Monday, September 2, 2019

கோப்பெருஞ்சிங்கனின் அண்ணமங்கலம் கல்வெட்டு

  —   கோ.செங்குட்டுவன்



“சொக்கப் பல்லவன் வாய் சொல்லும் வன்னிய மணாளன்”

            நீண்டு வளர்ந்த பாறை. அதன் ஒரு முனையில், ஆண் யானையின் பிடரியைக் கவ்வி இருக்கிறது, ஒரு ஆண் சிங்கம். சிங்கத்தின் கண்கள் உருண்டு திரண்டு இருக்கிறது. அதன் ஒருபக்கப் புருவத்தின் மீதுதான் மேற்காணும் வாசகம் கல்வெட்டாக வெட்டப்பட்டு உள்ளது. இதன் காலம் கி.பி.13ஆம் நூற்றாண்டு!

            விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலத்தில் செங்காட்டுக் குன்று என்றும் ஆனைமலை என்றும் அழைக்கப்படும் மலையின் மீதுதான் மேற்காணும் சிற்பமும் கல்வெட்டும் காணப்படுகின்றன.

            யானை: மூன்றாம் ராஜராஜன். 
            அதன் பிடரியைக் கவ்வி நிற்கும் சிங்கம்: கோப்பெருஞ்சிங்கன்.

            ஆகா… அழகிய உவமை! அழகான சிற்பம்!

            மாபெரும் வரலாறு இங்கே அமைதியாகக் காட்சி அளிக்கிறது! பாண்டிய மன்னனிடம் தோற்ற சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜராஜன், குந்தள அரசனிடம் ஓடினான். தெள்ளாறு அருகே அவனை வழிமறித்த காடவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன், சோழ வேந்தனையும் அவன் படையினரையும் சிறைபிடித்தான் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள்.



            சிறைபிடிக்கப்பட்ட சோழ மன்னனும் அவனதுப் படை பரிவாரங்களும், சேந்தமங்கலம் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு அண்ணமங்கலம் மலைக் குகையில் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார் அண்ணமங்கலம் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியரும் செஞ்சிக் கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்றச் செயலாளருமான திரு.நா.முனுசாமி அவர்கள்.

            தன் சொந்த ஊரின் மீதும் அதன் வரலாற்றின் மீதும் இவருக்கு அவ்வளவு ஈடுபாடு: அக்கறை! வரலாற்றுத் தடயங்களைத் தேடி ஊருக்கு வரும் ஒவ்வொருவரையும் சளைக்காமல் மலைக்கு அழைத்துச் சென்று காண்பிக்கிறார், திரு.முனுசாமி.

            மலைமீது மட்டுமல்ல, நிலப்பரப்பிலும் ஏரியிலும் வரலாற்றுத் தடயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கிறது அண்ணமங்கலம்.

            நீங்களும் ஒரு முறை இங்குப் போய் வரலாம்!


குறிப்பு:
அண்ணமங்கலம்: செஞ்சியிலிருந்து வளத்தி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.
தலைமை ஆசிரியர் திரு.முனுசாமி அவர்களின் தொடர்பு எண்: 99949 43787


தொடர்பு: கோ. செங்குட்டுவன் (ko.senguttuvan@gmail.com)






No comments:

Post a Comment