Sunday, August 11, 2019

அத்திவரதர்


—  ருத்ரா இ.பரமசிவன்


ஆகா!
மனம் குளிரக்கண்டேன்
அவன் தோற்றம்.
நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும்.
தொண்ணூறு டிகிரி கிடைக்கோடும்
தொண்ணூறு டிகிரி நெடுங்கோடும்
காட்டிய ஜியாமெட்ரியில்
கை வழியே நெய் வழியும் 
தேனமுதத் தோற்றமாய் கண்டேன்.
ஆழ்வார்கள் எனும்
மனத்தினுள் ஆழ்வார்கள்.
ஆழ்ந்து அகழ்ந்து முத்தெடுத்து
திருவாய் மொழியைக் கடல் ஆக்கினார்கள்.
அடியேன் வெறும் சிற்றெறும்பு
அத்தேன் கடல் அள்ளிப்பருகிட இயலுமோ?
தோற்றம் என்றாலும் அழகன்.
தோற்றம் இல்லை என்றாலும் அழகன்.
கூட்டத்துள் ஊர்ந்து செல்ல இயலவில்லை.
தனி முத்திரையோடும்செல்ல வழியில்லை.
கண்டவர்களைக் கண்டேன்.
விண்டவர்களை வியந்தேன்.
அத்திவரதா! ஆட்கொள் அய்யா!
என்று 
ஈனக்குரல் எழுப்பினேன்.
இடியொன்று முழங்கியது.
அத்திவரதன் பேசுகிறேன்.
என் தரிசனத்தில் உன் ஏக்கம் தீர்ந்தது.
உன் தரிசனத்தில்
என் ஏக்கம் எப்போது தீரும்?
அந்தப்பல்லியும் 
அந்தப் பூச்சியும் 
அந்தப் பூவும் புல்லும்
அந்த நோயும் 
அந்த நோய் தருகின்ற 
நுண்ணுயிரியும்
எல்லாம் ஒன்று தான்.

கோடி மக்களின் உயிர்
ஒரே கோட்டில் தான்
எல்லாம் ஒன்று தான்
என்று சொன்ன மனிதனின்
"சொல்லின்" தரிசனம்
கன பரிமாணமாய்
என் முன் எப்போது வந்து நிற்கும்?
என் ஏக்கம் 
எப்போது தீர்ப்பாய்?
மனிதா! உரை!




தொடர்பு: ருத்ரா இ.பரமசிவன் (ruthraasivan@gmail.com)

No comments:

Post a Comment