Tuesday, April 10, 2018

திருவாலங்காடு இரத்தினசபை



——   சேசாத்திரி சிறீதரன்


வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில். 

                                                                            
இது ஒரு பாடல்பெற்றத் தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களை தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனைக் கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித் தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாக கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்குக் கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதே நேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்கு சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  


கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள்


கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி புடைப்புச்  சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ ,தெய்வவடிவுகள் தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வை குறிக்கிறது.  அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக  ஏங்கித்தவிக்க திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்து போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியம்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினி சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.  





இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரண கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்குச் சென்னையில்  இருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள். ​
https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789


சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும்  கம்பீரமாகவுள்ளன. அதிக கல்வெட்டுகளையும்  பெற்றுள்ளன. பொதுவாக பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில் தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தல் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஒரு ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறு தான்  சில கிலோ  மீட்டர் தள்ளிக்  கிழக்கில் பூண்டி அணை நோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசு புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர் செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்  தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும் , கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம். கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர். இன்று திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்து உள்ளது. இருப்பினும்  இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்து தான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.   நிலக்கொடைகள் குறித்த கோயில் கல்வெட்டுகளும் இங்குள்ளன.

கல்வெட்டு படம் -1

கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் -1
1  (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
3 ...கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும் 
4 ர  சோழர(ச)...க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

விளக்கம்:  
திருவாலங்காடு, மணவில் கோட்டம், மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின் முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன்  பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். 
அதாவது, இறைவன் நாமம்; காணி=உரிமை.
இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று,ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை  என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஒரு அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப்பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

கல்வெட்டு படம் - 2
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 2
யுடைய (முழான்)....ராயன் 
..........ட்டை (ஸ்ரீ) ..க்கோ ...... காச்யபன்
.....திருவாலங்காடு..........(சாவா) மூவாப்



கல்வெட்டு படம் - 3
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 3
...ராயன்   வடுகநாதன் ....நத
காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ



கல்வெட்டு படம் - 4
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 4
வரங்கில் அண்டமுற் ந...
பட்டனும் ஆத்ரேயன்  ச



கல்வெட்டு படம் - 5
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 5
......கோட்டத்து ...
ண்டமுற்  ந... மாந்த..
ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)



கல்வெட்டு படம் - 6
கல்வெட்டுப் பாடம்: கல்வெட்டு படம் - 6
...பழையனூர் நாட்டு...
ளிய  நாயநார் திருமு(ன்)
(ப0ட்டனும் காச்யபன் கா..

திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
கா...பட்டனும்

விளக்கம்:   
​திருவாலங்காடு கல்வெட்டுகளைப்  படித்ததில் கிடைத்தவை.
கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை  அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. 
கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கப்பெறும் ஆடு, பசு ஆகியவற்றைச்”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம்.  இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்.... ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.  

கொடைப்பொருட்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப்பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன்  முதலியோர் ஆவர்.  இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யபன் கோத்திரத்தான் எனத்தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.   இப்பழையனூர் நாட்டுப்பிரிவு,  மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.





நன்றி: 
திரு. துரை சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப்  பொருள் கூறியவர். 

பின் குறிப்பு: 
மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது [https://en.wikipedia.org/wiki/Manavur]
இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது [https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur]
அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

​ 

________________________________________________________________________
தொடர்பு: சேசாத்திரி சிறீதரன் (sseshadri69@gmail.com)





No comments:

Post a Comment