Tuesday, January 5, 2021

வரலாற்று பேராசான் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்

வரலாற்று பேராசான் தி.வை. சதாசிவ பண்டாரத்தார்


 - மா.மாரிராஜன்


ஜனவரி - 2 தி.வை. சதாசிவ பண்டாரத்தாரின்  நினைவு தினம். கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது 68 ஆவது வயதில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். ஆரம்பக்காலத்தில் தமிழாசிரியராகத் தன் பணியைத் துவங்கினார். அதன் பிறகு மிகச்சிறந்த கல்வெட்டு அறிஞராக அவதாரமெடுத்தார்.

அது ஒரு காலம். தல புராணங்களும், செவிவழிச் செய்திகளுமே வரலாறாக வலம் வந்த காலம். இருக்கின்ற ஒரு சில ஆய்வு நூல்களும் ஆங்கிலத்தில்தான் இருந்தன. இந்த சூழ்நிலையில்தான் பண்டாரத்தார் நேரடியான கல்வெட்டுச் சான்றுகள் மூலம் வரலாற்றை வெளியிட்டார்.. கால்நடையாகவும், மாட்டுவண்டியிலும், பல கி.மீ. தூரம் சென்று கோவில்களில் உள்ள கல்வெட்டுகளை நேரடியாக ஆய்வு செய்து வரலாற்றுக் கட்டுரைகளை எழுதினார்.

செந்தமிழ், தமிழ்ப்பொழில், போன்ற இதழ்களில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன. இன்றைய ஒடிசா மாநிலம் மகேந்திரகிரி குன்றுப்பகுதியில் உள்ள இராஜேந்திரச்சோழனின் கல்வெட்டை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்பொழில் நூலில் வெளியிட்டார் (தமிழ்ப்பொழில்  இதழ் 33..பக் 131).


வெளிமாநிலங்களில் இருக்கும் கல்வெட்டையும் தனது ஆய்வுக்கு எடுத்தார்.
1930 ஆம் ஆண்டு இவரது முதல் நூலாக குலோத்துங்கச் சோழன் என்னும் நூல் வெளிவந்தது.
1940 ஆம் ஆண்டு இவர் எழுதிய பாண்டியர் வரலாறு என்னும் நூல் வெளிவந்தது.
1949 ஆம் ஆண்டு இவர் எழுதிய பிற்காலச் சோழர் சரித்திரம் என்னும் நூல் வரலாற்று உலகில் பெரும் ஆவணமாகப் பதிவானது.
இன்றளவும் இந்நூல்தான் வரலாற்று ஆர்வலர்களுக்கு ஆரம்பக் கல்வியாக அமைகிறது.

தமிழக வரலாற்று உலகில் தனி முத்திரை பதித்த கல்வெட்டியல் அறிஞர் சதாசிவ பண்டாரத்தாரின் நினைவுகளைப் போற்றுவோம்.


நன்றி:
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
தமிழ் வழி இணையக்கல்விக் கழகம் - https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0000459_முதற்_குலோத்துங்கசோழன்.pdf

No comments:

Post a Comment