Sunday, January 28, 2018

திருவாடானைக் கோயில் கல்வெட்டுகள்


——   முனைவர் கி. காளைராசன்

    பாண்டிய நாட்டில் பாடல்பெற்ற தலங்கள் பதினான்கு.  அதில் திருவாடானைத் திருத்தலமும் ஒன்று (புவியிடக் குறிப்பு: 9.783656, 78.919450).  

    திருவாடானையில் சுவாமியின் பெயர் ஆதிரெத்னேசுவரர்.  ஞானசம்பந்தரின் பதிகமும், அருணகிரிநாதர் அருளிச்செய்த திருப்புகழும், திரு உ.  வே.  சா.  அவர்களின்  திருத் தலங்கள் வரலாறும், சேக்கிழார் பெரியபுராணமும்,  திருவாரூர் சாமிநாத தேசிகர் இயற்றிய திருவாடானைப் புராணமும் இக்கோயில் உறையும் இறையின்  சிறப்பைக் கூறுகின்றன. 




1) திருவாடானை சுவாமி சந்நிதிக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டு



முதல் கல்வெட்டின் பாடம்:
1 .....த்தான் எழுத்து
2  ...எழுத்து படைமுகமழ(கி)ய..
3  தேவன் பொன்னாண்டான்  தற்குறியு
4  த்தான் எழுத்து வத்தராய கங்கன் எழுத்து
5  (யான் போ..)ழகியாள் தற்குறி
6  ருமாள் எழுத்து இன்னாட்டுக்கு
7  சொல்ல இப் ப்ரமாணம்  எழுதி
8  ட்டுக் கணக்கு கூத்தாடுவான் வி
9 ன் சேனாவரையன் எழுத்து

குறிப்பு: இது கல்வெட்டின் இறுதிப்பகுதி. சாட்சிக் கையொப்பம்  இட்டவர்களின் விவரம். தேவன் பொன்னாண்டான், வத்தராய கங்கன்,  (அ)ழகியாள், (பெ)ருமாள், சேனாவரையன் போன்றோர் கையொப்பம் இட்டுள்ளார்கள். இவர்களில், படிப்பறிவு பெறாதவர்கள் இருவர்; இவர்கள் இருவரும் கையொப்பம் இடாமல் தம்முடைய அடையாளத்துக்கென்று தம் குறிகளை (கீறல்களை?) இட்டுள்ளார்கள. இதை “தற்குறி”  என்று  மூல ஓலைகளிலும், கல்வெட்டுகளிலும் குறிப்பர். இதன் அடிப்படையிலேயே, இந்த மரபு தொடர்ந்து, இன்றும் எழுத்தறிவில்லாதவர்களைத் “தற்குறி” என்று வழங்கும் வழக்கு நிலைபெற்றுவிட்டது. தற்குறிப் பெண்மணி ஒருத்தி சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாகத்தில் ஏதோவொரு பணியில் ஈடுபட்டவளாக இருக்கலாம். பிரமாண ஓலை எழுதியவன், நாட்டுக்கணக்கு (கணக்கன்) கூத்தாடுவான் என்பவன் ஆவான்.  ஒவ்வொரு ஊருக்கும் ஊர்க்கணக்கு இருப்பர்; ஒவ்வொரு நாட்டுப்பிரிவுக்கும்  ஒரு நாட்டுக்கணக்கு இருப்பர். நாட்டுக் கணக்கு இந்த ஆவணத்தை எழுதியதாலும், சாட்சிக் கையெழுத்து பலர் இட்டதாலும், இக்கல்வெட்டு குறிப்பிடும்  நிவந்தம் பெரிய அதிகாரி ஒருவராலோ, அல்லது அரசனின் நேரடி ஆணை மூலமாகவோ அளிக்கப்பட்டிருக்கவேண்டும் எனலாம்.

-------------------------------------

2) அம்மன் சந்நிதியில் உள்ள பிள்ளையாருக்கு அருகே மண்டபத்தின் தரையில் உள்ள கல்வெட்டு




இரண்டாவது கல்வெட்டின் பாடம்:
1 ............(நாட்டு கீழ்)..
2 .... ...களப்பாளராயன் எழுத்தெ...
3 ..........ழகிய பெருமாளான (வீர)
4 ..   (திரு) வாடானைத் தா....கண்....
5 ..... முத.... யார்....சிஷ்யப்ர....
6 ..........ல் விலைகொண்ட ....
7 ..................
8 ......................

குறிப்பு: திருவாடானை ஊர்ப்பெயர் காணப்படுகிறது. களப்பாளராயன் என்பவன் பெயரும் உள்ளது. செய்தியைச் சரியாக அறிய இயலவில்லை. 


    துண்டான கல்வெட்டுகள் தரையில் பதிக்கப் பெற்றிருப்பதால், இதுபோன்ற கல்வெட்டுகள் நிறையவே இருந்திருக்கலாம் என்றும், அவையனைத்தையும் புதுப்பித்தே இத்திருக்கோயில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றுள்ளது என்றும் உணர்ந்து கொள்ள முடிகிறது.


நன்றி:
கல்வெட்டுகளைப் படித்து உதவியவர்
——   து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
தொடர்பு:  doraisundaram18@gmail.com அலைபேசி :  9444939156.


________________________________________________________________________
தொடர்பு:  முனைவர் கி. காளைராசன்
kalairajan26@gmail.com
http://kalairajan26.blogspot.in/ 






No comments:

Post a Comment