Friday, July 31, 2015

உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்

மன்னார்குடி நகர், உளுந்தூர்ப்பேட்டையில் இருந்து 3ஆவது கி.மீ.இல் இருக்கும் சின்னஞ் சிறிய கிராமம்.  திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உளுந்தூர்ப்பேட்டை டோல் கேட்டைக் கடக்கும் போது, கன நேரத்தில் இந்தக் கிராமத்தைக் கடந்து விடலாம்.  ஆனால், சற்று இறங்கி சாலையின் கிழக்கே உள்ள இந்த ஊருக்குள் நடந்துச் சென்றால் நீங்கள் திரும்புவதற்கு இரண்டு மணி நேரம்கூட ஆகலாம். இதற்குக் காரணம் இங்குள்ள விமான ஓடுதளம்.

1942இல் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்த ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது இங்கு போர் விமானங்கள் ஓயாமல் வந்துச் செல்லுமாம். மேற்கில் உள்ள ஓடுதளப் பாதையில் ஜெ 1, 2 என 50 வரை எண்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெட் விமானங்கள் வந்து நிற்பதற்கான அடையாளங்களாக இருக்கக்கூடும்.




இந்த ஓடுதளம் கிழக்கில் பச்சவெளி, மேற்கில் மன்னார்குடி, வடக்கில் நயினார்க் குப்பம், தெற்கில் மாம்பாக்கம் ஆகிய கிராமங்களைத் தொட்டு நிற்கின்றன. நான்கும் ஒரு புள்ளியில் இணைகின்றன.  ஒவ்வொரு திசையிலும் சுமார் ஒரு கி.மீ.க்கும் குறையாமல் இவற்றின் நீளம் இருக்கிறது. அகன்றப் பரப்பில் ஏற்ற இறக்கங்களுடன் ஓடுதளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1954இல் சென்னையில் இருந்து விமானம் மூலம் இங்கு வந்த இந்தியப் பிரதமர் நேரு அவர்கள், இங்கிருந்து நெய்வேலி சென்றிருக்கிறார். தொடர்ந்து, 1961இல் சோவியத் அதிபர் லியோனித் பிரஷ்னெவ் அவர்களும் இந்த விமானத் தளத்திற்கு வந்துள்ளார். மேலும், 1966 நவம்பர் மற்றும் 1967 மார்ச் மாதங்களில் இங்கு விமானங்கள் வந்துச் சென்றதாக, தனது “கெடிலக் கரை நாகரிகம்” நூலில் பதிவு செய்துள்ளார், திரு.சுந்தர சண்முகனார்.

நகர் மன்னார்குடி உள்ளிட்டக் கிராமங்களை விமான ஓடுதளம் இணைப்பதால், அருகில் உள்ள நகரமான உளுந்தூர்ப்பேட்டையின் பெயராலேயே “உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்”  என்றழைக்கப்படுகிறது. 

கடந்த 1.10.2013இல் நகர் (மன்னார்குடி) கிராமத்துக்கு நான் சென்றிருந்தேன்.  அப்போது வீட்டுக்கு வெளியே குளித்துக் கொண்டிருந்த ஒருவர் “எங்கப் போறீங்க?” என விசாரித்தார். “பழைய ஏர்போட்டுக்கு” (இப்படிச் சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும்) என பதிலளித்தேன்.

“ஏன் ஜெட் வருதுங்களா?” அவரது அடுத்தக் கேள்வியில் ஆர்வம் தெறித்தது. இதே கேள்வியைத் தான் பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களில் பலர் ஜெட்டைப் பார்த்தது கிடையாது. ஆனால், ஜெட் எப்போது வந்திறங்கும் எனும் எதிர்பார்ப்பு அவர்கள் கண்களில் தெரிந்தது.   

தற்போது இந்த விமான ஓடுதளம், இப்பகுதி மக்களால் கம்பு, கேழ்வரகு உள்ளிட்டத் தானியங்களை உலர வைக்கும் களமாகவும், சுற்றுவட்டப் பகுதிகளில் இருந்து உளுந்தூர்ப்பேட்டைச் செல்ல குறுக்குவழிச் சாலைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  சுட்டெரிக்கும் வெயிலில் ஓடுதளப் பாதைகளைச் சுற்றி வந்து கொண்டிந்தபோது, பல இடங்களில் கீரிப் பிள்ளைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடித்திரிவதைப் பார்க்க முடிந்தது.


ஒரு காலத்தில் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்தன. இப்போது கீரிப் பிள்ளைகள் விளையாடித் திரிகின்றன.  எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறது, உளுந்தூர்ப்பேட்டை விமான ஓடுதளம்.

 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________ 

கல் மரங்கள்: திருவக்கரை பகுதி


-- சிங்கநெஞ்சம் சம்பந்தம்.

தீக்குழம்பாய் சுழன்று கொண்டிருந்த புவிப்பந்து, குளிரத் தொடங்கியது.  கெட்டிப் பட்டது. பாறைகள் தோன்றின. இவைகளே  தீப் பாறைகள் அல்லது அழற் பாறைகள்- ஆங்கிலத்தில் IGNEOUS ROCKS.

தொடர்ந்து நிகழ்ந்து வரும் தட்ப வெப்ப மாற்றங்களால், பூமியின் மேற்பரபில்லுள்ள பாறைகள் சிதைவுறுகின்றன. இப்படித்தான் மண் உருவாகிறது. இந்த சிதைவுகள் காற்று, மழை மற்றும் ஆறுகளால் அடித்துக் கொண்டுவரப்பட்டு பெரிய ஏரி – கடல் போன்ற நீர் நிலைகளில் படிகின்றன. இந்த நிகழ்வு லட்சக்கணக்கான-கோடிக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும்போது பல நூறு மீட்டர்கள் கனத்திற்கு படிவங்கள் படிந்துவிடுகின்றன. இதனால் அடிப்பகுதியில் உள்ள படிவங்களில் அழுத்தமும் வெப்பமும் அதிகரிக்கின்றன. இதன் விளைவாகவும் இன்ன பிற புவியியல் மாற்றங்களாலும் படிவங்கள் பாறைகளாக கெட்டிப்பட்டு “படிவப் பாறைகள்” ( SEDIMENTARY ROCKS) உருவாகின்றன.

படிவப் பாறைகள் உருவாகும் போது அந்த நீர்நிலைகளில் இருந்த நீர்வாழ் உயிரினங்களும் (சிப்பிகள்-மீன்கள்-நண்டுகள்–நீர்வாழ் தாவரங்கள் போன்றவை), ஆற்றில் அடித்து வரப்பட்ட உயிரினங்கள் மற்றும் மரம் செடி கொடிகளின்  மிச்சங்களும்  படிவங்களோடு சேர்ந்து படிந்து மடிந்து கல்லாய் சமைந்து விடுகின்றன. இப்படிக் கல்லாய்  சமைந்த பழங்காலத்து உயிரினங்களின் மிச்சங்களும்-எச்சங்களுமே ஆங்கிலத்தில் ‘பாசில்ஸ்’(fossils) என்று அழைக்கப்படுகின்றன—தமிழில் “தொல்லுயிரெச்சங்கள்”. இவை பற்றிய கல்வி- ‘தொல்லுயிரியல்’- ‘Palaeontology.’

பொதுவாக தொல்லுயிரெச்சங்கள் படிவப் பாறைகளிலேயே காணப்படுகின்றன. தமிழகத்தின் கிழக்குப் பகுதிகளில் படிவப் பாறைகள் உள்ளன.  தொல்மர எச்சங்கள் திருவக்கரை, நெய்வேலி, அரியலூர் பகுதிகளிலும், தொல்இலை எச்சங்கள் திருப்பெரும்புதூர், அரியலூர், சிவகங்கை பகுதிகளிலும்,  கடல்வாழ் மெல்லுயிரிகளின் எச்சங்கள் அரியலூர் பகுதிகளிலும், டைனோசார் எச்சங்கள் அரியலூர் பகுதியிலும் கிடைக்கின்றன.   

முதலில் கல்மரங்கள் பற்றிக்  காணலாம். இங்கு கல்மரம் (FOSSIL WOOD) எனக் குறிப்பிடப் படுவது இன்று கல்லாகிப் போன பண்டைய காலத்து மரங்களையே ஆகும். இந்தியாவில் கல் மரங்கள் அதிகமாகக் காணப்படுவது நம் தமிழகத்தில்தான். விழுப்புரம் மாவட்டத்தில் , புதுச்சேரி மாநில எல்லையில் உள்ள திருவக்கரை எனும் கிராமத்திலிருந்து (நிறைநிலாக் காலங்களில் பக்தர்கள் கூடும் வக்கிரக் காளியம்மன் கோயில், திருவக்கரையில் உள்ளது.)  ஒரு கி.மீ. தொலைவில்,மிகவும் அரிய, முழுவதும் கல்லாக மாறிப்போன மரங்கள் ஏராளமாக இருக்கின்றன.இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) இந்தப் பகுதியில் கல்மரப் பூங்கா ஒன்றினை அமைத்துக் காத்து வருகிறது.

சென்னையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  (தே.நெ.45), திண்டிவனத்திற்கு தெற்கே பத்து கி.மீ. தொலைவில், கூட்டேரிப்பட்டு எனும் ஊர் உள்ளது. அங்கிருந்து மைலம் வழியே புதுச்சேரி செல்லும் சாலையின் தெற்கே உள்ளது-திருவக்கரை.சென்னையிலிருந்து 150 கி.மீ.; புதுச்சேரியிலிருந்து 3௦ கி.மீ.

சரி, இந்தக் கல்மரம் சொல்லும் கதை என்ன?
“இந்தப் பகுதி இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் பெரும்  நீர்நிலையாய்  இருந்தது. அதையொட்டி இருந்த நிலப் பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனிதரும் வகையை சேர்ந்த மரங்களும் கனிதரா வகை மரங்களும் இருந்தன. இப்பெருமரங்களை அடித்துக் கொண்டுவரும் அளவிற்கு வெள்ளப்ப்பெருக்கு அக்காலத்தில் நிகழ்ந்திருக்கிறது.”

ஆனால், திருமாலின் சீற்றத்திற்கு ஆளான அசுரர்கள் அந்த நெடியோனால் அழிக்கப்பட்டனர் . அந்த அசுரர்களின் எலும்புகளே இந்த நெடிய கற்கள் என்பது உள்ளூரில் வழங்கும் புராணக் கதை.

தமிழகத்தில் படிவப்பாறைகள் உள்ள பகுதிகள்









  


 

 ________________________________________________________ 
 
Singanenjam
singanenjam@gmail.com
________________________________________________________