Wednesday, February 13, 2019

மந்திரம் - ஒரு பொருள் விளக்கம்



—  இராம.கி.


            இரு மொழிகளிலும் சிறந்த புலமைபெற்ற சிவாச்சாரியார்களையும், பட்டர்களையும் வைணவ ஆச்சாரியார்களையும் உள்ளடக்கிய தென்னிந்திய அருச்சகர் சங்கம் வெளியிட்ட சிவாகம விளக்கவுரை நூலிலிருந்து எடுக்கப்பட்டதாக மந்திரமென்ற சொல்லுக்கு
சமசுகிரதத்தில் ‘மந்திரம்’ என்னும் சொல் மநநம் + த்திராணம் என்னும் இரு சொற்களின் புணர்ச்சியால் ஏற்பட்டதாகும் இச்சொல் வாசகம் வாச்யமென்று இரண்டாக விரியும். அதாவது தான் நினைத்த பொருளைப் பிறர்க்குத் தெரிவித்தலும், பிறர் தெரிவித்ததனைத் தாமுள்ளுணர்தலமாகும் 
            என்று விளக்கம் சொல்லப்பட்டது. படித்து நான் வியந்துபோனேன். என் குறைபட்ட மொழியியலறிவில் புரிந்துகொண்டபடி, மநநம்+த்ராணம் என்பது ஒருநாளும் மந்திரமாகாது. புணர்ச்சியில் அது மநந்த்ராணம் என்றே திரியும். கண்டமேனிக்குச் சங்கத இலக்கணம் இப்படியெல்லாம் வேலை செய்யாது. இதுபோன்ற “பௌராணிக விளக்கங்களை” வைத்துப் பொருள்கொள்வோருக்கு என்னசொல்ல முடியும்?. மோனியர் வில்லியம்சைப் பாருங்கள் என்றுமட்டுமே சொல்லமுடியும். பௌராணிகர்களைப் பார்த்தால் தடுமாறத்தான் வேண்டும். மந்திரத்தின் தாதுவாக ”மந்”நையே மோனியர் வில்லியம்சு அகரமுதலி சொல்லும். அத்தாது, ஆத்மனேபாதத்தில் சொல்லப்பட்டதில், 8.4 ஆம் வகையைச் சேர்ந்ததாம். பாணினியின் தாது பாடப்படி, அது xxx, 9; xxv, 670 என வகைப்படுத்தப் படும்.

            இதன் அடிப்பொருள் to think, believe, imagine, suppose, conjecture என்பதே. இதன் அடிவழி வந்த சொற்கள் பல. மந, மநந, மநஸ், மநு, மநுஷ், மநோ, மந்த்து, மந்த்ர, மந்த்ரி போன்றவையும் பிறவும் ஆகும். இவையெலாம் ஒழுங்கான சங்கத இலக்கணவழி வந்த சொற்கள். ”சூ, மந்திரக்காளி, ஓடிவா, ஓடிவா” என்றபடி, மநந்த்ராணம் என்றசொல் மந்த்ரம் ஆகிவிடாது. மந்த்ர என்பதற்கு instrument of thought, speech, sacred text or speech, a prayer or song of praise என்று பொருள் சொல்வர். இதன்படி “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” போன்று இன்னும் பலவும் மந்திரங்களே. அவற்றைச் சொல்வதில் ஒருவிதமான எழுச்சி, நிறைவு, அமைதி போன்றவை ஒருவருக்குக் கிடைக்குமானால் அம் மந்திரங்களுக்குப் பயனுண்டு தான். இவை மனம் தொடர்பானவை.

            மந் எனும் தாதுக்கும் முந்தையதாய் முல்*>முன்>மன் எனும் வேரைத் (முன்னு-தல் வினையைத்) தமிழ்ச்சொற்பிறப்பியல் சொல்லும். (”வேறுபல முன்னிய விரகறி பொருந - பொருநராற்றுப்படை 3) கன்னடத்திலும் இது முந்நு என அமையும். ஞாவகம் கொள்ளுங்கள். மொழியீற்றில் னகரம் என்பது நகரத்தின் போலி. சொல்முடிவில் வெரிந் என்றசொல் தவிர்த்து மற்ற சொற்களில் னகரமே ஈற்றாகும். பொதுவாக முன்னுதலென்பது பொருந்தல் பொருளையே உணர்த்தும். மு- வும் நு வும் பல சொற்தொடக்கங்களில் போலிகள்.’ மன்>மன்னு, மனம், மனசு, மனனம், மன்>மான்>மாந்து, மாந்தன், மந்திரம், மந்திரி என்ற சொற்களைத் தமிழென்றுஞ் சொல்லலாம். மன்னுந் திரம்(>திறம்) தமிழில் மந்திரமாகும். இதற்குச் சங்கதத்தைத் துணைக்கழைக்கத் தேவையில்லை.

            அன்றாடம் நாம் காணும் காட்சிகளை, பட்டறிந்தவைகளை, ஏதோசிலவோடு பொருத்துகிறோம். அப்பொருத்தல்களே நம்மூளையில் பதிகின்றன. பின் நினைவாகின்றன. முன்>நுன்>நின்>நினை என்பதும் முன்னுதலின் இன்னொரு வடிவுதான். இதேபோல் முன்>உன்>உன்னு என்பதும் இன்னொரு வடிவு. உல்>உள்>உள்ளம் என்பதும் மனத்தின் இன்னொரு சொல். உள்>ஒர்>ஓர்>ஓர்தல்= பொருந்தல். கருதல், கண்ணுதல் என்ற சொற்களும் பொருந்தல் தொடர்புள்ளவை செ>செத்து>சித்து>சிந்து>சிந்தனை என்பதும் கருதல் தொடர்பானது. முன், நினை, உன், உள், ஓர், கண், கருது, சித்து என்பவற்றின் அடியிலும் பலநூறு தமிழ்ச்சொற்கள் உள்ளன. எல்லாவற்றையும் சங்கதப்படுத்திப் பார்ப்பது நம்மை அடிமைத்தனத்திற்கே இட்டுச்செல்லும். வழக்கம்போல் ஒரு சிலர் எதுமுந்தி என்பதில் குடுமிப் பிடிச் சண்டையும் போடலாம். அது வேறு கதை.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப
            என்று வரையறை தருவார் தொல்காப்பியர் (செய்யுளியல் 178). இதைவிடச் சிறப்பான வேறு வரையறையை மந்திரத்திற்கு நான் கண்டேனில்லை. மேலேசொன்ன “சிவசிவ, ஓம் நமசிவாய, ஓம் நமோ தமிழ்  நாராயணா, ஓம் மணிபத்மே ஹூம், பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடு நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு .......” என்பன வெல்லாமும் நிறைமொழி மாந்தரின் ஆணையில் கிளந்தவையே. மந்திரம் என்பது வாய்மொழி எனவுஞ் சொல்லப்படும். திருமூலர் அருளிய திருமந்திரமும், நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியுங் கூட மந்திரவகையைச் சேர்ந்தவை தான். வாய்மொழி என்பதைச் சிவவாக்கியர் நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல் ஒரு பாட்டில் சொல்லுவார்:
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணன்று சொல்லுமந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ? நாதனுள்ளி ருக்கையில்
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?  
            முள்ளுதல்> மொள்ளுதல் என்பது வாய்க்குள் நாவை உருட்டி ஒலிஎழுப்புவது. மொள்>மொழு>மொழி என்பதும் அதே பொருள்தான். முள்>முழங்கு = சத்தமாய் ஒலியெழுப்புவது. முள்>முழு<முணு> முணுமுணுப்பு= காதில்கேட்காத அளவிற்கு மென்குரலில் சொல்வது., பலரும் மந்திரம் சொல்லும்போது சத்தமிட்டுச் சொல்ல மாட்டார். முணுமுணுத்தே சொல்வார். மந்திரம் என்றால் என்னவென்று புரியச் சிவவாக்கியரின் மேலுள்ள வாக்கும் தேவைதான்.



தொடர்பு: 
இராம.கி.  (iraamaki@bsnl.in) 
http://valavu.blogspot.com







No comments:

Post a Comment