Saturday, April 24, 2021

ஆதி இந்தியர்கள்

ஆதி இந்தியர்கள்

 ——  ஆலடி எழில்வாணன்

மனித பரிணாம வளர்ச்சியில் இந்தியத் துணைக்கண்டம் பகுதியை அடிப்படையாகக் கொண்டது  “Tony Joseph - Early Indians” என்ற ஆராய்ச்சி புத்தகம். ஆதி இந்தியர்கள் என தமிழிலும் இந்தப் புத்தகம் பலரை ஈர்த்துள்ளது.

எழுத்தாளர் டோனி யோசப் 30+ ஆண்டுகள் பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த பத்திரிக்கைகளில் (Economic Times, Business world and Business Standard) நிருபராக இருந்து ஆசிரியராக உயர்ந்தவர். தன்னை ஒரு நாத்திகவாதியாக அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் டோனி யோசப். இவருடைய முதல் புத்தகமே உலகப்புகழ் அடைந்தது. பரிணாமம் மற்றும் மரபணு போன்ற தலைப்புகளில் பலர் ஆராய, எழுத மற்றும் வாசிக்க என்பவற்றிற்குத் தானும் ஒரு காரணம் எனப் பெருமை கொள்கிறார் டோனி யோசப்.


அழகாக, உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட இந்தப் புத்தகம், பார்த்தவுடன் நம்மைக் கவரும் “never judge a book by its cover” என்பதைப் பொய்ப்பிக்கிறது. 1926- ல் மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிலையைப் பற்றிய ஆய்வுகளை,  2300 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த சுமார் 15 வயது நடனப்பெண், வழக்கத்தைவிட நீளமான கைகள், 24 வளையல்கள், 4 சங்கிலிகள், சிகை அலங்காரம் என அழகாக விவரிக்கிறார்.

“If you want to write, first read” என்ற சொற்றொடருக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் டோனி யோசப். இந்தப் புத்தகத்தில் அவர் மேற்கோள்களாக அடுக்கியுள்ள பல புத்தகங்கள், எழுத்தாளர்கள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் இதரத் தரவுகளே இதற்கு சாட்சி. 260+ பக்கங்களுடைய புத்தகத்தில் Bibliography மட்டுமே பத்து+ பக்கங்கள் என்றால் நினைத்துப் பார்க்கவும்.

இந்நாளில் அரப்பா, கீழடி என்ற செய்திகளால் நாம் ஈர்க்கப்பட, அவற்றை எல்லாம் விஞ்சும் வகையில் சுமார் 65000 - 80000 ஆண்டுகளுக்கு முன்னரே இன்றைய மத்தியப் பிரதேசத்தில், போபால் அருகில் உள்ள பிம்பேத்கா (Bhimbetka) என்ற இடத்தில் மனித தடம் உண்டு என ஆய்வுகளின் தரவுகளை அடுக்கி முதல் பந்தில் சிக்சர் அடித்து தூள் கிளப்புவது போல், ஆரம்பத்திலேயே இந்தியாவைப் பற்றிய ஓர் அரிய தகவலைச் சொல்லி "அட" போட வைக்கிறார் டோனி யோசப்.

நல்ல சமவெளியைச் சுற்றிலும் ஏழு மலைகள், நீர்நிலைகள், சிறிய விலங்குகள், பாறைகள், குகைகள் எனப் பல இருக்க, சில குகைகளின் சுவற்றில் மனித கைத்தடங்கள், மேலும் அவற்றில் உள்ள கைகளின் அளவை வைத்து அது ஆண், பெண் அல்லது சிறுவர் என கணக்குகளைச் சொல்லி பிம்பேத்காவை விவரிக்கையில் நாம் ஆச்சரியப்படவில்லை என்றால் குறை நம்மிடமே.

“ பீட்சா (Pizza)”, இது என்ன? என ஒரு காலத்தில் கேட்டவர்கள் நாம். ஆனால் இன்று இது குக்கிராமத்தில் கூட கிடைக்கும் துரித உணவு. நம் இந்தியப் பகுதியின் 65,000 ஆண்டுகளின் மனித பரிணாமத்தை பீட்சாவோடு ஒப்பிடுகிறார் புத்தக ஆசிரியர். மனித பரிணாம ஆரம்பத்தின் பல்லாயிரம் ஆண்டுகளை பீட்சாவின் அடித்தளமாக (crust), கடந்த 10,000 ஆண்டுகளை பீட்சா மீது பரப்பும் தக்காளி குழைவு (sauce) போல, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளை பீட்சா மேல் தூவும் பாலாடைக்கட்டி (cheese) என, கடந்த பல நூற்றாண்டுகளைப் பலவகை உணவுகளை அடுக்குவது (toppings) என எடுத்துரைத்து நம் பரிணாமத்தை பீட்சாவுடன் சுவையாக சொல்லி சிலாகிக்க வைக்கிறார் டோனி யோசப்.

இந்தியத் துணைக்கண்டத்தில் கடந்த 65,000 ஆண்டுகளுக்கான மனித பரிணாமத்தையும், குறிப்பாக மரபணு ஆய்வுத் தரவுகளாலும் புரியவைக்கிறார். Haplogroup என்ற மரபணு குழுவால் ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதனின் பல லட்ச ஆண்டுகளின் பரிணாமத்தை மரபணு அறிவியலுடன் குறிப்பாக mtDNA போன்றவற்றை ஆசிரியர் புரியவைத்தது இந்தப் புத்தகத்தின் வெற்றி. 

உதாரணமாக உடல் செரிமானத்திற்கான DNA பற்றி கூறுகையில், ஆரியர்கள் பால் மற்றும் பால் பொருட்களை எளிதாக செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும்  திராவிடர்கள் ஆடு, மாடு மற்றும் மீன்களை உண்டு செரிக்கும் தன்மை உடையவர்கள் என்றும் மரபணு வித்தியாசத்துடன் எடுத்துரைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்பதை உலகமே ஏற்றுக் கொண்ட போதிலும், சமீபகாலம் வரை சீனர்கள் இதனை ஏற்கவில்லை. தங்கள் உருவம், உயரம், சருமம் மற்றும் ரோமத்தின் வித்தியாசங்களை மேற்கோளிட்டு மறுத்தவர்கள், மரபணு ஆய்வின்படி உணர்ந்த பின்னரே ஏற்றனர்.

இது போன்ற ஆச்சரியங்களை மந்திரத்தோடு (Magic) ஒப்பிடுகிறார் டோனி யோசப். அதாவது சிறுவயதில் நாம் மந்திரங்கள் மற்றும்  மந்திரவாதிகளை முதலில் ஆச்சரியமாகப் பார்ப்போம். அதன் பின்புலத்தில் உள்ள யுக்திகள் தெரிந்த பின் சற்று தளர்ந்து “அட இவ்வளவு தானா!” என நினைத்து சில நாட்களுக்குப் பிறகு ஆழமாக உற்று நோக்குவோம். இன்றைய கால கட்டங்களில் மரபணு ஆய்வை மனிதன் உற்றுநோக்குகிறான்.

மனித இனத்தின் தொட்டிலாகத் (Cradle of Human Civilisation) திகழ்கிறது ஆப்பிரிக்கா. மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு இடம்பெயர்வு (Migration) அதி முக்கிய காரணியாகிறது. பல ஆய்வாளர்கள் OoA - Out of Africa என்ற கோட்பாட்டை நம்புகின்றனர்.

ஆடு, மாடு போன்றவற்றின் உணவுக்காக மேய்த்தல் தொழிலுடன் இடம்பெயர்வு நடந்துள்ளது. Steppe (Eurasia தென் கிழக்கு ஐரோப்பா) என்ற இடம் சமமான நீர்நிலைகளுடைய, புல்வெளி நிலப்பரப்புடன் மனிதனுக்குத் தோதாக அமைந்திருந்தது. இங்கு தான் வேளாண்மை ஆரம்பித்திருக்க வேண்டும் என டோனி யோசப் ஆதாரத்துடன் எடுத்துரைக்கிறார். வேளாண்மை வளர வளர மனிதனின் இடம்பெயர்வு குறைய ஆரம்பித்து  மக்கட்தொகை மிக வேகமாக உயர்ந்தது. சிலர் இடம்பெயர்வு செய்து இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் அரப்பா நாகரீகத்தைத் தோற்றுவித்தனர்.

மனித இனத்தின் இடம்பெயர்வு ஆப்பிரிக்காவில் தொடங்கி, ஐரோப்பா சென்று, அங்கிருந்து Steppe நிலப்பரப்பு வழியாக ஆசியா முழுக்க வெவ்வேறு திசைகளில் படர்ந்து, அலாச்கா வழியாக வட அமெரிக்கா, பிறகு தென் அமெரிக்கா என பரவி பல லட்ச ஆண்டுகளாக பரிமாணித்து இன்று பூமி முழுவதுமாக தழைக்கிறது.

தெற்காசிய துணைக்கண்டத்தில், பல திசைகளில், பல காலங்களில் இடம்பெயர்வு நடந்துள்ளது என்பதைப் பல ஆய்வுக் கட்டுரைகளை மேற்கோளிட்டு நிரூபிக்கிறார் டோனி யோசப். குறிப்பாக அரப்பா நாகரீகத்தைப் (Harappa Civilisation) பற்றி இந்தப்  புத்தகம் ஆழமாக அலசுகிறது. கிமு 6000 - ஆவது ஆண்டு காலத்தில் அதிக மக்கட்தொகை கொண்ட பகுதி, நகர நாகரீகம், வேளாண் சிறப்பு, வர்த்தகம், கலை, மொழி என ஏற்றமிக்கதாக விளங்கியது அரப்பா நாகரீகம்.

சாந்தி பாப்பு என்ற தொல்பொருள் ஆய்வாளர், சென்னை அருகே உள்ள அத்திரம்பாக்கத்தில்,  1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதன் பயன்படுத்திய கற்களாலான ஆயுதங்களை ஆதாரத்துடன் நிரூபித்தார். 

பரிணாம வளர்ச்சியால் எப்படி மனிதனின் உடலும், குணமும் காலப்போக்கில் மாறியதோ, அதனைப் போலவே மனிதன் கட்டுப்படுத்திய விலங்குகளின் தகவமைப்பும் (கொம்பு, பற்கள், வால், முடி) மனிதனுக்கு ஏற்றபடி மாறின. இதற்குத் தாவரங்களும் விதிவிலக்கல்ல. குறிப்பாக விதைகளின் தன்மை, தண்ணீரின் தேவை, வேர்கள் என பல உதாரணங்களை அடுக்குகிறார். பரிணாம வளர்ச்சியால் மனிதனின் இடப்பெயர்வு மிகவும் குறைந்து, ஆயுள் நீடித்து, மக்கள் தொகை பெருகியது. வீரமும், வலுவும் மிக்கவர்களே இடம் பெயர்ந்தனர்.

பல ஆய்வு ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தியர்களை இரண்டாக வகுக்கிறார்கள் 
ANI - Ancestral North Indians (மூதாதைய வட இந்தியர்கள்)
ASI - Ancestral South Indians (மூதாதைய தென் இந்தியர்கள்)
மூதாதைய வட இந்தியர்கள் (ANI)  Steppe வழியாக அரபு, ஆப்கானிஸ்தான் மற்றும் சிந்து சமவெளி வழியாக வந்துள்ளனர். மூதாதைய தென் இந்தியர்கள் (ASI) கடல் பகுதியை ஒட்டிய அரபிக்கடல் வழியாக தென்னகம் வந்துள்ளனர். இன்றும் வட இந்தியர்களின்  மரபணுவில் பால் மற்றும் தானியங்களை உண்டு செரிக்கும் தன்மை கூடுதலாகவும், தென் இந்தியர்களின் மரபணுவில் இறைச்சியை உண்டு செரிக்கும் தன்மை அதிகமாகவும் உள்ளது எனவும் மரபணு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. ஆரிய, திராவிட என இரண்டு நாகரீகங்களும் விவசாயத்தைச் சார்ந்துதான் தழைத்துள்ளன.

நீர்நிலைகளை அமைத்து நீராதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருந்த பகுதி மெசபடோமியாவில் உள்ள ஊருக் பகுதி. வட மற்றும் தென் இந்தியர்கள்  இந்தப் பாதையைக் கடந்து வந்துள்ளதால் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தனர். அரப்பா, மெசபடோமியா நாகரீகம் போலவே தெற்கிலும் ஒரு நாகரீகம் இருந்திருக்க வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இன்று அரப்பாவிலும், கீழடியிலும் மனிதன் நீர் மேலாண்மைக்கான சான்றுகள் பல உள்ளன.

வட மற்றும் தென் இந்தியர்களுக்குள்  மரபணு, உருவம், உணவு, உடை எனவாறு வேறுபாடுகள் பலவாக இருந்தாலும், மொழிதான் இவர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. அரப்பா மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் என இரண்டு பிரிவுகளாக மொழியால் உருமாறியது.  தென்னிந்திய மக்கள் பேசிய மொழி அவர்களாகவே உருவாக்கியிருக்க வேண்டும். இங்கிருந்துதான் பல சொற்கள் இடப்பெயர்ந்துள்ளன. அதே சமயம் வட இந்திய மொழிகள் அதன் இடப்பெயர்வு பகுதிகளில் பேசிய மொழியைத் தழுவி,  மருவி புதுப் புது மொழிகளாகத் தோன்றி, பலமொழிகளை வழக்கொழிய வைத்துள்ளதைக் குறிப்பிட்ட பகுதியை இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதியாக உணர்கிறேன். 

மொழிகளில் திராவிட மொழியின் ஆதிக்கமே உள்ளது என மரபணு ஆய்வு உட்படப் பல ஆய்வுகளை மேற்கோள்களாகக் காட்டுகிறார். இதில் மிக சுவாரசியமானதாக, நாக்கை சுழற்றி பேசும் வார்த்தைகள் (Retroflex consonants) திராவிட மொழியின் தனித்தன்மை என நம்மை நிமிர வைக்கிறார் டோனி யோசப். 

கடந்த 2000 ஆண்டுகளாக ஆரிய மொழியினரின் ஆளுமைகள் வட மொழியை  வேத மொழி என்றழைத்து, கடவுளிடம் பேசும் மொழி என நம்பவைத்தனர். இரண்டாம்-மூன்றாம் நூற்றாண்டுகளில், மவுரிய பேரரசு காலத்தில் வேதமொழியாக சமற்கிருதம் இருந்துள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் மட்டுமே இந்தியர்கள் 73 இனக்குழுக்களாக இருந்துள்ளனர். இத்தனை சிறிய இடத்தில் 73 இனக்குழுக்கள் என்பது மிக மிக ஆச்சரியமான ஒன்று. இந்த இனக்குழுக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வர்ணங்களாக, ரிக்வேதமென மவுரியர்கள் வகுத்தனர். அவை அப்படியே காலப்போக்கில் சாதிகளாக, படிநிலைகளாக பல நூற்றாண்டுகள் இருந்துள்ளன. சைவ, வைணவ, புத்தமதம், இசுலாம், கிருத்துவ என பல மதங்களின் ஆளுமையிலும் கடவுளிடம் உரையாடும் வேதமொழி என இன்றும் இதன் தாக்கம் உள்ளது. 

காந்தி, அம்பேத்கர், மார்கசு மற்றும் பெரியாரின் சிந்தனைகள் கூட இந்தப் படிநிலைகளை இன்னமும் மீட்க முடியவில்லை. 

Out of Africa என 60-80ஆயிரம் ஆண்டுகளாக இடம்பெயர்வு, பல திசைகளிலும், பல முறைகளிலும் இடம்பெயர்வு, அரப்பா நாகரீகம், இனக்கலப்பு, பின்னாட்களில் மொழி வேற்றுமை, மொழி ஆளுமை, கடவுள் வழிபாட்டில் மொழி, மதம் என உலகில் வேறெங்கும் இல்லாத படிநிலைகளை இந்தியத் துணைக்கண்டம் பெற்றுள்ளது. பல கலப்புகள் மற்றும் பல பங்களிப்புகளின் கலவையாகவே இன்று இந்தியர் என்ற ஒற்றை குறியீட்டில் உள்ளோம். ஆனால் உண்மையில் நாம் அனைவரும் குடியேறியவர்களே! 
"YES WE ARE MIGRANTS...."






Wednesday, April 21, 2021

தமிழ்த் தாயின் அரிய மைந்தன் - பாரதிதாசன்

தமிழ்த் தாயின் அரிய மைந்த!


-- புதுவைச் சிவம்

சீர்மணக்கும் செந்தமிழிற் புலமை சான்றோய் !
          தித்திக்கும் கவிதையினில் எழுச்சி யூட்டிப், 
பார்மணக்கச் செய்திடுவோய் ! உயர்க ருத்துப்
          பாவாண! நற்கனக - சுப்பு ரத்னப் 
பேர்கொண்டோய் | பாரதியார் மதிக்கும் அன்பு
          பெற்றதால், பாரதிதாசன் எனும் பேர் பூண்டோய்! 
ஏர்மிக்க தமிழ்த்தாயின் அரிய மைந்த!
          இந்நாளில் எமைவிட்டுப் பிரிந்த தென்னே! 

துயில்கின்ற தமிழகத்தைத் தட்டித் தட்டித்
          தூயபணி யாற்றிடவே கவிதை தந்தோய்! 
பயில்கின்ற பேதங்கள் மூடக் கொள்கை
          பறந்திடவே பகுத்தறிவுப் பாடல் சொன்னோய்! 
செயிர்விளைக்கும் சாத்திரங்கள் மதங்கள் யாவும்
          சிதைந்தழியப் புரட்சிப்பா புகட்டி வந்தோய்! 
அயர்வகற்றித் தமிழரெலாம் விழிப்புக் கொண்டே
          அடிமைதனை நொறுக்குகையில், மறைந்த தென்னே! 

செந்தமிழை யழிப்பதற்குக் கொண்டு வந்த
          தீய இந்தி தனையெதிர்க்க வீரந் தந்தாய்! 
பைந்தமிழின் கலையழிக்கும் பகைக்கூட் டத்தைப்
          பாதாளஞ் சேர்த்திடவே துடித்து நின்றாய்! 
விந்தையுறு தமிழகத்தின் ஆட்சி காண
          வெஞ்சமரே நேரிடினும் அஞ்சோ மென்று 
சந்தமொழிக் கவிதையினைப் பாடி வந்த
          தளபதியே, நீ இதற்குள் மறைந்த தென்னே!

கலைவளர்க்கத் துடித்திட்டாய்! குறட்பா வுக்குக்
          கருத்தமைத்தாய் புதுமுறையில் ! மேனாட் டாரின் 
மலைபோன்ற அறிவியல்நூல் தமிழில் தோன்ற
          வளர்த்திட்டாய் நல்லார்வம்! தமிழ்ச்சொல் ஆட்சி 
குலைத்திடவே மாறுபொருள் கூறி வந்த
          கொடியருக்கு நல்லறிவு புகட்டி வந்தாய்! 
விலைமதிக்க முடியா உன் கவிதை தன்னை
          விண்ணவருக் களித்திடவே சென்றா யோநீ!

இருபதெனும் நூற்றாண்டில் தமிழ கத்தே
          இணையற்று விளங்கிவந்த கவிஞ ரேறே ! 
ஒருநொடியில் தயக்கமின்றிக் கவிதை சொல்லும்
          உயர்புலவ! வண்ணப்பா இயற்றுங் காலை, 
பெரும்புலமை யுடையவரும் இடரே கொண்டு
          பேதளிப்பர்; மலைவின்றி விரைந்த ளிக்கும் 
ஒருபுலவ! உனை என்று காண்போம் ? இந்த 
          உலகத்தில் உன்கவிபோல், புகழே கொள்க !



— இது, 22-4-64-ல், இடுகாட்டில் நடைபெற்ற இரங்கற் கூட்டத்தில் பாரதிதாசன் மாணவர் ச. சிவப்பிரகாசம் (புதுவைச் சிவம்) அவர்கள் கூறியது.





---

Friday, April 16, 2021

தமிழால் இணைவோம்! தமிழால் உயர்வோம்!

தமிழால் இணைவோம்!  தமிழால் உயர்வோம்!

வணக்கம்.


வியந்து நிற்கின்றோம். 2015ஆம் ஆண்டு ஏப்ரல் தொடங்கிய நமது மின்தமிழ்மேடை காலாண்டு ஆய்விதழ் இன்று 25வது இதழாக மலர்ந்து நிற்கின்றது. 154 எழுத்தாளர்கள் இதுவரை நமது காலாண்டிதழில் பங்களித்துள்ளார்கள் என்பதோடு 848 பதிவுகள் இதுவரை நமது காலாண்டிதழில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அனைத்தும் ஆய்வுத் தரமும் சமூகப் பார்வையும் என்ற வகையில் உயர்ந்த தரத்துடன் கூடிய படைப்புகளாக வெளிவந்துள்ளன. 

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தொடங்கப்பட்ட 2001 ஆம் ஆண்டு முதல் நமது கவனமும் செயல்பாடுகளும் தரமான ஆய்வுகளை நோக்கியதாகவே அமைந்தது. தமிழக வரலாறு சார்ந்த பல்வேறு தரவுகளைச் சரியாக ஆவணப்படுத்தி ஆய்வு செய்யும் செயல்பாட்டை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் தனிக்கவனத்தைத் தமிழ் மரபு அறக்கட்டளை கொண்டிருக்கின்றோம். அத்தகைய சீரிய பணியில் மின்தமிழ் மேடை எனும் இக்காலாண்டிதழ் தனிச் சிறப்பு பெறுகிறது.

கல்வெட்டுக்கள், சிற்பங்கள், பயணக்குறிப்புகள், உலகளாவிய தொல்லியல் கண்டுபிடிப்புகள், நாட்டார் வழிபாட்டு மரபு சார்ந்த ஆய்வுகள்,  தமிழர் வரலாறு,  தமிழ் இலக்கியங்கள் என்றிவை மட்டுமல்லாது சமூக நலன் சார்ந்த, சமூக அக்கறை கொண்ட பார்வையுடன் கூடிய ஆக்கங்களும் நமது மின்தமிழ் மேடை காலாண்டிதழை அலங்கரிக்கின்றன. இது மேலும் தொடரும்!

தமிழ் மரபு அறக்கட்டளையின் பதிப்பகப் பிரிவு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் முதல் இரண்டு நூல்களாக திருக்குறளின் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜெர்மானிய மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு, ஆங்கில அறிமுக உரையுடன் வெளிவந்தன. இதனை அடுத்து `திருவள்ளுவர் யார்? கட்டுக்கதைகளைக் கட்டுடைக்கும் திருவள்ளுவர்` என்ற நூலும் 2019ஆம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது.

2020 ஆம் ஆண்டு `நாகர்நிலச் சுவடுகள்` என்ற நூலை நாம் வெளியிட்டோம். கொரோனா தொற்றுநோய் பரவல் தொடர்பான ஊரடங்கு ஏற்பட்ட சூழலால் நமது பதிப்பகப் பணியில் சற்றே சுணக்கம் ஏற்பட்டது. ஆயினும் அதனைக் கடந்து வந்து இந்த 2021 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக வரலாற்று ஆய்வு நூல்களை வெளியீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன் தொடக்கமாக இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மறைந்த பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது நினைவுகளைத் தாங்கிய வெளியீடாக `அறியப்பட வேண்டிய தமிழகம்` என்ற நூல் நமது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  இப்போது டாட்.காம் அமைப்புடன் இணைந்த வகையில் `கீழக்கரை வரலாறு` என்ற நூலை இவ்வாண்டு மார்ச் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு செய்திருந்தோம். இதனை அடுத்து தொடர்ச்சியாகத் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகளாக சில நூல்கள் இப்போது தயார் நிலையில் உள்ளன. அவை பற்றிய செய்திகள் படிப்படியாக நமது திணை மாத இதழிலும் நமது செய்தி ஊடக பகுதிகளிலும் பகிர்ந்து கொள்ளப்படும்.

இவ்வாண்டு தமிழகத் தலைநகர் சென்னை மாநகரில் மிகச் சிறப்பாக நடைபெற்ற 44வது புத்தகக்கண்காட்சி நிகழ்ச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் பிரதிநிதிகள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. நூல் வெளியீடுகள் மற்றும் உரைகள், சிறப்புரைகள் என்ற வகையில் இந்தப் பங்களிப்பு அமைந்திருந்தது. 

தரமான ஆய்வு நூல்களை வரலாற்று ஆர்வலர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருப்பதோடு ஏனைய பதிப்பகங்களின் வெளியீடுகளாக வருகின்ற ஆய்வு தரம் நிறைந்த நூல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தையும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுதியாக ஏற்றிருக்கின்றோம். அந்த வகையில் நமது முக்கிய பொறுப்பாளர்கள் தொடர்ச்சியாக நல்ல நூல்களை வாசித்து அவற்றை விமர்சனம் செய்வது அவற்றைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வழங்குவது என்ற பணிகளையும் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.  அத்தகைய படைப்புகளுக்குத் தளமாக அமைகின்றது நமது மின்தமிழ் மேடை எனும் இக்காலாண்டிதழ்.

தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் வெளியீடுகளை வாங்கி உங்கள் ஆதரவை வெளிப்படுத்துங்கள். 

தமிழால் இணைவோம்!  தமிழால் உயர்வோம்!

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

Tuesday, April 13, 2021

தமிழ் இலச்சினைகள்

 தமிழர்களின் கலையை உலகுக்கு கோட்டோவியமாகப் பரப்பும் நோக்கில் வள்ளுவர் வள்ளலார் வட்டத்தின் தமிழ் இலச்சினைகள் உருவாக்கும் திட்டத்தின் கீழ்  சுமார் 325  ஓவியங்கள்  இதுவரை வரையப்பட்டுள்ளன.  ஓவியர் ஜீவா வரைந்தளித்த, காப்புரிமை நீக்கப்பட்ட  இந்த ”தமிழ் இலச்சினைகள்” ஓவியங்கள்  ஜனவரி  2021 இல் மக்கள் பயன் பாட்டிற்காக வெளியிடப்பட்டன. 


தேவையான எந்த அளவிற்கும் பெரிதுபடுத்தி அச்சிடும் வகையில் VECTOR வடிவில், விக்கிப்பீடியாவில், பொது உரிமத்தின் கீழும் இவை பதிவேற்றப்பட்டுள்ளன

 jeeva.JPG

நார்வே நாட்டைச் சேர்ந்த திரு. இங்கர்சால் அவர்களின் முன்னெடுப்பில் வள்ளுவர் வள்ளலார் வட்டம்  உருவாக்கிய இந்த தமிழ் இலச்சினைகள் படத்தொகுப்பில் தமிழர் பண்பாட்டின் அடையாளங்களாக நாம் காணும்;  கடவுளர்கள், அரசர்கள், கலைகள், வாழ்வியல்கள், இறைபொருட்கள், இசைக்கருவிகள், போர்க்கருவிகள், சமையல் கருவிகள், வாழ்வியல் சடங்குகள் எனப் பல பிரிவுகளில் இடம் பெறக்கூடிய படங்கள் இடம் பெறுகின்றன.   

ilachinai.jpg

இந்தத் தொகுப்பில் தமிழர் வாழ்வியல் பிரிவிற்குள் அடங்கக்கூடிய சில படங்களைத் தேர்வு செய்து வாழ்க்கை நிலைகளை  வரிசைப்படுத்தி   4 பகுதிகள் கொண்ட ஒரு கதை போல உருவாக்கினேன்.

A.jpg
---
B.jpg
---
C.jpg
---
D.jpg
---
வள்ளுவர் வள்ளலார் வட்டம் :
யூடியூப் 

ஃபேஸ்புக் 

ஆர்க்கைவ் 

-----