Friday, February 2, 2018

ஐஸ் பிரியாணியின் புலம்பல்

                                            ஐஸ் பிரியாணியின் புலம்பல்
BY: கண்மணி  

அரை நூற்றா ண்டுக்கு முன்பு வரை என் அருமை எல்லோருக்கும் தெரிந்து தானே இருந்தது.
எதனால் இந்த திடீர் மாற்றம்?

என்னை எல்லோரும் ஒதுக்கி விட்டார்கள்.

வெறும் வயிற்றில் ஒரு செம்பு நிறைய என்னை ஊற்றிக் குடித்துவிட்டு தெம்பாக வேலை பார்த்த பாட்டாளி வர்க்கத்திற்கு  இப்போது என் நினைவே இல்லாமல்  போய் விட்டதே !? அந்த அளவிற்கு போலி நாகரிகம் மேலாதிக்கம் செலுத்துகிறது.

வட்டில் நிறைய என்னைப் போட்டு கெட்டித்தயிர் ஊற்றி  பச்சை மிளகாயைக் கல்உப்போடு சேர்த்துக் கடித்துச் சுவைத்தவர் அளவிட முடியுமா?
பச்சை வெங்காயத்தைக் கூட்டி பசியாற்றியதோடு ஆரோக்கியத்தையும் கட்டிக் காத்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது.
ஊறுகாயும் ,வடகமும் ,வத்தலும் என எத்தனை எண்ணிலடங்கா கூட்டாளிகள்.எல்லாம் எளிமையின் சின்னங்கள்.
ஒருவேளை இந்த எளிமை தான் என்னை ஓரங்கட்ட வைத்து விட்டதோ?!

என்னோடு சேர்த்து வைத்துச்  சுவைத்த பக்கஉணவுகள் ----அவற்றுக்கு எல்லாம் இன்னும் மவுசு குறையவில்லை.
மாதா ஊட்டாத சோறு மங்கா ஊட்டும் என்பார்களே ---ஒரு ராஜபாளையம் சப்பட்டை ---தோல் சீவி துண்டு போட்டால் ---இந்த இணைக்கு ஈடு எது?
பங்குனி சித்திரை கத்தரி வெயிலின் போது களைப்பு நீங்க என்னளவிற்குத்  தகுதியான வேறு உணவு எது?
சப்பட்டை சீசன் ஓய்ந்து பஞ்சவர்ணம் வந்தால் தோலைச் சீவ வேண்டியதில்லை.---உரித்து விட்டு என்னோடு  கடித்துச் சாப்பிடுவது தானே ருசி.
எல்லா மாம்பழமும் வரத்து குறையும்போது வரத்தொடங்கும் காசாலட்டு;சும்மா கழுவித் தோலோடு வைத்துக்கொண்டு ஒருவாய்சோற்றுக்கு ஒருகடி  

சைவம் மட்டும் அல்லாமல் அசைவத்திற்கும் ....அசராமல் ஈடு கொடுத்தேன்.
ஒரு விரலளவு சீலா கருவாடு போதும்;அப்படியே எல்.பி.ஜி .காஸ் அடுப்பிலேயே சுட்டு விடலாம்...பானை சோறும் காலி.
இன்னும் வக்கணையாக வேண்டுமென்றால் ......
                                                                                          "மையூன் தெரிந்த நெய்"யில் வெடித்து வேகத் தொடங்கும் .....வெடிகறி   
இப்படியே இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம்.
நீர்ச்சோறு /பழையது என்றெல்லாம் பெயர் பெற்ற எனக்கு மாணவர் கூட்டம் வைத்த பெயர் தான் ஐஸ் பிரியாணி.
என்னோடு போட்டி போட .....ஹைதராபாதி /செட்டிநாடு /ஆம்பூர் .....இன்னும் என்னென்ன .....
பருப்புச் சோறுக்கு நெய் ஊற்றித்  தயிரோடு உண்ணும் கூட்டத்தைப் பார்த்து ரசித்துச் சிரித்து விடலாம்.......குழந்தைக் கூட்டம் என்று ....
ஆனால் அதைக் கூகைக்குப் பலியாகப் படைத்த சமுதாயம் தமிழ்ச் சமுதாயம் என்றால் ......கொடுமை ...கொடுமை என்று கூக்குரலிடத் தோன்றுகிறது.
உஷ்ஷ் ....எழுத்து கத்தக் கூடாது .
அமைதி ...அமைதி ......அமைதி 


No comments:

Post a Comment