Monday, August 16, 2021

நிறைவேறியது 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' தீர்மானம்

-- தேமொழி 


"ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது."

இவ்வாறாக ஒரு  தீர்மானம் முன்மொழியப்பட்டு சுமார் 93 ஆண்டுகள் ஆகின்றன. சீர்திருத்தம் விரும்பிய  தமிழர்களின்  இத்தீர்மானம் பல போராட்டங்கள் மற்றும்  சட்டச் சிக்கல்களுக்குப் பிறகு இப்பொழுது நிறைவேறியுள்ளது. தந்தை 'பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்' இதனால் அகற்றப்பட்டுள்ளது.

பார்க்க-தமிழ்நாடு அரசாணை எண் 609: 
மற்றும் படங்கள்: 
archagar.JPG
archagar0.JPG
archagar1.JPG

ஆண்டு 1927-  நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'சேலம் 3-வது அரசியல் மகாநாட்டில்' 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  

அவற்றில் ஆறாவது தீர்மானமே -- "ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக் கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது." என்பதாகும்.

மாநாட்டு  நிகழ்வுகள் குறித்து பெரியாரின் 'குடிஅரசு'  இதழில் (13-11-27 பக்கம் - 13) செய்தி வெளியாகி உள்ளது.  அச்செய்தி கீழே வெள்ளுரை வடிவிலும், படமாகவும் இணைக்கப் படுகிறது.  

சேலம் 3-வது அரசியல்  மகாநாடு.

குடி அரசு
13-11-27
பக்கம் - 13

ஆண்டு 1927-  

நவம்பர் மாதம் 5, 6 தேதிகளில் திருவாளர் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற 
'சேலம் 3-வது அரசியல் மகாநாடு'

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மகாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள்  முன்னரிருந்தே நடைபெற்றது. நகர்முழுதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்காரமாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு. வி. ஒ. சிதம்பரம் பிள்ளை அவர்களை காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப்பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிராரம் கடைவீதி வழியாய் பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்பு கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர் அவர்கள், திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள், டாக்டர் வாதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும், இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப  தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர்கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டியாய் ஜே. கோஷங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணிவரையில் நடை பெற்றது, பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்: 
மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆய்விட்டது, தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள், தலைவர் கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்திலமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புகமிட்டி அங்கத்தினர்களும் தலைவர்களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள், திரு பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார்,  ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார்  எம்.எல்.சி.,  திரு. ஆர். கே. ஷண்முகம் செட்டியார் எம்.எல்.ஏ.,  திரு. ஈ. வெ. ராமசாமி நாயக்கர்,  டாக்டர் வாதராஜுலு நாயுடு, திரு. தெண்டபாணிபிள்ளை, திருவாளர்கள் டி.  எஸ்.  ஜெகராஜ் பி.ஏ.பி.எல்., கே. நரசிம்மய்யங்கார் பி.ஏ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ.பி.எல்., கே. சிவ. சங்கர முதலியார்,  டாக்டர் ரங்கய்ய நாயுடு,  பி. இராஜமணிக்கம் பண்டாரம், டி.வி.பங்காரு செட்டியார், எ. கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ்.  அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என். கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அப்துல் அமித் சாயபு, ஏ.வையாபுரி மண்டாரம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி.பொன்னுசாமி முதலியார், கே.மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், சர்மசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார் பி.ஏ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு, சிவப்பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார்,  அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயணா  செட்டியார், பி. சிவராவ் எம்.எல்.சி,  முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள். 

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ்.தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளை வரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகாராட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமைவகித்த திரு. வி. ஒ. சிதம்பரபிள்ளை அவர்களைப் பிரேரேபிக்கராவ் சாகிப், எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க, திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார், நாமக்கல் ஊஸ்மான் சாயபு, எம். சாமிநாதய்யர், ஆர். கே. ஷண்முகம் செட்டியார், ஈ. வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆகரிக்க தலைவர் அவர்கள் கரகோஷத்தினிடையே பதவியை யேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார். 
குறிப்பு:- மற்றய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளி வரும். 

நிறைவேறிய தீர்மானங்கள்:
(1) 
இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்யவேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(2) 
வரப்போகும் ராயல் கமிஷன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமிஷனாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போதுமான அளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமிஷனில் இல்லாவிட்டால் தேசத்தாருக்கு கமிஷன் திருப்திகரமாயிருக்கா தென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது. 

(3) 
     (அ) கௌகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையகாக் கண்டிக்கிறது. 
     (ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக்கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம்  ஒப்புக்கொள்ளுவது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியோகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச்சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

(4) 
"காமன் வெல்த்து ஆப் இந்தியா" மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவையாயிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும்படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா விஷயத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக்கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாகாடு மிகவும் பாராட்டுகிறது.

(5) 
     (அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக  விஷயங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப்பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாகாடு வருந்துகிறது. 
     (ஆ) தீண்டாமை யொழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணாச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மநாநாடு கேட்டுக்கொள்ளுகிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிரமங்கள் ஸ்தாபனம் செய்யவேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

(6) 
ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்விஷயத்திலுள்ள புறப்புரிமையைப் பிடுங்கிக்கொண்டதினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்ய வும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச்செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(7) 
தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரசில் ஆட்கள் சேரமுடியாமல் தடைசெய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

(8) 
வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்தமகாநாடு  தீர்மானிக்கிறது.

(9) 
சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டுர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசானத்துக்காக தண்ணீர் விட்டுக்கொடுக்கவேண்டு மென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

(10) 
கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்கவேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக் கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்கவே ண்டியதும் மிகவும்  அவசியமென்று இந்த மாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது.
archagar2.jpg
-------------






No comments:

Post a Comment