Sunday, March 28, 2021

அதிகாரமும் பெண்களும்

அதிகாரமும் பெண்களும் 


-- முனைவர் எஸ்.சாந்தினிபீ



இன்றைய நமது பெண்களும் அன்றைய நாளின் பெண்சமூகமும் நம் முன்னே போட்டி போடுகின்றன யாருக்கு முன்னிலை? அப்படி என்ன சாதித்தார்கள்? என்ற கேள்வியால் உயரும் புருவங்களுக்கும் நெளியும் நெற்றிச் சுருக்கங்களுக்கும் விடை தேடுவோம். சுயமாகப் பொருளீட்டிய, அரசுக்கு வரி கட்டிய பெண்கள் நாம் அடிமைப்பட்ட 18ம் நூற்றாண்டுக்கு முன்னரும் வாழ்ந்தனர். இதற்கான சாட்சி சொல்வது நாட்டில் பாதிக்கும் மேலாக உள்ள தமிழ் கல்வெட்டுகளாகும். இன்றும் வாழ்கின்ற இவ்வகை பெண்களுக்கு உதாரணமோ, சாட்சியோ தேவையில்லை. இன்றும் நாட்டின் முப்படைகளிலும் நேர்கொண்ட பார்வையோடு வீறுநடைபோடும் பெண்ணை பலவீனமானவளாகக் கட்டமைத்தது எப்படி?

துணை இழந்தும், தன்னலத்தைப் புறந்தள்ளி பொது நலத்திற்காக வாழ்வின் ஒரே பற்றுக்கோடான இளம் மகனையும் போருக்கு அனுப்பியவள் சங்க காலத்தில் மட்டுமேவா வாழ்ந்தாள்? இல்லையே, மனித சமுதாயத்தாலும், இயற்கையாலும் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாரா விபத்துகளினால் தனித்து நின்று, தான் பெற்றவர், தன்னை பெற்றவர்- ஏன், உற்றார், உறவினர், எல்லோரின் துன்பத்திலும் துணை நின்று, ஒற்றைப் பெண்ணாக குடும்பச் சுமையை தன் தோள்களில் சுமப்பவர் எண்ணிலடங்கோர். கண் முன்னே வாழ்ந்துகாட்டிக் கொண்டிருந்தாலும், பெண் கொழுகொம்பின் துணையின்றி வாழ இயலாத 'கொடி'யென வளர்ந்த வருணனைகள் எதற்காக? அவளின் மன உறுதியைக் குலைத்து பலகீனப் படுத்தவா?

உலகளவில் எந்த சமயத்தையும் தோற்றுவிக்காதவள் பெண் என்று வரலாறு இருக்கும் போது, எல்லா மதத் தொடர்பான சடங்குகளும் அவள் மீது திணிக்கப்பட்டு, பொருளற்ற கலாச்சாரச் சின்னங்களைக் காக்கும், சுமக்கும் சுமைதாங்கிக் கல்லாக வாழ்க்கையில், கட்டாயப் படுத்தும் எழுதாச் சட்டங்கள் எங்கனம் நடைமுறையில் நிலவுகிறது?

விட்டுப் பிரிந்த கணவனின் வருகைக்காக வழிமீது விழி வைத்து, இமைக்க மறந்து பார்த்த கண்கள் பூத்துப்போக, வாழாவெட்டியெனப் பட்டம் சுமந்து, குடும்பத்தின் மானம் பறக்கவிட்ட பழியே தனக்கான பட்டமென, தன்னையே நொந்து, கண்ணீரும் கம்பலையுமாய் காலம் கடத்தாமல், வீட்டுக்குத்தான் கதவு ஊருக்கில்லை கீழிருக்கும் மண்ணும் மேலிருக்கும் வானமே எல்லையென கலையையும் படைப்பாற்றலையுமே வாழ்வாக வாழ்ந்த பெண்கள் கடந்து போன சங்ககால வரலாற்றில் மட்டுமா காணப்படுகின்றனர்? தொடர்ந்து இன்றுந்தானே கண் முன் வாழ்ந்து வருகிறார்கள்? ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக உண்மை இப்படியிருக்க, கணவனைச் சுற்றி மட்டுமே அவளின் வாழ்க்கை இயங்க இயலுமென்ற பொய்யான நிழல் பிம்பங்கள் சமூகத்தில் தொடர்ந்து உலா வருவதற்கு யார் காரணம்?

உலகின் பல நாடுகளுக்கும் தனித்துப் பறந்து சென்று பெரும் பதவிகளைப் பொறுப்புடன் செயல் படுத்தும் பெண்களின் திருமணத்திற்காகவும், மகப்பேற்றிற்காகவும் வயதானாலும் விமானத்தில் பறக்கும் கடமை தவறா பெற்றோர் பலர் நம்மிடையே வாழும் அதே காலகட்டத்தில் பயனற்ற, அறிவியலுக்கு எதிரான மிகைப்படுத்தப் பட்ட மாய வலைகளைத் தன்னை சுற்றிப் பின்னிக்கொள்வதும், அந்த வலையிலே தன் குடும்ப உறுப்பினர் மற்றும் சமூகத்தையும் சிக்க வைத்து ஆணவக் கொலைகள் நடப்பதும் இதே நாட்டில் எப்படி அரங்கேறுகிறது?

சோழப் பேரரசில் பணி புரிந்த 'அதிகாரிச்சி' (பெண் அதிகாரிகள்) பலர் இன்றும் இந்திய இறையாண்மை பணி முதல், சட்டப் பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் பொதுமக்களின் குறை தீர்க்க குரல் கொடுக்கும் பலர் நம் கண்முன் வாழ்கிறார்கள். இதே காலகட்டத்தில் பெண்கள் வன்புணர்வுக்குப் பலியாவதும், திருமணத்தை முன் வைத்து நடத்தப்படும் அநீதிகளும் குறையவில்லை. 

விவசாயத்தைச் சார்ந்த வாழ்வியலின் போது வேட்டியே ஆடையாக வாழ்ந்த ஆண்சமூகம், பணியின் தன்மைக்கேற்ப தன் நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டது முறையே. மாற்றுச் சிந்தனையின்றி சரியே என தலையசைத்த அதே சமூகத்தில், இன்று ஆண் செய்யும் அத்துணைப் பணிகளில் பெண் நுழைந்திருப்பது தெரிந்ததே. ஆனால் அவளின் ஆடை மாற்றத்தைக் குறித்து நடக்கும் அரசியலுக்கும் எதிர்ப்புக்கும் எல்லையேயில்லை. இருபாலினருக்கும் நீதி ஒன்றெனப் பார்க்க சமுதாயம் ஏன் மறுக்கிறது?

சாதாரணமாக தள்ளுவண்டியில் வணிகம் செய்யும் ஆடவனும், மேற்கத்திய சாயலில் தன்னை மாற்றிக் கொண்டது தான் இன்றைய நடப்பு. இம்மாற்றம் ஓசையின்றி நடந்து விட்டது. ஆனால், பெண்ணை மட்டும் இத்தனை பெரிய விவாதத்திற்கு உட்படுத்துவதும் அதே சமூகம். இப்படி மாற்றுப் பார்வைக்கு நம்மை ஆளாக்கும் சக்தி எதுவோ?

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயிலில் பணிபுரியும் பெண்களிடையே ஒரு கருத்து முரண்பாடு தலை தூக்கியது. பணியின் படிநிலைத் தொடர்புடையது. இதற்காக கோயிலில் பணிநிறுத்தம் நடத்தினர் அதுவும் 30 ஆண்டுக்காலம் நீடித்தது. மூன்று முறை பல்வேறு படிநிலையிலிருந்த சமயம், அரசு சார்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாது இறுதியில் மன்னரே வந்து பிரச்சினையை முடித்து வைத்தார். இந்த நிகழ்வு சென்னை, திருவொற்றியூர் சிவன் கோவிலில் ஏற்பட்டதை அங்கிருக்கும் கல்வெட்டே இன்றும் சொல்கிறது.

முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று நம் ஆர்வத்தைத் தூண்டும் வேறு ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறது. கோயில் பணிக்காக அரசால் நியமனமான சில பெண்கள் ஏதோ சூழலால் அரண்மனைப் பணியில் நுழைக்கப்பட்டனர். இந்த முறைகேட்டை மன்னனின் கவனத்திற்கு எடுத்துச் சென்றனர் இப்பெண்கள். இதை விசாரித்து மன்னனும் மீண்டும் அவர்களைக் கோயிலுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். முடிசூடிய, அதிகாரமிக்க பேரரசர்களின் காலத்திலேயே தன் குரலுயர்த்தி இடர்ப்பாடுகளை முடித்துக் கொண்டவள் பெண். இதன் தொடர்ச்சியாக அவளின் குரல் எல்லாப் போராட்டங்களிலும் இன்றும் கேட்கமுடிகிறது. அதே பெண்குரல் வீடுகளில் நசுக்கப்படுவது எப்படி?

எல்லையில்லாது பெருகிக் கொண்டே போகும் இக்கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியது அவசியம். பெண்ணின் வலிமையைப் புரிந்து கொள்வதும் முக்கியமாகும். இத்தகைய இடை வெளியைக் குறைக்க அரசும் மக்களும் இணைந்து செயலாற்றினால் இப்பொன்னாளை வெகு விரைவில் தொட்டு விடலாம். அந்நாளே 'பெண்' நாளாகும்.



முனைவர் எஸ். சாந்தினிபீ, 
பேராசிரியர், வரலாற்றுத் துறை,
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், 
அலிகர், உத்திரப் பிரதேசம்
-------


நன்றி:   தினமலர் 

Thursday, March 25, 2021

வரலாற்றில் கிண்ணிமங்கலம்

 வரலாற்றில் கிண்ணிமங்கலம்


-- முனைவர் சு.ராஜவேலு 
பேராசிரியர், வரலாற்றுத்துறை 
அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி


தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் வட்டத்தில் உள்ள ஊர் சொக்கானூரணி இவ்வூருக்கு 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிறிய ஊர் கிண்ணிமங்கலம். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இவ்வூரின் சிறப்பு வரலாற்று மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களால் பெரிதும் பேசப்பட்டது. இப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியர்களில் ஒருவரான திரு. காந்திராஜன் குழுவினர் (திரு. ஆனந்தன் சன்னாசி & திரு. இரா.ச.ராசவேல்) கள ஆய்வு செய்து கிண்ணிமங்கலத்தில் உள்ள ஏகநாதர் ஆனந்தவள்ளி அம்மன் கோயிலின் வளாகத்தில் கற்குவியல்களுக்கு இடையில் இருந்த சில கல்வெட்டுகளைக் கண்டெடுத்தனர். பின்னர் கல்வெட்டுகளை முனைவர் வேதாசலம் அவர்களின் உதவியுடன் படியெடுத்து இக்கல்வெட்டுகளின் சிறப்பு குறித்து நாளிதழ்களில் வெளியிட்டனர். இக்கல்வெட்டுகள் குறித்தும் மேற்கொண்டு  இம்மடத்திற்கு நேரில் சென்று கல்வெட்டுகளையும் மற்றும் சில அரும்பொருள்களையும் ஓலைச்சுவடிகளையும் பார்வையிட்டு இவற்றின்  சிறப்பியல்புகளையும் இவற்றின் உண்மை தன்மைகளைப் பற்றியும்  இக்கட்டுரையின் வாயிலாக தெரிவிக்கின்றன.

5.jpg

அண்மைக் காலங்களில் தொல்லியல் ஆர்வலர்களின் பார்வை வைகை ஆற்றின் பண் பாட்டுப் பகுதிகளைப் பெரிதும் ஈர்த்துள்ளது. கீழடி அகழாய்விற்குப் பின் பல புதிய கண்டுபிடிப்புகள் குறித்து செய்தித் தாள்களில் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இவற்றை ஆய்வு நோக்கோடு பார்க்கின்ற பார்வை இல்லாமல் ஊகங்களின் அடிப்படையில் பல்வேறு செய்திகள் அதிகமாக வருவதால் இக் கண்டு பிடிப்புகளின் உண்மைத் தன்மை அவற்றின் சிறப்புகள் குறித்து ஆய்வுலகில் பல்வேறு கருதுகோள்கள் நிலவி வருகின்றன. அவ்வகையில் கிண்ணிமங்கலக் கண்டுபிடிப்புகள் குறித்தும் பல கருதுகோள்கள் நிலவி வருகின்றன. இப்பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் செய்து உண்மைத் தரவுகளை கண்டறிந்து ஆய்வுக்கு உட்படுத்திய பின் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

மதுரையிலிருந்து மேற்காக 18 கி.மீ தொலைவில் கொச்சி  தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை எண். 85க்கு அருகில் செக்கானூரிலிருந்து தென் கிழக்காக கிண்ணிமங்கலம் அமைந்துள்ளது. இவ்வூருக்கு  மதுரையிலிருந்து வடபழஞ்சி வழியாகவும் செல்லலாம். இப்பகுதியைச் சுற்றிய மலைப்பகுதிகளில் தமிழிக்கல்வெட்டுகள் பல ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஏகநாதர் ஆனந்தவள்ளிக் கோயில் அரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவராக லிங்க வடிவு உள்ளது. இருதள நாகர வடிவமைப்பில் அமைந்துள்ள இவ்விமானம் செங்கல் சுதை கொண்டும் கருவறைச் சுவர் கற்றளியாகவும் காணப்படுகிறது. இக்கோயில் கருவறை, இடைகழி, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விஜயநகரத்திற்கும் பிற்பட்ட கலைவேலைப்பாட்டமைப்பில் அமைந்துள்ளது. கோயிலின் மூலவராக இலிங்கத்திருமேனி இருப்பதுடன் இம்மடத்தினை வழிவழியாக நிருவகித்து வந்த மடாதிபதிகளின் சமாதிக் கோயில்களும் இங்கு உள்ளன. இவற்றைத்தவிர விநாயகர் முருகனுக்கான சன்னதிகள் இவ்வளாகத்தில் உள்ளன. தற்பொழுது உள்ள கோயிலின் அருகில் உள்ள திடல் பகுதியே முன்பு மடமாகச் செயல்பட்டதாகவும் தற்பொழுது உள்ள கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டது எனவும் இக்கோயிலை நிருவாகித்து வரும் திரு. அருளானந்தர் குறிப்பிடுகின்றார். இங்கிருந்த மடம் தற்பொழுதும் தொடர்ந்து செயல்படுகிறது. இம்மடம் வழிவழியாக கல்வி கற்பிக்கவும் போர்க்கலைகள் கற்பிக்கப்படும் இடமாகவும் திகழ்ந்து வந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை, இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள், நீர் மேலாண்மை, சோதிடம், தமிழ் மருத்துவம், தமிழர் கணிதவியல் இவற்றுடன் போர்க்கலைப் பயிற்சிக்கான களமாகவும் இது திகழ்ந்தது. சோழர் காலத்தில் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் காந்தளூர் சாலை போன்று இம்மடம் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

தமிழி நடுகல் கல்வெட்டுகள்:
இறந்தவர்களின் நினைவாக ஈமச் சின்னங்கள் எடுக்கும் வழக்கம் தென்னகத்தில் தொன்று தொட்டு நிலவி வருகின்றது. பெருங்கற்காலச் சின்னங்கள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பொ.மு. 1500 க்கும் முன்பிருந்து கிடைத்துள்ளன. பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளில் நடுகல் எடுக்கின்ற வழக்கம் பண்பட்ட சமூகத்தின் வளர்ச்சி நிலையில் கிடைக்கின்றன. அவற்றை இறந்த முன்னோருக்கான கோயில்களாக தமிழர்கள் வணங்கினர். சங்க இலக்கியங்களில் நடுகல் வழிபாடு மற்றும் நடுகல் எடுக்கின்ற வழக்கம் பெருமளவில் சுட்டப்படுகிறது. அவற்றின் தொடர்ச்சியாக வரலாற்றுக் காலத்தில் சமூகத்தில் உயர் நிலையில் இருந்தவர்களுக்கு குறிப்பாக அரச மரபினருக்கு இறந்த பின் பள்ளிப்படைக் கோயில்கள் எடுக்கின்ற வழக்கம் தொடர்ந்தது. அவ்வகையில் தற்பொழுது  கண்டுபிடிக்கப்பட்ட தமிழி எழுத்துப் பொறித்த நடுகல் இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லிற்கான பள்ளிப்படைக் கோயிலைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அவ்வகையில் நடுகற்கள் வழிபாடு ஈமச் சின்ன வழிபாட்டு வளர்ச்சியில் ஒரு மைல்கல்.

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு: 
மேற்குறித்த கிண்ணிமங்கலத்தில் உள்ள கோயிலில் கூம்பு வடிவ நெடுங்கல் ஒன்றின் நடுப்பகுதியில் பண்டைத் தமிழி வரிவடிவில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு மீட்டர் உயரமுடைய முப்பட்டைத் தூண் பகுதியின் அடிப்பகுதி போன்ற உள்ள இக்கல் சொரசொரப்பாக வழவழப்பற்ற நிலையில் எவ்வித வேலைப்பாடு அற்ற நிலையில் காணப்படுகிறது. இக்கல்லின் மேல் பகுதி குறுகியும் கீழ்ப்பகுதி தட்டையாகவும் காணப்படுகிறது. கல்லின் நடுப்பகுதிக்கும் சற்று கீழ்  நிலையில் இரண்டு வரிகளில் தமிழி எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. வெளிர் நிறமுடைய செந்நிறக்கல்லில் மிக கூர்மையான உளி கொண்டு தமிழி  எழுத்துக்களைக் கோட்டுருவாக எழுதியுள்ளனர். இவ்வெழுத்துக்கள் பெரியதாகவும் சீரான நிலையிலும் தமிழகத்தில் கிடைத்த தமிழி நடுகற்கள் போன்று மிக நேர்த்தியாக எவ்வித எழுத்துப் பிழையுமின்றி எழுதப்பட்டுள்ளது. முதல் வரியில் ஏகன் ஆதன் என்றும் இரண்டாது  வரியில் கோட்டம் எனவும் எழுதப்பட்டுள்ளது. இதனை முதலில் படித்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் வேதாசலம் அவர்களும் தமிழ்நாடு தொல்லியல் துறையினரும் மெய் எழுத்துக்களிலும் எகரக் குறியீட்டிலும் புள்ளிகள் இடப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டு இதனை எகன் ஆதன் கோட்டம் எனப் படித்தல் வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர். இக்கட்டுரை ஆசிரியர் இதனை நேரில் ஆய்வு செய்த பொழுது இக்கல்வெட்டில் எவ்வெழுத்திலும் புள்ளி இடப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். இப்புள்ளிகள் இக்கல்லில் உளியால் சமன் செய்த பொழுது ஏற்பட்ட வெட்டுக்குழிகளின் புள்ளிகளே அன்றி மெய் எழுத்துக்களிலும் எகரக் குறியீட்டிலும் எங்கும் புள்ளிகள் காணப்படவில்லை. எனவே இக்கல்வெட்டை ஏகன் ஆதன் கோட்டம் என்றே படித்தல் வேண்டும். மேலும் இப்புள்ளியில்லா அடிப்படையிலும் உயிர் எழுத்து ஆ வின் பயன்பாடும் இக்கல்வெட்டில் உள்ளதால் இக்கல்வெட்டின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்பதை தொல்லெழுத்தியல் அடிப்படையில் அறிய முடிகிறது. 

1.jpg

எகரக் குறியீட்டின் அமைப்பும் இக்காலத்தில் நிலவிய அமைப்பில் உள்ளது. மேலும் ஆ எழுத்தின் வளர்ச்சி நிலையும் கி.மு. 2ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டது என்பதை சுட்டுகிறது. தமிழி எழுத்துக்களில் தொடக்க நிலையில் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் நெடில் ஆ காரக் குறியீடு காணப்படுவதில்லை. ஆதன் என்னும் பெயர்ச்சொல் அதன் என அரிட்டாப்பட்டி, கொங்கர் புளியங்குளம், விக்கிரமங்கலம், மேட்டுப்பட்டி, அழகர்மலை ஆகிய இடங்களில் பயின்று வருகின்றன. இதனை ஆதன் எனப் படித்தல் வேண்டும். இதே போன்று கொடுமணல் மற்றும் கீழடியில் மட்கல ஓடுகளில் ஆதன் என்ற பெயர்ச்சொல் அதன் என்றே கி.மு. 3ஆம் நூற்றாண்டுவரை அகரக் குறியீடும் கொண்டே எழுதி வந்துள்ளனர்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் கொடுமணல் மட்கலன்களில் ஆகாரக் குறியீடு காணப்படுகிறது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொடுமணலில் மத்திய தொல்லியல் துறை செய்த அகழாய்வில் உயிர் எழுத்துக்களான அ, ஆ, இ, ஈ ஆகிய குறியீடுகள் ஒரு பானை ஓட்டில் கிடைத்திருப்பது சிறப்புக்குரியது. (நன்றி ஸ்ரீராமன், கண்காணிப்பாளர், இந்திய தொல்லியல்துறை) எழுத்துக்களை எழுதிப் பழக இம்மட்கல ஓட்டை பயன்படுத்தி உள்ளனர். இவற்றின் காலம் கிமு 300க்கும் முற்பட்ட காலமாகலாம். கிமு 3ஆம் நூற்றாண்டளவில் அசோகனுடைய கல்வெட்டுகளில் ஆ கரக் குறியீடு வட இந்தியாவில் பயின்று வருகின்றது. தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் குன்னக்குடி, புகளூர் கல்வெட்டுகளில் ஆதன் என்ற பெயர்ச்சொல்லில் ஆ நெடில் பயின்று வருகின்றது. இதே போன்று புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டில் ஆகொள் என்ற  சொல்லில் நெடில் ஆ  காணப்படுகிறது. மேற்குறித்த நெடில் ஆ குறியிடங்களில் ஆவின் இடப்பக்க கீழ் மேல் வளைவுக் கோடுகள் இரண்டும் வலப்பக்க  நெடுங்கோட்டின் நடுவில் இணைகின்றன. ஆனால் தற்பொழுது  கிண்ணிமங்கல நடுகல் கல்வெட்டில் இப்பக்கக் கோடுகள் இடைவெளி  விட்டு நேர்க்கோட்டின் நடுவில் ஒன்று சேராமலும் மேலும் அசோகன்  கல்வெட்டுகள் மற்றும் தமிழகக் குகைக்கல்வெட்டுகள், புலிமான் கோம்பை  நடுகல் ஆகியவற்றில் நெடிலுக்கான குறியீடு செங்குத்துக் கோட்டின் நடுவில்  காட்டப்பட்டது போன்று அமையாமல் நெடுங்கோட்டின் வலப்பக்கம்  மேல்பகுதிக்கு சற்று கீழாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம்  இக்கல்வெட்டின் காலம் கிமு 200 க்கும் முற்பட்டதாகும் என்பதை உறுதியாகக் கூறலாம். (வட இந்திய அசோகன் கல்வெட்டுகள் கிமு 3ஆம் நூற்றாண்டில் நெடில் ஆ எழுத்தின் வலப்பக்க நெடில் படுக்கைக் குறியீடு செங்குத்துக் கோட்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டுள்ளது எனினும் கிண்ணிமங்கலம் கல்வெட்டிற்கு இதன் காலத்தைச் சிறிது பின்தள்ளி கிமு  200க்கு (முன்னெச்சரிக்கையாக கருத்தில் கொண்டு) காலம் கணிக்கப்பட்டுள்ளது. எனவே முன் ஆய்வாளர்கள் கிண்ணிமங்கலக் கல்வெட்டின் காலத்தை கி.பி.2ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் சென்று இருப்பது மேலோட்டமான பார்வையாகவே படுகிறது. தமிழியின் காலம் கிமு 600க்கும் முற்பட்டதாக அறிவியல் காலக்கணிப்பில் கணிக்கப்பட்ட நிலையில் அதனை கருத்தில் கொண்டு காலத்தை கணிப்பது என்பதும் சாலச்சிறந்தது. எனவே கிண்ணிமங்கலக் கல்வெட்டின் காலம் கிமு 200க்கும் முற்பட்டது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

கல்வெட்டின் சிறப்பு:
தமிழர் பண்பாட்டு வரலாற்றில் இக்கல்வெட்டு சிறப்பிடம் பெறுகிறது. இக்கல்வெட்டில் குறிக்கப்படும் ஏகன் ஆதன் கோட்டம் என்பது இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லிற்காக அமைக்கப்பட்ட கோயில் என்பதைப் புலப்படுத்துகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் இங்கு கிடைத்த 7-8ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுதின் துண்டுக்கல்வெட்டு ஒன்று சான்றளிக்கின்றது. கோட்டம் என்ற சொல்லா பல பொருள்கள் தமிழ் மொழியில் காணப்படுகின்றன. இக்கல்வெ முழுமையான தன்மை கொண்டு இப்பொருளை உளங்கொள்ளுதல் வேண்டும். கோட்டம் என்பது அரசின் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக  விளங்குகிறது. தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாக  பிரிக்கப்பட்டன. வரலாற்றுத் தொடக்க காலத்தில் தொண்டை நாட்டில் பல மண்கோட்டைகள் கட்டி அவ்வவ் ஊர்களின் சிறப்பு கருதி கோட்டங்கள் வழங்கப்பட்டன. இக்கோட்டைகள் வட்ட வடிவம் அல்லது  எண்கோண வடிவம் உடையவை. அதன் அடிப்படையில் நாட்டுப் பிரிவுகள் கோட்டங்களாக அழைக்கப்பட்டன. கோட்டம் என்ற சொல் முதன் முதலில் பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் (கிபி 3ஆம் நூற்றாண்டு) பயின்று வருகின்றது. இக்கல்வெட்டில் இச்சொல் மதுரையிலிருந்த சமணர்களுக்கானப் பள்ளி எனப் பொருள் கொள்ளப்பட்டது.

நிலப்பிரிவைத் தவிர, கோட்டம் குறித்து சங்க இலக்கியங்களில் பல பொருள்கள் இடத்திற்கு ஏற்றவாறு குறிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்காக எழுப்பப்படும் கோயில்களும் இப்பொருளை கொண்டுள்ளன. (சிலம்பு 10,14) கோட்டம் என்பதற்கு வளைவு (நன் 25) நடுநிலை (தேவா 156) உட்கோட்டம், சொற்கோட்டம் (திருக்குறள் 119) அறை (மணி 6,59) பாசறை (சீவ 262) போன்றவையை இங்கு சுட்டலாம். இவற்றுள் கோயிலோடு தொடர்புடையதாகவே பெரும்பாலும் இச்சொல் அமைந்துள்ளது. புறநானூற்றில் முருகன் கோட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றது. (புறம் 299) பட்டினப்பாலை காவேரிப் பூம்பட்டினத்திலிருந்த நிலாக் கோட்டம் பற்றிக் கூறுகிறது. (ப.பா வரிகள் 34-36) கலித்தொகையில் புத்தொளிர் கோட்டம் காமன் கோட்டம் குறித்தும் செய்திகள் உள்ளன. (கலி 82, 109) சிலப்பதிகாரம் புகார் நகரில் இருந்த தருக்கோட்டம், வெள்ளானைக்கோட்டம், புகார் வெள்ளை நாகர் கோட்டம், பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம், வேற்கோட்டம் வச்சிரக்கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம், நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், பாசண்டச்சாத்தான் கோட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றது. திருச்செங்கோட்டு உயர்வரையில் மங்கல மடந்தைக் கோட்டமும் கொடும்பாளூருக்குத் தெற்கில் மதுரை செல்லும் வழியில் ஐயை கோட்டமும் மதுரை மாநகரில் கோழிச் சேவல் கொடியோன் கோட்டமும் தேவக்கோட்டம் ஒன்றும் குறிக்கப்பட்டுள்ளன. இடுகாட்டுப் பகுதியில் இருந்த வழிபாட்டு இடங்கள் கோட்டம் என வழங்கப்பட்டதையும் சிலப்பதிகாரம் குறிக்கிறது. (சிலம்பு 5-15) இதனை உறுதி செய்யும் வகையில் இரட்டைக் காப்பியங்களில் மற்றொன்றான மணிமேகலை ஈமப் புறங்காட்டிலிருந்த சக்கரவாளக் கோட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறது. (மணி 51-166) இவற்றின் காலம் பெரும்பாலும் இறந்தோருக்காக ஈமப் பகுதிகளில் எடுக்கப் கோயில்கள் அல்லது நினைவுச் சின்னங்கள் கோட்டம் என வழங்கப்பட்டதை உறுதியாகக் குறிப்பிடலாம்.

கோட்டம் என்பதின் மூலம் இவை வட்ட வடிவ அமைப்புடைய என பொறிஞர் கோமகன் கருதுகின்றார். தூங்கானை மாடக்கோயில் வகை  போன்று இவை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே ஏகன் ஆதன் என்பவருக்கு நடுகல் எடுக்கப்பட்டு அதனைச் சுற்றி வட்ட வடிவ கோட்டம் ஒன்றை அமைத்திருக்க வேண்டும் என்பதே தமிழிக் கல்வெட்டின் பொருளாகும். மேலும் இதில் வரும் ஏகன் தந்தை பெயர் அவரது மகன் ஆதன் என்பார். அவர் இறந்தமைக்காக நடுகல் எடுக்கப்பட்டு கோட்டம் அமைக்கப்பட்டது.

கோட்டம் என்பது பெரும்பாலும் இறந்தவர்களுக்கு எடுக்கப்பட்ட கோயில் என்ற வகையில் சங்க இலக்கியங்களில் இறந்த அரசர்களின் சில பெயர்கள் துஞ்சிய என்னும் அடைமொழியோடு சொல்லப்படுகிறது. எ.கா. கோட்டம்பலத்துத் துஞ்சிய, கோட்டம்+ அம்பலம்+ துஞ்சிய (இறந்த).

பூலாங்குறிச்சிக் கல்வெட்டில் மதிரை (மதுரை) உலவியத்தான் குளத்திற்கு வடக்கில் தாபதப்பள்ளி ஒன்று இருந்ததையும் அதன் உள்ளே வாசி தேவனாரு கோட்டம் ஒன்று இருந்ததையும் முன்பே குறிப்பிட்டோம். இக்கோட்டம் தாபதப் பள்ளியில் இருந்த வாசி தேவனார் என்பவர் இறந்தமைக்காக எடுக்கப்பட்ட கோட்டமாக இருக்கக்கூடும். துறவு நிலை கொண்டு வாழ்வோர் வாழுமிடம் தாபதப்பள்ளி என வழங்கப்பட்டது. கிபி மூன்றாம் நூற்றாண்டளவில் சமணம் தமிழகத்திற்கு வருகின்றது. எனவே மதுரையிலிருந்த தாபதப் பள்ளி சமணப் பள்ளியாகலாம். வடக்கிருந்து உண்ணா நோன்பிருத்தல் சமணர்களின் வழக்கம். அவ்வாறு இப்பள்ளியில் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த வாசுதேவனார் என்பவருக்காக எடுக்கப்பட்ட சமாதிக் கோயில் அவரது பெயரால் வாசி தேவனார் கோட்டம் என வழங்கப்பட்டிருத்தல் வேண்டும். எனவே கிண்ணிமங்கலத்தில் தமிழ் சமூகத்தைச் சார்ந்த மடத்தில் வாழ்ந்து துறவுநிலை பூண்டு இறந்த ஏகன் ஆதன் என்பவருக்காக நடுகல் எடுக்கப்பட்டு அதனைச் சுற்றிக் கோட்டம் (பள்ளிப்படை) (பொ.மு.) கிமு இரண்ட நூற்றாண்டு அளவில் ஒன்று அமைக்கப்பட்டதை கிண்ணிமங்க கல்வெட்டு குறிப்பிடுகின்றது.

வட்டெழுத்து கல்வெட்டு:

2.JPG
கிண்ணி மங்கலம் ஏகநாதர் மடத்தில் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. இக்கல்வெட்டின் முன்பகுதி உடைந்து அது குறித்து விவரம் தெரியாமல் இருப்பதால் இக்கல்வெட்டு யார் காலத்தில் வெளியிடப்பட்டது என்பது குறித்த விவரங்களை அறிய முடியவில்லை. இக்கல்வெட்டும் கூரிய உளி கொண்டே நான்கு வரிகளில் எழுத்துகள் கீறல்களாக கல்லில் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு;
1. இறையிலியாக 
2. ஏகநாதன் 
3. பள்ளிப்படை 
4. மண்றளி
5. ஈந்தார் 
இவ்வட்டெழுத்துக் கல்வெட்டின் இடப்பக்கம் இரட்டை மீன்களின் கோட்டுருவங்கள் உள்ளன. இவை முற்காலப் பாண்டியர் காலத்தில் வெளியிடப்பட்ட கல்வெட்டாக இருக்கக்கூடும். கல்வெட்டின் முடிவில் விளக்கு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. கோட்டம் என அழைக்கப்பட்ட ஏகநாதன் நடுகல் கோயில் 7-8 ஆம் நூற்றாண்டில் பள்ளிப்படை என வழங்கப்பட்டுள்ளதும் இந்நடுக்கல்லைச் சுற்றி மண்ணால் ஆன தளி ஒன்று அமைக்கப்பட்டதும் இக்கோயிலுக்கு இறையிலி கொடுக்கப்பட்டுள்ளதும் இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.

வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்:
ஜீவசமாதி கோயிலாகவே விளங்குவதால் ஏறக்குறைய சங்க காலம் முதல் இப்பள்ளிப்படைக் கோயில் கொண்டு தொடர்ந்து வழிவழி வரும் மடாதிபதிகளால் ஆளுகை செய்யப்பட்டு வருகின்றது. இம்மடத்தில் 
ஓலைச் சுவடிகள் பல காணப்படுகின்றன. அவற்றில் இருந்த  சில  ஓலைச் சுவடிகளில் வட்டெழுத்தால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கள ஆய்வில்  கண்டெடுக்கப்பட்டன. தற்பொழுது இம்மடத்தின் நிருவாகத்தை கவனித்து  
வரும் திரு. அருளானந்தம் அவர்களுக்கு இவ்வட்டெழுத்து ஓலைச் சுவடிகளின் விவரங்கள் தெரியவில்லை. இவரது தந்தைக்கு முன்பிருந்த பாட்டனார் காலத்தில் இருந்த பல ஓலைச் சுவடிகள் மடத்தில் இருந்ததாக அவர் கூறினார். தமிழ் எழுத்துகளில் உள்ள சுவடிகளுக்கு இடையில் இக்கட்டுரை ஆசிரியர்களால் கள ஆய்வில் எடுக்கப்பட்ட இவ்வோலைச் சுவடிகளும் இம்மடத்தின் நீண்ட வரலாற்றை எடுத்தியம்பும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன. தமிழகத்தில் இதுவரை வட்டெழுத்தில் ஓலைச் சுவடிகள் கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சில ஆய்வாளர்கள் கருதுவது போல் கிண்ணிமங்கல மடத்தில் கிடைத்த இவ்வோலைச் சுவடிகளோ அல்லது கல்வெட்டுகளோ போலியானவை அல்ல. ஓலைச்சுவடிகளை இக்கட்டுரை ஆசிரியர்களே ஓலைக் குவியலில் இருந்து கண்டெடுத்தனர். மேலும் இம்மடம் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகாலமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் இங்கு தமிழ்மொழியும் பிற கலைகளும் போர்க்கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தன என அறிய முடிகிறது.

எனவே வழி வழியாக இங்கு செயல்பட்டு வந்த ஆவணக்களரியில் ஓலைச்சுவடிகளைப் புதுப்பிக்கும் பணியும் பதிப்பிக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. பிற்காலத்தில் வட்டெழுத்து படிக்கவோ எழுதவோ தெரியாத ஒருவர் முன் பதிப்பில் இருந்து வட்டெழுத்து ஓலைச்சுவடியில் உள்ளவாறே அவற்றை ஓலையில் எழுதி தமிழில் தனது பெயரை எழுதி இது ஒரு நகல் என எழுதி உள்ளார். போலியாக இருப்பின் தமிழில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை நகல் எனச் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை. எனவே இம்மடத்தில் மேற்கொண்டும் ஆய்வுகள் செய்தால் பல அறிய அரும்பொருட்கள் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. கண்டெடுக்கப்பட்ட வட்டெழுத்துச் சுவடிகளில் பொருள் பொதிந்த பாடல் வரிகள் உள்ளன. இவற்றை பேராசிரியர். சுப்பராயலு அவர்களுக்கும் அனுப்பி வைத்து அவ்வோலைகளில் இக்கட்டுரை ஆசிரியர் படித்தமையை வைத்து ஒப்பு நோக்கப்பட்டது. இப்பாடல்கள் பள்ளிப்படைச் சமாதியில் பூஜிக்கும் நேரத்தில் பாடும் பாடல்களாக இருக்கலாம் எனப் பேராசிரியர். சுப்பராயலு அவர்கள் கருத்து தெரிவித்ததுடன் இப்பொழுதும் அவ்வாறு நடைமுறை உள்ளதா எனக் கேட்டறியும்படி கூறினார். 

இம்மடத்தின் நிருவாகி அருளானந்தரிடம் இக்கோயில் பாடல்கள் ஏதாவது பாடுவீர்களா? அப்படி இருப்பின் எழுதி அனுப்பும்படி கோரியிருந்தேன். அவர் தனது தாத்தா எழுதி வைத்த குறிப்புப் புத்தகத்தை வைத்து ஆண்டுக்கொருமுறை குருபூஜையில் இப்பாடலைப் பாடுவோம் அது நினைவில் இல்லை. இப்பாடல் தமிழில் எழுதப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார். ஓலையில் நாங்கள் படித்தறிந்த பாடலும் அவர் எழுதி அனுப்பிய பாடலும் ஒன்றே. எனவே காலங்காலமாக இம்மடத்தில் உள்ளோர் ஓலைச்சுவடிகளில் எழுதி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பிற்காலத்தில் ஓலைச்சுவடியில் வட்டெழுத்தை அறியாத ஒருவர் ஏற்கனவே இருந்த ஓலையில் இருந்து படி எடுத்துள்ளமையால் இவ்வட்டெழுத்துகளின் சில எழுத்துக்கள் எங்களால் வேறு வகையாகப் படிக்கப்பட்டதும் இவ்வோலைச் சுவடிகள் உண்மைத் தன்மை வாய்ந்தவை என்பதை தெள்ளென தெரிவிக்கின்றது. மேலும் இப்பாடல் ஒவ்வொரு வரியும் 1. நீத்தார் 2. ஏத்தார், 3. காத்தார், 3. கூத்தார், 5. மூத்தார் என முதல் வரியில் தொடங்குவதாகவே அமைகின்றது. இதனை எழுதி அனுப்பிய இன்றைய மட நிருவாகியும் அவ்வாறு தான் தமிழில் எழுதி உள்ளார். ஆனால் ஓலைச் சுவடியில் இடம் இருப்பதின் காரணமாக அவை ஒவ்வொரு வரிகளுக்கும் இரண்டு கோடுகள் இடப்பட்டு தொடர்ச்சியாக எழுதியுள்ளமை இவ்வோலைச் சுவடி போலியானது அல்ல தற்காலத்தில் எழுதப்பட்டதும் அல்ல என்பதும் வழி வழியாக இம்மடத்திலுள்ளோரால் படி எடுத்து நகலாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதும் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் வட்டெழுத்து தெரியாத மடத்து நிருவாகி ஒருவரால் பார்த்து நகல் எடுக்கப்பட்டு தமிழில் எழுதியவரின் பெயரும் இது நகல் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. இங்கு ஓலைச்சுவடிகள், செப்புப்  பட்டயங்கள் பாதுகாக்கும் ஆவணக் காப்பகம் ஒன்று இருந்துள்ளது என்பதையும் இவ்வோலைச் சுவடி மூலமே அறிய இயலும். இதனை ஆவணக்களரி எனத் தமிழில் இவ்வோலையில் குறித்துள்ளமையின் மூலம் அறிய முடிகிறது. நான்கு கோண நட்சத்திர வரைப்படம் ஒன்று ஆவணக்களரி என்னும் தமிழ்ச் சொல்லிற்கு இடையில் வரையப்பட்டுள்ளது. 

இவ்வோலைச் சுவடியின் பின்பக்கங்களில் எதுவும் எழுதப்படவில்லை. இது 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எழுத்தமைதியில் உள்ளமையால் இந்நூற்றாண்டில் மூல ஓலையிலிருந்து வட்டெழுத்துகள் எழுதப்பட்டிருக்க வேண்டும். கடந்த 1942ஆம் ஆண்டு இம்மடத்தின் கோயில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. அக்காலத்திலும் 1952ஆம் ஆண்டும் மடத்தில் இருந்து பல பொருள்கள் களவாடப்பட்டுள்ளன. இவற்றுள் 55 செப்புத் தகடுகளும் ஓலைச்சுவடிகளும் அடங்கும். எஞ்சிய சில ஓலைச்சுவடிகள் மட்டுமே தற்பொழுது இம்மடத்தில் உள்ளன. இச்செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும் இருந்திருப்பின் இம்மடத்தின் தொன்மையான வரலாற்றை மேலும் அறிந்திருக்க இயலும்.

3.jpg

ஓலைச்சுவடிகளில் உள்ள வட்டெழுத்து வாசகம்:
முதல் ஓலை :-
1. நீத்தார் நெடுங்கோளம் நின்வெளி நீள்தாயம் || ஏத்தார் 
2. எங்கோளம் எங்குலத்தார் எம்பூரம் || காத்தார் கார-
3. ணத்தார் கரமேவி என்புலமே || கூத்தார் கர 
4. மேவி கொண்டாங்கே ஏகிடவே || மூத்தார் முதம்

இரண்டாவது ஓலை:- 
மறை முற்றாய் மலர்ந்திடவே பூத்தார் புனல் ஏம்பும் 
பூமரையாய் பூணட்டும்

தமிழில் எழுதியுள்ளவை:
1. இது ஏகநாத குருமடத்து ஆவணகளரி செப்போலை நகல் 
2. பள்ளிப்படை மந்திரம்

இண்டாவது ஓலைக்கட்டுச் சுவடியில் இருந்த வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்

4.jpg
முதல் ஓலை:-
1. தம் முன்னோர் இழியிய நா பழிசொற் கேளா பாண்டியர் எ-
2. ழினியர் இறை காத்த ஏகநாத பள்ளி ஆசான் மெய்மொழி 
3. இறையனார்க்கு நாட்டாற்று புற அமிர்த பராக்கிரம நல்லூர் 
4. வெள்ளாள குயில் குடியான்மார்கள் பரிவட்டனை கடமையாக

இரண்டாவது ஓலை:-
5. பத்துயாண்டுக்கொரு முறை ஆநிரை அறுபத்தும் அதற்கொப்ப  
6. கூளமூம் கிண்ணிமங்கல ஏகனாத மடத்துக்கு யீந்தார் 
7. கிண்ணிமங்கல காராள குடியானமார் மாவூத்து வேலப்பனோடு 
8. சங்கிராம சாலையில் ஏகனாத மட

மூன்றாவது ஓலை:-
9. சேவடிகள் கொடுபித்தார் செக்காணூரணி குணவான் சாத்தா 
10. செக்குரல் செய்வித்தான், யாவும் பரிவட்டனை கடமை இது 
11. பரிவட்டனை கடமை உ (தமிழில்) சிலா சாதன பட்டய

நகலுக்கு நகல்

மூன்றாவது ஓலையின் பின்பக்கம்:-
12. எழுதினது 62வது குருவழி தோன்றல் அ.மகாலிங்கம் பிள்ளை

இது மூன்று ஓலைச்சுவடிகளை உடையது. முதல் இரண்டு ஓலைகள் நான்கு வரிகளை உடையவை. மூன்றாவது ஓலையில் மூன்று வரிகளில் வட்டெழுத்தில் எழுதி உள்ளனர். வட்டெழுத்து முடிந்தவுடன் தமிழில் எழுதி உள்ளனர். ஏறக்குறைய 18ஆம் நூற்றாண்டில் பிற்பகுதி எழுத்தமைதியில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இவ்விரண்டு ஓலைச்சசுவடி வட்டெழுத்துக்களும் ஒரே காலத்தில் நகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

இப்பொழுது இருக்கும் மடத்தின் நிருவாகி அருளானந்தம் 67வது குரு பரம்பரையில் வந்தவர். இவருக்கு முன்பாக கீழ்குறித்த ஐந்து நிருவாகிகள் இம்மடத்தில் இருந்துள்ளனர். 
அருளானந்தரின் தந்தையார் முத்துராமலிங்கம் (66), 
இவரது தந்தையார் நாட்டுத்துரை என்கிற சங்காரனந்தம் (65), 
இவரது தந்தையார் சுந்தரானந்தம் (64), 
இவரது தந்தையார் முத்தானந்தம்(63),  
இவரது தந்தை கருணானந்தம் என்கிற அ.மகாலிங்கம் (62) 
இவ்வோலைச் சுவடியில் குறிக்கப்பட்டிருக்கும் அ.மகாலிங்கம் என்கிற கருணானந்தம் என்பவர் 62 வது குரு பரம்பரையை சார்ந்தவர். இவர் 1812 ஆம் ஆண்டு மறைந்துள்ளார். எனவே இவ்வோலைப்  பட்டயங்கள் இவரது காலத்தில் அதாவது 18ஆம் நாற்றாண்டின் இறுதி காலத்தில் நகல் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வோலை ஆவணத்தின் மூலம் கிண்ணி மங்கலம் ஏகநாத மடத்திற்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை குயில்குடியைச் சார்ந்த வேளாளர்கள் பசுக்கள் 60ஐ தானமாக தொடர்ந்து வழங்கி வந்துள்ளனர். நெல்லும் கூளமாக அளித்து வந்துள்ளனர். கிண்ணி மங்கல காராளர்கள் இம்மடத்திற்கு வரும் சாதுக்களுடன் ஆண்டிப்பட்டிக்கு தெற்கிலுள்ள மாவூத்து வேலப்பன் கோயிலுக்கு காவடி எடுத்துச் செல்வர். இவர்கள் செல்லும் பெருவழி சங்கிராம சாலை என வழங்கப்பட்டது. அத்துடன் செக்கனூரில் இருக்கும் எண்ணெய் வணிகர் இம்மடத்திற்கு (பரிவட்டனை) செய்யப்படுதல் வேண்டும் என்பதை இவ்வோலை ஆவணம் குறிப்பிடுகிறது.

மதுரை நாயக்கர் கால கல்வெட்டு:
இக்கோயில் வளாகத்தில் கிடைத்துள்ள மற்றொரு கல்வெட்டு 1722 ஆம் ஆண்டைச் சார்ந்தது. இது 43 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. உள்ளூர் கல்தச்சரால் எழுதப்பட்டுள்ளதால் எழுத்துகள் ஒழுங்கற்ற நிலையில் உள்ளன. மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் பெயர்கள் கால வரிசையாக இக்கல்வெட்டில் இடப்பட்டுள்ளன. இக்கல்வெட்டிலும் இக்கோயில் பள்ளிப்படை சமாதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு உரிமையுடையது என்பதையும் குறிக்கிறது.  இக்கல்வெட்டில் பாண்டிய மன்னவர்களின் ஒருவரான நெடுஞ்செழியன் பெயரும் பராந்தக பாண்டியனின் பெயரும் இடம் பெற்றுள்ளன. இதில் உள்ள தொடர் பின்வருமாறு விடையாவும் நெடுஞ்செழியன் பராந்தக பாண்டியன் பட்டயத்தில் கண்டபடி எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியம் என இக்கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து இம்மடம் ஆவணக்கூடமாக செயல்பட்டு வந்திருப்பதாலும் இங்கு ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் நகல்கள் எடுக்கப்பட்டு வந்துள்ளமையாலும் செப்புப் பட்டயங்கள் திருடு போய்விட்டமையாலும் உறுதியாக மதுரை நாயக்கர் கல்வெட்டு போலி என சொல்ல இயலாது. 

நாயக்க மன்னர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கும் இக்கல்வெட்டு போலியானதாக இருப்பின் அவர்களின் மரபை மட்டும் எப்படி சொல்ல முடியும்? இக்கல்வெட்டில் போலியான தொடருக்கான செய்திகள் எவையும் இல்லை. மேலும் இக்கல்வெட்டில் நிலக்கொடை பற்றிய செய்திகள் எவையும் இல்லை. ஏற்கனவே அரசுக்கு வருகின்ற வருவாய் மடத்திற்கு வழங்கப்பட்ட செய்தி மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலத்தில் எழுதப்பட்ட போலியான ஒன்றாக இருப்பின் வரி வசூல் செய்யும் உரிமை மட்டுமே குறிக்கப்பட்டிருக்க இயலாது.

எனவே பாண்டியர் காலத்தில் வழங்கப்பட்ட கொடையின் அடிப்படையில் இக்கொடையும் வழங்கப்பட்டுள்ளது. இங்கு குறிக்கப்பட்டுள்ள பராந்தக நெடுஞ்செழியன் 9ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னராக இருக்கக்கூடும். பராந்தகப் பாண்டியன் வேறு நெடுஞ்செழியன் வேறாக இருக்க இயலாது. வேள்விக்குடிச் செப்பேடு மத்திய தொல்லியல் துறையாலும் பிற கல்வெட்டு ஆய்வாளர்களாலும் உண்மையான செப்பேடு என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேள்விக்குடிச் செப்பேடே போலியனது எனக் கல்வெட்டு ஆய்வாளர் திரு. சாந்தலிங்கம் சொல்வது முற்றிலும் ஏற்படையது அன்று. வழி வழி பேசப்படும் மரபுகளைக் குறித்த இலக்கியங்களும் இருக்கின்ற வகையில் மதுரை நாயக்கர்களுக்கு தங்களுக்கு முன்பு ஆட்சி செய்த பாண்டியர்கள் குறித்து தெரியாது என்பது கற்பனையான வாதமாகவே உள்ளது. முதலாம் இராஜராஜன் காலத்தில் வழங்கப்பட்ட ஆணைமங்கலக் கொடை மீண்டும் அவனது பின்னோன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் வழங்கப்பட்டதை சிறிய லெய்டன் செப்புப்பட்டயம் குறிப்பிடுகின்றது. இதே போன்று பழைய கல்வெட்டுப் படிகளின் அடிப்படையில் பல கோயில்களில் கொடைகள் மீண்டும் புதுப்பிக்கப் பட்டதையும் தமிழகத்தின் பல கல்வெட்டுகள் குறிக்கின்றன. 

போலியான செப்பேடு அல்லது கல்வெட்டுகளை கண்டுபிடிப்பது எளிது. அவ்வாறான சான்றுகளில் எழுத்துப்பிழைகளுடன் சொற்பிழைகள் மட்டுமின்றி அவற்றில் சொல்லப்பட்ட கருத்துகளும் உயர்வு நவிற்சி அணியில் புராண கதைகளை அடி ஒற்றிக் காணப்படும். இது போன்ற செப்பேடுகள் கொங்குப் பகுதியில் கிடைத்துள்ளன. எனவே திரு. சாந்தலிங்கம் கருதுவது போல் இக்கல்வெட்டு போலியானது என்பது  முற்றிலும் தவறானது. இதன் தொடர்ச்சியாக இங்கு கிடைத்த பிற கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் போலி எனக் கூறுவதும் மேற்குறித்த  தரவுகளின் அடிப்படையில் தவறான கணிப்பாகவே தெரிகிறது. மதுரை  நாயக்கர் காலக் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு.

கல்வெட்டு வாசகம்: 
1. சுப ஸ்ரீமன் மகா மண்டலீஸ்வரன் 
2. பாஷைக்கு தப்புவராய கண்டன் கண்ட நாடு 
3. கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டி 
4. மண்டல பிரதிட்டாச்சாரியன் 
5. சோழமண்டல ஸ்தாபனாச்சாரி - 
6. யன் யீளமும் கொங்கும் கொச்சியும் 
7. குடகமும் யாப்பணமும் எம்மண்டலமும் 
8. திரைக்கொண்டருளிய அசுபதி கெசபதியான பிர(பு)
9. ல தேவமகராச மல்லிகார்ச்சுன ராயர் வெங்கடபதி 
10. ராயர் விருப்பாச்சிராயர் முசுகுந்தராயர் வசந்த 
11. ராயர் மாதேவ வெங்கிடகிருஷ்ணராயர் ராமராயர் 
12. நரசிங்கராயர் பிரபுடராயர் கொட்டியும் 
13. நாகம நாயக்கர் விசுவநாத நாயக்கர் முத்து கிருஷ்ண 
14. நாயக்கர் விசய வீரப்ப நாயக்கர் முத்து வீரப்ப 
15. நாயக்கர் முத்து விசய நாயக்கர் 
16. திருமலை நாயக்கர் முத்து வீரப்ப நாயக்கர் 
17. சொக்கநாத நாயக்கர் ரெங்க கிருஷ்ண 
18. முத்து வீரப்ப நாயக்கர் விசயரங்க சொக்கநாத நாயக்கர் 
19. ராச்சிய பரிபாலனம் செய்யும் நாளில் 
20. கலியுக வருசம் 4823 மேல் 
21. ஆடி மாதம் (13) தீ தெட்சிணாயனத்து 
22. மேல் சாலிவாகன சகாப்தம் (1644) 
23. மேல் செல்லாநின்ற கொல்லம் வருசம் (897) 
24. ... புனர்பூச சுபதியாக சுபதினத்தில் 
25. சமூகம் மீனாட்சி நாயக்கவர்கள் ஆகோசேத்திரத்தில் 
26. மீனாட்சி சுந்தரேசுவர சுவாமி சன்-
27. னதியில் கிண்ணிமங்கலம் ஸ்ரீலஸ்ரீ 
28. ஏகநாத குருமடத்தார்க்கு தன்ம சிலா சாதனப் பட்டயம் 
29. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு 
30. திரல் விடையாவும் நெடுஞ்செழியன் பரா-
31. ந்தக பாண்டிய ராசாகளின் பட்டயத்தில் கண்-
32. டபடி குடும்பத்தாரின் வாரிசுதாரர்களால் 
33. ஆதாயம் கையாடிக் கொண்டு இவர்களின்
34. குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம் 
35. செய்து வரவும் மடப்புறத்தில் பரம்பரை சம்பி-
36. ரதாயப்படி பள்ளிப்படை சமாதி வைத்து வ-
37. ணங்கி வரவும் இம்மடத்தார்க்கு மட்டுமே கர்-
38. ணபரம்பரை பூர்வீக பாத்தியதை உண்டு 
39. பிறகுலத்தார் யாவருக்கு எவ்வித பாத்தியதை-
40. யும் இம்மடத்தில் இல்லை என்பதுமான இத்தன்மத்துக்கு 
41. விகாதம் செய்த பேர் சிவசன்னதியில் விளக்கை 
42. நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவான்

மேற்குறித்த கல்வெட்டின் மூலம் விஜய நகர மன்னர்களின் வரிசைப்பட்டியலும் மதுரையை ஆட்சி செய்த நாயக்கர்களின் மரபு  பட்டியலும் குறிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த பாண்டியர் கால செப்புப்பட்டய அடிப்படையில் கொடைகள் இப்பள்ளிப் படை சமாதிக் கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்தில் நிலவிய பல்வேறு வரிகள் குறித்த செய்தியும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன. இம்மடம் பூர்வீகமாக தனியார் வசம் இருந்துள்ளமை இம்மடத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இதனை இக்கல்வெட்டும் உறுதி செய்கின்றது. கர்ணபரம்பரையாக என்பது இம்மடத்தில் வழி வழியாக ஏகநாதன் காலத்திலிருந்து தலைமை ஏற்றிருந்த நிருவாக குருமரபினைக் குறிப்பதாக அமைகிறது. இத்தருமத்தை நிறுத்தியவர் விளக்கை அணைத்தவர் எனக் குறிக்கும் ஓம்படைச் சொல். இப்பகுதியில் விளக்கேற்றும் வழக்கம் தொடர்ந்து நிலவி வருவதைக் காட்டுகிறது.

தமிழகத்தின் பாழி மற்றும் பள்ளிப்படைக் கோயில்கள்:
சங்க காலத்தைச் சார்ந்த மன்னர்களான கோப்பெருஞ்சோழனுக்கும், ஔவைக்கு நெல்லிக்கனி அளித்த அதியமானுக்கும் நடுகல் எடுக்கப்பட்டதாக சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன. நடுகல்லை பீலிசூட்டிய பிறங்கு நிலை நடுகல் என அகநானூற்றுப் பாடல் ஒன்று குறிப்பிடுகின்றது. நடுகல்லை மக்கள் வழிப்பட்டனர். தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் புலிமான் கோம்பை, தாதப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பொற்பனைக்கோட்டை ஆகிய ஊர்களில் கிடைத்த நடுகற்களே இந்திய அளவில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பழமையான நடுகற்களாகும். தாதப்பட்டி நடுகல்லில் இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல் பாழிய் என்றே வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழிக் கல்வெட்டுகளில் சொல்லப்படுகின்ற பாழி, அதிட்டானம், கல் கஞ்சனம் போன்றவை இறந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட ஈமப்படுக்கைகள்  பொருளையே சொல்கின்றன. இவ்வியற்கையான குகைத் தளங்களில்  பெரிதும் சிறிதுமாக ஒழுங்கற்ற நிலையில் இறந்தவர்களின் நினைவுச்  சின்னங்களை அமைக்கும் மரபை தமிழர்கள் பெருங்கற்கால காலத்தில்  அமைத்தனர். பெருங்கற்காலச் சின்னங்களில் இவ்வாறான குகைப் படுக்கைகளும் ஒரு வகையாகும். இவை பாழி என வழங்கப்பட்டு பின்னர் பள்ளியாகி வரலாற்றுக் காலத்தில் பள்ளிப்படை என பெயர் மாற்றம் பெற்றன. இதனை தாதப்பட்டி நடுகல்லின் மூலமும் படுக்கைகளின் அமைப்பு மூலமும் அறிய முடிகிறது. துறவறம் பூண்டவர் இயற்கையான குகைகளில் தங்குவதற்கான வசதிகள் இக்குகைகளில் இல்லை.  இறந்தவர்களின் படுக்கைகள் மழை நீர் உட்புகாதவாறு குகை விளிம்புகள் வெட்டப்பட்டன. இவ்வாறே பெருங்கற்காலச் சின்னங்களும் இயற்கையின் சீற்றத்தால் அழியாமல் இருக்க வட்டக்கற்களும் கற்குவியல்களும் சமவெளிகளில் அமைக்கப்பட்டன. பெருங்கற்கால ஈமச் சின்ன வகைகளே பாழி என வழங்கப்பட்டது. பிற்காலத் தரவுகளை வைத்து இப்படுக்கைகள் சமணத் துறவிகள் வாழ்விடம் என சில ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறிவருவதும் தமிழி எழுத்தை தமிழகத்திற்கு எடுத்து வந்தவர்கள் சமணர்களே எனச் சொல்வதும் புதிய தரவுகளின் மூலம் ஏற்கக் கூடிய நிலையில் இல்லை.

கீழடி, பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகளின் மூலம் பெறப்பட்ட அறிவியல் காலக் கணிப்பு தமிழி எழுத்திற்கு கிமு 6ஆம் நூற்றாண்டு என தெளிவு வந்த பிறகும் தொடர்ந்து இயற்கையான குகைத் தளங்களில் உள்ள படுக்கைகளும் தமிழி கல்வெட்டுகளும் சமணர்களுக்கு உரியவை எனக் கூறுவது அறியாமையின் வெளிப்பாடாகவே விளங்குகிறது.

நடுகல் எடுக்கும் வழக்கத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் சமூகத்தில் உயர் நிலையில் இருந்த அரசர்களுக்கு சமாதிக் கோயில்கள் எடுக்கும் வழக்கமும் ஏற்பட்டன. பாழி என்ற நிலையிலிருந்து பள்ளிப்படைகள் உருவாகின. இவை பள்ளிப்படைக் கோயில்கள் என வழங்கப்படும். கோயில்கள் போன்ற அமைப்பில் அரசர்களின் பள்ளிப்படைகள் அக்காலத்தில் இருந்தன. பொதுவாக இவ்வகைக் கோயில்களின் கருவறைகளில் சிவனுக்குரிய லிங்க அமைப்பு காணப்படும். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம் மற்றும் ஆந்திரப் பகுதிகளிலும் இறந்த மன்னர்களுக்கு பள்ளிப்படைக் கோயில்கள் எடுக்கும் வழக்கம் நிலவியது. 

கர்நாடகத்தில் இவ்வகைக் கோயில்களை பரோக் ஷ வினயம் என்றும் ஆந்திராவில் சிவாயதனம் எனவும் அழைப்பர். தென்னிந்தியப் பண்பாட்டுக் கூறுகளின் தொடர்பால் தென்கிழக்காசிய நாடுகளிலும் இதுபோன்ற பள்ளிப்படைக் கோயில்கள் இருந்தன. இதனை தேவராஜா வழிபாடு எனக் குறிப்பிடுவர். இவை யாவும் இறந்தவர்கள் துயில் கொள்ளும் இடம் என்னும் பொருளில் அமைந்தவை. இவை வைதீகத்திற்கு உட்பட்ட கோயில்கள் அல்ல.

தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பள்ளிப்படைக் கோயில் வேலூருக்கு அருகில் சோழபுரம் என்ற இடத்தில் உள்ளது. இவ்வூர் வேலூரிலிருந்து ஊசூருக்கு அருகில் இன்றைய புகழ் பெற்ற  பொற்கோயிலுக்கு மேற்கில் அமைந்துள்ள ஊராகும். இவ்வூரின் ..ற்குப் பகுதியில் வயல்வெளிகளுக்கு இடையில் பல்லவர் காலத்தில் குறுநில மன்னராக விளங்கிய பிருதுவி கங்கரையன் என்பவருக்காக அவரது மகன்  இராஜாதித்யன் என்பவர் பள்ளிப்படைக் கோயிலைக் கட்டியுள்ளார்.  தன்னுடைய தந்தையை பள்ளிப்படுத்திய இடத்தில் அதீதகரகம் எனக்  கூறப்படும் பள்ளிப்படைக் கோயில் ஒன்றும் அதன் அருகில் சிவாலயம் ஒன்றும் எடுப்பிக்கின்றார். இதே போன்று காளஹஸ்திக்கு அருகில் தொண்டைமானாற்றூர் என்ற இடத்தில் சோழமன்னன் பராந்தக சோழனின் தந்தையும் விஜயாலய சோழனின் மகனுமான ஆதித்த  சோழனுக்கு பள்ளிப்படைக் கோயிலொன்று உள்ளது.  தொண்டைமானூற்றூரில் ஆதித்த சோழன் இறந்தமையால் இவர் தொண்டமானாற்றூர் துஞ்சிய தேவர் என வழங்கப்படுகின்றார்.

இதனை அடுத்து சோழப் பேரரசன் பராந்தகனுடையை மைந்தன் அரிஞ்சய சோழனுக்குப் பள்ளிப்படைக் கோயிலொன்று வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலைக்கு அருகில் மேல்பாடி என்ற இடத்தில் பொன்னையாற்றின் கரையில் அமைந்துள்ளது. சோழ மன்னன் முதலாம் பராந்தகன் காலத்தில் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் பாலாற்றின் கரை வழியாக இப்பகுதிக்கு படைகளுடன் வந்து பராந்தக சோழனின் மைந்தன் இராஜாதித்யன் தலைமையில் இருந்த சோழர் படைகளை தாக்குகின்றார். இறுதியாக தக்கோலம் என்ற இடத்தில் இராஜாதித்யன் மூன்றாம் கிருஷ்ணனால் கொல்லப்படுகின்றார். இராஜாதித்யனின் தம்பிகள் கண்டாரதித்தன் மற்றும் அரிஞ்சயன்.  பராந்தக சோழனுக்கு பின் கண்டராதித்தனும் அவருக்குப் பின் அரிஞ்சயனும் பட்ட மேற்கின்றான். அரிஞ்சயன் முதலாம் இராஜராஜானின் பாட்டனாவார். அரிஞ்சயன் இறந்த பின் அவருக்கு பள்ளிப்படை ஒன்றை மேல்பாடியில் முதலாம் இராஜாராஜ சோழன் கட்டுகின்றார்.

மேல்பாடியில் உள்ள அரிஞ்சய சோழனின் பள்ளிப்படை சிறிய கற்றளியாகும். இக்கோயிலில் உள்ள கல்வெட்டு பள்ளிப்படையான அரிஞ்சிகை ஈஸ்வரம் என இக்கோயிலைக் குறிப்பிடுகின்றது. இக்கோயிலுக்கு அருகில் வடக்குப் பகுதியில் சிவனுக்காக தனியாக மற்றொரு கோயில் ஒன்று உள்ளது. பொதுவாக பள்ளிப்படைக் கோயில்கள் சிவன் கோயிலுக்கு அருகில் தனியாக சிறிய கோயில்களாக அமைந்திருக்கும். 

தமிழகத்தில் மிக அதிகமான பள்ளிப்படைக் கோயில்கள் இருந்த பகுதி சோழர்களின் பூர்விக ஊரான பழையாறைப் பகுதியாகும். தாராசுரம் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்று இப்பகுதியிலிருந்த பள்ளிப்படைக் கோயில்களைக் குறிக்கின்றது. இப்பள்ளிப்படைக் கோயில்களில் குறிப்பிடத்தக்க பள்ளிப்படைக் கோயில் முதலாம் இராஜேந்திர சோழனை வளர்த்த பேரரசி பஞ்சவன் மாதேவிப் பள்ளிப்படையாகும். தாராசுரத்திற்கும் பழையாறைக்கும் இடையில் அமைந்துள்ள இராமநாதன் கோயில் என்னுமிடத்தில் பஞ்சவன் மாதேவிக்காக இராஜேந்திர சோழன் பள்ளிப்படைக்கோயிலொன்றை  எழுப்புகின்றான்.

சோழப் பேரரசர்களில் முதலாம் இராஜாராஜனின் பள்ளிப்படைக் கோயில் கும்பகோணம் அருகிலுள்ள உடையாளூர் என்ற இடத்தில் உள்ளதாகக் கூறுவர். இவ்வூரிலுள்ள பால்குளத்து அம்மன் கோயில் தூண் ஒன்றில் உள்ள கல்வெட்டின் அடிப்படையில் இவ்வூரில் தான் இராஜராஜன் இறந்திருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது. மேலும் இவ்வூருக்கு அருகில் தான் இராஜாராஜனின் தளபதி கிருஷ்ணன் இராமனின் அமண்குடி என்னும் ஊரும் உள்ளது. இராஜாராஜன் முதுமைக் காலத்தில் இப்பகுதியில் தங்கி இருந்திருக்க வேண்டும். மேற்கொண்டு செய்யப்படும் ஆய்வுகள் மூலமே அவற்றை உறுதி செய்ய இயலும்.

இராஜராஜனின் மகன் இராஜேந்திர சோழனின் பள்ளிப்படைக் கோயிலொன்று காஞ்சிபுரத்துக்கு அருகில் பிரம்மதேசம் என்ற இடத்தில் இருப்பதாகக் கருதுவர். பிரம்மதேசம் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று இராஜேந்திரசோழனின் மனைவி வீரமாதேவி என்பவர் தனது கணவர் இராஜேந்திர சோழன் இறந்தபின் அவர் இறந்த இடத்தில் நெருப்பை மூட்டி தீப்பாய்ந்து உயிர் விடுகின்றாள். அரசி வீரமாதேவியின் மனம் சாந்தியடைய அவளது அண்ணன் இக்கோயில் பகுதியில் தண்ணீர் பந்தல் ஒன்றை வைக்கின்றார். எனவே இராஜேந்திர சோழனின் பள்ளிப்படை காஞ்சிபுரத்திற்கு அருகில் இருந்துள்ளது. இக்கல்வெட்டு உள்ள பிரம்மதேசம் கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்டதைக் கல்வெட்டு உறுதி செய்வதால் இக்கோயில் இராஜேந்திர சோழனின் பள்ளிப்படையாகக் கருத இயலாது. 

இதே போன்று விக்கிரமசோழனின் பள்ளிப்படைக் கோயில் ஒன்றை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சிதம்பரம் அருகில் பள்ளிப்படை என்னும் பெயரில் ஊர் ஒன்றும் உள்ளது. தென் தமிழகத்தில் பாண்டியர்களும் இறந்தவர்களுக்கு அவர்களது நினைவாக பள்ளிப்படைக் கோயில்களை கட்டுவித்து வழிபட்டனர்.

பாண்டிய நாட்டில் திருச்சுழியில் சுந்தரபாண்டியன் பள்ளிப்படைக் குறித்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. தற்பொழுது கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிண்ணிமங்கலம் பள்ளிப்படைக் கோயில் இந்தியாவின் பழமையான பள்ளிப்படையாகத் திகழ்ந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. மேற்குறித்த தரவுகளின் மூலம் கிண்ணிமங்கலத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பள்ளிப்படை சமாதி கோயில் தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளதும் இங்கு கிடைத்துள்ள வட்டெழுத்துக்  கல்வெட்டும் ஓலைச்சுவடிகளும் இம்மடத்தின் பழமையைக்  குறிப்பிடுவதுடன் மதுரை நாயக்கர் காலம் வரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளதையும் அறிய முடிகிறது. எனவே கிண்ணிமங்கலம் ஊரிலுள்ள பள்ளிப்படைக் கோயில்  இந்தியாவின் பழமையான பள்ளிப்படைக்  கோயிலாகவும் வைதீகத்திற்கு அப்பாற்பட்ட மட அமைப்பைக் கொண்டு  தமிழர்களுக்கான மடமாக குறிப்பாக வேளாண் சார்ந்த மக்களின்மடமாக  விளங்கி வருகின்றது என்பதையும் அறிய முடிகிறது.

ஆங்கிலேயர் காலத்தில் இம்மடம் நலிவுற்று தனது சிறப்பை  இழந்துள்ளது. இம்மடத்தின் தற்போது உள்ள நிருவாகி அருளானந்தம் பல  செவி வழிச் செய்திகளை கள ஆய்வின் போதும் குறிப்பிட்டார். அவற்றின் பல வரலாற்றுச் செய்திகளும் இம்மடத்தில் தொன்று தொட்டு சமூக சேவைகளும் கல்விச் சேவைகளும் ஆற்றி வந்துள்ளமையை அறிய முடிகிறது.  இம்மடத்தில் தமிழ்ச் சமூகம் சார்ந்த பல கலைகள் தொடர்ந்து கற்றுக் கொடுக்கப்பட்டன. இவை தற்பொழுது நடைபெறுவதில்லை. அக்கலைகள் குறித்து உரிய ஆவணங்கள் கிடைப்பின் இம்மடத்தின் வரலாற்றை மேலும் அறிவதற்கு ஏதுவாக அமையும்.


--------------------------
நன்றி:  'சாசனம்' தொல்லியல் ஆய்வு இதழ் 


கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து சர்ச்சை

 கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து சர்ச்சை


-- மா.மாரிராஜன்



கடந்த ஆண்டு  மதுரை செக்காணூரனி அருகே உள்ள கிண்ணிமங்கலம் என்னும் ஊரில் உள்ள மடம் ஒன்றில் தமிழி எழுத்துக்களால் எழுதப்பட்ட துண்டு கற்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வாளர்கள் காந்திராஜன், ஆனந்தன், இராசவேல் என்னும் மூவரால் வெளி உலகத்திற்கு அறிமுகம் ஆனது.




" ஏகன் ஆதன் கோட்டம் "
என்று படிக்கப்பட்டு ..
கல்வெட்டின் காலம் கி.மு. 2 என உறுதி செய்தார் தொல்லியல் ஆய்வாளர் சு.இராசவேலு அவர்கள்.  தமிழக வரலாற்றில் மிகப்பெரும் தொல்லியல் ஆவணமாகப் பதிவு செய்யப்பட்டது இக்கல்வெட்டு.

அதே மடத்தில் 7 -8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இறையிலியாக..
ஏக நாதன்...
பள்ளிப்படை..

என்று தொடங்கும் அந்தக்கல்வெட்டுச் செய்தி தமிழிக் கல்வெட்டுச் செய்தியுடன் ஒத்துப்போனது.

தமிழகத்தின் முதல் பள்ளிப்படைக் கல்வெட்டு. தமிழி எழுத்துக்களில் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்ற ஆகச் சிறந்த தொல்லியல் ஆவணமாக கிண்ணிமங்கலம் பதிவு செய்யப்பட்டது. தமிழகத் தொல்லியல் துறையும் அங்கிகாரம் செய்து அறிக்கை வெளியிட்டது.  ஒட்டு மொத்த வரலற்று ஆர்வலர்களும் கொண்டாடத் தொடங்கினர்.

இதே மடத்தில் உள்ள 17 -18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலக் கல்வெட்டு ஒன்றும் மேற்கண்ட செய்தியை ஒத்துள்ளது.

மிகப்பெரும் வரலாற்று ஆய்வறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள், கிண்ணிமங்கலம் கல்வெட்டு குறித்து ஒரு சில சர்ச்சைகளைப் பதிவு செய்கிறார்.

முனைவர் சாந்தலிங்கம்  அவரது பதிவில் ... கிண்ணிமங்கலம் கல்வெட்டு போலியாகத் தயார் செய்யப்பட்டது என்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்கிறார். இதற்காக அவர் எழுப்பும் கேள்விகளில் கருத்து விவாதம் இல்லை; தனிமனிதத் தாக்குதல் போல் இருக்கிறது.

அவர் முன் வைக்கும் கேள்விகள்:
மலைமுகடுகளிலும், குகைத்தளங்களிலும் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகள், தனித்த ஓர் எண்பட்டை கற்தூணில் எவ்வாறு இருக்கும்? 
சங்ககாலத்தில் கற்தூண் கொண்ட கோவில்கள் இருந்ததா? என்ற கேள்விகளை எழுப்புகிறார்.

ஆண்டிபட்டி அருகே புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டு தமிழி எழுத்துக்களால் எழுதப்பட்டது. இது கிடைத்தது மலை முகட்டிலோ, குகைத்தளத்திலோ அல்ல. ஊர் மக்கள் வசிப்பிடத்தில் தரைத்தளத்தில் கிடைத்த துண்டு கல்வெட்டு.

முனைவர் சாந்தலிங்கம்  கூற்றுப்படி, கிண்ணிமங்கலம் தூண்  5 அல்லது 6 ஆம்  நூற்றாண்டு என்றுகூட இருக்கட்டும். ஆனால் இவர் 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட எழுத்து என்கிறார். மடத்து நிர்வாகிகள் தங்களது உரிமையை நிலைநாட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்டது என்கிறார்.

இது வேடிக்கையாக உள்ளது. போலியாகச் செப்பேடுகள் செய்யலாம். போலியாக ஓலைகள் செய்யலாம். போலியாகத் தமிழ் பிராமி கல்வெட்டு எழுதுவார்களா?  அதுவும் 200 ஆண்டுகளுக்கு முன்பாம். அதாவது 18 ஆம் நூற்றாண்டில் ஒரு துண்டுக் கல்லில் தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதும் அளவுக்கு ஒருவர் ஞானம் பெற்றிருப்பாரா?

முனைவர் சாந்தலிங்கம் அவர்களின் கருத்தை ஒரு வாதத்திற்காக ஏற்றால்.... தமிழகத்தில் உள்ள அனைத்து தமிழிக் கல்வெட்டுகளையும் போலி என்று வாதிடுவார்களே. அதற்காகவே ஒரு கூட்டம் உள்ளதே. இது எவ்வளவு பெரிய அபாயத்தை விளைவிக்கும்??!!
புள்ளி இருந்தது..  புள்ளி இல்லை.. என்றொரு சர்ச்சை.. 
புள்ளி இருந்தால் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிற்கு மேல். 
புள்ளி இல்லையென்றால் கி.மு. 2  நூற்றாண்டு 
எப்படியாயினும் காலம் கி.மு. 2 அல்லது கி.பி.6 நூற்றாண்டு.
ஆனால் முனைவர் சாந்தலிங்கம் சொல்வது;  கல்வெட்டின் காலம் 18 ஆம் நூற்றாண்டாம்!

" ஏகன் ஆதன் கோட்டம் "
என்ற கல்வெட்டில் கோட்டம் என்னும் சொல் முதன்முதலாக பூலாங்குறிச்சி கல்வெட்டில்தான் வருகிறது. அதன்காலம் கி.பி. 5 என்கிறார். இருக்கட்டுமே. இதை எப்படி 18 ஆம் நூற்றாண்டு என்கிறார். சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கோட்டம் என்னும் சொல் வருகிறதே? இச் சொல் கல்வெட்டில் இடம்பெறுவது சரிதானே.

ஜம்பை தமிழிக் கல்வெட்டில் வரும் "அதியநெடுமான்" மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் வரும்  "நெடுஞ்செழியன் " என்னும் சொல் இலக்கியங்களில் மட்டுமே உள்ளது. வேறு எந்த கல்வெட்டிலும் இல்லை. அதற்காக ஜம்பைக் கல்வெட்டையும், மாங்குளம் கல்வெட்டையும் போலி என வாதிடலாமா?

கிண்ணிமங்கலத்தில் இருக்கும் 7 - 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் இருக்கும் "பள்ளிப்படை " என்னும் சொல் தவறாம். பாண்டிய நாட்டில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் பள்ளிப்படை என்னும் சொல் கிடைக்கிறது என்கிறார். வேடிக்கையாக உள்ளது. 10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பாக 8 ஆம் நூற்றாண்டில் பள்ளிப்படை என்னும் சொல் கல்வெட்டில் கிடைக்காதா?

அப்படியானால்  10 ஆம் நூற்றாண்டிற்கு முன்பான முதலாம் ஆதித்தன் பள்ளிப்படை, பிரித்வி கங்கரையன் பள்ளிப்படை...  இந்தக் கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் போலியா?

பிற்கால நாயக்கர் கல்வெட்டு.. காந்தளூர்சாலை.. மடத்துத் தலைவர் பேச்சு.. இவை பெரிதாக எங்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. தமிழிக் கல்வெட்டின் காலத்தை 18 ஆம் நூற்றாண்டு என்று கூறியதுதான் பேரதிர்ச்சியாக உள்ளது.

18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒன்றை முனைவர் ராஜவேலு போன்ற தொல்லியல் அறிஞர்கள் ஆய்வு செய்யாமல் இருப்பார்களா? 200 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒன்றை 2000 வருடப் பழமை என்று கூறும் அளவிற்கு ஞானமற்றவர்களா? தமிழகத் தொல்லியல்துறையும் அங்கிகாரம் செய்துள்ளதே? அவர்களும் ஞானமற்றவர்களா?

முனைவர் சாந்தலிங்கம் அவர்களின்  கட்டுரை தனது சக ஆய்வாளர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆய்வவாளர்களே உங்களுக்குள் ஏற்பட்ட மோதலில்...தயவு செய்து தமிழர்களின் பழமையையும் பெருமையையும் களங்கப்படுத்தாதீர்கள். உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறோம்...



கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

கிண்ணிமங்கலம் கல்வெட்டுகளும் சில கேள்விகளும்

-- முனைவர் சொ.சாந்தலிங்கம்


அண்மையில் மதுரை மாவட்டம் செக்கானூரணிக்கு அருகில் கிண்ணிமங்கலம் கிராமத்தில் தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு ஒன்றும் அத்தோடு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்றும் ஆய்வாளா் காந்திராஜன் குழுவினரால் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டன. அதற்கு அடுத்த சில நாட்களில் மற்றொரு தமிழ்க்கல்வெட்டும் (கி.பி.1722), அதே இடத்தில் கண்டறியப்பட்டது. இக்கண்டுபிடிப்புகள் ஆய்வாளா்களின் கவனத்தை வெகுவாக ஈா்த்ததுடன் பல சூடான சுவையான விவாதங்களுக்கும் வழி கோலியது. இவ்வூா் 2014 ஆம் ஆண்டிலேயே இக்கட்டுரை ஆசிரியா் மற்றும் குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அக்கோயிலில் கி.பி.19ம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு ஒன்று இருந்ததைப் படித்து வெளியிடப்பட்டது (ஆவணம் இதழ் 25 பக்.11-12, 2014). அப்போது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் எவையும் இக்கோயிலில் இல்லை (ஏகநாத சுவாமி திருக்கோயில்). இப்புதிய கல்வெட்டுகள் அண்மையில் பூமிக்குக் கீழிருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கல்வெட்டுகள் பற்றிய சிறிய விவாதமே இக்கட்டுரை. ஏற்கனவே ஒரு விமா்சனக்கட்டுரை முனைவா்.மீ.மருதுபாண்டியன், மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் அவா்களால் மல்லாங்கிணறு கருத்தரங்கில் படிக்கப்பட்டது என்பதையும் நினைவு கூருகிறேன்.

தமிழி (தமிழ்-பிராமி) கல்வெட்டு:
தமிழ்நாட்டில் இதுவரை எங்கும் காணவியலாத ஒரு எண்பட்டைக் கல்தூணில் இரண்டு வரிகளில் ஏகன் ஆதன் கோட்டம் என்று இரண்டு வரி ‘தமிழி’ கல்வெட்டு இங்கு காணப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்த மூத்த கல்வெட்டறிஞா் வெ.வேதாசலம் இக்கல்வெட்டில் முதல் எழுந்தான் ‘ஏ’ என்பதில் உள்ளே புள்ளி உள்ளது என்றும் எனவே இதனை எகன் ஆதன் கோட்டம் என்றே வாசிக்கவேண்டும் எ்னறும் கருதுகிறார். ஆனால் இக்கல்வெட்டை மீளாய்வு செய்த சு.இராசவேலு இக்கல்வெட்டில் எந்த எழுத்திலும் புள்ளியில்லை என்றும் எனவே ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்று படித்தது சரியே என்றும் விவாதிக்கிறார் (சாசனம் ப.9. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை வெளியீடு, 2020 டிசம்பா்) இதன் அடிப்படையில் சு.இராசவேலு இக்கல்வெட்டின் காலத்தை கி.மு.2ம் நுாற்றாண்டிற்குரியது எனக் குறிப்பிடுகிறார் (மேலது). இவருடைய கருத்தில் பலருக்கும் வலுவான ஐயங்களும், அத்தோடு இக்கல்வெட்டின் உண்மைத்தன்மையிலும் பல ஆய்வாளா்கள் ஐயம் கொண்டுள்ளனா் (சு.இராசகோபால், நா.மார்க்சியகாந்தி, ஆா்.பத்மாவதி, சொ.சாந்தலிங்கம் கட்டுரையாளா்).

இக்கல்வெட்டு போலியானது என்பதற்கான காரணங்கள். இதுவரை சங்காலத்தில் கல்லால் ஆன கட்டுமானம் (கோயில், அரண்மனை, கோட்டை உட்பட) எவையும் தமிழ்நாட்டில் கண்டதில்லை. பெருங்கற்சின்னங்கள் (கல்திட்டை) தவிர எவையும் கல்லால் கட்டப்பட்டதில்லை. ஆனால் இத்தமிழி கல்வெட்டு கிடைத்துள்ள கல் முப்பட்டையுடன் கூடிய ஒா் அரைத்தூண் ஆக உள்ளது. பிற்காலத்திய ஒரு கோயில் அல்லது ஒரு மண்ட்பத்திற்குரியதாக இது இருக்கலாம். எனவே இக்கல்வெட்டு சங்ககாலத்தைச் சோந்ததாக கொள்ளமுடியாது.
மேலும் இருவரிகளில் வெட்டப்பட்டுள்ள ‘ஏகன் ஆதன் கோட்டம்’ என்ற தொடா் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக்குரியதல்ல எழுத்துக்கள் எவ்வித பிசிறும் இன்றி, அளவு எடுத்த அச்சு எழுத்துக்கள் போல் ஒரே வடிவில் வெட்டப்பட்டுள்ளன. அண்மைக்காலத்தில் நன்கு படித்த கல்வெட்டெழுத்துகளில் ஞானம் கொண்ட ஒருவரால் எழுதப்பட்டவை போலத் தெரிகிறது. மற்றும் கல்வெட்டில் சுண்ணப்பொடி போட்டு எடுத்த படத்தில் எல்லா இடங்களிலும் புள்ளி இருக்கிறது. எனவே ராசவேலு கூறுவது போல் புள்ளி இல்லை என்பது பொருந்தாது. அடுத்த கோட்டம் என்ற சொல் முதன் முதலாகப் பூலாங்குறிச்சி கல்வெட்டில் தான் பயின்று வருகிறது. பூலாங்குறிச்சி கல்வெட்டின் காலத்தை கி.பி.3ம் நூற்றாண்டு என்கிறார். சு.இராசவேலு (சாசனம்.23 ப.11) ஆனால் மற்ற அறிஞா்கள் இதன் காலத்தை கி.பி.5ம் நூற்றாண்டு என்றே கொள்ளுவா். எனவே சு.இராசவேலுவின் காலக்கணிப்பு ஏற்புடையதல்ல. கோட்டம் என்ற சொல்லுக்குப்பல பொருள்களும் பல இலக்கியச் சான்றுகளும் உள்ளன. இக்கல்வெட்டில் இச்சொல் கோயில் என்ற பொருளைத்தரும். ஆனால் கல்வெட்டே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் பொழுது இதன் காலம் பொருள் பற்றி நாம் கவனம் செலுத்தத்தேவையில்லை.

வட்டெழுத்துக் கல்வெட்டு:
தமிழி கல்வெட்டைக் கண்டறிந்த அதே குழுவினா் அத்தோடு ஒரு வட்டெழுத்துக் கல்பலகையையும் கண்டனா். இவ்வெழுத்தின் காலம் கி.பி.7-8ஆம் நூற்றாண்டு எனக் கணித்துள்ளனா். கல்வெட்டுள்ள கல்லின் முதல் பாதி உடைந்திருக்கலாம். பாதியிலிருந்தே செய்தி தொடங்குகிறது. ஐந்து வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டு
01. இறையிலியாக
02. ஏக நாதன்
03. பள்ளிப்படை
04. மண்டளி
05. யீந்தான்
என்பதே இக்கல்வெட்டின் பாடம் சு.இராசவேலு ‘மன்றளி ஈந்தார்’ என்று எழுத்துக்களைத் தவறாகப் படித்துள்ளார் (சாசனம் ப.13). இக்கலவெட்டிலும் மொழிப்புலமை இல்லாததன் காரணமாக புணா்ச்சியை அறியாமல் எழுதியுள்ளார். ஏகன்+நாதன் என்றால் ‘ஏகனாதன்’ என்று தான் வரவேண்டும். இங்கே ஏகநாதன் என்று வந்திருப்பதைக் கவனிக்கலாம். மேலும் இக்கல்வெட்டும் போலியானது என்பதற்கு இதன் எழுத்தமைதியே சான்று. இக்கல்வெட்டு ஆழமாக வெட்டப்படாமல் கீறல் முறையில் வெட்டப்பட்டுள்ளது. இதனை 7-8 ம் நூற்றாண்டாகக் கருதுகின்றனா். இதே சமயத்தில் மதுரையில் செக்கானூரணிக்கு அருகிலேயே கீழக்குயில்குடி, முத்துப்பட்டி போன்ற இடங்களில் அழகான வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை ஒப்பிட்டு நோக்குவோர் இந்தக்கல்வெட்டின் போலித்தன்மையை எளிதில் உணா்வா்.

‘இறையிலி’ என்னும் சொல் முதன்முதலாகப் பாண்டிய நாட்டில் (கி.பி.772-ல்) (SII vol. XIV-19; கல்வெட்டுச் சொல்லகராதி ப.80) காணப்படுகிறது. இது போல் ‘பள்ளிப்படை’ என்ற சொல்லும் பாண்டிய நாட்டில் கி.பி.10ம் நூற்றாண்டில் தான் காணலாம். இவ்விரு சொற்களையும் இங்கே காண்பது மிகவும் வியப்புக்குரியதாக உள்ளது. இது போல் ‘மண்டளி’ என்ற சொல் மண்+தளி=மண்டளி என்றாகி மண்ணால் ஆகிய கோயில் எனும் பொருளைத் தரும். இவ்வாறான மண்டளியே முந்தய கோயில் என்றாலாவது சற்று பொருத்தமாகும். இதனைக் கொண்டு பாண்டிய நாட்டின் முதல் பள்ளிப்படைக் கோயில் கிண்ணிமங்கலத்தில் தான் உள்ளது என்பதும் ஏற்புடையதல்ல. இங்கு ஒரு மண் தளி இருந்திருக்காலம். 8-9 ம் நூற்றாண்டுகளில் தான் பல மண்தளிகள் கற்றளிகள் ஆயின என்பது தமிழ்நாட்டு கட்டடக்கலை வரலாறு. சு.இராசவேலு அவா்கள் ‘கோட்டம்’ என்ற சொல் எங்கெல்லாம் பயின்றுவருகிறது என்றும் பள்ளிப்டைக் கோயில்கள் எங்கெல்லாம் உள்ளன எனவும் அயரவைக்கும் பட்டியலைத்தருகிறார். அதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை கட்டுரையின் நீளத்தை அதிகரிக்க பயன்படும் இவையெல்லாம் இங்கு  தேவையற்ற சரக்குகள் என்பது என்கருத்து.

நாயக்கா் காலக்கல்வெட்டு:
மூன்றாவதாக கி.பி.1722 ஆம் ஆண்டைச் சோ்ந்த விஜயரங்க சொக்கநாதா் காலத்திய கல்வெட்டு ஒன்றும் அங்கு காணப்பட்டது. இக்கட்டுரை ஆசிரியரால் முதலில் நேரடியாகப்படிக்கபட்டது. 43 வரிகளைக் கொண்டது இக்கல்வெட்டு. கல்வெட்டின் பெரும்பகுதி மதுரை நாயக்கா்களின் மெய்க்கீா்த்தியும் பின்னா் முக்கிய செய்தியும் இடம் பெற்றுள்ளன. மெய்க்கீா்த்திப் பகுதியைத் தவிர்த்துப் பார்ப்போமானால் கிண்ணிமங்கலம் ஏகநாதா் கோயிலும் குரு மடமும் ஒரு குடும்பத்திற்கு மட்டும் பாரம்பரியமாய் உரிமையுடையது. பிறா் யாரும் இதில் உரிமை கொண்டாட முடியாது என்பதே முக்கியச் செய்தியாகும்.



நன்றாக ஊன்றி கவனித்தால் இக்கல்வெட்டும் போலியானது எனக் கண்டறியலாம். இக்கல்வெட்டில் சில வரிகளைக் கீழே தருகின்றேன்
வரிகள்
26. மீனாட்சி சுந்தரேசுவர சுாமிகள் சன்
27. னதியில் கிண்ணிமங்கலம் ஸ்ரீலஸ்ரீ
28. ஏகநாத குருமடத்தார்க்கு தன்மசிலா சாதனப்பட்டயம்
29. எழுதிக்குடுத்தபடிக்கு இம்மடத்துக்குப் பாத்தியப்பட்ட
30. நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு
31. திரல்விடையாவும் நெடுஞ்சழியன் பரா
32. ந்தகபாண்டிய ராசனின் பட்டயத்தில் கண்
33. டபடி குடும்பத்தாரின் வாரிசுதாரா்களால்
34. ஆதாயம் கையாடிக்கொண்டு இவா்களின்
35. குல ஆசார வழக்கப்படி பூஜித்து பரிபாலனம்
36. செய்துவரவும் மடப்புறத்தில் பரம்பரைசம்பி
37. ரதாயப்படி பள்ளிப்படை சமாது வைத்து வ
38. வணங்கிவரவும் இம்மடத்தார்க்கு மட்டுமே கா்
39. ணபரம்பரை பூர்வீகபாத்யதை உண்டு
40. பிறகுலத்தார் யாவருக்கும் எவ்வித பாத்தியதையும்
41. இம்மடத்தில் இல்லை.
மேற்கண்ட வரிகளில் இக்கல்வெட்டின் உண்மையான நோக்கம் தெளிவாகப் புலப்படும். இக்கல்வெட்டும் உண்மையானதல்ல என்பதற்கு இதில் இடம் பெற்றுள்ள பல சொற்களே சான்றாகும். எடுத்க்காட்டாக 27ம் வரியில் வரும் ‘ஸ்ரீலஸ்ரீ’ என்ற அடைமொழி கல்வெட்டுக் காலத்துக்குப் பொருந்தாததாகும் (கி.பி.1722க்கு) வரி 31-32 ல் நெடுஞ்செழியன் பராந்தகபாண்டியன் ராசனின் பட்டயத்தில் கண்டபடி’ என்பது மிகவும் அபத்தமான சொற்றொடராகும். நெடுஞ்செழியன் சங்கால மன்னன். அவன் காலத்திய பட்டயம் ‘தமிழி’யில் எழுதப்பட்டிருக்கும். இக்கல்வெட்டை வெட்டியவா் அப்பட்டயத்தை எங்கு பார்த்தார். அவருக்கு அக்கால எழுத்தை கி.பி.1722ல் படிக்கத் தெரியுமா? இது போல் பராந்தகபாண்டியன் (கி.பி.768-815) ஆம் ஆண்டைச் சோ்ந்தவன். அவன் வெளியிட்ட பட்டயம் வட்டெழுத்தில் இருக்கும். அதனை இக்கல்வெட்டு வெட்டியவா் படித்தாரா, படிக்கத்தெரியுமா அப்படி இரண்டையும் பார்த்திருந்தால், படித்திருந்தால் தற்போது அப்பட்டயங்கள் எங்கே? என்ற கேள்விக்கு மடத்தின் தலைவா் அருளாநந்தம் கூறும் எளியவிடை அவையெல்லாம் திருடு போயிவிட்டன என்பது தான். இப்பதில் நம்பும்படியாக இல்லை. மேலும் இது போல பல ஆவணங்கள் போலியாகத் தயாரிக்கப்பட்டு உசிலம்பட்டி வட்டத்தில் செப்பேடுகளாகப் பலவீடுகளில் உள்ளன. நானே பத்து செப்பேட்டு நகல்கள் (Xerox) சேகரித்துவைத்துள்ளேன்.

இது போலி செப்பேடுகளில் பெரும்பாலும் ஒரே செய்தி தான் இருக்கும். அதாவது மதுரை திருமலை நாயக்கா் ஒரு நாள் தங்கள் ஊருக்குவந்தார். அப்போது நான் அவரை சீனி, சா்க்கரை வைத்து வரவேற்றேன். அவா் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். எனக்கு இந்தவூர் காவல் உரிமை வேண்டும் எனக் கேட்டேன். அப்படியேதந்தேன். இவ்வூரில் நன்மைக்கு ஒரு பணமும், தீமைக்கு ஒரு பணமும் வசூலித்துக் கொண்டு நீசுகத்திலிருப்பாயாக” என்று பட்டயம் கொடுத்தார், மீனாட்சி சுந்தரேசுவரா் என்ற பெயரே 1898 ஆம் ஆண்டுவரை வழக்கத்தில் கல்வெட்டுகளில் இல்லை. ஆனால் அந்தப்பெயா் இக்கல்வெட்டில் உள்ளது வேடிக்கையே. இவையாவும் நூறு ஆண்டுகளுக்குள் ஒருவரைப்பார்த்து ஒருவா் ஒரே வாசகத்துடன் சுயமாகத் தயார் செய்து கொண்டதாகும். இவை முற்றிலும் போலியானதாகும்.

வட்டெழுத்து ஓலைச்சுவடிகள்:
சு.இராசவேலு அவா்கள் கிண்ணிமங்கலம் மடத்தில் நேரடி ஆய்வு செய்த போது மடத்தின் தலைவா் திரு அருளானந்தா் ஓலைச்சுவடிகள் சிலவற்றைக் காட்டியுள்ளார். அதில் வியக்கத்தக்க செய்தி அவை வட்டெழுத்தில் எழுதப்பட்டதாகும். சிலவற்றை பாடல் வடிவில்படித்து தனது கட்டுரையில் கொடுத்துள்ளார் (சாசனம் பக் 16-17) இவற்றை எழுதியவா் இம்டமத்தின் 62வது குருமகாசன்னிதானமாக விளங்கிய அ.மகாலிங்கம் என்ற கருணானந்தம் என்னும் இவா் 1812 ஆம் ஆண்டு மறைந்தார் என்றும் இராசவேலு குறிப்பிடுகிறார் (சாசனம் ப.18) தற்போதுள்ள மடத்தின் தலைவா் 67 வது குருவாகும். இவ்வோலைகள் ஒன்றில் ‘ஏகநாத பள்ளி ஆசான்’ என்றும் நாட்டாற்றுப்புறத்து அமிர்த பராக்கிரம நல்லூர் வெள்ளாள குயில்குடியான்மார்கள் பரிவட்டணை கடமையாக பத்து ஆண்டுக்கு ஒரு முறை ஆநிரை அறுபத்தும் அதற்கொப்ப கூளமும் கிண்ணிமங்கல ஏகனாத மடத்துக்கு ஈந்தார்’ என எழுதப்பட்டுள்ளது (பக் 17-18). இதில் வரும் நாட்டாற்றுப்புற அமிருதபராக்கிரம நல்லூர் குயில்குடி என்பது முத்துப்பட்டி வட்டெழுத்துக் கல்வெட்டில் வரும் தொடராகும் (கி.பி.9-10ம் நுாற்றாண்டு).

ஆனால் ஆசான், கூளம் என்ற சொற்கள் கி.பி.9-10ம் நூற்றாண்டு காலத்துக்குரியன அல்ல. எனவே இவ்வோலையை சிலாசாசன நகல் என்று இறுதியில் குறிப்பிட்டாலும் நமக்கு சந்தேகமே. கி.பி.10 நுாற்றாண்டுக்கான பாடல் வடிவிலோ, மொழி அமைப்பிலோ இவ்வோலைகள் இல்லை. மேலும் இதில் ‘மாவூத்து வேலப்பா் குறடு’ என்ற தொடரும் வருகிறது. மாவூத்து வேலப்பா் கோயில் என்பதும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முந்திய கிராம தெய்வக்கோயிலே. இதனை கி.பி.10ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கலவெட்டில் பதிவு செய்திருப்பது எவ்வகையில் பொருந்தும்.

எனவே இம்மடத்தின் தலைவா் அருளானந்தா் இராசவேலுவிடம் உரையாடியபோது கூறியதாகச் சொன்னது போல் ஒரு நூறு ஆண்டுகளுக்குள் இவ்வோலை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். யாரோ கல்வெட்டு எழுத்துக்கள் தெரிந்த நபா்களைக் கொண்டு இதனை எழுதியிருக்க வேண்டும். இவ்வோலை ஆவணங்களின் மொழி நடை கி.பி.9-10ம் நூற்றாண்டுக்குரியது அல்ல. இவ்விதமான போலி ஆவணங்கள் வைதீஸ்வரன் கோயில் வட்டாரத்துக் கிராம மக்களால் குடிசைத் தொழிலாகத் தயார் செய்யப்படுவதை அண்மையில் செய்தி ஊடகங்களில் கண்டோம். எனவே இங்கு கிடைத்த அனைத்து கல் மற்றும் ஓலை ஆவணங்களின் மெயத்தன்மை சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. இதே கருத்தினை பல மூத்த கல்வெட்டாய்வாளா்களும் கொண்டுள்ளனா். அவசரப்பட்டு ஆா்வக் கோளாறு காரணமாக இதனை கி.மு.2ம் நூற்றாண்டு முதல் செயல்பட்டு வரும் மடம் என்று கூறுவது சற்றும் ஏற்புடையதல்ல. ஒரு எம்.பில். ஆய்வேடு இம்மடம் 200 ஆண்டுகளுக்கு முன்னா் சோழவந்தானில் செயல்பட்டுவந்ததாகக் கூறுகிறது.

ஏகநாதா்மடமும் காந்தளுார்ச்சாலையும்:
ஏகநாதா் மடம் கிமு.2ம் நூற்றாண்டு முதல் செயல்பட்டது என்றும் இங்கு வழிவழியாகக் கல்வி கற்பிக்கவும் போர்க்கலைகள் கற்பிக்கும் இடமாகவும் திகழ்ந்து வந்துள்ளது. குறிப்பாக வேளாண்மை, இயற்கையைப் பாதுகாக்கும் முறைகள், நீா் மேலாண்மை, சோதிடம், தமிழ் மருத்துவம், தமிழ் கணிதவியல், இவற்றுடன் போர்க்கலை பயிற்சிக்கான களமாகவும் இது திகழ்ந்தது. சோழா் காலத்தில் கல்வெட்டுகளில் குறிக்கப்படும் ‘காந்தளுர்சாலை’ போன்று இம்மடம் செயல்பட்டு வந்ததாகத் தெரிகிறது என்கிறார் சு.இராசவேலு (சாசனம் ப.7). இக்கூற்று அவரது கற்பனையின் உச்சம் என்று கொள்ளத்தக்கதாகும். இவ்கூற்றுக்கு எவ்விதச் சமகாலச் சான்றோ, பிற்காலச் சான்றோ இல்லை. இன்றைய மடத்தலைவா் அருளானந்தன் வாய்மொழிக் கூற்று எல்லாம் வரலாறு ஆகிவிடமுடியாது என்பதை இராசவேலு உணரவில்லை. காந்தளுர்ச்சாலைக்கு இணையான ஒரு நிறுவனம், கி.மு. 2ம் நுாற்றாண்டிலிருந்து செயல்பட்டது என்றால் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.14ம் நூற்றாண்டு வரையுள்ள பாண்டியா் ஆவணங்கள் ஒன்றில் கூடவா கிண்ணிமங்கலம் மடம் பற்றிய குறிப்பு இல்லாமல் போகும். கி.பி.12-13ம் நூற்றாண்டில் மதுரைப்பகுதியில் பலமடங்கள் செயல்பட்டமை கல்வெட்டுகளில் பதிவாகியுள்ளன. மதுரையில் திருவாரூா் கோளகி மடத்தின் கிளையான பிக்ஷாமடம், திருவேடகம், கோமடம், திருப்பரங்குன்றத்தில் இரண்டு மடங்கள், திருப்பத்தூர்ப் பகுதியில் சிவகிரியில் எனப் பல மடங்கள் செயல்பட்ட குறிப்புகள் உள்ளன. இந்நிலையில் சங்ககாலந்தொட்டு இருந்ததாகக் கூறப்படும் ‘ஏகநாதா் மடம்’ மட்டும் இடம்பெறாதது விந்தையிலும் விந்தையே. இது ஒரு போர்ப்பயிற்சிக் கூடம் என்றால் சோழா்கள் இதனையும் தாக்கி அழித்திருப்பார்களே. சான்றுகள் ஏதேனும் உண்டா?. சோழா் கல்வெட்டுகளில் ‘காந்தளுர்ச் சாலை மரியாதையில்’ என்ற தொடா் அடிக்கடி வரக் காணலாம். அப்படி கிண்ணமங்கலம் ‘ஏகநாதமடம் மரியாதையில்’ என்ற குறிப்பு எங்காவது உண்டா? உணா்ச்சிவசப்படுவதற்கும் ஓா் எல்லை வேண்டாமா? கிண்ணிமங்கலத்தைச் சுற்றிலும் பல கோயில்கள், சிந்துப்பட்டி, ஆனையூர், மேலத்திருமாணிக்கம், பேரையூர், திடியன் ஆகிய ஊா்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஒன்றில் கூட ஏகநாதா் மடம் பற்றிய செய்திகள் இல்லை. சமணமும் (புத்தூர்), பௌத்தமும் (ரோசல்பட்டி, ஆண்டிபட்டி) ஆருகிலேயே உள்ளன. எங்கும், எதிலும் ஏகநாதா் மடம் பற்றியோ, அங்கு செயல்பட்ட கல்விச்சாலை, போர்ப்பயிற்சிக் கூடம் பற்றியோ செய்திகள் இல்லை. இவ்வாறிருக்க இவ்வூரை காந்தளுர்ச்சாலையுடன் ஒப்பிட்டுப் பேசும் இராசவேலுவின் துணிச்சலை எண்ணி வியக்கத்தான் வேண்டியுள்ளது.

அண்மைக்காலங்களில் சு.இராசவேலு அவா்களின் கட்டுரைகளில் தன்முனைப்பும், கற்பனையும், மற்றவா்களின் கருத்தை எள்ளல் நடையில் கையாள்வதும் மிகுந்துள்ளது. அவரது ஞானத்தின் மீது அவருக்கு அசாத்திய நம்பிக்கையிருக்கலாம். ஆனால் அவரது அண்மைக்காலக் கட்டுரைகளைப் படித்த பலரும், வெளிநாட்டார் உட்பட அவ்வளவாக ரசிக்கவில்லை என்ற தகவல்கள் சில நண்பா்கள் மூலம் வருகின்றன. எனவே அவரது ஆய்வு முடிவுகளை அவா் கவனத்துடன் கையாளவேண்டும். மதுரைப்பகுதியில் சமணம் பரவியது குறித்த எனது கட்டுரையைப் படித்த அவா் நான் சமணா்கள் எனக்குப் பணம் கொடுத்து இவ்வாறு எழுதவைக்கின்றனா் என்று குறிப்பிடுகிறார் (புதிய செப்பேடு). இவ்வாறு தரம் தாழ்ந்து விமா்சிப்பது ஆய்வாளா்க்கு அழகல்ல. இது போல் நான் கிண்ணிமங்கலம் பற்றி எழுத அவா் பெற்றது எவ்வளவு என்று கேட்கப் போவதில்லை.

முடிவாக இக்கட்டுரையின் மூலம் நான் பதிவு செய்ய விரும்புவது இதுதான். கிண்ணிமங்கலம் ஏகநாதா் மடம் சுமார் 200 ஆண்டு பழமையானது. இது ஒரு சாதராண மடமே தவிர காந்தளுர்ச்சாலைக்கு இணையானது அல்ல. இங்கு கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலை ஆவணங்கள்யாவும் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. இம்மடத்தின் காலத்தை மிகைப்படுத்திக் கூறப்படுகிறது. இம்மடமும், இங்குள்ள ஒரு கோயிலும் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே உரியது என்பதை வலியுறுத்த மட்டுமே அவற்றைக்காத்துக் கொள்ளமட்டுமே இவ் ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

தற்போது மதுரை உயா்நீதிமன்றம் கிண்ணிமங்கத்தில் அகழாய்வு செய்ய வல்லுநா்களை நியமித்துள்ளது. அவ்வாறு அகழாய்வு செய்து அதன் மூலம் நம்பத்தகுந்த சான்றுகள் கிடைத்தால் என்னுடைய கருத்தை நான் மாற்றிக் கொள்ளத் தயாராக உள்ளேன்.



முனைவர் சொ.சாந்தலிங்கம், மதுரை
https://www.facebook.com/santhalingam.chockaiah




Tuesday, March 16, 2021

வேதாந்தம் - ஒரு விளக்கம்

 வேதாந்தம் - ஒரு விளக்கம்


 - முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி



மதம் என்பது மானுட இனத்தின் மேன்மைக்காக நாடு, இனம், மொழி கடந்து உயிரும், உலகமும் (பிரபஞ்சமும்) ஒன்றிணையும் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப் பட்டதாக ஒவ்வொரு மதத்தினரும் கூறிக் கொள்கின்றனர். ஒரு தலைவர் அல்லது தலைமை நிறுவனத்தின் வழியில் பரப்பப்பட்டு, வளர்க்கப்பட்டு, நிறுவன மயமாக்கப்பட்ட அமைப்பாகத் தான் மதங்கள் வளர்ச்சி நிலை பெற்றிருக்கின்றன. இன்று உலகத்தின் பெரும்பான்மை மதங்கள் எல்லாம் நிறுவன மயமாக்கப் பட்டவைதான். பழங்காலத்தில் சமயமாகத் தோற்றுவிக்கப்பட்டவை கூட நிறுவனமாக வளர்ச்சி பெற்று இன்று மதமாக வேரூன்றி நிற்கின்றன. இந்தியச் சமயங்களில் சமணமும், பௌத்தமும் இதற்கு எடுத்துக்காட்டுகள். ஆனால் இன்று இந்து மதமாகக் கற்பிக்கப் படும் வைதிக மதம், ஒரு மதத்திற்கான வெளிப்படையான நிறுவனமாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. ஏராளமான கடவுள்கள் இருந்தாலும், அது தனக்கென்று ஒரு மதத் தலைவனைக் கொண்டதல்ல. சட்ட பூர்வமான நிறுவன மயம் என்பது இன்று வரையிலும் இல்லை. ஆனாலும் இவற்றையே தன் பெருமையாகக் கூறிக்கொண்டு, வெறும் நம்பிக்கைகளையே அடிப்படையாகக் கொண்டு, மாபெரும் கோட்டையாகக் கட்டமைக்கப்பட்ட அடித்தளத்தில் வளர்த்தெடுக்கப்பட்டு வருவதுதான் இன்றைய இந்து மதம். இந்த இந்து மதம், வைதிக மதமாக அறியப்பட்ட முற்காலத்தில், அதன் கட்டமைப்பின் வலிமை என்பது, அது உருவாக்கி வைத்திருக்கும் சாஸ்திரங்கள் தான். அவைதான் வேதாந்தம் என்பதாகக் குறிப்பிடப்படுகின்றன. வைதிகத்தின் மூலவிசையாகக் குறிப்பிடப்படும் வேதமும், அதன் இறுதிப் பகுதியாகக் கூறப்படும் வேதாந்தமும் தங்கள் வளர்ச்சி நிலையின் அடையாளமாக ஆறு சமயங்களைக் கூறுகின்றன.

religion india.jpg

இந்து மதத்தின் ஆறு சமயங்களாகக் குறிப்பிடப்படுபவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்தியம், சௌரம் ஆகியவையே என்று இந்து மதத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை சன்மார்க்கங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. சன் = ஆறு; மார்க்கம் = பாதை; அதாவது ஆறு பாதைகள் அல்லது ஆறு வழிகள். இந்தச் சன்மார்க்கங்கள், அதாவது ஆறு சமயங்கள் எப்படி வைதிகத்தில் உள் நுழைக்கப் பட்டன என்பதைப் புரிந்து கொள்ளும் வழி பல அடுக்கு நிலைகளைக் கொண்டது. படித்து அறிந்து கொள்ளச் சற்றுக் கடினமானது. என்றாலும் படித்தறிவது காலத்தின் கட்டாயம். 

எந்த உருவம் ஆனாலும் வழிபடுவதும், எல்லாக் குணங்களையும் ஏற்றுக்கொள்வதும் சகுண பிரம்மம் ஆகும். எவ்விதக் குணமுமற்ற ஞானம் என்பது நிர்குண பிரம்மம் ஆகும். இந்தச் சகுண பிரம்மமும், நிர்குணப் பிரம்மமும் சேர்ந்ததுதான் வைதிகத்தின் மூலமான பிரம்மம் என்பது. இந்தப் பிரம்மம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்றும்  பிரஸ்தான திரயம் (முக்கிய மூன்று) என்று அழைக்கப்படுகின்றன. அந்த மூன்றில் பிரம்ம சூத்திரம் ஒன்றாக அறியப்படுகிறது. மற்ற இரண்டும் உபநிடதம் மற்றும் தத்துவ விவாதமான கீதையும் ஆகும். இதில் உபநிடதம் (பத்து) என்பவை வேதங்களின் சடங்குகளையும், யாகங்களையும் தவிர்த்துத் தத்துவங்களாக உருவாக்கப்பட்டவை. ஒரு வகையில் வேத மறுப்பு உள்ளவை. மற்றொரு தத்துவ விவாதம் பகவத்கீதை. மகாபாரதத்தின் பிற்கால இடைச்செருகல். முழுக்க முழுக்கச் சித்தாந்தத்தின் மசியல் அது. (சித்த + அந்தம் = சித்தாந்தம்) அதாவது சித்தத்தின் இறுதிப்பகுதி. இவை அனைத்தையும் சேர்த்துத்தான் வேதாந்தமாகக் கூறப்படுகிறது. (வேத + அந்தம் = வேதாந்தம்) அதாவது வேதத்தின் இறுதிப் பகுதியான, முக்கியமான மூன்று தத்துவ அமைப்புகள். அதில் ஒன்றான பிரம்ம சூத்திரத்தின் சகுண பிரம்மக் கூறுகளாகக் கூறப்படுபவை தான் ஆறு சமயங்கள் அல்லது சன்மார்க்கங்கள்.

இந்த ஆறு சமயங்களில் சைவம் சிவனையும், வைணவம் விஷ்ணுவையும் வழிபடுவது. சாக்தேயம் என்பது சக்தி வழிபாடு. கேரளா, வங்காளத்தில் இவ்வழிபாடு அதிகம். கௌமாரம் என்பது பழந்தமிழ்ப் பண்பாட்டில் இருந்து நவீன மயமாக்கப்பட்ட முருக வழிபாடு. தற்போது சைவத்தில் இணைத்துப் பேசப்படுவது. காணபத்தியம் என்பது கணபதி வழிபாடு. பிற்காலத்தில் தோன்றி தற்போது சைவத்தில் இணைத்துப் பேசப்படுவது. சௌரம் என்பது சூரிய வழிபாடு. தற்போது வைணவத்தில் இணைத்துப் பேசப்படுவது. இவையெல்லாம் தத்துவ அமைப்பின் சகுண பிரம்ம வழியில், அதாவது எல்லாக் குணங்களும் கொண்ட, உருவ வழிபாட்டுடன் கூடிய மேற்கூறிய ஆறு சமயங்களையும் உள்ளடக்கியதாகும். இவையெல்லாம் சேர்ந்ததுதான் வேதாந்தத்தின் பிரம்மம் குறித்து விளக்கும் தத்துவ அமைப்பு என்று இந்து மத நூல்களில் விளக்கப்பட்டுள்ளன (தி. சேஷாத்திரி, ஹிந்து மதம் ஓர் அறிமுகம், அத்வய பிரசுரம்,  மதுரை, 1972).

வேதாந்தத்தின் தத்துவ அமைப்பு இத்துடன் நின்று விடவில்லை. இதுவரை கூறிய, பிரஸ்தான திரயம் ஆகிய, மூன்று தத்துவ அமைப்புகளையும் (உபநிடதம், பிரம்ம சூத்திரம், தத்துவ விவாதம்) வலிமையாக்க மேலும் இரண்டு துணைப் பிரிவுகளை ஏற்படுத்தி வைத்துள்ளது. அவை சாஸ்திரம் மற்றும் புராணங்கள் என்பவையே. இதில் புராணங்கள் பலவித மரபுவழிக் கதைகளை ஒன்றிணைத்து நம்பிக்கை ஏற்படுத்த முயல்பவை. புராணங்களில் மத்ஸ்ய புராணம் தொடங்கி ஸ்காந்த புராணம் வரை மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 

வேதாந்தத்தின் இரண்டாவது துணைப் பிரிவான சாஸ்திரம் என்பதுதான் வைதிகத்தை இன்று வரை கட்டிக் காத்து வரும் வலிமையான கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பின் வழியில்தான் வேறு எல்லா விதமான தத்துவங்களையும், கோட்பாடுகளையும் விழுங்கி, சீரணித்து, தன்னுள் கரைத்து, விஸ்வரூபத் தோற்றத்தினை இந்து மதத்தால் ஏற்படுத்திக் கொள்ள முடிகிறது. எழுதப்பட்டவை எங்கிருந்தாலும், என்ன மொழியில் இருந்தாலும் அதை அப்படியே மூலத்துடன் சேர்த்துத் தன்னுள் கரைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது தான் தரிசனம் என்று அழைக்கப்படும் சாஸ்திரப் பிரிவு. சாஸ்திரம் என்றால் அது எழுதப்பட்டவற்றை மட்டுமே குறிக்கும் என்பதால், எழுதப்படாத மெய்யியல் மொழிவுகளைத் தன்னுள் வயப்படுத்த ஏற்படுத்தப்பட்ட உள் பார்வைதான் தரிசனம். கடவுள் தரிசனம் போலத் தத்துவ தரிசனம். அதன் பொருள் காட்சி தான். கண்ணால் பார்த்து அறியப்படுவது தான். வெறும் கண்ணால் பார்த்து அறிவது சாஸ்திரம். ஞானக் கண்ணால் கண்டறிவது தரிசனம்.

தரிசனம் என்பதில்தான் வைதிகத்தின் சூட்சுமமே அடங்கியுள்ளது. தரிசனம் குறித்த விளக்கங்களை எளிமையாக்கிக் காண்போம். உலகில் கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் உண்டு. கண்ணுக்குத் தெரியாத பொருட்களும் உண்டு. தெரிந்தவை, தெரியாதவை ஆகிய ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. இவற்றின் குணாதிசயங்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவை. இவற்றின் இயல்பை ஆராய்ந்து அறியும் உள் பார்வையே தரிசனம் ஆகும். தரிசனம் என்பதன் சூட்சுமக் கட்டமைப்பு, அதனை ஆஸ்திக தரிசனம் என்றும், நாஸ்திக தரிசனம் என்றும் பிரித்து வைத்திருப்பதுதான். வைதீக ஏற்பாட்டின்படி ஆஸ்திக தரிசனங்கள் என்பவை 'வேதங்களை அடிப்படையாகக் கொண்டவை'. அவை ஆறு வகைப்படும். நாஸ்திக தரிசனங்கள் என்பவை 'வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை'. அவையும் ஆறு வகைப்படும்.

ஆஸ்திக தரிசனங்கள் ஆறாகப் பகுக்கப் பட்டுள்ளன. இவை வைதீக தரிசனம் என்றும் வழங்கப்படும். சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய இந்த ஆறும் ஆஸ்திக தரிசனங்கள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. நாஸ்திக தரிசன வரிசையில் சார்வாகம், ஜைனம் (சமணம்), சௌத்ராந்திகம், வைபாஷிகம், மாத்யமிகம் (சூன்யவாதம்), யோகாசாரம் (விஞ்ஞான வாதம்) ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சார்வாகம், ஜைனம் தவிர்த்த ஏனைய நான்கும் பௌத்தத்தின் உட்பிரிவுகளாக வைக்கப் பட்டுள்ளன. நாஸ்திக தரிசனங்களாகக் கூறப்பட்டுள்ள ஆறும், பிரகிருதிவாதம் அதாவது இயற்கையை அடிப்படையாகக் கொண்டவை. மார்க்சியக் கருத்தியலின் படி 'பொருள் முதல் வாதம்'. மனிதனின் உயர் நிலையே இறைநிலை. இறந்தவனே இறைவன். ஆன்மா, மோட்சம், அவ்வுலகம் எதுவும் இல்லை. (பிற்காலச் சமணத்தில் ஆன்மாவும், மோட்சமும் உண்டு). இதில் சார்வாகமும், சமணமும் இந்நாட்டில் வைதிகம் உள்நுழையும் முன்பிருந்தே சமயங்களாக அறியப்பட்டவை. ஆனால் அவற்றை 'வேதங்களை அடிப்படையாகக் கொள்ளாதவை' என்று குறிப்பிடுவதற்குக் காரணம், அவை வேத காலத்துக்குப் பின்னர் தோன்றியவை என்று நம்ப வைப்பதற்காகவே. உண்மையில் வேத காலத்திற்கு முன்பு தோன்றியவை சார்வாகமும், சமணமும், சாங்கியமும். யோகமும் அப்படித்தான். ஆனால் இவற்றை வேதங்களை ஏற்றுக் கொண்டவை என்றும், ஏற்றுக்கொள்ளாதவை என்றும் குறிப்பிடுவதன் காரணம், வேத காலத்தை முன்னோக்கிக் காட்டுவதற்காகத்தான்.

வேதங்களை ஏற்றுக் கொண்ட ஆஸ்திக தரிசனங்களாகக் கூறப்படும் சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம், பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம் ஆகிய ஆறு தரிசனங்களில் பூர்வ மீமாம்சம் தவிர்த்து ஏனைய ஐந்துமே நாஸ்திக தரிசனங்கள் தான். ஆனால் ஆஸ்திக தரிசன வரிசையில் வைக்கப் பட்டுள்ளன. இவற்றின் கோட்பாடுகளில் கடவுளும் இல்லை; ஆன்மாவும் இல்லை. சாங்கியம், (முற்கால) கபிலரின் பிரபஞ்ச ஆய்வுக் கோட்பாடுகளைக் கொண்டது. யோகம் என்பது, உடல், மனக் கோட்பாடுகளின் மூலம் உண்மையை அறியும் சித்தர்களின் தரிசனம். இதில் பதஞ்சலி முனிவர் இடைச்செருகலாக உள் நுழைக்கப் பட்டவர். நியாயம் என்பது, புத்தருக்கு முன்பிருந்த கௌதமரின் காரண காரிய வாதங்களை அலசி ஆராயும் மறைபொருள் காட்சி. வைசேடிகம் என்பது, கணாதரின் (கணி + ஆதன்) அணுவியல் கோட்பாடுகளை முதன்முதலில் ஆய்ந்து எண்ணியம் என்று அளித்த விசேட தரிசனம் (சிறப்புக் காட்சி). உத்தர மீமாம்சம் என்பது, சடங்கு யாகங்களை மறுத்து, உபநிடதங்களை அடிப்படையாகக் கொண்டு, ஞானப் பார்வையை விரிக்கும் தரிசனம். பூர்வ மீமாம்சம் ஒன்றுதான் காலத்தில் பிந்தியது. வேதங்களின் கரும காண்டத்தை அடியொற்றிய அதன் மூலவரான ஜைமினியின் பார்வையைக் கொண்டது.

ஆக, இந்து மத ஆதார நூல்கள் குறிப்பிடும் வேதங்கள் என்பவை இந்தியச் சமயங்களின் காலத்திற்குப் பிந்தியவை என்பதை அவை குறிப்பிடும் முரண்களே நிரூபிக்கின்றன. ஆனால், வேத காலம் என்பதற்கு உலகம் படைக்கப்பட்ட காலம் என்றும், ஆகாயத்தில் பரவி உள்ள ஒலி அலைகளைத் தியான நிலையில் கேட்டு, மந்திரத் திரட்டாக ரிஷிகள் மூலம் அளிக்கப்பட்டது என்றும், வாய்மொழி, செவி வழியாகப் பரவும் ஒலி அலைகள் என்பதால் வேதம் 'சுருதி' எனப்படுவதாகவும், கேட்டு அறியப்படுவதால் வேதம் பயின்றோன் 'சுரோத்திரி' என்று அழைக்கப்படுவதாகவும், இந்த வேத விற்பன்னர்கள் வடதுருவத்தில் வாழ்ந்திருந்து, பின்னர் சிந்து நதிக் கரைக்கு வந்து வேதம் கற்பித்தனர் என்றும் வேதக் கதைகள் நிறையவே கதைக்கின்றன. இந்தக் கதைகளின் அடிப்படையில்தான் இந்திய மொழிகளின் முதல் இலக்கியமாக நான்கு வேதங்கள் குறிப்பிடப் படுகின்றன. நம்பிக்கை கொள்ள முடியாத இந்த வரலாற்றில் வேதம் அறிந்த ரிஷிகள், சிந்து நதி தீரத்திற்குக் கைபர், போலன் கணவாய் வழி வந்தார்கள் என்று வேத வரலாற்றில் குறிப்பிடுவது மட்டுமே வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றோடு ஒத்துப் போகின்றது. ஏனைய அனைத்தும் கட்டமைக்கப் பட்ட முரண் கதைகள் தான்.

இந்தியாவில் வேதங்களுக்கு முன்பிருந்த பல சமயங்களும் தங்கள் கோட்பாட்டு விளக்கங்களுக்குத் தனித்தனி நூல்களை உருவாக்கி வைத்திருந்தன. அவற்றில் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்கள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. அந்தந்தச் சமயத்தினுடைய தலைவர்களின் உபதேசத் திரட்டுகளே அந்தந்தச் சமயங்களின் வேதங்களாகப் போற்றப்படுகின்றன. தமிழ், பாலி, பிராகிருதம், மாகதி போன்ற மொழிகளுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தில் தோன்றிய மொழியான சமஸ்கிருதத்தில், 'ரிக்' உள்ளிட்ட வேதங்கள் உள்ளனவாகக் கூறுவதே வேதத்தை வரலாற்றுக்குப் பிந்திய காலத்தில் கொண்டு சேர்க்கிறது. வேத வரலாற்றில் வேதம் என்றும், ஆதி வேதம் என்றும் குறிப்புகள் உண்டு. இதில் வேதம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது. ஆதி வேதம் என்ற சொல்லே அதன் பழமையைக் குறிக்கும். அந்த ஆதிவேதம் தமிழ் மொழியில் எழுதப்பட்டது. அதாவது முற்காலத் தமிழ் எழுத்தான 'தமிழி' எழுத்துருவில் எழுதப்பட்டது. இதை வேத நிறுவனங்களே இப்படிக் கூறுகின்றன. "பழமையான நான்கு வேதங்களும் சமஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை 'தமிழி' என்ற மொழியில்தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சமஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்கக் கூறியபோது, அவர்கள் இதில் உள்ள பல சொற்கள் சமஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இதுகுறித்து மேலும் ஆராய்ந்த போது, வேதங்கள் அனைத்தும் சமஸ்கிருதம் கலந்த 'தமிழி' மொழியில் இயற்றப்பட்டுள்ளது என்று தெரியவந்தது" என்று வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி. வி. என். மூர்த்தி, சென்னையில் நடைபெற்ற "மறைமொழி அறிவியல்" என்ற கருத்தரங்கில் கூறியுள்ளார் (தினமணி, 28. 12. 2013).

இந்த நிலையில் இந்தியாவின் எழுதப்பட்ட முதல் இலக்கியமாக நான்கு வேதங்களையும் கூறுவது எத்தனைப்பிழையானது என்று அறிய முடியும். "வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டுள்ளன" என்று 'மறைமொழி அறிவியல்' கருத்தரங்கில் மேற்கூறிய வேத ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். இது, இந்தியாவின் ஏன், உலகத்தின் முதல் இலக்கியம் என்பதே தமிழ் இலக்கியம் தான் என்று சான்று பகர்கின்றது. ஆனால், எப்படியோ அவை மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் அல்லது மாற்றப்பட்டும் விட்டதால், இன்று இந்தியாவின் முதல் இலக்கியம் என்பது வேதமாகக் கூறப்படுகிறது. உண்மையில் இவர்கள் கூறும் வேதங்கள் நான்கும் சமஸ்கிருத மொழியில் உருவாகவில்லை. அவை வெறுமனே ஒலி அடிப்படையில் உருவாக்கப்பட்ட சிந்து நதி தீரத்துப் பூர்வ குடியினரின் வாய்மொழிக் கூற்றுதான். அவையும் சிந்து வெளிக் காலத்துச் சமணர்களின் வாய்மொழி மந்திரங்களே. சிந்துவெளி காலத்திலிருந்து அன்றைய காலத் தமிழர் வழிபாட்டு முறைகளில் ஆதிநாதரை (முன்னோர்களின் தலைவரை) வழிபடுவதான கூட்டுப் பாடல்களின் சொற்களும், பாடும் முறையும் கொண்டு அதையே பிற்காலங்களில் வழிமொழிந்த நாடோடிக் கும்பல்களின் ஒலி வடிவமான வழிபாட்டு முறைப் பாடல்களே நான்கு வேதங்கள். அதில் இருக்கக்கூடிய உலக உருவாக்கம் பற்றிய கருத்துக்கள் அவர்கள் சிந்துவெளிப் பூர்வ குடி மக்களின் முன்னோர் வழிபாடுகளில் செவிவழிக் கேட்ட கருத்துக்களே.

குறிப்பாகச் சொல்வதானால் அவை சிந்துவெளித் தீரத்துத் தமிழ் அந்தணர்களின் (சமணர்களின்) வழிபாட்டுப் பாடல்களின் கருத்துக்களும், சொற்களுமே. அவை இன்று திராவிட மொழிக் குடும்பச் சொற்களாக இனம் காணப்பட்டுள்ளன. ரிக் வேதத்தின் சில கருத்துகளைத் தொகுத்து 'திராவிட ரிக்' என்று வழங்கியும் வந்தனர். இவற்றைத் தவிர்த்து வேதங்களில் உள்ள பிற வழிபாட்டுப் பாடல்கள் சிந்துவெளி, ஹரப்பாவில் வாழ்ந்திருந்த நாகரிக மக்களை எதிரியாகக் கருதி 'அவர்கள் அழிந்து போகக் கடவதாக' என்று தங்கள் தலைவனிடம் வேண்டுவதான வழிபாட்டு முறைகளே யசூர், சாம, அதர்வண வேதங்கள். இந்தப் பாடல்கள் சிந்துவெளி வழிபாட்டுப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட நாடோடி இனக்குழுக்களின் வழிபாட்டுப் பாடல்கள். அவை வெறும் ஒலிப்பு முறையை மட்டுமே கொண்டவை. இவை எழுத்துருவம் பெறும் போது அன்றைக்கு நடைமுறையில் இருந்த ஒரே எழுத்துருவான 'தமிழி'யில் எழுதப் பட்டன.

எழுத்து முறை என்பது சிந்துவெளிக் காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருந்தது. சித்திர மொழியிலிருந்து பரிணாமம் பெற்றதே குறியீடுகளின் மொழி. குறிப்பால் பொருளை உணர்த்தும் முறையைத்தான் குறியீடுகள் கொண்டிருக்கின்றன. பேச்சு வழக்கு அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பாகவே இருந்திருக்கும். எப்படி இருப்பினும் சிந்துவெளி எழுத்து தான் இந்தியாவின், தமிழர்களின் முதல் எழுத்து முறை. அந்த எழுத்து முறையைத் தோற்றுவித்தவர் தான் ஆதிநாதர். அந்த மொழியின் (தமிழியின்) பேச்சு, எழுத்து வடிவங்களுக்கும், அதற்குப் பிறகு தோன்றிய அத்தனை வழக்கு மொழிகளுக்கும் 'அ' என்னும் எழுத்தே முதலாவதாக அமைந்திருப்பதைத் தற்செயல் என்று கடந்து போய்விட முடியாது.
 
இதற்குப் பிறகான காலத்தில் தமிழி வரிவடிவ மூலத்தைக் கொண்டு பிராகிருத, பாலி, மாகதி மொழிகளுக்கு எழுத்துருவாக்கம் ஏற்படுத்தப் பட்டது. 2600 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்துருவை நெறிப்படுத்தியவராகக் கௌதம புத்தர் அறியப்படுகிறார். தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான வரிவடிவத்தை நெறிமுறை படுத்தியவர் புத்தரே என்பதும், அதற்கு முன்னர் வரிவடிவம் கொண்டிருந்த தமிழி (தமிழ் பிராமி) எழுத்து முறையை முன்மாதிரியாகக் கொண்டு, புத்தர் இம்மூன்று மொழிகளுக்கும் வரிவடிவத்தை ஏற்படுத்தினார் என்பதும் புத்தரின் வரலாற்றில் இருந்து அறியப்படும் செய்திகள். இவற்றைப் பண்டிதர் அயோத்திதாசர் வலியுறுத்துகிறார். (க. அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள்). 

மேற்கூறிய மொழிகளில் சேராத ஒலிக்குறிப்புகளைக்  கொண்ட ஒலி அமைப்பினைச் செம்மைப்படுத்தும் முயற்சி புத்தர் காலத்திற்கும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. அப்படிச் செம்மைப்படுத்தப்பட்ட ஒரு மொழியைத்தான் சமஸ்கிருதம் என்றனர். அதற்கு வரி வடிவமாகப் பாலி மொழியின் வரிவடிவத்தைக் கொண்டு சமஸ்கிருதத்தை ஒரு தனி மொழியாகப் பாவித்து வந்தனர். இதற்குப் பிறகுதான் சமஸ்கிருத ஒலிக் குறிப்புகள் கொண்ட வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் பாலி வரிவடிவத்தில் எழுதப்பட்டுச் சமஸ்கிருத ஒலிக் குறிப்பின் அடையாளத்தைப் பெற்றன. சமஸ்கிருத உருவாக்கம், வளர்ச்சி அத்தனைக்கும் அடிப்படையானது தமிழ்மொழியே. தமிழும், வடமொழிகளும் அறிந்த தமிழ்ப் புலவர்களே இக் காரியத்தைச் செய்து வைத்து, சமஸ்கிருத மொழியை உயர்த்திப் பிடித்து, அது அரசாங்க மொழி ஆவதற்கும், கோயில் மொழியாவதற்கும் காரணமாயினர். இதற்கெல்லாம் எதுவுமே பாடுபடாமல், ஒரு சிறிதும் உழைக்காத பிராமணர்கள், தங்களுக்குத் தானாக வந்த இந்த வாய்ப்பை எல்லாம் சிந்தாமல், சிதறாமல் அப்படியே அள்ளிக்கொண்டு இன்று வரை கோலோச்சி வருகின்றனர். 

இந்தியச் சிந்தனை மரபு என்பதே தமிழ்ச் சிந்தனை மரபு தான். இம்மரபின் பரிணாம வளர்ச்சியில் முதல் தத்துவார்த்தக் கோட்பாட்டை (மெய்யியல்) உருவாக்கியவர் ஆதிநாதர். அந்தக் கோட்பாட்டின் அடிப்படை அறம். இந்தக் கோட்பாட்டினைப் பின்பற்றியவர்கள் மூன்று பிரிவினர்களாக நிலைபெற்றனர். சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய இம்மூன்று பிரிவினருக்கும் மூல ஊற்றாக இருப்பவர் ஆதிநாதர். சிந்துவெளி நாகரிகம் உச்சமாக நிலைபெற்று இருந்த காலத்தில் வாழ்ந்தவர் ஆதிநாதர். சமண சமயம் சிந்துவெளி காலத்தோடு தொடர்புடையது. சிந்துவெளி முத்திரையில் எருமைக் கொம்பு அணிந்த உருவம் 'பசுபதி' என்று குறிப்பிடப்படுகிறது. அது 'ரிஷபநாதர்' என்று அழைக்கப்படும் ஆதிநாதர் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். (க. நெடுஞ்செழியன், ஆசீவகமும் ஐயனார் வரலாறும்). ஆதிநாதர் சமண சமயத்தின் முதல் தீர்த்தங்கரர். சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் எருது, எருமைக் கொம்பணிந்த உருவங்கள், சுவத்திக (ஸ்வஸ்திக்) சின்னங்கள் இவையெல்லாம் சமணத்தின் தோற்றுவாயாகச் சிந்துவெளியைக் குறிக்கின்றன. இந்த ஆதிநாதரைச் சைவர்கள், சிவனாகக் (பசுபதி) கொண்டாடுகிறார்கள். ஜைனர்களும் (சமணர்களும்), ஆசீவகர்களும் தங்களின் முதல் தீர்த்தங்கரராகப் போற்றுகிறார்கள். 23 ஆம் தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரின் போதனைகளையும், கபிலரால் கருத்தியல் உருவாக்கப்பட்ட 'சாங்கியம்' என்ற சமய போதனைகளையும் அறிந்தவரான கௌதம புத்தர், தான் வாழும் காலத்தில் நிலவிய 62 சமயங்களின் கருத்துக்களையும் நன்கறிந்து உணர்ந்த பின்னர் பௌத்தத்தின் கோட்பாட்டினை மொழிந்தார். (டாக்டர் அம்பேத்கர், புத்தரும் அவரது தம்மமும்).

இப்படிப்பட்ட தமிழ்ச் சிந்தனை மரபுகளுக்கு எதிரான மரபுதான் வைதீக மரபு. ஆதிநாதர் காலத்திலிருந்து மொழியப்பட்ட அறக்கோட்பாடுகள் தான் சுருதிகளாகவும் (வேதங்கள்) சுமிருதிகளாகவும் (உபநிடதங்கள், தர்ம சாஸ்திரங்கள்) சிந்தனை வழி, தலைமுறை, தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு வந்தன. அவை திராவிட மொழிக் குடும்பத்தின் மூல ஊற்றான தமிழ் மொழியில் இருந்தன. ஆதி வேதங்கள் தமிழி எழுத்துருவில் எழுதப்பட்டதாக வேத ஆய்வு நிறுவனங்களே கூறுகின்றன. ரிக் வேதத்தைத் 'திராவிட ரிக்' என்று சொல்வதும் வழக்கத்தில் உள்ளது. இங்குக் கூறப்பட்ட சுருதி, சுமிருதிகளுக்கு உண்மையான பாத்தியதை உடையவர்களான ஜைன, பௌத்த, ஆசீவக, சைவ சமயத்தினர், தங்கள் பூர்வீகச் சொத்துக்கான தாயாதிச் சண்டையில் ஈடுபட்டுப் பிரிந்து போய்விட, தமிழ்ச் சிந்தனை மரபின் வைரியான வைதீகம், சமண, பௌத்த, ஆசீவகச் சமயங்களை அழித்து அவற்றின் தத்துவங்களைத் தனதாக்கிக் கொண்டது. 

எவ்வுயிரையும் மதித்து, பிறருக்காக வாழும் அந்தணர்கள் சமூகத்தில் பெற்றிருந்த மதிப்பும், செல்வாக்கும் தான் சமயச் சண்டைகளுக்கு அடிப்படைக் காரணம் ஆயிற்று. இது அதிகாரப் பற்றை நோக்கியே எப்போதும் செயல்படும் வைதிகத்தின் சிந்தனை வளர்ச்சியாக உருப்பெற்று, சமணம், பௌத்தம், ஆசீவகம் போன்ற சமயங்கள் செல்வாக்கை இழந்திருந்த காலத்தில் அவற்றின் உண்மையான அந்தணர்களாகப் போற்றப்பட்ட இடத்தில் வைதிகப் பிராமணியம் சிறிது சிறிதாக உள் நுழைந்தது. இதற்கு இடம் கொடுத்ததும் சமணம், பௌத்தம், ஆசீவகம் ஆகிய சமயங்கள் தான். இயற்கை, பொருள், உயிர் இவற்றை மட்டுமே முழுமையாக நம்பிய இச்சமயங்களின் மூலவர்களான மகாவீரர், புத்தர், மற்கலி கோசாலர் ஆகியோரின் காலத்திற்குப் பின்பு இவர்களின் சீடர்களாகவும்,  வழித் தோன்றல்களாகவும் வைதீகப் பிராமணர்கள் தங்களை வரித்துக்கொண்டனர். சமண, பௌத்த, சாங்கிய, ஆசீவகக் கோட்பாடுகளை உட்செரித்துக் கள்ளுண்ணாமை, ஊன் உண்ணாமை போன்றவற்றைச் சிரமப்பட்டுக் கடைப்பிடித்து, இச்சமயங்களின் உயர்ந்த கோட்பாடுகளை வைதீகத் தத்துவத்தில் ஏற்றி, அதையே வேதமாகவும், கீதையாகவும் வேறு வேறு மொழிகளில் எழுதியும் வைத்து, அவை அரச தர்மத்துக்கும் மேலான தர்மம் என்றும், அவற்றின் விளக்கங்களே மனுதர்மம், சாத்திரம் என்றும் கூறி, அவற்றைக் கடவுள் மொழிந்ததாகக் கூறி, மன்னர்களையும் மயங்க வைத்த மதகுருக்களாகத் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொண்டனர். அந்தணர், பார்ப்பனர் என்ற அறிவார்ந்த சமயத் தலைவர்களின் பட்டங்களை ஆரிய வைதிகப் பிராமணர்கள் தங்கள் பட்டங்களாகக் கூறிக் கொண்டனர். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி. மன்னனிடம் பரிசில் பெற வரும் தமிழ்ப் புலவர்களும், இசைப் பாணர்களும் மத குருக்களையும் போற்றிப் பாடினால் தான் பிழைக்க முடியும் என்ற நிலையில் ஆரியப் பண்பாடும், ஆரிய மொழியும் தமிழோடு கலந்து ஒட்டி உறவாடி ஆரியமே உயர்ந்தது என்ற மனோபாவ அரசியலே இந்தியாவை ஆட்கொண்டது. இன்றும் ஆண்டு வருகிறது.

மேற்கூறிய காரணங்களால் ஆசீவகம், 14ஆம் நூற்றாண்டில் முற்றாகச் சிதைந்து போனது. சமணம், மகாவீரர் காலத்திலேயே (கிமு 600) இந்திரபூதி கவுதமர் என்னும் பிராமணரைத் தலைமைச் சீடராக ஏற்று பிராமணிய மயம் ஆகிப்போனது. பிராமணர் அல்லாத சமணர்கள் பிராமணச் சமணர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டுக் கழுவில் ஏற்றப்பட்டனர். அதைக் கொண்டாடும் திருவிழாக்கள் இன்றும் மதுரை உட்படப் பல்வேறு கோயில் நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன. பௌத்தமும் பிராமணிய உள்நுழைவால் பலவாறாகப் பிளவுபட்டு (18 என்கிறார் டி. டி. கோசாம்பி), வலிமை இழந்து, பிறந்த நாட்டில் சுருங்கிப் போனது. இந்தியாவின் மரபுவழிச் சமயங்கள் இவ்வாறு வலிமை இழந்த நிலையில் அவற்றின் மெய்யியல் கோட்பாடுகள் மெல்ல, மெல்ல வைதிகத்திற்குச் சொந்தமாகிப் போயின. அவற்றைத்தான் வேதங்களின் இறுதிப் பகுதியான வேதாந்தத்தில் நாஸ்திக தரிசனங்கள் என்ற பெயரில் வைதிகம் தனதாக்கிக் கொண்டிருக்கிறது. பிற்காலங்களில் (கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில்) அவற்றைத் தொகுக்கும் போது, அவை வைதீக மரபு கலந்த சுருதி, சுமிருதிகளாக மாற்றம் பெற்றன. நான்கு வேதங்களும் (ஆதிவேதம்) தொகுக்கப்பட்ட இடமாகத் தென்னாட்டை அதாவது தமிழ்நாட்டை டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார் (பகவான் புத்தர்). 

பிற சமயங்கள் உருவான நிலையில், அதற்கு எதிரான தன்மை உடையோர் ஒன்று கூடித் தங்கள் நெறியாக (சமயமாக) ஒன்றைக் கட்டமைத்துப் பின்னர் அதற்கென்று கோட்பாடுகளை உருவாக்கி (மனுதர்மம் முதலான சாத்திரங்கள்) தங்கள் தனித்தன்மையை நிறுவினர். எனவே இந்தியாவின் பிற சமயங்களைப் போன்று ஒரு சமயம் அல்லாத பிரிவினர் ஒன்று கூடித் தங்கள் இருப்பைக் காட்ட முற்பட்ட ஒரு வைதீகக் கூட்டமே பின்னாட்களில் ஆறு சமயங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் சமயமாக அவர்களாலேயே அறிவிக்கப்பட்டது. மேலும், அறம் என்பதே என்னவென்று அறியாத கோட்பாடுகளும், மானுட இனத்தின் அனைத்து உயிர்களின் மேன்மையைப் போற்றாத, சமத்துவம் அல்லாத கோட்பாடுகளும் கொண்டதாக வெளிப்படையாகக் கூறிக் கொண்டு வஞ்சகத்தால் அதிகாரத்தை நகர்த்திக் கொண்டு வரும் சமயமாகவும் அது அவர்களாலேயே பெருமை பொங்கக் குறிப்பிடப்பட்டு வருகிறது. அறம் முதலான கருத்துகள் மேலோங்கிய காலத்தில், எந்தவிதமான மேலோங்கிய கருத்தையும் தங்களுடையதாக மொழிந்து, "எதுவானாலும் அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது" என்கிற வாசகத்தோடு வைதிகம் பாமர மக்களை வசப்படுத்தியது. சமயம் என்கிற ஓர் உண்மையான உருவம் இல்லாத இவ்வைதிகம் சமண, பௌத்த, ஆசீவகக் கோட்பாடுகளை உட்செரித்து, ஒரு மதமாக நிலைத்திருக்கப் பழி பாவத்தின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும், வாழுமிடமாகவும்  வளர்ச்சிநிலை பெற்றே வந்திருக்கிறது.

இப்படி, இந்தியச் சிந்தனை மரபாக வளர்நிலை பெற்ற தமிழ்ச் சிந்தனை மரபுகள், வெளியிலிருந்து உள்நுழைந்த வைதிக (ஆரிய) மரபுகளாகத் திரிக்கப்பட்டுத் தற்போதைய நான்கு வேதங்களாக, உபநிடதங்களாக, தர்ம சாஸ்திரங்களாக வேறு, வேறு மொழிகளில் (பாலி, பிராகிருதம், மாகதி) உருவாக்கப்பட்டன. பிற்காலத்தில் இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மறை(வு)மொழியில் (சமஸ்கிருதம்) இவையெல்லாம் தொகுக்கப்பட்டும், எழுதப்பட்டும் ஆவணப்படுத்தப்பட்டன. அதற்கு முன்பிருந்த மொழித் தடயங்கள் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டன. சில, அவற்றிற்குப் பாத்தியதை (உரிமை) உள்ளவர்களாலேயே கைவிடப்பட்டன. (எடுத்துக்காட்டு - தமிழ் ஓலைச்சுவடிகள். உ. வே. சா. காலம் வரை இதுதான் நடந்தது). கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் எல்லாமே வைதிக மரபாகிவிட்டன. இந்தியச் சிந்தனை மரபு என்பது வைதிகத்தின் பெருமரபாக இன்று நிலைபெற்று நிற்கிறது. உயரிய மெய்யியல் (தத்துவக்) கோட்பாட்டினை உலகிற்கு அளித்த தமிழர்கள், போகியிலும், ஆடிப்பெருக்கு வெள்ளத்திலும் தமிழின் செல்வங்களான ஓலைச்சுவடிகளைக் காவு கொடுத்து விட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மூலமாக வைதீகம் குறிப்பிடும் 'பிரம்மம்' என்பதைக் கூட புத்தரின் உருவில் தான் அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது. அதற்காக விஷ்ணுவின் அவதாரத்தையே தாரைவார்த்துப் பௌத்தத்தை விழுங்கியது வைதிகம். அதிலிருந்து பவுத்தத்தை 'நவயானம்' வழி மீட்டெடுத்த அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் மதக் காவலராகக் கபளீகரம் செய்யும் முயற்சியும் தற்போது நடைபெற்று வருகிறது. "மனித நேயத்துக்கு முரணான, சமத்துவம் இல்லாத கேடுகெட்ட இந்து மதத்தை விட்டொழிப்போம்" என்ற உறுதி மொழியோடு பௌத்தத்தைத் தழுவிக்கொண்ட அண்ணல் அம்பேத்கரின் பின்னால் அணிவகுப்போர் 'ஜெய் ஸ்ரீராம்' என்று முழங்கவும் நினைப்பார்களா?

---

நன்றி: புதிய கோடாங்கி பிப்ரவரி 2021