Thursday, May 19, 2022

ராஜராஜனின் கொடை: நூல் மதிப்புரை

ராஜராஜனின் கொடை:  நூல் மதிப்புரை 

 — சுந்தர் பரத்வாஜ்
பொன்னியின் செல்வன் குழும தோற்றுநர்


Financial management for non financial managers என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன். சிறப்பான தகவல்கள் அடங்கியது. அதிலிருந்தே வரலாற்றாசிரியராகப் படித்து வராமல் வரலாற்றின் மீது கொண்ட காதலால் வரலாற்றைத் தேடி அறிந்து நம்முடனும் பகிர்ந்துகொள்ளும் ஆர்வலர்கள், அறிஞர்கள் இவர்களது கருத்து மிகவும் என்னை ஈர்க்கும். நானும் கட்டிடம் சார்ந்த தொழில் செய்யும் ஒரு வரலாற்று ஆர்வலர்.  இந்த வகையில் பேராசிரியர் நா கண்ணன், கணினி முனைவர் சுபாஷினி அவர்கள் நிறுவிய  தமிழ் மரபு அறக்கட்டளையின் தோற்றமும் வளர்ச்சியும் வியக்கத்தக்கது. பரந்து விரிந்து பல்வேறு அறிஞர்களையும் உள்ளடக்கி இன்றைய மற்றும் நாளைய பன்னாட்டு இளைஞர்களுக்கு நமது தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ் வரலாற்று ஏற்றத்தையும் பகிர்ந்தளித்து தன்னலமில்லாத சிறந்த சமுதாய வளர்ச்சி பணியினை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொருத்தவரை ராஜராஜன் ஒரு உன்னதத்தின் உச்சியை உடனடியாக நமக்குள் எழுப்பும் தீப்பொறி.
"ராஜராஜனின் கொடை"
முனைவர் க. சுபாஷிணி
பதிப்பு: 2022 தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகம் 

டாக்டர் சுபாஷிணி  எழுதிய ராஜராஜனின் கொடை  நூல் அவரது கணினி பின் புலம் காரணமாக லேஅவுட் திட்டமிடல் - செயல்படுத்தல் எதிர்கால சிந்தனை போன்றவற்றுடன் மிக அருமையாக வெளிவந்திருக்கிறது. இதனை "மாற்றுரைத்து" சொக்கத்தங்கம் என வியக்கிறார் நமது பெருமதிப்பிற்குரிய தஞ்சைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள். அப்படி என்ன எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்க, படிக்கத் துவங்கினால் பிரமித்துப் போகிறோம். ராஜராஜனின் கொடை அண்மைக்கால ஆய்வு அறிஞர்களின் பெரும் கொடையை உள்ளடக்கிய சிறப்பான முன்னெடுப்பு. இனி அந்த நூலைப் பற்றிய எனது பார்வையைப் பகிர்ந்து கொள்கிறேன்.

ராஜராஜனின் கொடை; எளிமையான தலைப்பில் தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவுனர் டாக்டர் சுபாஷிணியின் கருத்தாழம் கொண்ட ஆய்வுப் பேழை. செய்வன திருந்தச் செய் என்ற கொள்கைப் பிடிப்பில் தீவிரமானவராய் ஒளிர்கிறார். கணினி சார்ந்த ஆய்வுப் பட்டம் பெற்ற சுபாஷிணி‌யின்  பார்வை - விருப்பு வெறுப்பற்ற - சுத்திகரிக்கப்பட்ட - தமிழ் கூறும் நல்லுலகம் சார்ந்த சமகால வரலாற்றுப் பார்வை. பதிப்புரையிலேயே அசத்துகிறார் முனைவர் தேமொழி. அணிந்துரையில் அருமையான கருத்துக்களை உதிர்க்கிறார் தஞ்சை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் செல்வகுமார் அவர்கள்.

உலகத்தமிழ் மாநாட்டை ஒட்டி டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் நிறுவப்பட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் தமிழக வரலாற்றிற்கு பெரும் பங்களிப்பை ஈந்துள்ளது. குறிப்பாக பேராசிரியர் முனைவர் ராஜவேல், முனைவர் ஜெயக்குமார், முனைவர் செல்வகுமார் காலஞ்சென்ற எனது அருமை நண்பர் அதியமான் ஆகியோரின் பங்களிப்பு போற்றத் தகுந்தது. அதிலும் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் நாகப்பட்டினம் புத்த விகாரம் குறித்த கடல் சார்ந்த ஆய்வுத் தகவல்கள் மிகவும் சிறப்பானவை. சிங்கப்பூரில் நடந்த தமிழக வரலாற்று ஆய்வு மாநாட்டுக் குறிப்புகள் " நாகப்பட்டினம் - சுவர்ண தீபம்" என்ற தொகுப்பாக ஆங்கிலத்தில் வெளியானதில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களின் சூடாமணி விகார ஆய்வுக் கருத்துகளும் அடக்கம். அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல் களஞ்சியமான இத்தகைய ஆய்வு கருத்துக்கள் பலரையும் சென்று சேரவில்லையே என்ற கவலை என் போன்ற வரலாற்று ஆர்வலர்களுக்கு இருந்து வந்தது. அதனைத் துடைத்தெறிந்து கடந்த 30 ஆண்டுகளுக்குள் தமிழக வரலாறு; குறிப்பாகச் சோழ வரலாறு, அதிலும் ராஜராஜன் - ராஜேந்திரன் - குலோத்துங்கன் ஆகிய மன்னர்களின் பௌத்தம் சார்ந்த கொடைகளைத் தேர்ந்தெடுத்து அவை அடங்கிய பெரிய லெய்டன் - சிறிய லெய்டன் செப்பேடுகளை - அவை பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ள நெதர்லாந்து பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் ஆய்வு செய்து அருமையான புகைப்படங்களுடன் சுவைமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்காகத் தொகுத்துப் பகிர்ந்துள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள்.

பொ.ஆ. 1006ல் ஸ்ரீவிஜய வணிக குழுக்களின் புத்தமத வழிபாட்டிற்காக நாகப்பட்டினம் அருகே ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலியாக ராஜராஜனால் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவிஜய அரசர்கள் அங்கு ஒரு புத்த விகாரம் எழுப்பி வழிபட்டனர். ஸ்ரீவிஜயம் மற்றும் சீன வணிகர்கள் நாகப்பட்டினம் பின் இலங்கை எனப் பௌத்த யாத்திரை மேற்கொண்டனர். ஆயினும் ஸ்ரீவிஜய மன்னர்கள் சீனப் பேரரசரிடம் சோழ மன்னர் பரம்பரை தங்களுக்குள் அடங்கியது என்ற வகையில் திரித்துக் கூறிய தகவல்கள் மாமன்னன் ராஜேந்திர சோழனின் செவிகளை எட்டியது. எனவே 1018ல் ஸ்ரீவிஜயத்தின் மீது படை எடுத்து அதனை சோழப்பேரரசின் சிற்றரசாக ஒடுக்கினான். இதற்கான கல்வெட்டு ஆதாரம் தமிழகத்தில் கிடையாது. ஆனால் சீன வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது.

இவை போன்ற புதிய தரவுகளை சாஸ்திரி,  பண்டாரத்தார் போன்ற அறிஞர்களுக்குப் பிறகு வரலாற்றறிஞர் மகாலிங்கம்‌, டி என்  ராமச்சந்திரன், மயிலை சீனி வேங்கடசாமி, முனைவர் ஜெயகுமார் போன்றோரின் அண்மைக்கால ஆய்வுகளைத் தொகுத்து எடுத்துச் சிறப்பாக வழங்கியுள்ளார் டாக்டர் சுபாஷிணி அவர்கள். தொடர்ந்து தமிழகம் வந்து இத்தகைய லெய்டன் செப்பேடுகள் கண்டிப்பாகத் தமிழகம் வந்து சேர வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக தொல்லியல் துறை அமைச்சரிடம் கொடுத்து அது தமிழக அரசு மானிய கோரிக்கை அரசாணையாக இடம் பெற்றுவிட்டது. தொடர்ந்து நெதர்லாந்து அரசும் காலனியாதிக்க நாடு வேறு நாட்டிலுள்ள தனது கலைச்செல்வத்தை முறையாக உறுதி செய்தால் கோரிக்கை விடுக்கும் நாட்டிற்குக் கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளது நமக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பன்னாட்டு அமைப்பான தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவுனர் டாக்டர் சுபாஷிணி அவர்களின் செய்வன திருந்தச் செய் என்ற கோட்பாட்டினால் லெய்டன் செப்பேடுகள் ஒரு நாள் சென்னை வந்து சேரும் என்பதில் நமக்கு ஐயமில்லை. டாக்டர் சுபாஷிணி அவர்கள் வருடிப் பார்த்து மகிழ்ந்த அந்த செப்பேடுகளை ஆயிரமாண்டு இன்ப நினைவலைகளுடன் நாமும் வருடிப் பார்க்கும் நாள் இதோ வந்து கொண்டே இருக்கிறது. அவரது எழுத்திற்கும் செயல்பாட்டிற்கும் நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்  சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.




No comments:

Post a Comment