Wednesday, September 22, 2021

வேட்டவலம் - பாக்கம்: கற்கால உலகத்தின் பொற்பாதை

– ச.பாலமுருகன்


பண்டைய காலத்தில் தொண்டை மண்டலமாக கருதப்படுகின்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகள் வரலாற்றுக்கும் தொல்லியலுக்கும் அளப்பறியச் சான்றுகளை அளித்துக்கொண்டே உள்ளது. சமணம், பௌத்தம், நடுகற்கள், பாறை ஓவியங்கள், குடைவரைகள், கோயில்கள், பெருங்கற்கால மற்றும் புதிய கற்காலத் தடங்கள் எனப் பட்டியல் நீளும். இவை அனைத்தும் ஒரே பகுதியில் காணவேண்டுமெனில் நாம் செஞ்சிக் குன்றுகளில் காணலாம். வேட்டவலம் பகுதியிலிருந்து ஆரம்பிக்கும் செஞ்சிக்குன்று வடகிழக்காகவும், தென்கிழக்காகவும் நீண்டு செல்கிறது. வடக்கே தேசூர்- வந்தவாசி வரையிலும் தெற்கே திண்டிவனம்- விழுப்புரம் வரையிலும் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் எத்தனை எத்தனை தொல்லியல் புதையல்கள். இந்த மலைத்தொடர்களைப் பார்ப்பதே ஒரு பரவச அனுபவம் தான். அப்படியொரு கொள்ளை அழகு.

செஞ்சி -வேட்டவலம் இடையே அமைந்துள்ள குன்றுகள் தொல்லியல் ஆர்வலர்களால் தேடப்படும் பகுதியாக மாறியதில் ஆச்சர்யம் இல்லை. அண்மையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் கால ஓவியம், பாக்கம் மலைப்பகுதியில் உள்ள கோட்டைச்சிதிலங்கள், புதிய கற்கால இடங்கள், செத்தவரை ஓவியங்கள், வேட்டவலம் ஓவியங்கள், கஞ்சூர் சமணப்படுக்கை ஆகியவற்றின் நடுவே அமைந்துள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தில் வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா ஓர் அற்புதமாக புதையலைக் கண்டுபிடித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வுநடுவத்தைச் சேர்ந்த மதன்மோகன், பழனிச்சாமி, ச.பாலமுருகன் ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்தோம். செத்தவரை ஓவியத்திற்கு சற்றேறக்குறைய இணையான இரண்டு ஓவியத் தொகுதிகள் அவரால் உலகத்திற்கு வெளிவந்துள்ளது. வாழ்த்துக்கள் பாரதிராஜா. 

pakkam.jpg
தொடரட்டும் தேடல்கள். அந்த ஓவியத்தைப் பற்றி....
வேட்டவலத்திற்கு வடகிழக்காக அமைந்துள்ள மலைப்பகுதியில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லான் பிள்ளை பெற்றாள் கிராமத்தின் நந்தன் கால்வாய் அருகே ஒரு பாறையில் இரண்டு பகுதிகளாக ஓவியங்கள் காணக்கிடைத்தன. இதில் பாறையின் உயரமான பகுதியில் உள்ள ஓவியத் தொகுதியில் மீன் அல்லது ஆமை போன்ற தோற்றம் கொண்ட செஞ்சாந்து நிறத்தில் சுமார் 3 அடி நீளமும் 2 அடி அகலமும் கொண்ட ஓர் ஓவியமும் அதன் அருகில் ஊர்வன போன்ற வடிவம் கொண்ட ஓவியம் சுமார் 2 அடி நீளமும் ஓர் அடி அகலமும் கொண்டுள்ளது. அதன் அருகில் சுமார்  1 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட சிறிய அளவிலான மீன் அல்லது ஆமை போன்ற வடிவம் கொண்ட மற்றொரு ஓவியமும் அமைந்துள்ளது. இந்தப் பாறையின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள ஓவியத் தொகுதியில் இரண்டு மனிதர்கள் உருவமும் வடிவியல் சார்ந்த குறியீடு கொண்ட ஓவியங்களும் உள்ளன. இந்த ஓவியங்கள் வெண்சாந்து நிறத்தில் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே உள்ள பாக்கம் கிராமத்திலும்  ஏரிக்கரையின் அருகில் உள்ள மற்றொரு பாறை ஒன்றில் மங்கலான நிறமுடைய வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டன, 

இவ்வோவியங்கள் குறித்து பாறை ஓவிய ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது, இங்கு இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன என்றும் முதலாவது பிரிவில் உள்ள ஓவியங்கள் வெண்சாந்து மற்றும் செஞ்சாந்து நிறங்கள் கலந்த ஓவியங்கள் உள்ளன என்றும் இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்ததாலாம் என்றும் இரண்டாவது தொகுதி ஓவியங்கள் வடிவியல் சார்ந்த குறியீடுகள் தனியாகவும் மனித உருவங்களும் சேர்ந்து  வரையப்பட்டுள்ளன. இதில் கோடுகள் மிகத் தெளிவாகவும் வலிமையாகவும் காட்டப்பட்டுள்ளது. சில குறியீடுகள்  கீழ்வாலை மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் உள்ள குறியீடுகள் போன்ற வடிவத்தை ஒத்துள்ளது. மேலும் இங்கு காட்டப்பட்டுள்ள மனித உருவங்களில் ஆண்குறி கட்டப்பட்டுள்ளது இதுபோன்று ஒரு சில இடங்களில் மட்டுமே காணக் கிடைக்கின்றது. அருகில் உள்ள பாக்கம் கிராம எல்லையில் உள்ள ஓவியங்கள் மங்கிய நிலையில் மனித உருவங்கள் மட்டும் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியங்கள்  பெருங்கற்கால ஓவியங்களாக கருதப்படுகின்ற ஓவியங்கள் போல உள்ளது எனக் கூறினார் , இதன் அருகில் உள்ள செத்தவரை , கீழ்வாலை போன்ற ஊர்களிலும் ஏற்கனவே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  தொடர்ச்சியாக இப்பகுதியில் பாறை ஓவியங்கள் கிடைத்து வருவது இதன் தொல்லியல் முக்கியத்துவத்தையும் அக்கால மனிதர்களின் கலை சிறப்பினையும் உணர்த்துகிறது. தமிழகத் தொல்லியல் துறை இந்த ஓவியத்தைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும். 

----





No comments:

Post a Comment