Saturday, December 25, 2021

இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.

"இனிவரும் உலகம்"

  -- ஈ.வெ.ரா.





முன்னுரை:
இன்றைய உலகமானது பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்குநாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது? இனிச் சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும்? என்பனவாகிய விஷயங்கள் பகுத்தறிவுவாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர புராண இதிகாசப் பண்டிதர்கள் என்பவர்களுக்கு, அதுவும் நம் "கலை காவியப்" பண்டிதர்களுக்குத் தெரிவது சுலபமான காரியமல்ல.

ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்குச் சம்பந்தப்படுத்த முடியாத கலை காவியங்களையும் படித்து, உருப்போட்டு, அவைகளிலிருப்பவைகளை அப்படியே மனதில் பதியவைத்துக்கொண்டிருப்பதோடல்லாமல், அவைகளில் சம்பந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்களாவார்கள்.

பகுத்தறிவுவாதிகள், அந்தப்படிக்கில்லாமல், அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும், வஸ்துக்களின் குணங்களையும், அவற்றின் மாறுதல்களையும், இயற்கையின் வழிவழித்தன்மைகளையும் அவற்றால் கண்டுபிடிக்கப்பட்டுவரும் புதுமை அதிசயங்களையும், மனிதனுக்கு முன்காலத்தில் இருந்துவந்த அறிவாற்றலையும் சிந்தித்து, இன்று உள்ள அறிவையும் ஆற்றலையும், இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும், மற்றும் இவை போன்றவைகளையும் ஆராய்ச்சிக்காரர்களோடு நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களாவார்கள்.

பண்டிதர்கள், பழங்காலத்தையே சரியென்று கருதிக்கொண்டு அதற்கே புது உலகம் என்று பெயர் கொடுத்து அங்கே செல்ல வேண்டுமென்ற அவாவுடையவர்கள். பகுத்தறிவுவாதிகள் எவரும் ஓரொரு விநாடியையும் புதிய காலமாகக் கருதிப் புதிய உலகத்திற்குப் போவதில் ஆர்வமுள்ளவர்கள். பண்டிதர்கள் என்பவர்கள் "எந்த நாட்டிலும் இப்படித்தான் இருப்பார்கள்" என்று நாம் சொல்ல வரவில்லை. நம் நாட்டுப் பண்டிதர்கள் என்பவர்களில் பெரும்பாலோர்களைக் கருதித்தான் நாம் இப்படிச் சொல்கிறோம், ஏனெனில் நம்நாட்டுப் பண்டிதரென்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படவோ, அது வளர்ச்சியடையவோ முடியாமல் தடை செய்யத் தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும் பரிட்சையும் இருக்கிறது. 

ஆதலால் நம் பண்டிதர்கள் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய அவர்களது அறிவுக் குறைவன்று. 

தவறிக் கீழேவிழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரிலிருந்தால் எப்படி அதிக காயம் ஏற்படுமோ, அதுபோல் புராண இதிகாசக் கலைச் சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு, இயற்கை வாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத்தக்க வண்ணம், மூடநம்பிக்கைச் சமய(மத)ங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர்களைக் கரையேறவிடாதபடி சுற்றிக்கொண்டிருக்கின்றன.

நம் மதவாதிகள்: சிறப்பாக இந்து மதவாதிகள் என்பவர்கள் பண்டித மதவாதிகளைவிட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போக வேண்டுமென்றால், மதவாதிகள் பதினாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும், பல யுகங்களுக்கும் முன்னால் இருந்த உலகத்துக்குச் செல்லவேண்டுமென்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும் மனித சக்திக்கு மீறினதுமான காரியங்களிலும் அசாத்தியமான கற்பனைகளிலுந்தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும். 

ஆகவே இப்படிப்பட்ட இவர்களால் கண்டறியப்படும் புது உலகம் காட்டுமிராண்டிகள் வசிக்கும் உலகமாக இருக்கும் என்பதையும் அவர்களை மதிக்கும் மக்கள் பெரும்பாலும் மூடநம்பிக்கையில் மூழ்கிய காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆதலால்தான் பழையவைகளுக்கே மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவைகளால் மாறுதலின் சக்தியும் அம்மாற்றத்தின் தன்மையும் அதனால் ஏற்படும் பயனும் உணர்ந்து கொள்ளவோ எதிர்பார்க்கவோகூட முடியாது என்று சொல்லவேண்டியதாயிற்று.

பழையவைகளை ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் உபயோகித்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின்வாங்கமாட்டோம். ஆனால் புதியவற்றிலேயே முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும், ஏனெனில் அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு புதியவற்றைக் கண்டு பிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்.

இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டனைகளாகும். அவை இன்று எல்லா மக்களாலும் ஆதரவோடு அனுபவிக்கப்படுகின்றன.

ஆகவே, இதை உணர்ந்தவர்கள் தான் இனிச் சில நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் எப்படிப்பட்ட உலகத்தைக் காணலாம், அதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்பதை ஒருவாறு கற்பனைச் சித்திரமாகவாவது தீட்டமுடியும்.
 

இனிவரும் உலகம்:
உலகத்தை ஒருவாறு படித்தறிந்த பல பெரியார்களின் அபிப்பிராயங்களையும் உலகின் பல பாகங்களில் இதுவரை ஏற்பட்டு வந்திருக்கும் காரியங்களையும் ஊன்றிப்பார்ப்போமேயானால், இனிவரும் உலகமானது, அரசனது ஆட்சி அற்றதாகவே இருக்கும். ஏனெனில், இனிவரும் உலகம் , தங்கம், வெள்ளி முதலிய (உலோக) யங்களும் தனிப்பட்டவர்களுக்கென்று, சொத்து உடமை யும், உரிமையும் இருக்காது. ஆதலால் அப்படிப்பட்ட உலகத்துக்கு அரசனோ இன்றுள்ளது போன்ற ஆட் சியோ எதற்காக வேண்டியிருக்கும்! மக்கள் உயிர் வாழ்க்கைக்கும் ஓய்வுக்கும் அனுபவிப்புக்கும் இன்றுள்ள உழைப்புகள், கஷ்டங்கள், கட்டுக்காவல்கள் இருக்காது.

இன்றுள்ள பெருவாரியான மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து வேலை செய்யும் நேரம் அதிகம். பயன் அனுபவிக்கும் நேரம் குறைவு.

உண்ணும் உணவுப் பொருள்களுக்கும் அனுபவிக்கும் போகப்பொருள்களுக்கும் வசதி அதிகம். போதிய உணவு இல்லாமலும் குறைந்தபட்ச சுகபோக அனுபவ மில்லாமலும் பட்டினி கிடக்கும் மக்களும் வறுமையை அனுபவிக்கும் மக்களும் அநேகம்!

சுயேச்சைக்கு வசதியும் சுய நிர்ணயத்துக்கு மார்க்கமும் தாராளமாய் இருக்கிறது. சுயேச்சையோடு இருப்பவர்களோ, தன்னம்பிக்கையோடு இருப்பவர்களோ மிகக் குறைவு.

பொருள் செய்கைகளும், அவற்றிற்கு வேண்டிய மூலப்பொருள்களும் ஏராளமாயிருக்கின்றன. குறைந்த அளவு, அதாவது, இன்றியமையாத, தேவையான பொருள்கூட இல்லாமல் கஷ்டப்பட்டும், வேதனையும் படுகிற மக்கள் அநேகர்.

நிலப்பரப்பு ஏராளம்; நிலமில்லாதவர்கள் என்பவர்கள் அநேகர். இப்படிப்பட்ட, சர்வ செல்வமும் நிறைந்துள்ள உலகில் பட்டினி, வறுமை, மனக்குறை வாழ்வுக்கே போராட்டம் ஏன் உண்டாகவேண்டும்?

இவைகளுக்கும், கடவுளுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? இவைகளுக்கும், மதங்களுக்கும், ஏதாவது சம்பந்தம் உண்டா?

அல்லது இவைகளை கடவுளர்களுக்கும் சம்பந்தப் படுத்திக்கொண்டிருக்கும் மக்களில் எந்தக் கடவுளையாவது எந்த மதத்தையாவது நம்பிப் பின்பற்றி, வழி படுகிற மக்களில் யாருக்காவது மேலேகண்ட குறைபாட்டுணர்ச்சி இல்லை என்று கூறமுடியுமா?

அல்லது கடவுள், மதம் முதலியவைகளைப்பற்றி இலட்சியப்படாவிட்டாலும், மனிதனுக்கு மேற்கண்ட குறைகளை நீக்கிக்கொள்ள அறிவு இல்லை என்றாவது சொல்ல முடியுமா?

உலக சீவராசிகளுக்குள்ளே மனிதனே அதிக அறிவு பெற்றவன். கடவுள்களையும், மதங்களையும், ஞானமார்க்கங்களையும், ஆத்மார்த்த அரிய தத்துவங்களையும் மனிதன்தான் கண்டுபிடித்திருக்கிறான். எத்தனையோ மனிதர்கள் 'தெய்வீகசக்தி பெற்று' தெய் வத்தோடு கலந்தும், தெய்வமாகியும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களாலும் மேற்கண்ட குறைபாடு, பட்டினி, அவரவர் உணவுக்கே கஷ்டப்படுவது முதலாகிய சாதாரணத்தன்மைகள் கூட நீடிக்கப்படவில்லை என்றால், இவற்றிற்கு முக்கிய காரணம், மேலே குறிப் பிட்ட கடவுள், மதம், ஞான மார்க்கம், நீதி, ஒழுக்கம், அரசாட்சி என்பவைகளும், மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அதிக அறிவை மேற்கண்டவற்றின் கட்டுப்பாடுகளிலிருந்து வேறுபடுத்தித் தனித்திருந்து சிந்தித்துப் பார்க்காததும் தான் காரணங்களாகும் என்பது விளங்க வில்லையா?

இப்போழுது மக்களில் ஒரு சிலர் மேற்கண்ட "ஆத்மார்த்தம்" முதலிய "சூட்சமங்களில்" உள்ள கவலையையும் மூடநம்பிக்கையையும் விட்டுத் தம் அறிவையும் அனுபவத்தையுமே நம்பிச் சிந்தித்ததன் காரணமாகவே பல அற்புதங்களும், அதிசயங்களும் காண முடிந்தபின், மேல்நாடுகளிலே அதிகம் பேர் அந்தப்படி சிந்திக்க முன்வந்து விட்டார்கள். பழைய உலகம் இனி நிலைக்காது என்று முடிவு கட்டுகிறார்கள். புதிய உலகத்தைப்பற்றியே சிந்திப்பதும் சித்தரிப்பதும், எதிர்பார்ப்பதுங்கூட இன்று பல அறிஞரின் கவலையாகப் போய்விட்டது.

ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்னைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத் தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப் பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.

காந்தியாரைப் போலவும், மடாதிபதிகளைப் போலவும், அரசர்கள், ஜமீன்தாரர்கள் முதலிய பெரும் பெரும் செல்வான்கள், போக போக்கியம் அனுபவிப்போர்கள் போலவும், பார்ப்பனர்கள் போலவும், உலக மக்கள் யாவரும் உயர்வாழ்வு வாழவேண்டுமானாலும், அவ்வாழ்வு வாழ்வதற்கு வேண்டிய சவுகரியங்கள் ஏற்படவும், நிலைக்கவுமான காரியங்கள் ஏற்பட ஒரு மனிதனுக்கு ஒருநாள் ஒன்றுக்கு ஒரு மணிநேரம், அல்லது இரண்டு மணி நேரத்துக்குமேல் வேலை செய்ய வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு மனிதன் தனது காலுக்கோ, காதுக்கோ, நாசிக்கோ, நயனத்துக்கோ, வயிற்றுக்கோ, எலும்புக்கோ வலி இருந்தாலும், அவன் "எனக்கு வலிக்கிறது" என்று சொல்லுவது போல், உலகில் வேறு எந்தத் தனிப்பட்ட மனிதனுக்கு ஏற்படும் சங்கடத்தையும், குறைபாடுகளையும், ஒவ்வொருவரும் (சமூகமே) தங்களுக்கு ஏற்பட்டது போல் நினைக்கும் படியும், அனுபவிப்பது போல் துடிக்கும்படியும் அவ்வளவு கூட்டுவாழ்க்கையும், ஒற்றுமை உணர்ச்சியும் ஏற்படும்.

உலகில் எந்தப்பாகத்திலும் இன்றைய மாதிரியான போர் நடக்காது. மக்கள், மக்களால், யுத்தம், கொள்கை, கொலை முதலியவற்றின் பேரால் மடியமாட்டார்கள். உணவுக்காக வேலை செய்ய வேண்டிய வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது. மக்கள் 'உடற்பயிற்சிக்காக வேலை செய்ய வேண்டுமே', என்கின்ற கவலை கொண்டு உழைப்பு வேலைக்காக அலைவார்கள்.

அதிசயப் பொருளும், அற்புதக்காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் மக்கள் எல்லோரும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். இலேவாதேவிக்காரர்கள், தனிப் பட்ட வியாபாரிகள், தொழிற்சாலை, இயந்திரசாலை முதலாளிகள், கப்பல், இரயில், பஸ் சொந்தக்காரர்கள், கமிஷன் ஏஜண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜண்டுகள், தரகர்கள், விளம்பரங்கள், மற்றும் வேறு எவ்விதமான தனிப்பட்ட இலாபமடையும் மக்களும், தொழில்களும் எவையுமே இருக்காது. சண்டைக்கப்பல், யுத்தப்படை யுத்த தளவாடங்கள் வேண்டி இருக்காது என்பதோடு, மக்களைக் கொன்று குவிக்கும் சாதனமோ அவசியமோ, எதுவுமே இருக்காது.

வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்குவந்துவிடும். சுகம் பெறுவதிலும், போகபோக்கியமடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறை வாகவே இருக்கும்.

உதாரணமாக, மக்கள் முன்பு கொஞ்சமான உடை அணிந்து கொண்டிருந்தார்கள். அக்காலத்தில் துணி நெய்பவர்கள், ஒரு நிமிடத்துக்குச் சுமார் 150 இழைகள் தான் கோத்து வாங்க (நெய்ய) முடிந்தது. இன்று மக்கள் முன்னைவிட பல மடங்கு அதிகமாகத் துணியை அணிகிறார்கள் என்றாலும், அவ்வளவும் கிடைக்கும் படியான அளவுக்கு மேலே நெசவுத்துறையில் விஞ்ஞானம் அபிவிருத்தி அடைந்து ஒரு நிமிஷத்துக்கு 15000 இழைகள் கோத்து வாங்கும்படியான இயங் திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

சிகரெட்டுகளைப்பற்றிச் சிந்திப்போமானால் அக் காலத்தில் ஒரு நிமிடத்துக்கு இரண்டு மூன்று சிகரெட் டுகள் தான் சுற்ற' முடிந்திருக்கும். ஆனால் இன்று ஒரு நிமிடத்துக்கு 2500 சிகரெட்டுகள் ஒரு இயந்திரத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் ஒருபக்கம் புகையிலையைப் போட்டால் மறுபக்கம், ரயிலில் எற்றும்படியான மாதிரியில் சிகரெட்டுப் போக்குகள் கொண்ட பெட்டிகள் கட்டாகக் கட்டப்பட்டு விடுகின்றன என்பதோடு அந்தச் சிகரெட்டுக் கம்பெனியின் பெயர் அந்த ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் சரியாய்ப் பதியவில்லையானால், பதியாத சிகரெட்டை இயந்திரம் கீழே தள்ளி விடுகிறது. இப்படிப்பட்ட நுட்பமான இயந்திரங்கள் இப்போதே கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் போது, இனி வருங்கால இயந்திர உலகம் எப்படி இருக்கும் என்பதை விளக்கவும் வேண்டுமா! இம்மாதிரி யாகவே வாழ்வுக்கு வேண்டிய எல்லாத் தேவைத் துறைகளிலும் இயந்திர சாதனங்கள் பெருகும்போது, நாட்டு மக்களில் ஒவ்வொருவரும் ஆண்டிற்கு இரண்டு வாரம் வேலை செய்வதனாலேயே மக்களுக்கு அவசியமான எல்லாத் தேவைகளும் பூர்த்தியாகி விடலாம்.


வேலை இல்லாமற் போகாது:
ஆகவே ஒரு ஆண்டில் மீதி உள்ள 50-வாரங்களும் மக்களைச் சும்மா, சோம்பேறிகளாய் இருக்கச்செய்யுமே என்று யாரும் பயப்படவேண்டியதில்லை.

வாழ்க்கைச் சாதனங்களுக்கு எப்படிக் காலமும் யோசனையும் கண்டுபிடிப்புகளும் தேவை இருக்கிறதோ, அதுபோலவே மக்களின் ஓய்வுக்கும், உடற் பயிற்சிக்கும், மகிழ்ச்சிக்கும், போக போக்கியத்துக்கும் யோசனைகளும் ஆராய்ச்சிகளும், சாதனங்களும், அவைகளைச் சுலபமாகச் செய்ய வசதிகளும் கண்டு பிடிப்பதும், அவை நாளுக்குநாள் மாற்றமடைவதும் ஆகிய காரியங்களில் மீதி நாட்கள் செலவழிக்கப்பட வேண்டி இருக்கும்.

அக்கால நிலை நாம் வரையறுக்க முடியாத அற்புதங்களையும், அதிசயங்களையும் கொண்டிருக்கும் என்று சொல்லுவது மிகைப்படச் சொன்னதாக ஆகாது. ஆதலால் மக்கள், குறிப்பாக அறிவாளிகள் சிந்தனையாளர்கள் முற்போக்கில் கவலை உள்ளவர்கள் ஆகியவர்களுக்கு இவற்றின் மூலம் சதாவேலை இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட வேலைகள் இன்று உள்ளது போல் கூலிக்கு வேலை செய்வது போலவோ, இலாபத்துக்கு வேலை செய்வதுபோலவோ இல்லாமற் உற்சாகத்துக்காகவும், போட்டிப் பந்தய உணர்ச்சி போன்ற தூண்டுதலுக்காகவும் ஊக்கத்துடன் வேலை செய்வதாக இருக்கும்.

இதைப் பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனது வாழ்நாளில் தன்னை என்ன காரியத்தைச் செய்து முடித்து உலகுக்கு பயன்படச் செய்து கொள்ளுவது என்ற கருத்தே வளரும்.


சோம்பேறிகள்: 
இப்படியானால் சோம்பேறிகள் வளர்ந்துவிடமாட்டார்களா, என்று கேட்கலாம். இப்படிப்பட்ட காலத்தில் சோம்பேறிகள் இருக்க முடியாது. இருப்பார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் இவர்களால் சமூகத்துக்குத் தேவையான எந்த வேலையும் குறைந்து போகாது. அதனால் ஒரு கெடுதியும் ஏற்பட்டுவிடாது. ஆதலால் அப்படிப்பட்ட இவர்கள் வேலையில் ஈடுபடுவதைவிட சும்மா இருந்து சாப்பிடுவது அவர்களுக்கே கஷ்டமாயிருக்கும்.

பொதுவாகவே அந்தக் காலத்தில் மனிதர்கள் உண்மையிலேயே தங்களுக்கு "வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே" "வீணாக நேரம் கழிகிறதே" என்று வேலைக்கு போராடிக் கொண்டு இருப்பார்கள். அப்படிப்பட்ட மக்களுக்கு இச்சோம்பேறிகளால் அனுகூலம் ஏற்படுமே தவிர, யாருக்கும் கவலை இருக்காது.  எல்லாமக்களுக்கும் அவர்கள் ஆசைதீர வேலை கொடுக்க முடியாத காலமாக இருக்குமே ஒழிய, அந்தக்காலம் வேலைக்கு ஆள் தேடவேண்டியதாகவோ, 'அவன் வேலை செய்யவில்லை' இவன் வேலை செய்யவில்லை' என்று கருதுவதாகவோ, குறை கூறுவதாகவோ இருக்காது.


"இழிவான" வேலை:
"இழிவான" வேலைகளுக்கு ஆள் கிடைக்குமா? என்ற கேள்வி பிறக்கலாம். இழிவான வேலை என்பது வருங்காலத்தில் இருக்க முடியாது. சரீரத்தில் செய்யப் படவேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும். கக்கூசு எடுக்கவேண்டியதும், துலக்கவேண்டியதும், வீதி கூட்டவேண்டியதும்கூட இயந்திரத்தினாலேயே செய்து முடிந்துவிடும். மனிதன் பாரம் எடுக்கவேண்டியதோ ஆள் இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவேயிருக்காது. அக்காலத்தில் கவுரவம் வேண்டும் என்பவர்கள் பொதுஜன நன்மை சவுகரியம் ஆகியவைகளைச் செய்யவேண்டி இருக்கும் என்பதோடு, அதில் ஏற்படும் போட்டியினால் 'இழிவான' வேலைக்கும் எப்போதும் கிராக்கி இருந்து கொண்டே இருக்கும்.

கவிகளும், இதர சித்திரக்காரர்களும், நாவலர்களும், சிற்பிகளும், போட்டி போட்டுக்கொண்டு புதிய உலகை (தோற்றத்தை) உண்டாக்குபவர்களாகவே இருப் பார்கள். திறமையானவர்களுக்குத்தான் வேலையும் மதிப்பும் கிடைக்கும், மற்றவர்கள் அலட்சியப்படுத்தப் படுவார்கள்.


"ஒழுக்கக் குறைவு":
அக்காலத்தில் 'ஒழுக்கக் குறைவு' என்பதற்கு இடமே இருக்காது. ஒழுக்கக்குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால், அதனால் அவனுக்கு ஒழுக்கமாய் நடப்பதன்மூலம் கிடைக்கப்படாத ஏதாவது லாபமோ, திருப்தியோ, ஆசைப் பூர்த்தியோ ஏற்படவேண்டும். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக்குறைக்கும், ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது. தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதை விட அதிகமாகக்கொண்டோ, வேறொருவன் இருக்கிறான், அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும்போதுதான் அதிருப்தியும், மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக்கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாயவிரோதமாய் கட்டுத் திட்டத்துக்கு மீறி நடக்கவேண்டியவனாகலாம். பொதுவாக இன்று ஒழுக்கம், நியாயம், கட்டுத்திட்டம் என்பவைகளே பெரிதும் உயர்வு தாழ்வுகளையும் தனிப்பட்டவர்கள் உரிமைகளையும் சவுகரியங்களையும் நிலைநிறுத்த ஏற்படுத்தப்பட்டவைகளேயாகும். ஆகையால் இவை இரண்டும் இல்லாத இடத்திற் அவை இரண்டுக்கும் இடமிருக்காது. அதுபோலவே திருட்டுக்கும் இடமிருக்காது. 

கங்கைக்கரை ஓரத்தில், குடியிருப்பவர்கள் கங்கை நீரைத் திருடவேண்டிய அவசியம் ஏற்படுமா? அல்லது அவர்களது தேவைக்கு மேல் அதிகமாக எடுப்பார்களா? "நாளைக்கு வேண்டுமே," என்று சேகரித்து வைக்க முயற்சிப்பார்களா? ஆதலால் தேவை உள்ள சாமான்கள் தாராளமாய் வழிந்தோடும் போது திருட்டுக்கு இடமே இருக்காது. அதிகமாய் எடுத்துக்கொள்ள அவசியமும் இருக்காது. பொய் பேசவேண்டிய அவசியமும் இருக்காது. அதற்கும் ஏதாவது இலாபம் இருந்தால்தானே பொய்பேசநேரிடும். குடியினால் மக்களுக்கு எவ்விதக் கெடுதியும் ஏற்பட இடமிருக்காது, கொலை செய்யும்படி தூண்டத்தக்க காரியமும் இல்லாமல் போய்விடும். சூது ஆடுவது என்பதும், பந்தயப் போட்டியாயிருக்கலாமே தவிர பண நஷ்டமாக இருக்காது.


விபசாரம்:
விபசாரம் என்பதும் இருக்க நியாயமில்லை. ஏனெனில் பணத்துக்காகவும், பண்டத்துக்காகவும் விபசாரம் என்பது அடியோடு மறைந்தே போகும். மக்களுக்குத் தன்மான உணர்ச்சி ஏற்பட்ட காலத்தில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளமுடியாது. ஒருவர் தயவைக்கோரி ஒருவர் இணங்கிவிட முடியாது. ஒருவரை ஒருவர் அதாவது ஆணும் பெண்ணும் மனப்பூர்வமான சமவிருப்பமின்றி காதல் அனுபவிக்கமாட்டார்கள். கலவி விஷயத்தில் யாவருக்கும் தேர்ந்த அறிவும், கல்வியும் ஏற்படும். ஆனதால் மனமொத்த உண்மைக் காதல் வாழ்க்கையென்பதைத் தவிர, புதுமைக்காக, மாறுதலுக்காக அடிக்கடி மாறும் தன்மை சுலபத்தில் ஏற்பட்டுவிடாது, அன்றியும் உடல் நலம் பற்றிய அறிவும் கவலையும் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டிருக்கும், தன்மான உணர்ச்சியும் இருக்கும். "விருப்பமில்லாத இடத்தில், சம்பந்தம் இல்லாத இடத்தில் இச்சை வைப்பது தனது சுயமரியாதைக் குறைவு" என்றே ஆண் பெண் இருபாலரும் கருதுவார்கள். பெண் அடிமையோ ஆண் ஆதிக்கமோ இல்லாமலும், பலாத்காரமோ வற்புறுத்தலோ உடல் நலத்திற்கு கேடோ இல்லாமலும், ஒத்த காதல், ஒத்த இன்பம், ஒன்றுபட்ட உள்ளம் கொண்ட கலவியால் சமுதாயத்துக்கோ தனிப்பட்ட நபர்களுக்கோ எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டு விடாது. ஆதலால் விபசாரம் என்பதற்கு இடமில்லாது போகும்.

மூளைக்கோளாறான குணங்கள் என்பவைகளை இயற்கையாக உடையவர்கள் யாராவது இருந்தால் அதற்கு மாத்திரம் பரிகாரம் தேட வேண்டிய அவசியம் இருக்கலாம். அதுவும் அப்படிப்பட்டவர்களால் பிறருக்கோ, தங்களுக்கோ கேடு ஏற்படுவதாய் இருந்தால் மாத்திரம் தானே? ஆதலால் பஞ்சேந்திரியங்களும் ஒரே துறையில் ஒரே சமயத்தில் இன்பந்தரக்கூடிய இவ்வின்பத் துறையில் இயற்கைக்கேடு, சமுதாயக்கேடு அல்லாமல் வேறு காரியத்திற்குக் கட்டுப்பாடு இருக்காது.


மற்ற சவுகரியங்கள்:
▪️  போக்குவரவு எங்கும் ஆகாயவிமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.
▪️  கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.
▪️  ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
▪️  உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்.

மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்திலிருந்துக் கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்விகற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும். உணவுகளுக்குப் பயன்படும்படியாக உணவு சத்துப்பொருள்களாகச் சுருக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு ஒரு சிறு குப்பியில் அடங்கக் கூடிய உணவு ஏற்பட்டு விடும்.

மனிதனுடைய "ஆயுள் நூறு" ஆண்டு என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

பிள்ளைப்பேறுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்து துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை 'இன்செக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.

மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.


போகப்பொருள்: 
போகப் பொருள்களும் வெகு தூரம் மாற்றமடைந்துவிடும். அதற்காக ஏற்படும் செலவும் அதை அனுபவிக்கும் முறையும் வெகு சுருக்கமாக மாற்ற மடைந்துவிடும்.

ஒரு டன்னுள்ள மோட்டார்கார் ஒரு அந்தர் வெயிட்டுக்கு வரலாம். பெட்ரோல் செலவு குறையலாம். பெட்ரோலுக்குப்பதில் மின்சார சக்தியே உபயோகப் படுத்தப்படலாம். அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்.

மின்சாரத்தின் உபயோகம் எல்லா மக்களுக்கும் பயன்படக்கூடியவிதமாகவும், மக்கள் வாழ்க்கை வசதிகளுக்குத் துணை செய்யும் விதமாகவும் விரியும் பெருகும். விஞ்ஞானம் வாழ்க்கையில் இன்பம் அனுபவிக்கப் பயன் படும்படியான அதிசயப் பொருள்களும், கண்டுபிடிப்புகளும் தனிப்பட்டவர்களின் இலாபத்துக்காக என்று முடங்கிக் கிடக்காமல் சகல மக்களுக்கும் சவுகரியம் தருகிற பொது சாதனங்களாக அமையும்.

இவ்வளவு மாறுதல்களோடு இனிவருங்காலம் இருக்குமாகையால், இன்றைய உலக அமைப்பிலே உள்ள, அரசு, உடமை, நீதி, நிர்வாகம், கல்வி முதலிய பல துறைகளிலும், இப்போது எவை எவை பாதுகாக்கப்பட என்னென்ன முறைகள் கையாளப்பட்டுவருகின்றனவோ, அம்முறைகளுக்கெல்லாம் அவசியமில்லாமற் போய் விடும் என்பதோடு அவை சம்பந்தமாக இன்று நிலவும் பல கருத்துக்கள் அர்த்தமற்றதாகவும் போய்விடும்.


கடவுள்:
இனிவரும் உலகத்தில் கடவுள் தன்மை எப்படி இருக்கும் என்று அறிய மக்கள் கண்டிப்பாக ஆசைப் படாமல் இருக்கமாட்டார்கள்.

கடவுள் தானாக யாருக்கும் தோன்றுவதில்லை. பெரியோர்களால் சிறியோர்களுக்குப் போதிக்கப்பட்டும் காட்டப்பட்டுமே தோற்றமான எண்ணமும் உருவமுமாகும். ஆனதால் இனிவரும் உலகத்தில் கடவுளைப் பற்றி போதிக்கிறவர்களும் காட்டிக்கொடுப்பவர்களும் மறைந்து விடுவார்கள். யாராவது இருந்தாலும் அவர் களுக்கும் கடவுள் மறக்கப்பட்டுப்போகும். ஏனெனில் கடவுளை நினைக்க ஒரு மனிதனுக்கு ஏதாவது ஒரு அவசியம் இருந்தால்தான் நினைப்பான் —   சகல காரண காரியங்களுக்கும் மனிதனுக்கு விபரம் தெரிந்துவிடுவதாகவும்; சகல தேவைகளும் மனிதனுக்கு கஷ்டப்படாமல் பூர்த்தியாவதாகவும் இருந்தால் ஒரு மனிதனுக்கு கடவுளை கற்பித்துக்கொள்ளவோ நினைத்துக் கொள்ளவோ அவசியம் ஏன் ஏற்படும்.  மனிதன் உயிரோடு இருக்கும் இடமே அவனுக்கு மோட்சமாய்க் காணப்படுமானால் விஞ்ஞானத்துக்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமில்லாத மோட்சம் ஒன்றை ஏன் கருதுவான். அதற்கு ஏன் ஆசைப்படுவான். "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும்" என்பது அறிவின் எல்லையாகும். விஞ்ஞானப்பெருக்கம் ஏற்பட்ட இடத்தில் கடவுள் சிந்தனைக்கு இடம் இருக்காது.

சாதாரணமாக மனிதனுக்கு இன்று கடவுள் நிச்சயத்திற்கு ஒரே ஒரு காரணம் தானே இருந்து வருகிறது. அக்காரணம் என்ன வென்றால்  "இந்த உலகத்தோற்றத்திற்குக் காரணம் என்ன? காரணபூதமாய் இருப்பது எது? அதுதான் கடவுள்" என்று சொல்லப்படுகிறது. இது விஞ்ஞானிக்குச் சுலபத்தில் அற்றுப்போனவிஷயம். நம்முடைய வாழ்வில் நாம் எதை கடவுள் செயல் என்று உண்மையாய்க் கருதுகிறோம்? நம் அனுபவத்திற்கு வந்த ஒவ்வொன்றுக்கும் நாம் சமாதானம் தெரிந்து கொள்ளுகிறோம். தெரியாதவற்றைத் தெரியாது என்று ஒப்புக்கொள்ளுகிறோம். தெரிந்ததைத் தெரிந்தது என்று சொல்லுகிறோம். இதுவேதான் உலகத்தோற்றத்துக்கும் உலக நடப்புக்கும் கொள்ள வேண்டிய முறையாகும். ஒருசமயம் உலக நடப்புக்குக் காரணம் தெரியாவிட்டாலும் அதற்காக ஒரு காரியத்திற்கும் தேவை இல்லாத கடவுளை எவனும் வணங்கமாட்டான்.


மோட்ச நரகம்:
புதிய உலகத்தில் மோட்ச நரகத்திற்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இட மிருந்தால் தானே மோட்சமும், நரகமும் வேண்டும்; எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக்கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?

எனவே இப்படிப்பட்ட நிலை புதிய உலகத்தில் தோன்றியே தீரும். தோன்றாவிட்டாலும் இனிவரும் சந்ததிகள் இந்த மாறுதல்களைக் காணவேண்டுமென்றும், இவைகளால் உலகில் மக்களை இப்போது வாட்டி வரும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்க்கை என்றால் பெருஞ்சுமை என்று சலித்துக்கொண்டும் வாழ்க்கையென்றால் போராட்டம் என்று திகைத்துக் கொண்டும் இருக்கிற நிலைமை போய், வாழ்க்கை என்றால், மக்களின் இன்ப உரிமை என்ற நிலைமை உண்டாக வேண்டுமென்றும், ஆவலுடன் பணியாற்றி வருவார்கள்.

"நம்மால் என்ன ஆகும். அவனன்றி ஓரணுவும் அசையாதே என்று வாய் வேதாந்தம் பேசமாட்டார்கள்.  நம் கண்முன் காணப்படும் குறைபாடுகளைப் போக்க நாம் எப்படி உழைக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலையாகவும் அவர்களின் எண்ணமாகவும் இருக்கும். என்றோ யாரோ, எதற்காகவோ, எழுதிவைத்த ஏட்டின் அளவோடு நிற்கமாட்டார்கள். சுய சிந்தனை யோடு கூடிய தாகவே அவர்களின் செயல்கள் இருக்கும். மனித அறிவீனத்தால் விளைந்த வேதனைகளை மனித அறிவினாலேயே நீக்கிவிட முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையுங்கொண்டு உழைப்பார்கள். அவர்களின் தொண்டு, மனித சமுதாயத்தை நாளுக்குநாள் முன்னுக்குக்கொண்டு வந்தவண்ணமாகவே இருக்கும். சுய சிந்தனைக்கு இலாயக்கற்றவர்களே இந்த மாறுதல் களைக்கண்டு மிரள்வதும், 'காலம் வரவரக் கெட்டுப் போச்சு', என்று கதறுவதுமாக இருப்பார்கள். 

இன்றைய மக்களிலே பலருக்கு, பழமையிலே இருக்கும் மோகம், அறிவையே பாழ்செய்து விடுகிறது, புதிய உலகத் தோற்ற வேகத்தைத் தடை செய்துவிடுகிறது. பழைய முறைப்படி உள்ள அமைப்புகளால் இலாபமடையும் கூட்டம், புதிய அமைப்பு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிப்பது இயற்கை. ஆனாலும் பாமரரின் ஞானசூன்யம், சுயநலக்காரனின் எதிர்ப்பு எனும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல், வேலை செய்வோரே, இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும். 

அந்தச் சிற்பிகளின் கூட்டத்திலே நாமும் சேர்ந்து நம்மாலான காரியத்தைச் செய்ய வேண்டுமென்று, வாலிபர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வரவேண்டி இதை முடிக்கிறேன்.





இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.
குடி அரசு பதிப்பகம், ஈரோடு
ஆறாம் பதிப்பு - 1961
தமிழன் அச்சகம், ஈரோடு.
விலை: 15 காசு
[தமிழ் இணையக் கல்விக்கழகம்  —   https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010846_இனி_வரும்_உலகம்.pdf]

------------------------------







No comments:

Post a Comment