Tuesday, September 17, 2019

தோலுரித்த கலகத் திருமகன்


 ——    தேமொழி




ஏன் ஏன் என்ற வினாக்கள் 
அறியா வயதுடன் நிற்பதல்ல 
ஏன் அவர்கள் என்றும் அப்படி 
வறுமையில் உழல வேண்டும்?
ஏன் இவர்கள் என்றும் இப்படி 
உரிமையின்றி வாழ வேண்டும்?

எல்லாமும் கடவுளால் என்ற 
ஆன்மிக விளக்கம் உதவவில்லை 
செய்த பாவம், அவர்கள் விதி
என்ற விடையில் அடங்கவில்லை 
சமயம் வகுத்த சாத்திரங்கள் எனில் 
ஆராய முற்பட்டார் அந்த கலகக்காரர் 

ஆவலுடன் உரிக்கத் துவங்கினார் 
அந்த சமய வெங்காயத்தை 
அவர் அதன் தோலை உரிக்க உரிக்க 
கண்ணீர் வழிந்தது, பெரியாருக்கல்ல 
கடவுள் பெயரில் ஸ்மிருதிகள் எழுதி 
அடக்குமுறை செய்தோருக்கு 

உள்ளே ஒன்றுமில்லை என்பது உறுதியானது
ஒரு சிலரின் ஓங்கிய வாழ்விற்குப்
பல பலவீனர்கள் கொடுத்த விலை என்ற 
வஞ்சகர் திட்டம்  வெளியானது 
சூழ்ச்சிக்கார்களின் சூது புரிந்தது 
வெளியிட்டார் வெள்ளை அறிக்கையை 

கடவுள் இல்லை, இல்லை; 
கடவுள் இல்லவே இல்லை;
கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; 
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; 
கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி;
கடவுளை மற ! மனிதனை நினை ! 

அடங்கிக் கிடந்த ஆண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட பிரிவினருக்குப் 
போயின; போயின பதவிகள் 
அடங்கிக் கிடந்த பெண்கள் படித்ததால் 
ஆதிக்க மனம் கொண்ட ஆண்களுக்குப்
போயின; போயின  நிம்மதி 

அவர் சொல்வதைப் பின்பற்றச் 
சொன்னதில்லை பெரியார்
நானே சொன்னாலும் நம்பாதே 
என்றுதான் சிந்திக்கத் தூண்டினார்
மெய்ப்பொருள் காணச் சொன்னார் 
சூழ்ச்சியைத் தோலுரித்த கலகத் திருமகன் 

ஏன்..ஏன்..மீண்டும் மீண்டும் கேள்..கேள் கண்ணே
சிந்திப்பாய் சிந்திப்பாய் சிந்திப்பாய் பெண்ணே



தொடர்பு:  தேமொழி (jsthemozhi@gmail.com)


---

No comments:

Post a Comment