Friday, September 3, 2021

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு

-- மா.மாரிராஜன்

மீட்கப்பட்டத் தமிழ்க் கல்வெட்டுகளின் வரலாறு ... 
ஏறக்குறைய ... 

1887 ஆம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்த கல்வெட்டுகள் படியெடுக்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினார்கள்.  இவர்களால் படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் முதலில் ஊட்டியிலும், பிறகு சென்னையிலும் பாதுகாக்கப்பட்டு,  இறுதியில் மைசூர் தொல்லியல்துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டது.  சுமார் 60000 கல்வெட்டுப் படிகளில், மிகக் குறைந்த அளவே வெளியிடப்பட்டது.  மீதமுள்ள தமிழ் கல்வெட்டுகளை வெளியிடவேண்டும் என்பது பல வருடக் கோரிக்கை... 

இந்தச் சூழலில் மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுப்படிகள் போதிய பராமரிப்பின்றி  அழிந்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டும் எழும்பியது.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான முதல் முயற்சியைத் தமிழ் மரபு அறக்கட்டளை மேற்கொண்டது. 
(பார்க்க:  https://books.google.co.in/books?id=rUFWDwAAQBAJ&lpg=PP1&pg=PA20#v=onepage&q&f=false  கல்வெட்டில் அரசியல்) 
தமிழ் மரபு அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டத்தில் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

அறக்கட்டளையின் நிறுவனர் சுபாஷிணி;  செயலாளர்  தேமொழி; வழக்கறிஞர் கௌதமசன்னா; வழக்கறிஞர் காந்தி பாலசுப்ரமணியன் ஆகிய குழுவினர் கூட்டத்தில் வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டது.  உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ அவர்கள் எந்தக் கட்டணமும் பெறாமல் ஆஜராக முன்வந்தார்.

திரு.கௌதமசன்னா மற்றும்  திரு.பி.மணிமாறன் இருவரையும் மனுதாராகக் கொண்டு   வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கு எண்: W.p.(md) no 20678 / 2019.  
இவ்வழக்கில் வாதிட்டவர் மூத்த  வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ

இதே கோரிக்கையைக் கொண்டு மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தவர் திரு. இளஞ்செழியன் (17399 / 2020)
வாதிட்டவர்  மூத்த  வழக்கறிஞர் திரு.சித்தார்த்த விஷ்ணு.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர்  திரு.வீரகதிரவன் மற்றும் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள்.
தொல்லியல் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் திருமதி. விக்டோரியா கௌரி ஆஜரானார்.

மனுதாரர்கள் இருவர் சார்பாக நிறைவு வாதத்தை மூத்த வழக்கறிஞர் திரு.என். ஆர். இளங்கோ எடுத்துரைத்தார்.  ஏறக்குறைய 266 பக்க வரலாற்றுத் தரவுகளுடன் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வாதம் செய்தார்  திரு.என். ஆர். இளங்கோ.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை தமிழகம் கொண்டுவருவதன் அவசியத்தை மிகத் தெளிவாக சான்றுகளுடன் எடுத்துரைத்தார். வழக்கிற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழக்கறிஞர் திரு.காந்தி பாலசுப்ரமணியன் அவர்கள் சேகரித்துக் கொடுத்தார். 
வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை  மா.மாரிராஜன், திருச்சி பார்த்தி, ஆறகழூர் வெங்கடேசன், பத்திரிகையாளர் சஃபிமுன்னா,  வழக்கறிஞர்கள் அருண் மற்றும் திலக்குமார் ஆகியோர் கொடுத்தனர்.

தீர்ப்பும் சாதகமாகவே வந்தது.  மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுப்படிகள் அனைத்தையும் சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.  இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை நீதியரசர்கள் திரு.கிருபாகரன் மற்றும் திரு.துரைச்சாமி அமர்வு வழங்கியது.

நீதிமன்றத் தீர்ப்பில்:
தமிழ் மொழியின் சிறப்பு, பழமை, தமிழ் வழிக் கல்வியின் அவசியம், பெற்றோர்களுக்கு அறிவுரை, தொல்லியல் துறையின் குளறுபடி என அனைத்தையும் மேற்கோள் காட்டி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பின் முழு விவரம், எளிய தமிழில்,  கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே  என்று ஆரம்பித்தனர் நீதியரசர்கள்...

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்தக்குடி; 
தமிழ் மொழி இளமையானது மற்றும் மிகப்பழமையானது. பழங்காலம் முதல் இன்றைய நவீன காலம் வரை தமிழ் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. உலகத்தின் முதல் மொழி என்று கூற இயலாது என்றாலும் உலகத்தின் மிகப்பழமையான மொழிகளில் தமிழும் ஒன்று என நிச்சயமாகக் கூறலாம். தமிழ் மொழியானது கி.மு. 409 - 508 வரை காலக்கணிப்பை உறுதி செய்து அறிவியல் பூர்வமாக கரிமப்பகுப்பாய்வு மூலம் கீழடி உறுதி செய்தது.  இந்தியாவின் மிகப்பழமையான மொழியாக மௌரியப் பேரரசர் அசோகர் கால பிராகிருத மொழி எழுத்தே கி.மு. 268 -232 என்று இதுவரை நம்பப்பட்டது. ஆனால், தமிழ் மொழி பிராகிருதத்தைக் காட்டிலும் பழமையானது என்று நிறுவப்பட்டது.

இந்நீதிமன்றம் 22.03.2021 அன்று ஒரு வழக்கில் தீர்ப்பு கூறியபோது கொடுத்த மேற்கோளை மீண்டும் நினைவுகூருகிறோம். "தமிழ் மொழி பழமையானது. சமஸ்கிருதத்தை விடப் பழமையானது. என்னால் வணக்கம் மட்டுமே தமிழில் சொல்லமுடிகிறது. இதற்கு மேல் செல்லமுடியாதது வருத்தம் அளிக்கிறது" இவ்வாறாகப் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டார். பிப்ரவரி 2018 இல் டெல்லியில் நடந்த மாணவர்கள் விழாவில் குறிப்பிட்டார். இது மோடி அவர்களின் கருத்து மட்டுமல்ல. உலக மொழியியல் ஆய்வாளர்களின் கருத்தும் ஆகும்.

2500 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் பழமையான மொழியாகும். அசோகரின் பிராகிருதத்தை முந்திச் சென்று, இந்தியாவின் பழமையான மொழி தமிழ் ஆகும். கீழடி எழுத்துக்கள் தமிழின் பழமையை மட்டுமல்ல, பழங்காலந்தொட்டே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கூறுகிறது.  2600 ஆண்டுகளாக தமிழ் மொழி பேசப்பட்டும் எழுதப்பட்டும் தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை இன்றைய மாணவர் சமுதாயம் புறக்கணித்து ஆங்கில வழியை நாடுவதும், இதற்குப்  பெற்றோர் ஆதரவு இருப்பதும் எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது.  இதே போல் தாய்மொழி புறக்கணிப்பு வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

இந்தியாவில் கண்டறியப்பட்டக் கல்வெட்டுகளில் மிகப்பழமையானதாக தமிழ் கல்வெட்டுகளே எனத்தெரிகிறது. தொல்லியல் துறை அளவீட்டின்படி அதிக எண்ணிக்கையில் இருப்பது தமிழ் கல்வெட்டுகளே என்பதும் உறுதியாகிறது.  இக்கல்வெட்டுகள் அக்கால மக்களின் வரலாறு, நிர்வாகம், வாழ்வியல், வணிகம், போன்ற தகவல்களைத் தருகிறது. கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்று மூலங்களாகும். இந்த தமிழ் கல்வெட்டுகள் மற்றும் மைப்படிகள் பாதுகாப்பு குறித்தே இவ்வழக்குத் தொடரப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களால் கண்டறியப்பட்டன. காடு, மலை என்று அலைந்து திரிந்த  அவர்கள் மிகக் கடினமான சூழலில் இக்கல்வெட்டுகளைக் கண்டறிந்து அவற்றைப் பதிவு செய்தார்கள். இப்பதிவுகள் அனைத்தும் மைசூரில் உள்ள The Archaeological Survey of India (ASI) அலுவலகத்தில் வைக்கப்பட்டன. மைசூரில் உள்ள கல்வெட்டுப்படிகளில் குறிப்பாக தமிழ் கல்வெட்டுகள் சரியாக பராமரிப்பின்றி இருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். கல்வெட்டுகள் அழியும் அபாயத்தில் உள்ளதாகவும் அச்சப்படுகிறார். Damaged , Destroyed and found to be Missing. இதற்குத் தீர்வு கேட்டே இவ்வழக்குகள்  தொடரப்பட்டுள்ளது.
Petition (md) no 20768 of 2019 மற்றும் Md no 17399 Of 2020.

கல்வெட்டுகளை மைசூரிலிருந்து தமிழ்நாட்டுக்கு இடமாற்றம் செய்து பாதுகாத்து மின்னாக்கம் செய்ய வேண்டும். இதற்கு போதிய கல்வெட்டு ஆய்வாளர்களை ASI பணி நியமனம் செய்யவேண்டும்.  என்பது மனுதாரர் கோரிக்கை. எதிர் தரப்பில் தொல்லியல் துறை தாக்கல் செய்த  எதிர் - பிரமாணப் பத்திரம் (Counter - Affidavit) மூலம் தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கையே அதிகம் என்று தெரிகிறது. ஆனால் இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கையை தொல்லியல்துறை துல்லியமாக தரவில்லை. 

21.02.2018 இல்..
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 38000.
சமஸ்கிருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 11000.
என்ற விவரத்தைக் கொடுத்தது.

ஆனால்; 
21.12.2020 இல்..  
தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 28276.
சமஸ்கிருதக் கல்வெட்டுகளின் எண்ணிக்கை 17001.
என்ற விவரத்தைக் கொடுத்தது.

இது பேரதிர்ச்சியாக உள்ளது. தமிழ் கல்வெட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறைந்தது.?  

14.07.2021 இல் டெல்லியில் உள்ள இந்தியத் தொல்லியல்துறை கலாச்சார அமைச்சகம் கொடுத்த அறிக்கையின்படி கல்வெட்டுகளின் எண்ணிக்கை தோராயமாக 74000. RTI கொடுத்த 38000 தமிழ் கல்வெட்டுகளில்..
28, 276 என்று ஏன் குறைத்துக் காட்டப்பட்டது?  அதேபோல் 11000 சமஸ்கிருதக் கல்வெட்டுகள் எப்படி 17001 ஆக அதிகரிக்கப்பட்டது? தொல்லியல்துறை தொடர்ந்து முரண்பாடான (Contradictory) தகவல்களையே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 

தமிழ் கல்வெட்டுகள் மைசூரில் இருந்தால்  அவை பாதுகாக்கப்படாது என்ற மனுதாரர் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. தமிழ் கல்வெட்டுகள் பராமரிப்பின்றி அழிக்கப்படுவதாக மனுதாரர்கள் ஆதாரத்துடன் குற்றம் சாட்டுகிறார்கள். சமீபத்திய தொல்லியல்துறை வெளியீடான தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதி 41 ( S.i.i.vol.41) No 271( Are.488 of 1905) 272, 273, 274,275,276,277, 426,427,428,429,430.
இக்கல்வெட்டுகள் அனைத்தும் காணாமல் போய்விட்டதாக தொல்லியல்துறையே அறிவித்துள்ளது.

மேலும் பல கல்வெட்டுகளின் நிலை இப்படித்தான் உள்ளது. சரியான பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி ஏராளமான தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அழிந்துபோனதை உறுதி செய்கிறோம். அடுத்த தலைமுறைக்கு இக்கல்வெட்டுகளைக் கொண்டு செல்ல தொல்லியல் துறை தவறிவிட்டது. கல்வெட்டுகளின் மைப்படிகளை மின்னாக்கம் செய்யும் முயற்சியாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் தொல்லியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தும் இப்பணி கைவிடப்பட்டது.

2005 - 2006 ஆம் ஆண்டு  ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையும் வெளியிடவில்லை. கண்டறியப்பட்ட படிமங்களைக் காலக்கணிப்பும் செய்யவில்லை. இதுகுறித்து மனுதாரர் காமராஜ் அவர்கள் தொடர்ந்த வழக்கு  W.p.no.13096 2012.
ஆதிச்சநல்லூர் ஆய்வாளர் திரு.சத்தியமூர்த்தி அவர்கள் ஆதிச்சநல்லூர் படிமங்களைக் காலக்கணிப்பு செய்யவோ,  ஆய்வறிக்கை வெளியிடவோ மத்திய அரசு ஆர்வம் காட்டவில்லை என்று வாக்குமூலம் அளித்தார். எனவே மாநில அரசுக்கு இந்நீதிமன்றம் கோரிக்கை வைத்தது. ஆதிச்சநல்லூர் படிமங்களைக் காலக்கணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தோம்.

இவ்வாறான பல காரணங்களால்; மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள், செப்பேடுகளின் பதிவுகள் மற்றும் அனைத்துத் தமிழ் தொல்லியல் ஆவணங்கள் அனைத்தும் மைசூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கிறோம்.

அரபி மற்றும் பர்சியன் மொழிக் கல்வெட்டுகளின் அலுவலகம் நாக்பூரில் உள்ளது. 
சமஸ்கிருத மொழிக் கல்வெட்டுகள் அலுவலகம் லக்னோவில் உள்ளது. 
இந்தோ - ஆரிய மொழியான சமஸ்கிருதத்துக்கே தனிப்பிரிவு அலுவலகம்  இருக்கும்போது எண்ணிக்கையில் அதிகம் உள்ள தமிழ் மொழிக் கல்வெட்டு அலுவலகம் இல்லை. 
அதை திராவிட மொழிக் கல்வெட்டுகளுடன் ஏன் இணைத்து வைத்துள்ளீர்கள்?

தமிழ் மொழிக் கல்வெட்டுகளுக்கும் தனி அலுவலகம் வேண்டும். சென்னைப்பிரிவு - Epigraphy Branch Tamil என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். இங்கு தமிழ் மொழியின் அனைத்துத் தொல்லியல் ஆவணங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.  போதுமான கல்வெட்டியல் பிரிவு ஆய்வாளர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இதையே பேராசிரியர் இராஜவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் பரிந்துரை செய்கிறது.

மேற்கண்ட காரணங்கள்; மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் Article 51 - A Constitution of india 1949;  மற்றும் Article 49 /1949
மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி இந்த உத்தரவைப் பிறப்பிக்கிறோம். இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து 6 மாதக் காலத்திற்குள்..
"மைசூரில் இருக்கும் அனைத்துத் தமிழ் கல்வெட்டுகளின் மைப்படிகள் அனைத்தும் சென்னைக்கு மாற்றப்படவேண்டும்". அவ்வாறு மாற்றப்படுவதால் கீழ்க்கண்ட நன்மைகள் இருக்கும் என்று நீதிமன்றம் கருதுகிறது.  ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று மாணவர்களுக்கு சென்னையில் மைப்படி இருப்பதுதான் வசதி. மைசூரில் இருப்பது தூரம் மற்றும் செலவு. மைசூர் செல்லுதல், தங்குதல் என்று வீண் அலைச்சல் மற்றும் தேவையற்ற செலவும் ஏற்படுகிறது.

ஓய்வு பெற்ற முதுநிலை  தமிழகத் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைவரும் -  சென்னையில்தான் உள்ளனர். இவர்கள் ஆய்வு வசதியாக இருக்க சென்னைதான் பொருத்தமாக இருக்கும். 60 சதவீதம் தமிழ்க் கல்வெட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இப்பணியை மேற்கொள்வதற்கு சென்னைதான் சரியான இடம். தமிழகத்தில் உள்ள 50,000 கோவில்களில் உள்ள கல்வெட்டுகள் பல்வேறு காரணங்களால் சிதைவுற்றன. இவற்றில் உள்ள செய்திகளை அறிய மைப்படிகள்தான் ஒரே தரவு. இவை 1887 முதல் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தமிழ் கல்வெட்டுகள் என்பதால் இவை தமிழகத்தில்தான் இருக்கவேண்டும்.

ஆகவே...
சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவு தொடங்கவேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மைசூரில் உள்ள அனைத்துத் தமிழ் கல்வெட்டு மைப்படிகள் மற்றும் அனைத்துத் தமிழ் ஆவணங்களும் சென்னைக்கு இடமாற்றம் செய்யவேண்டும்.  இவை வெளியிடப்பட வேண்டும். போதுமான கல்வெட்டியல் ஆய்வாளர்கள் பணிநியமனம் செய்தல் வேண்டும்.  போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யவேண்டும்.  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டத் தேதியிலிருந்து 6 மாதக் காலத்திற்குள் இப்பணிகள் நிறைவு பெறவேண்டும்...

W.p.( md) no 20678 of 2019 and 17399 of 2020.
N.KIRUBAKARAN...J
and
M. DURAISAMY....J

தீர்ப்பின் நகல்: https://www.mhc.tn.gov.in/judis/index.php/casestatus/viewpdf/785328




----------------------------------------------------

தமிழகத்திற்கு மீளவிருக்கும் மைசூருவில் சிறைப்பட்டுள்ள தமிழ்க்  கல்வெட்டுக்கள் 

-- கௌதம சன்னா

மைசூருவில் சிறைப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுக்கள் முழுமையாக மீட்கப்படுமா..?

மைசூருவில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக சிறைப்பட்டுள்ள தமிழ்க் கல்வெட்டுப் படிகளை மீட்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் படி தற்போது கிடைத்தது.  வழக்கில் வெற்றி என்றாலும் ஆவணங்கள் முழுமையாக மீட்கப்படும் என்கிற நம்பிக்கை சிதைந்திருக்கிறது என்பதை வெளிப்படையாக சொல்லித்தான் ஆக வேண்டும்.

மாண்புமிகு நீதியரசர்கள் சிறப்பான தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியதாக இருந்தாலும் தீர்ப்பில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த தகவலை வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ அவர்கள் தமது  வாதத்தில் முன்வைத்தார். அதை நீதி மன்றம் வலியுறுத்தியுள்ளது.

அதன்படி 21.02.2018 அன்று தமிழ் கல்வெட்டுப்படிகள் 38,000 ம் என்று சுட்டிக்காட்டிய இந்தியத் தொல்லியல் துறை 21.12.2020 அன்று அதன் எண்ணிக்கை 28,276 என்றும் 14.02.2021 அன்று 28,860 என்றும் குறைத்துக் காட்டியுள்ளது. அதே காலக்கட்டத்தில் சமஸ்கிருதக் கல்வெட்டுப்படிகளை முதலில் 11,000 என்றும் பிறகு 17,001 என்றும் கடைசியாக 25,756 என்றும் உயர்த்திக் காட்டியுள்ளது.

எனவே தமிழ்க் கல்வெட்டுப்படிகள் சுமார் 9,140 காணவில்லை என்று தெரியவந்திருக்கிறது என்பது அம்பலமாகியிருக்கிறது. கல்வெட்டுக்களை மீட்கும் இந்த வழக்கு தொடுக்கப்படாமலிருந்தால் இந்த உண்மையும் வெளி வந்திருக்காது. மத்திய அரசின் இந்த பாராமுகத்தையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவர் முன்னுள்ள கடமை..

கல்வெட்டுப் படிகளை மீட்கும் முனைப்பில் தமிழக அரசு உறுதியாக இருப்பது மகிழ்ச்சியளித்தாலும், மறைக்கப்பட்டுள்ள மீதமுள்ள கல்வெட்டுப்படிகளை மீட்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.  குறிப்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்த பிரச்சினையைத் தேர்தல் வாக்குறுதியாக வைக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.


































-------------------------------------





No comments:

Post a Comment