Sunday, May 27, 2018

உயிர்த்தெழு தமிழா


——    திருத்தம் பொன். சரவணன்

உயிர்த்தெழு தமிழா உடைத்திடு தடைகளை
மயிர்த்திரள் நாமென்று நினைத்திடும் மடையர்களை
புடைத்திடு தமிழா புயலென வீசிடு
படைத்திடு புதியதோர் தமிழகப் பொன்னாடு !

பொங்கும் தமிழ்பேசும் பொலிகாளை இளைஞர்களே
சிங்கம் போலெழுந்து நீங்கள் சீறிவிட்டால்
தங்கும் இடமின்றித் தீயவர்கள் தெறித்தோட
அங்கே தோன்றிடுமே தமிழகப் பொன்னாடு !

காகம் விரித்திட்ட காவிரி ஆறெங்கே?
தாகம் எடுத்திட்டால் குடிக்க நீரெங்கே?
மேகம் பொய்த்தாலும் முயன்று தளராமல்
போகம் மூன்றெடுத்த உழவன் தானெங்கே?

நெல்விளைந்த மண்ணெல்லாம் கல்விளைந்த கட்டிடமாய்
புல்முளைத்த இடமெல்லாம் புதுப்புது நகர்களாய்
சொல்விளைந்த பள்ளிகளே சீர்கெடுக்கும் பாழிகளாய்
வல்வினையோ இதுவென்று வாளாது இருக்கலாமா?

கடமை கண்ணியம் சிறிதுமில்லை கட்டுப்பாடும்
காசெடுக்கச் சென்றால் இயந்திரத்தில் தட்டுப்பாடும்
கண்முன்னே நடக்கும் கொடுமைகளைக் கண்டும்
விண்ணென்று வெகுளாமல் வீற்று இருக்கலாமா?

கோடிகள் கொண்டோடிக் கொடியோர்கள் வாழ்ந்திருக்க
வாடிய வயிறுடனே உழவர்கள் சாகலாமோ?
கூடிய கொள்ளையர்கள் கொட்டம் அடங்கிடவே
மூடிய கைகொண்டு முகங்களைப் பெயர்த்தெறி !



________________________________________________________________________
தொடர்பு:  திருத்தம் பொன். சரவணன் (vaendhan@gmail.com)
https://thiruththam.blogspot.in/2018/02/7.html

No comments:

Post a Comment