Monday, August 3, 2015

இசைக்கும் கற்குதிரைகள்...

சேந்தமங்கலம்... திருச்சி–சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கெடில நதிக்கரையோரம் அமைந்துள்ள கிராமம்.

பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர்களின் தலைநகராக விளங்கிய இந்த ஊர், வரலாற்றில் நீங்கா இடம்பிடித்ததற்கு கீழ்க்காணும் நிகழ்வு முக்கியக் காரணமாகும்.

கி.பி.1231இல் பாண்டியனிடம் தோற்றச் சோழமன்னன் மூன்றாம் இராசராசன், தன் தலைநகரை விட்டு குந்தள அரசனிடம் ஆதரவு கேட்டு ஓடுகிறான். வந்தவாசி வட்டம் தெள்ளாறு அருகே அவனை வழிமறித்த, முதற் கோப்பெருஞ் சிங்கன் என்றழைக்கப்படும் அழகியசீயன், சோழப் பெருவேந்தனுடன் மோதுகிறான். இதில் மூன்றாம் இராசராசன் தோற்றுவிட, அவனையும் அவனது உற்றார் உறவினர் படைவீரர் என அனைவரையும் கொண்டு வந்து, சேந்தமங்கலத்தில் சிறைவைத்தான் முதற் கோப்பெருஞ்சிங்கன்.

அழகியசீயனின் மகனான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி.1243- கி.பி.1279) சிதம்பரம் கோயிலின் கீழைக்கோபுரத்தையும், தில்லைக் காளிக்கு கருங்கல் கோயிலையும் எடுத்தவன். சிறந்தக் கவிஞனாகத் திகழ்ந்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கலைகளில் ஈடுபாடு மிக்கவன். “சாகித்ய ரத்னாகரன்” என்று இவனுக்கு வழங்கப்பட்டப் பட்டத்திலிருந்து இதை அறியலாம். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் இசையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். இதனை சேந்தமங்கலத்தில் உள்ள இரண்டு கற்குதிரைச் சிற்பங்கள் உணர்த்துகின்றன. இவை ஒரே கல்லில் இணைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பங்களின் முகம், காது, முதுகு என எங்குத் தட்டினாலும் வெவ்வேறு விதமான ஓசைவருகிறது. இப்படிப்பட்ட அற்புதமான, அதிசயக் கல்லைக் கண்டறிந்து அதில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



இதுபோல் மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயிற் தூண்களிலும் ஓசை வருவதையும் நீங்கள் அறிவீர்கள். தமிழர்களின் கலைத்திறனுக்கும், அதில் நமக்கிருந்த நுட்பமான ஈடுபாட்டிற்கும் சாட்சியாக நின்றுள்ளது சேந்தமங்கலம் இசைக்கும் கற்குதிரை சிற்பங்கள். சேந்தமங்கலம் கோயிலில் இருந்து சிலஅடி தூரத்தில் இருக்கும் குளக்கரையில் இந்தச் சிற்பங்கள் இருக்கின்றன. இரண்டு சிற்பங்களில் ஒன்று மிகவும் சிதைக்கப்பட்டுள்ளது. இதில் எப்படி ஓசை வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக நம்மவர்கள் நடத்திய அறிவாளித்தனமான ஆய்வின் வெளிப்பாடு, இந்தச் சிதைவு. இப்போது ஓரேயொரு சிற்பம் மட்டும் முழுமையாக நின்று கொண்டிருக்கிறது.

இந்த இசைக்கும் கற்குதிரைகள் குறித்தத் தகவல் 1995இல் தினமணிக் கதிரில் செய்திக் கட்டுரையாக வெளியானது. 2005ஆம் ஆண்டு வாக்கில் சேந்தமங்கலம் சென்ற நான், புதர்களுக்கிடையே இருந்தச் சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தேன். இதனைத் தொடர்ந்து அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு.கா.பாலச்சந்திரன் இ.ஆ.ப., அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். வரலாற்றின் மீது ஈடுபாடு கொண்ட அவர், உடனடியாக சேந்தமங்கலத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டார். சிற்பங்களைப் பார்த்து வியந்த மாவட்ட ஆட்சியர். இவற்றைப் பாதுகாக்கும் வகையில் விழுப்புரத்திற்குக் கொண்டுச் செல்வோம் என்றார்.



இதற்கிடையில் சட்டமன்றத் தேர்தல் வந்தது, தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியரும் மாறினார். அவருக்குப்  பின் வந்தவர்கள் இதில் அக்கறைக் காட்டவில்லை. காடவராயனின் இசைக்கும் கற்குதிரைச் சிற்பங்கள், சேந்தமங்கலம் குளக்கரையில் மீண்டும் புதர்கள் மண்டி, அப்படியே கிடக்கின்றன.


Musical Stone Horse at Sendhamangalam
Sendhamangalam, Tamil Nadu, India
[Nearby city: Ulundurpet, Villupuram, Cuddalore]
coordinates: 11.746995, 79.378339

https://goo.gl/maps/8Oefh

 ________________________________________________________ 
 
கோ.செங்குட்டுவன் 
ko.senguttuvan@gmail.com
________________________________________________________

No comments:

Post a Comment