Saturday, August 28, 2021

பகையின் எல்லை……

                                     
-- முனைவர் எஸ். சாந்தினிபீ


சேலத்தில் சின்னதிருப்பதி என்ற ஓர் இடம் இருக்கிறது அஸ்தம்பட்டியில் இருந்து கன்னங்குறிச்சி போகும்  சாலையில் மணற்காடு தாண்டிய பின் வருவது சின்னதிருப்பதி. சாலையின் வலது பக்கம் இடது பக்கம் இரண்டையும் சேர்த்து குறிப்பிடுகிறது.  இதனை அடுத்து கன்னங்குறிச்சி, அதற்கும் வடக்கே மலைகள் தான். சேலத்தின் அழகும் பெருமையும் சுற்றி உள்ள மலைகள்தான்.

 சாலையின் இடது பக்கம் அதாவது மேற்குப் பக்கம் மேலாகவும் உயர்ந்தும் மேடாகவும் சாலையின் வலது பக்கம் கிழக்குப் பக்கம் கீழாகவும் அமைந்துள்ளது புவியமைப்பு. வலதுபக்கம் சந்திரன் கார்டன் என்கின்ற ஒரு பகுதி வருகிறது, அந்த குறுக்குத் தெருவில் சற்றே உள்ளே நடந்தால் பொருளாதார வளமையைச் சொல்லும் பெரிய பெரிய வீடுகள். அவற்றின் இடையே   இடிபாடுகளுடன் கூடிய ஒரு கோயில் இருக்கிறது. பார்வைக்கும் கட்டிட அமைதிக்கும் சற்று பழையதாகவே தெரிகிறது.

ஒரு பிரதான சாலையில் அமைந்திருக்கும்  ஒரு கோயில் இப்படிக் கேட்பாரற்று காணப்படுகிறது. அதே நேரத்தில் தினமும் கூட்டிப் பெருக்கி கோலமிட்டு அவ்வப்போது சூலத்தில் வைக்கப்படும் எலுமிச்சைப் பழங்களும் மாற்றப்பட்டுக் காணப்படுகிறதே என்கின்ற ஒரு தேடல் என்னுள் எழுந்தது. மெல்ல அதை விசாரிக்க சில வியப்புக்குரிய தகவல்கள் கிடைத்தன .  

இந்த கோவில் ஒரு குடும்பத்துக்குச் சொந்தமானது அவர்களுக்குள் இருக்கும் பங்காளி சண்டையின் காரணமாக இப்படி இடிபாடுகளுடன் காணப்படுகிறது. ஆனாலும் குலதெய்வம் என்பதால், தெய்வ குற்றத்திற்கு அஞ்சி இந்த காளி கோயிலை முற்றிலும் ஒதுக்காமல் அதைச் சுத்தப்படுத்திக் கோலமிட ஆள் அமர்த்தி உள்ளனர். அவ்வப்போது அவர்கள் இந்த கோயிலுக்கு வருவதும் உண்டு. குடும்பத்தார் தங்கள் குலதெய்வத்தை வணங்கிவிட்டுச் செல்வதும் உண்டு. ஆனால் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இக்கோயில் பல ஆண்டுகளாக இப்படியே பட்ட மரம் போல் பாழாகிறது.
Photos by S. Chandnibi.jpg

இதைப் பார்க்கும்போது சில வரலாற்று நிகழ்வுகள் என் மனதிற்குள் வருகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அதாவது சுதந்திரத்திற்கு முன் வலங்கை இடங்கைப் பிரிவினர் நமது சமுதாயத்தில் மிகக்கடுமையாகத் தங்களுக்குள் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டனர்.  அவர்களுக்குள் ஏற்பட்ட வேறுபாட்டின் காரணமாக ஒரே கோவிலில் அவர்கள் கடவுளை வணங்கும்  நேரம், பூசைக்கான நேரம், ஆடல் பாடல் காலநேரம், விழாக்களுக்கான நேரம் எல்லாமே வேறுவேறாக அமைத்துக் கொண்டனர் . 

சற்று காலத்தே முன்னோக்கிச் சென்றால் சோழர் ஆட்சியின் கடைசி காலத்தில் வலங்கை இடங்கையினரின் சண்டை சச்சரவுகள் ஆரம்பமாகி விட்டதை அறிய முடிகிறது. பதினோராம் நூற்றாண்டில், பேரரசன் முதலாம் ராசராசனின் காலத்தில் இருவருமே வேறு வேறு படைப்பிரிவினராக கல்வெட்டுகளில் காணக் கிடைக்கின்றனர். ஆனால் 13-ம் நூற்றாண்டில் சுமுக சூழல் மாறி பூசல்களில் இறங்கினர். சண்டை, வெறும் சொல்லாடலோடு நிற்காது கைகலப்பு, குத்து, வெட்டு, கொலை என்று வளர்ந்தது.
 
 பின்னர் வந்த விஜயநகர மன்னர்களின் காலத்திலும் இவர்களின் சண்டைகள் மிக அதிகமாக தென்படுகிறது.   அவை கோவில்களிலும் வணங்கும், தெய்வங்களின் மேலும் அதிகமாகவே எதிரொலித்தன. கோயில் எரிப்பு,கோயிலைக் கொள்ளையிடுதல் போன்று எல்லைதாண்டியது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் உள்ளன. 20-ம் நூற்றாண்டின் தெருக்களில் இவர்களின் சண்டைகளும் கொலைகளும் அதிகமாகியதைத் தடுக்க வேண்டிப் பார்த்த இடத்தில் சுட்டுத் தள்ள ஆங்கில அரசு உத்தரவு போட்டதைப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியும் தனது சோழர் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

வரலாற்றின் விட்டகுறை தொட்டகுறை போலும்  பங்காளி சண்டையில் சேலத்து இக்கோயில் பாழடைந்து கிடக்கிறது. மனிதன் கொள்ளும் பகை கால காலமாக கோயிலையும் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பதே தெரிகிறது.



உதவிய நூல்கள்:
1.  K.A.  Neelakanda Sastri  -  Colas, 2nd Edition, University of Madras, 1985, Chennai.
2.  ARE (Annual Reports on Epigraphy)185 of 1921.
3.  ARE 273 of 1939-40, Para- 101.
4.  ARE 1921, Part II, p – 47.



பேராசிரியர் முனைவர் எஸ். சாந்தினிபீ 
அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் 


-------








No comments:

Post a Comment