Monday, January 19, 2015

வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழவேண்டும்

-- மேகலா இராமமூர்த்தி


நரேந்திரர் கேட்கும் மனித வாழ்க்கை சார்ந்த அருமையான கேள்விகளும் அதற்குக் குருதேவரின் பொருள்செறிந்த பதில்களும் ... ஓர் உரையாடல்

நரேந்திரர்: (சலிப்புடன்) சற்றும் ஓய்வில்லாத வகையில் வாழ்க்கை மிகவும் பரபரப்பாக உள்ளதே சுவாமி!

இராமகிருஷ்ணர்: தொடர்ந்த வேலைகள் உன்னை ஓய்வற்றவனாக ஆக்கலாம் நரேன்! ஆனால் பயனுள்ள வேலைகளை மட்டும் நீ தேர்ந்தெடுத்துச் செய்தால் தேவையான ஓய்வு உனக்குத் தானாகக் கிடைக்கும். (புன்னகை பூக்கிறார்!)

நரே: இப்போதெல்லாம் வாழ்க்கை ஏன் மிகவும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது?

இராம: ஆராய்ச்சி செய்வதை விடுத்து வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுவாழப் பழகு! அதுவே சிக்கலைத் தீர்க்கும் வழி!

நரே: பின்பு ஏன் நாம் எப்போதும் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கிறோம்...?

இராம: கவலைப்படுவதையே (உன்) வழக்கமாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி எங்கிருந்து வரும் நரேன்? (மீண்டும் குருதேவர் முகத்தில் புன்னகை!)

நரே: சுவாமி! நல்லவர்களே எப்போதும் துன்புறுவதற்கு என்ன காரணம்?

இராம: தங்கத்தைப் புடம்போட்டுத்தான் ஒளி(ர்)விடச் செய்ய முடியும்! வைரத்தையும் உரசித்தான் தூய்மையாக்க முடியும்; அதுபோல் நன்மக்கள் சில சோதனைகளுக்கு (இறைவனால்) உட்படுத்தப்படுவார்களேயன்றித் துன்பத்தில் உழலமாட்டார்கள் நரேன்! அந்த அனுபவம் அவர்கள் வாழ்வைக் களிப்புடையதாக்குமேயன்றிக் கசப்புடையதாக்கா!

(சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு
. என்ற குறள் கருத்து இங்கு ஒப்புநோக்கி மகிழத்தக்கது.)

நரே: (வியப்புடன்) என்ன...!!! இத்தகைய (சோதனையான) அனுபவம் பயனுள்ளதே என்றா கூறுகின்றீர் ஐயா?

இராம: ஆம்...நரேன்! அதில் ஐயமென்ன? அனுபவம் எனும் ஆசிரியர் சற்றே கடுமையானவர்...கண்டிப்பானவர்! முதலில் தேர்வு நடத்திவிட்டுப் பின்பு பாடங்களைக் கற்றுத்தருவதுதான் அவரது வழக்கம்!

நரே: (கவலையுடன்) குருதேவா! பல்வேறு பிரச்சனைகள் நம்மைத் துரத்துவதால் வாழ்வில் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதே புரிபடமாட்டேன் என்கிறதே?

இராம: (நரேனைக் கூர்ந்து நோக்கியவராய்) நரேன்...என்ன இது? வாழ்க்கையை எப்போதும் வெளிப்புறமாகவே நின்று பார்ப்பதைத் தவிர்த்துச் சற்றே உள்முகமாகவும் நோக்கப் பழகு! உன் கண்கள் உனக்கு அக்காட்சியையும், உன் இதயம் நீ பயணிக்கவேண்டிய பாதையையும் காட்டும்!

நரே: (சற்றே தழுதழுத்த குரலில்) நாம் சந்திக்கும் தோல்விகள் நம்மை வேதனையுறச் செய்து சரியான பாதையில் நம் பயணத்தைத் தொடரவிடாமல் செய்துவிடுமா ஐயா?

இராம: இல்லை நரேன் இல்லை! வெற்றி என்பது மற்றவர்களால் அளவீடு செய்யப்படுவதே! ஆனால் உன் மனத்தின் நிறைவை/ திருப்தியை முடிவு செய்பவன் நீயே அல்லவா? (இதன் மூலம் குருதேவர் நரேந்திரருக்கு உணர்த்துவதாய் நான் விளங்கிக்கொண்டது...வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் தன்னிறைவு அடைவதே முக்கியம்; மற்றவர்களால் அளவிடப்படும் வெற்றியைக் குறிவைத்து அவன் ஓடவேண்டிய அவசியமில்லை என்பதே!)

நரே: (சிந்தித்தவண்ணம்) ஐயா! வாழ்வின் கடினமான தருணங்களிலும் சோர்வுறாது நம் குறிக்கோளைத் தக்கவைத்து அதன் வழி நடப்பது எங்ஙனம்? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்!

இராம: நரேன்! எப்போதுமே கடக்க வேண்டிய தூரத்தை எண்ணிக் கவலையும் கலக்கமும் கொள்ளாமல் இதுவரை நீ கடந்துவந்த தூரத்தை எண்ணிப் பெருமிதம் கொள்! நீ பெற்றவைகளை எண்ணி மகிழ்! தவறவிட்டதை எண்ணித் தளராதே!

நரே: (கேள்விகளின் போக்கைச் சிறிது மாற்றி) மக்களிடம் நீங்கள் கண்டு வியக்கும் குணம் எது என்று கூறுங்கள்?

இராம: சிரித்தபடி...அவர்கள் துன்புறும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிரமங்கள் தருகிறாய்?” என்று இறைவனிடம் கேள்வி கேட்டுப் புலம்புகின்றனர்; அதற்கு மாறாக மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் “எனக்கு மட்டும் ஏன் எத்தனை மகிழ்ச்சி?” என்று கேள்வி கேட்பதில்லை!

(இதே கருத்தத்தைத்தான் நம் வள்ளுவப் பேராசான் சிறிது மாற்றி, ”இன்பம் வரும் வேளையில் அதை நன்மையாகக் கருதும் மனிதன், துன்பம் வரும் வேளையில் மட்டும் துவளுவதேன்?” என்கிறார்.

நன்றாங் கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
.)

நரே: (புத்துணர்ச்சி கொண்டவராய்) நல்லது குருதேவா! வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்வதற்கு வழியொன்று சொல்லுங்கள்!

இராம: கடந்த காலத்தை நினைந்து கலங்காமல், நிகழ்காலத்தைத் துணிவுடனும் எதிர்காலத்தை அச்சமின்றியும் எதிர்கொள்வதே வாழ்க்கையைச் சிறப்பாய் வாழ்வதற்கான வழியென்று நான் நினைக்கிறேன் நரேன்!

நரே: இறுதியாக ஒரே ஒரு கேள்வி ஐயனே! சில வேளைகளில் நம் பிரார்த்தனைகளுக்கு (இறைவனிடமிருந்து) பதில் கிடைப்பதில்லையே ஏன்?

இராம: (நரேனின் கண்களை ஆழமாக நோக்கியபடி) பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை! வாழ்க்கை என்பது எளிதாக விடைகாணக் கூடிய புதிரேயன்றித் தீர்வுகாண வேண்டிய பிரச்சனை அன்று! வாழும் விதத்தை ஒருவன் சரியாக அறிந்துகொண்டுவிட்டால் வாழ்க்கை மிகவும் அற்புதமானதே! என் சொற்களின் நம்பிக்கைக் கொள் நரேன்! (என்று கூறியபடி நரேனை அன்போடு அணைத்துக் கொள்கிறார் குருதேவர்.)



(கேள்விகள் நரேந்திரருடையவையாக இருப்பினும் அதற்கான குருதேவரின் விடைகள் மாந்தர்கள் அனைவருக்குமே வாழ்க்கை வழிகாட்டியாக அமைந்திருக்கின்றன!)
உரையாடலை  மொழியாக்கம் செய்தவர் மேகலா இராமமூர்த்தி
மேகலா இராமமூர்த்தி
megala.ramamourty@gmail.com