Sunday, December 19, 2021

மாதங்களில் நான் மார்கழி!

-- ருத்ரா இ.பரமசிவன்


மாதங்களில் நான் மார்கழி!
அந்த நாற்றமெடுத்த‌
பாம்புப்படுக்கையை விட‌
சூரியனின் இந்த‌
ஏழுவர்ணப் பளிங்கு உயிர்த்துளி  எனும்
பனித்துளிக்குள்
படுக்கை விரித்துக்கொண்டே
படைப்புக்கு ரிமோட் தட்டுவேன்
என் தொப்புள் கொடியில்.
வடிவ கணிதம் எனும்
ஜியாமெட்ரியில்
குறுக்குக்கோடும்
நெடுக்குக்கோடுமே
இறைவர்கள்.
வாழ்க்கையின் வடிவ கணிதமும்
நின்றவண்ணமும்
கிடந்த வண்ணமுமாகவே
நிகழ்வுகளை நகர்த்துகின்றன.
படுக்க இடம் கிடைக்காமல்
சிவனின் திருநீற்றுக்கோட்டில் கூட‌
நான் கிடந்திருக்கிறேன்.
அவன் சூலத்திலும்
நின்று விறைத்திருக்கிறேன்.
இந்த‌
ரெண்டும் ரெண்டும் நாலு
என்ற உண்மையைக்கூட‌
நான்கு மறைக்குள்
நீங்கள் பதுக்கிக்கொள்ள வேண்டுமா?
மார்கழியின்
மரகதப் புல்நுனியில்
ஊரும் சிறு பூச்சி
அதையும் விட சிறு பூச்சியை
தீனியாக்க விரைகிறது.
இயற்கையில்
ஒரு மரணத்தின் வாயில்
இன்னொரு மரணம் அமர்ந்திருக்கிறது
ஜனனமாக.
இதை நீள நீளமாய்க் கட்டியிருந்த‌
மூங்கில் வேலிக்குள் முடங்கி
மரவட்டையாய்
நகர்ந்து நகர்ந்து
என்னைத் தரிசிப்பவர்களே!
உங்கள்
மூளைக்குள் பாலம்
த‌ன்
நுண்ணிய நியூரோன் முடிச்சுகளின்
அந்த‌
"பர்கிஞ்சே செல்களின்"
வாசல்களை திறக்கச்செய்யுங்கள்.
நீங்கள் தரிசித்ததை
எனக்கும் சொல்லுங்கள்.
எனவே
மார்கழி என் பள்ளிக்கூடம்.
பாடம் நடத்துங்கள்.
என் ஞானக்குளியல்
உங்கள் கேள்விகளிடம் தான்.
பாடங்கள்
சந்தியாவந்தனத்துடன்
மனப்பாடம் செய்யப்படுவதற்கானவை அல்ல.
பாடங்கள்
படிக்கப்பட வேண்டியவை.
அறியப்பட வேண்டியவை..
"மறை"கப்பட வேண்டியவை அல்ல.
அறியப்படுவதற்காக
அப்புத்தகங்கள் திறக்கப்படுவதே
உங்கள் சொர்க்க வாசல்.

------------------

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி



-- பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன்



               ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி
                              ஆதியும் அந்தமும்
               இல்லா அரும்பெருஞ்
                              சோதியை யாம்பாடக்
               கேட்டேயும் வாள்தடங்கண்
                              மாதே! வளருதியோ?
               வன்செவியோ நின்செவிதான்?
                              மாதேவன் வார்கழல்கள்
               வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
                              வீதிவாய்க் கேட்டலுமே
               விம்மிவிம்மி மெய்ம்மறந்து
                              போதார் அமளியின்மேல்
               நின்றும் புரண்டிங்ஙன்
                              ஏதேனும் ஆகாள்
               கிடந்தாள் என்னே! என்னே!
                              ஈதே எங்தோழி
               பரிசேலோர் எம்பாவாய்!

விளக்கம்:
எந்நாட்டவராலும் எக்  காலத்தவராலும் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு என்றும் நிலைத்த பண்புகளையோ, உண்மைகளையோ நெறிகளையோ சிந்தைக்கும் செவிக்கும் இனிய செஞ்சொற்களால் உரைப்பதே சிறந்த இலக்கியமென இலக்கண வரம்பு வகுப்போமானால் மணிவாசகர் அருளிய திருவாசகம் தலைசிறந்த தமிழ் மாமறையாகத் திகழ்வதாகும்.

திருவாசகத்தில் பேசப்பெறும் செய்தி, காலம், இடம் என்னும் பாகுபாடுகளைக் கடந்த, சிந்தை செல்லாச் சேணகத்ததாய்  முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய்ப் பின்னைப் புதுமைக்கும்  பின்னைப் புதுமையாய்ப் பிறங்குகின்ற பேரருட் பிழம்பைப் பற்றியதும், அவ்வருள் ஒளியை நாடிக் கலந்த ஒரு சிற்றுயிர்க்குற்ற பலதிறப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியதுமாகும்.

இன்னினிய பண்ணினிமையும், பொருட்செறிவும், கலை நலமும் வாய்ந்த சொற்களால் கற்பவர் பயிற்சிக்கும் உணர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்பப் பொருள் பொலியுமாறு வளவிய பாடல்களை வழங்கிய வள்ளன்மை திருவாசகத் திறமாகும்.

திருவாசகப் பதிகங்களிடையே ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக‘ எனப் பாராட்டப் பெற்ற பகுதி திருவெம்பாவையாகும்.

மனங்கவர் திருவெம்பாவையை மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் தங்கியிருந்த காலத்தில் அருளிச் செய்ததாகக் கடவுள் மாமுனிவர் தாம் எழுதிய “திருவாதவூரர் புராணத்தில்“ குறித்துள்ளார்.

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் தமது “திருப்பெருந்துறைப் புராணத்தில்“ அக் கருத்தையே ஏற்றுள்ளார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் திருவெம்பாவையைத் தில்லையில் அருளிச் செய்ததாகக் கருதி ஓர் ஆசிரியப்பா பாடியுள்ளார்.

இவர்களுக்கெல்லாம் காலத்தில் முற்பட்டவராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பி தமது “திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில்“ திருவெம்பாவையைத் திருப்பெருந்துறையிலே அருளிச்  செய்ததாகக் கூறியுள்ளார்.

இவ்வாறு திருவண்ணாமலையிலும், தில்லையிலும், திருப்பெருந்துறையிலும் தெய்வ நலம் கற்பார் உள்ளத்தைக் கனிவிக்கின்றது.

பழந்தமிழ் நூல்கள் காட்டும் பாவைப்பாட்டு என்னும் வகையைச் சார்ந்தது திருவெம்பாவை.  

நீர்த்துறையில் சீர்இள மகளிர் பாவையமைத்து நீராடி வணங்கும் நீர்மையைப் பொருளாகக் கொண்டது இப்பாட்டு.

பழங்காலத்தில் முழுத் திங்கள் வழியாக மாதங்கள் கணக்கிடப்பெற்றன.

அதனால் மாதத்தைத் திங்கள் என்று குறிப்பது வழக்கம்.

பழந்தமிழ் நூல்களில்  மாதம் என்ற சொல் காணப்படாது திங்கள் என்றே கூறப்படும்.

நாம் இப்போது வழங்கும் மார்கழித் திங்கள் மார்கழி முழுமதியோடு முடியும்.

மறுநாள் தொடங்கும் தைத் திங்கள் தை முழுமதியோடு முடியும்.

எனவே இம்மார்கழி நீராட்டைத் தைந்நீராடல், தையில் நீராடிய தவம் எனச் சங்கச் சான்றோர் குறித்தனர்.

இன்று ‘இவ்வூராரெல்லாம் தை நீராடுப, மருவூரார் தை நீராடினார்‘ என்னும் இலக்கணச் சொற்றொடர்களும் பாவை நோன்பு புரிந்திருந்த பாங்கைச் சுட்டிக் காட்டுகின்றன.

வெப்பம் மிகுந்த நாடுகளில் தண்புனலுக்குத் தனிச் சிறப்பு உண்டாவதும், நீராடுதலே விழாவாதலும் ஆகும்.

அவ்வகையில் பாவைப் பாட்டு நீராடுதலை அடிப்படையாகக் கொண்டிருத்தலும் இயல்பாகும்.

இப்போதைய தாய்லாந்து எனும் சயாம் நாட்டில் நடைபெறும் முடிசூட்டு விழாவில் திருவெம்பாவை ஓதப்பெறுவது தமிழ் நாகரிகம் உலகளாவிப் பரவியிருந்த மாட்சிமைக்குச் சாட்சியாகும்.

 ‘ஆணவக் காரிருளில் அழுந்தி உறங்காமல் அருள் வெள்ளத்தில் நீராட வருக‘ என அழைப்பதே திருப்பாவையின் உட்பொருள் என ஆன்றோர் கூறுவர்.
நாடு மழையால் நலம் பெறவேண்டும்.
வீடு சிறந்த கணவனால் வளம் பெறவேண்டும் என, நாடும் வீடும் செழித்தோங்கப் பாடும் பாவையர் பொய்கையருகே கூடிப் பரவுகின்றனர்.
 வெள்ளி முளைப்ப விடியல் வந்ததும் வீடுதோறும்  நாடி ஒருவரையொருவர் சென்று எழுப்புகின்றனர்.
எம் பாவாய் என அன்போடு அழைக்கின்றனர்.
இன்னுமா இருள் உறக்கம்!
எப்போது உனக்கு அருள் பிறக்கும் !  உண்டாக வேண்டாமா உருக்கம்!
அப்படியென்ன தூக்கத்தில் ஆசை ! அங்கே கேட்கவில்லையா எங்கள் பாட்டு ஓசை! என்றெல்லாம் பேசுகிறார்கள்.
பரம்பொருளை நினைத்து மகிழ்கிறார்கள்.
திருவருளின் பெருங்கருணைக்கு நெகிழ்கிறார்கள்.

இப்படி மகளிர், தமக்குள் பேசிக்கொள்வது இளமைக்குரிய ஏச்சா! வெறும் பேச்சா?
இல்லை பெரும் மூச்சு – ஞான உரை வீச்சு எனக் காட்டப் பெறுகிறது.
இவ்வண்ணம் எழுந்த பாவைப்பாட்டு இதோ வீதி வாய்க் கேட்கிறது.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை அவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள்.

உலகின் எல்லாப் பொருளுக்கும் முதலும் முடிவும் உண்டு.தோற்றமும் இறுதியும் உண்டு. எல்லாப் பொருளும் தோன்றவும் மறையவும் இடந்தருகின்ற  -  காண்பதற்கு அருமையும் உரைப்பதற்குச் சொல்லி முடியாத பெருமையும் பூண்ட பொருளாகிய – இருள் நீக்கித் தெளிவும் ஒளியும் ஊட்டுகின்ற பேரொளிப் பிழம்பாகிய சோதியின் நலங்களை உன் தோழியராகிய நாங்கள் பாடிப் பரவுகின்றோம்.

எங்கள் பாட்டொலி கேட்டும்  விழித்து எழவில்லையே நீ !
நீண்ட ஒளியும் நெறியான அளவும் பொலிவான அழகும் பொங்கி மிளிர்கின்ற விழியழகி நீ !
உன் காதென்ன கேட்காத காதா? மற்றொரு  தோழியோ பெருந் தேவனாகிய பரம்பொருளின் திருவடிகளை வணங்கிப் பரவும் எங்கள் குரலொலியைத் தெருமுனையில் கேட்ட அளவிலேயே உணர்வு மிகுந்து, உள்ளம் நெகிழ்ந்து மனங்கரைந்து தேம்பித் திகைத்துத் தன்னை மறந்து செயலற்று மெத்தென்ற அமளியிலிருந்து பொத்தென்று வீழ்ந்து புரண்டு செயல் மறந்து கிடக்கின்றாள்.

இத் தோழியின் உருக்கவியல்பு இப்படி உள்ளதே !  
இதனை எண்ணிப் பாராய் !
எம் பாவாயே !

ஒன்பது சக்திகள் ஒருவரை ஒருவர் எழுப்பும் வகையில் மனோன்மணியாகிய சக்தி சர்வபூத தமனியை எழுப்புவதாகத் துயில் எழுப்பும்  எட்டுப் பாக்களுக்கும் நுண்பொருள் கூறுபவருண்டு.

உயிர்கள் விழிப்புற்றுத் திருவருள் நலத்தில் மூழ்கி எழுந்து தெளிவு பெறுவது என்றும், அடியவர்கள் பலராகச் சேர்ந்து அருள் வழிபாடியற்றுவது என்றும் இப் பகுதிக்குப் பொருள் கூறலாம்.

இத் திருப்பாட்டில் கேவல நிலையிலுள்ள உயிர், பாடிக் கேட்டும் துயிலெழாமல் ஆணவத்தால் கட்டுண்டு இருண்முடி இறைவனை நினையாது வாளா கிடக்குமெனவும், சுத்த நிலையிலுள்ள உயிரோ இறையருட் பாடலைக் கேட்ட போதே அன்பின் பெருக்கினால் தன்னுடலை மறந்து உலகுநெறி விட்டுச் சிவநெறி புகுந்து சிவானந்தத்தில் மூழ்கித் திளைத்து நிற்கும் இயல்புடையதெனவும், இடைப்பட்ட சகல நிலையிலுள்ள உயிரோ விரதங் காப்பதோடு ஆண்டவனை அருட் பாடல்களால் துதித்தும் வழிபாடு செய்தும் புண்ணியப் பேற்றினையடைதற்கு முயலுஞ் சிறப்புடையதெனவும் உணர்த்தப்படுவதாகவும் நலம் உய்த்தறியலாம் என மூவகை இயல்பும் இப் பாடலில் குறிக்கப்பட்டன.

-----




Sunday, December 12, 2021

தமிழில் கடன் சொற்களுக்கு என விதிமுறைகள் உண்டு

-- முனைவர் செ. இராஜேஸ்வரி


அண்மையில் ஒரு வெளிநாட்டு நகைச்சுவைத் துணுக்கு ஒன்று சமூக வலைத் தளத்தில் பரவியது. ஓர் ஆசிரியரிடம் மாணவன் 'ஏன் மேடம் hour, horse போன்றவற்றில் ‘h’ silent ஆக இருக்கிறது என்பான்?'  அதற்கு அந்த ஆங்கில ஆசிரியை,  'ஆமாம் அது அப்படித்தான் என்பார்'.  மதிய உணவு இடைவேளையின் போது அந்த ஆசிரியை அதே மாணவனை அழைத்து தன் லஞ்ச் பாக்சை கொடுத்து heat  என்பார். அவன் சிறிது நேரம் கழித்து அந்த பாக்சை கொண்டு வந்து அவரிடம் கொடுப்பான்.  திறந்து பார்த்தால் அதில் ஒன்றும் இருக்காது, அதிர்ச்சி அடைவார் அந்த ஆசிரியை. 'என்னப்பா இது? உன்னை உணவைச் சூடு படுத்திக் கொண்டு வர சொன்னேன். இப்போ பாக்சில் ஒன்னும் இல்லையே. நான் சொன்னது புரியலயா?  எங்கே என் சாப்பாடு?'  என்பார். அதற்கு அந்தப் புத்திசாலி மாணவன் 'மேடம் ‘h’ silent தானே அதனால் நான் eat என்று புரிந்துகொண்டேன். உணவைச் சாப்பிட்டு முடித்துவிட்டேன்', என்பான்.
 
இன்றைக்குப் பல ஆசிரியர்கள் நிலை இதுதான். மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரிவதில்லை. ஆங்கிலத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்வோம். ஆங்க்லோ சேக்சன் மொழி என்பது ஆங்கிலத்தின் தாய் மொழி. அந்த ஆங்க்லோ சேக்சனில் அறிவியல், தத்துவ இயல் (religion and philosophy) துறைகளில் சொற்கள் இல்லை. அதனால் ஆங்க்லோ சேக்சன் மொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலிருந்து இந்தச் சொற்களை கடனாகப் பெற்றது. பண்பாடு மற்றும் நிர்வாகத் துறை சார்ந்த சொற்களைப் பிரஞ்சு மொழியிலிருந்து ஏராளமாகக் கடன் வாங்கியது. கடன் வாங்கி, கடன் வாங்கி அதன் மொத்த உருவமும் மாறிவிட்டது. அதனால் அதற்குப் பிறகு மாறிய அந்த புது மொழி  'ஆங்கிலம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இந்த மொழிக்கென்று எழுத்து வடிவமும் கிடையாது.  எனவே அது இலத்தீன் மொழி எழுதப்பட்டு வந்த உரோமன் எழுத்துக்களையும் (Roman script) கடனாகப் பெற்றது.

மொழியில் கடன் வாங்குவதில் ஒரு வரைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஆனால் தொடக்கக் காலத்தில் சொற்களைக் கடனாக பெற்ற போது பழைய பிரெஞ்சு மொழியிலிருந்து hour, honest, heir போன்றவற்றை ஆங்கிலம் அப்படியே ஏற்றுக்கொண்டது. இந்தச் சொற்களில் ஹெச் ஒலி ஒலிக்கப்படுவதில்லை. இதை மொழியியலாளர் ஒலிப்பிலா ஒலி (overt phoneme) என்பர். கடன் வாங்கியபோது இந்த சைலென்ட் ஒலிகளை ஆங்கிலம் நீக்கியிருக்க வேண்டும். இடையில் வரும் தேவையற்ற ஒலிப்பிலா ஒலிகளை(சைலென்ட்);   (அதாவது, calm என்பதில் உள்ள l, psychology இல் முதலில் உள்ள p, river இல் கடைசியில் வரும் r போன்றவற்றை) நீக்கி ஆங்கிலத்துக்கு ஏற்ப மாற்றியிருக்க வேண்டும். அப்படியே எடுத்துக்கொண்டதால் இப்போது கேள்வியும் மாற்றமும் தவிர்க்க இயலாததாயிற்று.

கிரேக்க மொழியிலும் ஹெச் ஒலி ஒரு எழுத்துக்கு மேல் ஒரு கமா குறியீடு வலது பக்கம் திரும்பி இருந்தால் ஒரு ஒலியும், இடது பக்கம் திரும்பி இருந்தால் ஒரு ஒலியுமாக  ஒலிக்கப்பட்டது. இந்தச் சொற்களையும் அப்படியே கடனாகப் பெற்ற ஆங்கிலம் எந்த மாற்றமும் செய்யாமல் வைத்துக்கொண்டது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  ஒலி வரலாற்றை எடுத்துச் சொல்ல வேண்டும். ‘ஏன் calm என்ற சொல்லில் l ஒலிக்கப்படவில்லை?’ என்று மாணவர்  கேட்டால் "அது அப்படித்தான்". என்று சொல்வது பொறுப்பற்ற பதில். ஏன் river, water போன்ற சொற்களில் கடைசியில் வரும் r ஏன் ஒலிக்கப்படுவதில்லை என்று மாணவர்  கேட்டால் "அது அப்படித்தான் போய் படி. நூறு கேள்வி கேட்டுக்கிட்டு; ஒழுங்கா படிக்க துப்பில்ல; கேள்வி கேட்க வந்துட்டான்" என்று மாணவர் மீது பழி சுமத்தக் கூடாது. உயிரொலிக்கு அடுத்து  வரும் இடங்களில் l , r, போன்றவை ஒலிக்கப்படாமல் சைலென்டாக வரும் என்று கூறி palm, harm, farm, warm  போன்றவற்றைச் சான்றுகளாகக்  காட்ட வேண்டும். அப்போது ஆசிரியர் மீது மதிப்பு உயரும். சிலவற்றிற்கு விளக்கம் இருக்காது அப்போது அதையும் சொல்லியாக வேண்டும். ஏனெனில் மொழி என்பது பல நேரங்களில் இடுகுறி வடிவமாக இருக்கின்றது.

ஜப்பானியர் தன் மொழியை, கலாச்சாரத்தை உயிராக மதித்தனர். கலை இலக்கிய பண்பாட்டுக் களங்களில் அவர்கள் பழமையை போற்றினர். மொழி தன் தூய்மையை இழக்கக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அந்த மொழியில்  தனித்தனியாக மூன்று வகை எழுத்தினங்கள் உண்டு. 'காஞ்சி' என்பது சீன மொழியிலிருந்து கடனாகப் பெற்ற பெயர் சொற்களையும் வினைச் சொற்களையும் எழுதுவதற்குப் பயன்படுகிறது. 'ஹிராகானா' என்ற எழுத்து வகை, வேற்றுமை உருபுகள், கால இடைநிலை போன்ற இடைச் சொற்களை அல்லது ஒட்டுக்களை (clitics)  எழுதப் பயன்படுகிறது. 'கதகனா' என்ற எழுத்து வகைக் கடனாகப் பெற்ற பிறமொழிச் சொற்களை எழுதப் பயன்படுகிறது.  இவ்வாறு கடனாகப் பெறும் சொற்களைக் கூட அவர்கள் தமது ஒலிக்கு ஏற்ப மாற்றிவிடுகின்றனர். இதனால் இவை தனது மொழி சொற்கள் போலவே ஒலிக்கும்.

கணினியை ஜப்பானியர் கம்ப்யூத்தோ என்பர். ஏன் தெரியுமா? அவர்கள் மொழியில் 'ட' ஒலி கிடையாது. ஆகவே, கம்ப்யூட்டர் என்பதை 'கம்யூத்தோ' என்கின்றனர். இது ஜப்பானிய மொழி சொல் போலவே ஒலிக்கும். இது போல shirt என்பதை 'ஷாத்சு' என்பர். ஜப்பானியச் சொற்கள் உயிரொலியுடன் அல்லது nasal ending எனப்படும் ன், ம் போன்றவற்றுடன் முடியும். இந்தியாவை அவர்கள் 'இந்தோ' என்பர். இந்தியர் என்றால் இந்தோஜின். இவ்வாறு ஒலியையும் தமக்குரியதாக்கி எழுத்திலும் கதகனா வைப் பயன்படுத்தி கடன் சொற்களை வேறுபடுத்தி வைத்துள்ளனர். ஆங்கிலத்திற்கோ இந்த முறை கிடையாது. முன்பு ஆங்கிலப் பதிப்புகளில் மட்டும் சில குறிப்பிட்ட கிரேக்கம், இலத்தீன் கலைச்சொற்கள் italics எனப்படும் எழுத்துருவில் (font) அச்சிட்டப்பட்டன.

தமிழில் கடன் சொற்களுக்கு என விதிமுறைகள் உண்டு:
நடைமுறை வழக்கில் மொழிக்கலப்பு என்பது இயற்கையும் இயல்புமாகும். மொழித்தூய்மை என்பது தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒரு தொடர் பணி. இதை அன்று தொட்டு இன்று வரை தமிழ் ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.  இவ்வாறு கடன் சொற்களைத் தன்வயப்படுத்துதல் (adaptation) மொழி நீடித்து நிற்க உதவும் உத்தி ஆகும். அதற்காகத்தான்,  'தற்சமம்',  'தற்பவம்' என்ற மொழியாக்க வரைமுறைகளை ஏற்படுத்தினர். இதனால் தான் தமிழ் இன்றும் மூல திராவிட மொழியின் தன்மையை அதிகம் இழக்காமல் மற்ற சொற்களின் வரவால் பெரிய அளவில் மாற்றம் அடையாமல் என்றுமுள தென்றமிழாகவே இருக்கின்றது.   எனவே தமிழை உலகின் முதல் மொழி என்றும் ஆதிமனிதனின் மொழி என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் மொழியில் பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு சோழர் காலத்தில் சமஸ்கிருத மொழி சொற்கள் கலந்தபோது நம் இலக்கண ஆசிரியர்கள் உடனே சில விதிமுறைகளை வகுத்தனர். அவை தற்சமம் தற்பவம் எனப்பட்டன. இரண்டு மொழிகளுக்கும் சமமான ஒலிகளாலான சொல் என்றால் அது 'தற்சமம்' எனப்படும்.   அதாவது, 'காரணம்', 'கமலம்' போன்றன.   'தற்பவம்' என்பவை வேறுவகை.   சில ஒலிகள் தமிழ் ஒளிப்புகளுக்கு  ஒவ்வாததாக இருந்தால் அவற்றைத் தமிழ் ஒலிக்கேற்ப மாற்றி அமைப்பதாகும். எடுத்துக்காட்டு: 'வருஷம்' – வருடம் (ஆண்டு); 'பக்ஷி' – பட்சி (பறவை); 'சர்ஸ்வதி' – சரசுவதி (கலைமகள்); கார்யம் – காரியம் (செயல்) ரத்னம்  -  ரத்தினம் (மணி) போன்றன.  

இவற்றிற்கெல்லாம் தமிழ்ச் சொற்கள் இல்லாமலில்லை, இருந்தாலும் சமஸ்கிருத ஆக்கம் என்ற பெயரில் (இப்போது நாம் ஆங்கிலம் கலந்து பேசுவது போல);  அன்று, ஆங்கிலேயர் காலத்தில் சிலர் சமஸ்கிருதத்தைத் தமிழில் கலந்து அதற்கு மணிபிரவாள நடை (முத்தும் பவளமும் கலந்தது) என்று பெயரிட்டு மேட்டுக்குடியினரின் மொழியாக பேசி வந்தனர். இதனால் நல்ல தமிழ்ச் சொற்கள் கூட சமஸ்கிருதமுமாயின, 'வேட்டி', வேஷ்டி ஆயிற்று. இதைப் பார்த்த மற்ற மக்களும் தேவையில்லாத இடத்தில் எல்லாம் ஷ, ஸ, ஜ போன்ற ஒலிகளை தமிழில் புகுத்திப் பேசினர். பி. சுசிலா பாடல்களில் ச என்ற ஒலி தொடர்ந்து ஷ என்றே ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம். இது ஒரு காலத்திய உயர்மொழி வழக்கு. இப்போது ஆங்கிலம் பேசுவதாக நினைத்துக் கொண்டு சிலர் தேவையில்லாத இடங்களில் எல்லாம் f, b, j போன்ற ஒலிகளை பயன்படுத்துகின்றனர் அல்லவா. அது போன்ற செயல்பாடுதான் அது.

ஒரு மொழியில் தவிர்க்க முடியாத நேரத்தில் மட்டுமே கடன் வாங்க வேண்டும். அவ்வாறு கடன் வாங்கும்போது அதை நம்முடைய ஒலி வடிவத்துக்கும் எழுத்து வடிவத்துக்கும் ஏற்ப தகவமைக்க வேண்டும். இல்லையென்றால் இன்று பிரிட்டிஷ் ஆங்கிலம் தன் கடன் சொற்களை அமெரிக்க ஆங்கிலத்தின் மூலம் ஒலிமாற்றத்துக்கு உள்ளாவது போல (photo > foto, Cheque > chek, programme > program, colour >color) தானே மாற்றம் பெறும். அதற்கு மக்கள் ஆதரவும் முழுமையாகக் கிடைக்கும்.  சமூக வலைத்தளங்களில்  புழங்கும் ஆங்கிலத்தை மொழியியல் அறிஞர் கிரிஸ்டல் டேவிட் நெட்லிஷ் என்கிறார்.  இந்த 'நெட்லிஷ்' (netlish or netlanguage) என்ற ஆங்கிலம் வலைத்தளங்களில் பயன்படும்போது அதன் மூலத்தன்மையை இழந்துவிடுகிறது. இந்த நெட்லிஷ் ஒலிக்கேற்ப எழுதப்படுகிறதே என்று ஆங்கில மொழிமரபின் மீது பற்றுக் கொண்ட மொழி ஆர்வலர்கள் துடிக்கின்றனர்.

ஆனால் தமிழைப் போல ஜப்பானிய மொழியைப் போல ஆங்கிலேயர் முதலிலேயே கடன் சொற்களை மாற்றாததால் காலம் இப்போது அந்தப்பணியைச் செய்கிறது. அவசரத்துக்கு அள்ளி போட்டது போல அந்தக் காலத்தில் ஆங்க்லோ சேக்சன் மொழி பிற மொழிச் சொற்களை அள்ளி அள்ளி போட்டுக்கொண்டது. இப்போது முதல் பத்திக்கு வருவோம். அந்த மாணவன் தன் ஆசிரியை தன்னிடம் 'ஹீட்' (heat) என்றதை 'ஈட்'  (eat) எனப் புரிந்துகொண்டதாக குறும்பு செய்தது ஏன் என்று புரிந்ததா? ஆசிரியர்களுக்கு எதாவது தெரியாவிட்டால் அதைத் தெரிந்துகொண்டு வந்து சொல்கிறேன் என்று மாணவரிடம் சொல்ல வேண்டும். பின்பு அதைப் படித்துத் தெரிந்துகொண்டு வந்து சொல்ல வேண்டும். கேள்விகேட்கும் மாணவர்களே சுய சிந்தனை உள்ளவர்கள்.   அவர்களை வளர்த்துவிடுவது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தத்துவச் சிந்தனைகள் வளர வழி வகுக்கும்.


முனைவர் செ. இராஜேஸ்வரி (https://www.facebook.com/rajeshwari.chellaiah),  மொழிபெயர்ப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். 1987ஆம் ஆண்டு முதல் மொழிபெயர்ப்புப்  பணியில் ஈடுபட்டு வருகிறார்.

-------------





Thursday, December 9, 2021

செவிமடல் பாகங்கள்

-- திரு.  இராம.கி. 


அண்மையில், மின்தமிழ் மடற்குழுவில், ஒரு  செவிமடல் படத்தைக் கொடுத்துப் பாகங்களுக்கான தமிழ்ச் சொற்களை அறிந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டிருந்தது.  




தோடு, தண்டட்டி, தொங்கட்டான் என வித விதக் காதணிகள் போடும் நம்மூரில், செவிமடல் பாகங்களுக்கான ”இணைத் தமிழ்ச் சொற்களைச்” சான்றோடு சொல்ல நம்மிடம் எழுத்துப் பதிவுகள் இல்லை. இவ்வணிகளைப் போடும் பழக்கமும் அருகி விட்டது. இனியும் இப்படியொரு சொல்லில்லாச் சோகம் வேண்டாம். படத்தில் வரும் ஆங்கிலச் சொற்களுக்கு ஈடான தமிழ்க் கலைச் சொற்களைப் பார்ப்போம். 

             முதலில் வருவது Helix (n.) இதற்கு விளக்கமாய், ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியில், "a spiral thing," 1560s, originally of the volutes of Corinthian capitals, from Latin helix "spiral, a volute in architecture," from Greek helix (genitive helikos), a word used of anything in a spiral shape (an armlet, a curl of hair, the tendril of a vine, a serpent's coil), which is related to eilein "to turn, twist, roll," from PIE *wel-ik-, from root *wel- (3) "to turn, revolve," from PIE root *wel- (3) "to turn, revolve." The classical plural is helices என்று போட்டிருப்பர். 

தமிழில் spiralயைப் புரி என்போம். வலம்புரி/ இடம்புரிச் சங்கு எனும் சொல்லாட்சிகளைக் கவனியுங்கள். புரி என்பது கிடைப் பரிமானத்தில் (horizontal dimension) மட்டும் விரியும். helix-ஓ, குத்துப் பரிமானத்திலும் (vertical dimension) விரியும். 

”சுழிப்பு” என்ற சொல் முதலில் வட்டத்தைக் குறித்தாலும் வேக நீரோட்டத்தில் உள்நோக்கிய குழிவு ஏற்படுவதை மறக்க வேண்டாம். "சுழலுக்குள் மாட்டினான்" எனும்போது நம்மை அறியாமல் helix ஐச் சுழிகை என்ற சொல்லால் உணர்த்துகிறோம். 

சுல் எனும் வேரிலிருந்து சுழி எழுந்தது போல், சுரி என்ற சொல்லும் எழும். சுரிகுழல் = helical ஆகச் சுருண்டு கிடக்கும் முடிக்கற்றை. ”சுரிமுகம்” இது குத்துத் திசையிலும் சுருண்ட சங்கைக் குறிக்கும். நத்தைக்கூட்டைக் கூடச் சுரிமுகம் என்பார். இன்னொரு விதமாய் திருகாணி (helical screw) எனும் போது, திருகு என்ற சொல்லும் helical motion- யைக் குறிக்கிறது. முறுக்கு என்பதும் கூடத் திருகிக் கொண்ட தன்மையைக் குறிக்கும். முறுகு, திருகு, சுழிகை, சுரிகை என்ற நான்கும் ஒரே பொருளைக் குறித்தாலும், வேற்றுமை காட்டும் முகத்தான் இக்கால அறிவியல் புழக்கமாய்ச் சுரிகையையே  helix-க்கு இணையாகக் கொள்ளலாம்.

             அடுத்தது cartilage. இதைக் குருத்தெலும்பு என்பார். குருத்து = இளமை. cartilage (n.) "gristle; firm, elastic animal tissue," early 15c., from Old French cartilage and directly from Latin cartilaginem (nominative cartilago) "cartilage, gristle," which is possibly related to cratis "wickerwork".

             மூன்றாவது சொல் snug (adj.) 1590s, "compact, trim" (of a ship), especially "protected from the weather," perhaps from a Scandinavian source such as Old Norse snoggr "short-haired," Old Swedish snygg, Old Danish snøg "neat, tidy," perhaps from PIE *kes- (1) "to scratch" (see xyster). Sense of "in a state of ease or comfort" first recorded 1620s. Meaning "fit closely" is first found 1838. தமிழில் சிக், நச், என்று ஒலிக்குறிப்புச் சொற்களால், பொருந்தப் பிடிக்கும் வினையைக் குறிப்போம். நெக்கு-தல் வினை,  ஒன்று இன்னொன்றில் பொருந்தலையும். நெக்கு விடுதல் என்பது பொருத்துவாய் விடுதலையும் குறிக்கும். ”நெகிழ்ச்சி” என்பதும் கூட இதன் தொடர்ச்சியாகலாம். என்னைக் கேட்டால் நெக்கு என்பது snug இற்கு இணைகாட்டும் என்பேன்.

             conch = சங்கு. இதற்குப் பெரிய விளக்கம் சொல்ல வேண்டாம்.

             அடுத்தது,  Tragus = துருகு. (n.) eminence at the opening of the ear,செவி வாசலில் துருகி வரும் எழுச்சி. துரு-த்தல் = முன்வரல். " 1690s, Modern Latin, from Greek tragos in this sense (Rufus of Ephesus), properly "he-goat;" so called for the tuft of hair which grows there, which resembles a goat's beard.

             Anti-Tragus = துருகெதிர்.  (பின்னொட்டையே பெரிதும் பயன்படுத்தும் மரபு தமிழில் உண்டு.)

             Lobe மடல்; 2nd Lobe 2 ஆம் மடல்; 3rd Lobe 3 ஆம் மடல்

             Rook = துருகடி.  துருகு வளையத்தின்  அடிப்பாகமாய் இது அமையும். 

             Daith = குருத்தடி. (இன்னும் பொருத்தமான சொல்லைத் தேடவேண்டும்.)





வீரமாமுனிவரின் பாடல்களும் வரலாற்றுத் தரவுகளும்

--  முனைவர் ஆனந்த் அமலதாஸ், சென்னை


இலக்கியத்தை ஒரு வரலாற்று நூலாகவும் வாசிக்கலாம்; இலக்கியத்தை இலக்கியமாக மட்டும் பார்க்காமல் அதை ஒரு வரலாற்று நூலாகவும் வாசிக்க வேண்டிய நிலை தற்சமயம் உருவாகியுள்ளது. அது ஒரு தேவையாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. ஏனெனில், இலக்கியம் ஒரு கற்பனையின் புனைகதை மட்டும் அல்ல. அது ஒரு வரலாற்றுச் சூழ்நிலையில் எழுகின்றது. அந்தப் படைப்பின் ஆசிரியர் வரலாற்றுத் தரவுகளைத் தொடாமல் அல்லது தொடர்பில்லாமல் எதையும் எழுதவோ பாடவோ முடியாது. அந்தப் பாடல்களில் வரும் உவமைகள், சொல்லாடல்கள், சுற்றுச்சூழல் பற்றிய தொகுப்புக்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலநிலையைச் சுட்டிக்காட்டும் என்பது தெரிந்ததே. ஆசிரியர் சொல்லும் கதை மட்டும் அல்ல, அவர் கையாளும் மொழியும் அவரைக் கண்ணாடிபோல் காட்டிக் கொடுக்கும். அதனால் இலக்கியத்தில் வரலாற்றுத் தரவுகளைத் தேடுவது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு வழிமுறைதான்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வாழ்ந்து பணிபுரிந்த வீரமாமுனிவர் பல நூல்களைத் தமிழில் படைத்துள்ளார். அவர் எழுதிய காப்பியத்தை, கலம்பகத்தை, அம்மானையை அலசிப்பார்த்து அங்குக் காணும் வரலாற்றுத் தரவுகளைத் தேடுதல்தான் இதன் நோக்கம்.

veeramamunivar.png
தேம்பாவணி வீரமாமுனிவர் எழுதிய முக்கியமான நூல். 36 படலமாகப் பிரித்து, 3615 பாடல்களோடு அமைந்த ஒரு காப்பியம். விவிலியத்தில் வரும்  வளனாரை (சூசையை/Joseph) காப்பியத் தலைவனாகக் கொண்டது. இறுதிப்  படலத்தில் சூசையின் முடி சூட்டுதலோடு காப்பியம் முடிவு பெறுகிறது. இங்குத் திடீரென ஆஸ்திரியப் பேரரசர் லியோபோல்டு (Leopold I, Holy Roman Emperor) பற்றிக் குறிப்பிடுகிறார். லியோபோல்டுவின் ஆட்சியில் (1658 -1705) துருக்கியரோடு (ஓட்டோமன் பேரரசு) நடந்த போரில் லியோபோல்டு வெற்றி பெற்றதால் ஐரோப்பாவில் கத்தோலிக்கக் கிறித்தவ உலகம் அவரை இலக்கியத்திலும், ஓவியங்களிலும், பாடல்களிலும் பாராட்டிச் சிறப்புச் செய்தனர்[1].  போர் முடிந்த பிறகு லியோபோல்டு ஆஸ்திரிய நாட்டை புனித வளனாருக்கு அர்ப்பணிக்கிறார்.

வீரமாமுனிவர் அவரைத் தமிழ் அரசர்க்குரிய மரபோடு அறிமுகப்படுத்துகிறார்.

           அயப் போது அலர் வேலி அணிந்து, அழியா
           நயப்பு ஓகை ரோமையின் நாடு இனிது ஆள்,
           வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல்,
           லெயு போல்து எனும் நாம வெள் வேல் இயலான்.  [2]
                      (தேம்பாவணி: முடிசூட்டு படலம், 36, 50)

ஆஸ்திரிய அரசருக்கும் தமிழகத்திற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுகிறது. இங்கிலாந்தின் “ஈஸ்ட் இண்டியா கம்பெனி” போல ஆஸ்திரியாவும் நெதர்லாந்தும் சேர்ந்து ஒரு வணிகத்துறை தொடங்கியது (ஓஸ்டென்ட் கம்பெனி). ஆஸ்திரியக் கப்பல் மெட்ராஸ் துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கித் தமிழகக் கடற்கரைப் பகுதியில் வணிகம் நடத்தி வந்தது. (1722-1724) [3].  

அப்பொழுது வீரமாமுனிவர் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோணாங்குப்பத்தில் தங்கியிருந்து தேம்பாவணி காப்பியம் எழுதியதாக வரலாறு கூறுகிறது. அப்படியானால் வீரமாமுனிவர் ஆஸ்திரியக் கப்பலைப்பற்றி அறிந்திருக்க வேண்டும். அது அவருக்கு அரசன் லியோபோல்டுவை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இதுதான் காரணம் என்று நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வுக்கும், தேம்பாவணியில் லியோபோல்டுவுக்கு இடம் கொடுத்தற்கும் தொடர்பு ஏதும் இல்லை என்றும் சொல்லவும் முடியாது. இது இன்னும் ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்றுத் தரவு.

தரங்கம்பாடியாருக்கும் வீரமாமுனிவருக்கும் இடையே எழுந்த பூசல்:
வீரமாமுனிவர் ஏலாக்குறிச்சியில் இருந்து பணி செய்த போது தரங்கம்பாடியார் விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார்கள். அவர்களது மொழிபெயர்ப்பை வீரமாமுனிவர் குறைகூறினார். இருவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைக் கோட்பாட்டளவில் விமர்சனம் செய்தார்.

இவ்வாறு இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்கள் முனிவரின் படைப்பைக் கணிக்கும் முறையிலும் காணலாம்.  எடுத்துக்காட்டாக பெரிய அறிஞரான கால்டுவெல் கூட ஒருதலைப்பட்சமாக முனிவரை மதிப்பிடுவதைக் காணலாம். கால்டுவெல் ஒருபக்கம் வீரமாமுனிவரின் படைப்பைப் பாராட்டுகிறார். ஆனால் அடுத்த நொடியிலேயே தேம்பாவணியைக் கடுமையாக விமர்சிக்கின்றார். “இந்து மக்களோடு இணக்கமாய் வாழவிரும்பி விவிலிய வரலாற்றைச் சிதைத்து விட்டார், அதாவது, இந்துமய மாக்கிவிட்டார்” என்பது அவரது தீர்ப்பு [4].  வீரமாமுனிவர் விவிலிய வரலாறு எழுத தமிழகம் வரவில்லை. விவிலியத்தில் வரும் ஒருவரை மையமாக வைத்து ஒரு காப்பியம் படைக்கின்றார். மில்ட்டனும் (பாரடைஸ் லாஸ்ட்) தாந்தேயும் (டிவைன் காமெடி) விவிலிய வரலாற்றைச் சிதைத்ததாக குறை சொல்லாதவர்கள் வீரமாமுனிவரை மட்டும் ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்யவேண்டும் என்பதற்குப் பதில் தெரியவில்லை.

வீரமாமுனிவர் பயிற்சி கொடுத்த வேதியர்களில் பலர் தரங்கம்பாடியருடன் சேர்ந்து விட்டனர். இது அவருக்குப் பெரிய வேதனையாகவும்; ஏமாற்றமாகவும் இருந்தது. இத்தகைய பூசல் வீரமாமுனிவர் அன்னை மரியாளைப் பாடும் முறையிலும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது கவனத்திற்குரியது. பல பூக்களில் தேன் குடிக்கும் தேனீக்களைப் பார்த்து ஒரு கேள்வியை வைக்கிறார். திருக்காவலூர் பூஞ்சோலையில் உள்ள தேனுக்கு ஈடாக வேறெங்கும் உண்டோ என்று கேட்பது போல் அமைந்துள்ளது. யாரையோ கேட்க வேண்டிய கேள்வியைத் தேனீக்களிடம் கேட்கிறார். இதற்குத் தேனீக்கள் பதில் சொல்ல முடியாது. வரலாற்று ஆசிரியர்கள் பதில் சொல்ல வேண்டும்.

தரங்கம்பாடி சென்று மதமாறியவர்களுள் பலர் திரும்பிக் கத்தோலிக்கச் சபைக்கு வந்துவிட்டதாகவும் வரலாறு கூறுகிறது. அவர்களை இவ்வாறு கேட்பதுபோல் அழகாய் அமைந்துள்ளது இப்பாடல். திருக்காவலூர் கலம்பகம் (23):

           காந்தள்கை கஞ்சத்தாள் காவிக்கண் ஆம்பல்வாய்
           வேய்ந்தலர்ந்த காவலூர் மென்கொடியே – ஈய்ந்தமது
           வுண்ணளிகாள் சொல்மின் நீர் ஒத்துளதோ பூவுலகிற்
           பண்ணளிபூந் தீந்தேன் பனித்து.                                
                      (திருக்காவலூர் கலம்பகம் -23) [5]

தமிழ் இலக்கியத்தில் ‘ஆரிய’ என்ற சொல்லின் பின்னணி:
‘ஆரிய’ என்ற சொல் தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிய சர்ச்சைக்குரியது. இந்தச் சொல் சங்க இலக்கியத்திலேயே எட்டு முறை இடம் பெறுகிறது (எடுத்துக்காட்டு: 'எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன்' - அகம் 386/5). பக்தி இலக்கியத்திலும் கூட சில இடங்களில் காணலாம். சித்தர் பாடல்களில் வரும் இச்சொல் கேலியாகத்தான் வருகிறது. “ஆரியக் கூத்தாடி” என்ற சொல்லாடல் அதைத் தெளிவு படுத்துகிறது.இருப்பினும் கம்பன் காப்பியத்தில் பல முறை வருவதில் வியப்பு இல்லை. ஏனெனில் கம்பன் சொல்லும் கதையே வடநாட்டுக்கதை.

வீரமாமுனிவரும் தேம்பாவணியில் ஆரிய என்ற சொல்லைப் பலமுறை பதிவு செய்கிறார். அதுவும் பெருமைக்குரிய, உயர்குலத்தைச் சார்ந்த என்ற பொருளில் இந்தச் சொல் இடம் பெறுகிறது. பாயிரத்தின் தொடக்கத்திலேயே “ஆரிய வளன்” என்று சூசையை அறிமுகப்படுத்துகிறார். மீண்டும் பாயிரத்தின் இறுதிப்பாடலில் “ஆரியனூரில் தேம்பாவணி எனப் பிணித்தல் செய்வோம்”, என்று பதிவு செய்துள்ளார். இதை வரலாற்றுத் தரவாகப் பார்க்க வேண்டிய தேவை எழுகிறது. அப்பொழுது அவர் தங்கியிருந்த இடம் கோணாங்குப்பம். அந்த ஊருக்கு ஆரியனூர் என்று பெயர் இருந்ததாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று ஆர். பாலகிருஷ்ணன் (ஐ.ஏ.எஸ்) பதிவு செய்கிறார்.

அந்தப்பகுதியில் வாழ்ந்த - இன்னும் வாழ்கின்ற - மக்கள் வன்னியர் குலமரபைச் சார்ந்தவர்கள். அவர்கள் வாழும் மற்றைய பகுதிகளிலும் ஆரியனூர், ஆரியங்காவு (விழுப்புரம் அருகில்), ஆரியநல்லூர் (திண்டுக்கல்லுக்கு அருகில்) என்ற பெயர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தங்கள் இனத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டும் வகையில் இப்பெயர் எழுந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இதுவும் ஆராய்ச்சிக்கு உட்பட வேண்டிய தரவு.[6]

கித்தேரி அம்மாள் அம்மானையில் வரலாற்றுக் குறிப்பு:
வீரமாமுனிவர் தேம்பாவணி காப்பியம் எழுதிய பிறகு, சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் அளவில் நாட்டுப் புற மரபில் அம்மானை பாடல் ஒன்று எழுதுகிறார். 1716 - ஆம் ஆண்டு கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதராக உயர்த்தப்பட்ட கித்தேரியின் வாழ்வை மூலமாக வைத்து எழுதப்பட்ட அம்மானைப்பாடல். கித்தேரி 130 ஆம் ஆண்டு போர்த்துகல் நாட்டில் அவளது தந்தையாகிய அரசன் காயனால் தலையைக் கொய்து கொலை செய்யப்பட்டாள். கித்தேரி அவள் தந்தையின் சொற்படி கிறித்தவ நம்பிக்கையைக் கைவிடவும், திருமணம் செய்யவும் மறுத்ததால் அவளுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் கதையை மையமாக வைத்து 1100 அம்மானைப் பாடல்களும் 38 விருத்தப்பாடல்களும் உள்ளடங்கிய ஒரு பாமாலையாக, அணிகலமாக வீரமாமுனிவர் கித்தேரிக்கு அளிக்கின்றார். இதன் நோக்கம் புனித கித்தேரியைப் போல கிறித்தவ நம்பிக்கையில் மக்கள் திடமாக இருக்க வேண்டும் என்பது. ஏலாக்குறிச்சியில் அவர் வாழ்ந்த காலம் என்பது,  மராட்டிய ஆட்சியாளர்களிடம் இருந்து ஒரு பக்கம், தரங்கம்பாடியாரிடம் இருந்து மறு பக்கம் எனப் பெரிய நெருக்கடியைச் சந்தித்த காலக்கட்டம். அதனால் புனித கித்தேரியம்மாள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக, துன்புறும் நேரத்தில் நம்பிக்கை இழக்காமல் இருக்கப் பாதுகாவலாகவும்  முன்வைக்கப்பட்டாள்.

இது நாட்டுப் புறப்பாடலாக இருந்தாலும் பல வரலாற்றுத் தரவுகளை உள்ளடங்கியது. எடுத்துக்காட்டாக இந்தப் பாடலில் போர்த்துக்கல் நாட்டு அரசன் ஐந்தாம் ஜான் என்பவரை அறிமுகப்படுத்துகிறார். “அருள் ஏந்தும் நாமம் உடை ஐந்தாம் கோன் ஆங்கு உதிப்பான்.” (9, 33). அவர் 1706 முதல் 1749 வரை போர்த்துக்கல் நாட்டில் ஆட்சி செய்தவர். அப்பொழுது போர்த்துக்கீசியர் தமிழகத்தில் சந்தா சாகிப்போடு சேர்ந்து ஆட்சி புரிந்தனர். சந்தா சாகிப்பின் தோல்விக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை தமிழகத்தில் மாறியது.

தேம்பாவணியில் ஆஸ்திரிய அரசன் லியோபோல்டுவை வீரமாமுனிவர் அறிமுகம் செய்தார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டோம். இங்கு போர்த்துக்கல்லின் அரசரைப்பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. இதன் உள்நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் கிறித்தவத் தமிழ் இலக்கியத்தில் இத்தகைய வரலாற்றுத் தகல்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வீரமாமுனிவர் கிறித்தவ மறைப்பணி செய்ய தமிழகம் வந்தவர். ஒருவேளை கிறித்தவத்திற்குச் சாதகமான ஓர் அரசன் இங்கு ஆட்சிக்கு வருவான்  என்று கனவு கண்டிருக்கலாம். ஐரோப்பாவில் லியோப்போல்டு கிறித்தவ அரசனாய் இருந்தது போல, ஐந்தாம் ஜான் போர்த்துக்கல் நாட்டில் கிறித்தவத்தை நிலைநாட்டியது வரலாறு. கித்தேரியம்மாள் அம்மானையில் வரும் சில வரிகள் இதற்குச் சான்றாக உள்ளன. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கித்தேரியை மையமாகக் கொண்ட பாடலில் லூசித்தானிய நாடு கிறித்தவ நெறிக்கு வரும் என்று முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. “அந்நாடு என் நாடாக ஆளும் முதற்கோன் அவனே” (9, 23) என்று பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேம்பாவணியில் இத்தாலிய நாட்டு வருணனை, புரோகிதப்படலம்:
தமிழ் இலக்கியத்தில் முதன் முறையாக இத்தாலிய நாட்டு வருணனை இடம் பெறுகிறது. தமிழ் மரபிற்கேற்ப அதை வீரமாமுனிவர் பதிவு செய்கிறார்.

           “செல் நாகம் நீர் பொழியத், தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப,
           கல் நாகம் நீர் உமிழக், கவி நாகம் வெருண்டு அஞ்ச, கல் ஊடு ஊர்ந்த
           கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓடக், கொழுஞ் செய் வாய்ப்ப,
           பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டுப் பொலிவு இது அன்றோ. (32, 22)
 
           “விரைவாய்ப் பூந்தாழை உலாம் வெள்வளை ஈன்ற
                      பூவயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற
           கரை வாய்ப் பூஞ் சுனை பூப்பக், கனி யாழ் வண்டு இமிர்ந்து,
                      ஒகரம் களி கூர்ந்து ஆடும்
           சுரை வாய்ப் பூம் பொழில் காய்ப்ப, ஈர் அறமும்
                      முச் சீரும் சுகம் ஓர் ஏழும்
           நிரை வாய்ப் பூங் குடியாக நிமிர்
                      இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ. (32, 23)
               
           “பொருள் ஈன்ற பெருஞ் செல்வப் பொலிவு ஒழிக்கும் வளம் புணரப் புகன்ற நாடு,
           மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து, மறை என்று ஓதும்
           தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி, எலாத் திக்கும் தானே
           அருள் ஈன்ற விளக்கு ஆகி, அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ.(32, 24)
       
வீரமாமுனிவரும் சமத்துவ நம்பிக்கையும்:
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறள் (972) வைதிகத்தில் மையம் கொண்ட சாதிப் பிரிவினையை விமர்சனம் செய்வது குறிப்பிடத் தக்கது. சமத்துவம் இடம் பெறாத ஆன்மீகம் முரண்பாடானது, முழுமை பெறாதது. இது போன்ற குறள் கூறும் கருத்துக்கள் கிறித்தவம் நிலைநாட்ட விரும்பும் பார்வைக்கு உடன்பாடாய் அமைந்துள்ளன. அதனால், இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தைக் குறளோடு இணைத்துப் பார்க்க இடம் தருகிறது.

இயேசுசபை மரபில் பயிற்சி பெற்ற வீரமாமுனிவர் தனது 'தொன்னூல் விளக்கத்தில்' (சூத்திரம் 183) சமத்துவம் பற்றி விமர்சனம் செய்கின்றார்.
           வன்னியர் மன்னர் வணிகர் சூத்திர
           ரென்னிவர் நால்வர்க் கியல்வன வுரைக்கில்
           ஓதற் றொழிலுரித் துயர்ந்தோர் மூவர்க்கும்
           அல்லாத கல்வி யெல்லார்க்கும் உரித்தே.
“சமுதாயத்தில் மக்களை வன்னியர் (பிராமணர்), மன்னர், வணிகர், சூத்திரர் என நான்கு வகையாகப் பிரித்து, ஓதுதல் முதல் மூன்று வகையினருக்கு மட்டும் தகுதி என்று விதித்தாலும், கற்பது எல்லோருக்கும் உரிமை.” கல்வி பொதுவாக இருக்க வேண்டும் என்பது வீரமாமுனிவரின் விளக்கம்.

கவிஞர் தாசோவின் தாக்கம்:
இத்தாலிய நாட்டுக் கவிஞர் தாசோ (1544-1595) தனது “செருசலேமின் மீட்பு” என்ற காப்பியத்தில் ஐரோப்பியக் கிறித்தவர்கள் மேற்கொண்ட முதலாம் சிலுவைப்போரின் பின்னணியைச் சித்தரிக்கிறார். இது ஒரு வரலாறு தழுவிய நூல். அதில் நான்காம் காண்டத்தில் பேய்கள் கூடி கிறித்தவப் போர்த் தளபதிகளைத் திசை திருப்பத் திட்டமிட்டதாக தாசோ விமர்சிக்கின்றார். கிறித்தவ போர்த்தளபதியரிடையே எழுந்த பூசல்களும்,  குழப்பமும், ஒற்றுமை யின்மையும் அவர்கள் மேற்கொண்ட குறிக்கோளுக்கு இடையூராக இருந்தது வரலாற்று உண்மை. ஆனால் தாசோ அவற்றை வெளிக்கொணர கவிதை வடிவில் பேயின் சூழ்ச்சி என்று வடிவமைத்துள்ளார்.

வீரமாமுனிவர் தேம்பாவணியில் (23 - ஆம் படலம்) இதைப் புகுத்துகிறார். சூசையும் மரியாளும் எகிப்து நாட்டில் தங்கியிருக்கும் பொழுது யாரையும் அவர்கள் மனம் திருப்பி விடக்கூடாது, அங்கே அவர்களின் தாக்கம் ஏதும் தங்க விடாமல் தடுக்க பேய்கள் திட்டமிட்டதாகக் குறிப்பிடுகிறார். வீரமாமுனிவர் காலத்தில் கிறித்தவ மறைப்பணியாளர்கள் தமிழகத்தில் எதிர் கொண்ட நெருக்கடிகள் அதிகம். இந்த எதார்த்த நிலைக்குக் காப்பிய வடிவில் பேய்கள் கூடித் திட்டமிட்டு சமய மாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக தேம்பாவணியில் கூறுகிறார். இது முனிவரின் கனவுலகை நிரந்தரமாக்கும் கற்பனையா அல்லது வரலாற்று நிலையின் எதிரொலியா என்பது நம்மைச் சிந்திக்க அழைக்கும் ஒரு பகுதி.

கிறித்தவப் பக்தி சின்னத்தின் இடம் பெயர்ப்பு:
தேம்பாவணியில் பாலஸ்தீன நாடும் செருசலேம் நகரும் தமிழகத்தின் ஒரு பகுதிபோல் வருணனை அமைகிறது. தமிழ் பெருங்காப்பிய மரபில் ஒரு நாட்டையும் ஒரு நகரத்தையும் வருணனை செய்து தொடங்குவது போல வீரமாமுனிவர் தனது காப்பியத்தைத் தொடங்குகிறார். தேம்பாவணியின் தொடக்கத்தில் மேகங்கள் மழைபொழிய தமிழக நிலப்பிரிவுகட்கு ஏற்ப மழைநீர் மலைகளிலிருந்து (குறிஞ்சி), காடுகள் வழியாக (முல்லை), விளை நிலங்களை (மருதம்) நிரப்பி, கடற்கரையை (நெய்தல்) வந்தடைகிறது.

பாலை நிலம் பற்றிப் பின்பு சூசையும் மரியாளும் எகிப்துக்குப் பயணம் செய்யும் பொழுது சீனாயி பாலைவனத்தைக் கடந்து சென்றதாக அமைகிறது. பாலஸ்தீன நாட்டில் உள்ள மரங்களையும் செடிகளையும் மிக நுணுக்கமாக வரிசைப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
           “ஓலைகள் கிடந்தநீண் கமுகொடும்பனை
           பாலைகள் மாமகிள் பலவு சுள்ளிகள்
           கோலைகள் சந்தனம் குங்கு மம்பல
           சோலைகள் கிடந்தன தொகுப்ப வண்ணமோ”
                      (நாட்டுப்படலம் 1.37)

தமிழ் இலக்கியத்தில் நிலப்பரப்பு அகம்-புறம் கோட்பாட்டோடு அமையும். ஆனால் இங்குக் காடும் மலையும் காதலர்கள் உறவோடும், ஊர்ப்பகுதிகள் திருமணத்தோடும் முடிவதில்லை. இயற்கை கிறித்தவக் கடவுளோடு இணையும் தளமாக இங்கு அமைகிறது. படைப்பின் மேல் கொண்ட அன்பெல்லாம் படைத்தவனை நோக்கிப் பார்க்கிறது; இறைவன் திட்டப்படி எல்லாம் அசைகிறது என்பது உட்கருத்து.

தேம்பாவணியின் முதல் இரண்டு படலத்திலும் - நாட்டுப்படலம், நகரப்படலம் - வீரமாமுனிவர் இயற்கையின் காட்சியை இறைவன் படைப்பின் குறிக்கோளில் பங்கெடுப்பதாக புனைகிறார். இதற்கு இரண்டு இலக்கியச் சாதனங்களைப் பயன்படுத்துகிறார். ஒன்று, உவமைகள் வழியாக. இது ஏற்கனவே சைவ மரபில் அதிக அளவில் முக்கியத்துவம் பெற்ற முறை. எடுத்துக்காட்டாக மாணிக்கவாசகரின் திருக்கோவையார் பாடலைக் குறிப்பிடலாம். அதாவது, அகத்தினை மரபை பக்திவழியில் விளக்கம் கூறுவது.

அது போல வீரமாமுனிவர் கூறுவது ஒரு எடுத்துக்காட்டு.
           “மலையின் நேர்அறல் மலியநால் திணையருந்தியபின்
           அலையின் நேர்உறல் அவனிதன் மகர்க்கெலாம்  ஊட்டி
           முலையின் ஏர்உறீஇ விஞ்சுபால் முடுகலில் உடுத்த
           கலையின் ஏர்உறீஇக் களிப்போடு சிந்துவ போன்றே.”
                      (தேம்பாவணி – நாட்டுப்படலம் 1, 9. Virgo lactans)

மற்றொரு வழி தற்குறிப்பேற்றவணி – ஒரு பொருளின் குணத்தை அல்லது பணியை மற்றொன்றின் மேல் இணைப்பது. எடுத்துக்காட்டாக நகரப்படலத்தில் செருசலேம் வருணனையைக் கூறலாம்.
           “பூவுலகு இயல்பன்று அம்பொன் பொலிமணி நகரம் பெண்ணார்
           தேவுலகு உரித்தென்று அங்கண் தெளிந்து புக்கிடுமென்று ஆழி
           தாவுலகு இருந்த வெள்ளித் தாள்தளை இட்டதே போல்
           கோவுலகு இஞ்சி சூழ்ந்த குவளைநீள் அகழித் தோற்றம்.”
                      (தேம்பாவணி – நகரப்படலம் 2, 8)

இதன் கடைசி இரண்டு வரிகள் செருசலேம் நகரைச் சுற்றிய சுவர்களுக்குக் கீழ் அமைந்த ஆழியில் வளர்ந்த குவளை மலர்கள் நினைத்ததாக கற்பனை உருவெடுக்கின்றது. இந்த நகரம் இந்த உலகை விட்டுப்பிரிந்து தனக்கே சொந்தமான விண்ணகம் சென்றுவிடுமோ என்று அஞ்சி வெள்ளிக் கம்பிகளால் கட்டிக்காப்பது போல என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்பாடல் ஒருவேளை புனித அகுஸ்தீனார் கருத்தான விண்ணக செருசலேமைக் குறிக்கலாம். இந்தப்பாடல் உண்மையில் தன்னைப் படைத்த இறைவனைப் புகழும் இயற்கை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

 மற்றுமொரு எடுத்துக்காட்டு;
           “கோதகன்று அளிக்குவார் அருந்திக் கொள்கைபோல்
           தீதகன்று அருந்திரு நுகரச் சென்மினென்று
           ஏதகன்று அணிக்குலத்து இலங்கு மாடங்கள்
           மீதகன்று அசை கோடி விளிப்ப மானுமே.”
                      (தேம்பாவணி – நகரப்படலம், 2. 19)

உயர்ந்த வீடுகளின் மேல் அசைந்தாடும் கொடிகள் மக்களை வரவேற்பது போல் தோன்றின. இப்பாடலின் முதல் வரி தாராள மனத்தோடு மற்றவரோடு பகிர்ந்து கொள்ளும் பண்பைக் குறிக்கிறது. பிறர்க்குதவி செய்தல் கிறித்தவ அறத்தின் முக்கிய அம்சம். இது திருக்குறள் கூறும் இரண்டு அதிகாரத்தோடு (22-23: ஒப்புரவு அறிதல், ஈகை) இணைந்த பண்பையும் நினைவூட்டுகிறது.

கடைசி இரண்டு வரிகள் விருந்தினரை வரவேற்கும் வகையில் மாளிகையின் மேலே அசைந்த கொடிகள் தோன்றின. இது சிலப்பதிகாரத்தின் நிகழ்வை நினைவூட்டுகிறது. கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வரும்பொழுது இங்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கும் பொருள்படத் தோன்றியது என்பது தெரிந்ததே. இவ்வாறு தேம்பாவணி கிறித்தவப் பார்வையை முன்வைத்து இயற்கையின் நிகழ்வுகளுக்கு விளக்கம் தருவது குறிப்பிடத் தக்கது.

பண்பாட்டுப் பரிமாறல் - புனித வீடு (Santa Casa) புலம் பெயர்தல்:
“சாந்தா காசா” என்பது நசரேத்தூரில் மரியாளும், சூசையும், சேசுவோடு வாழ்ந்த வீடு.  கிறித்தவ மரபின்படி இஸ்லாமியர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது விண்ணகத் தூதர்கள் அதைக் காப்பாற்றினார்கள். முதலில் அதை இன்றைய குரோவாசியவிற்குத் தூக்கிச் சென்றார்கள். இறுதியாக, அது இத்தாலியில் உள்ள லொரேட்டோ மலை நகரத்தை வந்தடைந்தது. பதினாறாம் நூற்றாண்டிலிருந்து அங்கு செங்கல்ளால் கட்டப்பட்ட ஒரு வீடு இருந்தது. பிறகு இது ஒரு முக்கிய திருப்பயண மையமாக மாறியது.

இது வீரமாமுனிவருக்கு முக்கிய இடமாக இருந்திருக்கிறது. அதை வருங்காலத்தில் நிகழவிருக்கும் இத்தாலியின் பெருமையை சேசு சூசைக்கு முன்னறிவித்ததாக தேம்பாவணியில் பதிவு செய்கிறார். (32, 25-26)

           “ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயிலெனக்கு உலகில் ஆகிப்
           பாராழி ஒன்றிணையாய்ப் படர்செல்வ நாட்டியல்யான் பகர்வது என்ன
           நீராழி கடந்தங்கண்; இம்மனைசென்று அடைக்கலமே நிலத்தில் செய்தாங்கு
           ஓராழி இரவியின் இவ் இல் இலங்கச் செயும் இத்தாலியநாடு அன்றோ”

 வீரமாமுனிவர் திருக்காவலூரையும் மரியாளையும் தமிழகத்தின் மிக முக்கிய அடைக்கலத் தலமாகக் கருதினார். அதனால் லொரேட்டோவில் உள்ள வீட்டை இடம்பெயர்த்து காவிரிக்கரைக்குக் கொண்டுவருகிறார். அவரது பாடல் திருக்காவலூர் கலம்பகம் (15) இதைத் தெளிவுபடுத்துகிறது.

           “நாணி பூட்டிய சாப மேந்திய வீர வெங்கர வேடனார்
                      நாணி வுட்சுடு தீய சொற்கொடு நம்மை யெள்ளின ராரடா
           சேணி பூட்டிய கொம்ப ரேந்திய தேற லூட்டிய காவலூர்
                      சீரினாளொரு தேவ மானொரு சீய மேகரு வுற்றகாற்
           பாணி பூட்டிய வெங்க டார்மலை பற்றி யெங்குடி லெய்தினாள்
                      பாத மூன்றிய வாயிறாமரை பூத்த காடென வாயடா
           தூணி பூட்டிய வம்பு போலவள் புக்க சிற்றில லர்ந்தபூ
                      தூய தேனுக வின்னும் வாடில சூழ்ந்து வாழ்த்திட வண்டரோ.”

இப்பாடல் முதலில் வேடர்கள் வாழும் மலையிலுள்ள ஒரு குடிலில் மரியாள் தான் கர்ப்பிணியாக இருக்கும்பொழுது அடைக்கலம் புகுந்தாள் என்பதையும், சேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததையும் சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலின் இரண்டாவது பகுதியில் ஒரு சிறிய இல்லத்தில், அதாவது நசரேத்தூரில் வாழ்ந்ததைக் குறிக்கிறது.
இங்குப் புதிதாக புகுத்தியிருப்பது “சாந்தா காசா” தமிழகத்தில் மறவர் வாழும் மலைப் பகுதி.  பாலஸ்தீனத்திலிருந்து இத்தாலிக்கு வந்த “சாந்தா காசா” தொடர்ந்து பயணம் செய்தது. சேசு சபையினர் தாங்கள் பணிசெய்யச் சென்ற நாடுகளுக்கெல்லாம் இந்த உருவத்தை எடுத்துச்சென்றனர் – வடக்கு, மத்திய, தெற்கு அமெரிக்காவில் கோவில் கட்டினர். இந்தப் பக்தி முறையைப் பல இடங்களில் பரவச்செய்தனர். அதுபோல திருக்காவலூரில் எழுப்பப்பட்ட கோவிலும் இன்னுமொரு லொரேட்டோவாக அமைந்தது.

தேம்பாவணியில் காணும் நிலப்பரப்பும் இயற்கை வருணனைகளும் இலக்கிய முறையில் மட்டும் எழுந்த காப்பியப் படைப்பல்ல. தமிழகத்தின் மலைகளிலும், நதிகளிலும், நிலப்பரப்பிலும் கிறித்தவக் கண்ணோட்டத்தோடு ஆன்மீக வழியில் சிந்திக்க வைக்கும் வருணனைகள்.

தமிழகத்தில் கத்தோலிக்கக் கவிதை:
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேதியர் தேம்பாவணியை வாசித்த முறை: -
1721 சனவரி 12ஆம் தேதி பிரான்சு நாட்டு சேசுசபை குரு நோவேல் தே பூர்ஜெஸ் பாரிஸில் இருந்த எத்தியென் சூசெவுக்கு எழுதிய கடிதத்தில் வீரமாமுனிவரை “பூக்களின் தந்தை” என்று குறிப்பிட்டு அவருக்காகப் பல வகையான பூக்களின் விதைகளை வாங்கி அனுப்பியதாகப் பதிவாகியுள்ளது. இந்தியாவில் சேசுசபையினர் வாழ்ந்த பல இடங்களில் அழகுக்காகவும் மருந்துக்காகவும் தோட்டங்களை அமைத்தனர். ஏனெனில் அவர்கள் ஆன்மீக அளவிலும் உடல் அளவிலும் குணமளிப்பவராகப் பணிசெய்து வந்தனர்.

ஏலாக்குறிச்சி என்ற ஊரில் வேதியர்களோடு வாழ்ந்த வீரமாமுனிவர் இவ்வாறு வெளிநாட்டிலிருந்து பெற்ற விதைகளை வைத்து என்ன பயன் அனுபவித்தார்? தேம்பாவணியில் வரும் பாடல்கள் இதற்குக் கொஞ்சம் புரிதல் அளிக்கின்றன. (ஐயம் நீங்கு படலம் 8, 50-53.)

           நீமம் உடைத் திங்கள் துடைத்து ஒளியைப் பாய்ந்த
                      நேர் அடியாள், நேர் அற, விள்ளா வண்ணம்,
           காமம் உடைத்து, ஒளி உடுத்து, சுடரில் தூய
                      கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே,
           தாமம் உடைத் தண் தாது மடு உடைத்துச்
                      சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி,
           ஏமம் உடைத் தனி விருது என்று, அலர் சுவேத
                      இலீலி எனும் மாலை, பதத்து, ஒரு நூறு, உய்த்தார். (50)

           இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள்,
                       இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்சக்
           கருதி, எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை
                      கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே,
           குருதி, எழில் படுத்திய செந்தாது உலாவும்
                      கொழுந் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு,
           பருதி எழில் படுத்திய சீறு அடியைப் போற்றிப்
                      பணி ஆக முன் படைத்தார், ஒரு நூறு அன்றோ. (51)

           வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள்,
                      விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்பு உற்று உய்ய,
           கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும்
                      கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே,
           நீடு அவிழ்த்த வாய் இடத்துப் பிரிந்து ஓடும் பல்
                      நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த
           தோடு அவிழ்த்த விரைக் கமலம் மாலை மாற்றி,
                      சூடிய தாள் தொழுகின்றார், ஒரு நூறு அன்றோ. (52)

           துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞானத்
                      துறை அன்னாள், மாசு அறு நல் உணர்வின ஈர்த்து,
           மறை கெழு நூல் வழி வழுவா, கடவுள் நல் தாள்
                      மாறு இல மெய்ஞ் ஞான நலம் அமைந்ததற்கே,
           முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின்
                      முடுகு வழி விடா திரியும் இரவிக் காந்தம்,
           அறை கெழு நூல் வழித் தொடை போல் தொடையல் ஆக்கி,
                      அருச்சனை செய்து, அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ. (53)

இந்தப்பாடல்கள் சூசை கண்ட காட்சியின் ஒரு பகுதி. இது சூசையின் சந்தேகத்தை நீக்குகிறது. மரியாள் தூயவள் என்று ஏற்றுக்கொள்கிறார். அந்தக்காட்சியில் வானதூதர்கள் மலர் தூவி மரியாளை வணங்குவதைக் காண்கிறார். இது தென்னிந்தியாவில் உள்ள மரபோடு இணைந்தது.

ஆனால் வானதூதர் மரியாளுக்குச் சமர்ப்பிக்கும் மலர்கள் தமிழகத்தில் வழக்கமாகச் சொல்லக்கூடிய வகைகள் அல்ல- - வெள்ளை இலீலி (சுவேத இலீலி - Lilium canditum in Latin)- கத்தோலிக்க மரபில்  மரியாளின் கற்பையும், தூய்மையையும் குறிப்பது@ அது தமிழ் நாட்டில் இல்லாதது; இரண்டாவது மலர் இரோசு, இதுவும் தமிழ் மரபில் இல்லாதது; பிறகு  இஸ்லாமிய மரபோடு சேர்ந்து தமிழகத்தில் தோன்றியதாகச் சொல்வதுண்டு. ஆனால், கமலம் - தாமரை தமிழகத்தில் நன்கு அறியப்பட்டது. ஏலாக்குறிச்சியில் மரியாள் “அடைக்கல மாதா” வாக அறிமுகமாகிறாள். மரியாள் வருந்தி வருவோர்க்குத் தஞ்சம் கொடுப்பவள் என்று பொருள்.

தேம்பாவணி எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் தனி ஒரு காப்பியமாக எழுதப்படவில்லை. 1720 – ஆண்டளவில் வீரமாமுனிவர் இரண்டு முக்கிய நூல்களை எழுதினார் – திருக்காவலூர் கலம்பகம், கித்தேரி அம்மாள் அம்மானை. கலம்பகம் அன்னை மரியாளைத் திருக்காவலூரின் அடைக்கல மாதாவாக சிறப்புச் செய்யும் பாடல். தமிழகத்தில் உள்ள தலபுராணம் போல அமைந்துள்ளது. இப்பொழுது அக்கோவிலைச் சுற்றிய மதில்களில் இப்பாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் வளாகத்தின் மூலையில் கித்தேரி அம்மாளுக்கு ஒரு சிறு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. வீரமாமுனிவர் கித்தேரியை ஒரு கிராம தெய்வமாக, குருதி சிந்திய தேவதையாக கற்பனை செய்து அம்மானை பாடல் எழுதி அவளுக்குச் சிறப்புச் செய்கிறார். திருக்காவலூர் ஒரு கிறித்தவ பக்தியைக் கற்பிக்கும் மையமாக நிலை நாட்ட வீரமாமுனிவர் தொகுத்த கனவுக்காட்சியின் சின்னங்கள்தான் இந்த இரண்டு பாடல்களும். இவையெல்லாம் தேம்பாவணியோடு தொடர்பு கொண்டவை. அதாவது, தமிழ், இலத்தீன், இத்தாலியப் பண்பாடு, மற்ற கிறித்தவ அம்சங்கள் கலந்த ஒரு காப்பியம்தான்  அவர் எழுதிய தேம்பாவணி.

தேம்பாவணியின் தாக்கம்:
தமிழ் இலக்கிய உலகில் கிறித்தவர்களுக்கு நிலையான அடையாளம் கொடுத்தது வீரமாமுனிவர். அவருக்கு முன்பு பல கிறித்தவப் பணியாளர்கள் தமிழில் எழுதினார்கள். ஆனால் அவையெல்லாம் இலக்கியமாக தமிழ் உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் கிறித்தவம் உண்டு என்று சொல்லும் நிலைக்கு அடிக்கல் நாட்டியவர் வீரமாமுனிவர். அவர் 1747-இல் இறந்தார். அதன் பின் என்ன நிகழ்ந்தது? எப்படி கிறித்தவம் தமிழகத்தில் தொடர்ந்தது என்ற கேள்வி எழுகிறது.

சேசு சபை தொடங்கி (1542) 200 ஆண்டுகளில் அவர்கள் உலகெங்கும் சென்று பணிசெய்து புகழ் தேடினர். பிறகு திடீரென்று அவர்கள் வாழ்வில் காற்று எதிர் திசையில் பலமாக வீசியது.  1759-இல் போர்த்துக்கீசிய அரசு சேசு சபைக்குத் தடை விதித்தது. 1764-இல் பிரான்சு நாடும், 1767- இல் இஸ்பானிய நாடும் தடை விதித்தன. பிறகு 1773-இல் திருத்தந்தை (The Pope)  உலகெங்கும் சேசு சபையினரைத் தடைசெய்தார்.

இத்தகைய தடை அவர்கள் வாழ்வுக்கு ஒரு முடிவு கட்டியது. தென்னிந்தியாவில் இருந்த சேசு சபையினர் தங்கள் உரிமையை இழந்தனர். அவர்களுக்கு இலக்கியம் படிக்கவோ புதிதாக நூல்கள் எழுதவோ நேரம் இல்லை. தங்களைப் பாதுகாக்க மற்ற துறவியரிடமும், ஆட்சியாளரிடமும் தஞ்சம் புகுந்தனர். தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையும் வெகு விரைவில் மாறிக்கொண்டிருந்தது. 1740- ஆண்டுகளில் தமிழகம் 72 பாளையமாகப் பிரிக்கப்பட்டு குறு நில மன்னராட்சி போல நிகழ்ந்தது. பிறகு ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்தது.

இக்கால கட்டத்தில் மறைப் பணியாளர்கள் கவிதை எழுதவில்லை. ஆனால் வீரமாமுனிவர் பயிற்றுவித்த வேதியர்கள் முன்வருகின்றனர். சவரிமுத்து பிள்ளை வடக்கண்குளத்தில் தேம்பாவணியை ஓலை ஏடுகளில் பிரதி எடுக்கிறார். சுவாமிநாத பிள்ளை மெட்ராசில் வாழ்ந்து கொண்டு வீரமாமுனிவர் வழியில் காப்பியமும் கலம்பகமும் எழுதுகிறார். வீரமாமுனிவரின் வரலாறு எழுதிய முத்துசாமி பிள்ளை பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவரின் நூல்கள் கத்தோலிக்கச் சமுதாயத்திற்கு வாழ்வு கொடுக்கும் ஆதாரமாக விளங்கின என்று பதிவு செய்கிறார். அவரது பாடல்களைப் படித்தும்  பாடியும் அவரது நூல்களைப் பரப்பி வந்தார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது எப்படி மறைப்பணி பொதுமக்கள் எடுத்துச் செய்தார்கள் என்பது. குருக்கள் யாரும் இல்லாத நிலையில் இவர்கள் ஒரு புதிய திருப்பத்தை உருவாக்கினர். கத்தோலிக்க பொது மக்கள் கிறித்தவ நம்பிக்கை சார்ந்த பாடல்களும் காப்பியங்களும் எழுதத் தொடங்கினர்.

இக்காலக் கட்டத்தில் வாழ்ந்த முக்கிய எழுத்தாளர் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை (1826-1889);. சமுகச் சீர்திருத்தவாதி, பெண்கள் கல்விக்காகப் போராடியவர், முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் எழுதியவர். கத்தோலிக்கக் கிறித்தவராக சிற்றிலக்கியங்கள் பல இயற்றினார்.

பிறகு 1814- இல் சேசு சபையினருக்கு இருந்த தடை நீக்கப்பட்டது. 1834- இல் ஐரோப்பாவிலிருந்து தமிழகம் வந்த சேசு சபையினர் எப்படி கிறித்தவ இலக்கியம் கத்தோலிக்கரை ஒன்றிணைத்துத் தொடர்ந்து வழிநடத்தியது என்பது கண்டு வியந்தனர்.

சுருங்கச்சொல்ல வேண்டுமானால், சேசு சபையினர் மறைப்பணி திட்டங்கள் தோல்வியில் முடிந்தன. ஆனால், வீரமாமுனிவர் தொடங்கிய இலக்கியப் பணி, அவர் ஏலாக்குறிச்சியில் பயிற்றுவித்த வேதியர் குழு எல்லாத் தடைகளையும் எதிர்கொண்டு நிலைத்து நின்றது.

இதற்கான காரணங்களைத் தேட வேண்டும். ஏன் கத்தோலிக்கச் சிந்தனையாளர்கள் தமிழ் நூல்களில் பெரிய அளவுக்கு ஈடுபாடு கொண்டிருந்தனர்? இந்த நூல்கள் அவர்களுக்கு எந்த வகையான அழுத்தம் கொடுத்தது?
கிறித்தவ மறைப்பணியாளர்கள் தங்கள் ஆன்மீக, பண்பாட்டு, பொருளாதார அதிகாரத்தை வேதியர்களிடம் ஒப்படைத்தபோது இத்தகைய வரலாற்றுத் தொடர்புக்கான விதையைப் பயிரிட்டார்கள். சேசு சபையினர் அவர்கள் பயிற்றுவித்த வேதியர்களுடன் தமிழ் இலக்கியத்திற்குள் கிறித்தவ நூல்களை இணைத்தனர். இதற்கு எடுத்துக்காட்டாக தேம்பாவணி அமைந்துள்ளது.

ஏலாக்குறிச்சியில் தொடங்கிய அத்தகைய பயிற்சி வீரமாமுனிவரும், அவரது தோழர் ஞானப்பிரகாசியாரும் (பெர்த்தோல்டி) எழுதிய நூல்கள் ஒரு புதிய கண்ணோட்டத்தை முன் வைக்கின்றன. வேதியர்கள் ஞானமுயற்சி, வேதியர் ஒழுக்கம் போன்ற நூல்களைப் படித்துத் தியானிக்கும் பொழுது தமிழ் உலகத்தைக் கிறித்தவக் கண்ணோடு பார்க்கக் கற்றுக் கொண்டனர். அதோடு இயற்கைக் காட்சியெல்லாம் கிறித்தவக் கோட்பாடுகளை வெளிப்படுத்தும் நூலாக வாசிக்கத் தொடங்கினார்கள்.

           “கண்ட(து) எலாம் கர்த்தாவைக் காட்டிய கண்ணாடி எனக்,
           கொண்ட(து) எலாம் மெய்ஞ்ஞானம் கூறியவாய் ஆயினவே.”
                      (கித்தேரியம்மாள் அம்மானை, 2 13)

அதன் தொடர்ச்சியாக ஒரு சமுதாய உணர்வை அனுபவித்தனர்- நரகத்தின் முன் அச்சமும், விண்ணகம் நோக்கிய ஆவலும், தீயவை கண்டு அருவருப்பும், தவறுகளை நினைத்து வெட்கமடையவும், தானாக சொந்த முயற்சியால் மீட்படையலாம் என்பது ஆணவம் என்றும் உணரத் தொடங்கினர். இந்தக் கண்ணோட்டத்தைத்தான் ஏலாக்குறிச்சியில் கற்றுக்கொண்டனர். இத்தகைய பார்வை தமிழ் மரபோடு, சித்தர், வள்ளுவர் உலகோடு இணைந்து இருந்தது என்பதுதான் அதன் சிறப்பு.

(துணை நின்ற நூல், Margherita Trento, Writing Tamil Catholicism. Literature, Persuasion and Devotion in the Eighteenth Century. Leiden: Brill,  2021)




Additional Notes:
[1]    
Cf. Maria Goloubeva,  The Glorification Of Emperor Leopold I In Image, Spectacle And Text,  2000.

[2]    
There was a king with the white spear in hand by name Leopold,
He could conquer the wicked enemy and make them surrender,
He ruled joyfully the glorious land of Rome,
Which was surrounded by the fields with water flowers. (Tempavani, 3532)

[3]
Baguet, Jelten. 2015. “Politics and commerce: a close marriage? The case of the Ostend Company (1722-1731).” TSEG/ Low Countries Journal of Social and Economic History 12, 3. DOI: 10.5117/TSEG2015.3.BAGU

[4]  
Robert Caldwell, A Compartive Grammar of the Dravidian, 1875, 155.

[5]
Your hands are the glory-lily,
Your feet are the lotus flower,
Your eyes are the blue-lotus,
Your mouth is the red-lily,
All these flowers bloom in unison in Tirkkāvalūr.
You are the tender garland,
The bees drink its honey,
This is the best one,
The sweet honey from the flowers on this earth cannot equal this.
Tell us, o bees. (23)

[6]
வீரமாமுனிவர் கட்டிய முதல் தேவாலயம் (https://www.hindutamil.in/news/spirituals/197827-.html)
..







Monday, December 6, 2021

அறம் காத்த அண்ணல்!



-- முனைவர் சிவ. இளங்கோ, புதுச்சேரி.

Ambedkar.jpg

 பிறப்பினால் இந்துவாகப்
   பிறப்பவர் யாருமில்லை; 
வெறுப்பினைக் கக்கும் வேதம் 
   வேள்வியில் புனிதம் காக்கும்;
சிறப்பிலாச் சிறுமைச் சாதி 
   சிறிதுமே ஏற்க வேண்டாம்; 
இறப்பிலும் இழிவு தீரா! 
   இறக்குமுன் துறத்தல் நன்றே! 

நன்றதைச் சொன்னவர் அம்பேத்கர்!
    நாளுமே அறிவினைப் போற்றிநின்றார்! 
வென்றதைத் தீர்த்திடும் வேகத்தில்
    விட்டொழித்தார் மதம் வீறுகொண்டே!
நன்றவர் புத்தரின் நடையேற்றார்!
    நானில மக்களும் விழிப்புற்றார்! 
அன்னவர் வழிதனில் நாடுசென்றால்
     அவலமே தீர்ந்திடும்! வாழிஅண்ணல்!

--



Saturday, December 4, 2021

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் திருவள்ளுவர் திருவுருவம்

-- முனைவர். ப. தேவி அறிவு செல்வம்



திருக்குறளும், திருவள்ளுவரும் தெரியவந்த காலத்திலிருந்தே அவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சியானது தொடங்கிவிட்டது. திருக்குறளின் கருத்துக்களைக் கொண்டும் அவர்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையிலும் உருவங்கள் உருவாக்கப்படலாயின.
valluvar.jpg


1. கிபி பத்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் திருவள்ளுவமாலை என்பது 55 பாடல்கள் கொண்டு 53 புலவர்களால் திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் புகழ்ந்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பு நூல் ஆகும். திருவள்ளுவர் பற்றிய பல்வேறு புலவர்கள், அறிஞர்களின் சித்தரிப்புகளைக் கொண்டு அவரை காட்சிப்படுத்த இந்நூல் முயல்கிறது.


Mylapore Valluvar.jpg
2. சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலினை அகழ்ந்த போது கிடைத்த சிலையானது கிபி 10-15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனத் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் சா. கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். இச்சிற்பம் பீடம் மீது அரை பத்மாசனத்தில் வலக்கையில் சின்முத்திரையுடன் இடக்கையில் ஓலைச் சுவடி ஏந்தி, உச்சிக் கொண்டை போட்டு தாடியுடன், நீண்ட காது வளர்த்து உடலில் ஓடும் பட்டையான ஆடையுடன் இடை ஆடையும் அணிந்த மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது.

3. கிபி 1792 இல் மெக்கன்சி சுவடிகள் வேதநாயகம் பிள்ளை எழுதின சுவடிகளில் இதற்கான விரிவான சித்தரிப்புகள் காணக்கிடைக்கின்றன. இதில் பூணூல் அணிந்து காணப்படுகிறார் திருவள்ளுவர்.


Ellis valluvar Coin.JPG
4. கிபி 1810- 1815 காலத்தில் 4 தங்க நாணயங்களில் திருவள்ளுவர் உருவத்தை அன்றைய சென்னை ஆட்சியராக இருந்த எல்லிஸ் துரை வெளியிடுகிறார். அவற்றின் ஒரு பக்கத்தில் இருந்த உருவமானது ஒரு பீடத்தின் மீது பத்மாசனமிட்டு வலது கை தொடை மீதும் இடது கையில் ஓலைச்சுவடியும், இடையில் வேட்டியும், இடது தோளில் மடித்துப் போட்டு துண்டும் அணிந்து, மழித்த தலை, தலைக்கு மேலே ஒரு குடை, பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரத்துடனும், நாணயத்தின் மறுபுறம் நட்சத்திரப் புள்ளிகளால் ஆன வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது. 

5. கிபி 1752 இல் வெளிவந்த ஆனந்த நாயனார் என்ற நூலில் ஒரு புகைப்படம் வெளிவந்து உள்ளது. அதில் தாடி மீசை இல்லாமல் வலது கை சின்முத்திரை இடது கையில் ஓலைச்சுவடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.

6. 1958ல் பண்டிதர் கிருஷ்ணசாமி அவர்கள் வெளியிட்ட நூல் மற்றும் 1962இல் கே.எம் பாலசுப்பிரமணியன் அவர்கள் வெளியிட்ட நூலிலும் திருவள்ளுவரின் படம் இடம் பெற்றுள்ளது.


prose book valluvar.jpg
7. கிபி 1904இல் தமிழ் பண்டிதர் கோ. வடிவேலு செட்டியார் திருக்குறள் மூலமும் பரிமேலழகருரையும்  என்ற நூலில் திருவள்ளுவநாயனார் என அச்சிடப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஜடா முடி, தாடி, மீசையுடன் மார்புக்குக் குறுக்காக யோக பட்டை, துண்டு அணிந்து, நெற்றியில் பட்டை நடுவில் குங்குமம், வலது கையில் சின்முத்திரையுடன், இடதுகையில் ஓலைச்சுவடியும் ஏந்தியவாறு உள்ளது. நாயனார் சொரூபஸ்துதி என்ற பாடலை அடிப்படையாக வைத்து இந்த உருவம் கொடுக்கப்பட்டதாக விளக்கமும் அந்நூலில் உள்ளது. இதன் ஆங்கிலப் பதிப்பில் திருவள்ளுவர் படம் கோட்டுருவமாகவும் சைவ சமய அடியார் போன்று கரங்களில், நெற்றியில் விபூதி பட்டையுடன் மரத்தடியில் இரண்டு அடியார்கள் தொழுவது போல் உள்ளது. 

8. கிபி 1935இல் வினோதன் பத்திரிக்கை, கிபி 1949இல் புலவர் குழந்தை எழுதிய நூலில் திருவள்ளுவர் புகைப்படம் வெளிவந்துள்ளது.

Venugopal Sharma.jpg
9. 1950க்குப் பின் சேலம் காமாட்சி பட்டியைச் சேர்ந்த ஓவியர் வேணுகோபால் சர்மா ஒரு திருவள்ளுவர் ஓவியம் வரைகிறார். தூய்மை நிறைந்த உள்ளம் ,தூய்மை நிறைந்த நோக்கு, தூய்மை நிறைந்த வாக்கு ஆகியவற்றைத் திருவள்ளுவர் கொண்டிருப்பதால் அவருக்கு வெண்ணிற ஆடை உடுத்தியும், சிந்தனை வானில் வாழ்ந்தவர் என்பதால் அவரை சுற்றி மரம், செடி, கொடிகள் வீடுகள் ஏதும் இல்லாமல் அவரை சுற்றி அறிவொளி மட்டும் இருக்கும்படியாகவும் இவ்வுருவம் உருவாக்கப்பட்டதாகும் தன்னுடைய சிந்தனை, செயல், ஆடை ஆகியவற்றை அழுக்கு தீண்டாமல் இருக்க ஒரு சிறிய மரப்பலகை மீது இருப்பது போன்று அமைக்கப்பட்டதாகவும் திருக்குறள் திருவுருவப்பட விளக்கம் என்ற சிறு வெளியீட்டில் திரு கே ஆர் வேணுகோபால் சர்மா விளக்கியுள்ளார்.

10. 1964 மார்ச் 23 இல் தமிழகச் சட்டமன்றத்தில் திரு. பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது துணை குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் இப்படத்தைத் திறந்துவைத்தார். பிறகு கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இப்படம் அரசுப் பேருந்தில் இடம் பெற்றது. தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட படமாக அரசாணையும் வெளியிடப்பட்டது.

11. 1968ல் சுவாமி சுத்தானந்த பாரதியார் திருக்குறள் உரைநடையை உலகத் தமிழ் மாநாட்டில் அரங்கேற்றினார். திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.


prose book valluvar2.jpg
12. 1955இல் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருக்குறள் நூல்நயம் புத்தகத்தின் அட்டையில் திருவள்ளுவர் புகைப்படம் ருத்ராட்சம், விபூதி பட்டை, சின்முத்திரையுடன் காணப்படுகிறது.


MarinaBeach Valluvar.jpg
13. 1968ல் மெரினா கடற்கரையில் நின்ற நிலையில் எழுத்தாணி, ஓடி தாடி, மீசை என உள்ள உருவத்தை அப்போதைய கல்வி மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த திரு நெடுஞ்செழியன் சென்னையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் திறந்துவைத்தார்.


Kanyakumari Valluvar.jpg
14. 1990 செப்டம்பரில் கன்னியா குமரி வள்ளுவர் சிலையானது உருவாக தொடங்கி 2000 ஜனவரி 1 இல் திறக்கப்பட்டது கணபதி ஸ்தபதியால் 133 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறக்கப்பட்டது. இதில் நின்ற நிலை வைஷ்ணவ ஸ்தானம் எனப்படும் சாத்வீக பாவத்தை உணர்த்துவதற்காக இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது.


SOAS London Valluvar.jpg
15. 1996ல் லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் அமர்ந்த நிலையில் தாடி, மீசை ,எழுத்தாணி, ஓலைச்சுவடி உடன் திருவள்ளுவர் சிலையானது காணப்படுகிறது.

16. ஆஸ்திரேலியா சிட்னியில் ஸ்தபதி நல்லதாணு அவர்களால் வடிவமைக்கப்பட்ட சிலையானது இன்று நிலையில் வைக்கப்பட்டுள்ளது.


MDIS Valluvar.jpg
17. சிங்கப்பூரில் 4 இடங்களில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம், முனீஸ்வரர் ஆலயம்,  MDIS வளாகம், புக்கிட் பாஞ்சாவ் முருகன் திருக்குன்றம் ஆலய திருமண மண்டபத்திலும் உள்ளன.

18. மொரீசியஸ் மகாத்மா காந்தி கல்வி நிறுவனத்தில் திருவள்ளுவர் திருவுருவம் உள்ளது.

19. மியான்மார் தட்டோன் நகரில் 5 அடி உயர பளிங்குச் சிலை உள்ளது.

20. மணிப்பூர் மோரே தமிழ்ச் சங்கத்தில் மூன்றரை அடி உயரச் சிலை வைக்கப்பட்டுள்ளது.


Germany Valluvar.jpg
21. ஜெர்மனியில் லிண்டன் அருங்காட்சியகத்தில் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளையால் 2019 இல் அமைக்கப்பட்டது.


vgp valluvar.jpg
22. மேலும் வி.ஜி.பி தமிழ்ச் சங்கம் சார்பில் தென்னாப்பிரிக்கா டர்பன், அமெரிக்க வாஷிங்டன், அந்தமான் போர்ட் பிளேயர், மலாய் கோலாலம்பூர், சீனா தைவான், மகாராஷ்டிரா நவிமும்பை, ஆந்திர விசாகப்பட்டினம், அலகாபாத், சுவிஸ் கல்கத்தா, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.


Kilinochchi Valluvar.jpg
23. மேலும் இலங்கை புத்தளம் இந்துக் கல்லூரி, மன்னார் சித்திவிநாய இந்துக் கல்லூரி, முள்ளிவளை வித்தியானந்தா கல்லூரி, கிளிநொச்சி தமிழ்ச்சங்கம், தென்மராட்சிக் கலாமன்றம், வவுனியா புத்தளம், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கம், மேற்கு மாகாணம், கொழும்பு இராமநாதன் மகளிர் கல்லூரி என இலங்கையின் முக்கிய இடங்களிலும் திருவள்ளுவரின் திருவுருவம் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் காரைத்தீவு யாழ் உரும்பிராய் இலும் உள்ளன.

24. இந்தியாவில் புதுச்சேரி, டெல்லி, பெங்களூர், ஹரித்துவார் போன்ற இடங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. 

25. இது தவிர்த்து ஆசிரியை கோ.ப செல்லம்மாள் சென்னை கோட்டூரில் தன் வீட்டு வாசலில் திருவள்ளுவர் சிலை வைத்துள்ளார்.

26. பஞ்சாப்பைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் தனது சென்னை வீட்டில் உள்ள சந்தனம் மற்றும் மாமரத்தில் திருவள்ளுவர் சிலையினை அவரே செதுக்கி வைத்துள்ளார்.

27. திருப்பரங்குன்றம் மேம்பாலத்திற்கு அருகே  திருவள்ளுவர் மற்றும் நந்தனார் இருவரும் ஒரே  பலகைக் கல்லில் அமர்ந்த மாதிரியான சிற்பமும் உள்ளது.


valluvar kottam  valluvar.jpg
28. வள்ளுவர் கோட்டத்தில் வலது கையில் திரிசூல ஹஸ்தத்தில், இடது கையில்  ஓலைச்சுவடி யுடன் இருப்பது மாதிரியான உருவம் வடிக்கப்பட்டுள்ளது.


படங்கள் உதவி - நன்றி:
ஜெர்மனியில் திருவள்ளுவர் விழா மற்றும் ஐரோப்பியத் தமிழர்கள் நாள் சிறப்பு மலர்.
இணையம்