Saturday, October 26, 2019

திருவண்ணாமலை தீபம் நம் அண்ணாமலை அரசர்

——    முனைவர். கோ. வல்லரசி




திருவண்ணாமலை தீபம் நம் அண்ணாமலை அரசர்


அண்ணாமலை அரசே!
அண்ணாமலை தீபம் நீ! 
திருவண்ணாமலை தீபம்!
அறியாமை இருளகற்றும் 
அன்றாடக் கார்த்திகைதீபம் நீ!

ஊருணி நீரே, உலகின் பழுமரமே, 
பேரறிவாளன் திருவே,
பெறற்கரிய கல்விக்கோர் கற்பகத்தருவே, 
அள்ளக் குறையா அமுத சுரபியே,
என் சொல்லி  வாழ்த்துவேன்‌ உன்னை! 

தமிழுக்குத் தனி பல்கலைக் கழகம் 
தந்தவன் நீ! 
அதில் தமிழிசையை அலங்கரித்து 
மகிழ்ந்தவன் நீ! 
அறம்செய விரும்பென்ற ஔவையின்‌ 
மூத்த‌புதல்வன் நீ !

அறக் கொடை வள்ளலே! 
நீ கடையேழு வள்ளல்களைக் 
கடந்த கல்வி வள்ளல். 
இன்று, இந்தியாவின் 
மாணவக் கொடிகள் எளிதாகப் 
படர் கல்விக்கழகமாம் 
தேர்தந்த அண்ணாமலைப் பாரி நீ!

தீ கூட தென்றலானது 
உனது கொடை திறத்தால்.
உலகம்‌ வியக்கும் வள்ளலாய் 
வாழ்ந்தாய் ஆனால் 
ஒரு நிமிடம்கூட நீ உன்திறம் 
எண்ணி வியந்ததில்லை.

நாணல் போல் கவிழ்ந்த‌ 
நல்லவன் நீ!
உயர்வில்‌ நாணல் போல் 
கவிழ்ந்த நல்லவன் நீ!!
வாழையடி வாழையாய் தழைக்கிறது 
உன் கல்வித் தொண்டு 
தாழையின் மணமாய் 
உலகெங்கும் மணக்கிறது 
தொலைதூரக் கல்வித் துறை,
கலைத்துறை,
அறிவியல் துறை,
மருத்துவத்துறை,
பொறியியல் துறை, 
தொழில்நுட்பத்துறை,
விவசாயத்துறை,
இசைத்துறை,
நாடகத்துறை, 
திரைத்துறை ...
அப்பா! எத்தனைத் துறைகள்!!! 
உன் பல்கலைக் கழகக் கடலுக்கு 
அத்தனைத் துறைகட்கும் ‌
நீ ஒன்றுதானே கலங்கரை‌விளக்கம்!!!

குடி உயரக் கோன் உயரும் 
என்றது புறநானூறு.
கோனே! நீ உயர்ந்து குடிகளை‌உயர்த்தினாய்.
என்னே நின் தனித்திறம்.
என்னே நின் தனித்திறம்.

எத்துணைப் பட்டங்களை 
அள்ளித் தந்தது ஆங்கில அரசு 
அத்தனைப் பட்டங்கட்கும் 
உன் கடின உழைப்பு 
ஒன்றுதானே காரணம்.
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ 
என்பது தான்‌ உன்‌தாரக மந்திரமோ? 

துணிவும் நம்பிக்கையும்‌‌(With courage and faith)  
என்ற பல்கலைக் கழக இலட்சணைக்கு‌‌ 
உன் வாழ்க்கை ஒன்றே நல்ல எடுத்துக்காட்டு.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் 
வானுறையும் தெய்வமென்றார்.
வானுறையும்‌ தெய்வமொன்று‌ 
வையத்திற்கு‌வந்து உன் வடிவில் 
வாழ்வாங்கு‌ வாழ்ந்ததென்பேன்.
வாழ்கின்றதென்பேன்.
வாழுமென்பேன்.

எத்தனையோ‌ பல்கலைக்‌கழகங்கள் 
நாட்டிலுண்டு‌ என்றாலும்‌‌ ‌
அத்தனைக்கும்‌ இமயம் நீ தந்த‌ 
அண்ணாமலைப் பல்கலைக் கழகமன்றோ?
ஔவைக்குத் தமிழ்‌வளர்க்க 
அதியன் கொடுத்தான் நெல்லிக்கனி.
அறிஞர்கள் தமிழ் வளர்க்க 
அரசே‌ நீ கொடுத்தாய்  நன்னிதிக்கனி.

எத்தனை மாணவக்கிளிகள்‌ 
உன் பல்கலைக் ‌கழக‌ ஆலமரத்தில் பயின்று 
ஆலோலம் பாடுகின்றன தெரியுமா? 
ஏட்டுக் கல்விச்சாலை மட்டுமன்று நீ நிறுவியது 
வாழ்க்கைக் கல்விச் சாலையும் தான்.
பொது வாழ்வில் ஈடுபடுவோர்க்கு‌ 
உன்  பல்கலைக் கழகமோர் போதிமரம்.
சிந்தனைச் சிற்பிகட்கோர் கற்பகத்தரு.

அண்ணாமலை அரசே ! 
உன்னால் உருவான கலைக்கழகம் 
ஓர் அறிவுப் பாசறை மட்டுமன்று 
பாசப் பாசறையும் தான்.
இவ்வுலகம் உள்ளவரை நின் புகழ் வாழும்.
நின் புகழ் உள்ளவரை இவ்வுலகம் வாழும்.





முனைவர். கோ. வல்லரசி, எம்.ஏ., எம்.ஃபில்., பி.எச்.டி.,
மேனாள் தமிழ் இணைப் பேராசிரியர் / தொடர்பு அலுவலர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலை தூர கல்வி இயக்க இணைப் பேராசிரியர், 
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.






No comments:

Post a Comment