Monday, August 23, 2021

பாடலுக்குச் சுவைகூட்டும் எதுகையும் மோனையும்



-- திரு. இரா.மகேஸ்வரன்



நல்லா எகனை மொகனையா பேசறாண்டா! ஆனா செயல்ல ஒண்ணும் கிடையாது! என்று சொல்வார்கள்! நமது அரசியல்வாதிகளும் இப்படித்தான் எகனை மொகனையா பேசி நம்மை ஏமாளிகள் ஆக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். 

கவிதை படைப்பதில் இந்த எகனை மொகனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது கவிதைக்குச் சுவை கூட்டும்.

அத்தகைய எதுகை மோனை பற்றி:
மோனை:
செய்யுளில் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை எனப்படும். இதை அடி மோனை என்றும் சொல்வார்கள்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
முதல் அடியின் முதல் எழுத்தும் இரண்டாம் அடியின் முதல் எழுத்தும் ஒன்றி வந்துள்ளதால் மோனை என்பார்கள்.

எதுகை:
அடி தோறும் முதலெழுத்து அளவொத்து (ஓசையில்) நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றி வர தொடுப்பது அடி எதுகை என்று அழைக்கப்படும்.
  
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
இந்த குறட்பாவில் முதல் அடியில் இரண்டாம் எழுத்தும் இரண்டாம் அடியில் இரண்டாம் எழுத்தும் ஒத்து வந்துள்ளது இதனால் இது எதுகை தொடை ஆகும்.

நாலடி கொண்ட சீருள் முதல் இரு சீர்களில் முதலெழுத்து ஒன்றி வர தொடுப்பது இணைமோனை எனப்படும்.
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது

ஓர் அடியில் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் முதலெழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

ஓர் அடியுள் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ஒரூஉ மோனை எனப்படும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

ஓர் அடியுள் முதல் இரண்டு மூன்றாம் சீர்களில் முதலெழுத்து ஒன்றி வரத்தொடுப்பது கூழை மோனை ஆகும்.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.

ஓர் அடியுள் முதல் மூன்று நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்
துள்நின்று  டற்றும் பசி

ஓரடியுள் முதல் இரண்டு நான்காம் சீர்களில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

ஓர் அடியின் நான்கு சீர்களிலும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது முற்று மோனை எனப்படும்
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக

இதே போல் எதுகையும் 7 வகைப்படும்  மோனையில் முதல் எழுத்து ஒன்றி வந்ததை போல இதில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரும். அந்த வகையில் இணை எதுகை, பொழிப்பு எதுகை, ஒரூஉஎதுகை, கூழை எதுகை, மேற்கதுவாய் எதுகை, கீழ்க்கதுவாய் எதுகை, முற்றெதுகை என ஏழு வகைப்படும்.




திரு. இரா.மகேஸ்வரன், 
கல்வி சார் நூலகர், 
பேராதனைப் பல்கலைக்கழகம், 
கண்டி, இலங்கை.




No comments:

Post a Comment