Sunday, October 31, 2021

கலைஞர்: மிக உயர்ந்தவர்



  —  ஆலடி எழில்வாணன்


Kalaignar: The Great, by M.Farook 
- கலைஞர்: மிக உயர்ந்தவர், பாரூக்
எமரால்டு பதிப்பகம் 



தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் தனது ஆற்றலால் நான்கு தலைமுறைகளின் வளர்ச்சிக்கு நேரடிக் காரணமாக இருந்தவர் கலைஞர். இனிவரும் காலமும் தமிழ் உலகம் இவர் புகழ்பாடும். அப்படிப்பட்ட மாபெரும் தமிழ் சகாப்தமான கலைஞர் மு.கருணாநிதி பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த, கைக்கு அடக்கமான, ஆழமான புத்தகம் முனைவர் M Farook எழுதிய “Kalaingar: The Great”.
 
எமரால்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட 130 பக்கங்கள் கொண்ட இந்தப்  புத்தகத்தின் ஒவ்வொரு பக்கமும் தகவல் களஞ்சியம். திராவிட இயக்கத்தின் கூர்வாள் திரு.நாஞ்சில் சம்பத் அவர்களின் அணிந்துரையும், வளர்ந்து வரும் அரசியல் ஆளுமை விசிக திரு.ஆளூர் ஷாநவாசு அவர்களின் முன்னுரையும் இந்தப் புத்தகத்தின் தாக்கத்தை உணர்த்தும்.
 
எளிய ஆங்கிலத்தில் லைஞரின் வலிமையான வாழ்க்கையை, சாதனையை, சோதனையை 15 அத்தியாயத்தில் அழகாகக் கோர்த்துள்ளார் ஆசிரியர் பாரூக். அரிய பல சுவராசியத் தகவல்களோடு அப்போதைய அரசியல் சூழலுக்கு ஏற்ப வாசகரை ஒரு சாட்சியாக, பார்வையாளராக இணைக்கிறார், சிறக்கிறார். ஆசிரியரின் எழுத்தும், நடையும், கோர்வையும் அவரது மொழி ஆளுமையை விட தலைவர் கலைஞர் மீது இவருக்குள்ள பற்று மற்றும் இவர் கலைஞரின் தீவிர ரசிகர் என்பதை கலைஞர் பாணியில் உள்ளங்கையில் நெல்லிக்கனி என வெளிப்படுத்துகிறது.
 
நான் ரசித்த, வியந்த சில அத்தியாயங்களை மட்டும் உங்கள் கவனத்துக்கு எனது விமர்சனமாகப் பதிவிடுகிறேன்.
 
Kalaingar: A Promised Dravidian Messiah:
இந்த அத்தியாயத்தில் கலைஞர் திராவிட இயக்கத்தில் பெரியார், அண்ணாவுக்கு அடுத்து மூன்றாவது முக்கிய அத்தியாயமாக பரிணாமம் பெற்றதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறார். குறிப்பாக சுயமரியாதை சிந்தனை, பகுத்தறிவு, மொழிப் பற்று, மாநில உரிமை இவற்றை உள்வாங்கிய சமூகநீதி சிந்தனை, 1971ல் இட ஒதுக்கீட்டை மாற்றியது, 69% இட ஒதுக்கீட்டுக்கு அடித்தளமிட்டது, 1989ல் வி.பி.சிங் அரசால் அதை நடைமுறைப்படுத்தியது, 2006-2011 காலங்களில் உள் ஒதுக்கீடு எனப் போராடாமல் பெற்ற உரிமைகள், இறுதிவரை NEETடை தமிழகத்தில் அனுமதிக்காமல் அரணாக இருந்தது என கலைஞரின் சாதனைகளைக் கூறுகிறார்.
 
Kalaingar's Landmark, Land Reforms:
உழுபவனுக்கு நிலம் சொந்தம்; குடியிருப்பவருக்கு வீடு சொந்தம். பண்ணையார், நாட்டாண்மை என்றழைக்கப்பட்ட பெரும்நிலத்தாரிடம் இருந்து நிலங்களை நிலமில்லா விவசாயிகளுக்கு வழங்க பல சட்டங்களை இயற்றினார் கலைஞர். பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் சார்பில் “திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம்” 1952ல் நிறுவப்பட்டது. ஊதியம், நிலம்-நீர் உரிமை எனப் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
1. 1969 - Tenancy Land Record Act
2. 1969 - Agriculture Labour Fair Wages Act
3. 1970 - Land Reforms Act
4. 1971 - Agricultural University Act
5. 1971 - Conferment of Ownership of Homestead Act
உயர் வகுப்பினரிடமிருந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விவசாய நிலங்கள் செல்லக் காரணியாக இருந்தார் தலைவர் கலைஞர்.
தரிசுநில மேம்பாட்டுத் திட்டம்,
இரண்டு ஏக்கர் இலவச நிலம் திட்டம்,
எல்லாம் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
Kalaingar: A Versatile Wordsmith:
தமிழ் இலக்கியத்துக்காக கவிதை, கடிதம், திரைக்கதை, கதை, தன்வரலாறு, வரலாற்றுக் காவியம், நாடகம் மற்றும் வசனம் என எல்லாவிதங்களிலும் கைதேர்ந்த படைப்பாளியாக வலம் வந்தார் கலைஞர்.
ஐம்பெரும் காப்பியங்களான
சிலப்பதிகாரம் மணிமேகலை சீவகசிந்தாமணி
வளையாபதி குண்டலகேசி
ஆகியவற்றை முழுமையாக வாசித்து உள்வாங்கியவர் கலைஞர். அவரின் எழுத்து மற்றும் பேச்சுகளில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும். 
 
தமிழ்த்தாய் வாழ்த்தை எல்லா அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பாட வைத்த பெருமை கலைஞரையே சேரும்.
இறுதியாக தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடிய “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலின் ஆசிரியர் கலைஞரே.
உலகப்புகழ் நாடக ஆசிரியர் ஷேகஸ்பியர் எழுதியது 38 நாடகங்கள்; தலைவர் கலைஞர் எழுதிய நாடகங்களின் எண்ணிக்கை 34 என்ற இந்தத் தகவல் ஆச்சரியம் மட்டுமல்ல; அதற்கும் மேல்!
 
Wality 69 Fountain pen:
கலைஞர் பயன்படுத்திய எழுதுகோல் Wality 69 Fountain pen. வாழ்க்கையில் பெரும்பான்மையாக இந்த எழுதுகோலைத்தான் அதிகமாக உபயோகித்தார். சூன் 30, 2001 நள்ளிரவில் கலைஞரைக் கைது செய்து, ஒரு குற்றவாளியைக் கையாள்வது போலக் கையாண்டனர் ஏவல்துறையினர். அப்போது அவர் சட்டையை இழுத்துப் பிடித்துத் தூக்கிய போது கலைஞரின் சட்டைப்பை பகுதி கிழிந்தது. ஆனால் அந்த Wality 69 Fountain pen அவரைவிட்டுப் பிரியவில்லை.
 
Battle of Marina:
திருவாரூர் பள்ளியில் தலைமையாசிரியர் கஸ்தூரி அய்யர் அவர்களிடம் தனது 12 வயதில் போராடித்தான் வகுப்பில் நுழைந்தார் கலைஞர். அவர் இறந்த பிறகும் போராடித்தான் மெரினாவில் தனது உன்னதத் தலைவர் அறிஞர் அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட்டார்; வாழ்நாள் போராட்டக்காரர் தலைவர் கலைஞர் அவர்கள். புத்தக ஆசிரியர் 2010ஆம் ஆண்டு புதிய சட்டமன்றம் கட்டும் பணி நடக்கும்போது நடந்த ஒரு நிகழ்வை இந்த அத்தியாயத்தில் அழகாக விவரிக்கிறார். இரவு சுமார் 10.00-11.00 மணிக்கு செயலாளர் திரு.ராமசுந்தரத்திடம் அண்ணா நினைவிடம் செல்வோம் என்றார். அவர்கள் இருவரும் மற்றும் சில காவலர்களும் பயணிக்கின்றனர். அண்ணா சமாதியில் இருவரும் தேநீர் அருந்தியபடியே உரையாடுகின்றனர்.
கலைஞர்: அண்ணா சமாதியில் என்ன வாசகம் இருக்கிறது தெரியுமா ?
ராமசுந்தரம்: தெரியும் அய்யா, “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது!"
கலைஞர்: அமைதியாக “எனக்கும் இங்கேதான் உறங்கணும்”
சில நிமிட அமைதி நிலவுகிறது.
ராமசுந்தரம்: அது எல்லாம் இப்போ எதுக்கு அய்யா பேசணும், நாம கிளம்பலாம் ரொம்ப லேட் ஆயிடுச்சி.
கலைஞர் நினைவிடத்தில் இன்று பொறிக்கப்பட்டுள்ள வாசகம் “ஓய்வு எடுக்காமல் உழைத்தவன், இதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்”.
 
எளிமையான உரையாடல் காலம், சூழல், இடம் காரணமாக அதனை ஆழமான உரையாடலாக்கியது. கலைஞரின் இறுதி ஆசையை நிறைவேற்றத் தயங்கிய அதிமுக தலைமையை சட்டத்தால் வென்றது கலைஞர் கட்டிக்காத்த இயக்கமான திமுக. லண்டன் West Minister Abbeyக்கு நிகராக மெரினாவின் அண்ணா சதுக்கத்தை ஒப்பிடுகிறார் ஆசிரியர் ம.பாரூக்.
 
இந்தப் புத்தகத்தில் நான் வியந்து ரசித்த சில சொல்லாடல்கள், இவற்றை அந்த அத்தியாயத்தில் அழகாகச் சேர்த்து தனது கருத்துக்கும் முலாம் பூசியுள்ளார் ஆசிரியர்.

Quotes:
Turn in any direction you like, caste is the monster that crosses your path, Ambedkar.

Tamil Nadu is a paragon of administrative innovation among Indian states, Amartya Sen.

Merely because water in the sea evaporates, it does not become a desert; merely because the river mingles into the sea, they do not dry up.

He who controls others may be powerful, but he who masters himself is mightier still.

Sleep is a symbol of peace and rest: it symbolizes innocence, purity and peace of mind.

Cowards die many times before death; the valiant never taste of death but once, Julius Caesar.

History of Dravidian movement has not been written yet. It has entered into a new phase now.

Forgive your enemies but never forget their names, John F Kennedy.

I have lived a peru vazhvu.

Kalaingarist:
சமீபத்திய அரசியல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலால் எனது வாசிப்பு சற்று குறைந்தாலும் சில வாரங்களாக இந்தப் புத்தகம் என்னோடு பயணித்தது. திராவிட இயக்கத்தின் துருவ நட்சத்திரமான தலைவர் கலைஞர் பற்றி ஆங்கிலத்தில் வாசித்தது மனநிறைவாக இருந்தது. காட்டாற்று வெள்ளத்தை அணை போட்டு அதன் வலிமையைக் காட்டலாம், கலைஞர் போன்ற மாபெரும் ஆளுமைக்கு இந்தப் புத்தகம் அவரின் தாக்கத்தை உணர்த்தும் ஓர் அணை. இந்தத் தாக்கத்தை அணையாமல் இருக்கவைப்பது திராவிட இயக்கக் கோட்பாடுகளில் நம்பிக்கை உள்ளவர்களின் கடமை.

தலைவர் கலைஞர் பற்றி பேராசிரியர் பாரூக் எழுதிய KALAIGNAR : THE GREAT
அருமையான புத்தகத்தைத் திறனாய்வு செய்ததில் மனநிறைவை அடைந்தேன். 



-------------------

No comments:

Post a Comment