Wednesday, September 1, 2021

இணைய(யா)நட்பு

-- கோவை எழில்


இதயத்தால் பிணைந்திருந்த 
காலங்கள் சென்று
இன்று இணையத்தால் இணைந்துள்ள 
இதயங்கள் வென்று.

நன்றி இணையமே!

முகம் அறியா நட்புகள்
அகம் அறியா  அறிமுகங்கள் 
இகம் முழுதும் இணைப்புகள்
சுகம் கேட்டு சுடுக்கைகள்.

அடுத்த வீட்டினில்
யார் தெரியாது
ஆனாலும்…
பார் முழுக்க பழக்கம்
ஊர் முழுக்க உறவுகள். 

அடையாளமின்றி அறிமுகம்
ஆனாலும்…
அதிலும் ஒரு நன்மைதான் 
அதுவும் ஓர் உண்மைதான்.

பாலினம் தெரியாது 
நிறம் அறியாது 
நாடு கிடையாது
சாதி மதம் புரியாது
மொழி ஒன்றே அறியும்.

கருத்து மணம் மட்டும் 
புரிந்த மனம்
மனிதம் மட்டும் 
உணர்ந்த இனம்.

எதிலும் எப்போதும்
தீதும் நன்றும் 
ஒன்றாய் இருப்பதே இயற்கை
இதிலும் இருக்காதோ ..

சேர் தொட்டு பார்த்ததில்லை
வலைத்தளத்திலேயே 
விளை நிலங்கள்
மழை இன்றி உழவு. 

என்ன தரவு வேண்டும் 
எதற்கு மனனம் வேண்டும் 
வலைத்தளமே அறிவு 
இணையமே மூளை. 

சிந்தனையைத் தகர்க்கின்ற 
நிந்தனைதான் வியப்பு 
இதுதான் எதிர்காலச் சிறப்பு.

சிந்தனையால் பிணைந்த வலை 
இதயத்தால் இணைந்த கலை 
அறிவியலே நீதான் விதை.

இணைய நட்பு
இணையா நடப்போ 
இல்லை இதுவும்
இனிய நட்பு. 

-- கோவை எழில் 

No comments:

Post a Comment