Thursday, July 15, 2021

அகரம் அழகி



  —  தேமொழி 





   
    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, பிப்ரவரி 2021 முதல் நடக்கும் 7-ம் கட்ட அகழாய்வில், அகரத்தில் அழகிய வேலைப்பாட்டுடன் கூடிய சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண் முகம் கொண்ட பொம்மை ஜூலை 15, 2021 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  இயக்குநர் இரா.சிவானந்தம் மேற்பார்வையில்  அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வில், 3 ஆவது குழியில் 65 செ.மீ. ஆழத்தில் இந்த கழுத்தளவு சுடுமண் பொம்மை கிடைத்துள்ளது.  
    பண்டைக்காலத் தமிழர்கள் பயன்படுத்தியதாகக்  கண்டறியப்பட்டுள்ள, அழகிய வேலைப்பாடுகளுடன் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள  சுடுமண்ணாலான இந்தப் பெண் பொம்மையின் காதிலும் நெற்றியிலும் அணிகலன்களுடன், முகத்தைச் சுற்றிலும் சிவப்பு நிறமும் தீட்டப்பட்டுள்ளது.  இந்தப் பெண்மணியின் தலைமுடி, தலையின் இடப்புறமாக இழுத்து வாரி முடியப்பட்டு பெரிய அளவில் கொண்டை போடப்பட்டுள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சிற்பியின் பார்வையில் மண்பொம்மை குறித்த விளக்கம்:
    பெருந்தச்சர் (ஸ்தபதி) கரு.ஜெயராமன் அவர்களின் கருத்து  — ஆண், பெண் சிற்பங்களைச் செதுக்கும் பொழுது அவற்றை வேறுபடுத்திக் காட்டுவதற்காக தலை அலங்காரம், புருவம், கண், நெற்றி, உதடு, காதணி, ஆடைகள், கைகளில் வைத்திருக்கும் பொருட்கள், அணிகலன்கள், பெண் எனும் பொழுது மார்பகங்கள், இடை என வேறுபடுத்திக் காட்டுவார்கள். இந்த கழுத்தளவு சிலையினை ஆணா பெண்ணா என்று பார்ப்பதற்கு காதணி, நெற்றி, கண், மூக்கு சிகை அலங்காரத்தை வைத்து முடிவு செய்ய வேண்டியுள்ளது. அந்தவகையில் சிகை அலங்காரம் (கொண்டையை) வைத்து சில கருத்துக்களைப் பகிர வேண்டி உள்ளது. பொதுவாக ஆண்களுக்கான கொண்டையானது மேல் முகமாக தூக்கி இருக்குமாறு அமைக்கப்படும். பெண்களுக்கான கொண்டை எனும் பொழுது தலை மட்டத்திலும் அல்லது அதற்குக் கீழாகவும் இருக்குமாறு காட்டப்படும்.  அதற்குக் காரணம் பொதுவாக பெண்களுக்கான கூந்தலானது ஆண்களைவிட அதிக அளவு இருப்பது இயல்பு. அந்த வகையில் அதிக பாரம் கொண்ட முடியைத் தூக்கிக் கட்டும்பொழுது இயல்பாகவே சரிந்து இருக்கும். குறைவான கூந்தலைத் தூக்கிக் கட்டும்பொழுது தலைக்கு மேலே நிற்கும் எனும் காரணத்தால் சிற்பியானவர் பெண் கூந்தலைத் தலை மட்டம் அல்லது அதனை விடக் கீழ் நோக்கியோ இருக்குமாறு அமைப்பார். இதன் காரணத்தால் இந்த அகரம் அகழாய்வில் கிடைத்த சிற்பத்தைப் பெண் சிற்பமாக இருக்கலாம் எனச் சிற்பியின் பார்வையில் முடிவு செய்யலாம்.   மேலும் இச்சிற்பத்தின் கீழ்ப் பகுதியும் கிடைக்கும் பட்சத்தில் அதனை ஆய்வு செய்து ஆணா பெண்ணா என உறுதியிட்டுக் கூறலாம்.
    தமிழ் நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சர், மாண்புமிகு. திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தனது பேஸ்புக் பக்கத்தில் — “தமிழ்ப் பொண்ணு!” இரண்டாயிரம் ஆண்டுகள் மறைந்திருந்து வெளிச்சத்திற்கு வந்திருக்கும் தமிழ் மகள். இந்த ‘ஹேர் ஸ்டைல்’ எல்லாம் அந்தக் காலத்திலேயே அத்துப்படி"   என்று பகிர்ந்து கொண்ட தகவலும் படமும் தந்த ஆர்வத்தில் கணினி மூலம் நான் உருவாக்கிய படங்களை இங்கு கொடுத்துள்ளேன்.  
    இந்தச் சுடுமண் பொம்மையின் காலம் குறித்து  அறிய, மேற்கொண்டு  இது ஆய்விற்கு உள்ளாக்கப்படும்.

நன்றி: பெருந்தச்சர் கரு.ஜெயராமன் அவர்களின் கருத்துரைப் பகிர்வு - முனைவர் ப.தேவி அறிவு செல்வம்

No comments:

Post a Comment