Monday, February 19, 2018

உனகோடி கைலாசகர் சைவத்தலத்தின் பண்டைய பெருஞ்சிற்பங்கள்


——   நூ.த.லோக சுந்தரம்.


கிழக்கு ​இந்தியாவின் ஓர் மாநிலமான​ ​​​'தி​ரிபுரா​'​​ ​வில், ​ ​ 11 நூற்றாண்டு ​'​ பால​'​* மன்னர்  பரம்பரை​யின் பண்டைய பெருஞ்சிற்ப இறை உருவங்களை  "உனகோடி" மாவட்டத்து கைலாசகர் சைவத்தலத்தில் காணலாம். மாமல்லபுரம் அருச்சுனன்​ த​ப​​​சு ​எனும் ​பெரும்பாறைமுகப்பு பொளிப்பு (bas-relief) ​ களுக்கு ​இணையான பெரிய அளவினதாகவும் வனப்புடனும்  காணப்படுகின்றன.




உனகோடி என்றால் கோடிக்கு ஒன்று குறைவு என்பது பொருள். பார்வதி ஓரிரவில் கோடி சிலைகளைப் படைக்குமாறு 'குல்லு கம்ஹார்' என்ற சிற்பிக்கு ஆணையிடுகிறார்.  ஆனால் எவ்வளவு முயன்றும் சிற்பியால் அக்கட்டளையை நிறைவேற்றமுடியாமல் கோடிக்கு ஒரு சிற்பம் குறைவாகவே உருவாக்கப்பட்டதால் இச்சிற்பத் தொகுதி உனகோடி என்று (வங்காள மொழியில்) அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

பாறையில் செதுக்கப்பட்ட புடைப்பு சிற்பங்களும், கல் சிற்பங்களும் மிகப் பெரியன. சுமார் 30 அடியைவிட உயரமான, ​நெற்றிக்கண் உடைய சிவனின் தலையின் மீது உள்ள சடைமுடி மட்டுமே பத்தடி  உயரம் கொண்டது. தலையின்  இரு பக்கங்களிலும் தேவியர் சிலைகள் உள்ளன.   சிங்கத்தின் மேல் அமர்ந்த துர்க்கை அவர்களில் ஒருவர். 





தாழும் அருவிகளின் கீழேதான் சடைமுடியுடன் கூடிய சிவனை, ​சீரிய கலை உணர்வுடன் ​பொ​ளித்திருக்க வேண்டும்.  ஆனால், இந்நாளில் அருவி சிறிதே விலகி பக்கத்தில் ஓடுகின்றது. 






எதிரில்  அரைப்பகுதி தரையில் புதைந்துள்ள நந்தி சிலையும் உள்ளது. விநாயகர், மாறன்கணை,​ ​கங்கை தாங்கிய சடைமு​டி, திரிபுரம் எய்த​ சிவ​ன்,  காளி எனவும்  இவை யாவும் புராணங்களை விளக்குபவை.  ஆதலால், இச் சிலைகளின் தொகுப்பு அப்பகுதியில் ​ சைவ-காளி  வழிபாடு இருந்தமையைக் காட்டுகிறது.  ​

இந்த மிக அரிய  தொல்லியல் கல் சிற்ப வளாகம்  இந்தியத்தொல்லியல் துறையினால் பராமரிக்கப்பட்டாலும் விளம்பரப்படுத்தப்படாமல் உள்ளது.  இந்திய பெருநாட்டில் போக்குவரத்து  மிக மிகக் குன்றிய ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளதும் ஓர் இடர்பாடு தான்.  மேலும்,  UNESCO பட்டியலின் கீழ் தொல்லியல் வளாகத்தைக் கொணர்ந்தாலும் சுற்றுலாத்துறை வளரலாம்.

 

குறிப்பு:
*பால (= பால்) எனும் சொல்லிற்கு காப்பாற்றுபவன்/இறைவன்,  அதாவது ஓர் மன்னன் தலைவனின் கடமை/தொழில்  தனது  நாட்டுக் குடிகளை ஓம்புதல் ஆகும்  (காட்டாக: கோ'பால்' = கறவை மாடுகளை ஓம்புகின்றவன், தன'பால்' = செல்வத்தினை காப்பாற்றுகின்றவன், தரம் 'பால்' = அறத்தைப் பேணுபவன் , மகி 'பால்'  ' = பெண்களைப் போற்றுபவன் என அறியப்படும்). இன்றும் பால் எனும் குடும்பப் பெயர்/பட்டப்பெயர் கொண்டோர் 
 வங்காளத்திலும் அக்கம்பக்கத்து நாடுகளிலும் வாழ்கின்றனர். 



படங்கள்: நன்றி இணையப் பக்கங்கள்



________________________________________________________________________
தொடர்பு: நூ த லோ சு (மயிலை நூ.த.லோக சுந்தரம்)

No comments:

Post a Comment