Wednesday, October 11, 2017

மலையாளி பழங்குடி மக்களின் இடப்பெயர்வும் தோற்றத் தொன்மங்களும்


- ம. செல்வபாண்டியன்

மனித இனத்தில் தொன்மைச் சமூகங்களாய் விளங்குபவர்கள் பழங்குடி மக்கள் (Tribes) ஆவர். பழங்குடிச் சமூக அமைப்பிலிருந்து தான் மனித சமுதாயம் வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை எட்டியுள்ளது எனச் சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.  பழங்குடி மக்களின் வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலமாக மனிதக் குலத்தின் தொடக்கக் கால வரலாற்றையும் வளர்ச்சி நிலைகளையும் அறிய முடியும்.  உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியலில் ஒத்த பண்புக் கூறுகள் காணப்படினும் அந்நிலப்பரப்புகளுக்குரிய தனித்துவமான பண்புக் கூறுகளையும் பிரித்தறிய முடிகிறது. 



தமிழகப் பழங்குடிச் சமூகங்கள்
தமிழக அரசின் அட்டவணைச் சாதிகள் மற்றும் அட்டவணைப் பழங்குடிகள் அமலாக்கச் சட்டப்படி (Tamilnadu SC and ST order (Amendment) Act., (1976) தமிழ்நாட்டில் 36 பழங்குடிச் சமூகங்கள் உள்ளன. அவையாவன, அடியான், அரநாடன், இரவாளன், இருளர், ஊராளி, கணியன், கம்மாரா, காட்டு நாயக்கன், காடர், காணிக்காரன், குறும்பர், குறிச்சன், குடியர்/மலைக்குடி, குறுமன், கொச்சு வேலன், கொண்ட காபு, கொண்ட ரெட்டி, கொரகர், கோத்தர், சோளகர், தொதவர், பளியர், பள்ளியன், பள்ளேயன், பணியன், மகாமலசர், மலசர், மலை அரையன், மலைக்குறவன், மலைப் பண்டாரம், மலையக் கண்டி, மலையாளி, மலைவேடன், மன்னான், முதுவன், முடுவன் / முடுகர்.

 
2001 ம் ஆண்டின் குடிமதிப்புக் கணக்கின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 62,405,679 ஆகும். இதில் தமிழகத்திலுள்ள 36 பழங்குடிச் சமூகங்களின் மொத்த மக்கள் தொகை 6,51,321 ஆகும். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில்1.0 விழுக்காடாகும்.

தமிழகத்திலுள்ள மலையாளி பழங்குடி மக்களின் மொத்த மக்கள் தொகை 3,10,042 ஆகும். தமிழகப் பழங்குடி மக்களின் மக்கள் தொகையில் இது 47.6 விழுக்காடாகும். அதாவது தமிழகப் பழங்குடி மக்களில், சற்றொப்ப பாதி அளவினர் மலையாளி பழங்குடி மக்களே ஆவர்.


தமிழகப் பழங்குடிச் சமூகங்களை மூன்று வகையினங்களாகப் பிரித்துக் காணலாம்.  (பக்தவத்சலபாரதி, 2013 :40)

அ. தொல் பழங்குடியினர் (Aboriginal Tribes)
இம்மக்கள் வரலாற்றுக் காலத்திற்கும் முற்பட்டு தம் வாழிடங்களில் இடப்பெயர்ச்சி ஏதுமின்றி வாழ்ந்து வருகின்றனர். பழங்குடி சமய, வாழ்வியல் கூறுகளைக் கொண்டுள்ளனர். (காடர், தோடர், இருளர், பளியர், காட்டுநாய்க்கர், கோத்தர் போன்றோர்).

ஆ. முதுகுடியினர் (Primitive Tribes)
இம்மக்கள் தம் வாழிடங்களில் நீண்ட நெடுங்காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தோற்றத் தொன்மங்களில் சாதியத்தின் முன் வடிவம் காணப்படுகின்றது. (தொதவர், கோத்தர், குறும்பர் ஆகிய மூவரும் கடவுளின் வியர்வைத் துளிகளிலிருந்து பிறந்த உடன்பிறந்தோர் எனும் தோற்றத் தொன்மம்)

இ. பழங்குடியினர் (Tribes)
ஏதாவது நெருக்கடிகளின் (அரசியல், வறுமை (பஞ்சம்), நோய்) காரணமாக சமவெளிப் பகுதியிலிருந்து மலைப்பகுதிகளுக்கோ அல்லது வேறு பிரதேசத்துக்கோ இடப்பெயர்ச்சி செய்து அங்கேயே தங்கிவிட்டவர்கள் (மலையாளி, முதுவர், பளியர், மலைப்பண்டாரம், கணியான், அடியான், குறுமன், கொரகர், காட்டு நாயக்கர், குறிச்சான் போன்றோர்) பூர்வீகத்தில் வழிபட்ட சைவ வைணவக் கடவுள்களைத் தற்போதும் வணங்கி வருகின்றனர். குறிப்பாக மலையாளி பழங்குடியினரிடையே நிலப்பிரபுத்துவ அமைப்பு இன்னும் நிலைபெற்றுள்ளது.

இந்தியா முழுவதிலுமுள்ள பழங்குடி இனங்களில், ‘65 சமூகங்களை அழியும் நிலையில் உள்ள பழங்குடிகள்’ என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றுள் தமிழகத்திலுள்ள காடர், தோடர், இருளர், பளியர், காட்டு நாய்க்கர், கோத்தர் ஆகிய ஆறு பழங்குடி இனங்களும் அடங்கும். சமூக, பொருளாதார நிலையில் இவ்வினங்கள் மிகவும் பின் தங்கியுள்ளன. இவர்களது முன்னேற்றத்திற்காக அரசு பல திட்டங்களைத் தீட்டிச் செயற்படுத்தி வருகிறது.

தமிழகப் பழங்குடிகளின் வாழ்விடம்
தமிழகப் பழங்குடிகள், தமிழ்நாட்டிலுள்ள 3834 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.  தமிழ்நாட்டில் பழங்குடிகளின் வாழ்விடத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. மலைப்பகுதிகள், 2. அடிவாரப்பகுதிகள் 3. சமவெளிப்பகுதிகள். பெரும்பான்மையான தமிழகப் பழங்குடிகள் மலைப் பகுதிகளிலேயே வாழ்ந்து வருகின்றனர்.  கிழக்குத் தொடர்ச்சி மலை, மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அவர்களது வாழ்விடம் அமைந்துள்ளது.


கிழக்குத் தொடர்ச்சி மலைகளில்  (Eastern Ghats)  வாழும் பழங்குடி இனங்கள்
ஒடிசா, தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் இத்தொடர் வடக்கில் மகாநதிப் பள்ளத்தாக்கில் தொடங்கி தெற்கில் இராமநாதபுரம் மாவட்டத்தில் வைகையாறு வரை நீள்கிறது.  நீலகிரிக்கு அருகிலுள்ள மாயாறு பள்ளத்தாக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுடன் இணைகிறது.  இம்மலைகளின் மொத்தப் பரப்பளவு 152,000 சதுர கிலோ மீட்டர்களாகும்.

இந்தியாவில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 60 பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  கிழக்குத் தொடர்ச்சி மலையின் வடபகுதியில் (ஒடிசாவின் மகாநதி பள்ளத்தாக்கு, சத்தீஸ்கர், மத்தியபிரதேச மாநிலங்கள், ஆந்திர பிரதேசத்தின் பள்ளத்தாக்கு வரை) சுமார் 1.76 கோடி பழங்குடி மக்களும், தென்பகுதியில் (கிருஷ்ணா நதி பள்ளத்தாக்கிலிருந்து நீலகிரி மலைத்தொடர் வரை) சுமார் 20 லட்சம் பழங்குடி மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலை, அதன் அடிவாரப் பகுதிகள், சமவெளிப்பகுதிகளில் மலையாளி, கொண்டாரெட்டி, குறிச்சான், குறுமன், சோளகர், ஊராளி, இருளர் ஆகிய 7 பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சித்தேரி மலை, வாச்சாத்திமலை, ஜல்லூத்து மலை, கோதுமலை, கஞ்சமலை, நகரமலை, கடகமலை, பச்சைமலை, பாலமலை, கொல்லிமலை ஆகிய அனைத்து மலைகளிலும் மலையாளி பழங்குடிகளே பெரும்பாலும் வாழ்கின்றனர்.  அதாவது மலையாளிகள் அனைவரும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில்தான் வாழ்கின்றனர்.


மேற்குத் தொடர்ச்சி மலைகளில்  (Western Ghats)வாழும் பழங்குடி இனங்கள்
குஜராத், மகாராஷ்டிரா எல்லை தொடங்கி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவிக் காணப்படும் இத்தொடர் கேரளத்தின் அகஸ்தியர் மலை வரை தொடர்ச்சியாக நீள்கிறது.  இம்மலைகளின் மொத்தப் பரப்பளவு 160,000 சதுர கிலோமீட்டர்களாகும்.

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை, அதன் அடிவாரப் பகுதிகள், சமவெளிப்பகுதிகளில் 26-க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  காடர், பணியர், தொதுவர், குறும்பர், கோத்தர், இருளர், சோளகர், ஊராளி, காட்டு நாயக்கர், ஆகியோர் நீலகிரி மலைப்பகுதியிலும்; குன்னூர், புலையர், மலைவேடர், பளியர், பள்ளியன், பள்ளேயன், மலசர், முதுவன், முடுவன்/முடுவர், மன்னான் ஆகியோர் ஆனைமலை, பழனிமலை பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.


பழங்குடி மக்களின் இடப்பெயர்வு
பழங்குடி மக்களிடையே பல்வேறு காரணங்களால் இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆதிமனிதன் தன் வாழ்வியல் தேவைகளுக்காகவும், இயற்கை இடர்களினாலும், பிற இனக்குழுக்களுடனான மோதல்களாலும், சமூக விலக்கம் போன்ற இதர காரணிகளாலும் இடம் பெயர்ந்தான். சமவெளிப் பகுதிகளில் வாழ்ந்த சமூகங்கள் அரசியல், சமூக, பொருளாதார காரணங்களால் மலைப்பகுதிகளுக்குச் சென்று வாழத் தலைப்பட்டனர். காலப்போக்கில் அப்பகுதிகளிலேயே நிலைத்து வாழ்ந்து வருகின்றனர். பல்வேறு பழங்குடிச் சமூகங்களிடையே நிலவும் பழமரபுக் கதைகளைத் (Legends) தொகுத்துக் காணும்போது பெரும்பான்மையும் அரசியல் காரணங்களாலேயே இத்தகைய இடப்பெயர்வு நிகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.

இதனையே,‘ஒருகாலகட்டத்தில் இந்தியப் பழங்குடிகளில் பலர் நகர வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் பின்னர் அரசியல் சமுதாயக் காரணங்களில் ஒதுக்கப்படும் பழங்குடிகளாக வாழ்ந்து வருபவர்களாகவும் காணப்படுகின்றனர்’ (பீ. நசீம்தீன், 1989:9) எனவும், `இப் பழங்குடி மக்கள் இடம் பெயர்ந்து சென்ற சூழல் வரலாற்று நூல்களில் பெருவாரியாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பழங்குடி இன மக்கள் பெருவாரியாக மலைகளில் வசித்து வருகின்றனர். இம்மக்களில் சிலர் ஆரம்பக் காலங்களில் தாழ்ந்த சமதள நிலங்களில் வசித்து வந்தவர்கள் என்றும் அரசியல் காரணங்களால் பயந்து மலைகளில் சென்று குடியேறிவிட்டனர் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்’ (சு. தாமரைப்பாண்டியன், 2008:36) எனவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மன்னான், முதுவர், ஆறுநாடன், காணிக்காரர், பளியர், குறும்பர், மலைக்குறவர்கள், காட்டு நாயக்கர்கள், மலைவேடர்கள், குறிச்சன், தொதுவர்கள், கொண்டகாபு மற்றும் கொண்டரெட்டி, இருளர்கள் ஆகிய பழங்குடிகள் இடம் பெயர்ந்து சென்று வாழும் வரலாற்றை ஆய்வுகள் வழி அறியமுடிகிறது.

‘மலையாளி’ என்ற சொல் மலைகளில் வாழ்பவன் எனப் பொருள்படும். ‘மலையை ஆள்பவர்’ என்ற பொருளிலும் ‘மலையாளி’ என்ற சொல் வழங்கப்படுகிறது.  கேரளாவிலுள்ள மலையாளி மக்களுக்கும் இவர்களுக்கும் யாதொரு தொடர்புமில்லை. இம்மக்கள் சமவெளிப் பகுதிகளிலிருந்து  மலைகளில் குடியேறியவர்களாவர்.

இவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த ‘காராள வேளாளர்’ எனத் தம்மைக் கூறிக்கொள்கின்றனர். ‘கார்+ஆளர்=கார்மேகத்தை ஆள்பவர்’ எனப் பொருள்படும். (க.ஆ., 05.01.2014, செல்லமுத்து, 80, பெரியபக்களம்) ‘எட்கர் தர்ஸ்டன் தனது நூலில் மலையாளிகள் என்போர் 15-ஆம் நூற்றாண்டின் போது போர் முதலிய காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து இடம் பெயர்ந்த வேளாளர்கள்’ (எட்கர் தர்ஸ்டன், 1993:497) எனக் குறிப்பிடுகிறார்.


மலையாளி பழங்குடியினர் குறித்து தமிழ் லெக்சிகன் கூறும் கருத்துக்கள்
‘மலையாளிகள், முகமதியர் தென்னாடு வந்தபோது காஞ்சிபுரத்தில் இருந்து சென்று சேர்வராயன் மலையிற் குடியேறிய வேளாளர் வகுப்பினர்’ (தமிழ் லெக்சிகன் 5.3110)

‘காராளர் என்பதற்குப் பழங்காலத்தில் இருந்த ஒரு முரட்டுச்சாதியர், சேலம், தென்னாற்காடு மாவட்டங்களில் உள்ள மலைவாசிகளான ஒரு வேடச்சாதியர்’ (தமிழ் லெக்சிகன் 2. 885).


தோற்றத் தொன்மங்கள்
மலையாளிகள் பற்றிய தோற்றத் தொன்மங்களாக எட்கர் தர்ஸ்டன் ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ எனும் தன் நூலில் பின்வரும் குறிப்புகளைத் தருகிறார்.


 
‘சேலம் மாவட்டக் கையேடு – எச்.லெ.பனு: ‘தென்னிந்தியாவில் முகமதியர் ஆட்சி மேலோங்கியபோது காஞ்சிபுரத்திலிருந்து பத்துத் தலைமுறைகளுக்கு முன்னர் மலைப்பகுதியில் குடியேறியவர்கள். காஞ்சியை விட்டுப் புறப்பட்டு வரும்போது மூன்று உடன்பிறந்தோருடன் இவர்களின் முன்னோர்கள் வந்தனர்.  அம்மூவருள் மூத்தவன் சேர்வராயன் மலையிலும் இரண்டாமவன் கொல்லிமலையிலும், இளையவன் பச்சைமலையிலும் தங்கினர்.  மலையாளிகளின் தெய்வமான கரிராமன் காஞ்சியில் இருக்கப் பிடிக்காதவனாகப் புதியதொரு இடத்திற்குக் குடிபெயர்ந்தான், அவனைப் பின் தொடர்ந்து வந்த பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் தங்கள் குடும்பத்தோடு புறப்பட்டுச் சேலம் மாவட்டத்திற்கு வந்து பெரியண்ணன் சேர்வராயன் மலைக்கும், நடுவண்ணன் பச்சைமலைகளுக்கும், அஞ்சூர் மலைகளுக்கும், சின்னண்ணன் மஞ்சவாடிக்கும் சென்று சேர்ந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மலையாளிகளின் தோற்றம் - எப்.ஆர்.ஹெமிங்வே: இவர்கள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூசாரியின் சந்ததியினர் ஆவர். அப்பூசாரி அந்நாட்டு மன்னனின் உடன் பிறந்தவன். தன் உடன்பிறந்தவனான மன்னனுடன் சண்டையிட்டுக் கொண்டு தன் மூன்று மகன்களுடனும் ஒரு மகளுடனும் இப்பகுதிக்கு வந்து சேர்ந்தான்.  இப்பகுதியை ஆண்டு வந்த வேடர்களும் வேளாளர்களும் புதிதாக வந்த இவர்களைத் தடுக்க முற்பட்டனர்.  எனினும் இருசாரருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் புதிதாக வந்தவர்கள் வெற்றிவாகை சூடி மலைப்பகுதிகளில் பரவத் தொடங்கினர்.  பெரியண்ணன் கைக்கோளர் சாதியிலிருந்தும், நடுவண்ணன் வேடர் சாதியிலிருந்தும், சின்னண்ணன் தேவேந்திர குலத்தவரான பள்ளர் சாதியிலிருந்தும் பெண்களை மணந்தனர்.

வட ஆர்க்காடு மாவட்டக் கையேடு கூறும் சவ்வாது மலையில் வாழும் மலையாளிகள் தம் தோற்றம் பற்றித் தெரிவிக்கும் விவரங்கள்: காஞ்சிபுரத்தைச் சார்ந்த கார்காத்த வேளாளர்கள் தங்கள் பெண்களைக் கவர்ந்து சென்ற வேடர்களைக் கொன்று இல்லங்களுக்குத் திரும்பினர்.  இவர்கள் இறந்துவிட்டதாகக் கருதி இவர்களது மனைவியர் விதவைக் கோலம் பூண்டு சாவுச் சடங்குகளை நிகழ்த்திவிட்டிருந்த காரணத்தால் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்களாக ஆகிவிட்டதை உணர்ந்தனர்.  இச்சூழ்நிலையில் இவர்கள் வேடர் சாதி பெண்களை மணந்தவர்களாகச் சவ்வாது மலையில் குடியேறிப் பயிர்த் தொழிலில் ஈடுபட்டவர்களாக மலையாளிகளின் மூதாதையர்கள் ஆகிவிட்டனர்.

தென்னாற்காடு மாவட்ட விவரக் குறிப்பு – பிரான்சிஸ் - தென்னாற்காடு மாவட்டத்தில் வழங்கும் வழக்கு வரலாறு: இம்மலைகளில் வேடர்கள் வாழ்ந்து வந்தனர்.  அவர்களை மலையாளிகள் கொன்று அவர்கள் சாதிப் பெண்களை மணந்து கொண்டனர்.  இவர்கள் சாதித் திருமணங்களில் வேடர் சாதிக் கணவன் இறந்தபின் மணம் நிகழ்த்தப்படுகின்றது என்பதைக் குறிக்க இன்றும் துப்பாக்கியினைச் சுடுகின்றனர் எனக் கூறுகின்றனர்.’ (எட்கர் தர்ஸ்டன், 1993:497-501).

`சென்னை மாகாண பழங்குடிகளின் சமூக பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கை’ எனும் நூலில் அய்யப்பன் குறிப்பிடும் தோற்றத் தொன்மம்: ‘சாதி விலக்குக்கு உட்பட்ட பெரியண்ணன், நடு அண்ணன், சின்னண்ணன் ஆகிய மூவரும் முறையே கைக்கோளர், வேடர், பள்ளர் பெண்களை மணந்து முறையே கல்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலைப் பகுதிகளுக்கு வந்து குடியேறினர்’ என தர்ஸ்டன் கூறியுள்ளதைச் சுட்டுகிறார் ( A. Ayyappan, 2000 : 143).

தமிழகப் பழங்குடி வழக்காற்றியல் – கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள் எனும் நூலில் முனைவர் சி.நல்லதம்பி குறிப்பிடும் தோற்றத் தொன்மம்:
‘காஞ்சிபுரத்திலிருந்து விசயநகர மன்னர்களின் காலத்தில் இடம் பெயர்ந்தவர்கள், பாலாற்றைக் கடந்து கல்வராயன் மலைப்பகுதியின் எல்லையில் அரியக் கவுண்டன் பாளையப்பட்டு பகுதிமலைகளில் குடியேறினார்கள்.  அவ்வாறு குடியேறியவர்கள் அங்கிருந்து சவ்வாது மலை, வத்தல்மலை, சேர்வராயன் மலை, பச்சைமலை, கொல்லிமலை போன்ற ஏனைய குன்றுகளுக்குச் சென்று குடியேறியிருக்கிறார்கள்.  மேலும், முகலாயர்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் கூட்டம் காஞ்சிபுரத்திலிருந்து பாலாற்றைக் கடந்து ஓடிச்சென்று கல்வராயன் மலைப்பகுதிகளிலும், பிற மலைப்பகுதிகளிலும் குடியேறியிருக்கிறார்கள்.  போரின் காரணமாகக் குடியேறியவர்கள் அங்குள்ள வேடர்குலப் பெண்களுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்’.  (சி. நல்லதம்பி, 2011: 30).

‘தருமபுரி மாவட்டப் பழங்குடிகள்’ எனும் நூலில் தி. கோவிந்தன் குறிப்பிடும் தோற்றத் தொன்மம்: ‘முன்னொரு காலத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீவைஷ்ணவ கோத்திரத்தைச் சேர்ந்த காராளர் சிலர் வசித்து வந்தனர்.  இவர்கள் குலதெய்வம் கரிராமன் என்னும் கரிவரதராஜப் பெருமாள்.  இந்தக் குலதெய்வத்தை பூசாரிகள் (இருளர்) தூக்கிச் சென்றனர்.  சாமி கனவில் தோன்றி இச்செய்தியைக் காராளருக்குத் தெரிவித்தது. காராளர் ஒன்றுகூடி இறைவனைப் பிரார்த்திக்க இறைவன் அருள்பெற்று உற்சவரை எடுத்துச்சென்ற பூசாரியைப் பின் தொடர்ந்தனர்.  அவ்வாறு புறப்படும்பொழுது தங்கள் வீட்டில் நல்விளக்கேற்றி, நிறைகுடம் வைத்து ரோஜாப்பூப் போட்டு இறைவனை வழிபட்டுத் தங்கள் மனைவியரிடம் தங்களுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்தால் நல்விளக்கு அணையும், நிறைகுடம் குறையும், பூ வாடும் என்று கூறிப் புறப்பட்டனர்.  அவர்களுடன் ஒரு நாயும் புறப்பட்டது.  வழியில் பாலாற்றில் வெள்ளம் பெருகி வரவே, நாய் கரை கடக்க மாட்டாமல் வீட்டிற்குத் திரும்பியது.  நாய் மட்டும் திரும்பி வரவும் தங்கள் கணவன்மார் வராததையும் கண்ட பெண்கள், தங்கள் கணவன்மார் இறந்ததாகக் கருதித் தீ வளர்த்து இறங்கினர்.  இந்தச் செய்தியும் சாமி மூலம் அவர்களுக்குத் தெரிந்தது. ஆனாலும் தங்கள் தெய்வத்தை மீட்பதற்காக அவர்கள் மேலே பயணம் செய்தனர்.  கரிராமன் கோயிலில் (கல்ராயன்) பூசாரிகளுக்கும் காராளர்கட்கும் போர் நடந்தது.  பூசாரிகள் இறந்தனர். தெய்வம் தான் அமர்ந்த இடமே பெரிது என்று சொல்லிவிட்டதால் தெய்வத்துடன் காராளர்களும் தங்கிவிட்டனர். பூசாரிகளின் மனைவிமார்களைக் காராளர் மணந்தனர்.’  (தி. கோவிந்தன், 1995: 24-25).

இத்தொன்மங்களிலிருந்து பெறும் செய்திகளின் அடிப்படையில் பின்வரும் பொதுவான கருத்தினை எட்டலாம்.

வ.
எண்.
மலையாளி பழங்குடியின உடன் பிறந்தோர்
மணம்புரிந்து கொண்ட பெண்கள்
தங்கிவிட்ட மலைகள்
1
பெரிய அண்ணன்
கைக்கோளர்குலப் பெண்கள்
கல்வராயன் மலை/ சேர்வராயன் மலை
2
நடு அண்ணன்
வேடர் குலப் பெண்கள்
பச்சைமலை
3
சின்ன அண்ணன்
பள்ளர்/தேவேந்திர குலப் பெண்கள் 
கொல்லிமலை

இவற்றை உறுதி செய்யும் விதமாகப் பல்வேறு சடங்கியல் நெறிமுறைகள் மலையாளி பழங்குடி மக்களின் வாழ்வில் காணப்படுகின்றன.  மலையாளி பழங்குடி மக்களின் திருமண நிகழ்முறையில் ஒவ்வொரு உறவினருக்கும் வெற்றிலை பாக்கு வைத்து திருமணத்திற்கு அழைப்பு வைக்கப்படுகிறது.  இதனை ‘பாக்கு பரி’ என்பர்.  முதல் அழைப்பு நாட்டுக் கவுண்டனுக்கு வைக்கப்படுகிறது.  இரண்டாவது அழைப்பு ஊர்க் கவுண்டன் மற்றும் ஊர் மூப்பனுக்கு வைக்கப்படுகிறது, மூன்றாவது அழைப்பு அண்ணன் தம்பி பாக்கு என அழைக்கப்படுகிறது. கல்வராயன், பச்சைமலை, கொல்லிமலைகள் இருக்கும் திசை நோக்கி தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு வைத்துக் காட்டி திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து வணங்கப்படுகிறது. அதன் பின்னரே  மற்றவர்களுக்கு வைக்கப்படுகிறது.  (க.ஆ. 13.06.2010, அழகுமுத்து, 30, பெரிய பழமலை).


திருமணச் சடங்கின்போது கூறப்படும் ‘வேடன் பொண்டாட்டி இனி காராளன் (உழவன்) பொண்டாட்டி’ என்பதிலிருந்து, இவர்கள் வேடர் குலத்தவர்களை அழித்து அவர்களுடைய மனைவியரை மணம் புரிந்தது தெரியவருகிறது. கல்வராயன் மலை மலையாளிகள் மத்தியிலும் இம்முறை வழக்கிலுள்ளது.’ “மணமகளும் அவரது தோழியர்களும் ‘வேடனை விட்டுக் காராளனைக் கைப்பிடித்தோம் என்று கூறுகிறார்கள்’ (சி. நல்லதம்பி  2011:88).


பச்சைமலை மலையாளிகளின் திருமணப்பந்தலுக்கு முன் ஓர் இரும்புக் கம்பி நடப்படுகிறது.  வேடர்களின் தீய ஆவிகளின் தொந்தரவிலிருந்து இது பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. 

இத்தோற்றத் தொன்மங்களிலிருந்து, போர் முதலிய காரணங்களால் காஞ்சிபுரத்திலிருந்து வந்த காராள வேளாளர்கள், கல்வராயன்மலை, பச்சைமலை, கொல்லிமலை பகுதிகளில் வாழ்ந்து வந்த பூர்வ குடியினரை அழித்து அவ்வினப் பெண்களை மணந்ததால் தோன்றிய கலப்பினத்தவரே மலையாளி பழங்குடியினர் என அறியமுடிகிறது.  இந்த இடப்பெயர்ச்சி நிகழ்வையே தம் வரலாறாக இம்மக்கள் கூறி வருகின்றனர்.  இவற்றையொத்த கதைகளும் / தொன்மங்களும் தமிழ்நாடு / இந்தியாவிலுள்ள பல்வேறு சாதிகளிடத்தும் காணப்படுகின்றன.



துணை நூற் பட்டியல்:
1.   நசீம்தீன்.பீ.,  இடுக்கி மாவட்டப் பழங்குடி மக்களின் வழக்காற்றியல், அன்னம், சிவகங்கை, முதற்பதிப்பு-1989.
2.   எட்கர் தர்ஸ்டன்    தென்னிந்திய குலங்களும் குடிகளும், தொகுதி-4 (மொ.பெ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு-1993.
3.   கோவிந்தன்.கி., தர்மபுரி மாவட்டப் பழங்குடிகள், ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தருமபுரி, முதற்பதிப்பு-1995.
4.   தாமரைப்பாண்டியன்.சு.,    தென்தமிழக நாட்டுப்புற வழக்காறுகளில் இடம் பெயர்வு, அருள் பதிப்பகம், சென்னை-78, முதற்பதிப்பு-2008.
5.   நல்லதம்பி.சி., தமிழகப் பழங்குடி வரலாற்றியல் கல்வராயன் மலைப் பழங்குடி மக்கள் புலம், சென்னை-5, முதற்பதிப்பு-2011.
6.   பக்தவத்சல பாரதி,  தமிழகப் பழங்குடிகள், அடையாளம், புத்தாநத்தம்-621310, விரிவாக்கப்பட்ட முதற்பதிப்பு-2013.
7.   Ayyappan.A., Report on the socio-economic conditions of the Aboriginal tribes of the province of Madras, The Commissioner of Museum, Chennai-8, 2000.

தகவலாளர்கள்:
1. செல்லமுத்து, ஆண், 80, பெரியபக்களம், விவசாயம், நாள் 05.01.2014.
2. அழகுமுத்து, ஆண், 30, பெரியபழமலை, விவசாயம், நாள் 13.06.2010.

19 comments:

  1. திரு செல்வபாண்டியன் அவர்களின்
    மலயாளி பழங்குடி மக்களின் இடப்பெயர்ச்சி மற்றும் தோற்ற தொன்மத்தையும் அழகு தமிழில் எளிய
    நடையில் தொகுப்பாக வெளியிட்டு இருப்பது என்னை போன்ற சமூக ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சி.
    தங்களின் தேடல் தொடரட்டும்.

    வாழ்க தங்களின்
    தமிழ்ப்பணி.
    வாழ்த்துக்களுடன் .
    9585725060
    எல்.தருமன்
    18. பட்டி.

    ReplyDelete
  2. வரலாறு தெரிந்து கொண்டேன் நன்றி. செந்தில் குமார் 9843030025

    ReplyDelete
  3. தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete
  4. I came to understand about the original tribals life history which I am unaware. Thanks for the Publication members. _P.T.SAMPATHKUMAR 9443090809

    ReplyDelete
  5. Historical RECORD, outlook to be known by every TAMIL NADU MALAYALI TRIBES. WHO AM I !

    ReplyDelete
  6. Thank you very much for ditials
    Kathirippatti villages
    Harur tk
    dharmapuri Dt
    636906
    9843624353

    ReplyDelete
  7. ஐயா வணக்கம். என் பெயர் சங்கர் பாரதியார் பல்கலைக்கழகம் முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் தமிழ்த்துறையில் முதுகலைத்தமிழ் பயின்று வருகிறேன். நான் மலைவாழ் மக்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டு உள்ளேன். உங்களின் உதவி தேவை படுகிறது ஐயா. 9524533976

    ReplyDelete
  8. ஐயா வணக்கம். என் பெயர் சங்கர் பாரதியார் பல்கலைக்கழகம் முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் தமிழ்த்துறையில் முதுகலைத்தமிழ் பயின்று வருகிறேன். நான் மலைவாழ் மக்கள் பற்றி ஆய்வு செய்து கொண்டு உள்ளேன். உங்களின் உதவி தேவை படுகிறது ஐயா. 9524533976

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்
    அடியான் என்கிற ஆதியன் மக்கள் பற்றி தெரிந்து கொள்ள இப்பொழுதும் தயாராக உள்ளேன் தயவுசெய்து உதவி செய்யுங்கள்
    9791721259

    ReplyDelete
  10. போர் தந்திரம் தெரிந்த இந்த சமூகம் எப்படி ஜாகிதார்களிடம் கொத்தடிமையாக வாழ்ந்தது?

    ReplyDelete
    Replies
    1. Haha. That Jagirdhars are also from KARALAR community. https://timesofindia.indiatimes.com/Then-and-now-A-tale-of-freedom-from-bondage/articleshow/603122493.cms

      Delete
  11. ஐயா வணக்கம் எங்களின் (மலையாளி) வரலாறு அழகாக எளிய முறையில் தொகுத்து வழங்கியுள்ளீர்கள் நன்றி மற்றும் இவர்கள் மலைப்பகுதியில் குடியேறிய விளக்கம் தந்துள்ளீர்கள் ஐயா எனக்கு ஒரு தகவல் வேண்டும் பச்சமலை,கொல்லிமலை,கல்வராயன்மலை,சேர்வராயன்மலை,ஜவ்வாதுமலை பகுதியில் குடியேறிய மக்களுக்காக எதிர்த்து போராடியவர்கள் யாரும் இல்லையா? அதாவது கவுண்டர் இனத்திற்கு தீரன் சின்னமலை போல மலையாள மக்களுக்கு யாரும் இல்லையா? தங்களின் பதிலுக்காக காத்திருக்கிறேன் என் இனமக்களுக்காக அ.சக்தி சமூக ஆர்வலர்.ஆத்தூர்

    ReplyDelete
  12. மலைவாழ் மக்களுக்கு (ஆதரவாக)திர்த்து போர் புரிந்தவர் யார்? 9788662293

    ReplyDelete
    Replies
    1. See: https://timesofindia.indiatimes.com/city/chennai/Salem-mountain-that-joined-India-in-1976/articleshow/42933041.cms

      Delete
  13. உண்மையான மலைபழங்குடிகளான வேடர்குல பெண்களை மணந்து தன்னை பழங்குடிகளா மாற்றிக்கொண்ட மலையேரிகளை பழங்குடிகள் என்று குறிப்பிடுவது சரியா? அரசும் மானுடவியல் துறையும் ஆய்விற்கு உட்படுத்தி உண்மையான பழங்குடிகளையும் உலகிற்கு அடையாளபடுத்துமா...?

    ReplyDelete
    Replies
    1. சரியான கேள்வி. அரசியல் வலிமை காரணமாக சில சமூகங்கள் அசல் பழங்குடியினரை விட எஸ்.டி அந்தஸ்தைப் பெற விரும்புகின்றன. மற்ற பெரும்பான்மை பழங்குடி சமூகங்கள் இந்த வளர்ச்சியைக் கண்மூடித்தனமாக வைத்திருக்கின்றன. பழங்குடியினர் அல்லாதவர்கள் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க பலம் பெறுவதில் ஆச்சரியமில்லை

      Delete
  14. மலையாள ஊர் என்றாலும் அங்கு குறவர் தொல் தமிழ்க் குலம் , மல்லர் தொல் தமிழ்க்குடி என பழங்குடி தொகுக்காமல் விட்டது எதனால் ?

    ReplyDelete