Saturday, January 13, 2018

தூத்துக்குடி நெய்தல் நில மக்கள் - சங்கு குளித்தல்


பாண்டிய நாடு முத்துடைத்து என்கின்ற மிக நீண்ட கால பழமொழியின் ஆணிவேர் இன்றைக்கும் இருக்கின்ற இடம் தூத்துக்குடி. பாண்டியநாட்டின் முத்துக்கள் எகிப்திய, ரோமானிய நகரம் வரை வணிகம் செய்யப்பட்டன என்கின்ற வரலாற்றுப் பெருமைக்கு சொந்தமான இடம் அன்றைய பாண்டிய நாட்டின் மிக முக்கியமான துறைமுகப்பகுதியாக இருந்த கொற்கை, தொண்டி, தூத்துக்குடி எனலாம். நெய்தல் நில மக்களில் கடலோரக் குடிகளின் மீன்பிடிப்பவர்களைப்போல ஆழ்கடலில் முத்தும், சங்கும் எடுப்பதில் தூத்துக்குடி கடலோர மக்கள் அன்றும் இன்றும் முன்னணியில் இருக்கின்றார்கள்.

ஆனால் வரலாற்றுப் பெருமையையும் பொருளாதார வளத்தையும் ஒரு சேர உருவாக்கித் தந்த இக்கடல் குடிகளின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை. தூத்துக்குடியில் தெரேஸ்புரம் மற்றும் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களின் முதன்மைத் தொழில் மீன் பிடித்தலும் கடலில் மூழ்கி சங்கெடுத்தலுமே. இந்தச் சங்குகள் அழகு சாதனப்பொருட்களாகவும் வழிபாட்டுப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இத்தகைய பொருட்களை எடுப்பதற்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணி செய்யும் இந்த முக்குளிப்பவர்கள் படும் துன்பமும் துயரங்களும் கணக்கில் அடங்காதவை. தொடர்ந்து கடல் நீரில் மூழ்கி இருப்பதினால் கடலின் அழுத்தத்தினாலும் கடல் உப்பு நீரின் அரிப்பினாலும் அவர்களின் உடல் விரைவிலேயே நசிந்து முதுமையடைந்து விடுகிறார்கள். 40 வயதிற்குமேல் அவர்கள் நடமாடத்தகுந்த மனிதர்களாக இருக்க முடியவில்லை. இயற்கை தரும் தண்டனை இதுவென்றாலும் செயற்கையாக அவர்களுக்குத் துன்பம் நேர்கின்றது . முக்குளிக்கும் போது அவர்கள் பயன்படுத்துகின்ற நீர் மூழ்கி உபகரணங்கள் போதிய பாதுகாப்போடு இல்லை. தரமற்றவையாகவும் பாதுகாப்பு அற்றவையாகவும் இருப்பதினால் கடலிலேயே மாண்டவர்களும் உண்டு . மீண்டவர்களில் பலர் உடல் உறுப்புக்களை இழந்து ஊனமுற்றோராக வாழும் நிலையும் இருக்கின்றது.

கடலின் தாக்கத்தினால் நிரந்தர நோயாளிகளாக மாறியிருக்கின்ற இக்கிராம மக்களுக்குப் போதிய மருத்துவ உதவி அளிக்க வேண்டிய அமைப்புகளோ இவர்களைக் கண்டு கொள்வதில்லை. தன்னார்வத்தோடு உதவக்கூடிய ஒரு சில அமைப்புக்களை இவர்கள் நாடுகிறார்கள். ஆயினும் அதுவும் எட்டாக்கனியாகவே உள்ளது.

இப்பதிவின் தொட்ர்புடைய விழியப் பதிவினை  https://www.youtube.com/watch?v=IwGDUPR0hmY&feature=youtu.be காணலாம்.

முனைவர்.க.சுபாஷிணி

No comments:

Post a Comment