Sunday, September 26, 2021

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

-- முனைவர் ஒளவை அருள்


அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையானதானதாக அமையவில்லை.

மின்னணு ஊடகம் வந்து அச்சு ஊடகத்தின் பயன்பாட்டைக் குறைத்தது. பெரும்பாலான செய்தித்தாள்களும், பருவ இதழ்களும் தொடர்ந்து நடைபோட முடியாமல் சோர்வடைந்துள்ளன . சில நிறுவனங்கள் அச்சிடும் பணியையே ஏறத்தாழ நிறுத்திவிட்டன. மக்களிடத்தில், வாசிப்புப் பழக்கம் குறைந்த அளவில்தான் இருந்து வருகிறது என்று பலர் கண்டுள்ளனர்.

வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதற்கு சில காரணங்கள் உள்ளன. பெற்றோர்களுக்கு வீட்டில் புத்தகங்களை எடுத்துப் படிக்கும் பழக்கம் இல்லாததால், பிள்ளைகளும் அப்படியே அமைந்து விடுகின்றனர். இணையவழித் தோற்றங்களும் வாசிப்புப் பழக்கத்தை வற்றச் செய்துவிட்டன.

தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றே போதும் என்று பெரும்பான்மையானோர் கருதுகின்றனர். ஆனால், செய்தித்தாள்களுக்கும் இதழ்களுக்கும் மாற்றாக தொலைக்காட்சி அமைய முடியாது என்பதே உண்மை.

kids reading.jpg

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் என்பவர் கூறினார். வாசிப்பு ஒரு முழுமையான மனிதனை உருவாக்குகிறது” என்பது பிரான்சிஸ் பேகனின் கருத்தாகும். அனைத்துத் தகவல்களும் கிடைக்கும் ஒரே இடம் நூலகம். நூலகம் இவ்வுலகத்தை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும். 

‘புத்தகங்கள், வாழ்க்கை குறித்த நம் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றி, வெற்றி எனும் நெடிய பாதையை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. காலம் எனும் பெருங்கடலில் நம்மைக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்குதான் புத்தகங்கள்’ என்றார் எட்வின் பெர்சி . ‘பிறா் தன்னை ஏமாற்றும்போது, புத்திசாலி மனிதன் புத்தகங்களின் துணையை நாடுகிறான்’ என்பது ஆண்ட்ரூ லாங்கின் கூற்றாகும்.

நமக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு அளிப்பதற்கும், நம் பொழுதை நல்ல முறையில் கழிப்பதற்கும் புத்தகங்கள் உதவுகின்றன. நூல்கள் வாயிலாக ஒருவர் பெறும் அறிவு அவரை பிறருடன் திறம்பட உரையாடச் செய்வதுடன், சமுதாயத்தில் அவருடைய நிலையை உயர்த்தவும் செய்கிறது. வாசிப்பு நம் அறிவுக்கு வளமூட்டுகிறது என்பதை வெளிப்படையாக நாம் காணலாம்.

எனவே முனைப்புடன் ஆர்வம் ததும்பப் படிப்பது மிகவும் அவசியமானதாகும். இயல்பான ஒரு பேச்சாளராக, உரையாடும் திறமை கொண்டவராக நாம் உருவாக வேண்டும். ஒருவர் தீவிர வாசிப்புப் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். பேருந்துகளிலும், தொடர்வண்டியிலும் புத்தகங்களைப் படிப்பது கண்களுக்கு கேடு விளைவிக்கும்.

சில நாட்கள், நமக்கு சோர்வுடைய நாளாகத் தோன்றும். நல்ல புத்தகங்கள், இந்த மனநிலையை மாற்ற உதவும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதைக் காட்டிலும், ஒரு புத்தகத்தைப் படிப்பதன் மூலம் நம் மனம் புத்துணர்வு அடையும். மேலும், நாம் படிப்பது சிறந்த புத்தகமாக அமையுமானால், அதனை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். தற்போது, அனைத்து வயதினருக்கும் ஏற்ற நூல்கள் ஏராளமாக உள்ளன.

மனிதர்களுக்கு மன அழுத்தம் கூடியுள்ள இன்றைய காலகட்டத்தில், புத்தக வாசிப்பு அவர்கள் மனத்திற்கு ஆறுதல் அளிக்கும். இங்கிலாந்தில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி, நாளொன்றுக்கு ஆறு நிமிடம் படித்தால், நம் மன அழுத்தம் 68 விழுக்காடு குறையும் என்று தெரியவந்துள்ளது.

புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தால், நம் மூளை சுறுசுறுப்புடன் செயல்படுவதுடன், நினைவாற்றல் திறனும் அதிகரிக்கும். இதனால் மறதி நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குறளில் இலங்கு நூல், நுண்ணிய நூல், உரைசான்ற நூல் என்று படிக்கும் நூல்களைப் பாராட்டிக் குறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து புதிய நூல்களை ஆர்வத்துடன் நாம் படிப்பதனால் நம் தனிமை, வெறுமை நீங்கி விடுகின்றன.

உலகமே நிலைகுலைந்து அழிந்த நேரத்தில் தன் தனிமையைப் போக்குவதற்காக திருவாசகத்தை சிவபெருமான் எடுத்துக்கொண்டார் என்று சுந்தரனார் கூறுகிறார்.
கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்
உடையான் உன் திருவாசகத்தில் ஒரு பிரதி கருதியதே (மனோன்மணீயம்)

‘எனக்குத் தனிமை என்பதே தெரியாது; ஏனென்றால் என்னைச் சுற்றிலும் நிலையான நண்பர்கள் புத்தக வடிவத்தில் என்னோடு எப்போதும் உரையாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று இராபர்ட் சதே பாடியுள்ளார். பண்புள்ள நண்பனிடத்தில் பழகுவது ஒரு நூலைப் படிப்பது போல என்பது திருக்கு.

தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் கைப்பிடித்து ஓா் இளைஞர் மாடிக்கு அழைத்துச்செல்லும்போது படிக்கட்டுகளைக் காட்டி ‘படி’ ‘படி’ என்றானாம். உ.வே.சா. சிரித்துக்கொண்டே, ‘ஆம், படி, படி... படித்தால்தான் மேலே செல்லலாம்’ என்றாராம்.

தன் வரலாற்று நூல்களைப் படிப்பது மிகவும் பயனளிக்கும். அவை ஒருவரின் வாழ்வில் புதிய இலக்குகளை உருவாக்கும். அவற்றைப் படிப்பதன் மூலம், வாழ்ந்து மறைந்த அறிஞர்களைப் பற்றி பல அரிய செய்திகளை அறிந்துகொள்ளலாம்.

அனைவராலும் அயல்நாட்டுப் பயணம் மேற்கொள்ள இயலாது. ஒரு பயண நூல், பல நாடுகளைப் பற்றிய அரிய பல தகவல்களை நமக்கு அளிக்கும். பல காட்சிகளை நம் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தும்.

வேண்டாத நடைமுறைகள் நிறைந்துள்ள இன்றைய நிலையில், புத்தகங்களைப் படிக்கும் பழக்கம் ஒன்றே நம் வாழ்வை வளம்பெறச் செய்யும். வாசிப்புப் பழக்கம் வாழ்க்கை குறித்த நம்பிக்கையளிக்கும் சிந்தனையை உருவாக்கும். பெருந்தலைவர்களின் வாழ்க்கை நம்முள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.

வாசிப்புப் பழக்கம் நம் வாழ்க்கையை மாற்றி நமக்கு புதுவித மகிழ்ச்சியளிக்கும். சிறந்த வாழ்க்கை முறை அமைய, புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் இன்றியமையாததாகும்.

வாசிப்பு என்பது நாம் நாளும் செய்யும் உடற்பயிற்சி போன்றது மட்டும் இல்லை. நம்மை சிறப்பான வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு தெளிவான பழக்கமாகும். வாசிப்புப் பழக்கம் இல்லாததால், நாம் எவற்றையெல்லாம் இழந்தோம் என்று பலர் அறிவதில்லை.

நூல்களின் விலை உயர்வால், வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது என்று சிலர் கூறலாம். புத்தகங்களுக்கான தேவை குறைவதால், சில புத்தகங்களின் விலை உயர்ந்துள்ளது என்று மாற்றிச் சொல்லவும் இடமுண்டு.

எனினும், சில நல்ல புத்தகங்கள், உரிய விலையில் கிடைக்கின்றன. நூலகங்களையும் நாம் நாடலாம். பிறர் படித்த நல்ல புத்தகங்களையும் குறைந்த விலையில் பெறலாம் . அயல்நாட்டு நூல்களின் இந்தியப் பதிப்பு குறைவான விலையில் விற்கப்படுகின்றன.எனினும், சிறிய நகரங்களிலும், சிற்றூர்களிலும் உள்ள பள்ளி நூலகங்கள், தகுதியான நூலகர்களின்றி பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. இதனால், மாணவர்களுக்கு, வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நூலகத்தில் திரட்ட வாய்ப்பில்லாமல் போகிறது.

‘கல்வியறிவில் நாம் மேலும் உயர்ந்ததாக வேண்டும். வெற்றிகரமான எழுத்தறிவுத் திட்டங்களால், மூத்த வயதினரிடையே எழுத்தறிவு நம் நாட்டில் அதிகரித்துள்ளது. ஆயினும், சமுதாயத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பதற்கான தேவை பெரிதாக உயர்ந்துள்ளது.

மேலும், ஆக்கப்பூர்வமான சமுதாய மாற்றத்திற்கான நம் பங்களிப்பையும் அதிகரித்துள்ளது’ என்று தேசியக் கல்விக் கொள்கை குறிப்பிட்டுள்ளது.

ஒரு தலைமுறையில் முதன்முதலாகப் படிப்பவருக்குப் பொதுவாக படிக்கும் பழக்கம் குறைவாக இருக்கும். சமூகக் கல்வித் திட்டங்களுக்கான வெற்றி, வாசிப்புப் பழக்கத்தையே சார்ந்துள்ளது. வாசிப்புப் பழக்கம் குறைந்தால் மனிதர்களின் வாழ்க்கைத் தரமும் குறையும்.

தொழில் நுட்ப வளர்ச்சியால், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. மின்னணு புத்தகங்களும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பெற்றோர்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருந்து, கல்வி முறை நூலகம் சார்ந்ததாக இருந்தால் மட்டுமே இன்றைய தலைமுறையினரிடம் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க முடியும். அப்படிச் செய்வதுதான் சமுதாயத்திற்கான முன்னேற்றமாக மலரும்.

நான் தாய்வான் நாட்டிற்குச் சென்றிருந்த பொழுது, அங்கிருந்த நூலகத்திற்குச் சென்றேன். அப்போது நேரம் இரவு பதினொரு மணி. அந்நேரத்திலும் பல இளைஞர்கள் ஆர்வமுடன் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்ததைக் கண்டு நான் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

என்னை அழைத்துச் சென்ற நண்பர் சொன்னாா், ‘உலகத்திலேயே இந்த நூலகம்தான் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும்’. நாட்டின் வளத்திற்கு பொருளாதாரம் மட்டுமன்று, நூலாதாரமும் இன்றியமையாதது.


கட்டுரையாளர்:
முனைவர் ஒளவை அருள்
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழக அரசு. 

நன்றி: தினமணி -27.9.2021 

--------------

Saturday, September 25, 2021

ஆதி இந்தியர்கள் - வாசிப்பும் விமர்சனமும்

--முனைவர்.க.சுபாஷிணி




நூல்: ஆதி இந்தியர்கள் 
நூலாசிரியர்: டோனி ஜோசஃப்
வாசிப்பும் விமர்சனமும்: முனைவர்.க.சுபாஷிணி


பொதுவாகவே நான் வாசிக்கின்ற நூல்களில் வரலாற்றிற்கும் சமூகத்திற்கும் மிக முக்கியமானதாக நான் கருதுகின்ற நூல்களைப் பற்றி சிறு விமர்சனமாக அந்த நூல் கூறும் செய்திகளை எழுதி வைத்து, நூல் எவ்வகையில் எனது சிந்தனையைத் தாக்கியிருக்கின்றது என்ற கருத்தையும் இணைத்து அதன் வெளிப்பாடாக தோன்றுகின்ற கருத்துக்களையும் பதிவது வழக்கம். டோனி ஜோசஃப் எழுதி ஆங்கிலத்தில் வெளிவந்த நூல், தமிழ் மொழிபெயர்ப்பாக 'ஆதி இந்தியர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்தது. சென்ற ஆண்டு வாசித்து முடித்த பின்னர் உடனே நூல் சொல்லும் சில தகவல்களைக் குறிப்பாக ஒரு விமர்சனம் எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். காலம் தள்ளிப் போய்விட்டது. அதனால் என்ன?   இப்போது  சற்று நேரம் ஒதுக்கி எழுதலாம் என்று என்று நினைக்கிறேன்.

இன்று தமிழகத்தில் நடைபெறுகின்ற அகழாய்வுகள் - கீழடி, ஆதிச்சநல்லூர்-சிவகளை, கொற்கை, பொற்பனைக்கோட்டை, கொடுமணல் என மிகச் சிறப்பாகப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கின்ற பலப்பல சான்றுகள் தமிழ்நாட்டின் மனிதகுல நாகரிகத்தை மேன்மேலும் விரிவாகவும் ஆழமாகவும் பார்க்கும் பார்வையை நமக்கு இதனால் சாத்தியப்படுத்துகின்றன. நூலுக்குள் செல்வதற்குள் நம்மைச் சுற்றி அடிக்கடி எழுப்பப்படுகின்ற சில கேள்விகளைக் கவனிப்போமே.

- இந்தியாவில் நீண்டகாலமாக வாழ்ந்த மனிதர்கள் யார்?
- குறிப்பாக தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் இங்கேயே தோன்றியவர்களா? அல்லது வேறு நிலப்பகுதிகளிலிருந்து வந்து குடியேறியவர்களா? 
- உலகின் மூத்த குடி எது? 
என்பது போன்ற பலப்பல கேள்விகள் மீண்டும் மீண்டும் எழுந்து நம் அறிவையும் கவனத்தையும் தாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த மேற்குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்க முற்படும் போது மனிதகுலத்தைப் பற்றி அறிவியல் சான்றுகள் கூறும் செய்திகளைச் சற்றேனும் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

இன்று மனிதர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் நாம் அனைவரும் ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை இனம். அது ஜப்பானியராக இருக்கட்டும், ஜெர்மானியராக இருக்கட்டும், தமிழராக இருக்கட்டும், செவ்விந்தியராக இருக்கட்டும், ஆஃப்கானிஸ்தான்காரர், நியூஸிலாந்து, அமெரிக்கர் என யாராயினும்.. அவர்கள் இந்த ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை இனம் தான். 

இந்த இனம் மட்டும்தான் மனித இனமா என்றால்...  இல்லை என்கிறது உலக அறிவியல், அகழாய்வு, மரபணுவியல் ஆய்வுகள். வேறு என்னென்ன இனங்கள் இருந்தன எனத் தேடி ஆராய்ந்து பார்க்கும் போது மேலும் சில மனித இனங்கள்  இந்தப் பூமியில் வாழ்ந்து அழிந்து போன செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக Homo erectus, Homo floresiensis, Homo habilis, Homo heidelbergensis, Homo neanderthalensis போன்றவை இவற்றுள் அடங்கும்.  ஜெர்மனியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில்  Homo steinheimensis என்ற ஒரு வகை இனத்தையும் ஆய்வாளர்கள் தொல் அகழாய்வில் கண்டு பிடித்தனர். ஆனால் இவ்வகை அனைத்துமே முற்றிலும் அழிந்து விட்டன. 

வாழ்க்கை என்பது, அது தாவரமாகட்டும், நுண்கிருமியாகட்டும், மிருகங்களாகட்டும்... அதன் பரிணாம வளர்ச்சியில் வந்த நம் மனிதகுலமாகட்டும்... எல்லோருக்குமே வாழ்க்கை ஒரு போராட்டம் தான்! 

இந்த மனிதகுல வாழ்க்கை போராட்டத்தில் எஞ்சி நிற்பது ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மட்டுமே.   ஆகவே ஆய்வாளர்கள் இந்த மனித இனமாகிய நம்மை நவீன மனிதர்கள் என்றும் அடையாளப்படுத்துகின்றனர் (Modern Human). 

இந்த நவீன மனிதர்கள் இந்த உலகில் தோன்றிய காலமாக 160,000லிருந்து 90,000  ஆண்டுகள் காலகட்டம் என்றும் அவர்கள் தோன்றிய நிலப்பகுதி ஆப்பிரிக்கா என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த அறிமுகத்துடன் நூல் வாசிப்பிற்குள் செல்வோமே..!

--- 2 --- 

நூலின் பார்வை முழுமையாக இன்றைய நில எல்லை அடிப்படையிலான இந்திய தொல் வரலாற்றில் நவீன மனிதர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? எப்படி நிலை பெற்றார்கள் என்ற செய்தியைக் கூறுகிறது.

நான்கு அத்தியாயங்கள் நூலில் உள்ளன. அவை 1) முதல் இந்தியர்கள் 2) முதல் உழவர்கள் 3) முதல் நகரவாசிகள் அதாவது ஹரப்பர்கள் 4) இறுதியாகக் குடியேறியவர்கள்-ஆரியர்கள் என்ற நான்கு மைய விசயங்களை ஆராய்கின்றன. இதற்குத் துணையாக இந்திய தொல் வரலாற்றில் நவீன மனிதர்களைப் பற்றிய ஒரு சுருக்கமான காலவரிசை விளக்கமும், முடிவுரையாக எப்படிச் சரியான கோணத்தில் வரலாற்றைப் பார்ப்பது என்ற வழிகாட்டுதலும், பின்னிணைப்பாக கங்கர்-ஹக்ரா பள்ளத்தாக்குச் செய்திகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.


நூலின் தொடக்கப்பகுதிகள் கீழ்க்காணும் செய்திகளை விவரிக்கின்றன.

ஆப்பிரிக்காவிற்கு வெளியே ஹோமோ சேப்பியன் சேப்பியன் என்ற நவீன மனிதன் வெளியே மேற்கொண்ட வெற்றிகரமான மனித இடப்பெயர்ச்சி இன்றைக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இவர்களே இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற மனிதர்கள். ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்தாலும் இன்று பல்வேறு இனங்களாக வளர்ச்சி கண்டிருக்கிறது இந்த ஹோமோ சேப்பியன் சேப்பியன் மனித குலம்.

அப்படி வெளியேறியவர்களில் இன்றைக்கு ஏறக்குறைய 65 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் அவர்களில் சிலர் இன்றைய இந்தியாவை வந்தடைந்தனர். இவர்கள் ஏற்கனவே இருந்த ஏனைய ஹோமோ வகை மனிதர்களை எதிர் கொண்டிருந்தாலும் அந்த மனித குலம் அழிந்து ஹோமோ சேப்பியன்ஸ்   சேப்பியன்ஸ்  வகை மனிதகுலம் மட்டுமே இன்று நிலைபெற்றிருக்கிறது.

ஏறக்குறைய அதே காலகட்டத்தில் அதாவது 60 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியவர்கள் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல்வேறு பகுதிகளில் நகரத் தொடங்கி வாழத் தொடங்கினர். ஏறக்குறைய 40 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த ஹோமோ நியாண்டர்தால் வகை மனிதகுலம் ஹோமோ சேப்பியன் தாக்கத்தால் வலுவிழந்து பூண்டோடு அழிந்தார்கள்.

ஏறக்குறைய 40 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் இந்தியாவிற்குக் குடிபெயர்ந்த நவீன மனிதர்கள் முதல் இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். நுண்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தொடங்கி படிப்படியாக மத்திய மற்றும் கிழக்குப் பகுதி இந்தியாவில் மிக வேகமாக மக்கள் தொகை பெருக்கத்தை உருவாக்கினர். 

கிமு 5500 லிருந்து 2600 வரையிலான காலகட்டத்தை முந்தைய ஹரப்பா காலகட்டம் என்றும், 
கிமு 2600 லிருந்து 1900 வரையிலான காலகட்டத்தை முதிர் ஹரப்பா காலகட்டம் என்றும் 
வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆப்பிரிக்காவிலிருந்து சீனாவுக்கு இடம்பெயர்ந்தவர்கள் பின்னர் அங்கேயே தங்கி மக்கள் தொகை  அதிகரித்ததால் கிமு 2000 காலகட்டத்தில்  தொடர்ந்து இரண்டு முறை மத்தியத்தரைக்கடல் பகுதிக்கும் சிந்து சமவெளிப்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் பெரும் எண்ணிக்கையில் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள். 

இதே காலகட்டத்தில் அதாவது கிமு 2000 லிருந்து கிமு1000 காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளைச் சேர்ந்த மேய்ப்பாளர்கள் பலமுறை தெற்காசியப் பகுதிகளுக்கு வந்தடைந்தனர். 17.6.2017இல் ‘தி இந்து’ நாளிதழில் வெளிவந்த 'How Genetics is Settling the Aryan Migration Debate'   என்ற தலைப்பிலான நூலாசிரியரின் கட்டுரை  ‘தங்களை ஆரியர்கள் என்று அழைத்துக் கொண்ட இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசிய மக்கள் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்தனர் என்ற கோட்பாட்டிற்கு டிஎன்ஏ சான்றுகள் எப்படி ஆதரவளிக்கின்றன என்பதை விளக்கியிருப்பதையும் இவ்வாய்வு  2018ம் ஆண்டு மார்ச் மாதத்தில் உலகெங்குமுள்ள 92  அறிவியலறிஞர்கள்  இணைந்து எழுதி வெளியிட்ட  'Genomic Formation of South and Central Asia'  எனும் ஆய்வறிக்கை உறுதி செய்திருப்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

கிமு1900 லிருந்து 1300 வரை பிந்தைய ஹரப்பா காலகட்டம் என அழைக்கப்படுகின்றது. நீண்டகால வறட்சி மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரக் காரணமானது; ஹரப்பா நாகரிகம் மறைவிற்கு இதுவும் ஒரு காரணமானது.

மேற்கூறப்பட்டுள்ள தகவல்களை நூலாசிரியர் பட்டியலாக்கி இன்னும் விரிவாக அறிமுகப் பகுதியில் வழங்குகிறார். இது ஆப்பிரிக்காவிலிருந்து நவீன மனிதகுலம் வெளியேறி இடம் பெயர்ந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்த பல்வேறு இனங்களாக பரிணாம வளர்ச்சி பெற்ற நிகழ்வுகளை வாசிப்போர் புரிந்து கொள்ள எளிமையாக அமைகிறது.

இடம்பெயர்ந்து கொண்டே இருப்பது மனித குலத்தின் இயல்பு. அதன் வெளிப்பாடாகத்தானோ என்னவோ... இன்றும் கூட  நாம் ஓரிடத்தில் கல் போலக் கிடக்காமல் மற்றோரிடத்திற்குப் பயணம் சென்று கொண்டேயிருக்கின்றோம்.

--- 3 --- 

பொதுவாகவே   மனித குலம் (ஹோமோ) என்று நாம் கூறும் போது நமது சிந்தனையில் தோன்றுவது உருவத்தால் நம்மை ஒத்த, ஆனால் இன்றைக்குப் பன்னெடுங் காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த நம் மூதாதைய தொல் மனிதர்கள் என்ற எண்ணம்தான். ஆனால் இது உண்மை அல்ல. இந்தப் பூமியில் வெவ்வேறு மனித குலங்கள் வாழ்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது எஞ்சியிருப்பது நவீன மனிதர்கள் என நாம் கூறும் ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ் என்ற வகை மனிதர்கள் தான்.

நமது மூதாதையர்கள் இந்த உலகில் தோன்றி நகர்ந்து இனப்பெருக்கம் செய்து ஏனைய மனித குலத்தை அழித்து ஒழித்து வெற்றிகரமாக இந்த இனத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். இந்த நவீன மனிதர்களுக்கு முன்னரே வாழ்ந்தவர்களைப் பற்றியும் சில தகவல்களை இந்த நூல் கூறுகிறது.

உதாரணமாக ஹோமோ ஹேபிலிஸ், ஹோமோ எரெக்டஸ், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் போன்ற மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்து முற்றிலுமாக அழிந்து விட்டனர். இவர்களுள்  ஹோமோ எரெக்டஸ் வகையினர் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியப் பகுதிகளில் வாழ்ந்த தொல் மனித இனம். ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் வகை மனிதர்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் மத்திய ஆசியாவிலும் வாழ்ந்தவர்கள். இப்படி மேலும் சில வகைகள் உண்டு. மேலும் வெவ்வேறு வகை மனித இனங்கள் வாழ்ந்ததற்கான தடையங்களும் அவ்வப்போது தொல்லியல் அகழாய்வுகளில் நமக்குத் தெரிய வருகின்றன.

கடந்த நூறு ஆண்டுகளில் படிப்படியாக மரபணுவியல் ஆய்வு என்பது பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது.  கணினித் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்த ஆய்வுகளுக்குத் துணை நிற்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில் கடந்த 30 ஆண்டுகளில் விரிவான ஆய்வுகள் உலகமெங்கிலும் தொல் மனிதர்கள் தொடர்பாக நடத்தப்பட்டுள்ளன. ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மனிதரான நமது மூதாதையர்கள் கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய ஆப்பிரிக்கப் பகுதியில் வாழ்ந்து, இன்றைக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் இடம்பெயர்ந்து வெளியேறி இனப்பெருக்கத்தின் வழியாக இன்றைய உலக மாந்தர்களை உருவாக்கியிருக்கின்றார்கள்.


நியாண்டர்தால் மனிதர்கள் ஐரோப்பாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்திருந்தார்கள். அவர்களது எச்சங்கள் இன்று ஐரோப்பாவின் ஜெர்மனி போன்ற பல நாடுகளில் குகைகள் உள்ள பகுதிகளில் ஏராளமாகக் கிடைக்கின்றன. இந்த நியாண்டர்தால் வகை மனிதர்களுடன் நமது மூதாதையர்களான ஹோமோ சேப்பியன் சேப்பியன் வகை மனித குலம் புணர்ச்சிக் கலப்பில் வெற்றி அடைந்திருக்காது என்ற எண்ணம் நீண்ட காலம் இருந்தது. ஆனால் இந்த எண்ணம் 2010ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வறிக்கைகள் வழி மாற்றம் கண்டது.  இன்றைய நவீன மனிதர்கள் சிலரிடம் இருக்கும் மரபணுக்களில் நியாண்டர்தால் மரபணுக்கள் உள்ளன என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தின என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

ஆப்பிரிக்காவிலிருந்து இடம்பெயர்ந்த இந்த ஹோமோ சேப்பியன்ஸ்  வகை மனிதர்கள், அங்கிருந்து இன்றைய கிழக்காசியா பகுதி வரை வந்து பிறகு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்ல எடுத்துக்கொண்ட காலம் 5000 ஆண்டுகள். இந்தக் காலகட்டத்திலும் பல மரபணு திரிபுகள் ஏற்பட்டிருக்கின்றன.

3,85,000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய தமிழகத்தின் அத்திரம்பாக்கம் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ’பண்டைய மனிதர்களின்’ (ஹோமோ சேப்பியன்கள் அல்ல) கற்கருவிகள் அவர்கள் கற்கருவிகளைத் தயாரித்துப் பயன்படுத்தும் அளவிற்கு வளர்ச்சியடைந்ததைக் காட்டுவதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். இந்தப் பண்டைய மனித இனம் எது என்றறிய போதுமான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கிடைக்கப்படவில்லை என்றே  ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.    மிக ஆழமான தொல்லியல் அகழாய்வுகள் மற்றும் தமிழகத்தின் மலைப்பகுதிகள், மலையடிவாரங்கள், குகைப்பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை விரிவாக்கினால் பண்டைய மனிதர்களின் தொல் படிமங்கள் கிடைக்க   வாய்ப்புள்ளது. இந்த அடிப்படையில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது.

நூலாசிரியர் முன்னுரையில் கூறும் ஒரு செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது. அதாவது, "தொன்று தொட்டு இன்று வரை எந்த ஒரு குழுவோ இனமோ அல்லது சாதியோ 'தூய்மையான' ஒன்றாக இருந்து வரவில்லை". இங்குத் தூய்மை என்பது ‘இனக்கலப்பு’ என்ற பொருளில் கொள்ளப்பட வேண்டும். 

1871ஆம் ஆண்டில் சார்ல்ஸ் டார்வின் நவீன மனிதர்கள் அதாவது ஹோமோ சேப்பியன் சேப்பியன் ஆகிய நமது மூதாதையர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து தோன்றியிருக்கக்கூடும் என்று தன் ஆய்வை வெளியிட்டார்.  இது உலக சிந்தனையில் பெறும் தாக்கத்தை உருவாக்கிய கருத்தாக அமைந்தது.  

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஹோமோ சேப்பியன்களாகிய நமது மூதாதையர்களிடையே பெரும் எண்ணிக்கையில் இனக் கலப்புகள் நடந்து முடிந்து விட்டன என்பதையும் நாம் எல்லோருமே ஆப்பிரிக்காவிலிருந்து இன்றைக்கு 70 ஆயிரம் ஆண்டுகள் காலச் சூழலில் வெளியேறி இடம் பெயர்ந்து தனித்தனி இனங்களாக வளர்ச்சியடைந்து பிறகு அந்த வெவ்வேறு இனங்களுக்கிடையே கலப்புகள் ஏற்பட்டு பரிணமித்திருக்கும் ஒரு கலவை தான் நாம் என்பது மரபணுவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளாகின்றன.

--- 4 --- 

இன்றைக்கு ஏறக்குறைய 65,000 ஆண்டுகள் காலகட்டத்தில் நவீன மனிதர்கள் இந்தியாவை அடைந்த போது அவர்கள் சிறு குழுக்களாக இந்தியாவின் கடற்கரையோரப் பகுதிகள் வழியாக இடம்பெயர்ந்து, சில பகுதிகளில் தங்கி வாழ்ந்து, மீண்டும் இடம்பெயர்ந்து, என்ற வகையில் கடந்து சென்றிருக்கக்கூடும்.  

முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் என்று  தேடினால் அந்தமான் தீவுகளில் இருக்கும் ஓங்கே பழங்குடியினரை நாம் குறிப்பிட்டுச் சொல்லலாம்.   இன்று நம் கண்முன்னே இருக்கும் முதன் முதலாக ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனிதர்களின் நேரடி வாரிசுகள் இவர்கள் என்று மரபணுவியல் ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன என்பதை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 


ஓங்கே இனத்தவர்களைப் போல அந்தமான் தீவில் வசிக்கும் ஜரவா மக்களும் இன்றைக்கு ஏறக்குறைய 55,000 ஆண்டுகள் கால வாக்கில் இடம்பெயர்ந்தவர்கள்.  இவர்கள் தெற்கு மற்றும் மத்திய அந்தமான் பகுதியில் வசிக்கின்றனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகையே இன்று இருக்கின்றனர்.
  
இன்றைய இந்திய நிலப்பகுதியில் நமது மூதாதையர்களான தொல் மனிதர்கள் பல்வேறு காலகட்டங்களில் உட்புகுந்திருக்கின்றனர். ஒரே நேரத்தில் எல்லா இடங்களுக்கும் பரவலாக்கம் என்றில்லாமல் பல்வேறு காலகட்டங்களில் அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி குழுக்களாக வந்து சேர்ந்திருக்க வேண்டும். இவர்களுள் பண்டைய மனிதர்கள் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்திருக்கக்கூடும் என நூலாசிரியர் தன் கருத்தைக் குறிப்பிடுகின்றார்.  நமது மூதாதையர்களான நவீன மனிதர்கள் கடற்கரையோரமாக தங்கள் நகர்வை ஏற்படுத்திக்கொண்டே ஏனைய தொல் மாந்தர்கள் இருந்த பகுதிகளில் அவர்களோடு கடும் தாக்குதலில் ஈடுபட்டு அவர்களை   வீழ்த்தி புதுப் புதுப் பகுதிகளுக்குப் பரவியிருக்க வேண்டும்.

இந்தியாவின் இன்றைய நவீன மனிதகுலம் இந்தியாவிற்குள் நுழைந்த போது அங்கு ஏற்கனவே காலூன்றி இருந்த ஏனைய தொல் மாந்த இனங்களை ஒழித்துக் கட்டிவிட்டு நிலைபெற்றது. தெற்காசியாவில் பண்டைய மனிதர்களின் புதைப் படிமம் ஓர் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் ஓரளவு முழுமையான மண்டையோடு கிடைத்தது என்றும் அது ஹோமோ ஹெய்டல்பர்ஜன்சிஸ்  வகை என்றும் ஆய்வில் அறியப்பட்டது.

நூலின் இரண்டாம் அத்தியாயம் `விவசாயம் உழவர்கள்` என்ற கோணத்தில் விரிவாக அலசுகிறது. தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட வேளாண் பரிசோதனைகளில் பழமையானது மெஹெர்கர்   என்ற கிராமத்தில் தொடங்கியது. இப்பகுதி இன்றைய பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் உள்ள போலன் கணவாய் அடிவாரத்தில் அமைந்திருக்கும் கிராமம். கிமு 7000லிருந்து கிமு 2600 வரை மக்கள் வாழ்ந்த ஒரு நிலப்பகுதி இது. தெற்காசியாவில் வேளாண்மை எவ்வாறு தொடங்கிப் பரவியது என்பது குறித்த ஆய்வுக்கு இந்த ஆய்வு உதவியது. இதன் அடிப்படையிலேயே ஹரப்பா நாகரிகம் தொடர்பான ஆய்விற்கும் இது வித்திட்டது என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். 

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓர் ஆய்வுக் குழுவினர்  இப்பகுதியில் அகழாய்வு செய்த போது கண்டறியப்பட்ட அனைத்து வீடுகளும் பல அறைகளைக் கொண்டவையாக இருந்தன என்றும், கைகளால் தயாரிக்கப்பட்ட செங்கற்களைக் கொண்டு அவை அமைக்கப்பட்டிருந்தன என்றும், மேலும் விரிவாக பல தகவல்களை இந்த அத்தியாயத்தில் மெஹெர்கர்  வாழ்விடப் பகுதி பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

மத்திய யூப்ரடீஸ் பகுதியில் முர்ரேபிட் என்ற இடத்திற்கு அருகே அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளின் படி அங்கு வசித்து வந்தவர்கள் சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பே கோதுமையையும்  'ரை' எனப்படும் புல்லரிசியையும் சாகுபடி செய்திருந்தனர் என்றும் கிமு 10,700 ஆம் ஆண்டு வாக்கிலேயே 'ரை' சாகுபடி செய்யப்பட்ட அறிகுறிகள் தோன்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். மெஹெர்கர்  தொடர்பான விரிவான அலசல், அங்கு மேற்கொள்ளப்பட்ட விவசாய முறைகள், தட்பவெப்பநிலை ஆகியன பற்றிய செய்திகள் இப்பகுதியில் நன்கு ஆராயப்படுகின்றன.

இந்த அத்தியாயம் மேலும் ஒரு முக்கிய செய்தியை விரிவாக ஆராய்கிறது. தற்காலத்து இந்திய மக்கள் குழுவின் ஒட்டுமொத்த மரபணு தொகுதியையும் வரிசைப்படுத்தி இந்திய மக்களின் வரலாற்றை மறு நிர்ணயம் செய்யும் நோக்கத்தில் 2009ஆம் ஆண்டிலும் 2013ஆம் ஆண்டிலும் நிகழ்த்தப்பட்ட இரண்டு ஆய்வுகளை இப்பகுதி மிக விரிவாக ஆராய்கிறது. முதல் ஆய்வின் தலைப்பு Reconstructing Indian Population History.  இரண்டாவது ஆய்வின் தலைப்பு Genetic Evidence for Recent Population Mixture in India. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளுமே கீழ்க்காணும் விஷயங்களை வலியுறுத்துகின்றன :
1) இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களும் கலப்பினத்தைச் சேர்ந்தவர்களே; கலப்பு விகிதாச்சாரத்தில் மட்டுமே வேற்றுமை இருக்கிறது
2) இந்திய மக்களின் பரம்பரை குறைந்தபட்சம் இரண்டு குழுக்களோடு தொடர்பு கொண்டுள்ளது 1) முதல் இந்தியர்கள் 2) மேற்கு யுரேசியர்கள். 

இந்த ஆய்வின் முடிவுகள் எப்படிப்பட்ட எதிர்வினைகளை எதிர்கொண்டன என்பதை டேவிட் ரைட் 2018-ஆம் ஆண்டில் வெளியிட்ட 'Who we are and How we got தேரே' என்ற நூலில் விவரிக்கும் செய்தியையும் நூலாசிரியர் இப்பகுதியில் வழங்கி அதனை விவரிக்கின்றார். மிகச் சுவாரசியமானதும் முக்கியமானதுமான செய்தி என்னவென்றால், இந்த ஆய்வறிக்கையின் படி தென்னிந்திய மூதாதையர் முதல் இந்தியர்களின் வம்சாவளியினர் ஆவர் என்ற பதிலே!

ஜாக்ரோஸ் மலைப் பகுதியைச் சேர்ந்த ஈரான் வேளாண் குடியினரின் தொடர்புகள், மரபணு ரீதியிலான பங்களிப்புகள், சிந்து சமவெளிப் பகுதியில் இம்மக்களது தாக்கம் ஆகிய கூறுகள் முக்கிய கவனத்தோடு இப்பகுதியில் ஆராயப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக, தெற்காசியாவின் வடமேற்குப் பகுதியில் ஒரு காலகட்டத்தில் ஈரானிய வேளாண் குடியினர் பெரும் எண்ணிக்கையில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்; அவர்களுடைய மரபியல் சுவடுகள் இன்றைய இந்தியர்களிடம் அளக்க முடியாத விதத்தில் பதிந்து போய் உள்ளன‌.

இந்த அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் பின் குறிப்பாக ஒரு முக்கிய செய்தியை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். அதாவது கிமு 1900 ஆண்டு வாக்கில் ஹரப்பா நாகரிகம் வீழ்ச்சி அடைந்த போது அதைக் கட்டி எழுப்பிப் பல நூற்றாண்டுகள் பேணிக்காத்தவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவினர்; குறிப்பாக, கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு அவர்கள் சென்றனர்!

--- 5 --- 

`முதல் நகரவாசிகள்: ஹரப்பர்கள்` என்ற தலைப்பில் அமைந்த மூன்றாவது அத்தியாயம் ஹரப்பா நாகரிகம் பற்றிய ஆர்வமுள்ளவர்களுக்கு விரிவான செய்திகளைத் தருகின்ற பகுதியாக விளங்குகிறது.  இப்பகுதியில் கூறப்படுகின்ற சில முக்கிய செய்திகளைக் குறிப்பாகக் காண்போம்.
- ஹரப்பா நாகரிகத்தை மேற்காசியர்கள் மெலுஹா என்றே அழைத்தனர்.’
- மெசப்பட்டேமியா முத்திரைகளில் இடம்பிடித்திருக்கும் எருமை மாடு, சிந்து சமவெளியை வசிப்பிடமாகக் கொண்டிருந்த ஒரு விலங்கு.
- மெசப்பட்டேமியா   நாகரீகத்திற்கும் ஹரப்பா நாகரீகத்திற்கும் இடையே வர்த்தக பரிவர்த்தனைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
- யூப்ரடிஸ்-டைகிரிஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு நடுவே இருந்த மெசப்பட்டேமியாவில் (அதாவது இன்றைய ஈராக்) சுமேரியர்கள் வாழ்ந்துவந்தனர். ஊருக் போன்ற மெசப்பட்டேமிய நாகரிகத்தின் முதல் நகரங்களைச் சுமேரியர்கள் கட்டி எழுப்பினர்.
- ஹரப்பா நாகரிகம் தனித்துவமிக்க ஒரு நாகரீகம். 
- ஹரப்பா நாகரீகத்தில் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த நகரங்களைக் கொண்டிருந்தனர்.
- நகரங்களின் தெருக்கள் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தன.
- வீடுகள் எல்லா சமயங்களிலும் வடக்கு-தெற்கு அல்லது கிழக்கு-மேற்கு திசையைப் பார்த்தபடி வரிசையாகக் கட்டப்பட்டிருந்தன.
- அவர்களது நீர் மேலாண்மை தொழில்நுட்பம் மிக நவீனமாக இருந்தது.
- சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் ஹரப்பாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவறைகள் இருந்ததை உறுதி செய்துள்ளன.
- ஹரப்பாவிற்கு வரும் வர்த்தகர்கள் மற்றும் விருந்தினருக்கு வசதியாக பொது குளியல் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
- அகழாய்வுகளில் லட்சக்கணக்கான பெண்கள் அணியும் வளையல்கள் கிடைத்தன.
- அகழாய்வில் கிடைத்திருக்கின்ற முத்திரைகளில் 60 சதவீத முத்திரைகளில் ஒற்றைக் கொம்பு விலங்கு  உருவம் பொறித்தவை கிடைத்துள்ளன. இது அரச முத்திரையாக இருக்கலாம்.
- அந்த மாபெரும் நகரத்தின் எல்லா பகுதிகளிலும் பொருட்களை எடை போடுவதற்கு ஒரே வழி முறைதான் பின்பற்றப்பட்டது. தரப்படுத்தப்பட்ட கனச்சதுர எடைக் கற்கள் பயன்படுத்தப்பட்டன.


சிந்துவெளி நாகரிகம் அல்லது ஹரப்பா நாகரிகம் செழித்திருந்த நிலப்பகுதிகளில் எந்த மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி   பேசப்பட்டது என்ற கேள்வி தொடர்ந்து சவாலாக இருக்கும் ஒன்று. ஹரப்பா எழுத்து வரிவடிவத்தின் அடிப்படை மொழி முதல்நிலைத் திராவிட மொழியாக இருக்கலாம் என்று பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களும் மொழியியலாளர்களும் ஆதரிப்பதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் மெசப்பட்டேமியா மொழிகள், அதிலும் குறிப்பாக, ஈல மொழி பற்றி ஆய்வாளர்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்பதை நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்களால் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. உலகிலேயே ஆறாவது பெரிய மொழிக் குடும்பமாக அமைந்திருக்கின்றது திராவிட மொழிக் குடும்பம்.  திராவிட மொழிகளுக்கும் ஈல மொழிக்கும் உள்ள தொடர்பை ஆராய வேண்டியதன் அவசியத்தை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக பிற்கால ஈல மொழி திராவிட மொழிக் குடும்பத்தின் பிராகுயி மொழியை ஒத்திருந்தது என்ற செய்தியையும் சுட்டிக்கட்டுகின்றார்.

இதில் மேலும் சுவாரசியமான ஒரு செய்தி என்னவென்றால்  பெஹிஸ்டன் கல்வெட்டுகளின் புதிரை விடுவிப்பதில் முக்கிய பங்காற்றிய எட்வின் நாரிஸ் என்னும் மொழியியலாளர், ஈல  எழுத்து வரிவடிவம் தமிழ் எழுத்து வரிவடிவத்தோடு அதிகமாக ஒத்துப் போகிறது என்பதை 1853 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்தார் என்ற செய்தி.  இதுகுறித்து மேலும் பலர் இத்தொடர்புகளைப் பற்றி ஆராய்ந்த செய்திகளையும் மெக்  ஆல்பியன் 1981 ஆம் ஆண்டில் எழுதிய Proto Elamo Dravidian: The Evidence and its Implications  என்ற ஆய்வறிக்கையைத் தனிக் கவனத்தோடு நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். 

இதன் தொடர்ச்சியாக கல்வெட்டியலாளரான ஐராவதம் மகாதேவன், பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆகியோர் ஹரப்பா மொழியைப் படிக்கத் தொடங்குவதற்கான புதிய கண்ணோட்டங்களைக் குறிப்பிட்ட செய்திகள் அமைகின்றன. அதில் மிக முக்கியமாக ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் 2015 ஆம் ஆண்டில் நிகழ்த்திய சொற்பொழிவில் கூறப்பட்ட  கருத்துக்களை நூலாசிரியர் முக்கியமாகக் குறிப்பிடுகின்றார்.
1) ஹரப்பர்கள் வேத காலத்தைச் சேர்ந்த ஆரியர்கள் பேசிய மொழிக்கு எதிரான மொழியைப் பேசினர்.
2) சிந்து சமவெளிப் பகுதியில் கிடைத்த வரி வடிவங்களின் மொழி திராவிட மொழியின் தொடக்கக் கால வடிவங்களில் ஒன்று
3) சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுக்கு முந்தியது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன
4) சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் பல விலங்குகள் இடம் பெற்றிருந்த போதும் குதிரைகள் மட்டும் இடம் பெறவில்லை.
5) சிந்து சமவெளி நாகரிக முத்திரைகளில் புலி பரவலாக இடம்பெற்றிருந்தது.
6) சிந்து சமவெளி நாகரிகம் பெரும்பாலும் நகர்ப்புற நாகரீகமாக இருந்தது.
சிந்துவெளியில் பேசப்பட்ட திராவிடமொழிகள் தென்னிந்தியாவை அடைந்த காலம் எது என்ற கேள்வி முக்கியமானது. கிமு 2500 ஆம் ஆண்டு வாக்கிலேயே திராவிடமொழிகள் தென்னிந்தியாவை அடைந்து விட்டன. தென்னிந்தியாவிற்குத் திராவிட மொழிகளை முதன்முதலாக கொண்டுவந்தவர்கள் ஹரப்பாவின் மேய்ப்பாளர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் நூலாசிரியர் விவரிக்கின்றார். தென்னிந்திய மூதாதையரோடு அவர்களுக்கு ஏற்பட்ட கலப்பு இன்றைய தென்னிந்திய மக்கள் தொகையின் பெரும் பங்களிப்பிற்குக் காரணமாகியிருக்கின்றது. 

இந்தியர்கள் பேசும் மொழிகள் 4 முக்கிய மொழிக்குடும்பங்கள் பற்றியும் நூல் வரிசையாகப் பட்டியலிடுகிறது.
1. இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பம் (முக்கால்வாசி இந்தியர்கள் இதைப் பேசுகின்றனர்)
2. திராவிட மொழிக் குடும்பம் (ஐந்தில் ஒரு பங்கு இந்தியர்கள் பேசுகின்றனர்)
3. ஆஸ்திரோ ஆசிய மொழிக் குடும்பம் (1.2 சதவீத இந்திய மக்கள் பேசுகின்றனர்) 
4. திபெத்திய பர்மிய மொழிக் குடும்பம் ( 1 சதவீதத்திற்கும் குறைவான இந்தியர்கள் பேசுகின்றனர்)
சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என அழைப்பது ஆய்வு ரீதியாக பொருத்தமானதாக இருக்காது, ஏனெனில் கக்கர்- ஹக்ரா ஆறுகளை சரஸ்வதி என அழைப்பதில் இருக்கும் சர்ச்சைகள் இதற்கு வலு சேர்க்கவில்லை என்பதையும் நூலாசிரியர் கூறி இக்கருத்தாக்கத்தைத் தகர்க்கின்றார்.

--- 6 --- 

இந்த நூலின் இறுதி அத்தியாயமாக வருவது `இறுதியாக குடியேறியவர்கள்:ஆரியர்கள்` என்ற தலைப்பிலான பகுதி.  உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்யும் கேள்வியாக இன்றளவும் இருப்பது இந்திய-ஐரோப்பிய மொழி பேசியவர்களது இந்தியாவிற்கான வருகையைப் பற்றிய காலம், அதன் தாக்கம், அவை ஏற்படுத்திய விளைவுகள் என்பது தொடர்பானவை. 

Early Indians-fig.6.JPG

இதற்கு முக்கியக் காரணம்;
1) இந்தியக் கலாச்சாரம் என்பது ஆரிய சமஸ்கிருத அல்லது வேத கலாச்சாரத்தைச் சார்ந்தது அல்ல என்பது,
2) இந்திய ஐரோப்பிய மொழி பேசியவர்கள் எப்போது இந்தியாவிற்கு வந்தனர் என்று கேட்பது.. எப்போது நாம் நம்முடைய கலாச்சாரத்தில் பல்வேறு கூறுகளை இறக்குமதி செய்தோம்... அல்லது இரண்டறக் கலக்கும் வகையில் உள்வாங்கிக்கொண்டோம் என்று கேட்பதற்குச் சமமானது, 
என்ற இரண்டு காரணங்களை நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

சற்று நமது சமகாலச் சூழலைச் சிந்திப்போம்...
நமது அன்றாட வாழ்வியலைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சடங்குமுறைகள், வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள், மூடப் பழக்க வழக்கங்கள் என ஒவ்வொன்றாக எடுத்துப் பட்டியலிட்டு அவற்றை நாம் ஆராயத் தொடங்கினால் தமிழர் பண்பாட்டின் அடிநாதமாக இருக்கின்ற இயற்கை சார்ந்த வாழ்வியல் கூறுகளிலிருந்து வெகுதூரம் பெயர்ந்து ஆரியர்களின் வைதீக பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் ஒவ்வொரு சிறு சிறு கூறுகளாக உள்வாங்கிக் கொண்ட உண்மையை நாம் உணர முடியும். பேச்சளவில் ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வெறுத்து ஒதுக்கித் தள்ளி வைப்பவர்கள் கூடத் தங்களது அன்றாடக் குடும்பச் சடங்குகள், வழிபாட்டுக் கூறுகள் ஆகியவற்றில் அப்பண்பாட்டுக் கூறுகளை இயல்பாக உள்வாங்கிக் கொண்டு அவற்றைக் கடைபிடித்து வருவதைக் கண்கூடாகக் காண முடிகிறது. இது இன்றைய நிதர்சனமான நகைமுரண்!

இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசிய தங்களை ஆரியர்கள் என்று கூறிக் கொண்டவர்கள் எங்கிருந்து இந்திய நிலப்பகுதி வந்தார்கள் அவர்கள் எப்போது இங்கு வந்தனர்? இதுவே மையக் கேள்வி.
தற்போது இந்திய மக்களில் முக்கால்வாசிப்பேர் ஹிந்தி, குஜராத்தி, பஞ்சாபி, மராத்தி போன்ற இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். உலக மக்களில் இதே மொழிக் குடும்பத்தைச் சார்ந்த 40 சதவிகிதத்தினர் ஆங்கிலம், ஸ்பானிஷ் பிரெஞ்சு, ஈரான், ரஷ்யன், ஜெர்மன் ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். இந்தியத் துணைக்கண்டம் தான் இந்து ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் கிழக்கு எல்லையாக இருக்கிறது. இந்தியாவிற்குக் கிழக்கே  இந்திய-ஐரோப்பிய மொழியைப் பேசும் நாடுகள் இல்லை. இந்த நிலையில் இந்த இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பம் எப்படி இந்தியாவின் ஆதிக்க மொழியாக மாறியது என்ற கேள்வியை முன்வைக்கின்றார் நூலாசிரியர்.  இந்த மொழி இந்த நிலத்தில் தோன்றாதது,  கடந்த ஒரு காலத்தில் இந்தியாவிற்குள் வந்திருக்க வேண்டும் என்று தன் பதிலையும் இரண்டு வெவ்வேறு சாத்தியக்கூறுகளை விளக்கி விவரிக்கின்றார்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக உலகளாவிய பல அறிஞர்களையும் சோர்வடையச் செய்துகொண்டிருந்த ஆரியர்களின் இடப்பெயர்ச்சி தொடர்பான கேள்விக்கு மரபணுவியல் ஆய்வுகள் விடை கண்டுள்ள செய்தியை மரபியல் கூறுகளை விளக்கி அறிவியல்பூர்வமாக நூலாசிரியர் இப்பகுதியில்  இந்திய ஐரோப்பிய மொழிகளைப் பேசியவர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்தது தொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆய்வு 2018 மார்ச் 31 அன்று வெளியான The Genomic Formation of South and Central Asia என்ற தலைப்பு கொண்ட அறிக்கையாகும். (ஆர்வமுள்ளோர் இணையத்திலிருந்து  வாசிக்கலாம்). 

--- 7 --- 

இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள் என்ற இறுதி அத்தியாயத்தில் மேலும் சில பகுதிகளைக் காண்போம்.

ஸ்டெப்பி புல்வெளியில் இருந்த  மேய்ப்பாளர்கள் இன்றைய வடக்கு  ஆப்கானிஸ்தான், தெற்கு உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகளில் பரவியிருந்த நாகரிகங்களின் மீது எந்தத் தாக்கத்தையும் விளைவிக்காமல் தெற்கு நோக்கிச் சென்று தெற்காசியாவை அடைந்து அங்கு ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த மக்களுடன் இனக்கலப்பில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தியாவில் இன்று இருக்கும் இரண்டு முக்கிய பரம்பரையில் ஒன்றான வட இந்திய மூதாதையர் என்ற பிரிவு  உருவாக இவர்கள் காரணமாகினர். 

தென்னிந்திய மூதாதையர் என்போர் அதே காலகட்டத்தில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த மக்கள் தெற்குப் பகுதி இந்தியாவிலிருந்த முதல் இந்தியர்களுடன் மேற்கொண்ட இனக்கலப்பால் உருவானவர்கள்.  இந்த ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பாளர்கள் யம்னயா என்று அழைக்கப்படுகின்றார்கள்.

Early Indians-fig.7.JPG

யார் இந்த யம்னயா மக்கள் என்ற கேள்வி தற்சமயம் மனிதகுல ஆய்வுலகில் ஆர்வத்துடன் பேசப்படும் ஒரு கேள்வியாக அமைகிறது.  இவர்கள் அடிப்படையில் கி.மு 50,000லிருந்து  30,000 ஆண்டுகளுக்கு இடையிலான காலகட்டத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளில் குடியேறியவர்கள். ஏனைய மக்களுடன் இருந்து தூரமும் புவியியல் தடைகளும் அவர்களைப் பிரித்ததால் மரபியல் ரீதியில் முற்றிலுமாக வேறுபட்டவர்களாக இவர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தனர்.

யம்னயா மக்களின் தனிப்பட்ட பண்பாட்டுக் கூறுகளாக இறந்து போன ஒருவரை ஒரு மரப்பெட்டியில் போட்டுப் புதைத்து அந்த இடத்தில் கல்லாலும் மண்ணாலும் மேடெழுப்பி கல்லறை மேடுகளை உருவாக்கும் பண்பும், குதிரைகள் பூட்டிய சக்கரங்கள் கொண்ட வண்டிகள் அமைத்தல் என்ற பண்பும் முக்கியத்துவம் பெறுகின்றன. ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளில் குதிரைகள் பூட்டிய வண்டிகள் அவர்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும், தண்ணீரைச் சுமந்து வரவும் புதிய பகுதிகளுக்குப் பயணம் செய்து அங்குப் பெண்களைக் கவர்ந்து அப்பகுதிகளில் இனப்பெருக்கத்தின் வழியாக   தங்கள் எண்ணிக்கையையும் ஆளுமையை விரிவாக்கம் செய்தமை போன்றவற்றைக் கூறலாம்.

யம்னயா மக்கள் கிமு 3,000 ஆண்டு வாக்கில் முதலில் ஐரோப்பாவில் நுழைந்தனர்.    'கயிற்றுப் பதிவுப் பாண்டம்' (Corded ware culture)  பண்பாட்டுடன் யம்னயா குழு தொடர்புப் படுத்தப்படுவதையும் காண்கிறோம். உதாரணமாக ஜெர்மனியில் கிடைத்த பண்டைய மனிதர்களின் டிஎன்ஏ  ஆய்வுகளின்படி இப்பண்பாட்டைச் சார்ந்தோரில் 75 சதவீதத்தினர் யம்னயா பரம்பரையினர் என்பது தெரிய வந்தது.   ஐரோப்பாவில் யம்னயா பரவலாக்கம் மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கிலிருந்த பெண் தெய்வ வழிபாட்டை மாற்றி வன்முறையின் வடிவமாகத் திகழ்கின்ற சீயஸ் போன்ற ஆண் போர் கடவுளர் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்தது; இதன் தொடர்ச்சியாக  ஆணாதிக்கச் சமூகமாக இது மாறியது என்பதையும், இதன் தாக்கம் ஐரோப்பா முழுமைக்கும் பரவியது  என்பதையும் காண முடிகிறது.

இதில் மிக முக்கியமாகக் கருத வேண்டிய ஒன்று, 'இடம் பெயர்ந்தவர்கள் உருவாக்கிய புதிய கலாச்சாரங்களில் வன்முறையைக் கொண்டாடுகின்ற, ஆண்களை மையப்படுத்துகின்ற போக்கு மிகவும் தூக்கலாக இருந்தது என்பது. இதற்குச் சான்றாக, அகழாய்வுகளில்  கிடைத்த கல்லறைகளில் பெரும்பாலும் ஆண் எலும்புக்கூடுகளே காணப்பட்டன என்றும், அவை பெருங்காயங்களுடன் இருந்தன என்றும் அவற்றின் அருகில் போர்க்கோடாரிகள் இருந்தன' என்பதையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். யம்னயா மக்களின் இடப்பெயர்ச்சி ஆண்களை மையமாகக் கொண்டிருந்தது.   யம்னயா மக்களிடம் மண்பாண்டங்கள் செய்யும் பாரம்பரியம் இருக்கவில்லை. அவர்கள் ஓரிடத்தில் தங்காமல் வெவ்வேறு இடங்களுக்குத் திரிந்து கொண்டிருந்தமையால்  அவர்களுக்கு உடையாத, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய பொருட்கள் தேவைப்பட்டன.  ஆனால் கயிற்றுப் பதிவுப் பாண்டப் பண்பாட்டைச் சேர்ந்த பெண்களை இவர்கள் கவர்ந்ததால் மண்பாண்டங்கள் செய்யும் கலை இவர்கள் பண்பாட்டில் இடம்பெறத் தொடங்கியது. இதனை விவரிக்கும் வகையில் யம்னயா இனத்தின் ஆரம்பக்காலக் கல்லறைகளில் கிடைக்காத மண்பாண்டங்கள் பிந்தைய கல்லறை அமைப்புகளில் கிடைப்பதை ஆசிரியர் விளக்குகிறார். 

Population Genomics of Bronze Age Eurasia என்ற தலைப்பிலான 2015ம் ஆண்டு கட்டுரை வழங்கும் இடப்பெயர்வு தகவல்களையும் இப்பகுதியில் நூலாசிரியர் விவரிக்கின்றார். தங்களை ஆரியர்கள் என அழைத்துக் கொண்ட இந்திய-ஐரோப்பிய மொழி பேசிய இந்த ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பாளர்கள்  இந்தோ-ஈரானியர்  என்றும் அழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் இறுதியில் ஈரானிலும், இந்தியாவிலும் நிரந்தரமாகக் குடியேறினர் என்றும், ஜொராஸ்டிரிய மதத்தின் முக்கிய புனித நூலான அவெஸ்தாவிலும் ரிக் வேதத்தில் வெளிப்படுகின்ற கலாச்சாரங்கள் மற்றும் தொன்மக்கதைகளில் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். 

2017ம் ஆண்டில் வெளிவந்த  A Genetic Chronology for the Indian Subcontinent  Points to heavily sex-biased Dispersals என்ற கட்டுரையைக் குறிப்பிட்டு இந்திய-ஐரோப்பிய மேய்ப்பாளர்கள் சமுதாயங்களில் பரவலாகக் காணப்படுகின்ற  ஆணாதிக்க அமைப்பு முறை, திருமணமானதும் மணப்பெண்ணை மணமகன் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கும் கலாச்சாரம், தந்தை வழி உறவு முறை போன்றவற்றோடு பொருந்துவதையும் குறிப்பிடுகின்றார். இதனை நோக்கும் போது இன்று தமிழ்ச்சமூகம் உள்வாங்கிக் கொண்ட முக்கிய சமூக அமைப்பாக உள்ள மணமகள் கணவன் வீட்டிற்கு அனுப்பும் முறை, ஆரியப் பண்பாட்டைத் தமிழ்ப் பண்பாடும் உள்வாங்கிக் கொண்டதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இது, நமது சமூக வாழ்வியல் கூறுகளையும் தமிழர்கள் மீளாய்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது!

--- 8 --- 

ஆதி இந்தியர்கள் யார் என்ற கேள்விக்கு விடைதேடும் முயற்சியை எளிதாக விவரிக்க நூலாசிரியர் டோனி ஜோசஃப் நாம் சாப்பிடும் பீட்சாவை ஓர் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்.
1. பீட்சாவின் அடித்தட்டு -  65,000 ஆண்டு வாக்கில் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியேறி, மத்தியக் கிழக்கு ஆசியா வழியாக வந்து, இந்தியக் கடற்கரையோர நிலப் பகுதிகளின் வழியாக தென்னிந்தியா வரை வந்து,  பிறகு கிழக்கு நோக்கிச் சென்று இந்தியா முழுமைக்கும் பரவியவர்கள். இவர்களே பூர்வகுடி மக்கள் என்று அறியப்படுபவர்கள். 
2. அடுத்து, ஜாக்ரோஸ் மலைப்பகுதி மேய்ப்பாளர்கள் பலுசிஸ்தான் வந்தடைந்து, அங்கிருந்த முதல் இந்தியர்களோடு இனக்கலப்பில் ஈடுபட்டபோது பீட்சாவின் அடித்தட்டின் மீது பரப்பப்பட்ட சாஸ் போன்று என எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியவர்கள்.
3. பொ.ஆ.மு 2000ப் பிறகு ஆரியர்கள் இப்பகுதிக்கு வந்தபோது அந்த அடித்தட்டின் மேல் ஏற்கனவே பூசப்பட்ட தக்காளி சாஸின் மீது தூவப்பட்ட சீஸ்  போல அவர்களை எடுத்துக்கொள்ளலாம். அவர்களை வட இந்தியாவில்  அதிகமாகவும்  தென்னிந்தியாவில் குறைவாகவும் பீட்சாவின் மீது உள்ள தக்காளி சாஸின் மீது  தூவப்பட்டது போல உருவகப்படுத்திக் கொள்ளலாம்.
4. அதே காலகட்டத்தில் வெளியிலிருந்து இந்திய நிலப் பகுதிக்குள் வந்த ஆஸ்திரோ ஆசிய மொழிகள் பேசும் மக்கள், திபெத்திய பர்மிய மொழிகள் பேசிய மக்கள், கிரேக்கர்கள், யூதர்கள், பார்சிகள், சிரியர்கள், முகலாயர்கள், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், என பலப்பல சீஸ் வகைகளும் இந்தப் பீட்சா தட்டின் மேல் தூவப்பட்ட வகையில் உருவகம் செய்கிறார். இப்படி பல்வேறு காலகட்டங்களில் இந்த பீட்சா அடித்தட்டின் மேல் இருக்கின்ற தக்காளி சாஸின் மேல் படிப்படியாக தூவப்படுகின்ற சீஸ்களாக   இந்தியாவிற்குள் வந்து சேர்ந்த, இங்கேயே தங்கிவிட்டவர்கள் இனக்கலப்பில் ஈடுபட்டு இந்தியர்களாக உருவானதை இவ்வகையில் பீட்சா ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு பீட்சா உருவகத்தைப் பயன்படுத்துகிறார் நூலாசிரியர். 
இது இந்திய நிலப்பகுதிக்குள் மக்கள் இடப்பெயர்ச்சியையும், குடியேற்றத்தையும் எளிதாக விளக்குகின்றது எனலாம்.  

fig8.jpg

பொ.ஆ.மு. 150 வாக்கில் பதஞ்சலி எழுதிய மகாபாஷ்யம் என்ற நூலில் ஆரியர்களின் பூமி எது என்று கேள்வி எழுப்பி,  கலாக்கா காடுகள், கங்கை ஆறும் யமுனை ஆறும் சந்திக்கும் இடத்திற்கு அருகில் இருந்திருக்க வேண்டுமென்றும், பரியாத்திரை மலைகள் அதாவது விந்தியமலைகளாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார். 

பொ.ஆ.மு 500 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் தோன்றிய மகத நாடும் மகதப் பேரரசும்  வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஓர் அரசு. பொ.ஆ.மு   7ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் இடையே இங்கிருந்துதான் புத்த மதமும் சமண மதமும் தோன்றின.  இவை ஏற்கனவே இருந்த ஆரிய மதத்தின் அடிப்படையான வேத நூல்களையும், சடங்குகளையும், சமூகத்தில் நிலவிய பழக்க வழக்கங்களையும் கேள்வி கேட்டன. முதல் இந்தியப் பேரரசான மௌரியப் பேரரசு பொ.ஆ.மு 322 -180ல் இப்பகுதியில்தான் தோன்றியது.
ஆரியர் பண்பாட்டை விளக்கும் நூலாசிரியர் கீழ்க்கண்ட வகையில் குறிப்பிடுகின்றார். 
 - அர்ச்சகர்களுக்குத் தாராளமாக தானம் வழங்குவது
 - பெரிய பலிச் சடங்குகள்
 - ஆட்சியாளர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நெருக்கமான சார்புடைய உறவு

மௌரியப் பேரரசைப் பற்றி விவரிக்கும் நூலாசிரியர், ஆய்வாளர் புரோன்க்ஹார்ஸ்ட் கூறும் கீழ்க்காணும் செய்திகளைப் பதிகிறார். அவை: 
 - மௌரியப் பேரரசை ஆண்ட எந்த அரசருக்கும் பிராமணர்களிடத்திலும் அவர்களுடைய கோட்பாடுகள் மீதும் எவ்விதமான ஈடுபாடும் இருக்கவில்லை
 - மகத நாட்டின் தொடக்கக் கால அரசர்களாகிய பிம்பிசாரர், அஜாதசத்ரு ஆகியோர் தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று புத்த மதத்தினர் கூறுகின்றனர்; இதையே ஜைன மதத்தினரும் கூறுகின்றனர்.
 - பொ.ஆ.மு 350ஆம் ஆண்டுவாக்கில் அப்பகுதியை ஆண்ட நந்த பேரரசர்கள் ஜைன மதத்தைப் பெரிதும் ஆதரித்தனர்.
 - நந்தர்களைத் தூக்கி எறிந்த சந்திரகுப்த மவுரியர் நந்தர்களைப் போலவே பிராமணர்களிடத்திலும் எந்தவிதமான ஈடுபாடும் காட்டவில்லை
 - சந்திரகுப்த மவுரியர் ஜைன மதத்திற்கு மாறி ஒரு ஜைன துறவியாக இருந்தார்
 - அவருடைய மகன் பிம்பிசாரர் பிராமணர்கள் அல்லாத சமய இயக்கங்களை, குறிப்பாக, ஆசீவகச் சமய இயக்கத்தை ஆதரித்தார்
 - அவருடைய மகனான அசோகர் புத்த மதத்தைத் தழுவினார்
 - அவருக்கு அடுத்து வந்தவர்கள் ஆசீவகத்தில் அதிகம் ஆர்வம் காட்டினர்
 - மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் வந்த கங்கர்கள் பிராமணர்களாக இருந்த காலகட்டத்தில்தான், பொ.ஆ.மு 185 வாக்கில்,  பிராமணர்கள் சமூகத்தில் தாங்கள் எதிர்பார்த்த இடத்தை அடையத் தொடங்கினர். 
மனுதர்ம சாத்திரம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

பொ.ஆ.மு 6-2ஆம் நூற்றாண்டு காலகட்டம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற காலமாகக் கருதப்படுகிறது.உபநிடதங்கள் இயற்றப்பட்டன.உலகிலேயே முதன் முதலாக மதப் பரப்பாளர்கள் மூலமாக மதங்கள் பரப்பிய பௌத்தமும் சமணமும் தோன்றின.சமணம் இந்தியாவின் பல இடங்களுக்குக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.புத்த மதம் கிழக்காசிய நாடுகளிலும் உலகின் ஏனைய பிற பகுதிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. 

இவை மட்டுமன்றி, சங்கத்தமிழ் இலக்கியங்கள் படைக்கப்பட்ட பொற்காலமாகவும் தமிழ் மன்னர்களின் அரசுகள் தோன்றி வளர்ந்து, உழவும் வணிகமும்  விரிவாக்கம் பெற்ற காலமாகவும் இது திகழ்ந்தது என்பதையும்  நாம் குறிப்பிட வேண்டும். 

--- 9 --- 


நம்மைச் சுற்றி மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகின்ற ஒரு முக்கிய கேள்வி, எப்போது சாதி அமைப்பு என்பது இந்திய சூழலில் வலுப்பெற்றது என்பதாகும். இதற்கான பதில் தருவதாக அமைகிறது நூலின் முடிவுரை பகுதி.
 - பொ.ஆ 1ஆம் நூற்றாண்டு வரை சாதியக் கட்டமைப்புடன் கூடிய சமூகநிலை இந்தியாவில் இல்லை.
 - பொ.ஆ 2ஆம் நூற்றாண்டில் சமூகத்திற்குள் புகுத்தப்பட்ட சமூக அடுக்கு அதிகார அமைப்பு இந்த சாதி அமைப்பு.
 - இந்தச் சாதி அமைப்பு மக்களைச் சிறு சிறு துண்டுகளாகப் பிரித்துள்ளது; இது மிக முக்கியமாக ஒரு பாதிப்பை இந்திய சமூகத்தில் வழங்கியிருக்கின்றது. அது என்னவெனில், ஒரு சமுதாயத்தில் உள்ள தனிநபர்களின் ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்தும் திறனை சமுதாயம் இழக்கின்ற ஒரு நிலையாகும்.
 - பொ.ஆ 1ஆம் ஆண்டு வரை இருந்த சமூக பண்பாட்டுச் சூழலில் இதற்கு அடுத்த நூற்றாண்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சாதி சமூக கட்டமைப்பு புகுத்தப்பட்டு படிப்படியாக அது உறுதி செய்யப்பட்டது
 - புத்தமதம் அது தோன்றிய பூமியிலேயே தோற்கடிக்கப்பட்ட பின்பும் பல நூற்றாண்டுகள் படிப்படியாக வலுவிழந்தாலும் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தது.
 - பொ.ஆ 2ஆம் நூற்றாண்டை ஒட்டி இந்தியாவில் சாதி அமைப்பு முறை தோன்றி சமண பௌத்த மத தத்துவங்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதைக் காண்கின்றோம். ஆதிசங்கரரின் படைப்புகளிலிருந்து தர்க்கரீதியான விவாதங்கள் மற்றும் வன்முறை மூலமாக கருத்து மோதல்கள் தொடர்ந்தன என்பதையும் காணமுடிகிறது.
 - சாதி சமூக கட்டமைப்பு ஏற்படுத்திய பிரச்சனைகளை எதிர்த்து அம்பேத்கர் தனக்கும் தன்னைப் பின்பற்றியவர்களுக்கும் புத்தமதத்தைத் தேர்ந்தெடுத்தது ஒரு சமுதாயம் எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த கருத்து முரண்பாடுகள் தொடர்ந்து இன்று வரை தொடர்வதைக் காட்டுகிறது.
 - அதேவேளை அம்பேத்கருக்கும் மகாத்மா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சித்தாந்த ரீதியான கருத்து முரண்பாடுகள் ஒரு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரியத்தின் பழமைவாதம் கொண்டிருந்த கருத்துகளுக்கும் மகத நாட்டின் முற்போக்கு வாதம் கொண்டிருந்த கருத்துகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை ஒத்ததாக காண வைக்கின்றது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

இந்திய கலாச்சாரம் ஒத்த தன்மை கொண்டதல்ல; மாறாக அது பன்முகத்தன்மை கொண்டது. ஒற்றைக் கலாச்சாரம் என்ற கொள்கையை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிகள் இன்றும்  தொடருகின்றன; அதே சமயம் அவை தோற்கடிக்கப் படுகின்றன. 

இந்திய வரலாறு எழுதப்பட்டிருக்கும் முறை தொடர்ந்து கேள்விக்குட்படுத்தப்படவேண்டும்; பெரும்பாலான சமயங்களில் நமது வரலாறு எழுதப்பட்டிருக்கும் முறையை நியாயப்படுத்தும் முயற்சி மட்டுமே நடைபெறுகிறது என நூலாசிரியர் விமர்சிக்கின்றார்.

இந்திய வரலாறு எப்போது தொடங்கியது என்ற கேள்விக்கு 65,000 ஆண்டுகளுக்கு முன்பு நவீன மனிதர்கள் இந்தியா வந்து சேர்ந்த வேளையிலிருந்து தான் அது தொடங்கப்படுகிறது என்கிறார் நூலாசிரியர். வரலாறு திரிக்கப்படாமல் இருக்கவும், அது மக்களுக்குத் தொடர்புடையதாகவும் இருக்க வேண்டும் என்றால், சரியான அடித்தளத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றார். அதாவது, இன்றைய மக்களின் மூலாதாரமாக இருந்த மக்களான முதல் இந்தியர்களிடம் இருந்து தான் இந்திய வரலாறு தொடங்க வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

இறுதியாக, இந்தியர்களாகிய நாம் உண்மையில் யார்? என்ற கேள்விக்குப் பல மூலங்களிலிருந்து முகிழ்த்து எழுந்த நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியர்கள்; ஒற்றை மூலத்திலிருந்து உருவானவர்கள் அல்ல என்ற பதிலை முன்வைக்கின்றார். பலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் நம்முடைய கலாச்சார தூண்டல்கள், பாரம்பரியங்கள், நடைமுறைகள் ஆகியன விதவிதமான உள்ளூர் பரம்பரைகளிருந்தும் வெளியே இருந்து இடம்பெயர்ந்தவர்களின்  வம்சாவளிகளிடம் இருந்தும் பெறப்பட்டவை. 
1. 65,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவிலிருந்து கிளம்பி இந்த நிலப்பகுதிக்கு வந்தடைந்த துணிச்சல் மிக்க முன்னோடிகளின் பரம்பரை தான் இன்றும் இந்திய மக்களின் அடிநாதமாக இருந்து வருகிறது.
2. மேற்கு ஆசியாவில் இருந்து வந்த இன்னொரு குழு வேளாண் புரட்சிக்கு வித்திட்டது; ஹரப்பா நாகரீகத்திற்கும் பங்களித்தது.இந்த ஹரப்பா நாகரீகம் தான் இன்றைய இந்திய கலாச்சாரத்தைச் செழிப்பாக ஆக்கிய திராவிட மொழிகள் புதிய சித்தாந்தங்கள் மற்றும் நடைமுறைகளின் ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது.
3. மத்திய ஆசியாவிலிருந்து வந்து சேர்ந்த இன்னொரு குழு சமஸ்கிருதத்தின் தொடக்கக்கால வடிவத்தைத் தங்களுடன் கொண்டு வந்தது. அந்த மொழியோடு கூடவே நமது சமுதாயத்தின் அடிப்படையை மறு வடிவமைப்பு செய்த நம்பிக்கைகளையும் நடைமுறைகளையும் அது கொண்டுவந்தது.
4. இதனை அடுத்து இந்தியா மீது படையெடுத்து வந்தவர்கள், வர்த்தகம் செய்ய வந்தவர்கள், என அனைவரும் கலந்து  இந்தியா என்று நாம் அழைக்கும் நாகரீகத்திற்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்.
முடிவுரையின்  இறுதியில் நூலாசிரியர் இப்படிக் கூறுகிறார்,"நாம் அனைவருமே வெளியிலிருந்து இங்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் தாம்!"

மிக நீண்ட காலம் நிகழ்த்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மரபணுவியல் ஆய்வுகள் இந்த நூற்றாண்டின் தொல்லியல் ஆய்வுகளுக்குப் பெரும் துணையாக அமைகின்றன. இந்திய மக்களின் மூதாதையர்களைப் பற்றியும்- நாம் யார் - நமது மூதாதையரின் பண்டைய  பண்பாடுகள் - இந்திய சமூகக்கட்டமைப்பில் சாதிய அமைப்பின் தோற்றம், வளர்ச்சி - போன்ற அடிப்படை கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் சரியான பாதையை அமைக்கின்றது இந்த நூல். ஒவ்வொரு இந்தியரும் வாங்கி வாசித்து தனது தோற்றப்புள்ளியைப் புரிந்து கொள்ள இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி!


---  ***  --- 

கடந்த கால நினைவுகளின் அணிவகுப்பு

 -- தமிழ்மைந்தன் சரவணன்


யாரோ எழுதிய பாடல் அல்ல
இது நானே எழுதிய கவிதையம்மா
விதைபோல் மனதிலே விழுந்ததம்மா
ஒரு கதையாய் இதயத்தில் வளர்ந்ததம்மா

கடந்த கால நினைவுகளின் அணிவகுப்பு
எதிர்காலக் கனவுகளின் படப்பிடிப்பு
குழந்தைப் பருவத்தின் ஒரு நினைப்பு
குதித்தோடும் முயல் போல் துறுதுறுப்பு

நடக்கும் நாட்களின் சிறகசைப்பு
எதிர்வரும் நாட்களின் கையசைப்பு
எதிர்வரும் நாட்களின் கையசைப்பு

யாரோ எழுதிய பாடல் அல்ல
இது நானே எழுதிய கவிதையம்மா
விதைபோல் மனதிலே விழுந்ததம்மா
ஒரு கதையாய் இதயத்தில் வளர்ந்ததம்மா
யாரோ எழுதிய பாடல் அல்ல

கவிஞர் புதுவைச் சிவம் வெளியிட்ட "பெரியார் இராமசாமி" நூல்


 -- முனைவர் சிவ.இளங்கோ,  புதுச்சேரி


புதுச்சேரி, முத்தியால்பேட்டைக்கு வருகை தந்திருந்த ஈ.வெ.ராமசாமிப் பெரியாரைக் கவிஞர் புதுவைச் சிவம் (ச.சிவப்பிரகாசம்) 1926 ஆம் ஆண்டில் முதன் முதலாகச் சந்தித்தார். அன்று முதல் அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு புதுச்சேரியின் சுயமரியாதை இயக்கப் பணிகளை மேற்கொண்டு வந்தார். உலகச் செய்திகளைத் தனக்குக் கற்பித்து வரும் ஆசானாகப் பெரியாரைக் கொண்டாடும் கவிஞர் புதுவைச் சிவம், தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை ஒரு குறுங் காவியமாக இயற்றி, "பெரியார் பெருந்தொண்டு" என்ற தலைப்பில் 1944 ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூலுக்குப் பாவேந்தர் பாரதிதாசன் மிகச் சிறப்பான  பாயிரமொன்று (அணிந்துரை) எழுதியுள்ளார். 

இதற்குப் பின்னர், 1949 ஆம் ஆண்டில், தந்தை பெரியார் குறித்து அறிஞர் பலரின் கருத்துகளைத் தொகுத்த கவிஞர் புதுவைச் சிவம், அத்தொகுப்பு நூலைத் தனது சொந்தப் பதிப்பகமான "ஞாயிறு நூற்பதிப்பகம்" வாயிலாகப் "பெரியார் இராமசாமி" என்ற தலைப்பில் வெளியிட்டார்.
evr book.JPG
இந்நூலுக்குக் கட்டுரை, கவிதைகளைப் பிறரிடமிருந்து தருவிக்கும் பொருட்டு, அவர் பல்துறை அறிஞர்களுக்கும் மடல் எழுதினார். 1948 ஆம் ஆண்டில், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த இராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கும் இம்மடலைப் புதுவைச்சிவம் அனுப்பினார். கவிஞர் புதுவைச் சிவம் குறித்து நேரடி அறிமுகம் இல்லாத நிலையில், ராஜாஜி அவர்கள், தந்தை பெரியாரைப் பற்றிய ஒரு கருத்தை எழுதி அதைப் பெரியாருக்கே அனுப்பி விட்டார். ராஜாஜி எழுதிய அந்தக் கடிதத்தைப் பாதுகாக்க விரும்பிய பெரியார், ராஜாஜியின் கடிதத்தைப் புதுவைச் சிவத்திற்கு அனுப்பி, அக்கடிதத்தை நூலுக்குத் தகுந்த வகையில் பிளாக் செய்து கொண்டு, மீண்டும் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். 

அந்தக் கடிதத்தில் தந்தை பெரியார் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
evr book2.JPG

E. V. ராமசாமி
சென்னை
3.12.1948

அன்புள்ள தோழர் சிவப்பிரகாசம் அவர்களுக்கு வணக்கம். 
தாங்கள் டெல்லி கவர்னர் ஜெனரல் C. இராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கு என்னைப் பற்றி கருத்து கூறும்படி எழுதிய கடிதத்தையும், ஒரு நல்ல கருத்தையும் எழுதி எனக்கு அனுப்பி விட்டார். அதை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். அதைத் தாங்கள் பிளாக் எடுத்துப் போட்டுக்கொண்டு இந்த காகிதத்தை எனக்கு அனுப்பிக் கொடுக்கக் கோருகிறேன்.

தங்கள் 
ஈ.வெ.ராமசாமி 
(கையொப்பம்)

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருப்பவர், தனக்கு அறிமுகமில்லாத ஒருவர், பெரியாரைப் பற்றி கருத்துக் கேட்டபோது அதைத் தவிர்த்து விடாமல், பெரியாரைப் பற்றிய ஒரு கருத்தை எழுதி, அதைப் பெரியாருக்கே அனுப்பி வைக்கிறார். பெரியார் அவர்களும் அதை ஓர் ஆவணமாகக் கருதி, பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கடிதத்தைப் புதுவை சிவத்திற்கு அனுப்பி வைத்து, மீண்டும் அதைத் தனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர் எதிர் அணியில் இருந்தாலும்கூட, இரு பெரும் தலைவர்களுக்கு இடையே நிலவிய விரிசல் இல்லாத நட்பும், அதைக் கண்ணியத்தோடு அவர்கள் பரிமாறிக் கொண்டதும் பெரும் வரலாற்று நிகழ்வுகள் அல்லவா?

-- தந்தை பெரியார் அவர்களின் 143 ஆவது பிறந்தநாள் - சிறப்புப் பதிவு 

---