Saturday, June 23, 2018

இலக்கியம் காட்டும் பூகோளம்

——   சிங்கநெஞ்சம் சம்பந்தம்



1. பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு


இலக்கியங்களில் கூறப்படும் பாலி ஆறும், இன்றைய பாலாறும் ஒன்றா எனும் கேள்விக்கு இல்லை என்றே பதில் சொல்ல வேண்டியிருக்கும். காரணம் தேவாரத்திலும் பெரிய புராணத்திலும் காட்டப்படும் பாலி ஆறு, இன்றைக்குக் காஞ்சிபுரத்திற்கும் செங்கல்பட்டிற்கும் தெற்கேயுள்ள பாலாற்றிலிருந்து முற்றிலும் வேறு பட்டது.

பண்டைத் தமிழ் இலக்கியங்களில், பாலி  ஆற்றைப்பற்றிய முதற் குறிப்பு தேவாரத்தில் காணக்கிடைக்கிறது. தொண்டை மண்டலத்தில் காஞ்சிக்கு வடக்கேயுள்ள திருமாற்பேறு எனும் திருத்தலத்தைப் பாடும் திருஞானசம்பந்தர்,
“உரையாதாரில்லை யொன்றும் நின் தன்மையை
பரவாதாரில்லை நாள்களும்
திரையார் பாலியின் தென்கரை மாற்பேற்று
அரையானே அருள் நல்கிடே . “ 
(திருமாற்பேறு-சம்பந்தர் தேவாரம் (1.55.6-7))
என்று அத்தலத்து ஈசனைப் பாடிப் பரவுகிறார்.
(அலைகள் பொருந்திய பாலியாற்றின் தென்கரையில் விளங்கும், திருமாற்பேற்றில் விளங்கும் அரசனே பொருந்திய நின் பெருந்தன்மையை வியந்து உரையாதார் யாருமில்லை. நாள்தோறும் உன் பெருமையை பரவாதார் யாருமில்லை. அருள் நல்கிடுக.)

இப்பாடலில் திருமாற்பேறு எனும் திருத்தலத்திற்கு வடக்கே பாலியாறு ஓடியது எனும் செய்தி நேரடியாகக் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பன்னிரண்டாம்  நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் தான் பாடிய பெரியபுராணத்தில், 'திருக்குறிப்புத் தொண்ட நாயனார்' என்ற பகுதியில் திருமாற்பேறு திருத்தலம்  பற்றிக் கூறும் போது பாலியாற்றின்  வளத்தையும்  அது பாய்ந்தோடிய தொண்டைமண்டலத்தின் செழிப்பையும், மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் சைவ தலங்களின் சிறப்புகளையும் 11 பாடல்களில் விளக்கியுள்ளார்.
'துங்க மாதவன் சுரபியின் திருமுலை சொரிபால்
பொங்கு தீர்த்தமாய் நந்திமால் வரைமிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம் அகிலோடு மணிகள்
பங்க யத்தடம் நிறைப்பவந் திழிவது பாலி' – 1098
(விளக்கம்: உயர்ந்த தவமுடைய வசிட்ட முனிவனிடமிருக்கும் காமதேனு சொரிந்த பாலானது, பெருகும் தீர்த்தமாக உருபட்டு நந்தி மலையினின்றும் இறங்கி, அங்குள்ள முத்துக்களையும் சந்தனம் அகில் முதலானவற்றுடன், மணிகளையும் கொணர்ந்து தாமரைக் குளங்களை நிறைக்குமாறு கீழ் நோக்கி ஓடி வருவது பாலாறு).

கர்நாடக மாநிலம் நந்தி மலையினின்றும் இறங்கி வரும் ஆறு என்பதால் இங்கே பாலி ஆறு என்பது பழைய பாலாற்றையே குறிக்கிறது எனலாம்.
அடுத்து,
“பிள்ளை தைவரப் பெருகுபால் சொரிமுலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி”
எனும் பாடலில் வெள்ள நீர் இரு கரைகளிலும் சென்று வயல்வெளிகளில் உள்ள மடைகளை உடைத்தது என்ற கூறுவதன் மூலம் இது ஒரு பெரிய ஆறாக இருந்திருக்கும் எனக் கணிக்க முடிகிறது.

மேலும்,
“பருவி ஓடைகள் நிறைந்திழி பாலியின் கரையில்
மருவு கங்கை வாழ் சடையவர் மகிழ்ந்த மாற்பேறாம்
பொருவில் கோவிலும் சூழ்ந்த பூம்பனை  மருதம்
விருப்பு மேன்மைஎன் பகர்வது விரிதிரை நதிகள்”
(திருக்குறிப்பு தொண்டர் புராணம் – 1113)
எனும் பாடலில் பல ஓடைகள் நிறைந்து இறங்கி உருவான பாலி  ஆறு என்கிறார் சேக்கிழார், ஆதலின் அவர்காலத்தில் பாலி ஆறு ஒரு பெரிய ஆறாகவே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.



இன்றைக்கு திருமால்பூர் என்றழைக்கப்படும் திருமாற்பேறு காஞ்சிபுரத்திற்கு 22 கி.மீ. வடக்கே, பழைய பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஆதலின், இன்றைக்குப் பழைய பாலாறு என்று வழங்கப்படும் ஆறு, கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலி என அழைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

இனி, சம்பந்தரை விட்டு விட்டு சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வருவோம். சென்னைக்கு அருகேயுள்ள திருமுல்லைவாயில் பற்றிப் பாடவரும் சுந்தரர்,
“சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின்
தந்தமுந் தரளக் குவைகளும் பவளக்  கொடிகளும் சுமந்துகொண்டுந்தி
வந்திழிபாலி  வடகரை முல்லை வாயிலாய் மாசிலாமணியே
பந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே”
(திருமுல்லைவாயில் சுந்தரர் தேவாரம் 7.69.5)

எவ்வளவு அழகான பாடல். பாலி ஆற்றின் வடகரையில் திருமுல்லைவாயில் அமைந்திருந்ததாகப் பாடல் கூறுகிறது. ஆனால் இன்று இதே திருத்தலம் கூவம் ஆற்றின்  வடகரையில் அமைந்துள்ளது. எனவே, கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இன்றைய கூவம் ஆறு, பாலியாறு என்று வழங்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம்.


திருமுல்லைவாயில் விடுத்து அருகேயுள்ள திருவேற்காடு செல்வோம். திருத்தொண்டர் புராணத்தில் வரும் மூர்க்க நாயனார் புராணத்தின் முதல் பாடலில்,
“மன்னிப் பெருகும் பெரும் தொண்டைவளநாடு அதனில் வயல் பரப்பும்
நல்  நித்திலம் வெண் திரைப் பாலி நதியின் வடபால் நலம் கொள் பதி
அன்னப்பெடைகள்  குடைவாவி அலற புக்காட அரங்கினிடை
மின்னுக் கொடிகள் துளிர்கொடிகள் விழவிற்காடு வேற்காடு
செம்பொற்புரிசை திருவேற்காடு.......”
என்கிறார் சேக்கிழார்.

பாலி ஆற்றிற்கு வடக்கே திருவேற்காடு இருந்திருக்கிறது. இன்றைக்கு திருவேற்காட்டிற்குத் தெற்கே கூவம் ஆறு செல்கிறது என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் இன்றைய கூவம் ஆறு எட்டாம்  நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பாலி ஆறு என்றே அழைக்கப்பட்டிருக்கிறது எனத்  தெளியலாம்.

இதுவரை நாம் பார்த்த தேவாரப்பாடல்களிலும், பெரியபுராணப் பாடல்களிலும் பாலி எனும் சொல்லே ஆளப்பட்டிருக்கிறது. பாலாறு என்ற சொல் இல்லை .தமிழ் இலக்கியங்களில், கலிங்கத்துப்பரணியில்தான் முதன் முதலில்  ‘பாலாறு’ காணப்படுகிறது. காஞ்சியிலிருந்து கலிங்கம் நோக்கிப் படையெடுத்து செல்லும் கருணாகரத் தொண்டைமான், வடபெண்ணையாற்றை அடையும் முன் வழியில் எந்தெந்த ஆறுகளைத் தாண்டினான் எனும் குறிப்பு, பரணியில் 376 ஆவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“பாலாறு  குசைத்தலை பொன் முகரிப் பழவாறு
படர்ந்தெழு கொல்லிஎனும்
நாலாறும் அகன்று ஒரு பெண்ணை எனும்
நதியாறு கடந்து நடந்துடனே .....”..                                                       
                                           (கலிங்கத்துப்பரணி 367).

கலிங்கத்துப் பரணியின் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி. இன்றைக்குப் பாலாறு காஞ்சிபுரத்திற்குத் தெற்கே பாய்ந்து கொண்டிருப்பதால் பரணியில் பாடப்படுவது இந்தப் பாலாறு அல்ல எனக் கூறலாம். மாறாக, காஞ்சிபுரத்திற்கும் குசைத்தலை ஆற்றிற்கும் இடையே பாலாறு காட்டப்படுவதால், இது பாலி ஆற்றையே (பழைய பாலாற்றை) குறிக்கிறது என்பது தெளிவு.

இதுகாறும் பேசப்பட்ட இலக்கியக்  குறிப்புகளால், பாலி ஆறு என்பது பழைய பாலாற்றினையே குறிக்கிறது என்றும், தக்கோலத்திற்குக்  கிழக்கேயுள்ள பழைய பாலாற்றின்  பகுதி இன்று  கூவம் ஆறு என்று வழங்கப்படுகிறது என்றும் அறியலாம்.

தேவாரம் – பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு, பழைய பாலாறு, கூவம்.

(மயிலை திரு நூ.த. லோகசுந்தரம் அவர்கள் அளித்த குறிப்புகளின் அடிப்படையில் எழுதியது )


_____________________________


2. பாலாறு எப்படிப் பாதை மாறியது ?  


கிணறு களவாடப்பட்ட கதை எல்லோருக்கும் தெரியும். சரி, ஆறு களவாடப்படுமா……....படும். ஆறு களவாடப்படும். ஆறு களவாடப்பட்ட நிகழ்வு உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்துள்ளது. இதனைப்  புவியியலில் RIVER PIRACY  என்று சொல்வார்கள். தமிழில் தற்போதைக்கு ஆற்றுக் களவு என்று மொழி மாற்றம் செய்து கொள்ளலாம். ஒரு ஆற்றினை களவு செய்ய மற்றொரு ஆற்றினால்தான் முடியும். மனிதனால் முடியாது. மனிதன் அதிகபட்சம் ஆற்றினை மறித்து அடுத்தவனை வம்புக்கு இழுக்கலாம். அவ்வளவுதான்.

ஆற்றுக்களவு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை இப்போது பார்ப்போம். கிழக்கு நோக்கிப் பாயும் இரண்டு ஆறுகள். வடக்கேயுள்ளது வடக்குஆறு, தெற்கேயுள்ளது தெற்குஆறு. இரண்டிற்குமிடையே ஒரு ஐம்பது கி.மீ. இடைவெளி என வைத்துக்கொள்வோம். இந்த இடைவெளிப் பகுதியில் உள்ள நில அமைப்பின் காரணமாக அங்கே துணை ஆறு ஒன்று உருவாகி தென்கிழக்காக பாய்ந்து தெற்கு ஆற்றின் நடுப்பகுதியில்  கலக்கிறது. காலம் செல்லச்  செல்ல  head ward erosion  காரணமாக, அதாவது அதன் தலைப் பகுதியில் நிகழ்ந்து வரும்  அரிமாணம் காரணமாக துணையாறு வடமேற்கு திசையில் வளர்கிறது. தொடர்ந்து இந்த நிகழ்வு நடைபெறும்போது, தெற்கு ஆற்றின்.  துணையாறு மேலும் மேலும் வடமேற்கு திசையில் வளர்ந்து வடக்கு ஆற்றைத் தொட்டுவிடுகிறது. அதாவது வடக்கு ஆற்றுடன் இணைந்து  விடுகிறது. இப்படி இணையும் போது வடக்கு ஆற்றில் வரும் நீர், துணையாறு வழியே பாய்ந்து தெற்கு ஆற்றில் கலந்துவிடுகிறது. இதன் விளைவாக துணையாறு எங்கே வடக்கு ஆற்றுடன் இணைந்ததோ அங்கிருந்து வடக்கு ஆற்றின் கிழக்கேயுள்ள பகுதி வறண்டு ABANDONED CHANNEL ஆக மாறிவிடுகிறது. தன் துணையாறு மூலமாக தெற்கு ஆறு, வடக்கு ஆற்றைக்  களவாடிவிடுகிறது. இதுதான் ஆற்றுக் களவு.

எனது “தேவாரம்- பெரியபுராணம் காட்டும் பாலி ஆறு, பழைய பாலாறு, கூவம்”  எனும் தலைப்பிட்ட கட்டுரையைக்  கண்ணுற்ற அன்பர்கள், பாலாறு எப்படிப் பாதை மாறியது எனக் கேட்டிருந்தார்கள். செய்கோள் பதிமங்களை உற்று நோக்கி யோசித்ததில் எனக்குக் கிடைத்த விடை RIVER PIRACY, அதாவது ஆற்றுக் களவு  என்பதுதான்.


அதைத்தான் இங்கே விளக்கியிருக்கிறேன். இதை அப்படியே பாலாறு பகுதிக்குக் கொண்டு செல்வோம்.

இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GEOLOGICAL SURVEY OF INDIA) யை சேர்ந்த புவியியலாளர் இராபார்ட் ப்ருஸ் ஃ புட் அவர்கள் தம் நினைவேட்டில் (MEMOIRS OF GEOLOGICAL SURVEY OF INDIA. Vol.  1870) பதிவேற்றியுள்ள ஆய்வு முடிவுகள், செய்கோள் பதிமங்களில் கிடைக்கும் தொலையுணர்வுத்  தகவல்கள், தொல்லியல் ஆய்வு அறிக்கைகள், தேவாரம் – பெரிய புராணம் போன்ற பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகள் இவற்றின் அடிப்படையில், ஒரு காலத்தில் பாலாறு காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து வட கிழக்கு திசையில்  சென்று பின் சென்னைக்கருகே கிழக்கு நோக்கித் திரும்பி புலிக்காட் ஏரிக்கும் சென்னைக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலில் கலந்தது என அறிகிறோம்.

அப்படியாயின், காவேரிப்பாக்கத்திலிருந்து கிழக்கு நோக்கிப் பாயும் இன்றைய பாலாறு அந்தக் காலத்தில் இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

மாறாக, நாலாயிர திவ்யபிரபந்தத்தில் வெஃகாணை பற்றிய குறிப்பு கிடைக்கப்பெறுவதால்,பக்தி இலக்கியங்கள் தோன்றிய கால கட்டத்தில் காஞ்சிபுரம் அருகே வேகவதி ஆறு ஓடிக்கொண்டிருந்தது என ஊகிக்கலாம். அப்படி கிழக்கு நோக்கி ஓடிய வேகவதி ஆறு, சிற்றாறாக இருந்தபோதிலும் அப்படியே அந்தரத்தில் நின்றிருக்க முடியாது. அது வேறு ஒரு ஆற்றுடனோ அல்லது கடலிலோ கலந்திருக்க வேண்டும் அல்லவா.


பெரும்பாலும் வேகவதி ஆறு, செய்யாற்றுடன் கலந்திருக்க வேண்டும் என்றே தெரிகிறது. அதாவது ஆழ்வார்கள் காலத்தில் வேகவதி செய்யாற்றின் துணை ஆறாக  (TRIBUTORY)  இருந்திருக்க வேண்டும்.

தொடர்ந்து வந்த காலங்களில் செய்யாற்றின் துணை ஆறாகிய  வேகவதி ஆறு headward erosion  காரணமாக, அதாவது அதன் தலைப் பகுதியில் நிகழ்ந்து வந்த அரிமாணம் காரணமாக மேல் நோக்கி வளர்ந்திருக்க வேண்டும். (இது பொதுவாக எல்லா ஆறுகளிலும் நிகழ்வதுதான்). அப்படி கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி வளர்ந்த துணை  ஆற்றின் துவக்கப்பகுதி ஒரு காலகட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகே ஓடிக்கொண்டிருந்த பாலாற்றைத்  தொட்டு அதனோடு இணைந்திருக்க வேண்டும். இந்த இணைப்பின் விளைவாக, பாலாற்றில் வடகிழக்கு நோக்கிப்  பாய்ந்து கொண்டிருந்த  நீர் திசை மாறி இந்த துணை ஆற்றின் வழியே கிழக்கு நோக்கி பாயத் துவங்கியிருக்க வேண்டும். அப்படிப் பாய்ந்த புதிய பாலாறு , செய்யாறு கிழக்கு நோக்கித் திரும்பும் இடத்தில் அதனுடன் கலந்திருக்க வேண்டும்.

இதன் காரணமாக காவேரிப்பாக்கதிலிருந்து வடகிழக்காகச் சென்ற பழைய பாலாற்றின் தடங்கள் தற்போது தொல்தடங்களாக (PALAEO CHANNELS) மாறிவிட்டன. அந்தப் பகுதி ABANDONED RIVER CHANNEL பகுதியாக, அதாவது, கைவிடப்பட்ட ஆற்றுத்தடப் பகுதியாக மாறிவிட்டது. இந்தத் தொல்தடங்களை செய்கோள் பதிமங்களில் தெளிவாகப் பார்க்கலாம்.


புவியியல் மாணவனாகிய சில புவியியல் உண்மைகளின்   அடிப்படையில்  முன் வைக்கும் கருத்துதான் இது. ஒரு முடிவல்ல. பலரும் மாறுபடலாம். வேறு கருத்துகளை முன் வைக்கலாம். வரவேற்கிறேன்.

பழைய பாலாற்றின் பாதையும், பாலாறு – செய்யாறு இணைவதற்கு முன் இருந்த செய்யாற்றின் பாதையும் ஒன்றிற்கொன்று ஒத்துப் போவது நான் மேல் சொன்ன கருத்திற்கு வலு சேர்ப்பதாக அமைகிறது. அதே சமயம், பக்தி இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை என்பதால் அந்தக் காலத்தில் காஞ்சிக்கு அருகே பாலாறு பாயவில்லை எனக் கொள்வது சரியா என்பது கேள்விக்குறியே.

அப்படியென்றால் செய்யாறு பாலாற்றை களவாடிவிட்டதா ........இருக்கலாம்.



_____________________________



3. பழைய பாலாறு - விருத்த பினாகினி - மலட்டாறு



பழைய பாலாற்றின் பாதை ஒன்று ‘விருத்தாக்க்ஷர  நதி’ எனும் பெயரால் அழைக்கப்படுவதாக புவியியல் அறிஞர் இராபர்ட் ப்ரூஸ் ஃபுட் தனது நினைவேடுகளில் குறிப்பிடுகிறார் (Memoirs of Geological Survey of India, Vol. X, 1870). வடமொழியில் விருத்த என்றால் பழைய, க்ஷரா என்றால் பால், நதி என்றால் ஆறு. ஆதலின்  ‘விருத்தாக்க்ஷர  நதி’ என்பது பழைய பாலாறு என்பதைக் குறிக்கும் சொல்.

பாலாற்றிற்கு இருப்பது போலவே பெண்ணை  ஆற்றிற்கும் பழைய பாதை ஒன்று இருக்கிறது .பெண்ணை ஆற்றிற்கு வடமொழியில் பினாகினி என்று பெயர். திருக்கோவிலூர் அந்திலி நரசிம்மர் திருக்கோவில் தல புராணத்தில் “தெட்சிண பினாகினி’ எனச் சிறப்பிக்கப்படும் தென்பெண்ணையாறு” எனும் குறிப்பு வருகிறது. இன்றைக்கும் வடபெண்ணை கரையிலுள்ள நெல்லூர் செல்லும் தொடர்வண்டி பினாகினி எக்ஸ்பிரஸ் என்றே அழைக்கப்படுகிறது.  பழைய பெண்ணைக்கு, ‘விருத்த பினாகினி’ என்று ஏதேனும் பெயர் இருக்கிறதா, அதன் மூலம் நமக்கு ஏதேனும் புவியியல் குறிப்புகள் கிடைக்குமா என்று தேட ஆரம்பித்தேன். எங்கே தேடுவது ?

சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருவெண்ணெய்நல்லூர் தேவாரம் வாயிலாக இன்றைக்கு அந்த ஊரின் வடக்கே உள்ள மலட்டாறுதான் பழைய பெண்ணையாறு என நாம் பார்த்துள்ளோம்; அதன் அடிப்படையில் மலட்டாற்றின் கரையில் தேவாரப் பாடல் பெற்றத்  திருத்தலம்  ஏதேனும் உள்ளதா என்று பார்த்தபோது, ‘இடையாறு’ எனும் ஊர் கிடைத்தது. இந்த ஊர் திருக்கோவிலூரிலிருந்து திருவெண்ணெய்நல்லூர் வழியே அரசூர், பண்ருட்டி, கடலூர் செல்லும் சாலையில் மலட்டாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. சுந்தரரின் இடையாறு தேவாரப் பதிகத்தில் உள்ள பத்து பாடல்களிலும் இந்தத் திருத்தலம் இடையாறு என்றும் இடையாறு மருது என்றும் குறிக்கப்படுகிறது. ஆனால் இன்று இடையாறு மருவி எடையாறு ஆகிவிட்டது.

ஊரின் பெயர் மட்டுமல்ல இறைவன் பெயரும் மருவி மாறிவிட்டது. இந்தத்தலத்தின் இறைவன் பெயர் , இடையாற்றீசர், மருந்தீசர். முதல் பெயர் சரி. இரண்டாம் பெயர் எப்படி வந்தது. இங்குள்ள கல்வெட்டுக்களில் இறைவன் பெயர் ‘மருதந்துறை உடைய நாயனார்’ என்றே குறிக்கப்பட்டுள்ளது. மருதந்துறை ஈசர்  , மருந்துறை ஈசர் என மருவி  இன்று மருந்தீசர் ஆகிவிட்டார்.

சரி, நாம் ஆற்றிற்கு வருவோம். இடையாற்றுப் பதிகத்தின் இரண்டாம் பாடலைப் பாருங்கள் .
“சுற்றுமூர் சுழியல் திருச்சோபுரம் தொண்டர்
ஒற்றுமூர் ஒற்றியூர் திருவூறலோழிய
பெற்றமேறி பெண் பாதியிடம் பெண்ணைத் தெண்ணீர்
எற்றமூரெய்த  மான் இடையாறிடை மருதே.”
(பொருள்: இடபத்தை ஒழியாது ஏறுகின்றவனும், பெண்ணினைக் கொண்ட பாதி உடம்பை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானுமாகிய இறைவனது ஊர்கள், அடியார்கள் சென்று சூழும் ஊராகிய சுழியல், சோபுரம், அவர்கள் ஆராய்கின்ற ஒற்றியூர், ஊறல், பெண்ணையாற்றின் தெளிவான நீர்  மோதுகின்ற இடையாறு மருது .....)

இந்தப் பாடல் மூலம், இன்றைய மலட்டாறுதான் பழைய பெண்ணை என்று உறுதி செய்ய முடிகிறது. மேலும் இடையாறு தலத்தில், கிணறாக உள்ள சிற்றிடை தீர்த்தத்தோடு கூட விருத்த பினாகினி எனப்படும் பழைய தென்பெண்ணையாறும் தீர்த்தமாக உள்ளது. இவற்றின் மூலம் பெண்ணையாறு சுந்தரர் காலத்தில் இன்றைய மலட்டாறு வழியே பாய்ந்துள்ளது என்பது உறுதியாகிறது.

இதுவரை நாம் பேசி வந்த மலட்டாறு, திருக்கோவிலூருக்கு ஆறு கி.மீ. கிழக்கே, சித்திலிங்கம் மடம் அருகே  பெண்ணையாற்றின் தெற்கு பக்கமாகப் பிரிந்து , தென் கிழக்கு திசையில் 35 கி.மீ. ஓடி பண்ணருட்டிக்கு மேற்கே  திருநாவுக்கரசர் தோற்றிய  திருவாமூர் அருகே கெடிலம் ஆற்றில் கலக்கிறது.

இதுவன்றி, பெண்ணையாற்றின் வடக்குக் கரையிலும் ஒரு மலட்டாறு உள்ளது. விழுப்புரத்திற்கு தெற்கே எட்டு கி,மீ .தூரத்தில் பெண்ணையாற்றின்  வடகரையில் பிரியும் இந்த ஆறு சுமார் 50 கி.மீ கிழக்கே பாய்ந்து மதலப்பட்டு எனும் கிராமத்திற்கு அருகே கடலில் கலக்கிறது.



கூகுள் வரைபடங்களில் மலட்டாறு எனக் குறிக்கப்படும் இந்த ஆறு, விருத்த பினாகினி என்று அழைக்கப்பட்டதாக, தமிழறிஞர் சுந்தர சண்முகனார் தன் ‘கெடிலக்கரை நாகரிகம்” எனும் நூலில் எழுதியுள்ளார். அப்படியென்றால் இந்த வடக்கு மலட்டாறும் ஒரு காலத்தில் பெண்ணையாற்றின் பாதையாக இருந்ததா?  இருக்கலாம், சான்றுகளைத்  தேட வேண்டும்.  .



_____________________________



4. இன்றைய அண்ணாமலைப்  பல்கலைக்கழகம், அன்றைய கடற்கரை 



இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இன்றைய தமிழ்நாட்டின் பலநூறு ச.கி.மீ. நிலப்பரப்பு  கடலின் கீழ் மூழ்கிக் கிடந்தது. 

எடுத்துக்காட்டாகச் சென்னையின் கிழக்குப் பகுதியில் கிடைத்த புவியியல் சான்றுகள் அடிப்படியில் இன்றைக்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்,  சைதாப்பேட்டை , வடபழனி போன்ற பகுதிகள் வரை கடல் இருந்தது , பின் மெல்ல மெல்லப் பின் வாங்கி தற்போதைய நிலையை அடைந்துள்ளது என்று ஆய்வாளர்கள்  கருதுகின்றனர். இதன் காரணமாகவே சென்னையை “வங்கக் கடல் தந்த கொடை” என்று இராபர்ட் ப்ருஸ் ஃபுட் வர்ணிக்கிறார். 

இதற்கு ஆதரவாக இலக்கிய சான்றுகள் ஏதும் கிடைக்குமா  என்று பார்த்தபோது, மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பாடிய பூம்பாவை பதிகத்தின்     

“மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்”
எனும் பாடலும்,

“ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை”
எனும் பாடலும், 

திருமழிசை ஆழ்வாரின்,
“வந்துதைத்த வெண் திரைகள் செம்பவள வெண்முத்தம் 
அந்தி விளக்கும் அணி விளக்காம் –எந்தை 
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றிய சீர் மார்பன் 
திருவல்லிக்கேணியான் சென்று “.............
எனும் பாடலும் மற்றும்,

‘நீளோதம் வந்தலைக்கும் மா மயிலை மா
அல்லிக் கேணியான்’................
என்பது போன்ற நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களும் கிடைத்தன.

இந்தத் தேவார, திவ்யப் பிரபந்த வரிகளைப் பார்க்கும் போது மயிலாப்பூரும் திருஅல்லிக்கேணியும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு வெகு அருகாமையில் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது . இன்றைக்கு மயிலையும் திருவல்லிக்கேணியும் கடற்கரையிலிருந்து முறையே 1.4 கி.மீ. மற்றும் 1 கி.மீ. தூரத்தில் உள்ளன. அப்படியென்றால் சைதாப்பேட்டை – வடபழனி பகுதியிலிருந்து சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பின் வாங்கத் துவங்கிய கடல் கடந்த 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலை மட்டும் திருவல்லிக்கேணி ஆலயங்களுக்கு மிக அருகே இருந்திருக்கிறது ; அதன்பின் ஒன்று முதல் ஒன்றரை கி. மீ. பின் வாங்கி தற்போதைய நிலையை அடைந்திருக்கிறது. 

மேற்குறித்த புவியியல் உண்மைக்கு வலு சேர்க்கும் வகையில் தமிழ் இலக்கியத்தில் ஏதேனும் சான்றுகள் கிடைக்குமா எனத்  தேடியபோது தேவாரத்தில் முதல் திருமுறையில் திருஞானசம்பந்தர் பாடிய திருவேட்களப் பதிகம் கிடைத்தது. 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒட்டி கிழக்கே அமைந்துள்ள திருவேட்களம், சம்பந்தர் தேவாரத்தில் பாடல் பெற்ற இரண்டாவது திருத்தலம். இன்றைக்கு, கடற்கரையிலிருந்து பத்து கி.மீ. மேற்கே அமைந்துள்ள இந்த நன் நகர், சம்பந்தர் காலத்தில், அதாவது சுமார்  1300 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது. 

‘ஊருக்கு அருகே உப்பங்கழிகள் இருந்தன, கடற்கரை சோலைகள் இருந்தன, கடற்கரை இருந்தது’

இதையெல்லாம் நான் சொல்லவில்லை. ஞானசம்பந்தர் சொல்கிறார். திருவேட்களப் பதிகத்தில் அவர் பாடும் மூன்றாவது பாடலை முதலில்  பார்ப்போம். 

“பூதமும் பல்கணமும் புடை சூழ, பூமியும் விண்ணும் உடன் பொருந்த
 சீதமும் வெம்மையும் ஆகி, சீரோடு நின்ற  எம் செல்வர்  
 ஓதமும் கானலும் சூழ்தரு வேலை , உள்ளம் கலந்து இசையால் எழுந்த 
வேதமும் வேள்வியும் ஓவா, வேட்கள நன்நகர்.”.....1.39.3

இந்தப் பாடலுக்கு உரை எழுதும் ஆசிரியர்கள், “கடல் நீர் பெருக்கும், சோலையும் சூழ்ந்தது.  அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த  வேத ஒலியும் அவர்கள் இயற்றும் வேள்விகளும்   இடையறாது நிகழும் தன்மையது.” என்று , திருவேட்கள நன்னகர் பற்றி திருஞான சம்பந்தர் பாடுவதாகக்  குறிப்பிடுகிறார்கள்.

தொடர்ந்து இதே பதிகத்தில் வரும் நான்காவது பாடல்.
“அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய 
வெண் கோவணத்தோடு அசைந்து
வரை புல்கு  மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர்தாம்
திரை புல்கு தென் கடல் தண் கழி ஓதம் 
தேன் நல் அம் கானலில்  வண்டு பண் செய்ய 
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே “ 1.39.4
இந்தப் பாடலுக்கு உரை,
‘இடையிற் பொருந்திய ஐந்து தலைகளையுடைய ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடு பொருந்தக் கட்டி, மலை போன்ற அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமான், அலைகளையுடைய தெளிந்த கடல் நீர் பெருகி வரும் உப்பங்கழிகளை உடையதும் வண்டுகள் இசைபாடும் தேன்பொருந்திய கடற்கரை சோலைகள் உடையதும் மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.’ 



இந்த இரு பாடல்கள் வாயிலாக, இன்றைக்கு இங்கிருந்து 10 கி.மீ. கிழக்கேயுள்ள கடல் அன்று இந்த ஊரை ஒட்டி இருந்திருக்கிறது; கடந்த 1300 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடல் 10 கி.மீ. பின் வாங்கியிருக்கிறது என்று அறிய முடிகிறது. 

சிதம்பரத்திற்கு வடக்கே சுமார் 15 கி.மீ. தூரத்தில், முட்லூர் எனும் கிராமம் அருகே கடலூர் – சிதம்பரம் சாலையில்  கொத்தட்டை எனும் இடத்தில் இன்றைய கடற்கரையிலிருந்து 8 கி.மீ. மேற்கே  அந்நாளில் கடற்கரை இருந்ததற்கான தடயங்கள் தென்படுவதாக இந்திய புவியியல் ஆய்வுத் துறை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அறிவியல் அறிக்கை சம்பந்தரின் தேவாரத்தோடு ஒப்பு நோக்கும் வகையில் அமைந்துள்ளது.



_____________________________



5.  கெடிலம் ஆறு பாதை மாறிய கதை 



திருநாவுக்கரசரைக்  கல்லில் பிணைத்து கடலில் போட்டுவிட்டான் பல்லவ மன்னன். எங்கே?.. காஞ்சிபுரம் பகுதியில் சென்னைக்கு அருகே போட்டிருப்பார்கள் என எண்ணியிருந்தேன்; ஆனால் பெரியபுராணத்தில் அப்படி ஏதும் சொல்லப்படவில்லை. கடலூர் அருகேதான் எங்காவது போட்டிருக்க வேண்டும். அவர், 
“சொற்றுணைவேதியன்சோதிவானவன்
பொற்றுணைத்திருந்தடிபொருந்தக்கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர்கடலிற்பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே”
எனத் தேவாரம்  பாடி ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்தை ஓத, கல் மிதவையானது.  கரையேறினார்.

இந்த நிகழ்வை, சேக்கிழார் பெருமான் தனது பெரிய புராணம், திருநாவுக்கரசர் புராணத்தில் 131 ஆவது பாடலில் நான்கு வரிகளில் சொல்லிச் செல்கிறார். 
“வாய்ந்தசீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை யாயிட
வேந்தியே கொண்டெழுந் தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கினில்”.
திருப் பாதிரிப் புலியூர் இன்று கடலூரின் ஒரு பகுதி. இவ்வூர் அருகே திருநாவுக்கரசர்  எங்கே, எந்த இடத்தில் கரையேறினார் என்பது பற்றி அறிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. இன்றைக்கும் கடலூர் (திருப் பாதிரிப் புலியூர்) புறநகர்ப் பகுதியில் வண்டிப்பாளையம் அருகே, கரையேறவிட்டகுப்பம் என்றொரு கிராமம் உள்ளது. அவ்வூர் பற்றி, கரையேறவிட்ட நகர் புராணம் என்ற நூலும் இருக்கிறது. இது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இவை மட்டுமின்றி அவர்  கரையேறிய நாளாகக் கருதப்படும் சித்திரை மாதம் அனுஷ நட்சத்திர நாளன்று இன்றும் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆதலின் நாவுக்கரசர்  இங்கேதான் கரை ஏறினார் எனப் புரிந்து கொள்ளலாம். 

குப்பம் என்று பெயர் இருந்தபோதும், இந்த  கரையேறவிட்டகுப்பம் இன்று கடலில் இருந்து நான்கு கி.மீ. மேற்கே தள்ளியிருக்கிறது. அதனாலென்ன, சிதம்பரம் திருவேட்களம் பகுதியிலும், தெற்கேக்  கொற்கைப் பகுதியிலும் பின் வாங்கியது போல் இங்கேயும் கடந்த 1300 ஆண்டுகளில் கடல் நான்கு கி.மீ. பின்வாங்கி விட்டது என எளிதாக விளக்கி விடலாம். ஆனால், கரையேறவிட்ட நகர் புராணம் வேறு ஒரு கதையைக் கூறுகிறது. 

நாவுக்கரசர்  கெடில ஆறு வழியே கரை ஏறியதாகக்  கரையேறவிட்ட நகர் புராணத்தின் 54 ஆவது பாடல் தெரிவிக்கிறது.
“கல்லதுவே சிவிகையதாக் கடலரசன் காவுவேளாச் 
சொல்லரசர் மீதேறித் துனி நடத்த வர வேதிர்ந்தே 
மல்லவன் மனைக் கெடிலமாதுமொரு புடைதாங்கு 
அல்லல் சிறிதவர்கற்ற அவள் சார்புங் கொண்டுய்த்தார்”

கெடில ஆறு, கரையேறவிட்ட  நகரின் தீர்த்தம் என்று இந்தப் புராணத்தின் 7 மற்றும்  17ஆம் பாடல்கள் தெரிவிக்கின்றன. 
“தென் திசையில் கங்கையெனத் திகழ கெடிலப் பூம்புனலே
தீர்த்தமாமால்”  (பாடல்- 7 ) 
“வீறுகரை ஏற்றுதல் விசெடமுற்றதன்பாலே 
விளங்குங்கங்கை 
ஆறேனுந்  தீர்த்த கெடில அற்புதமும் அதற்கருகே அமர்ந்தான் ....”
(பாடல்- 17).

ஆனால், சிக்கல் என்னவென்றால் கெடில ஆறு இப்போது இங்கே இல்லை. இந்த ஊருக்கு வடக்கே மூன்று கி.மீ. தூரத்தில் ஓடுகிறது. கரையேறவிட்டநகர் புராணத்தின்படி, இன்றைக்கு  கடலூரின் வடபுறத்தில் ஓடும்  கெடிலம் திருநாவுக்கரசர் காலத்தில் கடலூருக்கு தெற்கே,  இந்த ஊரின் அருகில்  ஓடியிருக்கிறது.

இந்தக் கருத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அறிஞர் சுந்தர சண்முகனார், தனது “கெடிலக் கரை நாகரிகம்” எனும் நூலில் இதுபற்றி மிக விரிவாக ஆராய்ந்து  எழுதியிருக்கிறார்.  கரையேறவிட்டகுப்பம் அருகே கெடிலம் ஆறு ஓடிய பாதை இன்றும் குழிவாக உள்ளது, அந்த இடத்தில் தோண்டினால் 1 மீ. ஆழத்திலேயே ஆற்று மணல் கிடைக்கிறது, மழைக் காலத்தில் அங்கே சிறு சிறு நீரோடைகள் ஓடுகின்றன, அருகே சுடுகாடு  அமைந்துள்ளது எனப் பலப்பல புறச்சான்றுகளை அடுக்கிச் செல்லும் அவர், தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர் கலம்பகம் எனும் நூலில் இருந்து அகச்சான்றுகளையும் குறிப்பிடத் தவறவில்லை. (தொல் காப்பியத் தேவரின் காலம் 15ஆம் நூற்றாண்டிற்கு முன் பத்தாம் நூற்றாண்டிற்குப்  பின் என்கிறார்கள், தெளிவாகத் தெரியவில்லை) 
“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங்
கயல்விழி கிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுங்
திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெம்
பரமர்தாள் பணிவது வரமே.” (45)

“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியிரு டண்ட்லை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே
மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துயிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே.” (100)

இந்தக் கலம்பகத்தின் 45 ஆவது பாடலில், ”கடிலமா நதியதன் வடபால்  செய்தளிக் குவளை மகளிர் கண் காட்டுந் திருக்கடை ஞாழலில் இருந்த“ எனும் தொடரும், 100 ஆவது பாடலில் “கடிலத்து வட பால் மெல்லிய றவஞ்செய் கடைஞாழலை” எனும் தொடரும்  திருக்கடைஞாழல் எனும் மாற்றுப்பெயர் கொண்ட  திருப் பாதிரிப் புலியூர் கெடில ஆற்றிற்கு வடக்கே இருந்ததைத் தெரிவிக்கின்றன. 

பதினெட்டாம் நூற்றாண்டில், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம், கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஓடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஓடத் தொடங்கியதற்குக் காரணத்தையும்  அப்புராணம் கூறுகிறது. இது குறித்து சுந்தர சண்முகனார் எழுதியுள்ள கதையை அப்படியே கீழே தருகிறேன்.

“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருப்பாதிரிப்புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலேயிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடிய தாம். என்செய்வார் மாணிக்கவாசகர் ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையாயிருந்ததால் தெப்பமும் விடப்பட வில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப் பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடமுடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மாணிக்கவாசகர் மேல் இரக்கங்கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி உமக்கு என்ன வேண்டும்? என்று அவரைக் கேட்டாராம். நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப்புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, 'ஏ கெடிலமே! நீ வளைந்து திசைமாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மாணிக்கவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஒடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப்புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம்” இச்செய்தியினை, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்-பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள  பாடல்களால் ( 32 முதல்  49 வரை ) அறிய முடிகிறது. 

மாணிக்கவாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப் பாதிரிப் புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப் பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  இயற்றப் பெற்ற கரையேற விட்ட நகர்ப் புராணம் என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம் என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புராணங்களில் கூறப்பட்டுள்ள கதை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள்  கெடிலத்தின் திசைமாற்றத்திற்குக் காரணமாக மாணிக்கவாசகர் பற்றித் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்தியினைப் பொய்யான கற்பனையென மறுத்துள்ளார் காரணம் காலக்குழப்பம்.  

கடலூர்காரனாகிய நான், கெடிலம் தெற்கே ஓடியதற்கு ஆதாரம்  ஏதும் இருக்குமா எனும் நோக்கில் செய்கோள் பதிமங்களை ஆய்வு செய்தேன். அதில் கரையேறவிட்ட குப்பத்தை  ஒட்டி தொல் ஆற்றின்  தடம் ஒன்று இருப்பது தெளிவாகத் தெரிந்தது. இந்தத் தடம் கீழ் நோக்கி வண்டிப்பாளையம்  வழியே சிவானந்ததபுரத்திற்கு தெற்கே சாலையை (பழைய கமர் திரையரங்கம் அருகே ஸ்டூவர்ட் பாலத்தில்) கடந்து, உப்பங்கழியாக மாறி இன்றைய கெடில ஆற்றின் தெற்குக் கிளையுடன் கலக்கிறது. மேல் திசையில் வடமேற்கு திசையில் செல்லும் இந்தத் தடம் கெடில ஆற்றுடன் இணையும் இடம் தெளிவாகத் தெரியவில்லை. 



எப்படியாயினும் திருநாவுக்கரசர் கரையேறிய கரையேறவிட்டகுப்பத்தை ஒட்டி ஒரு ஆறு ஓடியிருக்கிறது. அது இப்போது இல்லை. அது  கெடிலம் ஆறாக  இருக்க வாய்ப்புகள் அதிகம்.  அல்லது கெடிலத்தின் கிளை ஆறாக இருக்க வேண்டும். இதன் வழியாகத்தான் நாவுக்கரசர் கரையேறினார் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்தியே. 



_____________________________


6.  பெருமாள் ஏரி,  ஒரு பழையக் காயல்: இது திருத்தினை நகரின் கதை



திருச்சிராப்பள்ளியிலிருந்து பேராசிரியர் இரமேஷ் அவர்கள்,  சிதம்பரத்திற்கும் கடலூருக்கும் இடைப்பட்ட பகுதிக்கான புவியமைப்பியல் (Geomorphological Map) வரைபடம் ஒன்றை நேற்று அனுப்பியிருந்தார். அவருக்கு நெஞ்சார்ந்த நன்றி. அந்த வரைபடத்தில், இந்தப் பகுதியின் பெரிய ஏரியாகிய, 12 கி.மீ நீளமுள்ள   பெருமாள் ஏரி,  “PALAEO LAGOON” எனக் குறிப்பிடப் பட்டிருந்தது என் ஆவலைத் தூண்டியது. காரணம் Lagoon  என்பது கடல் பின்னோக்கிச் செல்லும்போது அந்த இடத்தில் அது விட்டுச் செல்லும் ஏரி  போன்ற நீர்ப்பரப்பு. கழிமுகப் பகுதிகளில் காணப்படுவது. தமிழில் “காயல் என்று சொல்கிறோம். Palaeo lagoon என்பதை ‘அந்நாள் காயல்’ அல்லது ‘பழைய காயல்’ என்று சொல்லலாம். இன்றைக்குக் கடலிலிருந்து சுமார் 10 கி.மீ. மேற்கே இருக்கும் பெருமாள் ஏரி  சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலின் பகுதியாக இருந்ததது என்று அறியும்போது முதலில் மலைப்பு ஏற்பட்டாலும், “ஏன் இருக்கக்கூடாது, ஏழாம் நூற்றாண்டில், இன்றைக்குக் கடற்கரையிலிருந்து 8 – 10 கி.மீ. மேற்கேயுள்ள   திருவேட்களத்தில் கடற்கரை  இருந்து எனும் போது பெருமாள் ஏரியிலும் இருந்திருக்கலாமே. ஆனால் இதற்கு ஆதாரம் வேண்டுமே. புவியியல் சான்றுகள் ஏதேனும் கிட்டுமா என்று வழக்கம் போல் இராபர்ட் ப்ருஸ் ஃபுட் அவர்களின் நினைவேடுகளை நாடினேன்.

ஃபுட் அவர்கள் 1860 களின் துவக்கத்தில் இந்தப் பகுதியில் புவியியல் ஆய்வுகள் மேற்கொண்டார். தான் கண்டவற்றை, MEMOIRS OF GEOLOGICAL SURVEY OF INDIA  (1865) Vol. IV , எனும்  புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதில், பெருமாள் ஏரியின் தென்கோடியிலுள்ள குண்டியமல்லூர் எனும் கிராமம் அருகே, தான் கடற்சிப்பிகளின் படிவங்களைக் கண்டதாகவும் உள்ளூர் மக்கள் பல அடி கனமுள்ள இந்தப் படிவங்களில் உள்ள சிப்பிகளிலிருந்து சுண்ணாம்பு  தயாரிப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் (பக்கம்- 254). இந்த கடற்சிப்பிப் படிவங்கள் இங்கேயிருந்து கடற்கரை வரை ஆங்காங்கே தென்படுவதாகவும் அவர் எழுதியுள்ளார். இதிலிருந்து, இன்றைய பெருமாள் ஏரி, சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலாகவோ அல்லது கழிமுகப் பகுதியாகவோ இருந்திருக்கிறது என அறிய முடிகிறது. அதாவது இன்றைக்குப் பெருமாள் ஏரிக்கும் கடற்கரைக்கும் இடையே உள்ள 7 - 10 கி.மீ. அகல நிலப் பரப்பு, அப்போது கடலுக்கடியில் மூழ்கிக் கிடந்தது.

திருவேட்களப்பகுதியில் அன்றைய பூகோளத்தை  அறிய தேவாரப் பதிகங்கள் துணை செய்தன. இங்கு ?,........... தேடியபோது பெருமாள்  ஏரிக்கு 0.75 கி.மீ. கிழக்கே திருத்தினை நகர் எனும் பெயரில் (இன்றைக்குத் தீர்த்தன கிரி என்று வழங்கப் படுகிறது) தேவாரப் பாடல் பெற்ற தலம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. சுந்தரரால் பாடப்பெற்ற தலம். ஆனால்  திருத்தினை நகர் பதிகத்தில் சுந்தரர் காலத்தில் இந்த நகரில்  கடல் இருந்தது என்பதற்கான  எந்தக் குறிப்பும் இல்லை. மாறாக, விறால் மீன்கள் விளையாடும் சேற்றுப்பகுதி இருந்தது, காடுகள் நிறைந்த பகுதி இருந்தது, நெல்வயல்கள் இருந்தன போன்ற குறிப்புகள் காணப் படுகின்றன.  அந்தப் பாடல்களையும், பொருளையும் கீழே தருகிறேன்.

“நீறு தாங்கிய திருநுத லானைநெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்குற்ற மில்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கரிய சோதியை வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.” (சுந்தரர் தேவாரம் 7.64.1)

பொருள்: மனமே, நீ, திருநீற்றை அணிந்துள்ள அழகிய நெற்றியையுடையவனும், அந்நெற்றியில் ஒரு கண்ணை உடையவனும், வரிசைப்பட்ட வளைகளையணிந்த உமையவளைத் தனது ஒரு கூற்றில் வைத்த செய்கையை யுடையவனும், குற்றம் சிறிதும் இல்லாதவனும், கற்றையாகிய அழகிய சடையின் கண் நீரைக் கட்டியுள்ள அழகனும், தேவர்களுக்கு அரிய ஒளியாய் உள்ளவனும் ஆகிய, வரியையுடைய வரால் மீன்கள் துள்ளுகின்ற, சேற்றையுடைய திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லை யாயுள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.

“வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேல்எரு தேறும்மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.” (சுந்தரர் தேவாரம் 7.64.3)

பொருள்: மனமே, நீ, மாவடுபோலும் கண்களையுடைய மாதர்பாற் செல்கின்ற மையலைப் பொருந்தி, அம்மையல் காரணமாகத் தோன்றுகின்ற பல, வஞ்சனைகளுக்கும் இடமாய்க் கெட்டொழிய நினையாது; மற்று, எருதில் ஏறுகின்ற மூர்த்தியும், எப்பொருட்கும் முதலாகிய பெருமானும், அடியார்கள், 'எம் அடிகள்' என்று வணங்கித் துதிக்கும் அப்பனும், இணையில்லாத பெருமையையுடைய தனங்களையுடைய உமைக்குத் தலைவனும் ஆகிய, புதல்களைக்கொண்ட காடுகள் நிறைந்த திருத்தினைநகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று அடைவாயாக.

அடுத்து ,
“தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே”. (சுந்தரர் தேவாரம் 7.64.7)

பொருள்: மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை யுடையராகாது, தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி, பின்னுதல் பொருந்திய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொள்ளுதலுடன் எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டாலே, மக்கள், பிறவியாகிய கடலை முற்றக் கடந்துவிடுதல் இயலாது; ஆதலின், அந்நிலை நின்னின் வேறாய் நிற்க, நீ, தேவர்கட்குத் தேவனாய் உள்ள பெருந்தேவனாகிய, செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற, நன்மையின் மேலெல்லையாய் உள்ள பெருமானை, அணுகச் சென்று, இவனே, தொன்மையாய முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.



இனி , புவியியல் தரவுகளின்படி பெருமாள் ஏரி  வரை அல்லது மேலும் அதற்கு மேற்குப் பகுதி வரை கடல் இருந்து என்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது, ஆனால் இது எப்போது என்ற கேள்விக்கு துல்லியமான விடை  இல்லை. அண்மைக் காலங்களில் குஜராத் , கேரளா போன்ற பகுதிகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில்  இது 5000 அல்லது  600 ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கலாம் என்று   புவியியலாளர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், சுந்தரர் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) பெருமாள் ஏரிக்குக் கிழக்கே அரை  கி. மீ. தூரத்திலுள்ள திருத்தினை நகரில் கடல் இல்லை. அதாவது பின் வாங்கிவிட்டது. ஐந்தாயிரம் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருமாள் ஏரி  வரை இருந்த கடல் பின்வாங்கி, 1300 ஆண்டுகளுக்கு முன் திருத்தினை நகருக்கு வெகு கிழக்கே வந்துவிட்டது. இது சுந்தரரின் தேவாரம் காட்டும் உண்மை.

தேவாரம் பூகோளம்  காட்டுகிறதுதானே?





________________________________________________________________________
தொடர்பு: சிங்கநெஞ்சம் சம்பந்தம் (singanenjam@gmail.com)


No comments:

Post a Comment