Saturday, January 9, 2021

திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும்

திருவாசக மொழிபெயர்ப்பு - பணிவும் துணிவும் 


-- முனைவர்.  ஒளவை அருள்



இன்றோடு 120 ஆண்டுகளுக்கு முன்னர் தமது எண்பதாம் வயதில் திருவாசக ஆங்கில மொழியாக்கத்தை அருட்தந்தை டாக்டர் ஜி யு போப் பெருமகனார் வெளியிட்டார். திருவாசக மொழியாக்கத்தை ஆங்கிலம் தெரிந்த மக்கள் அனைவரும் தலை மேல் வைத்துப் பாராட்டினார்கள் .

ஆங்கில மொழிபெயர்ப்பைத் திருவாசகத்துக்கும் - திருக்குறளுக்கும் - நாலடியாருக்கும் - புறப்பொருள் வெண்பாமாலையில் 59 பாடல்களும் 71 புறநாநூற்றுப் பாடல்களையும் மொழிபெயர்த்து தமிழின் இனிமையில் திளைத்தார்.  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற தொடர் பணி டாக்டர் ஜி யு போப் அடிகளாரின் மொழிபெயர்ப்பாகும்.  அனைத்து உலகத்தமிழ் மாநாடுகளிலும் அதுவே குறிக்கோள் மொழியாக  எங்கும் பரவியது.  

" திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் "  என்ற முதுமொழிக்கு இலக்கணமாக ஜி யு போப் அவர்கள் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் திருவாசகத்தை என் இதழ்கள் முணுமுணுத்ததால் சிந்திய கண்ணீரால் எழுத்துக்கள் சிதைந்துள்ளன.  கண்ணீரால் புனிதம் பெற்ற அந்த எழுத்துக்களை அப்படியே விட்டுவிட்டேன்.  "துளும்பு கண்ணீரில் மூழ்கி அழுது அடியடைந்த அன்பர் "  என்றே மணிவாசகரைக் குறிப்பிடுவார்கள்.

திருவாசக மொழியாக்கத்துக்கு எல்லோரும் போற்றிய நிலையில் மொழிபெயர்ப்பில் சமய மரபிலிருந்து பல இடங்களில் டாக்டர் ஜி யு போப் பிறழ்ந்து பொருள் கொண்டார்.   தாமே சில கருத்துக்களை வலிந்தும் குறிப்பிட்டுள்ளார்.  மார்கழியில் போற்றிப்பாடும் திருவெம்பாவையில் சில பாடல்கள் மணிவாசகர் நடையில் இல்லை என்பது போன்ற கருத்தையும் எழுதினார்.   1958 ஆம் ஆண்டில் திருவாசகமணி கே எம் பாலசுப்பிரமணியம் அவர்களின் மொழிபெயர்ப்பு வெளிவந்தது.  ஆங்கிலத்திலும் தமிழிலும் ஈடு செய்ய முடியாத புலமை பெற்ற திருவாசகமணியின் நடையை " வெள்ளிநாப் புலவர் " என்று உலகோரால் பாராட்டப்பெற்ற சீனிவாச சாஸ்திரியார் பாராட்டிய ஆங்கில நடை அது .

திருவாசகமணி தன் முன்னுரையில் போப் அடிகளாரிடத்தில் கொண்ட பணிவையும் பொருந்தாத இடத்தில்  கொண்டு மறுக்கும் துணிவையும் பெற்றுள்ளார்.   மார்கழித் திங்களில் திருவாசகமணியின் முன்னுரையில் மொழிபெயர்க்க முயன்ற சிறு பகுதியே இக் கட்டுரையாயிற்று. "ஒரு பதிற்றாண்டுகளுக்கு முன்னர், 1948 ஆம் ஆண்டில், பாசத்திற்குரிய என் மாமனார் டாக்டர். எஸ். குமாரசாமி எனக்குப் பெருந்தகை டாக்டர்.ஜி .யு . போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திருவாசக நூலையும் எய்லருடைய தொழுகை பற்றிய நூல் ஒன்றையும் பரிசளித்த அந்த நன்னாள் எனது எளிய வாழ்வில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய திருநாள் ஆகும்.

டாக்டர் ஜி.யு. போப் பற்றி மற்றொரு மருத்துவ டாக்டரால் தற்செயலாக அறிமுகம் ஏற்படாமல் போயிருக்குமானால், திருவாசகத்தின் மொழிபெயர்ப்பாளராக நான்  மாறியிருக்கக் கூடிய இந்நிகழ்வு இயலக்கூடிய ஒன்றா என்று பெருமதிப்புடன் அயர்ந்து வியக்கிறேன். ஆகவே, இத்தகைய உயரிய விளைவினை நல்கிய வித்தாக அமைந்த அந்தப் பெறலரும் பரிசினை வழங்கியமைக்காக மிகச்சிறந்ததும் மாட்சிமை மிக்கதுமான உள்ளொளி கொண்ட டாக்டர். எஸ். கே. அவர்களுக்கு மிகுந்த நன்றியுணர்வினை முதலில் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

குறிப்பாக, ஆன்மிகத் தொடர்பற்ற எனது தொடக்கக் கால அரசியல் பயணங்களுக்கு இடையே, எனது மூதாதையர் காத்துவந்த மரபுப் பண்பு காரணமாகவோ, முன்வினைப் பயனாகவோ, திருவாசகத்துடன் என்றென்றைக்கும் இமைப்பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காத உறவாகப் பிணைக்கப்பட்டு விட்டேன்.   தமிழ்மொழியின் ஆன்மீக கருவூலமாகத் திகழும் அரும்பெரும் நூலுக்கு எனது எளிய ஆன்மாவை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டமையை மேலும் புனிதப்படுத்தும் வகையில் 1948 ஆம் ஆண்டிலேயே அந்நூலில் அடங்கப் பெற்ற ஐம்பத்தொரு பதிகங்களையும் முற்றாக மனதில் எழுத்து மாறாமல் மனத்தில் நிறுத்துகின்ற கடப்பாட்டினை மேற்கொண்டேன். 

நாயன்மார்களுள் ஒருவரான மாணிக்கவாசகரின்பால்  எனக்கு ஏற்பட்ட அளவிடற்கரிய பக்திமைப் பெருக்கு முதலில் மாணிக்கவாசக மாலை என்ற தமிழ்ப் பாமாலையாக முகிழ்த்தது; மணிவாசகரையும் திருவாசக அருள்மொழிகளையும் போற்றிப் பரவுகின்ற நூறு பாடல்களின் தொகுப்பு.  நினைவில் என்றென்றும் நிற்பவரும் தமிழினத்தின் அருள்நெறித் தலைவருமான திரு. வி. கலியாணசுந்தரனார் எளிய எனது நூலுக்கு அணிந்துரை வழங்கிய போக்கில் என்னை முதன்முதலாகத் திருவாசகம் பாலசுப்பிரமணியம் என்று அழைத்தார்.  இந்தப் புதிய அடைமொழி நண்பர்கள் நடுவே நின்று நிலவியது. 

அதன் பின்னர், 1949 ஆம் ஆண்டில்,வைத்தீசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கின் போது அப்போதைய தருமபுர ஆதீனத்தின் திருப்பெரும் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிஞர் மணவாள இராமானுசர் முன்னிலையில் திருவாசகமணி என்ற பட்டத்தையும் அடைமொழி பொறித்த ஆடகப் பதக்கத்தையும் வழங்கினார்.  

தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல, என் ஆன்மாவின் இத்தகைய உளவியல் கனிவு உருவான நிலையில், டாக்டர். போப்பினுடைய திருவாசக மொழிபெயர்ப்பு நூலைத் தற்செயலாக எதிர்கொண்டேன்.  புதியதும் ஆர்வமிகுதியை ஊட்டியதுமான அந்நூல் ஆன்மாவை ஆரப் பற்றி அதன் முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரை எழுத்தெண்ணித் துருவி ஆய்கின்ற இனிமையான பணியில் முழுமையாக ஆழ்த்தியது என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. அந்நூலைப் படித்து முடித்த போது எல்லையில்லாப் பேரின்பத்தில் ஆழ்ந்ததுடன் மிகுந்த துயரம் மீதூர்ந்ததுமான கலவை உணர்வுகளுடன் அதனைக் கீழே வைத்தோம். 

ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னரேயே, கி.பி.1900 - ஆம் ஆண்டிலேயே நாம் கண்டு பொறாமைப்படத் தக்க வகையில் ஓர் அரும்பெரும் பணியினை ஆங்கிலேயச் சமயத்துறவி ஆற்றியுள்ளார் என்பதால் என் உள்ளத்தில் மட்டற்ற மகிழ்ச்சி ஊற்றெடுத்து கண்கள் கசிந்து கண்ணீர் பெருகச் செய்தது. ஆனால், அதே அளவில் வேதனையும் துயரமும் நெஞ்சைப் பிசைந்தன. மொழிபெயர்ப்பாளர் சைவ சமய குரவரின் பால் மிகுந்த பற்றுணர்வும் அளவிடற்கரிய உயர் மதிப்பும் கொண்டிருந்த போதிலும் தனது குறிப்புரைகளில் விரும்பத்தகாத செய்திகள் பலவற்றைத் தருவித்திருந்தார்.  உடனே, அதற்கான திருத்தங்களைப் பதிவிட்டாக வேண்டும் என்ற பேராவலும் தவிப்பும் என்னை ஆட்கொண்டன. 

பதிவிடப்பட்ட கறைகளை அழித்தொழித்து, உரிய விளக்கமளித்து, நமது சமய  குரவர் பற்றிய இறுதி முடிவானது என்பதை நிலைநிறுத்தும் வரை நம் வழிபாடே மனம் அமைதியடையாது. அப்படியொரு உறுதிப்பாடு தான் அந்நூலைப் படித்து முடித்தவுடன் எனக்குள் ஏற்பட்ட விளைவாக அமைந்தது.  அத்துடன் முடிந்தபாடில்லை. திருவாசகத்தை ஆங்கில மொழியாக்கம் செய்கின்ற புனிதமானதும் இடர்ப்பாடுகள் மிக்கதுமான அரும்பணியில் ஆங்கிலேயக் கிறித்தவப் பாதிரியார் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் மொழியிலேயே கூடத் திருவாசகத்திற்குத் தக்க முறையிலான உரை இருந்ததில்லை. அவருக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு பழைய நூல்; அதுவும் அவர் குறிப்பிட்டுள்ளதைப் போல, பொருட்பாடான பயனை அளிக்கவில்லை. எவ்வித உதவியுமின்றி, எவருடைய ஆற்றுப்படுத்தலுமின்றி, தமிழ் மறையாம் திருவாசகத்திற்கும் தமிழ் நாட்டிற்கும் அந்நியமான புறச்சூழமைவில் போப்பெருந்தகை அப்பணியில் உழன்றுள்ளார். 

ஆகவே, என்னதான் தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஈடிணையற்றதும் மதிப்பிடற் கொண்ணாததுமான தொண்டினை ஆற்றியிருந்த போதிலும், தனது மொழிபெயர்ப்பில் பல இடங்களில் தடுமாறியுள்ளார்; தடுக்கி விழுந்துள்ளார்; சொற்களுக்கும், சொற்றொடர்களுக்கும், மறைபொருளான சுட்டுகளுக்கும் தெளிவற்ற பொருள் கொண்டு தவறான பொருள்விளக்கம் கண்டுள்ளார்.  இந்நிலை எனது தனிப்பட்ட மொழிபெயர்ப்பில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற உறுதிப்பாட்டை  எய்தியமைக்கு மற்றுமொரு நோக்கமாக அமைந்தது. இதன் வாயிலாகத் தனது வாழ்க்கையில் பெரும் பகுதியைத் தமிழுக்குத் தொண்டாற்றுவதிலேயே நீண்ட காலம் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட ஒப்புயர்வற்ற கிறித்தவ முனிவரின் அரும்பணியை நன்றியுணர்வின்றிக் குறைத்து மதிப்பிட்டதாக என்றும் கருதிவிடலாகாது. அது மட்டுமன்றி, அப்படியொரு அளவுகடந்த உரிமையை கைக்கொள்ளக் கூடுமானால், அவருடைய ஆன்மாவுடன் நம்முடையதை அடையாளம் காணும் உயிர்க்கலப்புக் கொள்ளும் அளவிற்கு அவரைப் போற்றவும் மதிக்கவும் செய்கிறோம். 

எனது நூலான மாணிக்கவாசக மாலையில் மாண்பிற்குரிய அருட்தொண்டர்கள் பட்டியலில் இடம்பெற்ற அருளாளர்களுடன் டாக்டர் போப் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற உண்மையும் அவ்வெளிய நூல் பாசத்துடனும், பெருமதிப்புடனும், நன்றியுணர்வுடனும் டாக்டர் போப் அவர்களுக்குப் படைக்கப்பட்டுள்ளது என்பதும் அவர் தெய்வீகச் சான்றோர் என்பதைக் காட்டிலும் சான்றோருள் தெய்வீகத் தன்மை வாய்க்கப் பெற்றவர் என்று நான் அவரைக் கருதுவதற்கான சான்றுகள். ஆயினும், டாக்டர் போப் என் நெஞ்சுக்கு நெருக்கமானவர் எனினும் பேருண்மை என்பது அவரினும் பெரிதும் போற்றிக் காக்கப்பட வேண்டியது என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

எனவே, திருவாசகம் பற்றிய எண்ணற்ற விரிவுரைகளும் விளக்கவுரைகளும் அடங்கிய பல்வேறு வகைப்பட்ட நூல்களையும் பெரிதும் உறுதுணையாக நிற்கின்ற புறச்சூழல்களையும் கொண்டும், அனைத்திற்கும் மேலாக, இறையாற்றலின் தெளிவானதும் கண்ணுக்குப் புலப்படக் கூடியதுமான மாற்றமிலா அருளாசிகளாலும் திருவாசகத்தின் எனது ஆங்கில மொழியாக்கத்தை வெளிக் கொணர்ந்துள்ளேன் .

 இந்த மொழியாக்க நூல்  முழுநிறைவானது எனக் கருதுவது எனது நோக்கமல்ல. புனித போப் அவர்களுடைய முந்தைய ஆக்கத்தைக் காட்டிலும் ஓரளவேனும் செம்மைப் படுத்தப்பட்டது, மேம்படுத்தப்பட்டது என்று மட்டிலுமே சொல்லக்கூடும் !


முனைவர்.  ஒளவை அருள்
மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர் 
தமிழ்நாடு அரசு 
நன்றி: தினமணி





No comments:

Post a Comment