Wednesday, January 13, 2021

அதுவொரு காலம்! பொங்கும் பொங்கல் நினைவுகள்

 -- இரா.நாறும்பூநாதன்


மேல பஜார் தெய்வு அண்ணன் கடையில் தான் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் கிடைக்கும். ஆனால் கடையில் நின்று கொண்டு சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அவருக்கு பழியாய்க்கோபம் வரும்.

"இங்கன பாரு..சும்மால்லாம் வேடிக்கை பாக்கதுக்கா அடுக்கி வச்சுருக்கோம்..வாங்க வர்றவங்களை மறிச்சுக்கிட்டு நின்னா எப்படிடே..ஒரு ஓரமா நின்னு பாருங்கன்னு சொல்லியாச்சு..கேப்பனான்கியோ.."  

தெய்வு அண்ணன் வார்த்தைகள் எல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு. டிசம்பர் மாசம் கிருஸ்துமஸ் தொடங்கும் முன்பே வாழ்த்து அட்டைகள் வாங்கி கடையைச் சற்றே முன்பக்கம் நீட்டி விட்டு, பார்க்கும் வசத்தில் அடுக்கி வைத்திருப்பார்.

ஏசுநாதர் மாட்டுத் தொழுவத்தில் படுத்திருப்பது..மூன்று ஸ்டார்கள்..மரியம்மை, வெறும் சிலுவை..ஏசுநாதர் நெஞ்சைத் திறந்து காட்டுவது போல..
இவை ஒருபக்கம் இருக்கும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள் அட்டைகள் இன்னொரு பக்கம்..
தகதகக்கும் சூரியன் ..நேதாஜி,நேரு படங்கள் தாங்கிய அட்டைகள்..
பொங்கல் வாழ்த்து அட்டைகள் தாம் நிறைய. பொங்கப்பானை, கரும்பு,ஜோடி காளை மாடுகள்..மஞ்சள் குலை..
ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் காளையர்கள்..கோலம் போடும் அம்மாக்கள்..
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி பொங்கல் வாழ்த்து சொல்லும் படங்களும் உண்டு. சிவாஜி, பத்மினி படங்கள்...

பக்கத்துக்கு வீட்டு ஹிந்தி பண்டிட் சார் வந்தால் அஞ்சு நிமிசத்தில் பத்து போஸ்ட் கார்டுகளை மாத்திரம் வாங்கி விட்டுப் போய் விடுவார். ஒரு கார்டு பத்து பைசா மேனிக்கு ஒரு ரூபாயில் வேலையை முடித்துக் கொண்டு செல்வார். அந்தப் பத்து கார்டுகளைக்கூட கடைக்காரரையே தேர்வு செய்யச் சொல்வார். தெய்வு அண்ணன் ஒரே மாதிரி கார்டுகளை எடுத்துத் தருவார். " பத்தும் பத்து வெவ்வேறு ஆட்களுக்குத்தானே போகுது..அதனாலே என்ன.." என்பார்.

நான் எம்.ஜி.ஆர்.படங்களைத் தேர்வு செய்து வைத்திருப்பேன். விலை எல்லாம் கூட கேட்டு விடுவேன். மறுநாள் வந்து பார்த்தால், அவை இருக்காது. " குடியிருந்த கோவில்", " தனிப்பிறவி" படங்கள் அதிகமாக இருக்கும்.

வீட்டில் அண்ணன்மார்கள் எல்லோரும் போஸ்ட் கார்டுகளில் இந்தியன் இங்க் கருப்பு மையால் அழகாய் பொங்கல் பானை,கரும்பு வரைந்து பெரியப்பா பையன்கள்,மாமா பையன்கள் எல்லோருக்கும் அனுப்பி விடுவார்கள். ஆறு பைசா கார்டு விலையோடு முடிந்து விடும். சுய படைப்பு வேற...ஒன்பதாம் வகுப்புக்குப் பிறகு தான், அதே மாதிரி படம் வரைஞ்சு அனுப்புற பழக்கம் எனக்கு வந்தது.

ஒரு பக்கம் படமாய் இல்லாமல், விரித்துப் பார்த்தால், உள்ளே 9 எம்.ஜி.ஆர்.சிரித்தபடி வெளியே வரும் படியாய் ஒரு வாழ்த்து அட்டை உண்டு. அதில் படகோட்டி எம்.ஜி.ஆர்.நாடோடி மன்னன் எம்.ஜி.ஆர்.விவசாயி எம்.ஜி.ஆர். என பல்வேறு படங்களின் தோற்றங்கள் பலவண்ணத்தில் இருக்கும். அதெல்லாம் பயங்கர விலை அப்போது..(ஒரு ரூபாய் பத்து பைசா ).

பள்ளி ஓவிய ஆசிரியர் ஈஸ்வரன் சார் வந்தால் மாத்திரம், பார்த்துப் பார்த்து வாங்குவார். பெரும்பாலும் ஓவியர் மாதவன் வரைந்த படங்களாக இருக்கும்.(மாதவன் என்ற பெயரை அவரே முதன்முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ) அவற்றில் இருக்கும் நுட்பங்களைப் பார்த்துப் பார்த்து ரசிப்பார்.

5.jpeg

2.jpeg

1.jpeg

3.jpeg

6.jpeg

4.jpeg

7.jpeg

வாழ்த்து அட்டைகளைத் தொட்டுத் தொட்டுப் பார்த்ததினால், அதில் உள்ள ஜிகினா தூள்கள் கைகளில் ஒட்டிக் கொள்ளும். பொங்கலையொட்டி சைக்கிளில் வரும் போஸ்ட்மேனிடம் " எங்களுக்கு பொங்கல் வாழ்த்து இருக்கா..?"  என்று கேட்டபடி பின்னாலேயே செல்வதுண்டு. 

கோவையிலிருந்து சிவானந்தம் அண்ணன் அனுப்புவார். வாகைக்குளத்தில் இருந்து திருமலை அத்தான் சமயங்களில். திருவெண்காட்டில் இருந்து திருநாவுக்கரசு அண்ணன்..நெய்யூரில் இருந்து போஸ் அத்தான்..அப்பாவின் நண்பர்கள் சிலர். இப்படியாய் வாழ்த்து அட்டைகள் நமக்கு மகிழ்ச்சியைச் சுமந்து வரும்.

greetings.jpeg

குறுஞ்செய்தி,வாட்ஸ்அப் வாழ்த்துக்கள் வந்து விட்டன இப்போது.
இப்போதும் வாழ்த்து அட்டைகள் அனுப்பலாம்..யார் வேண்டாம் என்று சொன்னது ?


வீட்டிற்கு வெள்ளையடிக்க எப்போதும் முருகேசன் அண்ணாச்சி தான் வருவார். அவருக்கு வயசு அம்பதுக்கு மேல் என்றாலும் எங்களுக்கு அண்ணாச்சி தான். வீட்டில் உள்ள சாமான்களை அவரே ஒதுங்க வச்சு வெள்ளை அடிச்ச்சபிறகு அவரே அதது இருந்த இடத்தில வச்சு விடுவார். நாம கூடமாட ஒத்தாசைக்கு இருந்தால் போதும். 

வீடு வெள்ளை அடிக்கும்போது,  சுவரில் மாட்டி இருக்கும்  பிரேம் போட்ட படங்களை எல்லாம் கழட்டி தூசி துடைச்சு ஈரத்துணியால் இன்னொரு முறை அழுத்தி துடைத்து மாட்ட வேண்டியது என்னுடைய வேலை. வெள்ளை அடிக்கும்போது தான் ஆறு மாசத்திற்கு முன்னால தொலைச்ச பொருட்கள் எல்லாம் கிடைக்கும். 

வீட்டில் இருக்கும் எல்லா சேலைத்துணிகளையும் அம்மை மூட்டை கட்டி வைத்து விடுவாள். அதுவே அம்பாரி மாதிரி குமிஞ்சு கிடக்கும். அதிலே ஒய்யாரமாய் படுத்துக் கொண்டு படங்களை துடைப்பதுண்டு.  தொலைஞ்ச தீப்பெட்டி படங்கள், கோலிக்குண்டுகள், கலர் குச்சிகள், என சிலவற்றை தேடி எடுத்துத் தருவாள் அக்கா. ஒரு புதையல் கிடைத்த சந்தோசத்தோடு அவற்றை தடவிப் பார்க்க சொல்லும். 

" ராசா..கொஞ்சம் நகந்துக்கிறீகளா.." என்று முருகேசன் அண்ணாச்சி பட்டாசாலை வந்து சத்தம் கொடுப்பார். சுண்ணாம்பு கொதிப்பதை பார்த்துக் கொண்டிருந்தால், " உனக்கு அங்கன என்ன வேல..கையில பட்டு பொத்துப் போகப்போகுது.."  என்று அப்பா வாசலில் நின்று குரல் கொடுப்பார். 

பொங்கலுக்கு முதல் நாள் காவிப் பட்டை அடிக்க, முருகேசன் அண்ணாச்சியிடம்  இருப்பதில் பரவாயில்லாமல் இருக்கும் மட்டையை வாங்கி வைப்பேன். காவிப்பவுடரை தண்ணியில் கரைச்சு வெள்ளையடித்திருக்கும் படிச்சுவர்களில் முதல் நாள் இரவு கோலாகலமாக அடிக்கும் கொண்டாட்டங்கள். பிசிறின்றி அடிப்பது பெரிய கலை தான். சொட்டுப் போடாமலும் இருக்க வேண்டும். ரொம்பத் தண்ணியாய் கரைசல் இருந்தாலும் காவிப்பட்டை பளிச்சென்று இருக்காது. 

white washed wall.jpeg

மார்கழிக்குப்போடும் கோலத்திற்கு சற்றும் குறைவின்றி,  பொங்கல் திருநாளுக்கு பெரிய கோலமாய் போடும் முயற்சியில் அம்மை ஈடுபட்டிருப்பாள். அப்போது ரங்கோலி எல்லாம் கிடையாது. கோலப்பொடி கோலம் தான்.   சிறுவீட்டுப் பொங்கல் இடுவதற்கு வீட்டின் கிழக்கு முனையில், களிமண் வைத்து சின்னதாக வீடு அமைக்கப்பட்டிருக்கும். அதில் சமையலறை, பட்டாசாலை, தார்சா, படுக்கையறை எல்லாம் இருக்கும். அதில் சிறுபருப்பு பாயாசம் வைத்துக் கும்பிடுவோம். 

வெள்ளையடித்து முடித்தவுடன், வீட்டு உரிமையாளர் திருமேனி செட்டியாரின் மருமகன் வந்து வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு " முருகேசன் ஒழுங்காதான் அடிச்சுருக்கான்..வீட்டை உங்க வீடு மாதிரி பாத்துக்கோங்க.." என்று சொல்லி விட்டுப் போவார்.  எதிர்வீட்டின் வாசலில் குத்த வைத்திருக்கும் முருகேசன் அண்ணாச்சி அவசர அவசரமாய் தனது சொக்கலால் பீடியை அணைத்தபடி எழுந்து அவருக்கு வணக்கம் சொல்லுவதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.



No comments:

Post a Comment