Thursday, February 14, 2019

காதல் ...


——    கவின்மொழிவர்மன்



            உலகத்தில் எல்லா உயிர்களிடத்தும் காதல் இருக்கிறது.  பூமி முதலான கோள்கள் சூரியனைச் சுற்றுவதும் காதல்தான்.  தாமரை, சூரியகாந்தி போன்றவை சூரியனைக்கண்டு மலர்வதும்,  மல்லிகை,முல்லை போன்றவை வெண்ணிலவைக் கண்டு மலர்வதும்,  தென்றலின் தீண்டலில் கார்முகில் பொழிவதும்,  திங்களின் வரவில் செங்கதிர் மறைவதும் காதலே.  விலங்கினத்தும் காதல் உண்டு.  தன் இனத்து உயிர்களுக்குப் பிறவற்றால் தீங்குநேர துடிக்கும் பறவைகளும் விலங்குகளும்.  தன் இணையைப் பிரிந்துவிட்டால் உணவின்றி சாகும் உயிர்களும் உண்டு.

            காதல் யாருக்கும் யாவற்றுக்கும் சொல்லி வருவதில்லை, சொன்னாலும் போவதில்லை.  இவர்மீதுதான் இப்போதுதான் வரவேண்டும் என்பதில்லை.  எந்த வயதிலும் வரலாம்.  யார்மீதும் வரலாம்.  காதல் கண்ணுக்குத் தெரிவதில்லை.  காற்றைப்போலத் தேகம் தீண்டுவதும் இல்லை.  வானவில் போல வண்ணம் நிறைந்ததும் இல்லை.  நிறமற்று,உருவற்று உணர்வுள்ள ஒன்றுதான் காதல்.

            ஆதலால் கடவுள் எனச் சொல்லலாமா?   ஆம்.சொல்லலாம்.

            கடவுளைப் போலத்தான் காதலும்.  வெகுவாக சிலிர்க்க வைக்கும், சிரிக்க வைக்கும், சிறக்க வைக்கும். ஏன் இறக்கவும் வைக்கும்.  பெற்ற தாய்க்காகவோ உடன் பிறந்த பிறப்புக்காகவோ யாரும் உயிர் விடுவதில்லை.

             பெற்றோர்மேல் அன்பு தன்னை ஈன்றதால்.   பிள்ளைகள்மேல் அன்பு தன்னால் ஈன்றதால்.   உடன்பிறந்ததால் சகோதர அன்பு.

            முன்பின் பார்த்தறியாது, முழுவதும் கேட்டறியாது, கண்ணோடுகண்பேசி  கலந்துவிட்ட நொடிப்பொழுதில் உன்னோடுதான் வாழ்வெனக்கு என்று உயிரோடு பிணைவதுதான் காதல்.

            வேறு எந்த உயிர்களிலும் இல்லை இதுபோன்ற ஒரு உணர்வு. உண்மை காதலில் தனது இணை தன்னை விட்டுச்சென்றாலும், தன்னையே வெறுத்தாலும், தான் நேசித்த இதயத்தால் தனக்கு வேதனை அவமானம் ஏன் உயிரே போகும் நிலை வந்தாலும்,  தன் காதலுக்காக அனைத்தையும் மகிழ்வோடு ஏற்கும் ஒரு உயிர்தான் மானுடப்பிறப்பு.

இந்தக் காதல் நிறைய பேரை சாதிக்க வைத்திருக்கிறது. 
இந்தக் காதல் நிறைய பேரை சோதிக்கச் செய்கிறது.
இந்தக் காதல் நிறைய பேரை சிரிக்கவும் அழவும் வைத்திருக்கிறது.
காதலிக்காகவும் காதலனுக்காவும் உயிர்பிரிந்தவர்கள் ஏராளம் ஏராளம்.

            இதே காதலுக்காக கொலை செய்தவர்களும் உண்டு.  மிருகத்தை மனிதமாக்குவதும் மனிதத்தை இறைவனாக்குவதும் இந்தக் காதல்தான்.  இதேக் காதல்தான் ஒருவனைப் பைத்தியமாகவும் அறிவாளியாகவும் மாற்றுகிறது.

            காதலின் சுகமானது காதலை வென்றவர்களுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை.  காதல் முடிந்து கல்யாணமானபிறகு அவர்கள் காதலை கொன்றுவிட்டு கணவன் மனைவியாக மட்டுமே வாழ்கின்றனர்.
 காதலில் தோற்றவர்கள் பெரும்பாலும் காதலுக்காகவே நினைந்து உருகி மருகி அழுது புலம்பி இறுதியில் இறந்தும் போகின்றனர்.  இங்கே மரிப்பது உடல் மட்டுந்தான்.

            காதல் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. யாரையும் பொய்யாக நேசிக்காதீர். யாருடைய உணர்வுகளையும் குத்திக் கிழிக்காதீர்.  உணர்வைக் கொல்வதும் ஒரு கொலையே.  இவர்கள் தண்டனையில்லா மறைமுக கொலைகாரர்கள்.  இவர்களில் காதல் என்ற பெயரில் ஏமாற்றுபவர்களும்,காதலித்து ஏமாற்றுபவர்களும் அடக்கம்.

            நேசிப்பதிலும் நேசிக்கப்படுவதிலும் ஒரு உயர்ந்த சுகம் இருக்கத்தான் செய்கிறது.  இதை எவ்வளவு விலை கொடுப்பினும் வாங்க இயலுவதில்லை.  எந்தக் கடையிலும் கிடைப்பதில்லை.  உண்மையான அன்பு உலகம் உள்ளளவும்  அழிவதில்லை.

ஆதலால் காதல் செய்வீர்...

உன்மீது நான்
கொண்ட நேசம்
உலகிலே இல்லாத
 மகரந்த வாசம்
காற்றோடும் மழையோடும்
கரைந்திடா பாசம்
கடலையும் வானையும்
தாண்டியே வீசும்,

விண்ணோடும் முகிலோடும்
உன்னுருவத் தோற்றம்
கண்ணோடு இணைந்த
கண்மணியாய் ஒளிவீசும்
இன்றல்ல நேற்றல்ல
இதுபோலே பாசம்
இறந்தாலும் இறவாது
நான்கொண்ட நேசம்.





தொடர்பு:  கவின்மொழிவர்மன் (kavinmozhitamil@gmail.com)





No comments:

Post a Comment