Wednesday, May 16, 2018

நெம்புகோலாகும் நிஜங்கள்


 — முனைவர் ச.கண்மணி கணேசன்


வெற்றிக்கரை தேடும் ஆசைப் படகுகளே !
வாழ்க்கைக் கடலில் விசையாய்ப் பாயும்போது
ஏமாற்றப் புயல் வீசும்; இடைஞ்சல் பாறை தட்டும்;
உடையும்; உருக்குலையும்; துன்பஅலையும் தூக்கிஎறியும்
  கரையில்லாக் கடலுண்டா? நதியுண்டா? நிலையுண்டா ?
  படகுகள் கரையேறாமை கடலின் குற்றமா? கரையின் குற்றமா ?
    முயன்றால் படகுகள் முழுதாய்க் கரையேற
    நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு.
குறிக்கோள் வானில் குஞ்சுகளோடும்  பிஞ்சுகளோடும்
கும்பலாய் அலையும் கூட்டுப் பறவைகளே!
திசைதெரிய வில்லையென்று மருண்டுநீர் சோர்ந்துவிட்டால்
அந்தரத்தில் ஆவிபோம் ஐயமில்லை சத்தியம்
  திசைகள் இருப்பதோ திட்டமாய் நிச்சயம்
  தெரியாத திண்டாட்டம் திசையின் குற்றமா? வானின் குற்றமா?
    தவிக்கும் பறவைகள் தாமாய்க் கூடடைய
    நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு 
நீதிவேண்டிப் போட்ட வழக்குகள் கோடி
பாதிவழியில் பயணம் தடைப்பட்டு ஓடி
மீதிவாழ்க்கை கேள்விக் குறியாய் நாடி
நாதியின்றி மிரண்டிருக்கும்; விதியை நொந்து நலிந்து நிற்கும்
  சட்டம் இருப்பது நம் கையில் ; திட்டம் இருப்பதும் நம் கையில்
  தீர்ப்பின்றித் தள்ளுபடியானால் சட்டத்தின் குற்றமா? வழக்கின் குற்றமா?
    இல்லாத தீர்ப்பை இனிமேல் எழுதிட
    நெம்புகோலாகும் நிஜங்கள் பலஉண்டு
பயிற்சி இல்லாத கைகள் பூப்பறிக்கும் போது; முட்கள் தைப்பது இயற்கை
பயிற்சி இல்லாத கைகள் படகு வலிக்கும் போது; சுழலில் சிக்குவதும் இயற்கை
பயிற்சி இல்லாத சிறகுகள் பறக்கத் தொடங்கும் போது; தரையில் வீழ்வதும் இயற்கை
கடமைச் சுமையைத் தோளில் தூக்க ;நெம்புகோலாகும் நிஜங்கள் பல உண்டு




ஒளித்துளிகளே;மின்மினிகளே
இருளைக் கிழித்து நின்று தனிமைப் படாதீர்கள்
ஓங்கார நாதம் போல் ஒன்றுபடுங்கள்
ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சுருண்டு விழும் அலை போல
ஒளிவெள்ளம் பாய்ச்ச உங்களால் முடியும்
அந்த வெளிச்சத்தில் இருளின் திண்மை கரைந்துபோம்
தோளுயர்த்தி நில்லுங்கள்
வெற்றியின் எதிர்பதம் வேகமாய்ப் புறமுதுகிடும்

இன்பமும் துன்பமும் இறைவகுத்த   நியதி
மலரும் முள்ளும் அழகினில் பாதி
உலவும் தென்றலைச் சித்திரை வேனிலில்
அனுபவிப்பது போல் சுகம் பெறுக

ஒளியும் இருளும் மாறி மாறி வரும் உலகம்
இயல்பென ஏற்று இருப்பது மனிதம்
ஒளியின் நிழலில் ஒதுங்கி நின்று
இருளில் விளக்கையேற்றி வாழ்க

நம்பிக்கை நம்பர் ஒன் நெம்புகோல்
நெம்புகோல் நம்பர் டூ  நெஞ்சுறுதி
முயற்சி மூன்றாவது நெம்புகோல்
 நாலாம்  நெம்புகோல் நான்  சொல்வேன்
தோல்வியில் துவளாச் சோர்வின்மை

வம்புகள் வாதங்கள் பேசுவதில் பலனில்லை
தெம்புடன் கையில் நெம்புகோல் எடுங்கள்
ஒளிமயமான எதிர் காலத்தைத்
தேடி ஓடும் வாழ்வு சுவைக்கும் .



________________________________________________________________________
தொடர்பு: முனைவர் ச.கண்மணி கணேசன் (kanmanitamilskc@gmail.com)




                                                                                                                                

No comments:

Post a Comment