Saturday, September 29, 2018

மகரவிளக்குச் சுடரில் மனிதம்!!

--  ருத்ரா இ.பரமசிவன்.






இருமுடி தாங்கு.
கல் முள் பாராமல்
உயரம் கண்டு
சளைக்காமல்
முன்னேறு.
ஏன்? எதற்காக? என்ற
கேள்விகளும்
அந்த கேள்விகளே
விடைகளாகி
விஞ்ஞானமாகிப்போன‌
ஒரு கண்ணுக்குத்தெரியாத‌
மாயமூட்டை தானே
இந்த இருமுடி.
படித்தவர்கள்
மெத்தப்படித்தவர்கள்
படிக்காதவர்கள்
கண்ணுக்கு முகமூடி போட்டு
வெல்டிங் செய்யும் தொழிலாளிகள்
பாரஞ்சுமக்கிறவர்கள்
எல்லோருமே
சுமக்கின்ற இந்த பக்தியில்
மதங்கள் இல்லை.
கடவுள்கள் இல்லை.
சமுதாயப்பிரளயத்தின்
சிறு பிஞ்சாய்
சிறிதிலும் சிறிதான‌
சமுதாய தாகமாய்க்கூட‌
இது மலையேறிக்கொண்டிருக்கலாம்.
இதில் எப்படி
பெண்மை எனும் தாய்மை
விலக்கப்பட்டது.
அந்த "மாதவிலக்கு" தான்
விலக்கியதா?
அது விலக்கப்படவேண்டியதல்லவே!
நம் ஆன்மாவை விளக்கும்
மகரவிளக்கே அது தானே.
உயிர் ஊற்றின் இந்த‌
ரத்தம் சுரந்த
தாய்ப்பாற்கடலில் தானே
பரந்தாமன் படுத்துக்கொண்டு
முதல் தோற்றம் எனும் அந்த‌
பிரம்மத்தின்
நாபிக்கமலத்தை உயர்த்திப்
பிடித்துக்கொண்டிருக்கிறான்.
ஓங்கி உலகளந்த அந்த உத்தமத்தை
ஓங்கி ஒலிக்கப்பாடியதே
அந்த பெண்மை தானே.
"பெண் அசிங்கம்"என்றும்
அது வேதச்சுவடிக்குள் கரையான்கள்
என்றும்
பாஷ்யம் சொல்பவர்களே
இதன் மூலம் உங்கள்
அத்வைதத்தையும் அல்லவா
குப்பையில் எறிகிறீர்கள்!
பேரிடர் இதனால் தான் வந்தது
என்றீர்கள்.
இப்போது தான் புரிந்தது
அந்த சமூக அநீதியை
எதிர்த்து அல்லவா வந்தது
அந்த பிரளயம் என்று.
மதவாதிகளே
இப்படி உங்கள் முகம்
அசிங்கப்பட்டு நிற்கும் அந்த‌
களங்கம் துடைக்கப்பட‌
துடைப்பம் தந்த அந்த‌
நீதியரசர்களுக்கு எங்கள் வந்தனங்கள்.




படம்: இணையத்தில் இருந்து - temple.dinamalar.com

 ________________________________________________________________________
தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் ( ruthraasivan@gmail.com)

Friday, September 28, 2018

கலைஞரின் சமூகப் பயணம்

— முனைவர் அரங்கமல்லிகா



          இந்திய அரசியலில் தொடர்ந்து கவனிக்கத்தக்க ஓர் ஆளுமை, முத்துவேல் கருணாநிதி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க) ஒரு பகுதியாக இருந்து உறுப்பினர்களை நிறுவி 1969 இல் இருந்து கட்சியை வழி நடத்தி வந்தவர். தமிழ்ச் சமூகத்தின் மீதும் விளிம்பு நிலை மக்கள் மீதும் அவருக்கு இருந்த வளர்ச்சிசார் சிந்தனைகளின் பேரார்வம்தான் தமிழ்நாட்டின்  தலைசிறந்த  முதலமைச்சராகக் கலைஞரை உயர்த்தியது.  ஒரு நீண்ட நெடிய தமிழ்ப் பாரம்பரியப் பண்பாட்டை வளர்த்தெடுத்த பெருமை கலைஞருடையது. 60 ஆண்டுகளாக அரசியலில் தொடர்ந்து ஒரு வலிமையான ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் திசைக்காட்டியாகவும் தி.மு.கழகம் உயிர்ப்புடன் இருந்து வரச் செய்தவர். தன் கட்சியினரையும், தோழமைக் கட்சியினரையும் திறம்பட வழிநடத்தி வந்தவர்.

          “கலைஞர்” என மக்களின் மனங்களில் நிறைந்தவர். தமிழ் இலக்கியத்தில் அவருக்கு ஆழ்ந்த புலமையுண்டு. சமூகத்தின் கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் திராவிட எழுத்துக்களில் கலைஞரின் எழுத்துக்குத் தனி இடமுண்டு. புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வரும் இக்காலத்தில் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்தும் இயங்கி தன் சிந்தனைகளைப் பதிவிடுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர். ஏறத்தாழ இரண்டு லட்சம் முகநூல் வாசகர்களின் வாசிப்பிற்குச் சிந்தனை விதைத் தெளித்தவர். இந்தத் தொழில்நுட்ப அறிவு ஆர்வம் தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு மானுட வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்கிறது.

          இலக்கிய ஆர்வம் தமிழ்த்திரை உலகிலும் தொடர்வதற்குப் பயனளித்தது. திரைக்கதை, வசனம், எழுதுவதில் வல்லவரான கலைஞர் சமூகத்தில், மூடநம்பிக்கைகளோடு வாழ்ந்து வரும் மக்களின் செயல்பாடுகளைக் கண்டித்தவர். விதவைகள் மறுமணம், தீண்டாமை ஒழிப்பு மற்றும் சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றை வசனங்களாகப் பேசவைத்தவர், குறிப்பாக இந்து பிராமண ஆதிக்க எதிர்ப்பைப் ‘பராசக்தி’ வசனத்தில் வைத்து இன்றும் சமூகத்தின் முரணைச் சிந்திக்கச் செய்திருக்கும் கலைஞரின் சமூக நுண்ணறிவு கவனிக்க வைத்தது.

          தமிழுக்குச் செம்மொழி தகுதிபெற்று செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தை உண்டாக்கிய பெருமை அவருக்குண்டு. ஒன்பதாவது உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 இல் கோவையில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. இந்த மாநாட்டை ஈழத் தமிழர்கள் புறக்கணித்தனர். தமிழ்த் தேசியவாதிகளில் சிலரும் கலந்துகொள்ளவில்லை. எனினும் அம்மாநாட்டினைக் கலைஞர் மிகச் சிறப்பாக நடத்தினார். தமிழ் படித்த இளைஞர்கள், தமிழ்மொழியில் ஆய்வு செய்த ஆய்வியல் மாணவர்கள் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறும் அறிவிப்பை எதிர்நோக்கினர். தமிழியல் துறையில் வல்லமை பெற விரும்பிய கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாட்டில் தமிழ்ப்படித்து ஆய்வில் முனைவர்களாக இருப்பவர்களுக்கு வேலையில் முன்னுரிமை, தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க இயலாத காலத்தின் கைதியாகக் கலைஞர் இருந்தது காலத்தின் கொடுமை என்றே சொல்ல வேண்டும்.

          திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலையும் கலை இலக்கியப் பண்பாடும் வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ்மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வேண்டுகோள் வைத்தவர் கலைஞர். அவ்வேண்டுகோள் வெற்றிபெறமுடியாது போனாலும் தமிழுக்காக தமிழ்மொழிக்காகப் பாடுபடுவதை எந்நாளும் எந்நொடியும் நிறுத்தாதவர் கலைஞர் அவர்கள். சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டுசெல்ல தொலைக்காட்சியைப் பயன்படுத்துவதும் இவரது சிறந்த வழிமுறைகளில் ஒன்று. பல்வேறு தொடர்கள்: குறிப்பாக இராமானுஜர், தென்பாண்டிசிங்கம் ஆகிய தொடர்களினூடே சமூகத்தை எளிய மக்களுக்குப் புரியவைக்க முயற்சித்தவர். கலை உணர்வும் தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றும் பிரச்சார தொனி உடையவை எனக் கலையியல் வாதிகள் பலரும் குற்றம்சாட்டுவதுண்டு. ஆனால் அழகியல் தன்மையோடு உலகளாவிய இலக்கியத் தரத்தை மையமிட்டு எழுதுவதே சிறந்த எழுத்தாளர் எனக் கட்டுக்கதைகள் படைக்கும் சிலருள் கலைஞர் பொருந்தமாட்டார் என்பது உண்மை.

          சட்டசபையில் கேள்வி- பதில் நேரத்திலும் கூட தமிழ் உணர்வோடு பொருந்திய நகைச்சுவையோடு பதில் அளிப்பதில் அவருக்கு இணையான அரசியல்வாதி யாருமில்லை. அவருடைய படைப்புகளில் வரும் கதை மாந்தர்கள் சமுதாய மாற்றத்திற்கானவர்களாகப் படைத்துக்காட்டுவது அவரின் தனிச்சிறப்பு. மற்ற இலக்கியவாதிகளைப் போல, புரியாமல் எழுதுவதே சிறந்த இலக்கியம்; உலக இலக்கியமே உன்னத இலக்கியம் என்று சொல்லிக்கொண்டு, தமிழகக் கலைகள், வரலாறு மறந்து அந்நியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர் அல்ல.

          தம் அரசியல் வாழ்க்கையில் தமிழ்நாடு இலவச காப்பீட்டுத் திட்டம், சமத்துவபுரம், ஒரு ரூபாய்க்கு அரிசி போன்ற பல புரட்சிகர திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழக ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பட அயராது உழைத்தவர். மாநிலப் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தத் தொழில்துறையில் பல முன்னேற்றங்களைச் கொண்டு வந்தவர்.

          1957 இல் அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முதல்முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலம் தொடங்கி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் அரசியல் கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளித்தது வரை கலைஞர் தமிழக அரசியலின் சாணக்கியராகப் பரிணமித்திருப்பதை வரலாறு பேசித்தான் ஆகவேண்டும்.

          புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் சிந்தனைகளை மனங்கொண்டாலும் தனக்கான பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்ள தமிழ்மொழியை அச்சாரமாகக் கொண்டு செயல்பட்ட கலைஞர் தமிழர்களின் அரசியல் அடையாளம் என்பது மறுக்க முடியாதது. இவ்வாறு கலை, இலக்கியம், அரசியல், ஊடகம், பொதுவாழ்க்கை என்ற அனைத்திலும் காலத்தை வென்று நிற்பவர் கலைஞர்.



___________________________________________________________
தொடர்பு:
முனைவர் அரங்கமல்லிகா
இணைப் பேராசிரியர், இயக்குநர்
எத்திராஜ் மகளிர்  கல்லூரி, சென்னை – 600 008
arangamallika@gmail.com

Thursday, September 27, 2018

பள்ளிப்புரம் கோட்டை

பள்ளிப்புரம் கோட்டை
PALLIPPURAM FORT

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



முன்னுரை:
            “திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்ட தொல்லியல் நூல் தொகுதியில், தற்போதையத் தமிழகத்தின் தென்கோடிப் பகுதி மற்றும் பழந்தமிழ்நாட்டின் சேர நாட்டுப்பகுதி ஆகிய நிலப்பரப்பில் காணப்படுகின்ற தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய அரிய வரலாற்றுப் பதிவுகள் கூறப்படுகின்றன. இந்த நூலின் தொகுதிகளில் சில படிக்கக் கிடைக்கும்போது, சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் விழைவு தவிர்க்க இயலாததாகின்றது.  சங்க காலத்துத் தமிழகத்தின் முப்பெரும் நாடுகளுள் ஒன்றாகச்  சேர நாடு அமைந்திருப்பினும், சங்ககாலத்துக்குப் பின்னர் இடைக்காலத்திலிருந்து சேர நாட்டின் மொழி, மக்கள் பண்பாடு ஆகியவற்றில் தனித்தொரு மாற்றம் இருப்பதாகவே தோன்றுகிறது. மொழி தமிழாகவும், எழுத்து வட்டெழுத்தாகவும் இருந்த நிலை மெல்ல மாற்றம் பெற்று மொழி மலையாளமாகவும், வட்டெழுத்திலிருந்து பிரிந்து தமிழ்-கிரந்த எழுத்தின் துணையோடு எழுத்தும் மலையாளமாகவும் புது உருவம் கொள்கின்றன. இந்த மாற்றங்களை, தமிழ் வேரின் அருகிலிருந்து அடையாளம் காணக் கணக்கற்ற தரவுகளை உள்ளடக்கியதாக மேற்படி நூல் தொகுதி அமைகிறது.  வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துச் செப்பேடுகள் ஆகியன பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு நிறையச் செய்திகள் உள்ளன. சிலவற்றைப் பகிர்ந்துகொண்டும் வருகிறேன். இங்கே, அண்மையில் படித்த  15-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி ஒன்றின் பதிவைப் பகிர்ந்துகொள்கிறேன்.

T.A. கோபிநாத ராவ்:
            திருவாங்கூர் அரசின் தொல்லியல் துறைத் தலைவர்களாக (கண்காணிப்பாளர் பதவியில்) இருந்த மூன்று அறிஞர்களில் ஒருவர் T.A. கோபிநாத ராவ் அவர்கள். மற்ற இருவர் K.V. சுப்பிரமணிய ஐயர், A.S. இராமநாத அய்யர் ஆகியோர். இம்மூவருமே மேற்படி ”திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதிகளின் ஆசிரியர்களாவர். நூலின் வரிசைகளில் பதினொன்றாம் வரிசையில் “பள்ளிப்புரம் கோட்டை அல்லது இந்தியாவில் உள்ள காலப்பழமையில் முதலிடம் பெறும் ஐரோப்பியக் கட்டிடம்”  என்னும் தலைப்பில் ஒரே ஒரு ஆய்வுக்கட்டுரை இடம்பெறுகிறது. எழுதியவர் T.A. கோபிநாத ராவ் அவர்கள்.

பள்ளிப்புரம் கோட்டை:
            கொச்சித் தீவொன்றில் கட்டப்பெற்ற கோட்டை பள்ளிப்புரம் கோட்டை. முன்னரே கூறியவாறு இந்தக் கட்டிடம் இந்தியாவிலேயே, ஐரோப்பியர் எழுப்பிய மிகப் பழமையான கட்டிடம் என கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில் அடிக்குறிப்பில், இக்கோட்டையைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் யாவும் ஃபிரான்சிஸ் டே (FRANCIS DAY) என்பவர் எழுதிய  ”பெருமாள்களின் நாடு” (LAND OF THE PERMAULS’) என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்று குறிப்பிடுகிறார். நம் கட்டுரையும் கோபிநாதராவ் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் எனலாம்.

வாஸ்கோ ட காமா (VASCO de GAMA):
            1498-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள். கடல் வழிப் பயணம் மேற்கொண்ட வாஸ்கோ ட காமா என்னும் போர்த்துக்கீசியரின் கண்களுக்கு இந்திய நிலம் புலப்பட்ட நாள். அடுத்து இரு நாள்களில் மே, 20 அன்று கோழிக்கோட்டில் நுழைவு.

வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இறங்கிய இடம்
            

            பாண்டிபோ (BONTAYBO) என்னும் ”மூர்” (MOOR) இனத்தைச்  சேர்ந்த ஒருவரின் உதவியோடு காமா, கோழிக்கோட்டு அரசர் சமூத்திரியைச் (ZAMORIN) சந்தித்துப்பேசுகிறார். பாண்டிபோவுக்குப் போர்த்துகீசிய மொழியும், மலையாள மொழியும் தெரிந்திருந்தது. அதனாலேயே, காமா சமூத்திரியிடம் பேச இயன்றது. காமாவும் சமூத்திரியும் பேசி உடன்படிக்கையை எட்டுகின்றனர். போர்த்துகீசியர் மலபார் பகுதியில் வணிகம் நடத்தலாம். மலபார் பகுதியில் ஏற்கெனவே மூர் இனத்தவர், அரபு நாட்டிலிருந்து வந்து வணிகம் நடத்தத் தொடங்கிவிட்டவர்கள். மலபார்ப் பகுதியில் மிளகு, நறுமணப் பொருள்களின் வணிகத்தில் இவர்கள் போட்டியேதுமின்றி நிலைகொண்டவர்கள். காமா, அரசர் சமூத்திரியிடம் வணிக ஒப்பந்தம் ஏற்படுத்தியதும் மூர் மக்கள் கலக்கமுறுகின்றனர். காமா தலைமையில் வந்த போர்த்துகீசியர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாட்டின்  பிரதிநிதிகளாக வணிகம் செய்ய வந்தவர் அல்லர் என்றும், உண்மையில் அவர்கள் கடற்கொள்ளையர் என்றும் அரசரிடம் கூறி அரசரின் மனத்தில் நஞ்சு கலக்கின்றனர். போர்த்துக்கீசியரோடு அரசருக்கிருந்த உறவில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, காமா 1499-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாடு திரும்புகிறார்.

மீண்டும் போர்த்துகீசியர் வருகை:
            1500-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 15-ஆம் நாளில் போர்ச்சுகல் நாட்டின் கடற்படைத் தளபதி காப்ரல் (PEDRO ALVAREZ CABRAL) தலைமையில் கோழிக்கோடு நோக்கி மீண்டும் ஒரு பயணம் தொடங்கியது. கடற்பயணத்தில் நேரும் பல பேரின்னல்களைக் கடந்து கப்பல்கள் கோழிக்கோடு அடைந்தன. இம்முறை சமூத்திரி நட்புக்காட்டியதுடன் ஓர் ஒப்பந்தத்தையும் முடிக்கிறார். அதன்படி, தளபதி காப்ரல் கோழிக்கோட்டில் ஒரு தொழிற்சாலையைத் திறக்கிறார். ஆனால், இப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. மூர்  வணிகர்களுக்கு வணிகப்பொருள்களைக் குறைவின்றி வழங்கிய அளவுக்குப் போர்த்துக்கீசியருக்கு அரசர் சமூத்திரி வழங்கவில்லை. சினமுற்ற தளபதி காப்ரல், கடலில் வணிகப்பொருள்களோடு இருந்த, மூர் இனத்து வணிகரின் கப்பலொன்றைத் தாக்கி, ஆள்களைக்கொன்று வணிகப்பொருள்களைக் கைப்பற்றினான். கரையில் இருந்த மூர் இனத்து வணிகர் இதை எதிர்க்கவே, தளபதி காப்ரல் மேலும் சினந்து கோழிக்கோடு நகரின்மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி 600 பேரைக் கொன்றான். இதன் விளைவாக அவன் கோழிக்கோட்டைவிட்டு அகலவேண்டியதாயிற்று.

            அங்கிருந்து பயணப்பட்ட தளபதி காப்ரல் கொச்சி நகரை அடைந்தான். இது நிகழ்ந்தது கி.பி.1500, டிசம்பர் மாதம் 20-ஆம் நாள். கொச்சி அரசர், அயலாரைப் பணிவன்புடன் வரவேற்று வணிகம் செய்யப் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒரு தொழிற்சாலையையும் தளபதி காப்ரலுக்கு அளித்தார். இதைக் கேள்வியுற்ற சமூத்திரி, போர்த்துக்கீசியரை விரட்ட, 1500 பேர்கள் அடங்கிய கப்பற்படையைக் கொச்சியை நோக்கி அனுப்பினார். சமூத்திரியின் படை கொச்சியை நெருங்கியதும் இச்செய்தியைக் கொச்சி அரசர் தளபதி காப்ரலுக்குத் தெரிவித்ததோடு,  தாக்குதலின்போது உதவுவதாகவும் கூறியிருந்தார். தளபதி காப்ரல் இந்தப் படையை எதிர்த்துத் துரத்தினான். ஏனோ சமூத்திரியின் படை போர்த்துக்கீசியரோடு நேரடியாக மோதாமல் அகன்றது.  இதற்குப் பின்னர் தளபதி காப்ரலும் கொச்சிக்குத் திரும்பாமல் நாட்டை நோக்கிப் புறப்பட்டான். போர்த்துக்கீசியரின் முதல் கொச்சித் தொடர்பு இவ்வாறு நிகழ்ந்தது.

போர்த்துக்கீசியரின் வருகை-மூன்றாம் முறையாக:
            மூன்றாம் முறையாகப் போர்த்துகீசியர் அணியொன்று மீண்டும் காமாவின் தலைமையில் 1502-ஆம் ஆண்டு, மார்ச்சு மூன்றாம் நாள் புறப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டு அரசரே, சமூத்திரிகளைத் தாக்கும் திட்டத்துடன் காமாவை அனுப்புகிறார். வாஸ்கோவின் உறவினரான ஸ்டீஃபன் ட காமா (STEPHEN de GAMA) அவருடன் இணைந்துகொள்கிறார். கோழிக்கோட்டை அடைந்து தாக்குகின்றனர். ஃபிரான்சிஸ் டே தம் நூலில், காமாவின் அடாத செயல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தாக்குதலின்போது கொடுமைகள் நிகழ்கின்றன. அரசுத் தூதுவர்கள் தூக்கிலிடப்படுகின்றனர். கிறித்தவ நாடுகளின் வரலாற்றில் ஒரு கறையாக இந்நிகழ்வு அமைந்தது. மானுடத்துக்கு இழிவு. காமா, பின்னர் கொச்சிக்குச் சென்று வணிகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்து ஒரு வணிகர் பிரிவை அங்கே இருத்திவிட்டுச் செப்டம்பர் மாதத்தில் தாயகம் திரும்புகிறான்.

கொச்சி மீது போர்:
            கொச்சி அரசர் போர்த்துக்கீசியருடன் வணிக நிமித்தம் இணைந்து செயல்பட்டமை கொச்சி அரசர்க்குத் தீங்காய் முடிகின்றது. கோழிக்கோட்டு அரசர் சமூத்திரியின் பகைமையை வலுக்கச்செய்தது.  பெரும்படையுடன் சமூத்திரி கொச்சி மீது படையெடுப்பு நிகழ்த்துகிறார். கொச்சி அரசர், கொச்சிக்கருகில் உள்ள வைப்பீன் (VYPEEN) என்னும் தீவில் அடைக்கலம் புகுகின்றார். கொச்சி அரசரின் நல்லூழ் காரணமாகப் போர்த்துக்கீசியரின் கப்பற்படைப் பிரிவு ஒன்று ஃபிரான்சிஸ்கோ ட ஆல்புக்கர்க் (FRANCESCO de ALBUQUERQUE) என்னும் தளபதியின் தலைமையில் 1503, செப்டம்பர் 20-ஆம் நாள் மேலைக்கடற்கரை வருகிறது. சமூத்திரியின் படைகளைத் தோற்கடித்து, கொச்சி அரசரை அவரது பதவியில் அமர்த்தியது. சமூத்திரியின் நட்பு அரசரான பிராமண அரசரின் ஆட்சிப்பகுதியான எடப்பள்ளியும் போர்த்துக்கீசியரால் கைப்பற்றப்படுகிறது. கொச்சி அரசரும் போர்த்துக்கீசியரின் நட்புக் கிடைத்த மகிழ்ச்சியில், அவர்கள் கொச்சியில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கிறார். 1503, செப்டம்பர் 26-ஆம் நாள் பணி தொடங்கி, அக்டோபர் முதல் நாள் கோட்டைக்கு “மானுவல்” (MANUEL) என்று பெயரும் சூட்டப்படுகிறது. இது அப்போது போர்ச்சுகல் நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசரின் பெயராகும்.

பள்ளிப்புரம் கோட்டை:
            அடுத்த சில ஆண்டுகளில் கொடுங்கலூர் மற்றும் பள்ளிப்புரம் கோட்டைகள் கட்டப்பெறுகின்றன. கடலிலிருந்து கழிமுகப்பகுதிக்குள் நுழையும் கட்டுப்பாட்டு வாயில் போன்று பள்ளிப்புரம் கோட்டை பயன்பட்டது எனலாம். கோட்டைக் கட்டிடம் மிகவும் பெரிதான அமைப்பில்லை. கண்காணிப்புக்கும் காவலுக்கும் நிறைய ஆள்கள் தேவையில்லை. இதைப்பற்றி காஸ்பர் கொரியா (GASPER CORREA) எழுதியுள்ள குறிப்பில், “பள்ளிப்புரம் கோட்டை 1507-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அளவில் சிறியதாயினும் கழிமுகத்தின் வாயிலாகத் திகழ்ந்தது; காவலுக்கு இருபது வீரர்களே இருந்தனர். அமைப்பில் எண்கோண வடிவுடையது. எண் முகப்புகளிலும் பீரங்கி நிறுத்தும் இடவமைப்புக்கொண்டது. இதுவே இந்தியாவில் ஐரோப்பியரின் மிகப் பழமையான கட்டிடமாக இருக்கக்கூடும்”  என்று உள்ளது. பள்ளிப்புரம் கோட்டை கட்டப்படும்போதும் அதற்குப் பின்னரும் அலிக்கோட்டை அல்லது ஆயக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. எல்லோரது குறிப்பிலும் இது எண்கோண வடிவக் கோட்டை என்றிருப்பது வியப்பே. காஸ்பர் (GASPER) எழுதிய குறிப்பிலும், ஃபிரான்சிஸ் டே (FRANCIS DAY) எழுதிய குறிப்பிலும் எண்கோண வடிவக் கோட்டை என்றே உள்ளது. உண்மையில் இக்கோட்டை அறுகோண வடிவம் கொண்டதாகும்.

பள்ளிப்புரம் கோட்டை - முன்புறத் தோற்றம்  
                                     

            மேலைக் கடற்ரையில் போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் தொடங்கிய காலகட்டத்தில் கட்டப்பெற்ற மூன்று கோட்டைகளில் இன்று எஞ்சியிருப்பது பள்ளிப்புரம் கோட்டை ஒன்றே. கொச்சிக் கோட்டை இருந்த தடயமே இன்றில்லை. ஒரு காலத்தில் பெயர்பெற்று விளங்கிய கொடுங்கலூர்க் கோட்டையின் எச்சங்கள் இன்று ஒரு மண் மேட்டுக்குள் அடக்கம். அறுபது அல்லது எழுபது கஜம் நீளத்தில் கோட்டையின் இடிந்த சுற்றுச் சுவரும், வாயில் பகுதியும், நிலவறையும் இந்த மண்மேட்டுக்குள் புதையுண்டு காணப்படுகின்றன.  நிலவறை, வெடி மருந்துக் கிடங்காகப் பயன்பட்டிருக்கவேண்டும். முழுதும் சிதைந்து அழிந்துபோகாமல் இருக்கும் ஐரோப்பியரின் கட்டுமானம் பள்ளிப்புரம் கோட்டை ஒன்றே.

பள்ளிப்புரம் கோட்டை - இன்னொரு தோற்றம் 

            கொச்சிக்கு வடக்கில் இருக்கும் தீவு வைப்பீன் தீவு. இத்தீவின் வடகோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் பள்ளிப்புரம். இந்தத் தீவு பதின்மூன்று மைல் நீளம் கொண்டது. அகலம், ஆங்காங்கே ஒரு மைல் முதல் மூன்று மைல் வரையிலும் மாறிக் காணப்படும். கடலோடு வந்து கலக்கும் பல்வேறு நீர்க்கால்களால் கொண்டு சேர்க்கப்பட்ட வண்டல் மண்ணால் இத்தீவு உருவானது என்று கருதப்படுகிறது. முதன்முதலாகப் போர்த்துகீசியர் நுழைந்த சமயத்தில், இத்தீவு கொச்சி அரசரின் உடைமையாய் இருந்தது. வைப்பீன் தீவின் வட கோடியில் கட்டப்பெற்ற இக்கோட்டை, அயலார் கப்பல்கள் பெரியாற்றின் வாய்ப்பகுதி வழியே நுழையாவண்ணம் கண்காணித்துக் காக்கும் துறைபோல இயங்குவதற்காகவே கட்டப்பெற்றது. இக்கோட்டைக்கு நேர் எதிரே பெரியாற்றின் எதிர்க்கரையில் கொடுங்கலூர்க் கோட்டை கட்டப்பெற்றுள்ளது.

பள்ளிப்புரம் கோட்டை -  செய்திப் பலகை

            முன்னரே குறித்தவாறு, பள்ளிப்புரம் கோட்டை அறுகோண வடிவிலான கட்டிடம் ஆகும். மூன்று அடுக்குகளைக்கொண்டது. கீழ்மட்ட அடுக்கு அல்லது தரைமட்ட அடுக்கின்  (LOWEST FLOOR/GROUND FLOOR) கட்டிடப்பகுதி, கோட்டை அமைந்துள்ள தரைப்பகுதியோடு ஒட்டி அமையவில்லை. தரைப்பகுதியின் மட்டத்திலிருந்து ஓர் ஐந்தடி உயரத்துக்கு மேடை போலமைத்து அதன் மீதுதான் கோட்டையின் கீழடுக்கு தொடங்குகிறது. இந்த மேடைப்பகுதியின் கீழே ஒரு நிலவறை (CELLAR) அமைக்கப்பட்டுள்ளது. நிலவறைக்குச் செல்லும் சாய்தளப் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இப்பாதை மூன்றடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட குறுகலான பாதையாகும். பாதையைக் கடந்து முடிந்ததும் உள்ள நிலவறை ஏழடிக்கு ஏழடிச் சதுரப் பரப்பும் நான்கடி உயரமும் கொண்டது. வெடி மருந்து (GUN POWDER) போன்ற பொருள்களைச் சேமித்து வைக்க இந்த நிலவறை பயன்பட்டிருக்கவேண்டும். கோட்டையின் நுழைவாயில் ஐந்தேகால் அடி நீளமும், ஏழடி உயரமும் அமைந்த கருங்கல் (GRANITE) கட்டுமானம். பரப்பும், வடிவமும் நன்கு செதுக்கிச் செம்மைப்படுத்தப்பட்ட கருங்கற்களே கட்டுமானத்துக்குப் பயன்பட்டன. நுழைவாயிலின் மேற்பகுதி, வளைவான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விட்டப்பகுதி செம்மையான வார்ப்புக்கொண்டது. நுழைவாயிலுக்குப் பின்புறம், அதன் நீளம் ஐந்தேகால் அடியிலிருந்து ஏழே கால் அடியாக விரிகிறது. கட்டிடச் சுவரை அணுகுமுன்பே மேற்குப் புறத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது. மூன்றே கால் அடிச் சதுரமும், பதினாறடி ஆழமும் உடைய கிணற்றுச் சுவரின் அகலம் அரை அடி. T.A. கோபிநாத ராவ் அவர்கள் ஆய்வு செய்த பொழுதில், கிணற்றில் இரண்டடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்துள்ளது. தண்ணீர் குடிக்கும் நிலையில் நன்கிருந்ததாகப் பள்ளிப்புரம் மக்கள் கூறியுள்ளனர் என்றும் ஆனால் தற்போது கிணறு பயன்படுத்தப்பெறாமல் பேணுதலின்றிக் கிடக்கின்றது என்றும் ராவ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

            கிணற்றின் வடக்குத் திசையிலிருந்து கட்டிடப்பகுதி இருக்கும் மேடைப்பகுதியைச் சென்றடையும் வண்ணம் நான்கு படிகள் உள்ளன. படிகளைக் கடந்தவுடன் வடபுறத்தில், நிலவறையை நோக்கிச் செல்லும் ஒரு திறப்பு உள்ளது. மேடைப்பகுதியின் மையத்தில், மூன்றடி விட்டமுள்ள வட்ட வடிவக் கற்பலகை ஒன்று காணப்படுகிறது. இது தூணின் அடிப்பகுதியாகலாம். எனில், இந்த மையக் கல் பீடத்திலிருந்து ஆரக்கால்கள் போல மர விட்டங்கள் பிரிந்து சென்று கட்டிடத்தின் இரண்டு தளத்தையும் தாங்கியிருத்தல் வேண்டும்.

பள்ளிப்புரம் கோட்டை - வேறு தோற்றங்கள்




கோட்டைக் கட்டுமானம்-விரிவான விளக்கம்:
            கட்டிடம் அறுகோணவடிவில், ஆறு முகப்புகளைக் கொண்டது எனக் கூறியிருந்தோம். இவ் ஆறு முகப்புகளும், வெளிப்புறத்தில் முப்பத்திரண்டு அடி நீளமும், முப்பத்து நான்கு அடி உயரமும் கொண்டவை. இந்த முகப்புகளில் ஒவ்வொன்றிலும் பீரங்கியை நுழைத்துச் சுடுகின்றவகையில் ஒரு புழை அல்லது பெரிய துளை அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் முழு வடிவிலான துளையமைப்பும், இரண்டாம் தளத்தில் தளத்தின் சுற்று மதிலின் மேற்புற விளிம்பில் ”ப” வடிவிலான துளையமைப்பும் காணப்படுகின்றன. முதலிரண்டு துளைகளும் இரண்டுக்கு இரண்டரை அடிக் கணக்கிலான அளவுள்ளவை. ஆறு முகப்புகளிலும் சேர்த்துப் பதினெட்டு துளைகளில் பதினெட்டுப் பீரங்கிகளை நிறுத்தி வைக்க முடியும். கோட்டையின் எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற தாக்குதல்களை எதிர்கொள்ளவும், கோட்டையிலிருந்து பீரங்கித்தாக்குதல் நிகழ்த்தவும் இந்தப் பாதுகாப்பு அமைப்பு போதுமானதாய் இருந்துள்ளது எனலாம். இந்தப் பீரங்கித் துளைகளுக்கருகில் காணப்படும் சிறு சிறு துளைகள், நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஆரக்கால்கள் பதிக்கப்பட்ட இடங்களைக் குறிக்கும். மரத்தால் ஆன இந்த ஆரக்கால்களின் எச்சங்கள் எவையும் தற்போது காணப்படவில்லை. 

            மரச்சட்டங்கள் காலப்போக்கில் அழிந்துபோயிருக்கலாம்; அல்லது, ஊர் மக்கள் அவ்வப்போது அவற்றைப் பிரித்துக்கொண்டுபோய் பயன்படுத்தியிருக்கக்கூடும்.  இதில் இரண்டாவதாகச் சொன்னதே நடந்திருக்க வாய்ப்புள்ளதாக ராவ் அவர்கள் கருதுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  ராவ் அவர்கள் கருதுவதே மிகச் சரியானதாய் இருக்கும். ஏனெனில், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரச மாளிகை இருந்த மாளிகைமேட்டுப் பகுதியிலிருந்து அரண்மனைக் கட்டுமான எச்சங்களாய்க் கிடைத்த செங்கற்கள் அவ்வூர் மக்களால் வீடு கட்டப்பயன்பட்டன என்பது அகழாய்வின்போது கண்டறிந்த ஒன்று.)

            கோட்டை வாயிலை ஒட்டிய உள்பகுதியில் பன்னிரண்டடிக்கு ஐந்தேமுக்கால் அடிப்பரப்புள்ள வெளி ஒன்று உள்ளது. இது தரைமட்டத்தில் உள்ளது. இங்கிருந்து நேரே நிலவறைக்கோ அல்லது கட்டிடம் அமைந்துள்ள மேடைப்பகுதிக்கோ எளிதாகச் செல்லலாம். அதற்காகவே இந்த வெளியிடத்தை விட்டிருக்கலாம்.

            கோட்டைக் கட்டுமானத்துக்கு LATERITE  என்னும் கல்லும் (செம்புறாங்கல்?) GRANITE என்னும் கருங்கல்லும், மரமுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானச் சுவர்கள் காரைப்பூச்சுக்கொண்டவை. நுழைவாயிலும், மேடைப்பகுதியின் மையப்பகுதியில் காணப்படுகின்ற வட்டவடிவக் கற்பலகையும் மட்டுமே கருங்கற்பணி. கோட்டையின் ஆறு பக்கங்களிலும் புதர்களும் மரங்களும் மிகுதியாக வளர்ந்துள்ளன. சுவர்களின் மீதும் பெரிய பரப்பில் அவை படர்ந்துள்ளன. பெரிய அளவில் கட்டிடம் சேதமுறவில்லை எனினும், இதே நிலை தொடர்ந்தால் கட்டிடம் அழிய வாய்ப்புள்ளது. நிலவறையை நோக்கிச் செல்லும் பாதையின் மேற்புறத்தில் ஓரிரு கற்கள் பெயர்ந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

            கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும் ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அழிவிலிருந்து இக்கோட்டைப் பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

            பள்ளிப்புரம் என்னும் இச்சிறிய ஊர்ப்பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. வடக்குப் பகுதி திருவாங்கூர் அரசுக்கும், நடுப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கும், தென்பகுதி கொச்சி அரசுக்கும் சொந்தமாயுள்ளன. கோட்டை, திருவாங்கூர் எல்லைப்பகுதியில் உள்ளதால், கோட்டையை ஒரு பழங்காலச் சின்னம் என்னும் அடிப்படையில் திருவாங்கூர் அரசே பாதுகாத்து வருகின்றது.

கோட்டையின் வரலாறு:
            போர்த்துக்கீசியர்கள், கொச்சி அரசன் வீரகேரளவர்மனை அரச பதவியிலிருந்து கீழிறக்கிவிட்டு அவனுடைய அத்தையை ஆட்சியில் இருத்துகிறார்கள். வீரகேரளவர்மன், இலங்கையில் இருக்கும் டச்சுக்காரர்களின் உதவியை நாடுகிறான். அவனை மீண்டும் அரசனாக்கினால், மலபார் பகுதியில் டச்சுக்காரர்களுக்கு மிளகு வணிகத்தில் நிறையச் சலுகைகள் அளிப்பதாக உறுதியளிக்கிறான். கொச்சி அரசனின் அமைச்சனாய் இருந்தவன் பாலியத்து அச்சன். இவனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கொச்சி அரசர்க்கு அமைச்சர்களாகப் பரம்பரையாகப் பணியாற்றியவர்கள். இந்தப் பாலியத்து அச்சனுக்கும் போர்த்துக்கீசியருக்கும் ஏதோ ஒரு தனிப்பகை இருந்த காரணத்தால் இவனும் வீரகேரளவர்மனுடன் இணைந்து டச்சுக்காரர்களைப் போர்த்துக்கீசியருக்கு எதிராகத் தூண்டும் பணியில் ஈடுபடுகிறான். டச்சுக்காரர்களைக் கொச்சிமீது தாக்குதல் நடத்த வைக்கின்றனர். டச்சுக் கடற்படைத்தலைவன் ரிக்லாஃப் வான் கோயன்ஸ் (RYKLOF VAN GOENS) தலைமையில், 1662-ஆம் ஆண்டில் கொச்சிமீது தாக்குதல் நடக்கிறது. ஆனால், இத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. டச்சுக்கடற்படை, வடக்கு நோக்கிப் பயணப்பட்டு கொடுங்கலூர்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுகிறது. அடுத்த ஆண்டில் இன்னும் கூடுதல் வலுவுள்ள கடற்படைகொண்டு கொச்சி தாக்கப்பட்டது. போர்த்துகீசியர் இத்தாக்குதலுக்கு அடிபணிய நேரிடுகிறது. கொச்சிக்கோட்டையை டச்சுக்காரர்களுக்கே விட்டுக்கொடுக்கிறார்கள்.  இவ்வாறாக, மலபார்ப் பகுதியில் போர்த்துக்கீசியரின் ஆதிக்கம் மறைந்தது. போர்த்துக்கீசியரின் அனைத்து உடைமைகளும் டச்சுக்காரர்களின் உடைமைகளாயின.

            இந்தச் சூழ்நிலையில் ஹைதர் அலியின் நுழைவு நிகழ்கிறது. நாளும் ஹைதர் அலியின் அதிகாரமும் ஆதிக்கமும் வளர்ந்து வரும் காலம். கி.பி. 1773-ஆம் ஆண்டு ஹைதர் அலி கோழிக்கோட்டுக்குள் நுழைகிறான். ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே, 1766-இல், கொடுங்கலூர்க் கோட்டையையும் அலிக்கோட்டையையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஹைதர் அலி டச்சுக்காரர்களோடு பேச்சு நடத்தியிருக்கிறான். கொச்சி அரசையும், திருவாங்கூர் அரசையும் கைப்பற்ற கொடுங்கலூர்க் கோட்டையே திறப்புச் சாவி என்பதை அவன் அறிந்திருந்ததாலேயே இந்த முயற்சி. ஆனால், ஏதாயினும் ஒரு காரணத்தால் இந்த முயற்சி பலனளிக்காமலே போனது. மலபார்க் கடற்கரைப் பகுதிகளில் சிறு சிறு நாட்டுப்பகுதிகளைத் திப்பு கைப்பற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கொடுங்கலூர்க் கோட்டையையும், ஆயக்கோட்டையையும் (பள்ளிப்புரம் கோட்டை), திருவாங்கூர் அரசு தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தது. திருவாங்கூர் அரசன் மார்த்தாண்ட வர்மன் இவ்விரு கோட்டைகளையும் வாங்கிய சூழ்நிலையும் இங்கு முதன்மை பெறுகிறது. திருவாங்கூர் அரசின் கையேட்டைத் (MANUAL) தொகுத்த நாகமய்யா என்பவரின் வாய்மொழியாகவே இதன் பின்னணியைக் காண்போம்.

நாகமய்யாவின் கையேட்டு ஆவணம்:
            டச்சுக்காரர்களிடமிருந்து கொடுங்கலூர்க் கோட்டை மற்றும் ஆயக்கோட்டை வாங்கியமை:  1789-ஆம் ஆண்டின் போது, திப்பு கோயம்புத்தூரிலிருந்து ஒரு படையுடன் புறப்படுகிறான். 20,000 தரைப்படை வீரர்கள், 10,000 ஈட்டி எறிவீரர்கள் ஆகியோரும், 5,000 குதிரைகள், 20 பீரங்கிகள் ஆகியவையும் படையில் அடக்கம். முன்னர் 1766-இல் ஹைதர் அலி முயன்றது போலவே, கொடுங்கலூரையும் ஆயக்கோட்டையையும் விலைக்கு வாங்கிவிடத் திப்புவும் பாலக்காட்டில் டச்சுக்காரரோடு பேச்சு நடத்துகிறான். இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்குப் பாதுகாப்பு அரண்களாக விளங்கக்கூடியவை.  எனவே, திருவாங்கூர் அரசன் தன் அரசுக்காக இக்கோட்டைகளை டச்சுக்காரரிடமிருந்து வாங்க எண்ணித் தன் அமைச்சனான திவான் கேசவ பிள்ளையை டச்சுக்காரரோடு பேச்சு நடத்த ஆணையிடுகிறான். திருவாங்கூர் அரசுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் ஏற்கெனவே ஓர் ஒப்பந்தம் உண்டு. அதன்படி, பிரிட்டிஷ் படைகள் திருவாங்கூர் அரசுக்கு எல்லைப் புறத்தில் மட்டுமே உதவும். இக்கோட்டைகள் திப்புவின் கைக்குள் சென்றுவிட்டால், திருவாங்கூர் அரசின் உள்பகுதியில் பிரிட்டிஷார் உதவ இயலாது. எனவே, இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்கு மிகத்தேவை.  டச்சு ஆளுநர், திவானுடன் கலந்து பேசி, இக்கோட்டைகள் இரண்டையும் திருவாங்கூருக்கு விற்பதன் மூலம் திப்புவின் படைகளைத் தடுக்க முடியும் என்னும் முடிவுக்கு வருகிறார். ஒப்பந்தமும் 1789-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் நாள் நிறைவேறுகிறது. இந்த ஒப்பந்தத்துக்கு டச்சு நாட்டு பட்டாவியா (BATAVIA) அரசின் ஒப்புதலும் பின்னர் முறையாகப் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்த ஆவணம் மதராசில் (இன்றைய சென்னை) உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் பின்னாளில் கிடைத்துள்ளது.  ஒப்பந்தத்தின் விரிவான செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.

டச்சு அரசு- திருவாங்கூர் அரசு ஒப்பந்தம்:
            “மேன்மைமிகு திருவாங்கூர் அரசராகிய வஞ்சி பால மார்த்தாண்ட ராம வர்மன் தன் அமைச்சரும் திவானுமாகிய மதிப்புக்குரிய கேசவ பிள்ளையை, இந்திய நெதர்லாண்ட் ஆளுநரும், நெதர்லாண்ட் கும்பினியாரின் மலபார்க்கரைப் படைத்தளபதியும் ஆன  வணக்கத்துக்குரிய ஜான் ஜெரார்ட் வான்  ஏஞ்சலெக்கிடம் (JOHN GERARD VAN ANGELHECK)  கொடுங்கலூர்க் கோட்டையையும் ஆயக்கோட்டையையும் வாங்கும் எண்ணத்துடன் அனுப்புகிறார். கோட்டைகளோடு அவற்றின் தோட்டங்களும் நிலங்களும் விற்பனையில் அடங்கும். கீழ்க்காணும் வரம்புகளோடு (நிபந்தனை) ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

            “திவான் கேசவ பிள்ளை, தம் அரசருக்காக வாங்குகிறார்; ஆளுநர் வான்  ஏஞ்சலெக் (VAN ANGELHECK) தம் கும்பினி சார்பாகத் திருவாங்கூர் அரசருக்கு  முந்நூறாயிரம் சூரத் பணத்துக்கு கொடுங்கலூர்க் கோட்டையையும் ஆயக்கோட்டையையும் விற்கிறார். இந்த விற்பனையில், தற்போதிருக்கும் பீரங்கி முதலான தளவாடங்களும் வெடி மருந்துகளும் அடங்கும். சிறிய ஆயுதங்கள் இவற்றில் சேரா.

            “டச்சுக் கும்பினியாரின் கலங்களோ (படகுகள்/நாவாய்கள்) கொச்சி அரசின் கலங்களோ, கொச்சி மக்களின் கலங்களோ மேற்கண்ட கோட்டைகளைக் கடந்து ஆற்றில் செல்வதற்குத் தடை இருக்கக்கூடாது. கலங்களில் ஏற்றிச் செல்லும் பொருள்களுக்கும் வரி இருக்கக் கூடாது. மரக்கட்டைகளையும், மூங்கில்களையும் ஆற்றின் வழியில் கொண்டுபோகவும் தடை இருக்கக் கூடாது. எரிபொருளாகிய விறகுகளைக் கொச்சி நகருக்குக் கொண்டுசெல்வதிலும் தொல்லை இருக்கக்கூடாது. சுங்கம் போன்ற வரி இருக்கக்கூடாது.

            “’பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும் இடத்திலுள்ள  தொழு நோயாளிகளுக்கான இல்லம் (LEPER’S HOUSE), அதன் கட்டிடப்பகுதிகள், தோட்டம், வெற்று நிலம் ஆகியவற்றோடு டச்சுக் கும்பினிக்கு முழு உடைமையாகிறது.

            “கொடுங்கலூரில் நெடுங்காலமாகக் கும்பினியின் கீழ் இருந்துவரும் ’ரோமிஷ் சர்ச்’ (ROMISH CHURCH) என்னும் மாதாகோயில், தொடர்ந்து கும்பினியர் வசமே இருக்கும். திருவாங்கூர் அரசின் தலையீடு எதுவும் மாதாகோயிலில் இருக்கக் கூடாது. மாதாகோயிலைச் சார்ந்துள்ள கிறித்தவர்கள் கும்பினியாருக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும். அவர்கள்மீது எவ்வித வரியும் விதிக்கக்கூடாது.

            “பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும் இடத்தில் அமைந்துள்ள சமயத்தலைவரின் இல்லம் (PARSON’S HOUSE) – டச்சு ஆளுநர், மாதா கோயிலுக்கு அன்பளிப்பாகக் கட்டிக்கொடுத்தது – மாதா கோயிலின் உடைமையாகவே தொடரவேண்டும்.

            “தனிப்பட்ட முறையில் தோட்டம் நிலம் ஆகியவற்றைப் பெற்றுள்ள கிறித்தவர்கள், முன்பு கும்பினியாருக்குக் கட்டுப்பட்டிருந்தது போலவே இருப்பர். கும்பினியார்க்குச் செலுத்திய வரித்தொகையையே தற்போது திருவாங்கூர் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டவர். கூடுதலாக அவர்கள்மீது வரியேதும் விதிக்கப் படமாட்டாது.

            “கோட்டையை ஒப்படைக்கும் முன்னரே திருவாங்கூர் அரசர் 50,000 ரூபாய்ப் பணத்தைக் கும்பினியாருக்குச் செலுத்த வேண்டும். மீதிப்பணத்தை நான்கு தவணைகளில், ஆண்டுதோறும் 62,500 ரூபாய்ப் பண மதிப்புள்ள மிளகுப் பொருளாகச் செலுத்தவேண்டும். மிளகு வணிகர்களான டேவிட் ரஹபாய், (DAVID RAHABOY),  இஃப்ராயிம் கோஹென் (EPHRAIM COHEN), அனந்த செட்டி ஆகியோர் இதற்குப் புணை ஏற்கவேண்டும்.

            “இந்த ஒப்பந்தம் கொச்சிக் கோட்டையில் கொல்லமாண்டு 974-இல் கர்க்கடக (ஆடி) மாதம் 19-ஆம் நாள் அல்லது கி.பி. 1789-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

            ஒப்பந்தம், திருவாங்கூரைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான பௌனி (POWNEY) என்பவர்  முன்னிலையில் கையெழுத்தானது .

            டச்சுக்காரர்களின் உடைமைகள் அனைத்தும் கி.பி. 1870-இல் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன. அப்போது, ரோமிஷ் தேவாலயமும், தொழு நோயாளிகள் இல்லமும் பிரிட்டிஷ் அரசின்கீழ் வந்தன. தற்போது, தொழு நோயாளிகள் இல்லத்தையும் அதைச் சேர்ந்த மருத்துவ மனையையும் பிரிட்டிஷ் அரசே ஏற்று நடத்திப் பேணிவருகிறது.

பள்ளிப்புரம்  டச்சுக்காரர் கட்டுவித்த   மாதாகோயில்


பள்ளிப்புரம்  போர்த்துகீசியர் கட்டுவித்த   மாதாகோயில்



முடிவுரை:  
            “கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும் ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அழிவிலிருந்து இக்கோட்டைப் பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது”   என்றுக் கோபிநாத ராவ் அவர்கள் கூறியுள்ளார். அவர் கூற்றுப்படி பள்ளிப்புரம் கோட்டை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இன்றளவும் கோட்டை ஒரு தொல்லியல் வரலாற்று எச்சமாக நிலைத்திருக்கிறது. தற்போதைய நிலையை அறிய இணையத்தில் பார்த்ததில் சில படங்கள் கிடைத்தன. அவற்றை மேலே காணலாம்.

            கோபிநாத ராவ் அவர்கள், “திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதியில் ஒரு வரிசையாகவே பள்ளிப்புரம் கோட்டையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்வது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளும் அளவு நுட்பமாகவும், துல்லியமாகவும் இக்கோட்டையைப் பார்வையிட்டு விரிவான செய்திகளை அளித்துள்ளார்.

வைப்பீன் தீவு - பள்ளிப்புரம் கோட்டை  அமைப்பு - வரை படம்


பள்ளிப்புரம் கோட்டை  அமைப்பு - வரை படம்

            தவிர, வைப்பீன் தீவின் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு வரைபடம், கோட்டையின் திட்ட அமைப்பு, அதன் முன்புற அமைப்பு, அதன் குறுக்கு வடிவத் தோற்றம் , வாயிலின் அமைப்பு, நிலவறையை நோக்கிப் போகும் பாதையின் அமைப்பு, தற்போது காணப்படும் வட்டவடிவக் கல்லிலிருந்து எழும்பும் தூணிலிருந்து எவ்வாறு மரத்தாலான ஆரக்கால்கள் கிளை பிரிந்து இரு தளங்களின் கூரைப்பகுதிகளைத் தாங்கி நின்றிருக்கக் கூடும் என்ற ஆய்வுப்பார்வை ஆகிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் வரைபடம் எனப் பல கூறுகளை உள்ளடக்கியதாய் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்திருப்பது மிகச் சிறப்பு. 

            “செய்யுந்தொழிலே தெய்வம்” என்னும் முன்னோர் மொழியை எத்துணை ஈடுபாட்டோடு பின்பற்றி உழைத்திருக்கிறார் என்பதை அவரது ஆய்வுக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.  தொல்லியல் துறை, முன்னாள்களில் எத்துணைச் சிறப்பாக இயங்கிவந்துள்ளது என்பதைத் துறையின் முன்னாள் வெளியீடுகளே நமக்கு உணர்த்துகின்றன.

            வரலாறு கற்போம். வரலாற்றுத் தடயங்களைக் காப்போம்.




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.

Wednesday, September 26, 2018

அடுமை சீட்டு கிரய சாசனங்கள் - திருச்சிராப்பள்ளி மாவட்ட ஓலை ஆவணங்கள்



திருச்சிராப்பள்ளி மாவட்ட ஓலை ஆவணங்கள் 

நூலில் காணப்பெறும் அடுமை சீட்டு கிரய சாசனங்கள்

1.jpg

2.jpg

3.jpg
_________________________________________


உங்கள் மந்தையில் எத்தனை ஆடுகள்?

—  ஆர்.என்.கண்டன்





எண்ணினால் (சிந்தித்தால்)
எண்களால்
மத
எண்ணம்.
எண்களே
மத
வலிமை.

என்ன
ஒரு
மதர்ப்பு.

எங்கள் மந்தையில்
இத்தனை!
உங்கள் மந்தையில்
எத்தனை?

இன்று
ஒரு ஆடு
இங்கு
வந்துவிட்டது!

எல்லாமே
கசாப்புக்குத்தான்...

மக்களை
மாக்களாக
மாற்றும்
மதம்...




___________________________________________________________
தொடர்பு: ஆர்.என்.கண்டன்
rnkantan@gmail.com



சங்க இலக்கியத்தில் வண்டியும் சக்கரமும்


—  திருத்தம் பொன். சரவணன்



முன்னுரை:
            வண்டி என்று சொன்னவுடன் இக்காலத்து மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது என்னவோ ஈர்வை (டூவீலர் / மொபெட்) தான். அதிக வசதி கொண்டவர்களுக்கு நால்வை (கார்) நினைவுக்கு வரும். ஆனால் இவையெல்லாம் எத்தனை நூற்றாண்டுகளைக் கடந்து எப்படியெல்லாம் உருமாறி நம்முன்னால் வந்து நின்றன என்ற வரலாறு நம்மில் பலபேருக்குத் தெரியாது. உண்மையில் வண்டிகளின் ஆதி தோற்றம் பற்றிய சரியான கால ஆய்வு என்பது முழுமையாகச் செய்யப்படவுமில்லை இதுவரையிலும் அறியப்படவுமில்லை. இவ் ஆய்வுகளைச் செய்யப் புகுந்தோரும் கீழைநாடுகளின் பண்பாடுகளைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளாமல் அரைகுறையாக ஆய்வுசெய்து தமது முடிவுகளை அறிவித்திருக்கின்றனர்.



            சக்கரங்களின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே வண்டிகள் கண்டறியப்பட்டு அவற்றில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கருத்தே வலுவாக எங்கும் நிலவுகிறது. அதாவது சக்கரங்கள் கண்டுபிடிக்கப் பட்டபின்னர் அவை முதன்முதலில் மண்பாண்டத் தொழிலில்தான் பயன்படுத்தப் பட்டதென்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், சக்கரங்கள் எப்போது எங்கே யாரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது? இச் சக்கரங்களைக் கொண்டு யார் முதன்முதலில் மண்பானைகளைச் செய்தார்கள்? என்ற கேள்விகளுக்கு மிகச்சரியான ஆதாரங்களுடன் கூடிய விடையினை இதுவரை எந்தவொரு ஆய்வாளரும் முன்வைக்கவில்லை என்பதே உண்மையாகும்.

            முன்பொரு காலத்தில் இந்தியா முழுவதிலும் தமிழர்களே வாழ்ந்திருந்தனர் என்பது நான்கு கடவுள் - பகுதி 3 - தொல்தமிழகம் என்ற ஆய்வுக்கட்டுரையில் பல சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தொல்தமிழர் பண்பாட்டில் வண்டிகளும் சக்கரங்களும் எவ்வகையான பயன்பாட்டில் இருந்தன என்பதற்குச் சங்க இலக்கியங்களைத் தவிர வேறு உறுதியான ஆதாரங்கள் கிடைக்காத நிலையே இதுநாள்வரையிலும் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த தொல்பொருள் எச்சங்கள், இலக்கிய ஆதாரங்களுக்குத் துணையாக நின்று மேலும் வலுசேர்க்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், சங்க இலக்கிய ஆதாரங்கள் மற்றும் அகழ்வாய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சங்ககாலத் தமிழரின் பண்பாட்டில் வண்டியும் சக்கரங்களும் புழங்கப்பட்ட நிலையினைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையினைக் காட்டுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் வண்டி:
            சங்க இலக்கியத்தில் வண்டி தொடர்பான பல பாடல்கள் உள்ளன. ஆனால் ஒரு பாடலில் கூட வண்டி என்ற சொல் பயிலப்படவில்லை. பாண்டில், தேர், வையம், சகடம், சாகாடு, ஒழுகை போன்ற பல பெயர்களால் வண்டியானது குறிக்கப்பெற்றுள்ளது. வண்டியைப் பற்றிப் பல சங்கப் பாடல்கள் கூறினாலும் பெரும்பாணாற்றுப்படையில்தான் விரிவான செய்திகளைக் காணமுடிகிறது. காளைமாடு பூட்டிய வண்டியினைக் கைக்குழந்தையினைக் கொண்ட பெண்ணொருத்தி ஓட்டிச்சென்ற நிகழ்வினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவரும் சங்கப்பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.... கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து
முழவின் அன்ன முழு மர உருளி
எழூஉ புணர்ந்து அன்ன பரூஉ கை நோன் பார்
மாரி குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம்
வேழம் காவலர் குரம்பை ஏய்ப்ப
கோழி சேக்கும் கூடு உடை புதவின்
முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்
துளை அரை சீறுரல் தூங்க தூக்கி
நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து
காடி வைத்த கலன் உடை மூக்கின்
மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப .... - பெரும். 46

பொருள்விளக்கம்: அந்த வண்டிச் சக்கரத்தின் சூட்டானது பெருத்திருந்தது. ஆரக்கால்கள் திருத்தப்பட்டிருந்தன. உருளியானது ஒரே மரத்தில் செய்யப்பட்டு பார்ப்பதற்கு முரசினைப் போலத் தோன்றியது. வண்டியின் பாரானது கணையமரம்போல பருத்த கழியினால் செய்யப்பட்டு இருந்தது. வண்டியின்மேல் இருந்த ஆரையின்மேல் பசுந்தாள்களைக் குவித்து இருந்தனர். இத்தாள்கள் உலர்ந்து கருத்துப்போன நிலையில், ஆரைக்குமேலாக வெண்ணிறத் துணியாலான பொதிமூட்டைகள் கயிற்றால் கட்டிவைக்கப்பட்டு இருந்த தோற்றமானது கருநிறக் குன்றின்மேல் வெண்மேகங்கள் இருப்பதைப் போலத் தோன்றியது. வண்டியின் பின்புறத்தில் இருந்த கோழிகள் தங்கும் கூடானது யானைகளைத் துரத்தும் தோட்டக் காவலர்கள் தங்குகின்ற உயரமான குடிசையினைப் போல ஆரையின் மேல் தோன்றியது. சிறிய மருப்பினைக் கொண்ட பெண்யானையின் முழங்காலைப் போலத் தோன்றிய ஒரு சிறிய உரலானது வண்டியில் கட்டித் தொங்கவிடப் பட்டிருந்தது. நாடகமாடும் பெண்கள் ஆடும்போது தம்கையில் எடுத்து வாசிக்கும் சிறியபறையினைப் போலத் தோன்றிய புளித்த மோர்க்கஞ்சியைக் கொண்ட மண்பானையானது வெண்ணிறத் துணியைக்கொண்டு மூடி கயிற்றால் கட்டப்பட்டிருக்க, கையில் குழந்தையைக் கொண்ட அப்பெண்ணானவள் வண்டியின் முன்னால் இருக்கும் வளைந்த பகுதியில் அமர்ந்தவாறு காளைமாட்டினைத் துரத்தி ஓட்டிக் கொண்டிருந்தாள்....

வண்டியின் பயன்பாடுகள்:
            சங்ககாலத் தமிழர்கள் என்னென்ன வகையான வண்டிகளைப் பயன்படுத்தினர் என்பதைச் சங்க இலக்கியங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளை இழுவைக்குப் பயன்படுத்திய செய்திகளைக் கூறும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. இவற்றில் காளைமாடு பூட்டிய வண்டிகளைப் பாரம் சுமந்து செல்வதற்கும் குதிரை வண்டிகளை மனிதர்கள் பயணம் செய்வதற்கும் பயன்படுத்தி உள்ளனர். இதைப் பற்றிச் சங்கப் பாடல்கள் கூறும் செய்திகளை இங்கே காணலாம்.



அ. உப்புவண்டி:
            சங்ககாலத்தில் பொதுமக்கள் ஒரு மாட்டுவண்டியில் என்னென்ன திணைகளை எப்படியெல்லாம் ஏற்றிக்கொண்டு சென்றனர் என்பதை மேற்கண்ட பெரும்பாணாற்றுப்படை பாடலின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, கடலில் விளையும் உப்பினைச் சாத்தர்கள் (வணிகர்கள்) மாட்டுவண்டிகளில் ஏற்றிக்கொண்டு சென்று ஊருக்குள் விற்றனர். உமண் என்பது உப்பினைக் குறிக்கும் என்பதால் உப்பு விற்கும் சாத்தர்கள் உமணர் என்று அழைக்கப்பட்டனர். சங்க இலக்கியப் பாடல்களில் உமணர்களின் உப்பு வண்டி மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளது. ஒருசில பாடல்களை மட்டும் இங்கே சான்றாகக் காணலாம்.

இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் - குறு.165
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட - புறம்.313
உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் - நற்.331

            இக்காலத்தில் இருப்பதைப்போன்ற தார்ச்சாலைகள் சங்ககாலத்தில் இல்லை. ஆனால் கற்களை மண்ணில் தொடர்ச்சியாகப் பதித்து அவற்றின்மேல் மணலைக் கொட்டிப் பரப்பிச் சாலைகள் அமைத்திருக்க வேண்டும் என்ற கருத்து தோன்றுகின்றது. காரணம் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்கள் ஆகும். 

... விரி மணல் ஞெமர கல் பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ - புறம்.90

            வண்டிகள் சாலையில் செல்லும்போது பரப்பியிருந்த மணலின்மேல் சக்கரங்கள் ஏறுதலால் ஓசையுண்டாகவும் கற்கள் பிளந்து உடையவும் பெருமிதத்துடன் நடந்துசெல்லும் காளைமாட்டுக்குத் துறையும் உண்டா?என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறி சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனி
கரும் கால் வெண்குருகு வெரூஉம் - நற்.4

            உமணர்கள் உப்பினை ஏற்றிய வண்டிகள் செல்லும் நீண்ட வழியில் மணலின்மேல் சக்கரங்கள் ஏறும்போது உண்டாகிய பெரும் ஓசையினைக் கேட்டு வயலில் இருந்த குருகினங்கள் அஞ்சிப் பறந்தன என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

            மேற்காணும் பாடல்களில் இருந்து, சங்க காலத்தில் உமணர்கள் தங்களின் உப்புவண்டிப் போக்குவரத்திற்காக இதுபோன்ற கல்-மணல் சாலைகளை அமைத்துப் பயன்படுத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. என்னதான் கல்-மணல் சாலைகளை அமைத்தாலும் மழையினால் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் சீர்கெடத் தான் செய்யும். இதனால் ஆங்காங்கே சேற்றுநிலம் உண்டாகத் தான் செய்யும். வண்டிகள் உப்பினைச் சுமந்து செல்லும்போது வழியில் இருக்கும் சேற்றில் சில நேரங்களில் வண்டிச் சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும். பாரம் அதிகமாக இருப்பின் சிக்கிய சக்கரங்களை மீட்டு எடுத்து மேலேற்றுவதற்கு காளைமாடும் சரி மற்றவர்களும் சரி மிகவும் சிரமப்படுவார்கள். இதைப் பற்றிய செய்திகளைக் கூறும் சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் - புறம்.60
(பொருள்: உப்பங்கழியில் இருந்து உப்பினை ஏற்றிக்கொண்டு மலைநாடு செல்லும்வழியில் வண்டியின் சக்கரம் சேற்றில் சிக்கிக்கொள்ள, அதனைத் தனது வலிமையால் வென்று மீட்டெடுக்கும் எருதினைப் போன்ற பெரும் வலியுடைய எனது தலைவன்...)

நெய்தல் மரபின் நிரை கள் செறுவின்
வல் வாய் உருளி கதுமென மண்ட
அள்ளல் பட்டு துள்ளுபு துரப்ப
நல் எருது முயலும் அளறு போகு விழுமத்து
சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா ...- பதி.27
(பொருள்: களிப்பான சேற்றில் வண்டியின் சக்கரங்கள் சிக்கிக்கொள்ள, எருதினையும் வண்டியினையும் மீட்க முயல்கின்ற வண்டிக்காரர்கள் எழுப்பும் பேரோசை அல்லது வேறோசையினைக் கேட்டறியாத....)

ஆ. குதிரை வண்டி:
            சங்ககாலத்தில் தமிழர்கள் குதிரைகளின்மேலும் குதிரைகள் பூட்டிய வண்டிகளிலும் ஏறிப் பயணம் செய்தனர் என்று "சங்க இலக்கியத்தில் விலங்கியல் - குதிரை" என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். சங்க இலக்கியத்தில் "தேர்" என்று கூறப்படுவதான குதிரை வண்டி தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே காணலாம்.



            குதிரை வண்டியை ஓட்டுபவனை வலவன் என்று சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. காளைமாடுகளைப் போலவே குதிரைகள் ஓட்டத்தின்போது தளர்ந்தால் அவற்றைக் குத்துக்கோல் கொண்டு வலவர்கள் குத்துவார்கள். குதிரைவண்டி வருவதனைப் பிறர் அறிந்து கொள்வதற்காக குதிரையின் கழுத்திலும் வண்டியிலும் ஒலிக்கின்ற பல மணிகளைக் கோர்த்துத் தொங்க விட்டிருப்பார்கள். இச்செய்திகளை எல்லாம் கீழ்க்காணும் நற்றிணைப் பாடலில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

வள் வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா
வலவன் கோல் உற அறியா              
உரவு நீர் சேர்ப்பன் தேர் மணி குரலே - நற்.78

            குதிரை வண்டியின் சக்கரமானது மாட்டுவண்டியைப் போலன்றி மெலிதாக இருக்கும். மணற்பாங்கான நெய்தல் நிலங்களில் செல்லும்போது சக்கரங்கள் மணலில் புதைந்துவிடாமல் இருப்பதற்கு ஏதுவாக சக்கரங்களின் மேல்வளைவில் அரத்தின் வாய்போன்ற கூரிய பல பற்களை வரிசையாகக் கொண்ட இரும்பினாலான பட்டைத் தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஏறத்தாழ இவ் அமைப்பானது சேறுநிறைந்த வயலில் உழுவதற்குத் தற்காலத்தில் பயன்படுகின்ற நுகத்தேரின் (டிராக்டர்) சக்கரங்களின் அமைப்பினை ஒத்திருக்கும். குதிரை வண்டிகளின் ஆழிக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால், திருமாலின் கையிலிருக்கும் சக்கரப்படையினைச் சொல்லலாம். இத்தகைய சக்கரங்களை வள்வாய் ஆழி (கூரிய வாயினைக் கொண்ட சக்கரம்) என்றும் நேமி என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.

தேரும் ஓவத்து அன்ன கோப செம் நிலம்
வள்வாய் ஆழி உள் உறுபு உருள கடவுக - அகம்.54

வள்வாய் ஆழி உள் வாய் தோயினும்
புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படை கலிமா ... - நற்.78

            குதிரை வண்டி வேகமாக ஓடும்போது வண்டிச் சக்கரங்களின்மேல் இருந்த தகடுகளில் கதிரொளி பட்டுத் தகதகவென ஒளிர்ந்தது. இதனால் இதனை இளம்பிறையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி .. - குறு.189

            சக்கரங்களில் பல்போன்ற அமைப்புக்கள் இருந்த காரணத்தினால் குதிரை வண்டிகள் செல்லும்வழியில் வளர்ந்திருக்கும் செடிகொடிகள், பயிர்கள் மற்றும் பூக்கள் வண்டிச் சக்கரங்களின் வாய்ப்பட்டு அறுபடும். இச் செய்திகளைக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர்
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா - நற்.338

இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப.. - குறு.189

பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி
வாள்முகம் துமிப்ப வள்இதழ் குறைந்த கூழைநெய்தலும்... - குறு.227

            மலைக்குன்றில் இருந்து கீழ்நோக்கி வேகமாக இறங்கும்போது குதிரைவண்டியின் சக்கரங்கள் எழுப்பிய கடகட ஓசையானது கார்முகில்கள் மழைநேரத்தின்போது எழுப்பும் ஓசையினைப் போல இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

விடு விசை குதிரை விலங்கு பரி முடுக
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி
கார் மழை முழக்கு இசை கடுக்கும்       
முனை நல் ஊரன் புனை நெடும் தேரே - அகம்.14

இ. வில்வண்டி:
தற்காலத்தில் வில்வண்டி என்று அழைக்கப்படும் வண்டியானது சங்க இலக்கியங்களில் ஆரைச்சாகாடு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஆரை என்பது வில்லைப் போன்று அரைவட்டமாக வளைந்த கூரையினைக் குறிப்பதாகும். வண்டியில் நீண்டதூர பயணம் செய்யும்போது வெயில் / மழையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கும் அலுப்பு தெரியாமல் இருப்பதற்கும் வண்டிக்கு மேலாக வில்போன்ற அமைப்பினை கூரையாக அமைத்திருப்பார்கள். அருகில் ஒரு வில்வண்டியின் படம் காட்டப்பட்டுள்ளது.



            பொதுவாக, வில்வண்டியில் இருக்கும் ஆரையானது மரச்சட்டங்களை வளைத்து அதன்மேல் துணிகொண்டு போர்வைபோல மூடிச் செய்யப்பட்டு இருக்கும். மழைக்காலங்களில் இந்தத் துணிகளில் நீர் ஊறி உள்ளே சொட்டக்கூடாதென்றும் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதற்காகவும் ஆரையின் மேற்புறத்தில் பசுந்தளைகளை குவியலாகப் போட்டுக் கயிற்றால் கட்டியிருப்பார்கள். அதுமட்டுமின்றி, ஆரையிலுள்ள துணியின் அடிப்புறத்தில் அதாவது உட்புறமாக செவ்வரக்கு என்னும் மெழுகினை உருக்கித் துணியில் ஊற்றி வார்த்திருப்பர். இதனால் துணியில் இருந்து உட்புறமாக நீர் சொட்டாது. ஆரைத்துணியில் வார்த்திருந்த செவ்வரக்கானது முருக்கமரம் முழுவதிலும் மலர்ந்திருந்த செந்நிற மலர்களைப் போல அழகுடன் தோன்றியதாகச் சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

... ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை
ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல
உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வை - சிறு.252 

            ஆரைத்துணியின் மேற்புறத்தில் குவித்து வைத்திருந்த பசுந்தளைகள் உலர்ந்துபோயிருக்க, உட்புறத்தில் செந்நிற அரக்கு பூசப்பட்டிருக்க அதைப்பார்த்த புலவருக்கு முதலையின் நினைவு வந்துவிட்டது. அந்த ஆரையின் அமைப்பானது பார்ப்பதற்கு எப்படி இருந்ததென்றால் ஒரு முதலையானது தனது வாயை அகலமாகத் திறந்து வைத்திருந்ததைப் போல நீண்டு இருந்ததென்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து - அக.301

            இன்னொரு புலவரோ ஆரையினை மலைக்குன்றுக்கு ஒப்பாகக் கூறுகிறார். காய்ந்துபோன தளைக்குவியலுக்கு மேலாக வெண்ணிறத் துணியாலான மூட்டைகளை அடுக்கிக் கயிற்றால் கட்டியிருந்தனர். இதைப்பார்த்த புலவருக்குக் கரிய மலைக்குன்றும் அதன்மேல் தங்குகின்ற வெண்மேகப் பொதிகளும் நினைவுக்கு வர உடனே கீழ்க்காணுமாறு பாடுகிறார்.

மாரிக் குன்றம் மழை சுமந்து அன்ன
ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் .. - பெரும். 37

            வில்வண்டிகள் பயணத்திற்கே பெரிதும் பயன்படுத்தப்பட்டன என்பதால் விரைவு கருதி பெரும்பாலும் குதிரைகளையே இவ் வண்டிகளில் பயன்படுத்தினர். பொருளாதார நிலைக்கேற்ப காளைமாடுகளும் வில்வண்டிகளில் பயன்படுத்தப்பட்டன.  

வண்டியின் உறுப்புக்கள்:
            சங்க காலத்தில் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வண்டிகளில் இருந்த பல்வேறு உறுப்புக்களின் பெயர்களைச் சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. காளைமாடுகள் பூட்டி இழுக்கப்படும் ஒரு வண்டியின் படமும் அதன் உறுப்புக்களைக் குறிக்கும் சங்கத் தமிழ்ப் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.



சகடு / சக்ர - எது முதலில்?:
            மேலே கண்ட வண்டியின் பல்வேறு உறுப்புக்களில் சகடு என்பது வண்டியின் ஆழியைக் குறிக்கும் ஒரு சங்ககாலத் தமிழ்ச்சொல் ஆகும். இச்சொல்லில் இருந்தே வண்டியின் ஆழியைக் குறிக்கும் சக்ர என்னும் செங்கிருதச் சொல் தோன்றியது என்று இக்கட்டுரையின் ஏழாம் பகுதியில் கண்டோம். ஆனால், சக்ர என்னும் செங்கிருதச் சொல்லில் இருந்தே தமிழ்ச்சொல் ஆகிய சகடு / சகடம் தோன்றியது என்ற கருத்தே இதுவரையிலும் நிலவி வருகிறது. உண்மையில் இக்கருத்தானது மீள்பார்வை செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதனை இக்கட்டுரையின் முடிவில் தெரிந்து கொள்ளலாம்.

            ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியதாகக் கருதப்படும் சுமேரியப் பண்பாடு, மாய்கோப் பண்பாடு, முந்தை கூர்கன் பண்பாடு, கிழக்கு ஐரோப்பா பண்பாடு போன்ற பண்பாட்டினர் தான் உலகில் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தியதாக விக்கிப்பீடியா கூறுகிறது. ஆனால், இந்தப் பண்பாடுகளில் யார் முதன்முதலில் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்ற கேள்விக்குச் சரியான விடையை இன்னும் காணமுடியவில்லை என்று அதே விக்கிப்பீடியா கூறுகிறது. அதுமட்டுமின்றி, உலகில் முதன்முதலில் சக்கரங்களை வண்டியில் பயன்படுத்தவில்லை என்றும் பானைசெய்யும் குயவர்கள் தான் சக்கரங்களை முதன்முதலில் பயன்படுத்தினர் என்றும் கூறுகிறது.

            மேற்கூறிய நான்கு விதமான பண்பாடுகளையும் பார்த்தால் அவை வெவ்வேறு நாட்டினைச் சார்ந்தவை என்பது புலப்படும். இத்தனைப் பண்பாடுகளைப் பற்றிக் கூறிய ஆய்வாளர்கள் ஏன் இந்தியாவின் தொன்முது பண்பாட்டினராக வாழ்ந்துவந்த சங்கத் தமிழரின் பண்பாட்டினைப் பற்றிக் கூறவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது. உண்மையில், உலகின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்துவந்த இப் பண்பாட்டினர்கள் சக்கரங்களைக் கண்டறிந்து மட்பாண்டத் தொழிலுக்குப் பயன்படுத்திய அதே சமயத்தில்தான் இந்தியாவில் சங்கத் தமிழர்களும் ஆழிகளைப் பயன்படுத்தலாயினர் என்று உறுதியாகக் கூறலாம். தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளின் எச்சங்களை இக்கூற்றுக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். இதைப்பற்றிய விரிவான செய்திகளைக் கீழே காணலாம்.

ஆதிச்சநல்லூர் தாழிகள்:
            தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் என்னும் ஊரானது தொல்தமிழகத்தின் பண்பாட்டுத் தொட்டில் என்று கருதப்படுகிறது. அந்த அளவுக்கு அங்கே தொல்தமிழர் பண்பாட்டின் எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 2004 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அகழ்வாய்வுகளின் பலனாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஈமத்தாழிகள் கிடைத்துள்ளன. இத்தாழிகளுக்குள் இறந்த மனிதர்களின் எலும்பின் எச்சங்களும் கிடைத்துள்ளன. காரணம், சங்ககாலத் தமிழரின் பண்பாட்டின்படி இறந்தவர்களை முதுமக்கட் தாழி எனப்படும் மண்ணால் செய்யப்பட்ட பெரிய பெரிய தாழிகளுக்குள் (பானைகள்) வைத்துத்தான் புதைப்பார்கள். இதைப்பற்றிய செய்திகள் பல சங்க இலக்கியப் பாடல்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.



            இந்த ஈமத்தாழிகளுக்குள் இருந்த எச்சங்களின் வயதானது கார்பன் டேட்டிங் முறைப்படி 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து, ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னரும் அந்த ஊரில் தமிழர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதும் அத் தமிழர்கள் மண்தாழிகளை உருவாக்கத் தெரிந்தவர்கள் என்பதும் உறுதியாகிறது. சக்கரங்களின் உதவியின்றி இவ்வளவு பெரிய மண்தாழிகளை அதுவும் சரியான வடிவில் உருவாக்க இயலாது என்பதால் அவர்கள் கண்டிப்பாகச் சக்கரங்களைப் பயன்படுத்தி இருக்கவேண்டும் என்பதும் உறுதியாகிறது. இக்கூற்றுக்கு ஆதாரமாக உள்ள சங்கப் பாடல்கள் சிலவற்றையும் கீழே காணலாம்.



சான்று எண்: 1
கலம் செய் கோவே கலம் செய் கோவே
இருள் திணிந்து அன்ன குரூஉ திரள் பரூஉ புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர்உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம்
இரு நிலம் திகிரியா பெரு மலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே - புறம்.228

பொருள்சுருக்கம்: நெடுமா வளவன் என்னும் மன்னன் இறந்துவிட்டான். அவனைப் புதைப்பதற்கு ஈமத்தாழி தேவைப்படுகிறது. மற்றவர்களைப் போலன்றி இம் மன்னன் கொடையிலும் வீரத்திலும் மிகப் பெரியவன் என்பதால் இவனை மிகப்பெரிய தாழிக்குள் வைத்துத்தான் அடக்கம் செய்யவேண்டும் என்று விரும்பும் புலவர் பானைசெய்யும் குயவனைப் பார்த்து இவ்வாறு கேட்கிறார் : " பானைசெய்யும் பெரும் குயவனே ! நெடுமாவளவனுக்கான ஈமத்தாழியை எவ்வாறு செய்யப் போகிறாய்?. இந்த மண்ணுலகத்தையே சக்கரமாகவும் பெரிய மலையினையே மண்ணாகவும் கொண்டு இம்மன்னனுக்கான ஈமத்தாழியைச் செய்ய உன்னால் முடியுமா?. ".

            புலவர் இந்த மண்ணுலகத்தினைச் சக்கரமாகக் கருதியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆம், இந்த மண்ணுலகம் ஒரு சக்கரத்தினைப் போல எப்போதும் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் புலவர் அதனை ஒரு சக்கரமாகக் கொள்ளச் சொல்கிறார். சக்கரத்தின்மேல் வைத்துச் செய்யப்படும் மண்ணுக்குப் பதிலாக பெரிய மலையினையே மண்ணாகக் கொள்ளச் சொல்கிறார். இந்த அருமையான உவமையிலிருந்து பெறப்படும் வரலாற்றுச் செய்தி இதுதான்: சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குயவர்கள் சக்கரங்களைக் கொண்டே பானைகளை உருவாக்கி இருக்கின்றனர்.

சான்று எண்: 2
.... வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்      
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் ... - மலை.475

பொருள்விளக்கம்: வயலில் வெண்ணெல்லை அரிவோர் எழுப்பிய உடுக்கை ஒலியைக் கேட்டு அஞ்சிய எருமைக் கடாவொன்று தனது கூட்டத்தைப் பிரிந்து வேகமாக ஓடியது. அப்போது நிலத்தில் தேங்கியிருந்த நீரின்மேல் அதன் கால்கள் பதியவும் அதிலிருந்து வட்டவட்டமாக அலைகள் தோன்றிக் கொண்டே இருந்தன. இதைப் பார்ப்பதற்குக் குயவன் பானைசெய்யப் பயன்படுத்தும் சக்கரம் சுற்றுவதனைப் போலத் தோன்றியது.

            இப்பாடலில் வரும் 'வனைகலத் திகிரி' என்பது குயவன் பானை வனைய / செய்யப் பயன்படுத்தும் சக்கரத்தைக் குறிப்பதாகும். இதிலிருந்து, சங்ககாலத் தமிழர்கள் பானைசெய்வதற்குச் சக்கரங்களைப் பயன்படுத்தினர் என்னும் செய்தியினைப் பெறமுடிகிறது.

முடிவுரை:
            இதுவரை கண்டதிலிருந்து சங்ககாலத் தமிழகத்தில் சக்கரங்கள் இழுவைத் தொழிலுக்கு மட்டுமின்றி மண்பாண்டத் தொழிலுக்கும்  பயன்படுத்தப்பட்டு வந்தன என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது. மேலும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களின் வயதின்படி தமிழகத்தில் 4000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சக்கரங்களைக் கொண்டு மண்பானைகள் செய்யப்பட்டது என்றும் அறியப்பட்டது. இவ் இரண்டையும் இணைத்துப் பார்க்குமிடத்து, சக்கரங்கள், மண்பாண்டங்கள் மற்றும் வண்டிகளை உருவாக்கும் அறிவியலைத் தமிழர்கள் பிறரிடமிருந்து கற்கவில்லை என்பதும் சக்ர என்ற சொல்லில் இருந்து சகடு என்னும் தமிழ்ச்சொல் தோன்றவில்லை என்பதும் உறுதியாகிறது. இக் கூற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் சக்கரம், மண்பாண்டம், வண்டி தொடர்பான தமிழ்ச்சொற்கள் பலவும் எப்படியெல்லாம் திரிந்து இந்தியாவின் பிறமாநில மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதனை பிறிதொரு  கட்டுரையில் விரிவாகக் காணலாம்.





___________________________________________________________
தொடர்பு: திருத்தம் பொன். சரவணன்
vaendhan@gmail.com
http://thiruththam.blogspot.com/




Tuesday, September 18, 2018

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள்


திருமதி.வலன்ரீனா இளங்கோவன்,
யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்,
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.





ஈழத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிலுள்ள தீவுக் கூட்டங்களில் தொலைவிலுள்ள யாழ் நெடுந்தீவைச் சேர்ந்தவர் ஆசிரியர் நாகநாதர் கணபதிப்பிள்ளை.  இவர் சிறுவயதில் கத்தோலிக்க மதத்தைத் தழுவி யாழ் சம்பத்திரிசியர் கல்லூரியில் பயின்று, பின்னர் அக்கல்லூரியின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் திருமணப்பருவத்தை அடைந்ததும் ஊர்காவற்றுறை கரம்பன் நல்லூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க சமயத்தவரான செசி இராசம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களின் மூத்த மகனாக 1913ம் ஆண்டு ஆவணித்திங்கள் இரண்டாம்நாள் பிறந்தவரே தனிநாயகம் அடிகள் ஆவார். இவருக்கு ‘சேவியர்’ என்ற திருமறைப்பெயர் இடப்பட்டது. எனினும் தந்தையின் குலமுறையை நினைவுபடுத்துவதற்காக தனிநாயகம் என்ற பெயர் சொல்லப் பெயராகச் சூட்டப்பட்டது.

சேவியர் தனிநாயகம் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் தமது கல்வியைத் தொடர்ந்து கற்றார். பாடசாலையில் படிப்பிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய தனிநாயகம் தமிழ், ஆங்கிலம், பொதுத்திறமை என எல்லாவற்றிலும் முதல் மாணவனாகத் திகழ்ந்து, போட்டிகளில் பங்குபெற்றுப்  பலபதக்கங்களையும், பரிசில்களையும் பெற்றார். கல்லூரி மாணவ வெளியீட்டு இதழின் ஆசிரியராக இருந்தார். தனது 16ஆவது வயதில் உயர்வகுப்புப் பரீட்சையில் விசேட திறமையுடன் சித்திபெற்றார்.

இவர் உயர்படிப்புப் பெறும் தகுதி இருந்தும் உத்தியோகம் பெறும் வாய்ப்பு இருந்தும் கூட இவற்றை எல்லாம் விடுத்து இறையருள் பெற்று துறவுபூண திடமனங்கொண்டு துறவுபூண்டு தனது 17ஆவது வயதில் கொழும்பு புனிதர் பேணாட் திருமறைக்குருகுலப் பயிற்சி நிலையத்தில் துறவுப் பயிற்சியை ஆரம்பித்தார். பெற்றோர்களின் வளர்ப்பும் கல்லூரிக் குருக்களின் அறிவுரையுமே இவரைத் துறவுநிலை பெறச் செய்தன.

தனிநாயகம் சமய இறையியல், தத்துவ இயல், மனிதவுரிமை இயல் ஆகிய பாடநெறிகளை ஆர்வத்துடன் பயின்று வந்தார். தமிழ், சிங்கள, லத்தீன் ஆங்கிலமொழிகளை ஆய்வுமுறையில் கற்றறிந்தார். இவரது கற்கை காலத்தில் பலதடைகள், இன்னல்கள் ஏற்பட்ட போதும் இறையருளால் தென்னிந்திய ஆயர் ஒருவரின் ஆதரவு கிடைக்கப்பெற்று ரோமாரிபுரி சென்று “ஊர்பான்” குருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 6 ஆண்டுகள் பயின்று சமய உயர் பட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

இக்காலத்தில் இருவருடன் பல நாட்டிலுமுள்ள பலமொழிகள் பேசும் குரு மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். இவர்களுடன் நட்புக் கொண்ட தனிநாயகம் ஒவ்வொரு நாட்டவரின் மொழிகள், பண்பாடு, பழக்க வழக்கங்களை அறிந்து கொண்டார். அத்தோடு எமது தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையையும், தூய்மையையும் தமிழர் பண்பாட்டையும், மற்றோருக்கு அறிமுகப்படுத்தினார்.

“வத்திக்கான்” வானொலி நிலையத்தில் முதன்முதலில் தமிழில் ஒலிபரப்புச் செய்தபோது இவருக்கு இச்சந்தர்ப்பம் கிடைத்தது.

1938ஆம் ஆண்டு பங்குனித்திங்கள் 19ஆம் நாள் “குருத்துவம்” என்னும் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர் அன்று முதல் சுவாமி சேவியர் தனிநாயமாக அழைக்கப்பட்டார். இவர் தனது முதல் மறைப் பணியை தென்னிந்திய தூத்துக்குடி மேற்றிராசனத்தில் தொடங்கினார். அங்கு வடக்கன் குளத்தில் உள்ள புனித தெரேசா உயர்நிலைப் பள்ளியின் அதிபராகவும், பங்குத் தந்தையாகவும் பதவி பெற்றுச்சிறப்பாகப் பணிபுரிந்து வந்தார். சமயத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர் தமிழ்த்துறையிலும் உயர்பட்டம் பெறவேண்டும் என்று சென்னை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கலை பயின்று முதுமாணி (M.A)  பட்டத்தையும், இலக்கிய முதுமாணிப் பட்டத்தையும் (M.L)   பெற்றுக்கொண்டார். தமிழிலும், கல்விமுறையிலும் ஆய்வு நடத்தி ஆற்றல்பெற்று விளங்கினார். வெளிநாடுகளில் தமிழின் தனிப்பெருமை பற்றி விளக்கவுரைகள் வழங்கும் வாய்ப்பு அடிகளாருக்குக் கிடைத்தது.

உலகத் தமிழ்த்தூது பணியில் முதற்கட்டமாக 1950-51 ஆம் ஆண்டுகளில் வடதென்னமெரிக்கா, ஜப்பானிய பல்கலைக்கழகங்களுக்கு சென்று சொற் பொழிவாற்றினார்கள். 1951ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்விழாவில் இலக்கியச் சிறப்பியல்புகள் பற்றிய ஆய்வுரையை நிகழ்த்திப் பல பேரறிஞர்களின் பாராட்டைப் பெற்றார்.

1952இல் இலங்கைப் பல்கலைக்கழக தத்துவவியல், கல்வியியல் இவற்றுக்கு உதவிவிரிவுரையாளராகப் பதவி ஏற்றுப் பணிபுரிந்ததுடன் முதுமாணிப் பட்டதாரி வகுப்புப் பேராசிரியராகவும் கடமையாற்றினார். 1954இல் இந்தியா, மலாயா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று தமிழ்மொழிக் கலாச்சாரம் பற்றிச் சொற்பொழிவுகள் நடத்தினார். 1955இல் கம்போடியா, மலாயா, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் முதலிய நாடுகளுக்குச் சென்று தமிழ்த்தூது விரிவுரைகள் ஆற்றினார். 1957இல் இங்கிலாந்து சென்று ஆய்வு நடத்திக் கலாநிதி (P.hD) பட்டத்தைப் பெற்றார். 1961இல் மலாயாப் பல்கலைக்கழகத்தில் இந்திய கலைப்பீட விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் கடமை புரிந்தார்.

அத்தோடு, மலாயாவில் உயர்வகுப்புகளில் தமிழ்ப்பாடப் பிரதம பரீட்சகராகவும், சர்வகலாசாலை மாணவர் ஒன்றிய முக்கிய உறுப்பினராகவும், நூற்குழு அங்கத்தவராகவும், மலாயாக் கல்வித்துறை ஆலோசகராகவும் இருந்து பல பணிகளைச் செய்துவந்தார். 1964இல் ஜெர்மனி கல்விப் பரிமாற்ற நிறுவன ஆதரவில்; ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளில் விரிவுரைகள் நிகழ்த்தினார். அத்தோடு இவர் தமிழ் வளர்ப்பு நிறுவனங்கள், இயக்கங்களை உருவாக்கி சாதனை படைத்து அழியாப் புகழை ஈட்டிக்கொண்டார்.

1941இல் இவர் அமைத்த தமிழ் இலக்கியக் கழகம் இன்றும் சிறப்பாக தமிழ்ப்பணிகளைப் புரிந்து வருகின்றது. 1964இல் இந்தியாவின் தலைநகர் டில்லியில் நடைபெற்ற உலகக் கலைகளில் 24ஆவது மாநாட்டில் அனைத்துலக தமிழாட்சி மன்றத்தை உருவாக்கினார். 15 நாடுகளைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் இம்மன்றத்தின் முதல் உறுப்பினர்களாக இணைந்தார்கள். இம்மன்றம் இலங்கை, இந்தியா, மலாயா போன்ற நாடுகளில் நிறுவப்பட்டது. இம்மன்றத்தின் மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. தொடர்ந்து பிரான்ஸ், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மகாநாடுகளை நடாத்தி வந்தார். பல்வேறு நாடுகளிலும் தமிழ்விருத்திச் சங்கங்களையும், பண்பாட்டுக் கழகங்களையும் நிறுவி தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஊக்கமளித்து வந்தார் தனிநாயகம் அடிகள்.

1952இல் கத்தோலிக்க எழுத்தாளர் சங்கத்தை ஏற்படுத்தி அதன் இயக்குநராக இருந்து பலசமயப் பணிகளைப் புரிந்து வந்தார். அத்தோடு மொழி, சமயம், பண்பாடு, வரலாறு பற்றிய பல நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்துள்ளார். 1952இல் தமிழ்ப்பண்பாடு எனும் ஆங்கில முத்திங்கள் வெளியீட்டை ஆரம்பித்து உலகப் பேரறிஞர்கள் பலரது ஆக்கங்களையும் பிரசுரித்து வந்தார். 15 ஆண்டுகள் தொடர்ந்து இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து பெருந் தொண்டாற்றி வந்தார்.

மேலும் “தமிழ்த்தூது” என்னும் நூலையும் தமிழில் வெளியிட்டார். இந்நூல் சென்னைப்பல்கலைக்கழகப் பாடநூலாக இருந்தது. இந்நூல் ஒருமொழி ஒப்பியல் நூலாகக் கூறப்படுகின்றது. 1966 இல் “ஒன்றே உலகம்” எனும் உலக சுற்றுலாச் செய்திகளைத்தரும் நூல் ஒன்றையும் வெளியிட்டார். இவர் பல ஆராய்ச்சிக்கட்டுரைகளையும் நூல் வடிவில் பதித்தார்.

கல்வியில் உயர் பட்டங்கள் பெற்று, துறவியாகி, பன்மொழிப் பண்டிதராகி பிரசாரம் மற்றும் பிரசுரப் பணிகளைச் செய்து நல்லாசிரியராகி, பேரறிஞராகி தமிழ்த்தூதுவராய் தரணியெங்கும் சென்று தமிழ் முழக்கம் செய்த தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் 1980ஆம் ஆண்டு புரட்டாதி திங்கள் முதல்நாள் இறைபதம் அடைந்தார்.

“வாழ்க தமிழ்த்தூதின் புகழ்”

யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த “தமிழ்த்தூது” தனிநாயகம் அடிகள் நினைவு தினம் 01.09.2018


___________________________________________________________
தொடர்பு:
திருமதி.வலன்ரீனா இளங்கோவன்
(valanteenaelangovan@gmail.com)
யாழ் பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்,
குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.




Friday, September 14, 2018

மலையகத்தில் மாரியம்மன் வழிபாடு



உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை (Venus of Willendorf) சிற்பமாகும். கி.மு.30,000 வாக்கில் செதுக்கப்பட்ட ஒரு சிறிய தாய் தெய்வ சிற்பம் இது. இன்றைய ஆஸ்திரியாவின் ஒரு மலையடிவாரத்தில் அகழ்வாராய்ச்சியின் போது இந்தச் சிற்பம் கிடைத்தது. இன்று வியன்னா வரலாற்று அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது.

தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக காலூன்றிய ஒரு வழக்கு. தமிழ் மக்கள் அன்னையையே தம் வாழ்வின் எல்லாக் கால கட்டங்களிலும் தம்மை காக்கும் தெய்வமாகக் கொண்டிருந்தனர்.

கடந்த சில நூற்றாண்டுகளில் புதிய வாழ்வைத் தேடி பல தீவுகளுக்கும், தென்னாப்பிரிக்கா, மலாயா, இலங்கை என்று சென்ற தமிழக மக்களும் தாய் தெய்வ வழிபாட்டையும் அதனைச் சுற்றி வழங்கப்படும் சடங்குகளையும் தம்மோடு எடுத்துச் சென்றனர் என்பதை இன்று அம்மன் கோயில்கள் பெருவாரியாக இங்கு வழக்கில் இருப்பதைக் கொண்டு எளிதாக அடையாளம் காண முடிகின்றது.

தங்கள் சொந்தங்களை விட்டுப் பிரிந்து புதிய நிலத்தில் கால் ஊன்றிப் பிழைக்க வந்த மக்கள் சந்தித்த அவலங்கள் பல. பணிக்கு அமர்த்தியவர்கள் நீண்ட நேரம் வேலை பார்க்க நிர்ப்பந்தித்த சூழல், காடுகளை அழித்து கிராமங்களையும் தோட்டங்களையும் உருவாக்கிய போது சந்தித்த பிரச்சனைகள், சக மனிதர்களாலேயே துன்பத்திற்குள்ளாகப்பட்ட கொடூரமான சூழல் என்ற நிலையில் நம்பிக்கை தரும் ஒரே பொருளாக மாரியம்மன் கோயில்களே பஞ்சம் பிழைக்க வந்த இம்மக்களுக்கு அமைந்தது. இத்தகைய கோயில்களில் ஒன்றாக இலங்கையின் மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயத்தைக் கூறலாம்.

இலங்கை மலையகப் பகுதிகளில் கோப்பித் தோட்டம் தேயிலைத்தோட்டம் என உருவாக்கப்பட்ட 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் தோட்டத்து கங்காணிமார்களுக்குக் கோயில்கட்டிக்கொள்ள இடம் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்ததாக அறிய முடிகின்றது ஒவ்வொரு கங்காணிக்கும் ஒரு 'பெரட்டி' வழங்கப்பட்டிருந்தது. ஆக அவர்களுடைய ஆளுமைக்குள் இருக்கும் பெரட்டியில் கோயில் திருவிழா முடிந்த பின்னர் அடுத்த கங்காணியின் பெரட்டிலுள்ள கோயிலில் திருவிழா நடக்கும் வகையில் முறைப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர் பெரிய கங்காணியின் முக்கியத்தைக் காட்டிக்கொள்வதற்காகத் திருவிழாவில் ஊர்வலங்களும் நடத்தப்பட்டதாக அறிகின்றோம். இத்தகைய சிறிய திருவிழாக்கள் முடிந்த பின்னர் இறுதியில் எல்லா சிறு கோயில்காரர்களுமாக இணைந்து பெரும் திருவிழாவினை எடுப்பது வழக்கமாயிருந்தது. இத்தகைய கோயில்களில் அன்று சாமிக்கு மந்திரம் சொல்வதற்கு பூசாரிமார்கள் இருந்தனர். இவர்கள் தோட்டத் தொழிலாளர்களுக்கிடையில் உள்ளவர்களிலேயே ஒருவராக இருப்பார். உடுக்கடித்து 'மண்டு' வைத்து 'சாமியை வரவழைத்துக்' குறி சொல்லி வழிபாடு நடைபெறும் . கரகம் எடுத்தல், காவடி எடுத்தல் வேல்குத்துதல் போன்றவையும் வழிபாட்டில் ஒரு அங்கமாக இருக்கும்.

பொதுவாக இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் தெய்வங்களாக முத்துமாரியம்மன், காளியம்மன் ஆகிய பெண்தெய்வங்களையும் முருகன், விநாயகர், மாடசாமி முனியாண்டி, இடும்பன், முன்னடையான், ரோதை முனி, மதுரை வீரன், சிந்தாகட்டி, கறுப்பண்ணசாமி, கவாத்துசாமி, ஐயனார், அழகுமலையான் ஆகிய ஆண் தெய்வங்களுக்கான கோயில்களும் உண்டு. இவற்றோடு ஊமையன் கோயில், சமாதிகள் அடங்கிய தென்புலத்தார், நாகதம்பிரான், அரசமரம், கருடாழ்வார் போன்ற வழிபாடுகளும் இருந்தாலும் மாரியம்மன் வழிபாடே மலையக மக்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த வழிபாடாக அறியப்படுகின்றது. உதாரணமாகக் கண்டியில் 57 மாரியம்மன் ஆலயங்களும், நுவரெலியாவில் 225 மாரியம்மன் ஆலயங்களும், கேகாலையில் 46 மாரியம்மன் ஆலயங்களும், களுத்துறையில் 45 மாரியம்மன் ஆலயங்களும் இருப்பதைக் காணலாம்.

இப்புகைப்படத்தில் தமிழகத்திலிருந்து மலையகத்தோட்டத்தில் பணிபுரிய வந்த தமிழ்ப்பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கியவாறு நிற்பதைக் காணலாம். இது 1901 அல்லது 1902ம் ஆண்டு வாக்கில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். ஒரு அஞ்சல் அட்டையின் முகப்புப் பக்கத்தில் அச்சிடப்பட்ட புகைப்படம் இது.

உசாத்துணை- மலையகத்தில் மாரியம்மன் வழிபாடும் வரலாறும், மாத்தளை பெ.வடிவேலன் (1997)

புகைப்பட சேகரிப்பு:திரு.முருகையா வேலழகன், ஓஸ்லோ, நோர்வே. ( இணையம் வழி ஏலத்தில் வாங்கப்பட்ட கி.பி 19ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 20ம் நூற்றாண்டின் ஆரம்பக்காலப் புகைப்படம்)

முனைவர்.க.சுபாஷிணி

Monday, September 10, 2018

கால்பந்தாட்ட ஜாம்பவான் நாகேஷ் மறைந்தார்




இந்தியாவின் பீலே என்று வர்ணிக்கப்பட்ட இந்தியக் கால்பந்தாட்ட வீரர் நாகேஷ் அண்மையில் உடல்நலக் குறைவினால் இயற்கை எய்தினார்.

தமிழகத்தின் வடசென்னையின், காக்ரேன் பேசின் சாலையில் அமைந்துள்ள அரிநாராயணப் புரத்தில் பிறந்து வளர்ந்தவர் நாகேஷ். தனது அசாத்தியத் திறமையினால் இந்தியக் கால்பந்தாட்ட அணிக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தலித் சமூகத்தில் பிறந்தவர் என்கிற ஒரே காரணத்தினால் விரைவிலேயே அவர் இந்திய காற்பந்தாட்ட அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆயினும் இந்திய கால்பந்தாட்ட ரசிகர்களின் நாயகனாக அவர் திகழ்ந்தார். கேரளத்திற்கு அவர் விளையாடச் செல்லும்போதெல்லாம் அவருக்கு ரசிகர்கள் கட்அவுட் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். திரையரங்குகளில் நாகேஷ் வருகையைப் பற்றின அறிவிப்புகள் ஸ்லைடு மூலமாகக் காண்பிக்கப்பட்டன. அந்த அளவிற்கு நாகேஷின் புகழ் பரவியிருந்தது. மேற்கு வங்கத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே அவர் வைத்திருந்தது மட்டுமின்றி தெற்காசிய நாடுகளிலும் அவர் தனது முத்திரையைப் பதித்திருந்தார்.

தனது திறமைக்கேற்ற உரிய அங்கீகாரத்தினை இந்திய அரசிடமிருந்து அவரால் தன் வாழ்நாளில் பெற முடியாலே போய்விட்டது. சாதி எனும் அரக்கன் அவருக்கான சர்வதேச வாய்ப்பினைத் தடுத்தது, ஒழித்தது. ஆயினும் அவர் பெற்ற புகழ் அத்தனையும் அவரது சொந்த முயற்சியினாலேயே அவர் பெற்றார். நூற்றுக்கணக்கான கால்பந்தாட்ட வீரர்களை அவர் உருவாக்கினார். அவரிடம் பயின்றவர்கள் இன்றும் இந்தியாவில் பல அணிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னை துறைமுக அணிக்கான பயிற்சியாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, வடசென்னையில் கால்பந்தாட்டத்தை பயிற்றுவித்து வந்தார். தமிழகத்தின் கால்பந்தாட்ட விளையாட்டுக்கான அடையாளமாகத் திகழ்ந்தவர் அவர். வடசென்னையின் முத்திரையாகவும் வாழ்ந்தவர்.

எனது பள்ளி நாள்களில் அவரிடம் கால்பந்தாட்ட பயிற்சி செய்திருக்கிறேன். சிறுவர்களிடம் அவர் பழகும் பாணி எளிமையானது. அவரோடு கால்பந்தாட்டம் விளையாடிய நாட்கள் கொஞ்ச நாட்கள்தான். அவரிடம் பந்து ஒரு குழந்தையைப் போல தவழும். அவர் சொல்வதை மட்டுமே கேட்கும். அதையெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். நாகேஷ் மறைந்த இந்தச் சூழலில் கனத்த இதயத்தோடு அதை அசைபோட்டுப் பார்க்கிறேன்.

பெரும் திறமைசாலிகளைச் சாதியின் சாபக்கேடு எரிமலையைப் போல நெருப்பும் புகையுமாக மூடி மறைக்கிறது என்பதற்கு நாகேஷ் அவர்களின் திறமையான வாழ்வும் ஒரு சான்று.

18 ஆண்டுகளுக்கு முன்பு தலித் முரசு இதழுக்காக நாகேஷ் அவர்களைப் பேட்டி எடுத்தோம். நான், தோழர். புனித பாண்டியன், பத்திரிக்கையாளர் மீனா மயில் ஆகியோர் போய் பேட்டி எடுத்தோம். அந்தப் பேட்டி தலித் முரசு இதழில் இடம் பெறவில்லை. இது எனக்கு கடும் குற்றவுணர்வாக இன்றும் நிற்கிறது. பேட்டியின் போது நாகேஷ் பெரிதும் அலட்டிக் கொள்ளவில்லை. யதார்த்தமாகப் பேசினார். கடும் விரக்தி மட்டும் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

”இந்திய அணியிலிருந்து ஏன் வெளியே வந்தீர்கள் என்று நான் கேட்டேன்”. நாகரீகம் கருதியே அப்படிக் கேட்டேன். அவர் முகம் மாறியிருந்தது. ”வெளியேற்றப்பட்டேன். அதற்குச் சாதிதான் காரணம் என்பது தெரியும், ஆனால் அதை அவர்கள் நேரடியாகக் காட்டவில்லை”, என்று சொன்னது இன்றும் நினைவிருக்கிறது. நாகேஷ் தமது சாதனைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். எதிர்காலம் பற்றின எந்த நம்பிக்கையும் அவரிடம் அப்போது தெரியவில்லை. மதுப்பழக்கம் அவரை ஆக்கிரமித்து, மன அழுத்திலிருந்து சற்று ஆறுதல் அளித்திருக்கும் போலும்.

நாகேஷின் வீடு முழுமைக்கும் கோப்பைகள் நிரம்பி இருந்தன. ஆனால், அவரின் மனது தகுந்த அங்கீகாரம்  பெறாததனால் அழுத்தத்தினால் நிரம்பி இருந்தது. ஆயினும் தான் நேசித்த கால் பந்தாட்டத்தைத் தனது இறுதி வரை அவர் விடவில்லை.

உலகின் முன்னணி கால்பந்தாட்டக்காரரின் வாழ்வு துயரமாக முடித்து வைக்கப்பட்டது. இந்திய சாதி அமைப்பு எனும் மனநோயின் பரிசு இது.


வடசென்னையில் இந்திய முகம் ஒன்று மறைந்தது.. நாகேஷ் அவர்களின் புகழ் நீண்ட நாட்கள் அவரது ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் .

-கௌதம சன்னா

Sunday, September 9, 2018

பல்லவர் கால விநாயகர் மீட்பு


—  கோ. செங்குட்டுவன்



இதுவும் வரலாறு மீட்பு தான்…

ஒரே மண்டபம். ஆனால் இரண்டு விநாயகர் சிற்பங்கள்.

பின்னால், பலகைக் கல்லில் பிரம்மாண்டமாய் காட்சி தருபவர், பல்லவர் காலத்திய, இடம்புரி விநாயகர்.  ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவர்.

முன்னால் இருப்பவர், குட்டி விநாயகர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தபோது, யாரோ ஒரு பக்தரால் குடியேற்றப் பட்டவர்!



விழுப்புரம் வட்டம், திருவாமாத்தூர், அபிராமேசுவரர் கோயில் வளாகத்திற்குள் தான் இந்தக் காட்சி.  பல்லவர் காலத்திய விநாயகருக்கு, சோழர்கள் மண்டபம் கட்டி இருக்கின்றனர்.

ஆனால், அண்மைக் காலத்திய அறநிலையத் துறையினர் புது பிள்ளையாருக்கு அனுமதி கொடுத்து விட்டனர்.  இதுபற்றி நம்முடைய தொல்லியல் ஆய்வாளர்கள், அறநிலையத்துறை கவனத்துக்கு எடுத்துச் சென்று, புதுப் பிள்ளையாரை அகற்றக் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் துறையினர் ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றியது தான் அதிசயம்!

நேற்று, இந்தக் கோயிலில் கல்வெட்டு மீட்புப் பணி நடந்தது. அப்போதுதான் ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்த இரண்டு விநாயகர்களுக்கும் விடுதலைக் கிடைத்தது.

கரிகால சோழன் மீட்புப் படையினர் மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் குழுவினர்  புதிய விநாயகரை வெளியே அழைத்து வந்தனர். கோயிலின் வடக்கில் உள்ள வன்னி மரத்தடிக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், சிறப்பாக அமர வைக்கப்பட்டார்.



பல்லவர் கால, இடம்புரி விநாயகர் இப்போது, நிம்மதிப் பெருமூச்சு விடுவார் என நம்புகிறோம்!



இதுவும் ஒரு வகையில் வரலாற்று மீட்பு தான்.

இதற்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்த கல்வெட்டு ஆய்வாளர் திரு.ரமேஷ் அவர்களுக்கு நமது வாழ்த்துகள்… நன்றிகள்…



___________________________________________________________
தொடர்பு: கோ. செங்குட்டுவன்
ko.senguttuvan@gmail.com
https://www.facebook.com/ko.senguttuvan