Monday, April 30, 2018

நாட்டுப்புறப் பாடல்களின் மூலம் தமிழனின் வாழ்வியல்



தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் தமிழனின் வாழ்க்கை முறையை நெறிப்படுத்த நாட்டுப்புற மக்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கைப் பாடம். இப்பாடத்தை படித்தமேதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதல்ல, சராசரி  கல்வியறிவற்ற மக்களால் உருவாக்கப்பட்ட அறிவுப்பெட்டகம். அறிவியலின் அடிப்படை செயல்பாடுகள் அறியாமக்களால், தங்கள் வாழ்க்கை நெறிமுறையை ஒழுங்கியலோடு கலாச்சார பண்பாட்டை மையப்படுத்தி மக்களை ஒருநிலைப்படுத்திப் பக்குவப்படுத்த அமைக்கப்பட்ட பாடல்கள், இவ்வறிவு சார்ந்த சிந்தனை தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியில் வாழ்வியலைச் செப்பனிட கொடுத்துச்சென்ற கொடை.

தமிழன் தன்வாழ்வியலை படிப்படியாகச் செப்பனிட்டு பாடல்களைத் தந்துள்ளான், முறையே;
தாலாட்டுப் பாடல்
தெம்மாங்குப் பாடல்
கும்மிப் பாடல்
விளையாட்டுப் பாடல்
நையாண்டிப் பாடல்
முளைப்பாரிப் பாடல்
வள்ளிப் பாடல்
கதைப் பாடல்
ஒப்பாரிப் பாடல்

தாலாட்டுப் பாடல்:
ஏழு கட்டமாகப் பிரிக்கப்பட்டு, ஏழு நிலைகளிலும் அறிவும் ஒழுக்கமும் பண்பாட்டு சொல்லித்தரப்பட்டுள்ளது;
"ஆராரோ ஆரிரரோ ஆராரோ....
அல்லிமகனோ என் அய்யா நீ அருச்சுனர் புத்திரனோ.....
வீமன் மகனோ என் அய்யா விஜயனார் அரசுபேரரசோ...
முல்லை முருங்கை மலை
என் அய்யா நம்ம முப்பாட்டன் ஆண்டமலை...
பாட்டியடிச்சாளோ பாலுட்டும் கையாலே"

உறவின் மேன்மையையும் பரம்பரை வரலாற்றையும் குழந்தை பருவத்திலேயே புகுத்திய பண்பாடு தமிழ்வழி பண்பாடு;
"என காட்ட கலச்சு என் அய்யா கடி நாய ஏவிவிட்டோ
என் ஓடுமான் ஓட என் அய்யா ஒம்பதுமான் தொடரும்
என் பன்னி படுமோ என் அய்யா பலதுரையும் மான் படுமோ
என் சிங்கம் படுமோ என் அய்யா சின்ன மாமன் வேட்டையில
என் வேட்டைக்கா போறாரோ என் அய்யா வீர புலி உன்மாமன்"

"கடல கடலாக்கி நீ கருங்கடலா ராட்டாக்கி
இரவ பகலாக்கி ராமா நீ இராவணன கொன்னவனோ"

தமிழர்கள் தங்கள் வாழ்விட அமைப்பே வேட்டையும் விவேகமும் வீரமும் வாழ்வியல் நெறிமுறையோடு வகுத்துத்தந்த பாடங்கள் இவை. கலை பண்பாட்டு இலக்கியங்களை கதைவழியாக குழந்தைப் பருவத்திலேயே தாய்ப்பாலோடு தமிழ்ப் பாலையும் சேர்த்தே ஊட்டியுள்ளனர்.

தெம்மாங்கு பாடல்:
தென் + பாங்கு = தென்மாங்கு
தேன் + பாங்கு =  தென்மாங்கு என தென்மாங்குபாடலுக்கு விளக்கம் அளித்துள்ளனர் தமிழறிஞர்கள்.

தெம்மாங்கு பாடலும் அதன் வடிவமைப்பும் அந்தந்த பகுதி மக்களின்  மண்ணின் அடிப்படையிலும் தொழிலின் அடிப்படையிலும் மாறுபடும். இப்பாடல், பெரும்பாலும் ஒரே மெட்டைக்கொண்டு, மலைவாழ் மக்களும் கடல்வாழ் மக்களும் சமவெளிமக்களும் சூழலைப் பாடுபொருளாக கொண்டு பாடுகின்றனர், சமவெளி மக்களால் அதிகம் பாடம்படும் தெம்மாங்கு பாடல் நையாண்டி கலந்து நடவுப்பாடல் களையெடுப்பு பாடல் கதிரறுப்புபாடல் எனச் சிறந்த இசையமைப்பில் எல்லோரும் ஏற்று இரசிக்கும் படி அனைவரும் கவரும்படி அமைந்துள்ளது.

முளைப்பாரிப் பாடல்கள்:
நாட்டுப்புறப் பாடல்களின் பாரம்பரிய பாடலான முளைப்பாரி பாடல், தெய்வவழிப்பாட்டின் போது பாடப்பட்ட பாடலாக உள்ளது. முளைப்பு போடப்பட்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளைச் சுற்றி நின்று, பெண்கள் சுற்றிநின்று கை கோர்த்தும் ,கைதட்டியும் பாடப்படும் பாடல் ,அதில் அற்புத அறிவியலும் விவசாயத் தொழில் நுட்பத்தையும் இணைத்துக் கற்பித்து, தெய்வபக்தியோடு பாடல் அமைக்கப்பட்டிருக்கும். நம் மூதாதையர்கள் அந்த காலங்களிலேயே அடிப்படை அறிவியலை கற்றறிந்தினர், விவசாய நாடான நம்நாட்டில் விவசாயிகளின் பொருளாதாரம் அவர்கள் விதைக்கும் விதையைக்கொண்டே நிர்ணயிக்கப்படும்.

விவசாயிகளின் மூலப் பொருள் விதை விதைக்கெட்டால் சிதைந்து போகும் அவர்களின் வாழ்க்கை முறை, "ஆடிப்பட்டம் தேடி விதை" என்பது பழமொழி வைகாசி மாதத்திலும் ஆடிமாத தொடக்கத்திலும் தெய்வங்களுக்குத்  திருவிழாக்கள் எடுப்பது மரபு.  அந்தநாட்களில் நம்மூதாதையர்கள் தாங்கள் சேமித்துவைத்த நெல் பயிறு வகைகள் போன்ற தானியங்களைப் பரிசோதிக்க இந்த முளைப்பாரி முறை பயன்படுத்தி இருக்கிறார்கள், முளைப்பாரியை வைத்தே எந்த விதைகளை நல்ல விதையெனத் தேர்வுசெய்ய இந்தமுறையைப் பயன்படுத்தி உள்ளனர், அத்தோடு இதுதெய்வத்தின் தேர்வு எனவும் நம்பினர். இப்பாடலில் விதைகளின் தேர்வுமுறை பாதுகாக்கும் முறை பராமரிப்பு நீர்ப்பாசனம் ஆகியவற்றை வரிசைப்படுத்தி  இப்பாடலின் மூலம் கற்றுத்தந்துள்ளனர் விவசாயிகளின் வாழ்வை நெறிப்படுத்தப் பாடப்பட்ட பாடல் முளைப்பாரிப் பாடல்கள்.

"ஒண்ணாங்கட தொறந்து ஒருவகை பயரெடுத்து
தானானே....தானே
ரெண்டாங்கட தொறந்து மொத்தபயிர் அள்ளிவந்து
தானானே... தானே
மூணாங்கட தொறந்து தட்ட பயிர் அள்ளிவந்து
தானானே....தானே

ஒண்ணாந் திங்களிலே ஊறி உதுச்சிருக்கும்
தானானே.....தானோ
ரெண்டாந்திங்களிலை ரெண்டுத்தாளும் போட்டிருக்கும்"

இப்படி பயிரின் வளர்ச்சியை படிப்படியாய் சொல்லி அஞ்சாந் திங்களிலே மஞ்ச நெறம் பிரிஞ்சிருக்கும் ஆறாம் திங்களிலே பயிருட்ட மாயிருக்கும் எனத்தொடரும்....

காடு வெட்டி முள்பெறக்கி மேடுபள்ளம் செப்பனிட்டு
காரானை கட்டி உழுக கவுண்டர் மக்கள் திணை விதைக்க
போரானை கட்டி உழுக புகை குறவர் தினைவிதைக்க.....
பங்குனி மாதத்திலே பதினஞ்சாம் தேதியில
முளப்பாரி.

வள்ளிப் பாடல்கள்:
குறிஞ்சி நிலநாயகி முருகக்கடவுளின் காதல் மனைவி வள்ளியைப்பற்றிப் பாடப்படும் பாடல் வள்ளிப்பாட்டு . இப்பாடல் காவடிச் சிந்து மெட்டில் பாடப்பெறும்  பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. மலைகளில் வள்ளிக்கிழங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் வள்ளிகண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டாள் ,அவளின் வேலைத் தினைப்புனம் காப்பது,  அறுவடைக்குப்பின் தானியங்களை காப்பது, தேனும் தினைமாவும் பிசைந்த உருண்டை களை தயாரிப்பது, சகோதரர்களுக்கும் இறைவன் முருகனுக்கும் அளிப்பது ,முருகன் நீரின்றி விக்குவது  இவற்றை பாடலாகப் புனையப்பட்டது வள்ளிப்பாடல். மேலும் முருகன் கிழவனார் வேடத்தில் வந்து வள்ளியை மணந்ததையும் பாடலாக புனையப்பட்டுள்ளது. பெரும்பாலும் அன்றைய மக்களின் பொழுதுபோக்காக இரவுநேரங்களில் நாடகவடிவில் பாடப்பெற்ற பாடல் வள்ளிப் பாடல்.

"தன்னே னனன்னானே னன்னே னானனானன்ன னானே னன்னே
ஏ வள்ளி வள்ளி வனந்
"தன்னே னனன்னானே னன்னே னானனானன்ன னானே னன்னே
ஏ வள்ளி வள்ளி வனந்தனிலே கிள்ளி முள்ளி கிழங்கெடுத்து
தன்னனன னானே னன்னே னானனன னானே னன்ன
ஏ கிழங்கெடுத்து குழிதனிலே மான்கிடந்து மருகுதம்மா
ஏ மான் தடமு மயில் தடமும் மத்த தடமும் இங்கே இல்ல......"

இப்படியாக வள்ளி வள்ளிக்கிழங்கு குழியில் கண்டெடுத்ததில் தொடங்கிப் படிப்படியாக வள்ளியின் வாழ்க்கை, பண்பாட்டுக் கலாச்சாரம், மலைநாடு இயற்கை வளமென நீண்டு கொண்டே போகும்.

கதைப்பாடல்கள்:
கதைகளைப் பாடல் வரியில் பாடுவது கதைப்பாடலாகும். இப்பாடல்கள் பெரும்பாலும் அந்தந்த வட்டார வழக்குகளில் அங்கே ஆளும் மன்னன் புகழ் கொடைச் சிறப்பு போன்ற உண்மைகளை, கதைவடிவில் கொடுக்கப்பட்டது கொடைப்பாடல், எளிய மொழியமைப்பைக் கொண்டது.  மாற்றுமொழி பெயர்ப்பாகவும் கதைபாடல்கள் உண்டு

"கோடி வந்தனம் மைந்தர்கள் தந்திட கோலடி ஆட்டம் தானானா
அந்த குவலைய மதிப்புகள் பிறநவ பதநொடு இனிமலர் துதியது செய்வோமே கை நாடு கண்டிடும் கட்டபொம்மு துரைராஜன் சரி தன்னை
பாட அது நத்திய சுத்தம் அத்துடன் நத்தனை நித்திய துதியது செய்வோமே
ஆதினாலய கொத்துனாரு பல்லாகிலாடியிருந்த கட்டபொம்மு துரை"

இப்பாடல் தெலுங்கு மொழியிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது, இப்பாடல் முழுமையாக இல்லை கட்டபொம்மு கதையைச் சொல்லும் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒப்பாரி பாடல்:
இறந்த ஒருவருக்காக அவர்களின் உறவினர்களால் பாடப்படும் பாடல் ஒப்பாரிப்பாடல். ஒப்பு வைத்துபாடப்படும் பாடல் ஒப்பாரிப்பாடல், இறந்தவரின் வாழ்க்கை வரலாற்றை இப்பாடல் விவரிக்கிறது  இறந்தவர்களின் ஆவி ஒப்பாரிகளால் சாந்தியடைந்துவிடும் என்ற நம்பிக்கையில் பாடப்படுகிறது. இறந்தவரின் உறவினை அடையாளப்படுத்தும் விதமாக ஒப்பாரி பாடல்கள் அமைந்துள்ளது. அது வாய்மொழியாக அடுத்ததலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. ஒப்பாரிபாடல் இறந்தவர்கள் வீட்டில் மட்டுமே பாடப்படுகிறது வேறிடங்களில் பாடுவது அபசகுனமாகக் கருதப்படுகிறது.

"என்ன பெத்த அம்மா.......
என்ன பெத்த அம்மா.......
நீங்க பெத்த பொண்ணுக்கு பல நாளும் துன்பமய்யா
என்ன பெத்த அம்மா....
நீங்க மெத்த கவலையய்யா மெத்த கவலையய்யா
என்ன பெத்த பொண்ணாளுக்கு நெடுநாளும் துன்பமய்யா
நெடுநாளும் துன்பமய்யா"

இன்று நாகரீகத்தின் வளர்ச்சி நாட்டுப்புறப்பாடல்கள் பெரும்பாலும் அழிவுநிலையை அடைந்துவிட்டது, நாகரீகம் வளர்ச்சியற்ற பண்டைய காலத்தில் பொழுதுபோக்கு நாட்டுப்புறப் பாடல்கள்தான் வெள்ளிமின்னலாக திரைப்படத்துறை வந்தபிறகு மெல்ல நலிவுற்ற நாட்டுப்புறப்பாடல்கள் இன்றைய அதிநவீன வளர்ச்சிக்கு இப்பாடல்கள் ஈடுசெய்யமுடியாவிட்டாலும் நவீன சாயம் பூசி திரைப்பட பாடல்களில் வெற்றியைத் தொட்டு மக்களின் மரபணுவில் உள்ள நம் கலை உணர்வை மங்கவிடாமல் வைத்துள்ளது என்பது மிகையாகாது, பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் நம்முன்னோர்கள் விட்டுச்சென்ற கலையை வெறும் படிப்புக்காக இல்லாமல் உணர்வோடு பேணிக்காக்க வேண்டும்.





காவிய சேகரன்
திருச்சி.

தமிழ் மொழியும் தமிழர்தம் வாழ்வும்

முன்னுரை :
அகரம் தொடங்கி, கல்லும் மண்ணாய்க் கரைந்த வயதாகி, அகத்தியரும், தொல்காப்பியரும் இலக்கணம் வகுக்க ஐம்பெரும் காப்பியங்கள் போற்றி , ஔவையிடம் பேசி, வெண்பாக்கள் சூடி, குறள்களால் தழைத்து, இலக்கியங்கள் மலர்ந்து, பக்திப் பாடல்களால் மெய் மறந்து, மூவேந்தர்களின் மடியில் வளர்ந்து, சிற்றிலக்கியங்கள் கண்டு, மேற்கணக்கு கீழ்க்கணக்குகளை ஆய்ந்து, உரைநடைப் பேசி, வள்ளலாரின் சன்மார்க்கம் கண்டு, பாரதியிடம் எழுச்சிப் பெற்று, பாரதிதாசனிடம் புரட்சிக் கற்று, திரைத்துறையில் முத்திரைப் பதித்து, சின்னத் திரையில் நாடகத்தமிழ் பார்த்து, புதுக்கவிதை மோகத்தில் மரபும் மாறாமல் இதழ்களில் பதிந்து, மின் இதழ்களில் புதுமைப் படைத்து, துளிப்பாவில் சுவைத்து முகநூலில் முகமறியாமல் பேசும் தமிழன்னையின் தாள் பணிந்து  கட்டுரையைத் தொடக்குகிறேன்.

மொழியும், தமிழர்தம் வாழ்வும்:
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகலவன் முதற்றே உலகு.
என்ற தெய்வப் புலவரின் வாக்குக்கு இணங்க அகரத்தை முதலாகக் கொண்டு தோன்றிய காலம் அறிய முடியாத செந்தமிழில் தோன்றிய இலக்கணங்கள் இலக்கியங்கள் போற்றுதற்கு உரியன. செம்மொழியான நம் தமிழ் மொழியின் சிறப்பை நோக்கின் தொட்டணைத் தூறும் ஊற்றாகச் சொல்லிக் கொண்டே செல்லலாம். ழ என்ற சிறப்பெழுத்தைப் பெற்ற ஒரே மொழியாகத் திகழ்வதும், ஓரெழுத்தே பொருள் தருவதும், பொருள் இலக்கணம் பெற்ற மொழியாகவும் ,ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என பகுத்துரைப்பதும் பைந்தமிழில் மட்டுமே.

இலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்ட இலக்கியங்கள் எழுதப்பட்ட காலத்தின் சமூக வாழ்க்கை அரசியல்  பொருளாதாரம் ஆகியவற்றைச் செம்மையுற வெளிப்படுத்துகின்றன. தனித்தோங்கும் கன்னித் தமிழ் கால மாற்றத்திற்கு ஏற்ப அழியாமல் நிலைத்து நிமிர்ந்து நிற்கிறது. எழுத்தளவிலும் சில மொழிகள் பேச்சு வழக்கிலும் இருக்கக்கூடிய நிலையில் வரி வடிவிலும், ஒலி வடிவிலும் ஒப்பில்லா மொழியாக விளங்குகிறது.

தமிழரின் வாழ்வு:
தன்மானம் மிக்கவன் தமிழன். தன்னுயிராய்த் தமிழைப் போற்றி வளர்ப்பவன். உடல் மண்ணை முத்தமிட, உயிர் தமிழ் மொழியோடு கலந்து சிறப்பிக்கச் செய்தவன். இதிகாசம் முதல் இக்காலம் வரை வாழ்வியலில் தலைசிறந்து உலகத்திற்கே நாகரிகத்தை எடுத்துச் சொன்னவன்.  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. என்ற வாழ்க்கை முறையின் தத்துவத்தை வள்ளுவர் அழகுற எடுத்துரை எப்போதும் நம்மொழியில்தான்.

தொல்காப்பியம்:
தமிழில் எழுதப்பட்ட இலக்கண நூல்களில் நமக்குக் கிடைத்த முதல்நூல் தொல்காப்பியம் ஆகும்.  இதன் அடிப்படையிலேயே இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவுக்கு முன்னால் எழுதப்பட்டவைகளில் 473 புலவர்கள் எழுதிய 2381 பாடல்கள் கிடைத்துள்ளன. புலவர்கள், அரசர்கள், பெண்புலவர்களால் எழுதப்பட்டுள்ளன. அக்காலத்தின் ஆட்சி முறை ,காதல், வீரம் ஆகியவற்றை எடுத்து இயம்புகின்றன.

சங்க இலக்கியங்களின் வகைகள்:
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க் கணக்கு எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள்:-
நன்றிணை, குறுந்தொகை,
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து ,
பரிபாடல், கலித்தொகை,
அகநானூறு, புறநானூறு.

பத்துப்பாட்டு நூல்கள்:-
திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை ,
சிறுபாணாற்றுப்படை,
பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப் பாட்டு,
மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை,
குறிஞ்சிப்பாட்டு,
பட்டினப்பாலை,
மலைபடுகடாம்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:-
நாலடியார்,நான்மணிக்கடிகை,
இன்னா நாற்பது, இனியவை நாற்பது,
களவழி நாற்பது,
கார்நாற்பது,
ஐந்திணை ஐம்பது,
திணைமொழி ஐம்பது,
ஐந்திணை எழுபது,
திணைமாலை நூற்றைம்பது,
திருக்குறள்,
திரிகடுகம்,
ஆசாரக் கோவை,
பழமொழி நானூறு ,
சிறுபஞ்ச மூலம்,
முதுமொழிக் காஞ்சி ,
ஏலாதி,
கைந்நிலை.


அகமும்,புறமும்:
வாழ்வியலை அகம், புறம் எனப் பிரித்து அகத்தில் காதலும், வீரமும் இரு கண்களாகப் போற்றியவன் தமிழன்.தலைவன், தலைவி என குடும்பப் பாங்கை உயர்வாகப் போற்றி காதல் வாழ்வைப் படம் பிடித்து அகத்திணை இலக்கியங்கள் உணர்த்தின. நிலம் ஐந்தென்றும் , பெரும்பொழுது , சிறுபொழுது எனப் பகுத்து நெறிகளை உண்டாக்கியவன். குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை எனப் பிரித்து ஒவ்வொரு நிலத்திற்கும் தெய்வம், தலைமக்கள், மக்கள் ,பறவை, விலங்கு ,ஊர், நீர்நிலை, பூ ,மரம், உணவு ,பறை, யாழ், பண், தொழில் என கருப்பொருள்களாகப் பிரித்தவன்.

இளவேனில் , முதுவேனில், கார் ,குளிர் ,முன்பனி, பின்பனி என மாதங்களை வகைப்படுத்தியவன். வைகறை ,காலை ,நண்பகல் , எற்பாடு ,மாலை, யாமம் என ஒரு நாளைச் சிறு பொழுதுகளாகப் பிரித்தவன். புறத்திணையைப் பன்னிரண்டாகப் பிரித்துப் போர் செய்யும் முறைகளை வகைப்படுத்தியது பெரும் சிறப்பாகும்.  வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,  நொச்சி, உழிஞை, தும்பை, வாகை,  பாடாண்,பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை எனவும் பிரித்தமை சிந்தனைக்கு உரியதாகும்.

ஒப்பற்ற பொதுமறை:
தெய்வப் புலவர் அருளிய திருக்குறள் வாழ்வில் பொருளீட்டும்  முறையினையும், அறத்தோடு வாழ்தலையும், இன்பத்தோடு வாழ்தலையும் அழகுற இயம்புகிறது. நம் தமிழர்களுக்கு மட்டுமன்றி உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் பொதுவாக எடுத்துரைப்பது சிறப்பாகும். எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதால் உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வாழும் வகையினை வழிப்படுத்துவதோடு அரசின் நிலைப்பாட்டையும் தெளிவாக எடுத்துரைப்பது சிறப்பாகும். ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்.

நீதி வழுவா நெறிமுறை:
நீதிவழுவாத் தமிழர் நெறியினிலே சிறப்பாகும். நெஞ்சினிலே கொள்வாரே நேர்மையிலே நெருப்பாகும். ஆதிமுதல் வகுத்திட்ட ஐம்பெருங்குழுவினர் அன்றாடம் வழங்கிட்டார் ஆராய்ந்தே தீர்ப்பாகும். தீதிலா கோமகனின் தீர்ப்புகளும் வியப்பாகும். தெள்ளுதமிழ் இலக்கியங்கள் தெளிவுறவே கோர்ப்பாகும். மேதினியில் வியந்திட்டார் மேன்மையின் பகுப்பாகும். மீளாத நடுவுநிலை மிளிர்ந்திடவே படைப்பே ஆகும்.

மூச்சும், பேச்சும் :
மொழியினிலே தமிழென்றே முழக்கிடுவோம். மூச்சினிலே கொண்டிடுவோம் முத்தமிழும் தேனாய். வழியினையே தேடிடுவோம் வாய்ப்புகளும் பெருக. வறுமையையும் போக்கிவிட்டு வளமுடனே வாழ்வோம். பழியென்றால் அஞ்சிடுவோம் பாசத்தால் நனைந்தே. பாறைகளும் தூளாகும் பார்வையிலே கனிந்தே. விழிகளிலே எரிமலையாய் வீறுகொண்டே எழுவோம். விதைத்திடுவோம் சிந்தனையை வெற்றிகளைப் பெற்றிடுவோம்.

வரலாறு படைப்போம்:
சிங்கமாக நடந்திடுவோம் சீறித்தான் பாய்ந்து சினமென்னும் குன்றேறி செருக்கோடு நடந்து தங்கமாக மின்னித்தான் தனித்துவமும் பெற்றுத்  தயங்காமல் அநீதிகளைத் தட்டித்தான் கேட்டே. மங்காதப் புகழ்பெறவே மாடாக உழைத்து மக்களுக்குத் தொண்டுசெய்வோம் மனிதநேயம் கொண்டே. சங்கநாதம் முழங்கிடுவோம் சரித்திரமாய் வாழ்ந்தே. சாதனைகள் படைத்திடுவோம் சக்கரமாய்ச் சுழன்றே.!

முடிவுரை:
காற்றினிலே இன்னிசையாய்க் கலந்த கீதம் காதினிலே தேனமிழ்தாய் கேட்கும் நாதம். ஊற்றாக உள்ளத்தில் உதய மாகி ஒலிக்கட்டும் எத்திசையும் உறவாய் வேதம். கூற்றாக முன்னோர்கள் குவித்த பாக்கள் குறையில்லா வாழ்வுதரும் குறைகள் போக்கி. போற்றிடுவோம் நம்தமிழைப் பொன்போல் காத்து புதுமைகளைப் படைத்திடுவோம் பொங்கி வாரீர்.




கவிஞர். கோவிந்தராஜன் பாலு
7/126 கவுண்டர்  தெரு,
சுந்தரபெருமாள் கோயில் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம்-614208.
அலைபேசி:9443484316.




Sunday, April 29, 2018

பாசுபதம் – ஒரு பார்வை



——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
சென்ற 24-12-2017 ஞாயிறன்று, கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற வரலாற்று உலாவில் கலந்துகொண்டேன். காங்கயம் பகுதியில் பரஞ்சேர்பள்ளி, மடவிளாகம், மயில்ரங்கம் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தோம். மூன்றுமே, வரலாற்றுப் பின்னணியையும், கல்வெட்டுகள் உள்ள கோயில்களையும் கொண்டிருக்கும் ஊர்கள். பார்க்கப்படாத ஊர்கள். அவற்றுள், மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீசுவரர் கோயில், இக்கட்டுரை எழுதக் காரணமாய் அமைந்தது.

மடவிளாகம் – பச்சோட்டு ஆவுடையார் கோயில்:
மடவிளாகம், காங்கயம் வட்டத்தில் பார்ப்பினி ஊரை ஒட்டியுள்ள ஓர் ஊர். இங்குள்ள பச்சோட்டு ஆவுடையார் கோயிலில், கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் காலத்துக் கல்வெட்டு ஒன்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழன் (பெயர் தெரியாத அரசன்) காலத்துக் கல்வெட்டு ஒன்றும், கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசயநகர அரசர் தேவராயர் காலத்துக் கல்வெட்டுகள் இரண்டும் உள்ளன. இக்கல்வெட்டுகள் நான்கிலும், இறைவன் பெயர் பச்சோட்டு ஆவுடையார் என்றே குறிக்கப்பட்டுள்ளது. உலாவுக்குத் தலைமையேற்று வந்திருந்த தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் அவர்கள், இக்கோயிலின் வரலாற்றுச் சிறப்பு பற்றி எடுத்துரைத்தார்.

மடவிளாகம் என்பது படை வீரர்கள் இருக்கும் இடத்தையும், கோயிலின் மடங்கள் இருக்கும் இடத்தையும் குறிக்கும். இங்கே, கோயில் மடம் இருந்துள்ளது. அந்த மடம் ஒரு பாசுபத மடமாகும். பாசுபதம், சைவத்தின் ஒரு நெறி. சைவத்தின் ஒரு பிரிவு.

பச்சோட்டு ஆவுடையாரும் ஆருத்ர கபாலீசுவரரும்:
பச்சோட்டு ஆவுடையார் என்ற பெயர் எப்படி வந்தது? ”தினமலர்”  நாளிதழின் கோயில்கள் பற்றிய இணையதளத்தில் இக்கோயில் பற்றிய குறிப்பு இவ்வாறு கூறுகிறது:   இக்கோயிலில், இறைவன் சிவன், தன் நகத்தால் தரையைக் கீறியதால் ஏற்பட்டதாகக் கருதப்படும்  ஒரு சுனைக் குளம் உள்ளது. இச்சுனைக்குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பச்சை மண்ணாலான ஒரு பானைக்குடம் தோன்றும். அது முழுதும் திருநீற்றுச் சாம்பல் நிறைந்திருக்கும். எனவே, இறைவன் பச்சோட்டு ஆவுடையார் எனப்படுகிறார். இது, கோயில் பற்றிய ஒரு தொன்மைப் புனைவு.  ஆனால், பாசுபதப் பின்னணியில் பெயர்க்காரணம் வேறு. பாசுபத நெறியில், பிரம்மனின் தலையைக் கொய்த சிவன், தன் கையில் பிரமனின் தலையைக் (பச்சை மண்டை ஓட்டை) கையில் ஏந்தியவாறு  இருப்பதால் இப்பெயர் பெற்றான். (பச்சை என்பது நிறத்தைக் குறிப்பதல்ல; பசுமையையும், இளமையையும் குறிப்பது.) இலகுலீச பாசுபதத்திலிருந்து கிளைத்தவையே காளாமுகமும், காபாலிகமும். இவையும் பாசுபதம் என்னும் பெயரால் அறியப்படுகின்றன. உருத்திரன் என்னும் சுடலைச்சிவனுடன்  தொடர்புடையவை. ஆருத்ரா (ஆதிரை என்று தமிழகத்தில் பரவலாக அறியப்படுவது.) என்பது ஒரு நாள்மீனைக் (நட்சத்திரம்) குறிப்பது; பச்சை, ஈரம் என்னும் பொருளுடையது. கொய்த நிலையில், பிரமனின் மண்டை ஓடு (கபாலம்) பச்சையாகவும், ஈரமாகவும் இருப்பதன் அடிப்படையில், ”ஆருத்ரா”  என்னும் அடைமொழியைப் பெற்ற ”கபாலம்”,  ஆருத்ர கபாலம் ஆனது. ஆருத்ர கபாலத்தை ஏந்திய சிவன், ஆருத்ரகபாலீசுவரன் என்னும் பெயர் பெற்றது பொருத்தமே. வடமொழியாளர்கள் ஆருத்ரகபாலீசுவரன் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர் எனில், அழகுத் தமிழில் ”பச்சோட்டு ஆவுடையார்” என்றும் “பச்சோட்டு ஆளுடையார்”  என்றும் இறைவன் அழைக்கப்பெறுகிறான். கல்வெட்டுகளில் இப்பெயர்களே காணப்படுகின்றன. (பச்சை+ஓடு, “பச்சோடு”  என்றாகிறது. பச்சோடு ஏந்திய என்பதைக் குறிக்கையில், வேற்றுமை உருபு இணைந்தும் பின் மறைந்தும் “பச்சோட்டு”  என்றாகிறது.)

இலகுலீசர் -  இலகுலீச பாசுபதம்:
பாசுபத நெறியைத் தோற்றுவித்தவர் இலகுலீசர் என்பார் ஆவர். எனவே, இவர் பெயரால் “இலகுலீச பாசுபதம்”  என்னும் பெயர் வழங்கிற்று. இவர், குஜராத் மாநிலத்தில் வடோதராவுக்கு அருகில் “கார்வான்”  எனத் தற்போது வழங்கும் “காயாவரோஹன”  என்னும் பகுதியில் பிறந்தவர். இவரது பிறப்பு ஒரு கடவுள் உருவாகவே (சிவனின் இருபத்தெட்டாவது அவதாரம்) கருதப்படுகிறது. சைவம், ஒழுங்கு குறைவுற்ற நிலையில் இருந்ததால், சிவனே சைவத்தை நெறிப்படுத்த மனித உருக்கொண்டு இலகுலீசராகப் பிறப்பெடுத்தார் என்று கருதப்படுகிறது. இவரது உருவச் சிற்பங்களில் கையில் ஒரு பெரிய தடி (தண்டம்) காணப்படும். ஒழுங்குபடுத்தும் செயலைக் குறியீடாக விளக்குவதற்கே கையில் தண்டம் காட்டப்பெறுகிறது. (”லகுல”, “லகுட” ஆகியன தண்டம்/தடி என்பதைக் குறிக்கும் பிராகிருதச் சொற்கள்.) இவர், குஜராத், மகாராட்டிரம், ஒரிசா (தற்போது ஒடிசா) ஆகிய மாநிலங்களில் மடங்களை நிறுவிப் பாசுபத நெறியைப் பரப்பினார். ஏற்கெனவே, சமணர்கள் பள்ளிகளை உருவாக்கிக் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை மக்களுக்குக் கொடையாக நல்கி வந்த நிலையில் – சமணம் வளர்ச்சியுற்ற நிலையில் -  சமணத்துக்கு எதிராக இலகுலீசர் செயல்பட்டார். புதியதொரு நெறி என்று தோன்றாதவாறு, தொல்குடிச் சிவவழிபாட்டைப் பாசுபத வழிபாடாக விரிவாக்கினார். எனவே, பழங்குடியினரின் தன்மையை உள்ளடக்கியதாக இலகுலீசம் விளங்கிற்று. சமூக நெருக்கடிகளுக்கு ஆளான பழங்குடிகளுக்கு ஆதரவும், உதவியும் பாசுபதம் தந்தது.

தமிழகத்தில் இலகுலீச பாசுபதம்:
கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டுகளில் இலகுலீச பாசுபதம் செல்வாக்குப்பெறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் அதன் கிளைகள் (மடங்கள்) மிகுதி. பாசுபதத்தார், அரசர்களின் குருவாக உயரும் நிலையும் ஏற்பட்டது. இறந்துபோன அரசர்களின் நினைவாக எழுப்பப்பட்ட பள்ளிப்படைக் கோயில்களில் பூசைக்கும் நிருவாகத்துக்கும் பாசுபதத்தார் அமர்த்தப்பட்டனர். மேல்பாடிக் கோயில் அரிஞ்சய சோழனின் பள்ளிப்படைக் கோயிலாகும். அக்கோயிலைப் பிரித்துக் கட்டியபோது, அரிஞ்சயனின் எலும்புக்கூடு கிடைத்ததாக அறிகிறோம். அப்போது கிடைத்த கல்வெட்டொன்றில், “லகுலீச பண்டிதர் ரக்ஷை” என்னும் தொடர் காணப்பட்டது. தருமபுரிப்பகுதியில் சென்னிவாய்க்கால் என்னுமிடத்தில் கி.பி. 5-6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கன்னடக்கல்வெட்டில் பாசுபதம் பற்றிய குறிப்புள்ளது. கன்னடக் கல்வெட்டில் சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1 கலிசோரேச்0வர பல்லவேச்0வர
2 உத்துங்க நிர்மல நன்னேச்0வர கீர்த்தி சா0ஸன லஸத் காஞ்சீ புஜங்கேச்0வர
6 .............................வித்தெ ராசி0ய குருகளு புஜங்கரா குரு க்ருஹந்தும்பேச்0வரந்தத் புஜங்கர சிஷ்யர்வேர லாகுளாகமிக வித்யாராசிகள் ஸாஸனம்

காஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்ட பாசுபத குரு புஜங்கர் என்பாரின் சீடர் வித்தியாராசி ஆவார் என்பது செய்தி. கல்வெட்டில் வரும் சொற்கள் காஞ்சீ , ”புஜங்கர சிஷ்யர்” , “வித்யாராசி”   ஆகிய சொற்கள் இச்செய்தியைச் சுட்டுகின்றன. மேலும் ஒரு சொல் இங்கே குறிப்பிடத்தக்கது.  ”லாகுளாகமிக”  என்னும் அச்சொல்லை “லகுள” + “ஆகமிக” எனப்பிரித்துப் பொருள்கொண்டால் லகுலீச ஆகமத்தைச் சேர்ந்த பாசுபதத்துறவி “வித்யாராசி” என்பது பெறப்படுகிறது. பாசுபதத் துறவிகளின் பெயர்கள் “ராசி”   என்னும் பெயரொட்டுடன் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இரு குடைவரைக் கோயில்களில் பாறைப்புடைப்புச் சிற்பங்களாகவும், இருபத்தைந்து ஊர்களில்  தனிச் சிற்பங்களாகவும் இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்துள்ளன. குடைவரைக் கோவில்களாவன மதுரை-அரிட்டாபட்டியும், புதுக்கோட்டை-தேவர்மலையும். விழுப்புரம் மாவட்டத்தில் மாம்பழப்பட்டு, மாரங்கியூர், பேரிங்கூர், சிற்றிங்கூர், கப்பூர், கண்டம்பாக்கம், ஓமந்தூர், வடமருதூர், கீழூர், மேல்பாக்கம், நெடிமோழையனூர், திருவாமாத்தூர், ஆனங்கூர் எனப் பதின்மூன்று சிற்பங்கள் கிடைத்துள்ளதால், தமிழகத்தில் பாசுபத நெறி தொண்டை நாட்டில் மிகுதியும் பரவியிருந்தமை புலப்படுகிறது. இலகுலீசர் சிற்பங்கள் கிடைத்த பிற ஊர்களில் குறிப்பிடத்தக்கவை திருவாரூர் (தஞ்சை மாவட்டம்), திருவொற்றியூர் (சென்னை மாவட்டம்), பேரூர் (கோவை மாவட்டம்), அரிகேச நல்லூர் (நெல்லை மாவட்டம்) ஆகியன. இவற்றில், திருவாரூர்ச் சிற்பம் சிறப்புப் பெற்றது. பல்லவர் காலத்தைச் சேர்ந்த இவ்வரிய சிற்பத்தில், மிகப்பெரிய அளவில் சடை மகுடம் காணப்படுகிறது. சிற்ப இலக்கணங்களின் அடிப்படையில், மஹாராஜ லீலாசனத்தில் சூசி முத்திரையில் அமைந்துள்ளது. இடக்கையில், பாம்பு சுற்றிய இலகுல தண்டத்தைத் தாங்கியவராக விளங்குகிறார். கலை அழகுடன் உள்ளது. பேரூரில் இருக்கும் சிற்பம் வேறொரு சிறப்பைப் பெற்றுள்ளது. வட இந்தியப்பகுதிகளில் இலகுலீசருக்குரிய அடையாளமாக நிமிர் குறி சுட்டப்பெறுகிறது. தமிழகத்தில் நிமிர்குறியுடன் காணப்படும் சிற்பங்கள் பேரூர்ச் சிற்பமும், தாராபுரம் வட்டம் கரையூரில் கிடைத்த இலகுலீசர் சிற்பமும் மட்டுமே. இவை, கோவை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திருவொற்றியூர், இலகுலீச பாசுபதத்தின் மையம் போல விளங்கியது. இங்குள்ள கோயில், காரணை விடங்கதேவர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. காரணை என்பதும் காயாரோகணம் என்பதன் திரிபாகவே இருக்கவேண்டும். காரோணம் என்பதும் இன்னொரு திரிபே. கச்சி, குடந்தை, நாகை ஆகியன காயாரோகணக் கோயில்கள் எனப்படுகின்றன.  திருவானைக்காவில் பாசுபத கிருஹஸ்த மடம் ஒன்று  இருந்துள்ளது. அகில நாயகி திருமடம் என்னும் பெயரில் இலங்கிய இம்மடம், பாசுபத மரபின் சிறப்பிடம் பெற்றது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது என்கிறார் தொல்லியல் அறிஞர் கே.வி. மகாலிங்கம் அவர்கள். இம்மடத்தின் தலைவராகப் பதவியேற்ற சதாசிவ தீட்சிதர் என்பார் புகழ் பெற்றவர். கி.பி. 1654 முதல் கி.பி 1714 வரை இவர் ஆட்சி செய்துள்ளார்.

கொங்குப்பகுதியில், காரைத்தொழுவு என்னும் ஊருக்கருகில் ஒரு பள்ளிப்படைக் கோயில் இருந்துள்ளது. அந்தப் பள்ளிப்படை, கொங்குப்பகுதியில் ஆட்சி செய்த வீரகேரள அரசன் ஒருவனுடைய மூத்த அப்பாட்டருடையது. (மூத்தஅப்பாட்டர்=கொள்ளுத்தாத்தா).

இப்பள்ளிப்படைக் கோயில் பாசுபதத் தொடர்புடையது. கோவைப்பகுதியில், பாசுபதத் தொடர்புள்ள கபாலீசுவரர் கோயில் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ளது. பேரூரில் இலகுலீச பாசுபத மடம் இருந்துள்ளது. பேரூரில் கிடைத்துள்ள இலகுலீசருடைய சிற்பம் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளோம். கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் கொங்குப்பகுதி கங்கர் ஆட்சியின் கீழ் வந்தது. இந்தக் காலகட்டத்தில் பாசுபதம் கொங்குப்பகுதிக்கு வந்திருக்கவேண்டும் எனக்கருதப்படுகிறது.

பாசுபதம் - மேலும் சில செய்திகள்:
சீடர்களும், கோத்திரங்களும்:
இலகுலீசர் தம் தத்துவங்களைப் “பாசுபத சூத்திரங்கள்”  என்னும் நூலில் எழுதியுள்ளார். இந்நூலுக்குக் கௌண்டின்யர் என்ற முனிவர் உரை எழுதியுள்ளார். சங்ககாலத்திலிருந்தே தமிழகத்தில் பாசுபத சமயம் பரவியிருந்தது. கௌண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த பூஞ்சாற்றூர் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பவனைப் பற்றிய குறிப்பு உள்ளது. வாயு புராணம், இலிங்க புராணம், கூர்ம புராணம் ஆகியவற்றில் இலகுலீசர், இலகுலீசரின் சீடர்கள்  ஆகியோர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. வாயு புராணம், இலகுலீசர், வியாசரும், கண்ணனும் வாழ்ந்த காலத்தில் இருந்தவர் என்கிறது. இவரது சீடர்களாக, குசிகா(குசிகன், கௌசிகன்), கார்க்3க3(ர்), மித்ரா (மைத்ரேய), கௌருசிய(ன்) என்பவர்கள் குறிக்கப்படுகிறார்கள். இந்நான்கு சீடர்களும் தம் ஆசானிடம் கற்றுப் புரிந்துகொண்டவற்றை அவரவர் பாணியில் தனித்தனிப் பிரிவுகளாகப் பரப்பினர். இவர்களின் பெயரில் தொடர்ந்த மரபுப் பிரிவுகள் கோத்திரங்களாயின. ஐந்தாவதாக ஒரு சீடரும் உண்டு. அனந்தர் என்பது அவரது பெயர். அவரது வழி சித்3த4யோகே3ச்0வரி என்பதாகும். இது தாந்திரீக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது. அவர் வழி நடப்போர் அனந்த கோத்திரத்தார். அவர்கள் சித்தரைப்போலவும் பித்தரைப்போலவும் திரிந்து வாழும் இயல்பினர். மௌனம், மடி (சோம்பர்) உடையவர். மனித உரு, பேயுரு ஆகிய பல்வேறு வடிவங்களில் (வேடங்களில்) அலைபவர். மும்பைக் கருகில் இருக்கும் ஜோகே3ச்0வரி குகைக் கோயில் அனந்த கோத்திரத்தைச் சார்ந்தது. இக்கோயிலில், காலச்சூரி அரசர் ஆட்சியில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலகுலீசர் சிற்பம் உள்ளது. மும்பைக்கருகில் உள்ள எலிஃபெண்டா குகையிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன.

ஆந்திரம்-கருநாடகம் பகுதிகளில் பாசுபதம்:
ஆந்திரத்தில் ரேணாண்டு அரசர்கள் பாசுபதத்தை ஆதரித்தனர். இவர்தம் கல்வெட்டுகளில், தொடக்கப்பகுதியான மங்கலக் கூற்றில் “சிவ-லகுலீச” , “லகுடபாணி”  ஆகிய தொடர்கள் காணப்பெறுகின்றன. கர்நூலில் இருக்கும் பைரவகொண்டா கல்வெட்டு இலகுலீசரைத் “தண்டீசுவரர்”  என்னும் பெயரால் குறிக்கிறது. கருநாடகத்தில், பாதாமிச் சாளுக்கிய விக்கிரமாதித்தன் காலம் வரை வைணவம் முன்னிலை பெற்றிருந்தது. விக்கிரமாதித்தன் காலத்தில் பாசுபத நெறி முன்னிலை பெற்றமை கல்வெட்டுச் சான்றுகளால் அறியப்படுகிறது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில்களில், தேவ கோட்டங்களில் இலகுலீசர் சிற்பங்கள் காணப்படுகின்றன.  அரசு ஆதரவினால் பாசுபத மடங்கள் உருவாகின. ஆலம்பூரில் பாசுபத மடம் இருந்துள்ளது. கல்வெட்டுகளில், பாசுபத மடத்தலைவர்கள், ஈசான ஆச்சார்யா, சைவ மாமுனி ஆகிய பொதுப்பெயரால் அழைக்கப்பெற்ற செய்தி காணப்படுகிறது. அவர்களின் இயற்பெயரோடு பட்டர், பட்டாரகர் என்னும் ஈற்றொட்டுப் பெயர்களும் உள்ளன. ஆலம்பூர், பின்னாளில், 9-ஆம் நூற்றாண்டில், காளாமுகம் செல்வாக்குபெற்ற இடமாக மாற்றம் பெற்றது. பாதாமியில், இலகுலீசர் கோயில் உள்ளது. பட்டதக்கல்லில் இருக்கும் விரூபாட்சர் கோயிலிலும், மல்லிகார்ச்சுனர் கோயிலிலும் இலகுலீசர் சிற்பங்கள் உள்ளன. தென்னிந்தியப் பகுதிகள் முழுவதிலும் ஏராளமான பாசுபதச் சிவன் கோயில்களைக் கண்டதாகச் சீனப்பயணி யுவான் சுவாங் பதிவு செய்கிறார்.

வடநாட்டில் பாசுபதம்:
குஜராத்தில் தொடங்கிய பாசுபதம் வடநாட்டில் பல மாநிலங்களில் பரவிற்று. உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப்,  ஆஃப்கானிஸ்தான், ஒடிசா, மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களில் இலகுலீசர் சிற்பங்களும், கோயில்களும் உள்ளன. ஏறத்தாழ 4-ஆம் நூற்றாண்டு முதல் 14-ஆம் நூற்றாண்டு வரையிலான ஆயிரம் ஆண்டுகள் பாசுபதம் நிலைத்திருந்தது எனலாம். பாசுபதத்தின் மிகுந்த செல்வாக்கான காலம் 7-ஆம் நூற்றாண்டு எனக்கருதப்படுகிறது. பாசுபத நெறிப் பள்ளியில் இடைவிடாது தோன்றிய பல ஆசான்கள் தோன்றியதும் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றதுமே இதற்குக் காரணம். 8-ஆம் நூற்றாண்டு வடமொழிக் கவி பவபூதி, காளிதாசனுக்கு ஒப்பாகக் கருதப்படுகின்றவர். இன்னொருவர் ஹர்ஷரின் அரசவைக் கவிஞர் பாணபட்டர். இருவரின் நூல்களிலுமே, பாசுபதக் குறிப்புகள் உள்ளன.  சீனப்பயணி யுவான் சுவாங் தன் குறிப்புகளில் பாசுபதத்தாரைப்பற்றி எழுதியுள்ளார். காசியில் அவர் பத்தாயிரம் பாசுபதர்களைப் பார்த்ததைப் பதிவு செய்துள்ளார். கடல் கடந்து தென்கிழக்காசிய வரை பாசுபதம் நீண்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.



 துணை நின்ற நூல்கள் மற்றும் இணையப் பகுதிகள்:
1 Indian Temples & Iconography - Indiatemple.blogspot.com
2 Hinduwebsite.com
3 தமிழகத்தில் லகுலீச பாசுபதம் –நூல். ஆசிரியர்கள்: மங்கை ராகவன்,
சி. வீரராகவன், சுகவன முருகன். பதிப்பாளர்: புது எழுத்து, காவேரிப்பட்டிணம்.





___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.







முதலாம் இராசராசனின் புகழ் பெற்ற கல்வெட்டு



——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.


முன்னுரை:
முதலாம் இராசராசன் தான் எடுப்பித்த கோயிலுக்குத் தான் கொடுத்த கொடைகளையும், தன் அக்கன், தன் அரசியர் ஆகியோர் கொடுத்த கொடைகளையும், அவற்றோடு யாரெல்லாம் கொடை கொடுத்தனரோ அவர்களின் கொடைகளையும் பதிவு செய்த ஒரு புகழ் பெற்ற கல்வெட்டின் ஒளிப்படத்தைக் காண நேர்ந்தது. அக்கல்வெட்டுத் தகவல் இங்கு கொடுக்கப்படுகிறது.

முதலாம் இராசராசன் தஞ்சைக் கோயில் எடுப்பித்தமைக்குச்  சான்று






கல்வெட்டின் பாடம்:
1    ஏதத் விச்0வ நிருப ச்0ரேணி மௌலி மாலோபலாளிதம் சா0ஸநம் ராஜராஜஸ்ய ராஜகேஸரி வர்மண: 
திருமகள் போலப் பெருநிலச்செல்வியுந் தனக்கேயுரிமைபூ
2    ண்டமை மநக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வேங்கைநாடுங் கங்க
பாடியுந் தடிகைபாடியும் நுளம்பபாடியுங் குடமலை நாடுங் கொல்ல
3    முங் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்
கமுந் திண்டிறல் வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூ         
4    ழியுளெல்லா யாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய் செழியரைத்தேசுகொள்
கோராஜகேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜ தே3வர்க்கு யாண்டு இ
5    ருபத்தாறாவது நாள் இருபதினால் உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர்க்
கோயிலிநுள்ளால் இருமடிசோழநின் கீழைத்திரும
6    ஞ்சநசாலை தா3நஞ்செய்தருளாவிருந்து பாண்ட்யகுலாச0நி வளநாட்டுத் தஞ்சா
வூர்க்கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி
7    ஸ்ரீ ராஜராஜீச்0வரமுடையார்க்கு நாங்குடுத்தநவும் அக்கன் குடுத்தநவும் நம்
பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத்தார் குடுத்தநவும்
8    ஸ்ரீவிமாநத்தில்க் கல்லிலே வெட்டுக என்று திருவாய் மொழிஞ்சருள ...............

விளக்கம்:
வடமொழிச் சுலோகம்
தொடக்கத்தில் வரும் ”ஏதத் விச்0வ நிருபச்0ரேணி மௌலி மாலோபலாளிதம் சா0ஸநம் ராஜராஜஸ்ய ராஜகேஸரி வர்மண:”  என்பது வடமொழிச் சுலோகம் ஆகும். இச் சுலோகம் இராசராசனுடைய தஞ்சைக் கல்வெட்டுகளில் நான்கில் மட்டுமே காணப்படும் அரியதொரு சுலோகமாகும். இதன் பொருள்,  “(தன்னை வணங்கும்) முடிமன்னர் கூட்டத்தினரின் கிரீடங்களில் உள்ள வைரங்களினால் ஒளிவிளக்கம் பெற்ற (பாதங்களுடைய) ஸ்ரீ ராஜராஜன் எனப்படும் ராஜகேஸரிவர்மனுடைய சாசனம் இது”  என்பதாகும். தொடர்ந்து வருகின்ற தமிழ்ப்பகுதி – நான்கு வரிகள் - இராசராசனின் மெய்க்கீர்த்திப் பகுதியாகும். மெய்க்கீர்த்தி எழுதும் முறையை இராசராசனே முதலில் உருவாக்கினான் எனலாம். இம்மெய்க்கீர்த்தி முறையைப் பின் வந்த சோழரும், பாண்டியரும் பின்பற்றினர். இராசராசனின் ஆட்சிக் காலம் கி.பி. 985-1014. மெய்க்கீர்த்தி எழுதும் முறை அவனது எட்டாம் ஆட்சியாண்டு முதல் சாசனங்களில் இடம் பெறுகிறது.

 காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளி:
மெய்க்கீர்த்தியில், அவனது முதல் வெற்றியாகிய காந்தளூர்ச்சாலை கலமறுத்தமை சுட்டப்பெறுகிறது. சேரவரசனாகிய பாஸ்கரரவி வர்மனின் மரக்கலங்களைக் (கப்பற்படையை) காந்தளூர்ச்சாலையில் போர் நிகழ்த்தி அழித்தான் என்பது ஒரு கருத்து. சாலை என்பது உணவுச்சாலையைக் குறிக்கும் என்பதாகவும், கலமறுத்தல் என்பது இத்தனை மாணவர்க்கு உணவு அளிக்கலாம் என்று வரையறை செய்தல் என்பதாகவும் இன்னொரு கருத்து. சாலை என்பது உணவு அளிக்கும் அறச் சாலை எனவும், காந்தளூர் அறச்சாலையில் சோறு அட்டுவதை அரசன் நிறுத்திய செய்தியைக் குறிப்பதாகவே தொல்லியல் அறிஞர் து.அ. கோபிநாதராவ் கொண்டார். கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களும் இதனை ஆய்ந்து, “அரசன் காந்தளூர் சோற்றுச்சாலையில் உணவு அளிக்கவேண்டிய முறையை நிர்ணயித்துத் திட்டம் செய்தான்”  என்று கூறியுள்ளார். உணவுச் சாலை என்னும் கருதுகோளைப் பெரும்பாலான ஆய்வறிஞர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. ஆனால், தொல்லியல் ஆய்வறிஞர் தி.நா. சுப்பிரமணியன் இதை வேறொரு கோணத்தில் அணுகுகிறார். ”கி.பி. 868-ஆம் ஆண்டில் வேணாட்டு ஆய்குல வேந்தனான கருநந்தடக்கன் என்பான் காந்தளூரில் உள்ள சாலையை மாதிரியாகக் கொண்டு அதைப் பின்பற்றிப் பார்த்திவசேகரபுரம் என்னுமிடத்தில் ஒரு சாலை நிறுவியதைத் தெரிவிக்கும் செப்பேட்டுச் சாசனத்தில்” விளக்கமாக உள்ள செய்திகளின் அடிப்படையில், ”காந்தளூர்ச்சாலையும், அதைப்பின்பற்றி நிறுவப்பட்ட பார்திவசேகரபுரத்துச் சாலையும் ஒருவகைப் பாடசாலைதான்; மாணவர்கள் அவ்விடத்திலேயே தங்கி உணவு கொண்டு படித்துவந்திருக்கிறார்கள்; அந்தச் சாலைக்கெனத் தனியாக வேண்டிய சொத்து இருந்துள்ளது; அதன் தலையீடற்ற நிர்வாகம் ஆசிரியர்களுக்கு நிகரான சட்டர்கள் என்பாரிடம் இருந்தது. தன்னாட்சி பெற்ற தற்காலத்துப் பல்கலைக் கழகங்களுக்கு ஒப்பாக அச்சாலை விளங்கியது.” (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: தற்காலம் இயங்கிவரும் IAS/ARMY ACADEMY என்னும் அமைப்புகளோடு ஒப்பிடலாம்?). அங்கு பயின்ற மாணவர்கள், வேதப்புரோகிதக் கல்வியுடன், நாட்டு நிர்வாகம், போர்முறை ஆகியனவற்றையும் – அதாவது CIVIL, MILITARY  ஆகிய இருதிறத்த நிர்வாக அறிவினைக் – கற்றுத்தேர்ந்து, தமிழகத்தின் மூவேந்தரிடத்தும் பிரமமாராயர் போன்ற பெரும் பதவியில் பணியாற்றும் தகுதியினைப் பெற்றார்கள்.

இவர்கள் பிராமணராய் இருந்தனர். எந்த ஓர் அரசுக்கும் கட்டுப்படாத ஒரு நிறுவனமாக இயங்கிவந்த அச்சாலையில் ஏற்பட்ட சிக்கலை (அல்லது முறைகேடு?) நெறிப்படுத்தவேண்டிவந்தபோது  படைவலி கொண்டே அதைச் செய்து முடிக்க வேண்டியிருந்தது. முதலாம் இராசராசன் மட்டுமல்ல, அவனை அடுத்து ஆட்சி செய்த முதலாம் இராசேந்திரன், பெயரன் முதலாம் இராசாதிராசன், முதலாம் குலோத்துங்கன் ஆகியவர்களும் காந்தளூர்ச் சாலை மேல் படை நடத்திக் கலமறுத்தார்கள் என்பதை இவ்வரசர்களின் மெய்க்கீர்த்திகளிலும் காணலாம். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: காந்தளூர்ச் சாலையில் நிகழ்ந்த நிர்வாகச் சிக்கல்கள் அல்லது நிர்வாக இடர்ப்பாடுகள் அல்லது நிர்வாக முறைகேடுகள் ”கலம்”  என்னும் தொடராலோ அல்லது  ”கலன்”  என்னும் தொடராலோ குறிப்பிடப்பட்டன என்றும், இவ்வகைக் கேடுகளைக் களைதல் “கலமறுத்தல்” அல்லது “கலனறுத்தல்”  என்று கூறப்பட்டது எனவும் கொள்ளலாம். ஏனெனில், “கலன்”  என்று ஒரு சொல்லைக் கல்வெட்டுகளில் காண்கிறோம்.  கல்வெட்டுச் சொல்லகராதியில் அதற்கு ”வில்லங்கம்”  எனப் பொருள் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகச் சுட்டப்பட்ட கல்வெட்டு, தென்னிந்தியக்கல்வெட்டுகள் தொகுதி-7 – க.வெ.எண்: 430 – ஆண்டறிக்கை எண்: 217/1901. அக்கல்வெட்டு, மாகறல்  திருமலீசுவரர் கோயிலில் உள்ள கல்வெட்டு. ஜயங்கொண்டசோழ மண்டலத்து, காலியூர்க் கோட்டத்து பாகூர் நாட்டு உக்கலான விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையினர், இதே மண்டலத்தைச் சேர்ந்த ஈக்காட்டுக் கோட்டத்துக் காக்கலூர் நாட்டுச் சேலையில் என்னும் ஊரைச் சேர்ந்த வாணிகன் படம்பக்க நாயகன் அழகிய பெருமாளுக்குப் பிடாகையூர் ஒன்றை விற்றுக்கொடுக்கின்றனர். இவ்வூர்க்கு வில்லங்கம் ஏதுமில்லை என்றும், அவ்வாறு வில்லங்கம் காணவரின், மேற்படி மகாசபையாரே அவ்வில்லங்கத்தைத் தீர்த்துவைக்கக்   கடமைப்பட்டவர் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது.

கல்வெட்டின் வரிகள்:
”சேலையில் வாணிகன் படம்பக்க நாயகன் அழகியபெருமாளுக்கு உக்கலான விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலத்து மகாசபையோம் இப்படியிவனுக்கு விற்றுக்குடுத்த இவ்வூர்க்கு எப்பேர்ப்பட்ட கலனுமில்லை கலனுலவாய்த் தோற்றில்
நாங்களே தீர்த்துக்குடுக்கக் கடவோமாகவும்..............”

  கலமறுத்தல் என்னும் தொடருக்குக் கல்வெட்டு அகராதி, “போட்டியில் வென்று”  என்றும் “தடை நீக்கி(?)”   என்றும் பொருள் தந்துள்ளது. இத்தரவுகள், தி.நா. சுப்பிரமணியன் அவர்களின் கருதுகோளுக்கு வலு சேர்ப்பதாகவே அமைந்துள்ளன எனலாம்.

இராசராசன் வென்ற நாடுகள்:
கல்வெட்டின் மெய்க்கீர்த்தியில் இராசராசன் வென்ற நாட்டுப்பகுதிகள் கூறப்படுகின்றன. வேங்கை நாடு, கீழைச் சாளுக்கியர் ஆண்ட நாடு. வேங்கி நாடு எனவும் பெயர் உண்டு. கிருஷ்ணை, கோதாவரி ஆகிய ஆறுகளுக்கு இடையில், கீழைக்கடலைச் சார்ந்து அமைந்த நாடு. கங்கபாடி, மைசூர்ப்பகுதிக்குத் தெற்கு, சேலம் மாவட்டத்தின் வடக்கு ஆகிய நிலப்பகுதி கொண்டது. இதன் தலைநகர் தழைக்காடு. கல்வெட்டுகளில், தழைக்காடான இராசராசபுரம் என்று இராசராசனின் பெயரால் வழங்கப்பட்டது. நுளம்பபாடி, மைசூர்ப்பகுதியின் கிழக்கும், பெல்லாரி மாவட்டமும் கொண்டது. தடிகைபாடி, மைசூர்ப்பகுதி. குடமலை நாடு, கருநாடகத்தின் குடகு. கொல்லம், சேர நாட்டுப்பகுதி. கலிங்கம், கோதாவரிக்கும் மகாநதிக்கும் இடையில் வங்கக் கடலைச் சார்ந்துள்ள பகுதி. கலிங்கத்தை, இராசராசனுக்காக இராசேந்திரன் வென்றான். ஈழம், கி.பி. 991-ஆம் ஆண்டுப்போரில் வெல்லப்பட்டது. அப்போதைய ஈழ அரசன் ஐந்தாம் மகிந்தன். இரட்டபாடி என்பது துங்கபத்திரை ஆற்றுக்கு வடகரையில் இருந்த பகுதி. மேலைச் சாளுக்கியரோடு இராசேந்திரன் போர் நடத்தி வென்ற பகுதி. இறுதியாக, ”செழியரைத் தேசுகொள்”   என்னும் தொடர், ஒருவர்க்கு மேற்பட்ட பாண்டியரை வென்றமையைக் குறிக்கும்.

தஞ்சைப்பெருங்கோயிலைக் கட்டுவித்தவர் யார்?
தஞ்சைப் பெருங்கோயிலைக் கட்டுவித்தவர் யார் என்பதை இராசராசனின் கூற்றாகவே காணும் வண்ணம் அமைந்த அவனுடைய கல்வெட்டு இது. “தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச கற்றளி” என்னும் இக்கல்வெட்டுத்தொடர் இதைத்தெரிவிக்கிறது.. இக்கல்வெட்டு, இக்கோயிலுக்கு இராசராசனும், அவனது தமக்கையாரான குந்தவைப் பிராட்டியும், அவனது அரசியரும் கொடுத்த கொடைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கிறது. “தஞ்சாவூர்க் கோயிலிநுள்ளால்”  என்னும் தொடர் தஞ்சை அரண்மனையைக் குறிக்கும். கோயில் என்பது அரசன் அரண்மனையையும், தளி என்பது கோயிலையும் குறித்தன என்பது நோக்கத்தக்கது. திருமஞ்சநசாலை என்பது அரண்மனை நீராடு மண்டபம் எனலாம். அந்த மண்டபத்திலிருந்து இராசராசன் தானம் பற்றிய செய்திகளைக் கோயிலின் கருவறை விமானத்துக் கல்லிலே வெட்டுக என்று ஆணையிடுகின்றான். கோயிலுக்கு இராசராசன் தான் கொடுத்த கொடைகளையும், தன் அக்கன் (தமக்கை குந்தவை) கொடுத்த கொடைகளையும், தன் பெண்டுகள் (அரசியர்) கொடுத்த கொடைகளையும் மற்றும் யாரெல்லாம் கொடுத்தனரோ அவர்களது கொடைகளையும் எழுதுக என்று ஆணையிடுதல் குறிப்பிடத்தக்கது. தமக்கையின்பால் அவனுக்கிருந்த பற்றுதலை முதலில் அக்கன், பின்னர் அரசியர் என்னும் வரிசை குறிக்கிறது எனலாம்.

துணை நின்ற நூல்கள் :
1 சிவபாதசேகரனின் தஞ்சைக் கல்வெட்டுகள்-வித்துவான் வே.மகாதேவன்.   சேகர் பதிப்பகம், சென்னை.
2 தென்னிந்தியக் கோயிற்சாசனங்கள்-தி.நா.சுப்பிரமணியன்.
3   தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி-சாந்தி சாதனா, சென்னை.

குறிப்பு:  முதலிரண்டு நூல்களில் உள்ள சில வரிகள் அவற்றில் உள்ளவாறே கையாளப்பட்டுள்ளன.




___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.







இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம்


——    வித்யாசாகர்


நூல்:  இஸ்லாத்தின் சமய நல்லிணக்கம்
ஆசிரியர்:  ஏம்பல் தாஜுமுல் முகம்மது
வெளியீடு:  நியூ லைட் புக்சென்ட்டர், மாத்தூர், மணலி, சென்னை - 68
ஆண்டு: 2018

அமுதூறும் சொல்லழகு
அகிலம் போற்றும் மொழியழகு
வான்தோறும் புகழ்மணக்கும்
வள்ளுவம் பாடிய தமிழழகு..

அத்தகு தேனூறும் தமிழுக்கு வணக்கம்!!

வயிற்றுவலி வந்தவருக்குத்தான் பிறருடைய வலி தெரியும் என்பார்கள், அது புத்தகம் எழுதி வெளியிடுவோருக்கும் பொருந்தும் என்பதில் ஐயமில்லை. புத்தகம் வெளியிடுவது என்பது ஒரு மனக்குழந்தையை சிந்தனையின் அழகோடு பிரசவிப்பதற்கு சமம். அதிலும் இது மதம் பற்றிய புத்தகம். தொட்டால் அல்ல, வாயால் சொன்னாலே உயிர்சுடும் மதங்களின் தன்மையினை, அதன் கூறுகளை, சாராம்சத்தைச் சொல்லி நாமெல்லோரும் ஒன்றெனக் கைகூப்பும், மனதை மனதால் நெய்யும் படைப்பிது.

இந்த “சமய நல்லிணக்கம்” எனும் நூல் இஸ்லாத்தை நன்றாக பிறமதத்தினரும் அறிவதற்கேற்ற ஒரு பொக்கிஷமாகும். இது வெறும் தனித்த ஒருவரின் சிந்தனையோ வெறும் கருத்தோ அல்ல இப்படைப்பு, இது ஒரு அகம் பண்பட்டதன் வெளிப்பாடு. ஒரு காய் கனிந்து ஞானம் வெளிப்பட்டதன் கூப்பாடு. பலாப்பழம் பழுத்தால் அதன் வாசனையை யாரால் மறைக்க இயலும் ? முடியாதில்லையா ? அப்படித்தான் இப்புத்தகத்தின் ஆசிரியர் ஐயா தாஜுமுல் முகம்மது அவர்களும் தனது மனதால்’ கண்ணியத்தால்’ கனிந்து போனதன் பலனை இப்படைப்பின் வாயிலாகப் பொதுவெளிக்கு எடுத்துவைத்திருக்கிறாரென்பது மதிக்கத்தக்கச் செயல்.

எனக்கொரு ஆசையுண்டு, இஸ்லாத்தை முழுதாக படித்துவிட வேண்டுமென்று, காரணம் நமக்குள்ளிருந்து முரண்கள் அகற்றப்படவேண்டும். இஸ்லாத்தின் முழுமையான சகோதரத்துவமும், கண்ணியமும், உயிர்நேயமும் காக்கப்படவேண்டும். எங்கள் தெரு மத்தியில் இருக்கும் ஒரு இஸ்லாமிய பாயினுடைய வெள்ளைத்தாடியும் அவருடைய வெள்ளை மனசும் போல எனக்கு எல்லோரையும் காண ஆசை.

நிறைய முரண்கள் குரான் கடந்து நம்மிடையே உண்டு. குரான் என்றில்லை; மதம் ஒரு பாடம் தானே? ஆன்மிகம் ஒரு பயிற்சி தானே? அது ஒரு தவிர்க்க வேண்டாத இயல் இல்லையா? அப்படி நோக்கினால் அனைத்து மதத்தினுடைய நோக்கமும் குற்றம் உடையது அல்ல, ஆனால் அவற்றை நாம் முழுதாக எல்லோரும் அறிவதில்லை அல்லது எல்லோரும் பொதுப்படையாக உணர்வதுமில்லை. வெறும் முரண்களை மட்டும் சுமந்துகொண்டு கடவுள் என்கிறோம், எதிரெதிரே நின்று ஒருவர் ஒருவரைக் கொல்லவும் துணிகிறோம். பிறகு மதம் போதித்ததன் பயன்தான் என்ன? நமக்குத்தான் “எனது-உனது” என்று சண்டையிட்டு சுயநலத்தை வென்றெடுக்கவே வாழ்க்கை முடிந்துவிடுகிறதே.

என்றாலும் அப்படிப்பட்ட ஒரு சுயநலக் கூட்டிலிருந்து ஒதுங்கி, தன்னைக் கம்பீரமாக நீக்கிக்கொண்டு, தானும் தனித்துவிடாமல், இத்தகைய ஒரு அன்பின் பெருந்திரள் ஒன்றைத் திரட்டும் விதமாக, உலக அமைதி வேண்டி ஒரு நல்ல படைப்பினை தந்த ஆசிரியர் ஏம்பல் தாஜுமுல் முகம்மது அவர்களுக்கு எனது சிரந்தாழ்ந்த நன்றியும் வணக்கமும்.

இந்தப் புத்தகம் பேசும் இஸ்லாம் பற்றிய தகவல்கள் ஏராளம், சமய நேர்த்தி குறித்தும், மத நல்லிணக்கம் வேண்டிடுமென்று அறிந்தாலும் பொதுவாக அனைத்துக் கருத்துக்களும் இஸ்லாம் சார்ந்தவை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் கண்ணியத்தையும் நேர்மையையும் அன்பையும் பேசி, பெருங்கருணையை விழியிலேற்றி, வாழ்வோர் அதன்படி நடக்க நல்ல பல போதனைகளையும் சொல்லி, சமத்துவத்தைத் தனது முகமாக்கிக்கொண்டு நல்லவொரு சகோதரத்துவத்தை முன்வைக்கும் மதமாகவும் இஸ்லாத் இருப்பது உண்மை.

அத்தகு இஸ்லாத்தின் அறிவுரைகளை இறையுணர்வு மிக்கோர் தெளிவாக படித்தறிந்து அறியப்படவேண்டிய ஒன்றென்பதில் மாற்றுக்கருத்தில்லை. இஸ்லாத்தின் வழியே நின்று மானுட அன்பையும், மனிதருக்கான நீதியையும் போதிக்கத் துணிபவையாகவே இப்படைப்பினை படைக்க விரும்பியிருக்கிறார் ஆசிரியர்.

இப்படைப்பு சமய நல்லிணக்கத்தைப் பற்றியது என்பதாலும், இறைவணக்கம் செய்வோருக்கு அல்லது இறையுணர்வு கொண்டவர்களுக்கு பொதுவாக படித்தறியத் தக்க நூல் என்பதாலும் இதை முழுதாக வாசிக்கும் கடமையினை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு, இதன் தலைப்பினால் என்னுள் ஏற்பட்ட ஒரு நல்லுணர்வை இங்கே பதிவுசெய்ய விரும்புகிறேன்.

முதலில் கடவுள் என்பது யாதுமிலாதது. எங்கும் நிறைந்தது. எல்லாம் அதுவானது, பெரிய சூச்சுமமெல்லாம் இல்லை, எனக்கு உயிர் போகையில் உனக்கு ரத்தம் தந்து காப்பாற்ற மதமோ சாதியோ அல்லது வேறெந்த பெரிதோ சின்னதோ தேவைப்படவில்லை யெனில்; மேல்கீழ் அடையாளம் நமக்குள் இல்லாது மனிதத்தோடு நம்மால் பிறருக்கு உதவ இயலுமெனில் நாமெல்லோரும் தெய்வீகம் உள்ளவர்களே.

பொதுவாக வணங்குவது என்பது நன்றி கூறுவது தான் இல்லையா? எனக்குச் சோறு போட்டா உனக்கு நன்றி. என்னைக் கொஞ்சம் சுமந்துவந்து உனது வண்டியில் இங்கே இறக்கினால் உனக்கு நன்றி, எனக்குப் பேச பத்து நிமிடம் இங்கே அவகாசம் கொடுத்தால் அதற்கு நன்றி. பிறகென்ன ஒரு உதவிக்கு நாம் மனிதத்தோடு காட்டும் நன்றி வணங்குவது தான் என்றால்; யோசித்துப் பாருங்கள், இந்தக் காற்றும்’ இந்த நீரும்’ இந்த வானும்’ இந்த மண்ணும்’ எனக்கு உயிர் தந்து’ உடல் தந்து’ இந்தப் பிரபஞ்சம் எனக்காய் எனக்காய் அனுதினமும் காத்துக் கிடக்கிறதே, அதற்கு நன்றி கூற வேண்டாமா? அதை வணங்க வேண்டாமா ? அந்த வணங்கும் பண்பு.. ஒரு நன்றியுணர்வு.. உள்ளே கனத்து குவியவேண்டாமா? அதற்குத்தான் ஆன்மிகம் என்ற ஒரு பயிற்சி தேவைப்படுகிறது.

ஆன்மீகமெனும் “நம் வாழ்ந்துதீர்ந்த பல பெரியோர்களின் வாழ்வனுபவத்தினால்” சீர்ப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கம், ஒருசேர்ந்த நற்கருத்துக்களின் கோர்வை, அவ்வப்பொழுதில் காலமாற்றம் சார்ந்து வழிநடத்தத் தக்க அறிவுரைகளின் திரள் என ஒன்று தேவைப்படுகிறது. ஆன்மீகம் எனில் மாயையோ மந்திரமோ கண்டதெல்லாம் இல்லை, அதெல்லாம் சொல்லப்பட்டிருக்கலாம் என்றாலும் அது ஒரு ஒருவழி புரிதல், யாரோ சுமந்துவந்தது, நமது கூட்டுவாழ்வில் கலந்துபோயிற்று, அவற்றை அங்கேயே விடுவோம்.

அதேநேரம், ஒரு முழுநம்பிக்கையை நமக்குள் ஏற்படுத்த சில காட்சிகளை’ தோற்றத்தை’ சாட்சியைப்போன்ற பல ஏற்பாடுகளை கண்முன் வைக்க முற்படுவதே ஆன்மீகத்தின் பல கோட்பாடுகளுக்கும் நீதிநெறிகளுக்கும் கொண்டாட்டங்களுக்குமான காரணம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

பொதுவில் ஆன்மிகமென்பது ஒரு வேருக்கு ஈரமென்ற நீர் பாய்ச்சுவதுபோல, முழுக்க முழுக்க அறிவு சார்ந்தது ஆன்மிகம். அது ஒரு இயல். அந்த இயலுக்கு நாம் வைத்திருக்கும் புத்தகங்கள் எல்லாம் பல விதமானது, பல வழியானது, ஆனால் அனைத்துப் பாடத்தின் நோக்கமுமே இந்த இயற்கையெனும் பெருங்கருணையை அடைவதன்றி வேறில்லை.

இந்த உலகம் கோடானுகோடி வருடங்களைத் தாங்கி உருவானது, வெறும் இரண்டாயிரம் ஐந்தாயிரம் பத்தாயிரம் பற்றி மட்டுமே நமது கவலையும் கேள்விகளும் சண்டைகளும் இருக்கிறது. என்னைக்கேட்டால் எல்லாவற்றையும் விட மனிதம் மிக முக்கியமானது. எனது அன்புச் சகோதரர்கள் நீங்கள் முக்கியமானவர்கள். உங்களின் அன்பு பெரிது. தியாகம் பெரிது. இந்த எல்லோருக்குமான அன்பும், நமது எல்லோரின் மகிழ்ச்சியும், வாழ்வும், நமது மண்ணில் நிலவவேண்டிய அமைதியுமே மிக முக்கியமானது. அதற்குள் எந்தப் போட்டியையும் சண்டையையும் பிரிவையும் யாருமே கொண்டுவந்துவிடாதீர்கள்.

பல முரணான கதைகள் சமயங்களில் உண்டு. குறிப்பாக இந்துமதத்தில் பல உதாரான புருசர்கள் பற்றியும் தத்துவார்த்த நெறிகளும் கதைகளின் வழியே மதங்களின் வழியே சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவை மட்டுமே இத்தனைக் கோடானுகோடி ஆண்டுகளின் இறுதி முடிவுல்ல இல்லையா? அது ஒரு பாடம், ஒரு பாதை, ஒரு மண்ணின் தோன்றல்களால் போதிக்கப்பட்ட நெறியது. கற்பனையினூடே கடவுளை போதித்ததால் கல்லென்று ஒதுக்கிய' கடவுளென்று நம்பிய' இருபாலரைக் கொண்ட மதமது. அதையும் நாம் அறிவைக் கொண்டே பார்க்கவேண்டும். தெளிவின்வழி மட்டுமே உணரவேண்டும். கண்ணுக்குப் புலப்படாத அல்லது அறிவுக்கு எட்டாத எதையுமே அத்தனைச் சட்டென ஏற்றுக் கொள்வதற்கில்லை.

எனினும், ஒரு முட்டாளிடம் சென்று நீ முட்டாளென்றால் அவனுக்கும் கோபம் வரும். ஒன்றைச் சொல்லித்தர வேண்டுமெனில் ஒரு நண்பனாக அவரவருகில் சென்றமர்ந்து கற்றுத்தர வேண்டியுள்ளது. ஆனால் நாமெல்லோரும் எப்போதுமே எதிரெதிரே அமர்ந்துகொள்கிறோம், அதனால் தான் நீதியும் தர்மமும் எவர்பக்கமிருந்தும் எவருக்குமே புரிவதில்லை. எல்லோருக்கும் பொதுவாய் கிடைப்பதுமில்லை. முதலில் இஸ்லாத்தும் இதர மதங்களும் சொல்லித்தரும் கருணையைப் பெரிதாய் உணருங்கள். சகோதரத்துவத்தைக் கையில் எடுங்கள். அருகருகே அமருங்கள். எல்லோரும் ஒரு குடும்பமாய் அன்புசெய்யுங்கள். பிறகு அவரவர் மண்ணின் வாழ்வுமுறைக்கு ஏற்ப வழிபாடுகளும் அவரவருக்கு அவரவருடையது என்பதும் தானே எல்லோருக்கும் புரிந்துபோகும்.

எந்த மதமாயினும் சரி அறிவைக் கொண்டு பார்க்கமுடிந்தால், மனதைக் கொண்டு பார்க்கமுடிந்தால் இரண்டே இரண்டு தெரியவரும்; ஒன்று நானும் நீயும் வேறல்ல என்பதும், மற்றொன்று பிற உயிர்கள் நோகக் கூடாது என்பதும். ஆக நாம் நினைப்பதெல்லாம் ஒன்றே. எதிர்பார்ப்பதும் அறிவதும் எல்லாம் ஒன்றே. எனது எண்ணம் வேறில்லை உனது வேறில்லை. எனது தேவை வேறில்லை உனது வேறில்லை. நம் எல்லோருமே நிம்மதி.. நன்னடத்தை.. நேர்மை.. அறம்.. எனச் சுழன்று சுழன்று ஒரேபோலான பல வட்டங்களுள் சுழலும் அறிவு மனிதர்கள் அவ்வளவே.

நமக்கு நம் மண்ணுள் தோன்றிய இயற்கையை வணங்குபவர்களாக இருந்தாலும் சரி, கருணையைப் போதிப்பவர்களாக இருந்தாலும் சரி, கண்ணியத்தைக் காப்பவர்களாக இருந்தாலும் சரி, மன்னித்து மாண்பு வலுத்த எவராயினும் சரி எல்லோரும் ஒரு குடிலின் பல பிள்ளைகள் அவ்வளவே. நமக்குள் பேதமில்லை, மேல்கீழ் இல்லை. வழிமுறைகள் பல, மதங்கள் பல., வழிபாடு.. பல..பல; இருந்துபோகட்டுமே, எனினும் நமக்கு உயிர் ஒன்றே. எல்லோரும் தேடும் இறை ஒன்றே. அதை அவரவர் வழியில் பொதுவாய் வணங்கி நன்னயம் போற்றி நமது மானுடப் பண்பினை வளர்க்கச் செய்வோம்.





________________________________________________________________________
தொடர்பு: வித்யாசாகர் (vidhyasagar1976@gmail.com)








லஸ்கர் சுமதீ!



——    பழமைபேசி

எப்பயும் போலத்தான், நான் எட்டு ஐம்பதுக்கே வகுப்புக்கு போய்ட்டன். வாரப்பட்டி வேலுசாமி டர்புர்ன்ண்ட்டு வந்தான். என்னடா விசியம்ன்னேன். ”நேத்து லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்தன். இன்னிக்கு அவ அப்பனைக் கூட்டிட்டு வந்துட்டாடா” அப்படின்னான். ‘செரி விட்றா” அப்படின்னு சொல்லவும், வகுப்பாசிரியரும் தமிழாசிரியருமான சுல்தான் பேட்டை கோவிந்தராஜ் வாத்தியார் வந்துட்டாரு. பாடம் நடத்தத் துவங்கி, அரை மணி நேரம் இருக்கும். பக்கத்துல இவன் பரபரன்னுகிட்டு இருந்தான். ‘போடா, ரீசசு வருதுன்னு சொல்லிட்டுப் போயி பார்த்திட்டு வாடா”ன்னு சொல்லி நொச்சு நொச்சுன்னுகிட்டே இருந்தான். தாங்க முடீல.

இடைவேளை பத்து மணிக்குத்தான். அப்பதான் வழிபாட்டு அணிவகுப்பும் நடக்கும். ஆனா இன்னும் அதுக்கு இருபது மணித்துளிகள் இருந்தது. எழுந்து நின்னு, “சார், ரீசசு”.

“வகுப்பு ஆரம்பிச்சி அரை மணி கூட ஆவலை. சரி, ஓடு, ஓடு”, அப்படின்னு எள்ளலா சொன்னாரு கோய்ந்தராஜ் வாத்தி. இயல்பாவே அவரு சரியான நக்கலும் கிண்டலுமான ஆள்.

வெலவெலத்துதல, “இல்ல சார், போய்ட்டன். வேலுச்சாமிதாம் கேட்டுப் போகச் சொன்னான்”, அப்படின்னேன்.

“அடச் சீ... நாலு கழுத வயசாச்சி... போ, சுத்தம் செய்றதுக்கு வாட்ச்மேன் தங்கமணியக் கூட்டீட்டு வா போ”, அப்படின்னு சொன்னாரு. எனக்கு மகா கேவலமா இருந்திச்சி. வெளியில வந்தன். தலைமை ஆசிரியர் அலுவலகத்துக்கு முன்னாடி மரங்கள் நிறைய இருக்கும். அதில ஒரு மரத்துக்குக் கீழ, வாட்ச்மேன் அண்ணனும், லஸ்கர் சுமதியோட அப்பனும் நின்னு பேசிட்டு இருந்தாங்க.

“அண்ணா, தமிழ்ப்பண்டிதர் உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னாரு”

“ஏன்டா தம்பி, என்ன விசியம்?”ன்னு தங்கமணியண்ணன் சாதுவாத்தான் கேட்டாரு.

“அதுங்ளா. வாரப்பட்டி வேலுச்சாமி லஸ்கர் சுமதிகிட்ட லெட்டர் குடுத்ததினாலத்தான் அவங்க அப்பா வந்திருக்காருன்னு நினைச்சி”ன்னு சொல்லிக் கூட முடிக்கலை. “வா போலாம்”னு சொல்லி நடக்க ஆரமிச்சிருந்தாரு தங்கமணியண்ணன்.

எங்க ஊர்ப்பக்கம் லஷ்கர்னு ஒரு கதாபாத்திரம் உண்டு. திருமூர்த்தி மலையிலிருந்து, விளாமரத்துப்பட்டி, குண்டலப்பட்டி, நெகமம், சுல்தான்பேட்டை, பல்லடம், காங்கயம், வெள்ளகோயில் வரைக்கும் ஒவ்வொரு ஊர்லயும் லஸ்கர் இருப்பாங்க. அவங்களுக்கு, கால்வாய் பராமரிப்பு, மதகு பராமரிப்பு வேலை. ஆங்கிலேயர்கள் கப்பல்கள்ல போகும் போது உதவியாள் வெச்சுகுவாங்க. அதனோட பேரான “லஸ்கர்” என்பதே இதுக்கும் நிலைச்சுப் போச்சி. அதனால், ஊர் ஊருக்கும் லஷ்கர் கிருஷ்ணன், லஷ்கர் மணியன்னு இருப்பாங்க. சுல்தான் பேட்டையில இவர் பெயர் என்னன்னு யாருக்கும் தெரியாது. ‘லஸ்கர் ” அவ்வளவுதான். அவ்ரோட மகள் பெயர், “லஸ்கர் சுமதி”. மகளுக்கு எவனோ லெட்டர் குடுத்துட்டான்ங்கிற பதற்றத்துல அவரும் எங்ககோட வர ஆரமிச்சிட்டாரு. வகுப்பறைக்குப் போனம்.

“கோய்ந்த்ராஜ் சார், உங்களையெல்லாம் நம்பித்தான புள்ளைகளை பள்ளிக்கோடம் அனுப்பி வெக்கிறம். அது எவன் எம்புள்ளகிட்ட லெட்டர் குடுத்தவன்?”ன்னு எகிற ஆரமிச்சாரு. வாரப்பட்டி வேலுச்சாமி துடுக்கானவன். வாயி, வாயி, அப்படியொரு வாயி. எந்திரிச்சு தகிரியமா முன்னாடி எங்ககிட்டயே வந்துட்டான்.

“ஆமா, நீங்கதான் எங்கம்மாகிட்ட லெட்டர் குடுக்கச் சொன்னீங்ளாமே? அதான் நான் உங்க புள்ளகிட்ட குடுத்தன்”, அப்படின்னான். இதென்னடா நாறப்பொழப்பா இருக்கேன்னு எல்லாரும் திகைப்பாப் பார்க்க, எனக்கோ படபடன்னு இருந்திச்சி.

ஆமா. கட்டுத்தறியில கொட்டுறதுக்கு வாய்க்காமேட்டு ஜல்லி வேணும்னு உங்கப்பந்தான் சொன்னாரு. அதான் எஞ்ஜீனியருக்கு ஒரு லெட்டர் எழுதிக் குடுத்து சேங்சன் பண்ணி வாங்கிக்கலாமுன்னு சொன்னன் அதுக்கு இப்பென்ன? அப்படின்னாரு.

அதான், எங்கப்பன் குடுத்த லெட்டரை நானும் சுமதிகிட்டக் குடுத்தன். அதுக்கு இப்பென்ன அப்படின்னான் வேலான்.

இதானா விசியம்? வகுப்பு அமைதியாச்சுது. இதான் வாய்ப்புன்னு கோயிந்தராஜ் வாத்தியாரும், அவரு தோட்டத்து கட்டுத்தாரைக்கு ஜல்லி கேட்டு பேச்சை ஆரமிச்சாரு. நான் போயி என்ற எடத்துல உட்கார்ந்தேன். பின்னாடி பெஞ்ச்சில இருந்த சுல்தான் பேட்டை மேட்டுக்கடைப் பழநிச்சாமி சும்மா இருக்க வேண்டியதுதான? ”செரியான ஜல்லிடா காலீல”ன்னான். வாத்தியார் திரும்பி முறைச்சாரு. முகமெல்லாம் ’நறநற’.

அதுக்கப்புறமும் அவன் சும்மா இருந்தானா? “ஏன்டா, இருந்து இருந்தும் ஜல்லிப்பய மவதான் உங்களுக்குக் கெடைச்சாளாடா?”ன்னான். எல்லாப் பயலுவளும் சிரிச்சானுவ. வாரப்பட்டி கதிர்வேலனுக்கும் வாரப்பட்டி வேலனுக்கும் காலங்காலமாவே வாய்க்கா வரப்பு. இஃகிஃக்கீன்னு கதிரானும் கெக்கலிக்கவே வேலனுக்கு கோவம் வந்திட்டுது. என் காலை பச்சக்னு மிதிச்சான். நான் மேட்டுக்கடை பழனியப்பனை ஓங்கி ஒரு உதை விட்டேன். அந்தப்பக்கம் வேலனும் கதிரானும் கட்டுல எறங்கிட்டானுக.  செரியா இண்ட்டர்வெல் பெல் அடிச்சது.

திரும்பிக் கூடப் பார்க்கலை. விறுவிறுன்னு ஹாஸ்டல்ல இருக்குற என்ற ரூம்புக்கு போனன். வார்டர் சந்திர மெளலி, “என்னடா, பிரேயருக்குப் போகல?”. “இல்ல சார், எனக்கு வவுத்து நோவு”. “சரி, கிட்டான்கிட்ட சொல்லி மத்தியானத்துக்கு ரொட்டியும் வறக்காப்பியும் ரூம்புக்கே கொண்டாந்து குடுக்கச் சொல்றன்”ட்டு  போயிட்டாரு.

யார் யாரோ, அவங்கவங்க கட்டுத்தாரைகளுக்கு ஜல்லி கொட்டுறதுக்காக, நான் வறட்டு ரொட்டியத் தின்னுபோட்டு நாள் முச்சூடும் வயித்துப் பசியோட சுருண்டு கெடந்தன். வயிறு எரியுது இப்ப நெனைச்சாலும். அவ அப்பன் இன்னும் இருக்காரா மண்டையப் போட்டுட்டாரா தெரியாது. அடியே லஸ்கர் சுமதீ... எப்படியும் அவ அங்கனைக்குள்ளதான் எங்கனாச்சியும் இருப்பா... அவளெ... மண்டையில நாலு கொட்டு நங்குன்னு எறக்கினாத்தான் மனசு ஆறும். இதா அடுத்த மாசம் வர்றண்டி... கிளம்பிகிட்டே இருக்கன்!!


________________________________________________________________________
தொடர்பு: பழமைபேசி (pazamaipesi@gmail.com)







Tuesday, April 17, 2018

தொடர்ந்திடும் வளர்ந்திடும் தமிழ் மரபு அறக்கட்டளையின் தமிழ்ப்பணிகள்

தலையங்கம்:


வணக்கம். 

சித்திரையை வரவேற்கும் இதழாக இந்தக் காலாண்டிதழ் மலர்கின்றது.

தமிழர்களின் வேர் நிலமான தமிழகத்தில் தொடரும் பல சமூக இன்னல்களை அறிகின்றோம். ஒன்றை அடுத்து மற்றொன்றாகச் சவால்விடும் இப்பிரச்சனைகளை எதிர்த்துப் பொதுமக்களும் அமைப்புக்களும் செய்யும் போராட்டங்களும் அவற்றில் எழும் எதிர் குரல்களும் தொடர்கின்றன.

இந்தியாவின் ஏனைய பிற பகுதிகளில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்படும் கொடூரம் நிகழ்கின்றது. மதம், சாதி, இன வேறுபாட்டின் வக்கிரத் தன்மையின் வெளிப்பாடாக இத்தகைய கொடூரச் செயல்கள் எளிய மக்களைத் தாக்கிச் சீரழிக்கின்றன. உலகளாவிய அளவில் வாழும் நம் தமிழ் உறவுகளுக்கு இது ஆழமான மன வலியையே ஏற்படுத்துகின்றது. அன்பு, அறம், நேர்மை, உண்மை, நீதி ... இவை இழந்த சமூகமாக மாறிவிட்டோமா? வேர் அழுகிய மரமாக  மாறிவிட்டதா நம் தாய்நிலம்? இந்தக் கேள்விகளுக்கிடையே தொடர்கின்றது நம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்று மற்றும் தமிழ் மொழி தொடர்பான செயல்பாடுகள்.

2018ம் ஆண்டின் தொடக்கத்தை வரவேற்கும் வகையில் தொடர்ச்சியாக மலேசியாவிலும், தமிழகத்திலும், ஒடிசாவிலும் பல செயல்பாடுகள் நிகழ்ந்தன. அவை குறிப்பாக:
தமிழகக் கல்லூரிகளில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பாதுகாப்பு தொடர்பான சொற்பொழிவு, சந்திப்பு நிகழ்வுகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட களப்பணி ஆய்வுகள், மாநாடுகள் கருத்தரங்கங்கள், குமாரபாளையத்தில் நிகழ்ந்த முதலாம் உலக மரபு மாநாடு;
ஒடிசாவில், கலிங்கம், சமணம், பௌத்தம், சைவம் ஆகிய மதங்கள் பற்றியும், தொல் பழங்குடி இன மக்கள் பற்றியதுமான ஆய்வுகள்; புவனேஷ்வர் தமிழ்ச்சங்கத்தில் ஒன்று கூடும் நிகழ்ச்சி; சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பான தகவல் சேகரிப்புக்கள்;
மலேசியாவின் செர்டாங் வட்ட தமிழ் இலக்கிய நிகழ்வு, கிள்ளான் நகரத் தமிழ் இலக்கிய நிகழ்வு, உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்வு.
குறிப்பிடத்தக்க வகையில் இவ்வாண்டு தொடக்கம் சீரிய முயற்சிகள் சில முன்னெடுக்கப்பட்டன.  திருச்சியில் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளை உருவாக்கப்பட்டது.  தமிழகத்தின் பிஷப் ஹீபர் கல்லூரி (திருச்சி), செந்தமிழ் கல்லூரி (மதுரை), அய்யநாடார் கல்லூரி (சிவகாசி) ஆகிய மூன்று கல்வி-ஆய்வு அமைப்புக்கள் தமிழ் மரபு அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன. தமிழ் வரலாற்று ஆய்வுப் பணிகள் செம்மையாக நடைபெறும் நோக்கத்தை முன் வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


தமிழர், தமிழகம், தமிழ் மொழி, மற்றும் வரலாறு தொடர்பான முயற்சிகள் சீரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சூழல் இருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசிற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை உடனடியாக செய்யப்பட வேண்டியனவாக நாம் கருதும் பரிந்துரைகளை முன்வைத்திருந்தோம். இந்தப் பரிந்துரைகள் அடங்கிய கோப்பினை  தமிழகத்தின் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் அமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி அவற்றை உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தை முன்வைத்து அத்தேவைகளைத் தெளிவுபடுத்தி, கலந்துரையாடி, அவற்றைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டோம்.

இந்த ஆண்டு உலகெலாம் பரந்து வாழும் தமிழ் மகளிருக்கான மேம்பாட்டினை மையமாக வைத்துத் தொடங்கப்பட்ட ஐயை அமைப்பு என்றதொரு அமைப்பின் முதலாம் உலக மகளிர் மாநாடு மலேசியத்தலைநகர் கோலாலம்பூரில் நிகழ்ந்தது. அந்த நிகழ்வின் செயல்பாடுகளை வாழ்த்தியதோடு இம்மாநாட்டின் சில செயல்பாடுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை உடன் இருந்து செயல்படுத்தியது என்பதில் பெருமை கொள்கின்றோம்.

நம் ஆய்வுத் தளம் பெரிது. நம் நடவடிக்கைகள் மிக விரிவாக வளர்ந்து வருகின்றன. உலக நாடுகளில் எங்கெங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் தமிழர் வரலாற்றுத் தடங்கள் உள்ளன. காலப்போக்கில் அவை சுவடுகள் இழந்து மறைந்து விடும் அபாயம் உள்ளதை நாம் பார்க்கத் தவறிவிடக்கூடாது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழர் வாழும் நிலங்களிலெல்லாம் தமிழ் மரபு அறக்கட்டளையின் கிளைகளை அமைக்கும் முயற்சியை நாம் சீரிய வகையில் இவ்வாண்டு தொடக்கம் செயல்படுத்த உள்ளோம்.

தமிழர் வரலாறு குறுகிய நிலப்பரப்பில், குறுகிய ஆய்வுப் புலத்தில் மட்டும் நிகழ்வதால் பயனேதுமில்லை. உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர் தொன்மையை அவற்றின் சுவடுகள் மறையும் முன்னே தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு பதிந்து  பாதுகாப்போம். தமிழர் பண்பாட்டின் பெருமையைத் தரமான, திடமான ஆய்வுகளின் வழி உலகறியச் செய்வோம்.

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி





Tuesday, April 10, 2018

திருவாலங்காடு இரத்தினசபை



——   சேசாத்திரி சிறீதரன்


வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில். 

                                                                            
இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனைக் கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்குக் கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  


கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள்


கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி புடைப்புச்  சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ ,தெய்வவடிவுகள் தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வை குறிக்கிறது.  அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக  ஏங்கித்தவிக்க திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்து போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியம்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினி சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.  





இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரண கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்குச் சென்னையில்  இருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள். ​
https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789


சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும்  கம்பீரமாகவுள்ளன. அதிக கல்வெட்டுகளையும்  பெற்றுள்ளன. பொதுவாக பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில் தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தல் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஒரு ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறு தான்  சில கிலோ  மீட்டர் தள்ளிக்  கிழக்கில் பூண்டி அணை நோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசு புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர் செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்  தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும் , கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம். கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர். இன்று திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்து உள்ளது. இருப்பினும்  இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.   நிலக்கொடைகள் குறித்த கோயில் கல்வெட்டுகளும் இங்குள்ளன.

கல்வெட்டு படம் -1

கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் -1
1  (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
3 ...கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும் 
4 ர  சோழர(ச)...க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

விளக்கம்:  
திருவாலங்காடு, மணவில் கோட்டம், மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின் முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன்  பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். 
அதாவது, இறைவன் நாமம்; காணி=உரிமை.
இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று,ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை  என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஒரு அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப்பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு படம் - 2
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 2
யுடைய (முழான்)....ராயன் 
..........ட்டை (ஸ்ரீ) ..க்கோ ...... காச்யபன்
.....திருவாலங்காடு..........(சாவா) மூவாப்



கல்வெட்டு படம் - 3
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 3
...ராயன்   வடுகநாதன் ....நத
காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ



கல்வெட்டு படம் - 4
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 4
வரங்கில் அண்டமுற் ந...
பட்டனும் ஆத்ரேயன்  ச



கல்வெட்டு படம் - 5
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 5
......கோட்டத்து ...
ண்டமுற்  ந... மாந்த..
ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)



கல்வெட்டு படம் - 6
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 6
...பழையனூர் நாட்டு...
ளிய  நாயநார் திருமு(ன்)
(ப0ட்டனும் காச்யபன் கா..

திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
கா...பட்டனும்

விளக்கம்:   
​திருவாலங்காடு கல்வெட்டுகளைப்  படித்ததில் கிடைத்தவை.
கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை  அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. 
கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கப்பெறும் ஆடு, பசு ஆகியவற்றைச்”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம்.  இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்.... ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.  

கொடைப்பொருட்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன்  முதலியோர் ஆவர்.  இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யபன் கோத்திரத்தான் எனத்தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.   இப்பழையனூர் நாட்டுப்பிரிவு,  மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.





நன்றி: 
திரு. துரை சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப்  பொருள் கூறியவர். 

பின் குறிப்பு: 
மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது [https://en.wikipedia.org/wiki/Manavur]
இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது [https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur]
அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

​ 

________________________________________________________________________
தொடர்பு: சேசாத்திரி சிறீதரன் (sseshadri69@gmail.com)





Friday, April 6, 2018

பழைய பாலாற்றின் கழிமுகம்

 

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்


சென்னையில் பாயும் கூவம் ஆறு, கொசத்தலையாறு (கொற்றலையாறு) ஆகியவை பழைய பாலாற்றின் கிளையாறுகளின் எச்சங்களே என்று ராபர்ட் ப்ருஸ் ஃபுட் (Robert Bruce Foote) கருதுகிறார். இவர் 1860 களில் சென்னையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்டவர், இந்திய புவியியல் ஆய்வுத்துறையில் புவியியலாளராக பணி  புரிந்தவர். பின்னாட்களில், ‘வரலாற்றிற்கு முந்தைய இந்தியத் தொல்லியலின்  தந்தை’ என்று புகழப்பட்டவர். கூவம், கொசத்தலை ஆற்றுப் படுகைகளின் அளவினைக் கண்ட இவர் இவை போன்ற சிறிய ஆறுகளால் இத்தனை பெரிய ஆற்றுப் படுகைகளை உருவாக்க முடியாது என்று கூறுகிறார்.


தமிழ்நாட்டின் புவியியல் வரைபடம், காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் சுமார் 7000 ச.கி.மீ அளவிற்கும், தென்பெண்ணை ஆற்றின் கழிமுகப் பகுதியில் 1300 ச.கி.மீ. அளவிற்கும் டெல்டாக்கள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது. சற்றேறக்குறைய தென் பெண்ணை ஆற்றின் அளவிலான பாலாற்றின் கழிமுகப் பகுதியில் டெல்டா ஒன்றும் உருவாகவில்லை. மாறாக, திருவான்மியூர்-புலிக்காட் ஏரி – காவேரிப்பாக்கம் இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார்  1500 ச.கி.மீ. அளவிற்கு டெல்டா ஒன்று உருவாகியுள்ளது. ஆனால் தற்போது அங்கே பெரிய ஆறு எதுவும் பாயவில்லை; கூவம், கொசத்தலையாறு , அடையாறு போன்ற சிற்றாறுகள் தவிர. 


இந்த சிற்றாறுகளால் இத்தனை பெரிய டெல்டா உருவாகியிருக்க முடியாது எனக் கூறும் ப்ருஸ் ஃபுட், ‘முற்காலத்தில் பாலாறு, காவேரிப் பாக்கம் பகுதியிலிருந்து, வடகிழக்கு திசையில் பாய்ந்து புலிக்காட் ஏரியின் தென்புறத்தில் கடலில் கலந்திருக்கக் கூடும்; பின்னாளில் புவியியல் காரணங்களால் திசை மாறி தற்போது சென்னையிலிருந்து 70 கி.மீ தெற்கே கடலில் கலக்கிறது',   எனும் கருத்தை முன் வைக்கிறார்.  இவர் காலத்தில் வானூர்தியிலிருந்து எடுக்கப்பட்டப் புவிப்படங்களோ, செய்கோள் பதிமங்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



செய்கோள் பதிமங்கள் இன்றைய புவியியலாளர்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம். இவற்றை உற்று நோக்குகையில் காவேரிப்பாக்கம்  அருகேயிருந்து வடகிழக்கு நோக்கிச் செல்லும் ஆற்றின் தொல்தடச்சுவடுகள்  தெளிவாகத் தெரிகின்றன. திருவான்மியூருக்கும் புலிக்காட் ஏரிக்கும் இடையே விரிந்திருக்கும் டெல்டாவின் மேற்கு முனை (டெல்டாவின் துவக்கப் பகுதி) காவேரிப்பாக்கதிற்கு அருகே பாலாற்றில்தான் ஆரம்பிக்கிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது ப்ருஸ் ஃபுட் அவர்களின் கருதுகோள் சரியே எனத் தோன்றுகிறது.


திருவள்ளூர் மாவட்டத்தில் கொசத்தலையாற்றின் மருங்கே அமைந்துள்ள அத்திராம்பாக்கம், பட்டரைப் பெரும் புதூர், திருவள்ளூர், மேட்டுப்பாளையம்,வடமதுரை போன்ற இடங்களில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்குச் சான்றுகளாக பல தடயங்களை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புகளுக்கு பிள்ளையார் சுழி போட்டதும் ப்ருஸ் ஃபுட் அவர்கள்தான். ‘நதிகளை நாகரிகத்தின் தொட்டில்கள்’ என்பர் வரலாற்று அறிஞர்கள். கற்கால மனிதர்கள் வாழ்ந்தபோது பெரிய ஆறு ஒன்று இங்கே பாய்ந்திருக்கலாம் என்பதற்கு தொல்லியல் தடயங்கள் வலு சேர்கின்றன. மீஞ்சூர் அருகேயுள்ள அரியலூரில் முற்றாக் கரி மற்றும் பெரும் மரத்துண்டுகள் கிடைப்பது, இந்தத் தொல்தடத்தில் பேராறு ஒன்று ஓடியிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. 

காவேரிப்பாக்கத்திற்கு அருகே இருந்து வடகிழக்காகப் பாய்ந்த பழைய பாலாற்றின் கிளை நதிகளோ அல்லது கிளை நதிகளின் மிச்சங்களோதான் இன்றைய கொசத்தலையாறும், கூவம் ஆறும் என்பது தெளிவாகிறது. எனில், சென்னை பழைய பாலாற்றின் கழிமுகம்தானே.  அதுசரி, பாலாறு பாதை மாறியது எப்போது?

பாலாறு பாதை மாறியது எப்போது?
காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பதினான்கிற்கும் மேற்பட்ட திவ்யத்தலங்கள் உள்ளன, இத்தலங்களைப் பற்றிப்  பாடப்பட்ட பாடல்கள் திவ்யப் பிரபந்தத்தில் ஐம்பதிற்கும் மேல் உள்ளன. ஆனால் எங்கேயும் பாலாறு எனும் சொல் கண்ணில் படவில்லை. வெஃகாணை உள்ளது. வேகவதி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தைத் திருமால் கிடந்த கோலத்தில் தடுத்து காஞ்சியைக் காத்தார் என்பது வைணவக் கதை. ஆக, வேகவதி இருந்திருக்கிறது, பாலாறு இல்லை. எனவே, பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் (கி.பி. 8 – 9 ஆம் நூற்றாண்டு) இன்றைய பாலாறு வேகவதி ஆற்றின் வழித்தடத்தில் பாய்ந்தது என எண்ண  இடம் உண்டு

பரணியில் பாலாறு:
தமிழ் இலக்கியங்களில், கலிங்கத்துப்பரணியில்தான் முதன் முதலில்  பாலாறு காணப்படுகிறது. காஞ்சியிலிருந்து கலிங்கம் நோக்கிப் படையெடுத்து செல்லும் கருணாகரத் தொண்டைமான் , வடபெண்ணையாற்றை அடையும் முன் வழியில் எந்தெந்த ஆறுகளைத் தாண்டினான் எனும் குறிப்பு, பரணியில் 376 ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
பாலாறு  குசைத்தலை பொன் முகரிப் பழவாறு 
 படர்ந்தெழு கொல்லிஎனும் 
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும் 
 நதியாறு கடந்து நடந்துடனே .......                                                         
                                           (கலிங்கத்துப்பரணி 367).
கலிங்கத்துப் பரணியின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி. அப்போது காஞ்சிக்கு வடக்கே பாலாறு ஓடியிருக்கிறது. அதாவது வேகவதியாறு, பாலாறு எனும் பெயரை அப்போது பெற்றிருக்கிறது. இந்தப் பாட்டில் குசத்தலையாறும் குறிக்கப்படுவதால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாலாறு பாதை மாறிவிட்டது என அறிய முடிகிறது. 

பெரிய புராணத்தில் பாலாறு:
பன்னிரண்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்'என்ற பகுதியில் பாலாற்றின் வளமும் அது பாய்ந்தோடிய தொண்டை மண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள், சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' – 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு). 



பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சியை ஆண்ட மன்னனின்  ஆணைப்படி, குண்டு கோபால் ராவ் என்பவர் , பாலாற்றின் பாதையை மாற்றி அமைத்தார் என்று செவிவழிச் செய்தி ஒன்று உள்ளது. ஆனால் சான்றுகள் ஏதும் இல்லை. 

காவேரிப்பாக்கத்திற்கு  மேற்கே, ஓடை ஒன்று “விருத்தக்க்ஷிரா நதி’  எனும் பெயரில் அழைக்கப்படுவதாக ப்ருஸ் ஃபுட் தனது நினைவேட்டில் குறிப்பிடுகிறார். இந்த வட சொல்லின் தமிழாக்கம் ‘பழைய பாலாறு’ என்பதே.   


________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)




நடுகல்லும் நடுகல் வழிபாடும்


——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.



அண்மையில் வெளியான நூல், “தொல்குடி-வேளிர்-அரசியல்” என்பது. எழுதியவர் தொல்லியல் அறிஞர் முனைவர் அர.பூங்குன்றன். நடுகற்களைப் பற்றிய விரிவானதொரு ஆய்வு நூல். அந்நூலில் ”தொறுப்பட்டி” என்னும் தலைப்பில்  உள்ள செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது, அதை ஒட்டிச் சில தரவுகள் எனக்குக் கிடைத்தன. அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

நடுகல் வழிபாடு-ஓர் அறிமுகம்:
கால்நடை வளர்ப்புச் சமுதாயத்தில், மேய்ச்சல் நிலம் வேண்டிப் புலம் பெயரவேண்டியேற்பட்டது. மேய்ச்சல் தேடிக் குடிபெயரும் தன்மை பூசலை உருவாக்கியது. புதிய இடத்தில் ஏற்கெனவே உள்ள மேய்ப்பவர்களுக்கும் குடி பெயர்ந்தவர்களுக்கும் இடையில் மேய்ச்சல் நிலம் தொடர்பாகப் பூசல் உருவாகியது. சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை மாடே கேடில் விழுச்செல்வமாக விளங்கியது. எனவே, ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் நிகழ்ந்தன. மேய்ச்சல் நிலத்திற்காகவும், நிரைக்காகவும் நடைபெற்ற பூசல், மறவர் குலம் உருவாவதில் கொண்டு சென்றது. இவ்வகைப் பூசல் தொறுப்பூசல் என்றழைக்கப்பட்டது.  மாடுபிடிச் சண்டையில் தம் புகழ் நிறுத்தி மாய்ந்த மறவர்களுக்கு நடுகல் எடுத்து வழிபட்டார்கள். நடுகற்களில், தொடக்கத்தில் வீரனின் உருவம் ஓவியமாக வரையப்படுதலும், பின்னர் சிற்பங்களாக வடிக்கப்படுதலும் நிகழ்ந்தன.

எழுத்து - ஓவியம்:
கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் எழுத்துப்பயன்பாடு குறைவு; எழுதிவைக்க வேண்டிய அவசியம் இல்லாத வாழ்க்கை. சங்க காலத்து வணிகம் வீழ்ச்சியடைந்த பின், வணிகர்கள், கால்நடை வணிகர்களாக மாறியிருக்கவேண்டும். அவ்வாறு மாறியபோது அவர்கள் நடுகல் பகுதியில் தங்கினர். இவ்வணிகர்களே பெரும்பாலும் எழுத்தை அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும். கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து எழுத்துடை நடுகற்கள் மிகுதியும் கிடைக்கின்றன.  நடுகல் வழிபாடு பழங்குடியினரின் ஆவி வழிபாட்டிலிருந்து தோன்றியது. தன் இனக்குழுவில் வாழ்ந்த மனிதன் இறந்த பின்னும் தன்னுடனே வாழ்கிறான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடுகல் வழிபாடு தொடர்ந்தது.

தொறு (சங்க கால ஆநிரை) கால்நடைக் கூட்டத்தைக் குறிக்கும் சொல் தொறு. தொழு என்றும் வழங்கும்.

தொறுப்பட்டி (நெய்த்தோர் பட்டி)  நடுகற்களில், மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலம் பற்றிய செய்தி கி.பி. 9-10-ஆம் நூற்றாண்டிலிருந்து சுட்டப்படுகின்றது. இது, அரசு உருவாக்கம் நிலைபெற்ற காலத்துடன் தொடர்புடையது என்பதற்குச் சான்றாகும். மாண்ட வீரனுக்கு அளிக்கப்பட்ட நிலத்துக்கு நெய்த்தோர்பட்டி என்று பெயர். நெய்த்தோர் என்பதற்கு இரத்தம் என்று பொருள் கொண்டு இரத்தம் சிந்துவதற்காகத் தரப்படும் நிலம் என்று பொருள் கொள்ளப்படுகின்றது. இத் தானத்தினைக் கல்நாடு என்ற சொல்லாலும் கூறுகின்றனர்.

கல்நாடு:
வெ.கேசவராஜ், ”தென்னிந்திய வீரக்கற்கள் – ஓர் ஆய்வு” என்னும் தலைப்பிலான  தம் பி.எச்.டி. ஆய்வேட்டில், கல்நாடு என்பதற்கு எல்லை வகுத்துக் கல்நாட்டிக் கொடுத்த நிலத்தானம் என்று பொருள் கூறுகிறார். ஆனால், நடுகல்லிற்குக் கொடுக்கப்பட்ட வேளாண் நிலம் அல்லது நிலம் என்ற பொருளில் அச்சொல் ஆளப்பட்டிருக்கவேண்டும்.

மேலே சொல்லப்பட்ட செய்திகள் யாவும் பூங்குன்றனார் அவர்களின் நூலிலிருந்து பெரும்பாலும் அவர் எழுத்துகளிலேயே தரப்பட்டவை. இனி வருபவை, அவருடைய ஆய்வுக்கருத்துகளுடன் ஒட்டிய – எனக்குக் கிடைத்த - சில தரவுகள்.

என் தரவுகள்:
நெய்த்தோர் -  நெய்த்தோர் என்பதற்கு இரத்தம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. இக்கருத்து மிகச் சரியே. கன்னட மொழியில் இரத்தம் என்பதற்கு “நெத்துரு”  என்ற சொல்லே வழங்குகிறது. தெலுங்கு மொழியிலும் “நெத்துரு”  என்னும் சொல்தான். கொங்கு நாட்டில் “ரத்தம்” என்பது “நத்தம்” என வழங்குவது கருதத்தக்கது. “நத்தம்”, “நெத்துரு” இரண்டும் நெருங்கிய தொடர்புள்ளன என்பது புலனாகிறது. கருநாடகத்தில், நடுகல்லுக்கு வீரகல்லு என்ற பெயர் வழங்குகிறது. கருநாடகக் கல்வெட்டுகளில் வீரகல்லு (வீரக்கல்) கல்வெட்டுகள் மிகுதியாக உள்ளன. அவற்றில், இறந்துபட்ட வீரனின் குடும்பத்தார்க்கு நிலம் கொடையாக அளிக்கப்பட்ட செய்திகள் காணப்படுகின்றன. ”கொடை” யைக் குறிக்கும் கன்னடச்சொல் “கொடகெ” என்றும் “கொடுகெ”  என்றும் பயில்கின்றன. இரத்தத்தைக் குறிக்கும் “நெத்துரு”, “நெத்ர” ஆகிய சொற்களுடன் சேர்ந்து “நெத்துரு கொடகெ”, “நெத்ர கொடகெ” என வருகின்றன.


எடுத்துக்காட்டு-1:
மைசூர் மாவட்டம், ஹிரியபட்டண(ம்) வட்டம், ஜோகனஹள்ளி என்னும் ஊரில் உள்ள நடுகல்(வீரகல்லு) கல்வெட்டு கீழ்வருமாறு அமைகிறது:

1 பஹுதான்ய சம்வத்சரத மார்க
2 சிர .... மருளிஹரதி
3 ய நாகப்பகள மக்களு பைச்சண்ண
4 னூ ஜோகனஹள்ளிய இசுவண்ண
5 ஹுலிய இறிதனாகி நெத்ரகொ
6 டகெய கொடகெயனூ ஆரொ
7 பரு அளுசிதவரூ சத்த
8 நாயி திந்தவரு ஸ்ரீ


கல்வெட்டின் தமிழ் வடிவம் கீழே:

1 வெகுதான்ய வருடம் மார்கழி
2 மாதம் மருளிஹரதி ஊரைச்சேர்ந்த
3 நாகப்பனவரின் மகன் பைச்சண்ணன்
4 ஜோகனஹள்ளி ஊரைச்சேர்ந்த இசுவண்ணன்
5 புலியைக் கொன்றதற்கு (கொன்று இறந்துபட்டமைக்கு) குருதிக்
6 கொடை. இக்கொடையை யாரொருவர்
7 அழித்தவர் (கேடு செய்தார்) இறந்துபோன
8 நாயின் புலவை உண்டவர்க்கு ஒப்பாவார்.  ஸ்ரீ

கட்டுரை ஆசிரியர் குறிப்பு:
”ப” எழுத்தை முதலாகக் கொண்ட தமிழ்ச் சொற்கள் பல, கன்னடத்தில்  ”ஹ” ஒலிப்பாக மாறுதல் இயல்பு. எடுத்துக்காட்டாக:
பால்=ஹாலு                                                                     
பல்=ஹல்லு
பாழாயிற்று=ஹாளாயித்து
இங்கே, புலி, ஹுலி ஆயிற்று. கொடை என்னும் தமிழ்ச் சொல் கொடகெ என்பதும்,

அழித்தவர் என்னும் தமிழ்ச் சொல் அளுசிதவர் என்பதும், கன்னட மொழி தமிழ் வேர்களைக் கொண்டது என்பதைப் புலப்படுத்துகின்றன. (தின்றவர்=திந்தவர் என்பது இவ்வகையானதே) தமிழ்க் கல்வெட்டுகளில் பயிலும் இன்னொரு சொல் “எறிந்து” என்பதாகும். அது, ”கொன்று” என்னும் பொருளையுடையது. அதுவே, கன்னடத்தில் “இறிது”  என்று திரிந்து வழங்கியிருக்கக் கூடும். கல்வெட்டின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.


எடுத்துக்காட்டு-2:
மைசூர் மாவட்டம், யளந்தூர் வட்டம், யளந்தூரில் ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் இருக்கும் ஒரு பலகைக் கல்லில் காணப்படும் கல்வெட்டு. முதல் எடுத்துக்காட்டு ஒரு கன்னடக் கல்வெட்டாக அமைய, இந்த எடுத்துக்காட்டு ஒரு தமிழ்க்கல்வெட்டாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வெட்டின் காலம் போசளர் (ஹொய்சளர்) காலம். கி.பி. 1266. அரசன், மூன்றாம் நரசிம்மன். கருநாடகத்தின் கங்கபாடிப் பகுதி, முதலாம் இராசராசன் காலம் தொடங்கிச் சோழர் ஆட்சியின்கீழ் இருந்தபோது, தமிழரும், தமிழ் மொழியும் இப்பகுதியில் குடியேற்றம் பெற்றனர். சோழருக்குப்பின் போசளர் ஆட்சிக் காலத்திலும் தமிழின் செல்வாக்கு உயர்ந்தே இருந்தது. போசளரின் கல்வெட்டுகளும் தமிழில் பொறிக்கப்பட்டன. அத்தகைய கல்வெட்டுகளுள் இந்தக் கல்வெட்டும் அமைகிறது. கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு :


கல்வெட்டின் முன் பக்கம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ வீர ந
2 ரசிம்ஹதேவன் பிருதிவீரா
3 ஜ்யம் பண்ணி அருளாநிற்க
4 இளமருதூரான ராஜகேசரி ந
5 ல்லூர் நாலுகூற்றில் சமஸ்த கா
6 முண்ட
7 களும்
8 ஸ்தானிகரும்
9 இளமயரும்
10 வியாபாரிக
11 ளும் அய
12 ணிக்கு
13 மெங்க
14 ளூர் நாவித உடயச்சன் மகன்
15 கேத்தைக்கு பிரமாணம் பண்
16 ணிக் குடுத்தபடி க்ஷய சம்


கல்வெட்டின் பின் பக்கம் :

17 வத்சரத்து சித்திரை
18 மாசத்து இந்த நாவிதன் புலி
19 யெறிந்து வீரியஞ்செய்தது ப
20 க்கு இவனுக்கு நேத்தல் குடங்
21 கை கரிகூடபள்ளத்து குழி
22 60 இந்த குழி அறுபது இவ
23 ன் மக்களுள்ளதனை செலு
24 த்தி இவன் வம்சமுள்ளதன்
25 நாளுஞ்செல்லக்கடவதாக
26 தாராபூர்வம் பண்ணிக்கு
27 (டு)த்தோம் ஆசந்திராஸ்தாஹியாக
28 த்தை அழிம்பினார்கள் கங்
29 கைக் கரையில் குரால்பசு(வை)
30 கொன்ற பாவத்தில் (போ)

இக்கல்வெட்டில், இருபதாம் வரியில் “நேத்தல் குடங்கை”  என்னும் தொடருக்கு, நூலின் பதிப்பாசிரியர் “நெத்தரு கொடகெ”  என்றே பொருள் கூறுகிறார். கேத்தை  என்னும் நாவிதன் புலியெறிந்து (புலியைக்கொன்று) வீரச்செயல் புரிந்ததற்காக நெய்த்தோர் பட்டியாக (நேத்தல் குடங்கை) அறுபது குழி நிலம் கொடையளிக்கப்பட்டது. கொடையளித்தவர்கள், சமஸ்த காமுண்டர்கள், ஸ்தானிகர், இளமயர், வியாபாரிகள் ஆகியோர். சமஸ்த, ஸ்தானிக  ஆகியவை ஊரின் நிர்வாக அமைப்பைக் குறிக்கின்றன எனலாம். காமுண்டர்கள் என்பவர்கள் ஊர்த்தலைவர்கள். இளமையர் என்பதற்குக் காவலர், வீரர் என்று பொருள். மிளை என்னும் காவற்காட்டைக் காத்து நின்றவர் எனலாம். (மிளை, இளை எனத்திரிந்திருக்கலாம்.) கால்நடைகளைக் காத்த காவலரான இளையரும் கொடையளிக்கும் பிரமாணத்தில் பங்கு கொள்வதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. எனவே, ஊர்க்காமுண்டரும், இளையரும், வியாபாரிகளும், ஸ்தானிகரும் கொடை ஏற்பாடு செய்கின்றனர். தமிழ்க் கல்வெட்டுகளில் பயிலும் இளையர் என்னும் வழக்குச் சொல் கன்னடக் கல்வெட்டிலும் பயில்கின்றது. இது, தமிழகத்தின் கால்நடைச் சமுதாயத்தின் கூறுகள் கருநாடகப் பகுதியிலும் நிலைபெற்றிருந்தது என்பதை விளக்குகிறது.

தொறு - எடுத்துக்காட்டு-1:
அடுத்து, தொறு என்னும் வழக்கும் கருநாடக் கல்வெட்டுகளில் பயில்வதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, மைசூர் மாவட்டம், பிரியபட்டணம் வட்டம், கூரகல்லு என்னும் ஊரிலிருக்கும் வீரக்கல் கல்வெட்டு, தொறுப்பூசலைப்பற்றியது. தொறு என்பது கால்நடைக்கூட்டம் என்று முன்பே பார்த்தோம். கன்னடக்கல்வெட்டுகளில் “தொறு” என்பது “துறு”  என்று சற்றே திரிந்து காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கங்க அரசன் பெர்மானடியின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு). கொங்கல் நாடு-8000 என்னும் நாட்டுப்பிரிவை ஆளும் தலைவனான இறெயப்பன், நிலக்கொடை அளிக்கிறான். கூரகல்லு ஊரின் காவுண்டன், தொறுப்பூசலில் சண்டையிட்டு இறந்துபடுகிறான். அவனுக்கு மூன்று கண்டுகம் நிலம் “கல்நாடாகக்” கொடுக்கப்படுகிறது. ஆகோள் என்று இலக்கியங்களில் பயில்கின்ற ஆநிரை கவர்தல், நடுகற்களில் “தொறு கொள்ளுதல்” என வழங்கும். தமிழகக் கல்வெட்டுகளில் காணப்படும் “தொறு கொள்தல்” அல்லது “தொறு கொளல்” என்னும் தொடர், பழங்கன்னடத்திலும் காணப்படும் சொற்றொடராகும். மேற்படி கல்வெட்டில் “துறு கொளல்” என்று கன்னடத்தில் குறிப்பிடப்படுகிறது. ஆளுத்திரெ, சத்தர் ஆகிய சொற்கள் தமிழ் வேர்களைக் கொண்டுள்ளதை நோக்குக. மண் என்னும் சொல் மண்ணு என்று தமிழ்ச் சொல்லின் வடிவம் மாறாது பயில்வது குறிப்பிடத்தக்கது. காதி என்னும் கன்னடச் சொல் சண்டையிடுதலைக் குறிக்கும்.


கல்வெட்டுப் பாடம்:

1  ஸ்வஸ்திஸ்ரீ பெர்ம்ம
2  னடிகள் பிரிதுவிராஜ்யம்
3  கெய்யுத்திரெ கொங்கல் நாடெ
4  ண்டாசிரமனு இறெய
5  ப்பனாளுத்திரெ குர்கல்ல
6  பூதுகனரசி பரமப்பெ
7  யாளுத்திரெ குர்கல்ல காவுண்ட
8  தம்முத்திர்பொர் துறுகொளல் காதி
9  சத்தர் இதக்கெ எறயப்பரசர்   
10 கொட்ட மண்ணு மூகண்டுக கால்நாடு இத
11 க்கெ சக்கி முதிரெ பூவய்ய பெள்ளென கர
12 குடி பாரதர் எறெயம்ம கெதறெயரய்ய
13 ப


கல்வெட்டின் தமிழ் வடிவம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ பெருமானடிகள்
2 ஆட்சி செய்கையில்
3 கொங்கல் நாடு
4 எண்ணாயிரத்தை இறயப்பன்
5 ஆளுகையில் குர்கல்லைப்
6 பூதுகனின் அரசி பரமப்பை
7 ஆளும்போது குர்கல்லைச் சேர்ந்த காவுண்டன்
8 ...... தொறு கொளல் போரில் சண்டையிட்டு
9 செத்தான் இதற்காக எறயப்பரசர் 
10 கொடுத்த மண் (நிலம்) மூன்று கண்டுகம் இது கல்நாடாக
11 ...........
12............
13.......... 


தொறு - எடுத்துக்காட்டு-2:
மைசூர் மாவட்டம், மல்லெகவுடன கொப்பல் என்னும் ஊரில் உள்ள ஒரு நடுகல் கல்வெட்டும் தொறுப்பூசல் பற்றியதே. கி.பி. 1036-ஆம் ஆண்டைச் சேர்ந்த இக்கன்னடக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தது. ஆநிரை கவர்தலும், ஆநிரை மீட்டலும் இக்கல்வெட்டில் செய்தியாக வருகின்றன. சங்காள்வா(ன்) என்பவன் தன் தம்பியோடு சேர்ந்து ஆநிரை கவர்கிறான். பாகுளி சிரியண்ண(ன்) என்னும் வீரன் ஆநிரை மீட்கும் முயற்சியில் சங்காள்வானுடன் சண்டையிட்டு இறந்துபடுகிறான். 


கல்வெட்டுப்பாடம் கீழ்வருமாறு :

1 ஸ்ரீ ராஜேந்த்ர சோழதேவர்க்கெ யாண்டு இப்பத்த மூ
2 ற மதறொ
3 ளெ த்து சம்வ
4 த்ஸரத ஆஷா
5 ட மாஸத
6 அமாவாச்யெ யந்து திலுகரமாரி சங்காள்வ கிறுசோதர கூடி
7 துறுவ கொ
8 ண்டு போகெ ஒ
9 ளி நாகய்ய
10 ர மக பாகு
11 ளிசிரியண்ண
12 சங்காள்வன
13 காதி துறுவ மகுழ்ச்சி பெண்டிர பெறகிக்கி காதி சத்த அவன
14 தம்ம
15 ஆ..ண்ண பரோக்‌ஷவினெய கெய்து


கல்வெட்டின் தமிழ் வடிவம்:

1 ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவற்கு யாண்டு இருபத்துமூன்று
2 ......
3 தாது வருஷம் ஆஷாட(ஆடி)
4 மாதம்
6 அமாவாசையன்று திலுகர மாரி (என்னும்) சங்காள்வானும் அவனது சிறிய சகோதரனும் கூடி
7 துறுவைக்
8 கொண்டுபோகும்போது (கவர்ந்து போகும்போது?)
9 ஒளிநாகய்யனின்
10 மகன்  பாகுளி
11 சிறியண்ணன்
12 சங்காள்வானுடன்
13 பொருது துறுவை மீட்டு,   பெண்டிரைக் காத்து
   சண்டையில் செத்தான் அவனுடைய
14 தம்பி
15  .... இறந்தவர் நினைவாக......

சோழப் பேரரசன் காலத்துக் கல்வெட்டாகையால், தமிழ்க் கல்வெட்டு மரபுப்படி அரசனின் ஆட்சியாண்டு சுட்டப்பெறுகிறது. ஆனால், கன்னடச் சொல்லுக்கு ஈடாகத் தமிழ்ச் சொல்லான “யாண்டு” என்பது கையாளப்படுவதைக் காண்க. ஆநிரை, துறு என இக்கல்வெட்டில் பயில்கிறது. ஆநிரையைக் கவர்ந்து போகும் நிகழ்வு, “துறுவ கொண்டு போகே” என்னும் தொடரில் தமிழின் தாக்கத்துடன் கூறப்படுகிறது. சிறியண்ணன் ஆநிரை(தொறு) மீட்கச் சண்டையிடுதல் ”காதி”  என்ற தொடரால் சுட்டப்பெறுகிறது. தொறுவை மீட்டல் என்பது “துறுவ மகுழ்ச்சி”  என்னும் தொடரால் அறியப்படுகிறது. தொறு மீட்டல் நிகழ்ச்சியில், பெண்களைப் பாதுகாத்தலும் நிகழ்ந்தது இதை, ”பெண்டிர பெறகிக்கி காதி” என்னும் கல்வெட்டு வரி விளக்குகிறது. ”பரோக்‌ஷவினய(ம்) என்னும் வடசொல், இறந்தவர்க்கு மரியாதை செலுத்தும் முகத்தான் செய்கின்ற செயலைக் குறிக்கும். அதாவது, இறந்தவர் நினைவாகச் செய்வது. கல்வெட்டின் காலம் கி.பி. 11-ஆம் நூற்றாண்டாதலால், ”மகுழ்ச்சி”  என்பது தமிழின் தாக்கத்தால் விளைந்த பழங்கன்னடச் சொல்லாக இருக்கக் கூடும். ஆனால், இச்சொல்லின் தமிழ் வேர் எது எனப் புலப்படவில்லை.

கல்நாடு:
எல்லை வகுத்துக் கல்நாட்டிக் கொடுத்ததால் கல்நாடு என்னும் வழக்கு ஏற்பட்டது என்னும் கருத்தைக்காட்டிலும், நடுகல்லிற்குக் கொடுக்கப்பட்ட வேளாண் நிலம் அல்லது நிலம் என்ற பொருளில் அச்சொல் ஆளப்பட்டிருக்கவேண்டும்  என்னும் பூங்குன்றன் அவர்களின் கருத்தே கருநாடகக் கல்வெட்டில் காணப்படுகிறது.

கல்நாடு -  எடுத்துக்காட்டு-1:
மைசூர் மாவட்டம், திருமுக்கூடல் வட்டம் தொட்டஹுண்டி என்னும் ஊர் வீரக்கல் கல்வெட்டில், கங்க அரசனான நீதிமார்க்கப் பெர்மானடி இறந்தபோது, அவனது பணியாள் ஒருவன் (ஆகய்யன் என்பது அவன் பெயர்)), அரசன் மேல் உள்ள பற்றால் தன் உயிரை மாய்த்துக்கொண்டான். அவனுக்கு நினைவுக்கல் எடுக்கப்பட்டது. கல்நாடாக ஓர் ஊர் கொடுக்கப்பட்டது என்னும் செய்தி கூறப்படுகிறது. கொடையளித்தவன் , இறந்த அரசனின் மகன் சத்தியவாக்கியப் பெர்மானடி. கல்வெட்டின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனக் குறிக்கப்படுகிறது.


கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ நீதிமார்க்க கொங்குணிவர்ம தர்ம மஹாரா
2 ஜாதிராஜ கோவளாலபுரவரேஸ்வர நந்த
3 கிரி நாத ஸ்ரீமத் பெர்மானடிகள் ஸ்வர்கமேறிதன்
4 ஏறிதொடெ பெர்மானடிகள மனெமகத்தின் ஆக
5 ய்ய நீதிமார்க்கப் பெர்மானடிகெ கீழ்குண்ட்டெ ஆத
6 பெர்மானடிகள் சுபுத்ர சதயவாக்ய பெம்மானடிகள் ..
7 பாடி ய
8 கல்நாடு
9 கொட்ட து
10 ப்பஹள்ளி

குறிப்பு: ஸ்வர்கம் ஏறித – சொர்க்கத்தை அடைந்தான்.
பெர்மானடிகெ – பெர்மானடிகளுக்கு
கீழ் குண்ட்டெ ஆத -  கீழ் குண்ட்டெ ஆனான்.
கீழ் குண்ட்டெ என்பது, தமிழகக் நடுகற்களில் காணப்படும் நவகண்டச் செயலை ஒத்தது. அர்சனுக்காகத் தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுதல். கல்நாடாகக் கொடையளிக்கப்பட்ட ஊர் துப்பஹள்ளி.

கல்நாடு - எடுத்துக்காட்டு-2:
”தொறு” வைக்குறித்த மேற்படி எடுத்துக்காட்டு-1, கல்நாடு என்னும் கருத்துக்கும் 

எடுத்துக்காட்டாக அமைவதைக் காண்க. தொறு கொளல் பூசலில் இறந்துபட்ட காவுண்டனுக்கு மூன்று கண்டுகம் அளவுள்ள நிலம் (மண்ணு) கல்நாடாகக் கொடுக்கப்படுகிறது. 

முடிவுரை:
நெய்த்தோர் பட்டி என்பது தொறுப்பூசலில் இரத்தம் என்னும் குருதி சிந்தி இறந்துபட்ட வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தைக் குறிக்கவந்தது என்பதும், இதே கருதுகோள்

கருநாடகத்திலும் வழக்கில் இருந்தது என்பதும், இவ்வாறே, கல்நாடு என்பது தொறுப்பூசலில் இறந்த வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் என்பதும், தொறு என்னும் தமிழ்ச் சொல், கால்நடைச் சமுதாயப் பண்பாட்டின்  கூறுகளுள் ஒன்று என்பதும், இந்தப் பண்பாடும், இந்தச் சொல்வழக்கும் கருநாடகத்திலும் இடைக்காலத்தில் இருந்துள்ளன என்பதும் பெறப்படுகின்றன. 





___________________________________________________________
தொடர்பு: து.சுந்தரம்
doraisundaram18@gmail.com
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.அலைபேசி :  9444939156.