும் தொல்காப்பியத்திலோ அன்றி சங்கப் பாடல்களிலோ காணப் படவில்லை என்பதுதான் உண்மை. 

          குமரிக் கண்டம் என்று ஒன்று இருந்ததென நம்புகிறவர்கள், அந்தக் கண்டம் கடல்கோளால் அழிந்தது என்றும் நம்புகிறார்கள். அப்படித்தான் நம்பியாக வேண்டும்; வேறு வழியில்லை. ஆனால், கடல்கோள்கள பற்றியும், இவர்களிடையே ஒத்த கருத்து இல்லை என்பதே உண்மை. 




---

Saturday, September 14, 2019

தமிழ் எழுத்தின் பழமை



 ——   தொல்லியல் அறிஞர் முனைவர் சு. ராஜவேலு



முன்குறிப்பு:  
            செப்டெம்பர் மாதத்தின் (2019 ஆண்டு) முதல் வாரம் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் - மரபு பாதுகாவலர்கள் வாட்சப்  குழுமத்தில் தொல்லியல் அறிஞர் பேராசிரியர் முனைவர் சு. ராஜவேலு அவர்கள் தமிழியின்  பழமை குறித்து குழும உறுப்பினர்களின் கேள்விகளுக்குக் கொடுத்த விளக்கக் கருத்துகளின் தொகுப்பு. 

சுபாஷிணி: 
            நமது அண்மைய காணொளிப்பதிவு  வெளியீடுகளில் டாக்டர் ராஜவேலுவின் பேட்டி, டாக்டர் ராஜனின் பேட்டி ஆகியன தமிழ் நிலம் சமணம் வருவதற்கு முன்பே இலக்கிய வளம் நிறைந்து இருந்தது என்பதை விளக்குகின்றன. 

I.
மண்ணின் குரல்: ஜூலை 2019 - அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 1: https://youtu.be/H_RIo4z7-ug
            தமிழி எழுத்துக்கள் வட இந்தியாவில் தோன்றிய அசோகன் பிராமியிலிருந்து பின் மருவி கி.மு.2ம் நூற்றாண்டு வாக்கில் சமண முனிவர்களால் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்டவை என்ற கூற்று தமிழ் கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துரு ஆய்வுலகில் நிலவி வந்தது. அது இன்றும் தொடர்கின்றது.

            குறிப்பிடத்தக்க சில ஆய்வுகள் தமிழக நிலப்பரப்பில் அதாவது கொடுமணல், அரிக்கமேடு, பொருந்தல், ஆதிச்சநல்லூர், அழகன்குளம், மற்றும் மிக அண்மையில் கீழடி எனப் பல பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு,  தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டு அவை அறிவியல் கரிம ஆய்வின் படி காலத்தால் கி.மு. 7, கி.மு. 6 என காலக்கணக்கிடப்பட்டாலும் கூட, இச்செய்தி பரவலாகச் சென்றடையாது இருப்பது வேதனையே.  கடந்த 30 ஆண்டுகளாகக் கடல்சார் மற்றும் தொல்லியல் ஆய்வுகளைத் தமிழகத்தில் நடத்தி வரும் டாக்டர்.ராஜவேலு அவர்கள் இப்பேட்டியில் அகழ்வாய்வு சான்றுகளைக் குறிப்பிடுகின்றார்.  தமிழி எழுத்துரு அசோகன் பிராமியிலிருந்து கிளைத்து வளர்ந்த எழுத்துரு அல்ல, மாறாக அது தமிழ் நிலத்திலேயே தமிழர்களால் உருவாக்கப்பட்ட எழுத்துரு எனத் தமது அகழ்வாராய்ச்சி ஆய்வுத்தகவல்களுடன் விவரிக்கின்றார்.    

            கூடுதலாக இப்பதிவில், களப்பிரர்களுக்குப் பின் தமிழக நிலப்பரப்பில் ஆட்சி செய்த பல்லவர்கள் வடக்கிலிருந்து வந்தமையாலும், வடமொழியை ஆட்சி மொழியாகத் தமிழக நிலப்பரப்பில் ஏற்படுத்திய போது அம்மொழிக்கான எழுத்துருவாகப் பல்லவ கிரந்தம் என்ற எழுத்துருவை உருவாக்கிய செய்தியையும் பகிர்கின்றார்.  





II.
மண்ணின் குரல்: ஜூலை 2019 - அகழ்வாய்வுகளின் வழி தமிழ் எழுத்துக்களின் தொன்மையை அறிவோம் - பகுதி 2: https://youtu.be/gznNu5jIZQE
            தமிழ் மொழியின் பண்டைய எழுத்தான தமிழி (தமிழ் பிராமி)  கல்வெட்டுக்களிலும் மக்களின் புழக்கத்திலும் பயன்பாட்டிலும் இருந்திருக்கின்றன  என்பது நமக்கு தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற சான்றுகளாக அமைகின்றன. கி.மு.700 வாக்கிலேயே பொதுமக்களும் தங்களது பானை ஓடுகளில் பொறித்து வைக்கக்கூடிய வகையில் இந்த எழுத்து மக்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்ற சூழலில் இந்த எழுத்துரு அதற்கும் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே உருவாகி செம்மை பெற்று வளர்ந்திருக்க வேண்டும் எனக் கருதலாம்.

            இறந்த வீரனுக்காக மக்களால்  எழுப்பப்படுபவை நடுகற்கள்.  நடுகற்களிலும் தமிழி எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளமையை மிக அண்மைய கண்டுபிடிப்பைக் குறிப்பிட்டு இந்தப் பதிவு பேசுகிறது. இதுகாறும் கிடைத்துள்ள தமிழி கல்வெட்டுக்கள் சமயம் சேராதவையாக இருப்பதும் இவ்வகை கல்வெட்டுக்கள் பொதுவாக யாரோ ஒருவர் யாருக்கோ வழங்கிய நன்கொடை, சேவை என்பதைச் சுட்டுவதாகவே அமைகின்றது என்றும்,  கி.பி. 4ம் நூற்றாண்டிற்குப் பிறகே, பல்லவ ஆட்சிக் காலம் தொடக்கமே சமய சார்புடனான கல்வெட்டுக்கள் பெருகின  என்றும் இப்பதிவில் டாக்டர்.ராஜவேலு குறிப்பிடுகின்றார்.

            பெரும்பாலோர் ஆய்வு நூல்கள் எத்தனையோ வந்திருந்தாலும் அவற்றை வாங்கி வாசிப்பதில்லை. கேள்விப்படும் செய்திகளையே நம்பி அதனையே உண்மை எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பர். ஆனால் நாம் தொடர்ச்சியாக ஆய்வுத் தகவல்களை வழங்குவோம்.


சு.ராஜவேலு: 
            சிக்காகோவில் பேசிய எனது கட்டுரையின் சுருக்கத்தை மீண்டும் வெளியிட்டமைக்கு நன்றி சுபா. 

            தமிழருக்குச் சொந்த அறிவு இல்லை ...  அடுத்தவர் வந்துதான் நமக்கு எழுத்தறிவை, கல்வி அறிவை, கலைகளை இலக்கியங்களை உருவாக்கினர் என நம்பிக் கொண்டிருப்பவர்கள் நாம் எத்தனை அறிவியல் சான்றுகள் மூலம் கருத்துக்களைச் சொன்னாலும் ஏற்க மாட்டார்கள். தமிழன் கி.மு. 700 அளவில் எழுத்துக்களைத் தரப் படுத்தி அதை கி.மு. 400 அளவில் இலங்கைக்கும், வட இந்தியர்களுக்கும் கொடையாக அளித்தான். அறிவியல் காலக்கணிப்பு இது. 

            பிற இந்திய மொழிகளையும் வடமொழி கல்வெட்டுகளையும் நன்கறிந்த இந்தியத் தொல்லியல் துறையின்  கல்வெட்டு அறிஞர்கள் கே.வி.இரமேஷ் சம்பத்,  பி.ஆர் சீனிவாசன்  (இவர்கள் அனைவருமே தலை சிறந்த இந்தியக் கல்வெட்டு அறிஞர்கள்) போன்றோர் சமஸ்கிருத பண்டிதர்கள். இவர்கள் தமிழே காலத்தால் முற்பட்ட எழுத்துக்கள் கொண்டது எனச் சொன்னவர்கள்.  நான் 25 ஆண்டுகளுக்கு முன்பே அதற்கான சான்றுகளைப் பட்டியல் இட்டுள்ளேன். இன்னும் நாம் நாகசாமி யையும்,  ஐராவதத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறோம். 

நான்  சாதாரணமான கேள்விகளை வைக்கின்றேன்...
தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் எழுத்துக்களையும் சமணர் உருவாக்கினர் என்றால் அவர்கள் பற்றிய குறிப்புகள் ஏன் அகத்திலும் புறத்திலும் இல்லை? மாறாக அவர்களின் சமயத்திற்கு முற்றிலும் எதிரான காதலும் வீரமும் மட்டுமே கருப்பொருளாகச் சங்க இலக்கியங்களில் பேசப் படுகிறதே. இதற்கு விளக்கம் அளிக்க இயலுமா? கி.மு. 700  இல் சமணமே வட இந்தியாவில் இல்லை. சமணர் கி.பி. 300 அளவில்தான் தமிழகத்தில் தொண்டை மண்டலத்திற்கு வருகின்றனர். தமிழி எழுத்துக்கள் அறிவுசார்ந்த தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள்.  அதனைச் சமணர்கள், பௌத்தர்கள் வணிகர்கள் வழியாக அறிந்து அவர்களுடைய மொழிக்கு ஏற்ப வர்கங்களை உருவாக்கினர். தமிழின் அடிப்படை உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்களை அப்படியே வைத்துக் கொள்கின்றனர்.

            கி.மு. 700- 600 இல் அடிப்படையான  உயிர் எழுத்துக்கள் தமிழில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஓ  ஆகிய எட்டும்.  மெய் எழுத்துக்கள் 18 ம் புள்ளி இல்லாமல்.   கி.மு. 400 இல் இலங்கையில் இவ்வெழுத்துகள் வர்கங்களை கொண்டு மாற்றம் பெறுகின்றன. இதே கால கட்டத்தில் ஆந்திராவில் பட்டிபொருலு (Bhattiprolu) இல் இருந்த பௌத்த துறவிகளும் இந்த மாற்றங்களைச் செய்கின்றனர். வட இந்தியாவில் 5 கல்வெட்டுகள் இதே கால கட்டங்களில் வெளியிடப் பட்டன. இவற்றைப் பற்றி அரிய Early South Indian Palaeography  by T. V. Mahalingam; Indian Palaeography by R. B. Pandey; Indian Epigraphy by D. C. Sircar; Indian paleography by G. Buhler  போன்றோர் நூல்கள் பார்க்கவும்.

1. மகன்தான் கல்வெட்டு
2. பிப்ரவா பேழை கல்வெட்டு
3. கொசுண்டி கல்வெட்டு
4. ஈரன் காசு பொறிப்பு
ஆகியவற்றின் காலம்  கி.மு. 400.  இந்த கல்வெட்டுகளில்  கூட்டெழுத்து முறை இல்லை. இன்றைய இந்திய எழுத்துக்கள் இந்த கூட்டெழுத்து முறையில் உள்ளவை.  இதனை உருவாக்கியவர் கி.மு. 300 சார்ந்த அசோகர்.    அல்லாது மெய், உயிர்மெய் இரண்டுமே ஒரே குறியீடு உடையவை என்பது நம் அனைவருக்கும் தெரியும்.   எ.கா. அக்கம் என்ற சொல்.   இதனைத் தொடக்க நிலையில் தமிழர்கள் மெய் எழுத்துக்கள் புள்ளி பெறாமல் எழுதினர். மேற்குறித்த  வட இந்திய,  பட்டிபொருலு கல்வெட்டுகள் அனைத்தும்  இவ்வாறே எழுதப் பட்டன. அதாவது 'அககம' என்ற குறியீடுகளைப் படிப்பவர்கள் அதன் பொருள் உணர்ந்து 'அக்கம்' எனப் படிக்க வேண்டும். இதை உணர்ந்த அசோகன் கூட்டெழுத்து முறையைத் தனது கல்வெட்டுகளில் புகுத்துகின்றான்.  அதாவது  க க வை மேலும் கீழும்,  அல்லது பக்கங்களில் சேர்த்து எழுதும் முறை.

            இதனை கி.மு. 300  இல் அறிந்த தமிழர்கள் கூட்டெழுத்து முறையை முதலில் முயற்சி செய்கின்றனர். இம்முயற்சி கொடுமணலில் நடைபெறுகின்றது. கொடுமணல் வணிக நகரம். இங்கு மட்டும் 40 பானை ஓடுகளில் எழுதி முயன்றுள்ளனர். இங்கு தான் வட இந்திய வணிகர்கள் தமிழர் எழுத்துக்களை கற்று வட இந்தியாவிற்குத் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழர்களுக்கு இந்த கூட்டெழுத்து முறை ஒத்து வரவில்லை. 

            இதனால் தொல்காப்பியர் புள்ளி முறையைப் புகுத்தி தமிழைச் சீர் செய்தார். 'மெய்யின் இயற்கை புள்ளி யொடு நிலையல் எகரமும் ஒகரமும் அவ்விதம் அற்றே', தொல்காப்பியம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு.  எ/ ஏ மற்றும்  ஒ/ஓ ஆகியவற்றுக்கும்  ஒரே குறியீடு.  எ பக்கத்தில் ஒரு புள்ளி வைத்தால் மாத்திரை குறையும்.  அவ்வாறேதான் ஒ / ஓ வும்.  கெட்டான்/ கெட்டான் - கெ பக்கத்தில் புள்ளி வைத்தால் அது கெட்டான். புள்ளி இல்லை என்றால்  கேட்டான். புரிந்திருக்கும். இந்த கே இரட்டைச் சுழி வீரமாமுனிவர் காலத்தில் தமிழில் புகுத்தப் பட்டது. ஓலைகளில் எழுதப் படும் இலக்கியங்கள் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை  படி எடுக்கும் பொழுது அவ்வவ்  காலங்களில் இடைச்செருகல்கள் ஏற்படும்.  அவ்வாறே 'அய்',  'அவ் என்பவையும்.    'ஐ'  கி.பி 4 ஆம் நூற்றாண்டு  சமணரால் புகுத்தப் பட்டது. 'ஔ' வீரமாமுனிவர்  காலத்தில் வருகிறது.  ஆயுத எழுத்தும் அவ்வாறுதான்.

            படுக்கை கோடுகளையும் செங்குத்து கோடுகளையும் வைத்துத் தான் தமிழி கோடுகள் உருவாக்கப் படுகின்றன. மெய்யெழுத்துகளைச் சுட்ட முதலில் புள்ளிகள் பயன் படுத்தப் படவில்லை. பாமர தமிழன், ஆடுமாடு மேய்த்த வேளாண்மை செய்த தமிழன்,  கீறல் குறியீடுகளிலிருந்து தெரிவு செய்த எழுத்துகளை உருவாக்குகின்றான்.   தமிழன் அனைத்தையும்  சோதனை செய்து பார்க்கிறான். நான் விரிவாக இதைச் சொல்லவில்லை. மூன்று நான்கு படிநிலைகள் இவற்றின் வளர்ச்சி நிலையில்  உள்ளன. முதலில் உயிர் ஏறிய மெய் எ.கா:   க+அ- க  - கடலன்.     குறில்/ நெடில் வேறுபாடுகள் இல்லாமை 'க' நெடில் குறியீடு 'க' குறில் குறியீடு ஆகவும் படிக்கப் பட்டது. நம்மிடம் இருந்து எழுத்துகள் வட இந்தியா சென்றமையால்  'ஏ' குறியீடு 'ஓ' குறியீடுகளை மாற்றாமல் வைத்தனர் அவர்கள். நம்ம ஆள் அறிவியல் பூர்வமாகச் சிந்தித்தான் இன்னும் சொல்லப் போனால் 'ஆ' குறியீடு முதல் நிலையில் இல்லை.



            முதலில் மெய் உயிர்மெய் குறில் நெடில் வேறுபாடுகள் காட்டப்படவில்லை. ஈகார குறியீடு இகரமாக வைக்கப்பட்டது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவில் சூத்திரதாரி தொல்காப்பியர் இவற்றைச் சீர் செய்கின்றார். குறில்களின் ஒலியையும் மெய்யையும் சுட்ட புள்ளியை அறிமுகம் செய்கிறார். மாத்திரை குறைக்கப்படுகிறது. எ/ஒ அவ்வாறே. மூன்று புள்ளிகள் இகரமாகிறது. இகரமாக இதுவரை இருந்த குறியீடு ஈகாரமாகிறது. இவை எல்லாம் இன்றைய கணினி வளர்ச்சியைப் போன்றது. இவற்றை எல்லாம் உங்களுக்குத் தனியாக வகுப்பறையில் தான் புரிய வைக்க முடியும். வெறும் தமிழியை மட்டுமே கற்றலாகாது.  இக்கால கட்ட இலங்கை பிராமி, வட இந்தியப் பிராமி ஆகியவற்றை ஒப்பு நோக்க வேண்டும்.  

            நம்மவர் செய்யும் தவறு ஒப்பு நோக்காதது.  வட இந்தியப் பிராமியை அறியாது தமிழியின் தொன்மையை வரையறை செய்தால், பிறகு பேரறிஞர் சொல்லி விட்டார் என அரைத்த மாவையே அரைக்க வேண்டியது தான். 99 விழுக்காடு கல்வெட்டு ஆய்வாளர்களே இந்த தவறுகளைச் செய்து வருகின்றனர். அறிவியல் காலக்கணிப்பு கணிப்பு கொடுப்பதில் பொருந்தல் சான்று வந்த பிறகும் கூட, "ஐராவதம் சொல்லி விட்டார், நாகசாமி சொல்லிவிட்டார், இவர் என்ன சொல்வது?",  என்பர். இவர்களை விட இந்தியக் கல்வெட்டுகளில் ஊறித்திளைத்த  பி. ஆர். சீனிவாசன்,  கே.வி. இரமேஷ் சம்பத்  போன்றோர்களையும்,  என்னையும் சேர்த்துத்தான் ஏற்கமாட்டார்கள்.  

            ஐராவதம் ஒருவேளை இன்று  இருந்திருந்தால் ஏற்று இருப்பார். என்னுடைய கருத்தையும் வாசிப்பையும் நேசித்தவர்  அவர். அரிக்கமேடு வாசிப்பில் தவறாக ஒரு பானையில் 'வளவன்' எனப் படித்து அவர் ஆசிரியராக இருந்த தினமணியில் சோழர் பட்டப்பெயர் பொறித்த மட்கலன் என்ற தலைப்பில் வெளியிட்டார். அந்த வாசிப்பு தவறு என்றேன். இருவருமே புதுச்சேரி சென்றோம். நான் அதனை 'குளவாய்' எனப் படித்திருந்தேன்‌. இறுதியில் தான் படித்தது தவறு எனத் திருத்தி 'விமலா பக்லி' நூலில் அதனை எழுதினார். தரவுகள் கிடைக்கக் கிடைக்க வெளிச்சம் வரும்.  அவரின் பத்ரபாகு  சமண கோட்பாட்டு அடிப்படையில் சமணர்களே தமிழர்களுக்கு கி.மு.200 இல் எழுத்துக்களை அறிமுகம் செய்தனர் என்றார். ஆனால் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. 530 என வந்துள்ளது. இந்த காலகட்டத்தில் சமணம் வட இந்தியாவிலே பெரிதாகப் பேசப்படவில்லை. பத்ரபாகு கர்நாடக வருகை கி.மு. 400 (மேலும் அதுவுமே ஒரு  புராண செய்தி). அப்படி எனில் கி.மு. 530 சாத்தியமா? தமிழனே இந்தியர்களுக்கு எழுத்தறிவைத் தந்தவன்.  வட இந்தியச் சமணரும் இல்லை, பௌத்தரும் இல்லை. அவர்கள் நம்மிடம் பெற்று அவர்கள் மொழிக்கு ஏற்ப மேலும் குறியீடுகளை உருவாக்கினர். இது கி.மு. 400 இல் நடந்தது.

            இலக்கிய தரவுகள் பெரும்பாலும் 50  ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓலைகளில் மீள் பதிப்பு செய்யப்படுபவை.  ஒரு கால கட்டத்தில் பதிப்பிப்பவர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றம் செய்து பதிப்பிப்பர். உயிர் எழுத்து 12 என்று உள்ளது.  ஆனால் உண்மையில் 'ஔ'  இல்லை 13 வதாக 'ஃ' இல்லை. 'ஐ' க்கு பதில் 400 வரை 'அய்' என எழுதினர். 'ஒள' க்கு பதில்  'அவ்' என எழுதினர்.  பிற்கால வட இந்தியத் தாக்கம் 'ஐ'  திருநாதர் குன்று கல்வெட்டில் வருகிறது. இது சமணர் கல்வெட்டு.  முதல் சமணக் கல்வெட்டு கடவுள் வாழ்த்துடன் 'நமோஸ்து' எனப் பறையன் பட்டு கல்வெட்டில் வருகிறது.  இதுவும் சமணக் கல்வெட்டு இரண்டுமே தொண்டை மண்டலம். மதுரை சுற்றி உள்ள தமிழி கல்வெட்டுகளில் எவற்றிலும்  சமயம் சார்ந்த சொற்களோ குறியீடுகளோ இல்லை. அசோகர் கல்வெட்டு கடவுள் வாழ்த்துடன் 'தேவானாம்பிய பியதஸி' எனத் தான் தொடங்கும்.    முதலில் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு  தொண்டை மண்டலம் வந்த சமணர்கள், படிப்படியாகத் தென் தமிழகம் சென்று ஏற்கனவே ஊரின் வெளியிலிருந்த குகைப்பகுதியில் தங்கி அருகில் வட்டெழுத்து கல்வெட்டு களையும் சமண திருமேனி களையும் வெட்டுகின்றனர். தமிழிக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இந்த படுக்கைகள் பெருங்கற்கால ஈமச்சின்னங்களில் ஒருவகை. சித்தன்னவாசல் மலைப்பகுதியில் ஈமச் சின்னங்கள் அகழாய்வு செய்யப்பட்டதை இப்போதும் பார்க்கலாம்.

            மதுரையைச் சுற்றி உள்ள குகைகளில் உள்ள படுக்கைகள் பெருங்கற்கால ஈமப்படுக்கைகள். இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள். நடுகல் போன்றவை.  இவற்றை அதிட்டானம்/ பாழி/பாளி எனக் குறித்தனர். இந்த பாழியைத் தான் சமண பள்ளி என ஐராவதம் குறிப்பிட்டார். பாழி என்பது இறந்தவர்களுக்கு எடுக்கப்படும் நினைவுக் கல் என தாதப்பட்டி நடுகல் சுட்டுகிறது. இதிலிருந்து தான் பள்ளிப்படை கோயில்கள் வருகின்றன.  அமணன் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள்.  அசோகனுடைய கல்வெட்டில் சிரமண என வருகிறது. இது துறவிகளைக் குறிக்கும் சொல். தமிழன் துறவி ஆகக் கூடாதா?   சமணர்கள் துணியைத் துறந்து அம்மணமாக மாறியதால் இது பின்னர் இவர்களை மட்டுமே குறித்ததானது.  உறை என்பது  இறந்ததைச்சொல்கிறது. உறைந்து விட்டவர், தெய்வமானவர். அவருக்காக எடுக்கப்பட்ட நினைவுப் படுக்கை,  உறைதல், Fossilized. அதாவது, இது பால் உறைந்து விட்டது என்பது போன்று. 

            சந்திரகுப்தர் காலத்தில் வந்த மெகஸ்தனிஸ் தனது இண்டிகாவில்,"சந்திரகுப்தர் அவையில் எவருக்கும் எழுத்தறிவில்லை" எனக் குறிப்பிடுவது உண்மை. இதனை அசோகனுடைய கல்வெட்டிலும் பார்க்கலாம். தான் வெளியிட்ட கல்வெட்டுகளைப் படித்து மக்களுக்குச் சொல்வதற்குத் தர்ம மகா மாத்திரர்களையும் அவர் நியமித்தார். பெரும்பான்மை மக்கள்  எழுத்தறிவு அற்றவர்தான்  என்பது பொருள்.  அசோகரால்  வெளியிடப்பட்டது அரச கல்வெட்டுகள்,  royal inscriptions.  தமிழகத்தில் உள்ளவை மக்களால் கீறப்பட்ட  மக்கள் எழுத்துகள், people script. தமிழி மக்கள் எழுத்து.   அசோகன் பிராமி அரச அலுவல் எழுத்து. 

            அவ்வாறாகக் கீறப்பட்ட  தமிழ் எழுத்துகள்  தமிழி. தமிழி மக்களால் உருவாக்கப்பட்டது. சுமார் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு இது தரப்படுத்தப்பட்டது. ஆரம்பக் கட்டம் ஒரு சோதனை நிலை. 'ஐ' முதன் முதலாக கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் வருகிறது, திருநாதர்குன்று சமணர் கல்வெட்டில்.  அசோகன் எழுத்துக்கள் என்பது அரச அலுவல் எழுத்து, ராயல் ஸ்கிரிப்ட் ஆகும். அவர் பிராமி மட்டும் பயன்படுத்தவில்லை,  க்ரோஷ்டி, அராமைக் மற்றும் கிரேக்க (Kharosthi Aramaic and Greek) மொழியையும் பயன்படுத்தினார்.  அவர் அனைத்து  வட்டார மொழி எழுத்துக்களையும் கடன் வாங்கினார். அசோகன் எழுத்துக்களை  பட்டிபொருலுவின் திறமையான புத்த பிக்குகள் உருவாக்கியுள்ளனர். அவர்கள் அடிப்படை தமிழ் எழுத்துக்களைக் கடன் வாங்கி, பிராகிருத மொழிக்கு ஏற்றவாறு வர்க எழுத்துக்களை  உருவாக்கினர். நம்முடைய தமிழியின் அடிப்படை   கி.மு.  7 அல்லது 6 ஆம் நூற்றாண்டு முதல்  தமிழியில் படிப்படியாக வளர்ச்சியுறுவதை ஒருவர் காணலாம்.  தமிழி குறித்து நான் வகுப்பு அல்லது உரை நிகழ்த்தினால் வாருங்கள் சான்றுகளுடன் விளக்குகின்றேன். புள்ளி மூன்றாம் நூற்றாண்டில் தானே வருகிறது.  அதற்கும் முன்பாகவே தமிழி அடிப்படையில் பட்டிபொருலு பொளத்த துறவிகள் பாகத மொழிக்கு ஏற்ப எழுத்துக்களை உருவாக்கி விட்டனர் அசோகன் காலத்தில் கூட்டெழுத்து முறை. நாம் புள்ளி வைக்க ஆரம்பிக்கின்றோம். படிப்படியாக வளர்ச்சி.

            இன்னொன்று, கொடுமணல் அகழாய்வு தமிழகத்தின் தலைசிறந்த அகழாய்வு.   இங்கு மட்டுமே 1000க்கும் மேற்பட்ட பானை ஓடுகளில்  பெயர் பொறித்த எழுத்துக்கள் கிடைத்துள்ளன.  தமிழகத்தில் இதுவரை 175 இடங்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன.  இவற்றில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் மக்கள் பயன் படுத்திய மட்கலங்களில் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆட்பெயர்கள் கிடைக்கின்றன.  வட இந்தியாவில் ராமாயணம் மகாபாரதம் சொல்கின்ற ஊர்களில் அகழாய்வுகள் நடந்துள்ளன.  எண்ணிக்கையும் 700க்கு மேல்.  ஆனால்,  ஒரு இடத்தில் கூட எழுத்துப் பொறித்த மட்கலன் கிடைக்கவில்லை. இதனால் தமிழி மக்கள் எழுத்து என்பதும்  அசோகன் பிராமி அரச அலுவல் எழுத்து என்பதும் உறுதியாகிறது.  

            இன்னொன்று, கொடுமணல் வணிக நகரம். இங்கு வந்தவர் தங்கள் பெயர்களை தமிழியில் பிராகிருத மொழியை எழுதி உள்ளனர். எ.கா. நிகம (Nigama). வட இந்தியாவில் இந்த வணிகக் குழுவின் பெயர் அசோகன் காலத்திற்குப் பிறகு வர்க்க எழுத்தில் தான் எழுதப்படுகிறது.  தமிழகத்தில் அவர்களது  பிராகிருத பெயர் கிடைப்பதாலேயே பிராகிருதம் மிகுந்துள்ளதாகத் தவறான ஒரு விழுக்காட்டை ஐராவதம் தருகின்றார்.  வினைச்சொற்கள் கிடைத்திருப்பின் இதனை ஏற்கலாம்.  என்னுடைய பெயர் ராஜவேல் இரண்டும் கலந்த கலவை அதற்காக நான் சமஸ்கிருதம் அறிந்த பண்டிதன் ஆகிவிடமாட்டேன். வந்த வடநாட்டு வணிகர்கள் தமிழி எழுத்துக்களை கற்று எழுதிப் பழகி உள்ளனர். சென்ற ஆண்டு நடந்த அகழாய்வில் தமிழி அகர வரிசையில் எழுதப் பட்ட பானை ஓடு கிடைத்துள்ளது.  அறிவியல் காலக்கணிப்பிற்கு அனுப்பப்பட்ட சான்றுவகை, ஸ்பெசிமன், குழியின் கீழிருந்து இரண்டு அடுக்குக்கு மேலிருந்தது அனுப்பப்பட்டது. அதற்கும் கீழ் இரண்டு அடுக்கு மண்ணுக்குள் உள்ளன. கீழ் நிலையில் கீறல் குறியீடுகள் கிடைக்கின்றன.  அடுத்து தமிழி . அதற்கடுத்த நிலை  4 பிராகிருத எழுத்துக்கள் உள்ள தமிழி மிகுந்த அடுக்கு இது. இதன் காலம் தான் கி.மு.530. அரிக்கமேடு, அழகன் குளம், பூம்புகார் மற்றும் கொடுமணல் போன்ற வணிக நகரங்களில் மட்டுமே இவை கிடைத்துள்ளன. dha, SA, SAha, bha ஆகிய எழுத்துகள் இங்கு கிடைத்துள்ளன. ஆக,  பிராகிருதமே தமிழர் கொடுத்த கொடையாக இருக்க வாய்ப்பு உண்டு.  




---