Thursday, February 10, 2022

நான் நானே தான்!

 -- சந்திரிகா சுப்பிரமணியம்  (ஆஸ்திரேலியா)



நான் காளியுமில்லை, 
சீதையுமில்லை 
நான் பெண் எனும் 
பெரும் அற்புதம் 
சிறுமை மண்ணில் கால் புதைந்து 
தடைகள் மழைத் தலை வாங்கி 
எதிர்ப்பு வெள்ளம் மீறி வந்து 
வீறு கொண்ட வித்து நான். 
வீழ்ந்தாலும் வெளிப்படுவேன் 
பயன் தரும் விருட்சமாக. 
வீழும் முன்பு 
நூறு வித்து, 
என் அறிவு தடவி 
அன்பு நனைத்துக் 
காடென சூழக் 
காலடி வீழ்வேன். 
வீழ்ந்த பின்னும் 
வித்தக வீணை தரும்
மரமாவேன்

சுடர் தூண்டத் தீயாகும் 
சருகாவேன் 
பிணியறு மருந்தாகும் 
வேராவேன் 
ஏனெனில் நான் 
கற்றலும் 
கற்பித்தலும் 
கற்ற படி நிற்றலும் 
கற்றதன் பயன் 
பெற்றலும் 
வாழ்க்கையாகக் கொண்டு 
கற்பிதம் தாண்டி 
அற்புதம் செய்யும் 
அறிவூட்டல் பணியின் 
அடித்தள அடிமை 
அறிவுப் பொறி ஏற்றும் 
பெண் எனும் பேராசான், 
நான் நானே !
சுயம்! அதுவே நான்.


---





No comments:

Post a Comment