Monday, June 28, 2021

தசையினைத் தீச்சுடினும்...

”உலக வரலாற்றில், ஆணுடை தரித்துப்  போர் புரிந்தமைக்காக உயிருடன் எரிக்கப்பட்ட இளநங்கை, பிரான்சின் ழான்தார்க்”


--புதுவை சிவ இளங்கோ

ழான் ஆணுடை தரித்திருந்தாள். அதுவும் தளபதிக்கான உடை. ஒரு கையில் நீண்ட வாளும், மறுகையில் வெற்றியைக் காட்டும் அடையாளக் கொடியும் கொண்டு குதிரை மீதமர்ந்து உற்சாகமாகப் புறப்பட ஆயத்தமாகி இருந்தாள்.

1-Joan of Arc.jpg

ழானுக்குப் பின்னே பன்னிரெண்டாயிரம் படை வீரர்கள் குதிரைப்படையும், காலாட்படையுமாய்க் காத்திருந்தனர். வீரர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். நமக்குத் தளபதி ஒரு பெண். அதுவும் இளவயதுப்பெண். கிராமத்துப்பெண். இவருடைய தலைமை நமக்கு வெற்றியைத் தருமா என்று ஒரு பக்கம் சில படைவீரர்கள் பேசிக்கொண்டிருந்த வேளையில், ‘அவள் மன்னனைக் கட்டுப் பாட்டுக்குள் வைத்திருக்கிறாள்’ என்று சிலரும், ‘அவள் ஆண்டவன் அருள் பெற்றவள்’ என்று சிலரும் சொல்லிக் கொண்டிருந்தனர்.அவளைப் பற்றி அந்தப் படையில் யாருக்கும் முழுமையாகத் தெரியாத போதிலும், அவளுடைய கம்பீரமும், உறுதியும் அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அது நிகழ்ந்தது. கறுப்பும், வனப்பும் மிகுந்த, ழான் அமர்ந்திருந்த அந்த ராஜகுதிரை பெருங்குரலெடுத்துக் கனைத்துச் சீறித் துள்ளிக் குதித்தது. திடீரென்று ஏற்பட்ட அதிர்வால் ழான் சற்றே நிலை குலைந்தாலும். ஓரளவு சுதாரித்துக் கொண்டு குதிரையை லகானைப் பிடித்திழுத்து அடக்க முற்பட்டாள். ஆனால் தன் இரு முன்னங்கால்களையும் மிக உயர்த்தி உயரமாக நின்ற குதிரை, அடுத்துத் தாவித் தன் பின்னங்கால்களையும் தூக்கியடித்தது. ராஜகுதிரை அல்லவா? அதுவும் பல போர்க் களங்களைக் கண்டது. அதற்கும் யுத்தத் தந்திரங்கள் ஓரளவு தெரியும். அதற்கு மேலும் தாக்குப் பிடிக்க முடியாத ழான் தரையில் விழுந்து உருள வேண்டியவளானாள்.

படைவீரர்கள் சிலர் சிரித்த ஒலி கேட்டது. பலர் ஒலி எழுப்பாமல் சிரித்து அடங்கினர். தரையில் விழுந்த ழான் உடனடியாகத் துள்ளி எழுந்தாள். படைவீரர்கள் சிலரின் கண்களில் தெரிந்த கேலியைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், அருகிலிருந்த தேவாலயத்தைக் காட்டிக் கை உயர்த்தியவள், “இக்குதிரையை அக் கோவிலின் அருகேயுள்ள சிலுவைக்கு அழைத்துச் செல்வீராக!” என்றாள்.

அவள் குரலில் இருந்த கண்டிப்பு, நான்கு வீரர்களை முன்வந்து குதிரையைத் தேவாலயத்தை நோக்கிச் செலுத்தச் செய்தது. அங்கே சென்றதும் குதிரை அசைவற்று கற்குதிரை போல் நின்றது. அதன் அருகே வந்த ழான் மிக அனாயாசமாக குதிரை மீதேறி ஓர் அலட்சியப் புன்னகையுடன் படையினரை ஏறிட்டுப் பார்த்தாள். அனைவரின் கண்களிலும் தெரிந்த ஆச்சரியக் குறியைக் கண்ட ழான், ஒரு நிம்மதியுடன் சிலுவைக்கு அருகில் நின்றிருந்த குருமார்களை நோக்கி,  “ஐயன்மீர், இறைவனை வேண்டி அவனது திருவுருவத்தை ஊர்வலஞ் செய்வியுங்கள்” என்று கூறவும், அக் குருமார்கள் கர்த்தரின் ஆசீர்வாதத்தைக் குதிரையின் காதிலும், வீரர்களுக்கு உரத்தும் அறிவித்து, தங்கள் வாழ்த்தையும் சேர்த்து விடை கொடுக்கும் பாணியில் கையசைத்தனர்.

“முந்துக! முந்துக!” ழானின் குரல் ஓங்கி ஒலித்தது. அனைத்து வீரர்களும் ழான் சொன்ன உற்சாக வார்த்தையை ஒலித்து இசை முழக்க, அப்பெரும்படை ஓர்லீன் நகரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. படைவீரர்களின் கண்களில் மின்னிய கேலி மாறி பிரமிப்பு குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.

ஓர்லீன், பிரான்சின் முதன்மை பெற்ற ஓர் நகரம். அந்தக் காலத்தில் பிரான்சின் முக்கிய நகரங்களில் ஆங்கிலேயரும் குடியேறி அவரவரும் அந்த மண்ணுக்கு உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர். இதனால் பிரெஞ்சுக் காரர்களுக்கும், ஆங்கில நாட்டினர்க்கும் சண்டை துவங்கியது. இச்சண்டையின் உணர்ச்சியினால் பிரான்சு நாட்டிலெங்கும் இரு கட்சியாகப் பிரிந்திருந்தது.  தெருவில் எதிர்ப்படும் இருநாட்டுச் சிறுவர்கள் கூட கல்லால் அடித்துக் கொண்டு சண்டையை வளர்த்தனர். பிரான்சின் கிழக்கே இருந்த சில ஊர்களே பிரான்சின் மன்னனாக முடிசூட இருந்த இளவரசன் சார்லசுக்குத் துணையாய் இருந்தன. ஓர்லீன் நகரமோ தாக்குதலுக்கு ஆளாகிப் பாதி பிரெஞ்சியரிடமும், மீதி ஆங்கிலேயர் வசமும் இருந்தது. இருபகுதிகளுக்கும் இடையில் ஓடிக்கொண்டிருந்த லுவார் என்னும் ஆறு ஒவ்வொரு நாளும் சிவந்து கொண்டிருந்தது.

இந்த ஓர்லீன் நகரை ஆங்கிலேயரிடமிருந்து முழுவதுமாகக் கைப்பற்றத்தான் ழான் தன் படைகளுடன் சினான் என்றும் நகரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தாள். அவளை அங்கிருந்து படையுடன் அனுப்பி வைத்ததே இளவரசன் சார்லஸ்தான். இதுதான் காட்டுத் தீயாகப் பரவி பிரான்சு எங்கனும் இதே பேச்சாக இருந்தது. ஒரு பெண் போர் செய்வதா? அதுவும் படைத்தளபதி ஆவதா? அதையும் இளவரசனே அங்கீகரிப்பதா? அது எங்ஙனம்? அப்படிப்பட்ட ழான் யாவள்? அவள் எப்படி இருப்பாள்? என்று பலதரப்பட்ட கேள்விகளும், ழானைக் காணும் ஆவலும் பிரான்சு மக்களிடம் மிகுந்து வந்தன. 

ழானுக்கு படையை வழிநடத்திச் செல்வது சாமானியமாய் இருக்கவில்லை. வழியில் கண்ட இடர்ப்பாடுகளே அதிகம். அஞ்சத் தக்க வேண்டியவையாய் வழிகளும், சாலைகளும் இருந்தன. வழியில் அரச சத்திரங்கள் சில இடங்களில் மட்டுமே இருந்தன. மற்ற இடங்களில் திறந்த வெளிகளில் தங்க வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டன. ழானின் இளவயதும், ஆணுடையிலும் வெளிப்படும் அவளது பெண்வனப்பும், பன்னிரெண்டாயிரம் வீரர் மத்தியில் தனியொரு பெண்ணாகப் படுத்துறங்குவதும் வேறொரு சூழ்நிலையில் எண்ணிப் பார்க்க முடியாதுதான். ஆனால் இந்தப் படை வீரர்கள் இடையில் ழான் ஒரு புதிராக இருந்தாள். வீராங்கனை, மன்னனே அனுப்பிய மங்கை, தெய்வாம்சம் பொருந்தியவள், மந்திரங்கள் அறிந்தவள் என்று போர் வீரர்கள் பரிமாறிக்கொண்ட வார்த்தைகள் எல்லாம் ழானுக்குக் கவசமாய் காவல் காத்தன.

தன்னைச் சுற்றி அத்தனை காவல் இருந்தாலும், ழான் கண்ணுறங்க வில்லை. வானத்து நட்சத்திரங்களை அவள் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த போது, தான் சிறுமியாக, தன் சொந்த ஊரான டாம்ரிமியில் தூக்கம் வராத ஓர் இரவில் இப்படி வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது அவள் நினைவுக்கு வந்தது. ஏசுபிரான் பிறந்த போது தோன்றிய வால் நட்சத்திரம் இப்போது ஏன் தோன்றவில்லை என்று ழான் சிறுவயதில் மிக ஏங்குவாள். எதிரிகள், திருடர்கள், கொள்ளைக் கும்பல் என்று அமைதியான வாழ்வு கேள்விக் குறியாகி இருந்த பிரான்சின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவளது பெற்றோர் எதற்கெடுத்தாலும், "தேவனே! அன்னையே! எம்மைக் காப்பாற்றுவீராக!" என்ற சொல்லிய வண்ணம் இருந்தனர். ழானின் எந்தக் கேள்விக்கும் அதே பதில்தான்.

Joan of Arc6.jpg
ழான் சிறுவயதில் ஆடு, மாடு மேய்க்கப் போகும் போதெல்லாம்  வீட்டினருகே இருந்த தேவாலயம் செல்வாள். அவளுக்குள் எழுந்த எல்லாக் கேள்விகளையும் அவள் தேவனிடமே நேரடியாகக் கேட்டாள். எதற்கும் பதிலில்லை. ழானுக்கு அவமானமாய் இருந்தது. சிறிது நாட்களில் சமாதானமாகி அவளே பதில்களைச் சொல்லிக் கொண்டாள். இது அவளுக்கு நிம்மதியைக் கொடுத்தது. எதுவாகினும் தேவன் தனக்குப்பதில் சொல்வதாகவே அவள் நினைத்ததுடன் மற்றவரிடமும் அப்படியே கூறினாள். அவள் அடிக்கடி தேவாலயத்திலேயே அதிக நேரம் கழிப்பதையும், அவளுக்கு தேவன் கனவிலோ, நினைவிலோ சில சேதிகள் சொல்வதையும் அவளுடைய பெற்றோர் பெருமையாகக் கருதினர். அதை அப்படியே ஊருக்கும் சொன்னார்கள்.

இந்நிலையில்தான் அக்கிராமத்தை ஆங்கிலேயக் கொள்ளையர்கள் சூழ்ந்தனர். ஆடுமாடுகள் கொள்ளை போயின. பல வீடுகள் தீக்கிரையாகின. இச்செய்தி கேட்டுப் பக்கத்திலிருந்து பிரெஞ்சு சிறுபடையொன்று அக்கிராமம் வந்து சேர்வதற்குள் கிராமத்தினர் அனைத்தையும் இழந்து விட்டிருந்தனர். ஊரின் பக்கத்தே செல்லும் பெரும்பாட்டையில் செல்லும் வழிப்போக்கர்கள், பிரான்சு படுந் துன்பத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு  போவதைக் கிராமத்தினர் கேட்டுக் கலக்க முற்றிருந்தனர். சிறு பெண்ணான ழானுக்கு இந்நிலை மிகத் துன்பத்தை அளித்தது. தான் பிறந்து வளர்ந்த, ஓக் மரங்கள் நெருங்கிச் சூழ்ந்த அந்த அழகிய கிராமம் இப்படி அவலமுற்றுச் சிதைந்து கிடப்பதைக் காணச்சகியாமல் தேவாலயம் சென்று முறையிட்டாள். அவள் திரும்ப வரும்போது அவளிடம் ஒரு பதில் இருந்தது. அது அந்தத் தேவனே அளித்த கட்டளையாகவும் இருந்தது.

“ழான் பிரான்சைப் பாதுகாக்கப் பெருமுயற்சி செய்யக் கடமைப் பட்டிருக்கிறாள். இரங்கத் தக்க நிலையிலுள்ள பிரான்சு நாட்டிற்காக ழான் பேருதவி செய்து அதனைக் காக்க வேண்டும்!” என்று தெய்வக் குரல் கட்டளையிட்டிருப்பதாக ஊராரிடம் செய்தி பரவியது. அச்செய்தி அவ்வழிப் போக்கர்கள் மூலமாகப் பல ஊர்களுக்கும் பரவியது. ழானும் பேதை, பெதும்பை  நிலைமாறி மங்கையாக மலர்ந்திருந்தாள். ஆனால் நினைவென்னவோ பிரான்சின் விடுதலை மட்டுமே! 

இது இவ்வாறிருக்கப் பிரான்சின் பல நகரங்களில் இருந்த மந்திரவாதிகளும், குறிசொல்வோரும், “பிரான்சு நகரமானது, ஓக் மரத் தோப்பினின்று வரும் மங்கை ஒருத்தியால் விடுபட்டுப் பாதுகாக்கப்படும்” என்று கூறிவந்தனர். இச்செய்தி அரசர் வரை சென்றடைந்தது. அவ்வாறு குறிப்பிட்ட அடர்ந்த ஓக் மரத்தோப்பு ழானின் கிராமமான டாம்ரிமியே என்றும், ழானே அந்த மங்கை எனவும் செய்தி எங்கும் பரவிக் கொண்டிருந்தது.

இச்செய்தி பக்கத்துப் பெரிய ஊரான வாகுலியர் எனும் நகரத்தில் இருந்த பிரான்சு படைத்தளபதி ராபர்ட் என்பாரின் காதிலும் விழுந்தது. அடுத்த சில நாட்களில் ழான், அத் தளபதி முன் நின்றிருந்தாள். அவளைப் பற்றிய முழு விவரமும் முன்பே கேட்டு அறிந்திருந்த ராபர்ட் அவளிடம், “ம்... நீ என்ன சொல்ல வேண்டுமோ சொல்!” என்றான்.

“ஐயனே! பிரான்சை இப்போதிருக்கும் இக்கட்டில் இருந்து நீக்க எனக்கு தேவன் உத்தரவிட்டிருக்கிறார். நமது இளவரசருக்குத் துணை நின்று, பகையை விரட்டி, இளவரசருக்கு ரீம்ஸ் கோயிலில் புனித நெய் முழுக்குச் செய்வித்து என்னால் முடிசூட்ட வேண்டும் என்பதே என் தேவன் எனக்கிட்ட கட்டளை!”

“உன் தேவன் யாவன்?” “எல்லாம் வல்ல இறைவனே என் தேவன்!” தெளிவான ழானின் இந்தப் பதிலால் குழப்பமடைந்தான் படைத்தளபதி. என்றாலும் மனந் துணிந்து, “இறைவன் எனக்கும் உதவி செய்வாராக” என்று கூறிய ராபர்ட், அரைகுறை மனதுடன் அவளை இளவரசன் சார்லஸ் இருக்கும் நகரமான சினானுக்கு ஏழு போர் வீரர்களுடன் அனுப்பி வைத்தான்.

ஆனால் இளவரசனிடம் பெருந்சோதனையாய்ப் போய்விட்டது. முதலில் இளவரசனைச் சந்திக்கவே பல நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. பல பாதுகாப்பு வளையங்களைக் கடந்து அனுமதி பெற்ற பின்னர் இளவரசன் இருக்குமிடத்தில் நுழைந்த ழான் இளவரசனைக் கண்டுத் துணுக்குற்றாள். “இவனா இளவரசன்! இளவரசனைப் போன்று உடை அணிந்திருந்தாலும் முகத்தில் அந்த மிடுக்கில்லை. இதில் ஏதோ சூதிருக்கிறது.” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்ட ழான், அக்குழுவில் சாதாரணப் போர் வீரன் உடையில் நின்றிருந்த ஒருவனை நோக்கி வணங்கி, “அரசிளைஞருக்கு இந்த அடியவளின் வணக்கம்” என்றாள்.

Joan of Arc12.jpg
இளவரசனின் நெருங்கிய குழுவினரும், ஆலோசகர்களும் ஆச்சரியம் அடைந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல், ‘அதோ இளவரசர்’ என்று சுட்டிக் காட்டும் விதமாக இளவரசன் போல் உடையணிந்த ஒருவனைக் காட்டி நின்றனர். ஆனால் ழான் தான் பணிந்திருந்த ஒருவனிடமிருந்து நகராமல், “ஐய! அவன் அரசிளைஞனல்லன்; நீர்தாம் அவன் ஆவீர்!” என்று மேலும் பணிந்து நின்றாள்.

பகட்டு ஆடைகள், படைவரிசை, ஆன்றோர் சொல் அத்தனையும் மீறி தன்னை யாரென்று ழான் கண்டுபிடித்ததை இளவரசன் உள்ளுக்குள் மெச்சினாலும் அவன் கண்களில் முழு நம்பிக்கையில்லை, “என்னதான் கடவுள் கருத்துரைத்து அனுப்பியவளாக இருந்தாலும் ஒரு பெண்ணின் வீரத்தில் பிரான்சு காப்பாற்றப்பட்டால் தன் நாடும், பிறநாடுகளும் எள்ளி ஏளனஞ் செய்ய மாட்டார்களா” என்று நினைத்துக் கொண்ட இளவரசன் கண்களாலேயே தன் அமைச்சர்களுக்குச் சாடை காட்டினான்.

இளவரசனின் அமைச்சர்களும், ஆலோசகர்களும், குருமார்களுமாக நிரம்பியிருந்த அச்சபையினர் ழானின் நோக்கம் பற்றிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினர். எல்லாவற்றிற்கும் ழானிடம் பதில் இருந்தது. அது “பிரான்சைக் காக்கும் தனது இலட்சியம் தேவனின் உத்தரவு” என்பதே! கேள்விக் கணைகளை எழுப்பியோர் களைத்துப் போயினர். இறுதியில் ஒரு குருமார் ஆனவர், “எல்லாம் வல்ல இறைவனே உனக்குப் பேருதவி செய்து ஆங்கிலேயரைப் பிரான்சை விட்டுத் துரத்துவார் என்று நீ சொல்வது உண்மையானால், கடவுளே ஆங்கிலேயரை நம் நாட்டை விட்டுத் துரத்துவார் அன்றோ?” என்று கிடுக்கிப்பிடி போட்டுவிட்டத்  தெம்போடு சபையினரை ஏறிட்டுப் பார்த்தார்.

இதற்கு ழான் என்ன சொல்வாள் என்று ஆவலுடன் அனைவரும் அவளையே பார்த்திருந்தனர். “முயற்சியுடையார்க்கே இறைவன் உதவி செய்வானாகலின், நாம் போர் மேற் சென்றால்தான் தேவன் நமக்கு வெற்றியை அளிப்பார்” என்று குருமார்கள் தேவாலயத்தில் உபதேசம் செய்வது போலும் ழான் சொல்லி முடித்ததும், கேள்வி கேட்ட குருமார் முகம் இறுகிப் போனது.

இத்தனை நேரம் அமைதியாய் இருந்த, கல்வியறிவிற் சிறந்த, மன்னரின் நெருங்கிய உறவினரும் அமைச்சருமான ஒருவர் ழானை நோக்கி, “நீ கேட்டு வரும் தெய்வக் குரலொலி என்ன மொழியிற் பேசுகின்றது?” என்று வினவினார். அவர் எழுத்துக்களை உச்சரித்துப் பேசிய முறை ழானுக்குப் பெருஞ்சிரிப்பை வரவழைத்தது. ஏனையோர்க்கு அவரது மொழியும், ஒலியும் பழகியிருந்தபோதும் இலேசான நகைப் பொலிகள் வரத்தான் செய்தன.

ழான், தன் குறுகுறுப்பு நிறைந்த கண்களால் அவ்வமைச்சரை உற்றுநோக்கிச் சற்றே இளநகையுடன்,  “நீர் பேசும் மொழியை விடச் சிறந்ததான மொழியில் அக்குரலொலி பேசுகின்றது!” என்று பதிலிறுத்ததும், இளவரசனே நகைத்து விட்டான். அங்கிருந்தோர் அனைவரும் அப்பதிலை இரசித்தனர். கேள்விகேட்ட அமைச்சரும் பெருந்தன்மையோடு ழானை நோக்கிப் புன்னகை புரிந்தார். பிறகு கேட்டார். “நீ  தெய்வாம்சம் பொருந்தியவளாக நாங்கள் நம்பும்படி ஏதேனும் புதுமைகள் செய்து காட்ட முடியுமா?” 
“ஐயன்மீர்! புதுமைகள் செய்து காட்ட நான் இங்கு வரவில்லை. என்னைப் போர்க்களத்துக்கு அனுப்புவீர்களானால் நான் எதற்காக அனுப்பப்பட்டேனென்று அப்போதறிவீர்கள்”
ழானின் திட்டவட்டமான, உறுதியான இந்தப் பதில், அவள் இதற்கு மேலும் பதில் சொல்லத் தயாரில்லை என்னும் நிலைப்பாட்டை  உணர்த்தியது.

இதற்கு  மேலும் பொறுத்திராத இளவரசன் தன் திருவாய் மலர்ந்து,  “ழான் தனது இருப்பிடத்துக்குச் செல்லலாம். விரைவில் அழைப்பு வரும்” என்றான். ழானும் இளவரசனை வணங்கி விடைபெற்றுத் தன் இருப்பிடம் திரும்பினாள். அன்றிலிருந்து எப்போது அழைப்பு வரும் என்ற ஒவ்வொரு நாளும்  ஏங்கித் தவித்தபடியே இருந்தாள். ஆனால் அவள் காதுக்கு எட்டிய செய்திகள் அவளுக்குக் கவலையை அளித்தன.

மன்னனின் ஆலோசகர்களும், மதகுருமார்களும், அமைச்சர்களும் ழானின் படைத் தலைமை குறித்துப் பல்வேறு ஐயங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். கிராமத்தில் இருந்து, கல்வி கேள்விகளில் சிறந்திராத ஒரு சிறுபெண், சிக்கலான கேள்விகளுக்கு அனாயாசமாகவும், சில நேரம் கிண்டலாகவும் கூட பதிலளித்தது குருமார்களின் கோபம் வளரக் காரணமாயிருந்தது. எல்லாவற்றை விடவும். தேவனே தன்னிடம் நேரில் சொன்னதாக ழான் கூறியதை அவர்கள் ஏற்கவே மறுத்தனர். தேவனின் காப்பாளர்களாகப் பூமியில் தாங்கள் விளங்கும் போது, தங்களிடம் எதுவுஞ் சொல்லாத தேவன், நேரில் காட்சிகூடக் காட்டாத தேவன், இவள் முன்பு நேரில் வருவதாவது! அதுவும் தங்களுக்குக் கனவில் கூட வராத தேவன்...!

காலந் தாழ்த்து கொண்டே வந்தது. மீண்டும் இளவரசனைக் காண வந்த ழான், இளவரசனிடம், “நான் ஓராண்டுக்கு மேல் சில காலந்தான் இருப்பேன்; ஆதலால் காலந் தாழ்த்த வேண்டாம்” என்று உணர்ச்சி மேலிட வேண்டினாள். இது குருமார்களின் கோபத்தை இன்னும் கிளறியது. ‘இவள் எதிர் காலத்தைப் பற்றிய கணிப்பும் கூறுகின்றாள். எனவே இவள் சூனியக் காரியாய் இருக்கக் கூடும்” என்றும் மன்னனின் காதில் ஓதினார்கள். ஓத வந்தவர்கள்தானே?

ஆனால் மன்னனின் முடிவு வேறாக இருந்தது. அவன் அனுப்பிய ஒற்றர்கள், ழானின் சொந்த ஊருக்குச் சென்று அவளைப் பற்றி விசாரித்து அறிந்த சேதிகள் ழானின் ஒழுக்கம், நாட்டுப்பற்று, கடவுள் பக்தி என்று நற்சான்றுகளை அளித்திருந்தன. அதுமட்டுமன்றி, ஓர்லின் நகரம் நாளுக்கு நாள் ஆங்கிலேயர் வசம் ஆகிக் கொண்டிருந்த செய்திகளும் அரசனுக்கு நெருக்கடியைத் தந்தன. 

மன்னர் (இளவரசன்) தீர்மானித்துவிட்டார். ழானின் உடன்பிறந்தார், வேறு சில படைத் தலைவர்கள், படையுடன் ழான் ஓர்லின் நகர் செல்ல ஒப்புதல் அளித்தார். ழானுக்குப், போர் மேல் செல்ல இரும்புச் சட்டை, திறமிக்க குதிரைகள், கூரிய வாள், இவற்றை நேரில் வரவழைத்துக் கொடுத்தார். மேலும் துரைமகன் ஒருவனையும், வேலைக் காரர்களையும், குருமார் ஒருவரையும் எப்போதும் ழானுக்கு உடனிருந்து உதவுமாறு அனுப்பி வைத்தார். தன்னுடைய பங்காக ழான் எடுத்துக் கொண்டது ஒரு கொடியை. அதை அவள் வெற்றிக்கொடி என்று சொன்னாள். அக்கொடியில் அல்லி மலரும், தேவன் உருவமும் வரையப்பட்டிருந்தது. அக்கொடி எப்போதும் அவள் கையில் இருந்தது.

இப்படியாக, மன்னனால் வழியனுப்பப்பட்டுப், புறப்பட்டவள்தான், ஓர்லீன்நகர் செல்லும் வழியில் இதோ இங்கே கூடாரமிட்டுத் திறந்த வெளியில் தங்கியிருக்கிறாள். தூக்கம் வராமல் நட்சத்திரங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ழானின் நெஞ்சினில் இத்தனையும் நிழலாடி மறைந்தன. பழைய நினைவுகளில் இருந்து மீண்டவளின் கண்களில் விடிவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. இன்று எப்படியும் ஓர்லின் நகரை அடைந்து விடுவோம் என்ற எண்ணமே அவளுக்குப் பெரு மகிழ்வளிப்பதாக இருந்தது. ழான் உற்சாகக் குரலில் “எழுக வீரர்களே” என ஓங்கிக் குரல் கொடுத்தாள். சிறிது நேரத்தில் படை அங்கிருந்து ஓர்லீன்நகர் நோக்கி நகரத் தொடங்கியது.

ஓர்லின் நகரத்தை அப்படை நெருங்கியபோது ழான் எதிர்பார்த்தது போலவே இருள் கவ்வியிருந்தது. ஆனாலும் ஓர்லின் நகர மக்கள், படையை வரவேற்கவும், தங்கள் படைத் தலைவி ழானை முதன் முதலாகக் காணவும் ஆவலோடு திரண்டிருந்தனர். இருளைக் கிழித்திடத் தீப்பந்தங்கள் மிகுந்திருந்தன. காற்றின் வேகத்தில் தீப்பந்தங்களின் பொறி தெறித்துக் காற்றினூடே பறந்து தங்கள் பங்குக்கு அழகு சேர்த்துக் கொண்டிருந்தன. இரவின் மடியில் தாலாட்டுப் போல் ‘ழான் வாழ்க’ என்னும் ஒலி நெடுந்தூரம் கேட்டது. ழானின் முகமலரை வெளிச்சத்தில்  காண விரும்பிய சிலர் தீப்பந்தத்தினை அவளை நோக்கிச் சாய்த்தனர்.

Joan of Arc2.jpg

Joan of Arc5.jpg

அனைவரும் பிரமிக்கும் படியான செயல் ஒன்று அப்போது அங்கே நிகழ்ந்தது. காற்றின் ஓங்கிய வீச்சினால்  தீப்பந்தத்திலிருந்து கிளம்பிய ஒரு தீப்பொறி ழானின் கையிலிருந்த கொடியின் ஓரத்தில்  பட்டுத் தீப்பிடித்தது. அப்பொழுதுதான் அனைவரும், ழான் கையில் ஒரு கொடியைப் பிடித்திருப்பதையும், அதில் அல்லி மலரும், தேவனுருவம் பொதிந்திருப்பதையும் கண்டனர். தன் கையில் இருந்த வாளை விடவும் மறுகையில் இருந்த கொடியை உயர்வாய் நினைப்பவளான ழான், கொடி தீப்பற்றியதைக் கண்டவுடன், தன் குதிரையைக் காற்றுக்கு எதிராகத் திருப்பி, கொடியையும் நேர்த்தியாகச் சுழற்றித் தீயை அணைத்துவிட்டாள். பல போர்களைக் கண்ட அனுபவம் வாய்ந்தவள் போல் ழான் செயல்பட்டுத் தீயை அணைத்த விதம், அவளைச் சுற்றியிருந்த படை வீரர்களுக்கும், ஓர்லீன் நகர மக்களுக்கும் பெருவியப்பைத் தந்தது. தகுதியான தலைமையைத் தான் மன்னர் அனுப்பி வைத்ததாக அவர்கள் பெருங்கூக்குரலிட்டு மகிழ்ந்தனர்.

ழானைக் காண ஓர்லின் நகர மக்கள் மட்டும் ஆர்வம் காட்டியிருக்க வில்லை. அந்நகரை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயப் படையினரும், ஆங்கில மக்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர். படைத்தளபதியாக ஒரு பெண், தங்களை எதிர்த்துப் போரிட வந்த பெண் என்பவையே அவ் ஆர்வத்திற்குக் காரணம். இவையெல்லாம் கண்ட ழான், பிரான்சை விட்டுச் சண்டையின்றி அமைதியாகச் செல்லுமாறு ஆங்கிலேயர்க்குச் செய்தி அனுப்பினாள். அனைவரும் எதிர்பார்த்திருந்த அடுத்த நாள் விடிந்தது. போருக்குத் தயாராய் நின்றிருந்த அந்த நேரத்திலும், “ஆங்கில மக்களே! இவ்விடத்தை விட்டு அகலுங்கள்” என்று இறுதி எச்சரிக்கை விடுத்தாள் ழான்.

ஆனால் இழி சொற்களே அவளுக்குப் பதிலாகக் கிடைத்தன. சண்டை துவங்கியது. ஒரு கையில் கொடியும், மறு கையில் வாளும் ஏந்திய ஓர் ஏந்திழையை ஆங்கிலேயர் வினோதமாகப் பார்த்தனர். நீண்ட அரணை ஒட்டிய கோட்டை ஆங்கிலேயர் வசமிருந்தது. அகழிக்கு மறுபுறம் இருந்த தன் படையினர்க்கு ழான் அகழி வழியாய் இறங்க உத்தரவிட்டுத் தானும் அகழியில் இறங்கினாள். பிரெஞ்சு வீரர்களும் அவர்களுக்குத் துணையாய் வந்த ஸ்காட்லாண்டிய வீரர்களும் அகழியில் குதித்துச் சுவரின் மேல் ஏணிகளைச் சாத்திக் கொத்தளங்களின் மேலேறினர். ஆங்கிலேயர்க்கு ஆச்சர்யம் மிகுந்தது.

“இதென்ன உத்தி! தானாகவே வலிய வந்து அழிவைத் தேடிக் கொள்கிறார்களே! இதுதான் ழானின் போர் அறிவா?” என்று நினைத்து ஏணிமேல் ஏறுவோரைக் கோட்டைச் சுவர்களின் மீதிருந்து சுலபமாக ஈட்டி, அம்பு மூலம் வெட்டிச் சாய்க்க முற்பட்டனர். இந்த நேரம், ழான் தானே தன் கைகளால் ஓர் ஏணியைச் சுவரின் மீது சார்த்தி ஏறிக்கொண்டே தன் வீரர்களை நோக்கிப், “போர் புரியுங்கள்! போர் புரியுங்கள்! இவ்விடம் நம்முடைய தாகும்” என்று பெரங்குரலெடுத்துக் கூவினாள். 
Joan of Arc13.jpg

Joan of Arc11.jpg

அது மந்திரம் போல்  நிகழ்ந்து போனது. ழானின் வீரர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கோட்டை மதில் மேல் நின்றனர். அங்குத் தாக்கத் தயாராக நின்றிருந்த ஆங்கிலேய வீரர்களோ தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். அன்று வெற்றி எளிதானது. ஆனால் அடுத்த நாள் அப்படி இருக்கவில்லை. அடுத்த நாள் வெற்றிக்கு நிறைய விலை கொடுக்க வேண்டி இருந்தது. ழானின்   படை வீரர்கள் சிலர் உயிரிழந்ததோடு, ழானின் தோள்பட்டையிலும் ஓரம்பு ஆழமாகத் தைத்தது. ஆனால் ழானோ, அவ் அம்பை மறு கையால் பிடுங்கியெடுத்து விட்டு, குருதி வழிய வழியத் தொடந்து போரிட்டாள். தங்கள் படைத் தலைவியின் மேல் அம்பு பாய்ந்ததைக் கண்டு திடுக்கிட்டு நின்ற வீரர்கள், அம்பைப் பிடுங்கியெறிந்து தொடர்ந்து போரிட்ட ழானின் வீரம் கண்டு உற்காசமடைந்து மேலும் ஆவேசத்துடன் போர் புரிந்தனர். இதனாலேயே அன்றைய வெற்றியும் சாத்தியமானது.

இவ்வாறான தொடர்ந்து எட்டு நாள் சண்டைக்குப் பிறகு ஆங்கிலேயர் பின் வாங்கி ஓட, ஓர்லின் நகர் முழுவதுமாக பிரெஞ்சுப்படையினர் வசமானது. ழான் வெற்றித் தலைவியானாள். அனைத்து மக்களும், ‘பிரான்சைக் காக்க வந்த காவல் தெய்வமாக’ ழானைப் போற்றினர். ழானின் படையில் சேர்ந்து போரிட வீரர்கள் முண்டியடித்து நின்றனர். போர்ப்படையின் அளவும், வீரமும் கொப்பளிக்க, ழான், பிரான்சை விட்டு ஆங்கிலேயரை முழுவதுமாக விரட்டும் பணியில் தீவிரமானாள்.

ஓர்லின் நகரைத் தொடர்ந்து யார்கோ, பியூழான்சி, மியூன், பாலக், திராய், பாத்தே, ஆகிய நகரங்கள் மீண்டும் பிரெஞ்சுப் படையின் வசமாயின. இத்தனை வெற்றிக் கனிகளோடு இளவரசன் இருக்கும் ரீம்சு கோட்டைக்குத் திரும்பி வந்தாள் ழான். ழானுக்கும், அவள் படைக்கும் வரவேற்பு ஏற்பாடுகள் பலமாக இருந்தன. எல்லாவற்றையும் கடந்து இளவரசனிடம் சென்றாள் ழான். அவனும் அன்புடன் வரவேற்றான்.

Joan of Arc9.jpg

“பிரெஞ்சுப் படைத் தலைமை ஏற்றுப் பெருவெற்றியைக் கொணர்ந்தமைக்கு என் வாழ்த்துகள்” என்றான் இளவரசன்.  “ஐயனே! இறைவன் எனக்கிட்ட கட்டளைகளைப் பெரும்பகுதி முடித்து விட்டேன். ரீம்சு திருக்கோவிலில் தங்கள் முடிசூட்டப்பட வேண்டியது ஒன்று மட்டுமே கடனாய் உள்ளது” என்றாள் ழான். இளவரசன் முகத்தில் புன்னகை அரும்பியதேயன்றிப் பதிலேதும் இல்லை. இந்த வேளையில் இளவரசன் அருகிலிருந்த தலைமைக் குருவானவர், "அரசனுக்கு முடிசூட்டுமாறு தெய்வக் குரலொலி உனக்கு அறிவித்ததா?" என்று கேட்டார்.

அக்குரலில் இருந்த கேலியும், மன்னனின் மௌனப் புன்னகையும் ழானைத் துணுக்குற வைத்தன. ழான் மதகுருவைத் தவிர்த்து மன்னனை ஏறிட்டு ஆழமாகப் பார்த்தாள். அவனும் வாய்திறந்தான். “நீ இச்செய்தியைப் பலர் முன்னிலையில் சொல்ல முடியுமா?” மன்னனின் இந்தக் கேள்வியால் துவண்டு போனாள் ழான். "வெற்றிக் கனிகளைக் காணிக்கை ஆக்கினால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் அதைக் கொணர்ந்தவள் ஒரு பெண் என்பதால் கனிகளும் கசக்குமோ!"  என்று மனதில் ஓடிய ஆதங்கத்தை அடக்கிக் கொண்ட ழான்,  “சொல்ல முடியும்” என்று உறுதிப்படச் சொன்னாள்.

யாரும் பேசாமல் இறுக்கமான அமைதி அங்கே சிறிதுநேரம் நிலவியது. அந்த அமைதியை ழானே உடைத்தாள். “ஐயனே! நீர் மன்னராவது தேவன் கட்டளை வழி என் விருப்பம். என் ஆயுள் நீண்டதல்ல! அதற்குள் என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு பதிலுக்குக் காத்திராமல் விறைப்புடன் தன் இருப்பிடம் திரும்பினாள் ழான். மன்னனின் மந்திராலோசனை கூடியது. ழானின் வெற்றியினால் பொறாமை கொண்டிருந்த சில படைத்தலைவர்களும், மதகுருமார்களும் இளவரசனிடம் ழானின் வேண்டுகோளை ஏற்க வேண்டாமென்று மன்றாடி நின்றனர். ஆனால் மக்களின் பேராதரவும், படை வீரர்களின் மதிப்பும் கொண்டிருந்த ழானின் வார்த்தைகளை அறவே ஒதுக்கிவிட முடியவில்லை இளவரசனால். இறுதியில் மன்னனாக முடிசூட்டிக் கொள்ளத் தீர்மானித்தான்.

ரீம்ஸ் கோயிலில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மன்னனாக முடி சூடுதலை இதுவரை தள்ளிப் போட்டு வந்த மதகுருவே இளவரசனுக்கு முடிசூட்டி மன்னனாக அறிவித்தார். மன்னனுக்கு அருகில் மகிழ்வோடும், தன் கொடியோடும் ழான் நின்றிருந்தாள். முதல் வாழ்த்தையும் ழானே தெரிவித்தாள். மன்னர் முன் மண்டியிட்டு, “எல்லாம் வல்ல இறைவனின் திருவுளக் குறிப்பு இன்று நிறைவேறியது! அரசர் அமைதியுள்ளவராய் வாழ்க!” என்று ழான் வாழ்த்தினாள். அதனைக் கண்டிருந்த மக்கள் ஆனந்தக் கண்ணீரோடு வாழ்த்தொலியை முழங்கினர். ஆரவாரம் அடங்கியபின் மன்னன், “ழான்! நீ குற்றமற்றவள் என்பதை நானறிவேன். தெய்வமொழியும், வெற்றியும், திருவும் ஒருங்கமைந்த மங்கை நீ! ஆனால் அரசியல் நீ அறியாதது. அதைத் தெரிந்து கொள்வதை விடுத்து நீ உன் சொந்த ஊருக்குச் செல்லலாம். உன் வெற்றிக்குப் பரிசில் தர விரும்புகிறேன்.  கேட்பாயாக!” என்றான்.

தன் பணி தொடர்வதை மன்னன் விரும்பவில்லை என்று ழான் அறிந்து கொண்டாள். மன்னனைச் சுற்றியுள்ள மந்திராலோசனைக் கூட்டமே அதற்குக் காரணம் என்பதையும் புரிந்து கொண்டாள். தான், தன்னை முன்னிறுத்தாமல் தெய்வ வாக்கை முன்னிறுத்தியும், தெய்வத்தின் பிரதிநிதிகளாய்க் காட்டிக் கொள்ளும் மதகுருமார்கள், தன்னைக் கடவுள் பெயராலேயே தூக்கியெறிய  முற்படுவதையும் அறிந்து கொண்டாள். இனியும் மன்னனின் அங்கீகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருப்பதைவிடச் சொந்த ஊர் திரும்புவதே மேல் என்ற நினைத்தாள் ழான். மக்கள் தன் மீது கொண்டிருந்த அன்பும், நம்பிக்கையுமே தனக்குப் போதும் என்று முடிவுக்கு வந்த ழான், தன் சொந்த மண்ணிற்காவது ஒரு சலுகை பெற்றுத் தருவது தன் கடமை என்றெண்ணி, “தான் பிறந்த சிற்றூர் ஆகிய டாம்ரிமியில் வரி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று கேட்டாள். மன்னர் அறிவித்தார். "அவ்வாறே ஆகட்டும்”. 

“ஐயனே! என் வேண்டுகோள் மற்றொன்றையும் தாங்கள் நிறைவேற்றித் தரவேண்டும்” 
“நீ கேட்பது அளிக்கப்படும். கேட்பாயாக!”
“ஐயனே! நீங்கள் இங்கிருந்து படையோடு புறப்பட்டு பாரீஸ் நகரை அடையும்வரை நானும் உங்களுடன் வர அனுமதிக்கவேண்டும். பாரீஸ் கோட்டையில் நின்று நீங்கள் மக்களுக்கு உரையாற்றுவதை அருகிலிருந்து பார்த்துவிட்டு அத்துடன் நான் என் சொந்த ஊருக்குச் செல்வதற்கும் உத்தரவு தரவேண்டும்”
“நன்று ழான்! பார்கண்டி மன்னன், பாரிஸ் நகரை இன்னும் இரண்டு கிழமைக்குள் நம்மிடம் ஒப்படைக்கத் தூது அனுப்பியிருக்கிறான். ஆகவே நாம் ஒரு கிழமை காலந் தாழ்த்து புறப்பட்டால் பாரீசை அடைவது சரியாக இருக்கும். பாரீசுக்கு நீ என்னோடு வரலாம்!” “மிக்க நன்றி ஐயனே!” ழான் மன்னனிடம் இருந்து விடைபெற்று தன் இருப்பிடம் வந்தாள். 

அவள் மனம் நிறைந்திருந்தது. மன்னனைப் பாரிஸ் நகர் சேர்த்துவிட்டால் தன் பணி பூரணமடைந்துவிடும். பின் தான் கிராமத்திற்குச் சென்று வயல் வெளிகளில், ஓக் மரக் காடுகளில், மரங்களோடு சேர்ந்து விண்ணை அளாவி, நட்சத்திரங்களோடு  பேசியும், சண்டையும் போட்டுக் கொள்ளலாம். தனக்காகக் காத்திருக்கும் ஆடு, மாடுக் கூட்டங்களும், வண்ணத்துப் பூச்சிகளும், பறவைகளும், அவற்றின் அழைப்புகளும், ஆற்றின் சலன ஒலிகளும், தேவாலய மணி ஓசையும்.....  அப்பப்பா! நினைத்தாலே புல்லரித்தன ழானுக்கு. போர்க் கருவிகள் ஓசையும், புலம்பல்களும், அழுகைகளும் இனி இல்லை! இந்த நினைவே சுகமாயிருந்தது ழானுக்கு!

ஆனால் ழான் ஒன்று நினைக்க தேவன் வேறொன்று நினைத்தானோ என்னவோ, நடப்பவையெல்லாம் ழானுக்கு எதிராக மாறின. இரண்டு கிழமைகளுக்குள் பாரீசு நகரை ஒப்படைக்கச் சம்மதித்த பார்கண்டி மன்னன் மேலும் காலம் தாழ்த்தினான். இங்கிலாந்து மன்னர் பொறுப்பில் இருந்த பெட்போர்ட் பாரீசுக்கு விரைந்து வந்து கொண்டிருந்தான். வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எங்கும், எப்போதும் ஒரு துரோகி இருப்பதைப்போல் பிரான்சு மன்னன் சார்லசால் பாரீசு நகருக்கு நியமிக்கப்பட்ட பார்கண்டி மன்னன், இங்கிலாந்து படையோடு சேர்ந்து கொண்டு பாரீசை நோக்கி வரும் மன்னன் சார்லசையும், படைத்தலைவி ழானையும்  வீழ்த்தத் திட்டமிட்டிருப்பதையும், அதற்காக  இங்கிலாந்திலிருந்து பெரும்படையைத் திரட்டிக் கொண்டு பெட்போர்டு வந்து கொண்டிருப்பதையும், அதனாலேயே பாரீசை ஒப்படைப்பதில் பார்கண்டி மன்னன் தாமதப் படுத்திவருவதையும் ழான் அறிந்தாள். ஆனந்தமடைந்தாள்! போர் வெறி அல்ல ழானுக்கு! நயவஞ்சக நரிகளைப் போரில் வீழ்த்தி நல்லாட்சி நடத்தப்பட வேண்டும் என்பதற்காக கையில் வாள் ஏந்தியவள் தான் ழான்! அது தேவன் அருள் என்பது, ழானே தெரிவித்து, நாடறிந்த செய்தியாக இருந்தது. ஆனால் நயவஞ்சகம் என்பது எதிரிப்படைகளில் மட்டுமல்ல, தன் பக்கத்திலும் உண்டென்பதை அறிந்தபோது, அதையும் மன்னனே கண்டு கொள்ளாதபோது அது என்ன வகையான நியாயம் என்பதை ழான் அறியாதவளாய் இருந்தாள். இதைத்தான் அரசியல் என்று மன்னர் குறிப்பிட்டு, அதை அறியாதவளாய்த் தன்னை மதிப்பிட்டதையும் ழான் இப்போது எண்ணிப்பார்த்தாள். எனவே தான் அரசியலை அறிகிறோமோ இல்லையோ, எதையும் நேருக்கு நேர் சந்தித்து விடுவதென்று தனக்குத் தெரிந்த ஒரே பாதையில் செல்லத் துணிந்தாள் ழான்!

Joan of Arc7.jpg

Joan of Arc4.jpg

மன்னனுக்கு அந்தத் துணிவில்லை, அவர் அரசியல் அறிந்தவர். எனவே பாரிசை நோக்கிப் புறப்பட்ட மன்னர் சார்லசின் பாதையும், படைத் தலைவி ழானின் பாதையும் வேறு வேறாய் அமைந்தன. ழான், பாரீசை வென்றெடுக்கத் தன் படையுடன் பாரிசு நோக்கிச் செல்ல, மன்னனோ அதைவிடப் பெரும்படையுடன் லாயர் நகர் சென்று ஓய்வெடுப்பதிலும், உல்லாசம் காண்பதிலும் உற்சாகமாய் இருந்தான். ழானின் வயது பதினெட்டு. அரசியல் அறியாதவள். நேர்மையும், துணிவுமே அவளது பலம். இங்கிலாந்தின் பெரும்படையைப் பாரீசில் எதிர்க்கத் துணிந்தாள். இது பைத்தியக்காரத்தனம் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் பாரீசு நகர்ப் போரில், “பாரீசை இழந்தோம்” என்று ஆங்கிலேயர் கூக்குரலிடும் வரை. செய்தி கேட்ட பிரான்சு மன்னனே ஆடிப்போனான். ஆங்கிலேயரோ தங்கள் அழிவுக்குக் காரணமான ழானை சைத்தானாக உருமாற்றினார்கள்.

பாரீஸ் யுத்தம் மன்னரின் அனுமதியின்றி நடத்தப்பட்டதாகக் கூறி ழானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மன்னன் முன் மதகுருமார்களால் தொகுக்கப்பட்டன. இதனை ஏற்ற மன்னன் படைகளைத் திரும்பப்பெற்று ழானைத் தனிமையாக்கினான். இப்போது ழானுக்கு எதிரிகள் ஆங்கிலேயர் மட்டுமல்லர். பிரான்சு மன்னனுக்கு எதிராகச் சதி செய்தவர்கள் என்று தன் வாள் முனையில் வைத்து ழான் யார் யாரைச் சிறையில் தள்ளினாளோ, அவர்கள் இப்போது குற்றம் நிரூபிக்கப் படாதவர்களாக வெளியில் உலவினர். அவர்களில் மதகுருக்களும் இருந்தனர்.  ழானுக்கு எதிரான பிரெஞ்சியர்களும், ஆங்கிலேயர் சொன்ன சூனியக்காரி பட்டத்தினை ழானுக்குச் சூட்டி, அதைப் பரப்புவதில் ஆனந்தமடைந்தனர். ஒரு பக்கம் தீரமிக்க படைத்தலைவி என்று ழானுக்குப் புகழாரம். இன்னொரு பக்கம் சூனியக்காரி என்ற பட்டம். 

Joan of Arc10.jpg

ழான் தனிமைப் படுத்தப்பட்ட இச்சூழ்நிலையில் அவளைக் காட்டிக் கொடுப்பது எளிமையாகப் போய்விட்டது எதிரிகளுக்கு. காட்டிக் கொடுத்தது மட்டுமல்ல; அதற்காகக் கையூட்டும் பெற்றுக் கொண்டு தன்னை ஆங்கிலேயரிடம் அடிமையாக விற்றுவிட்டதை எண்ணி மிகவும் மனம் வருந்தினாள் ழான். ஓர் ஆண்மகன் இப்படி வீரத்தை வெளிப்படுத்தினாலும் கூட, புகழின் உச்சியில், அவனும் சூழ்ச்சியினால் வீழ்த்தப்படுவான். வீரமும், வெற்றியும் கைவசமானால் மட்டும் போதாது. சூழ்ச்சியில் வல்ல நரிகளையும் புறங்காணும் விவேகம் வேண்டும். அதுதான் அரசியல். அது தன்னிடம் சிறிதும் இல்லை. போதாக் குறைக்குப் பெண்ணல்லவா? ஆண்டாண்டுக் காலமாக அடிமை இனமல்லவா? மதங்களும் விரட்டிடும் பிறவியல்லவா? வெற்றியைக் காணிக்கை ஆக்கிக் கடவுள் பெயரால் முடிசூட்டி வைத்தும் மன்னன் மனமிளகவில்லை. தேடாதபோதெல்லாம் வந்த தேவனும் அவன் குரலும் தேடியும் கிடைக்கவில்லை. 

Joan of Arc14.jpg

அடிமைக்குத் தீர்ப்பெழுதும் நாள் வந்தது. இந்தத் தீர்ப்பை எதிரிகள் எழுதுவதைவிடத் துரோகிகள் எழுதினால் சுவைப்பட இருக்குமென்று ஆங்கிலேயர் நினைத்துப் பாரீசின் நீதி சபையில் பிரெஞ்சு மதகுருமார்களின் முடிவுக்கே விட்டுவிட்டனர். முன்பு ழான் ஒவ்வொரு நகரமாகக் கைப்பற்றிய போது இராஜத் துரோகக் குற்றம் இழைத்ததாக தன்னால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருவானவர்தாம் இங்கே பாரீசு நீதிசபையின் பரிபாலனர் என்று  அறிய வந்தபோது ழானுக்கு  எல்லாமே விளங்கிவிட்டது. தன்னைத் தேவனும் கைவிட்டு விட்டான் என்பதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியவளாக இருந்தாள் ழான். இனி என்னதான் செய்ய முடியும்? வருவதை எதிர்கொள்ள வேண்டியதுதான்.

ஓர் அடிமை ஆணாக இருந்தால் எத்தகைய சித்திரவதை! அதே அடிமை, பெண்ணாக இருந்தால் எத்தகைய சீரழிப்பு!  இரண்டும்  கேள்விப் பட்டவளாக  ழான் இருந்தாலும்  சூனியக்காரியைத் தொடக்கூட எல்லோரும் பயந்தனர். தனக்குப் பொருத்தமில்லாத ஒரு பட்டம் இப்போது தன் கண்ணியத்தைக் காப்பது கண்டு காய்ந்த உதட்டிலும் ஒரு மென்னகை அரும்பியது ழானுக்கு.

தீர்ப்பு நாளில் மதகுருமார்கள் கேள்விகள் கேட்டே அவளை அயர வைத்தனர். எல்லாவற்றிற்கும் தேவன் கட்டளை என்பதே ழானின் பதிலானது. “எங்கே! இப்போது கட்டளையிடச் சொல்” என்றார்கள். அதை மதகுருமார்களே வேண்டினாலும், தேவன் வரமாட்டான் என்ற நினைப்பு ழானுக்கு இலேசான சிரிப்பை வரவழைத்தது. "என்ன ஆணவம் இவளுக்கு. தேவன் பேரைச் சொல்லித் தந்திரமாகத் தப்பிக்கப் பார்க்கிறாள். தேவன் சொன்னதாக இவள் மன்னனிடம் பொய் கூறி அவரை மயங்க வைத்து விட்டாள். இவள் ஆணுடை தரித்ததும், படைத்தலைமை ஏற்றதும், போர்க்களம் சென்றதும் மன்னிக்க முடியாத குற்றங்கள். போரில் இவள் கண்ட வெற்றியெல்லாம் இவளது மந்திர வித்தையே! ஆகவே இவள் சூனியக்காரி என்பதில் சந்தேகமில்லை” என்று கூறிய நீதிச்சபையின் தலைமை மதகுரு,  “ழான்! இதை ஒப்புக் கொள்கிறாயா?” என்றார்.

சபையில் பேரமைதி நிலவியது. ழான் அனைவரையும் ஏறிட்டாள். “இல்லை” என்பதாகத் தலையசைத்து விட்டு மெல்லச் சொன்னாள்.  “என் செயல்கள் தேவனின் கட்டளை. தேவன் என் உணர்வானவன். என்னை உள்ளிருந்து இயக்கியவன். தேவனின் சமூகமே என் சமூகம்” என்றாள். அவ்வளவுதான். பேராரவாரம் கிளம்பியது. இவள் தன்னை தேவனுக்கு நிகராகப் பேசினாள். இவளைத் தேவனது சமூகம் என்று கூறிக் கொள்கிறாள். இவளுக்கு மிகப் பெரும் தண்டனை கொடுங்கள் என்று சிலரும், பலருமாகக் குரல் கொடுக்க, வெற்றிப் புன்னகையுடன் தன் துரோக நட்புகளை நோக்கினார் தலைமைக்குரு.

“மேற்கூறிய குற்றங்களுக்காக ழான் உயிரோடு கொளுத்தப்படுவாள்” தீர்ப்பை முடித்தார் தலைமைக் குரு. பெரும்பாலான மதங்களில் ‘தீர்ப்பு நாள்’ என்று குறிப்பிடப்படுகிறது. அவையெல்லாம் மனித இனம் இவ்வுலகில் நன்மையைச் செய்தால் அவ்வுலகில் சுகம் பெறும்  என்றே சொல்கின்றன. கடவுள்களுக்கும் தீர்ப்பு எழுதப்பட்ட கதைகள் உண்டு. ஆனால் எந்தக் கடவுளும் தீர்ப்பு  வழங்கியதாகத் தெரியவில்லை. ழானும் அப்படித்தான் நம்பினாள். அவளுக்கு விதிக்கப்பட்டது கடவுளின் தீர்ப்பல்ல என்று உறுதியாக நம்பினாள். ஆனால் கடவுளின் பேரால் வந்த தீர்ப்பாயிற்றே! சிரமேல் வைத்து நிறைவேற்ற வேண்டுமல்லவா?

Joan of Arc3.jpg

ழான் ஒரு பெரிய மரக்கட்டையின் அடியில் கட்டப்பட்டிருந்தாள். அந்தப் பட்டமரம் ஊருக்கு மத்தியில் ஒரு மேடான பகுதியில் நாட்டப்பட்டிருந்தது. அவளைச்சுற்றிலும் மரக்கட்டைகளைக் குவித்துக் கொண்டிருந்தனர் மதகுருமார்களின் ஊழியர்கள். சுற்றிலும் மக்கள் குவிந்து கொண்டிருந்தனர். ‘பிரான்சைக் காப்பாற்ற ஓக் மரக் காட்டிலிருந்து வந்த தேவதை’ என்று ஒரு சிலர் கைகுவித்துச் சொன்னார்கள். ‘மாய மந்திரம் நிறைந்த சூனியக்காரி’ என்று ஒரு சிலர் கைகாட்டிக் கூவினர். தீப்பந்தங்கள் நெருங்கி வந்தன. “இனி எதுவும் நிகழப் போவதில்லை. மக்களால் ஒன்றும் செய்ய இயலாது. மன்னனும், தேவனும் செய்யமாட்டார்கள். தேவனே மூன்று நாட்களாகச் சிலுவையில் தொங்கினாரே! நினைவு வந்த போதெல்லாம் ஒவ்வொரு முத்து உதிர்த்தாரே! ‘அறியாமல் இவர்கள் செய்யும் பிழையை மன்னிப்பீராக!” என்று ஒருமுறை கூறினாரே! அவர் என்மீது வைத்த கருணையினால்தான் நான் எதிரிகளை வென்றேன் என்று கூறினேனே! பெண்ணாக இருந்தாலும், கண்ணானது நாடு என்று கருதினேனே! என் வெற்றியை தேவன் வெற்றியாக ஆக்கினேனே! வெற்றியை மட்டும் எடுத்துக்கொண்டு என்னையும் தேவனையும் விட்டு விட்டார்களே! எதிரிகளை வெல்வதில் ஆண் என்ன பெண் என்ன! அரசியல் பிழையாத போதும் ஆண்டவனைத் தவிர்த்து வேறேதும் விழையாத போதும் பெண்ணானது ஒன்றே பிழையோ!” “இல்லை! நீ ஒரு தேவதையானாய்!” தேகம் எங்கும் பரவிய தீக்கங்குகளின் வெம்மையிலும், ‘இது யார் குரல்?’ என்று நினைக்கும் போதில்  ழானின் மண்டை ஓடு தெறித்தது.  ‘ஆ’ என்று மக்களிடம் இருந்து பெருங்குரல் எழும்பியது.

பிரான்சைக் காக்க வந்த தேவதையாக ழான்தார்க் இன்று பிரான்சு நாடெங்கிலும் தேவாலயங்களின் முன்வைத்து வணங்கப்படுகிறாள்! (ழான்தார்க் - ழான் - தெ - ஆர்க் - 1412 -1431 பிரான்சைக் காக்கப் போரிட்டு, ஆங்கிலேயரை வென்ற நிலையில், தன் பத்தொன்பதாவது வயதில் சூனியக்காரி என்று இகழப்பட்டு, நாற்சந்தியில் உயிரோடு தீயிடப்பட்ட பிரான்சு நாட்டு மங்கை. நாட்டைக் காக்க வந்த தேவதையாக இன்று பிரான்சில்  தேவாலயங்களுக்கு முன்பாக சிலையமைத்துப் புனிதராகப் போற்றப்படுபவர். 


குறிப்பு: 
புதுச்சேரி பிரெஞ்சிந்தியாவாக இருந்தபோது இங்குள்ள தேவாலயம் முன்பும் ழாந்தார்க் சிலை கொடியுடன் நிறுவப்பட்டது. மறைமலை அடிகளாரின் மகள் திருமதி தி. நீலாம்பிகையம்மையார், 1933-ம் ஆண்டு எழுதிய, கழகம் பதிப்பித்த, ‘ஐரோப்பிய அருண்மாதர் இருவர்’ என்ற நூலில் ழானின் வரலாற்றுக் குறிப்புகளைத் தரவாகக் கொண்டு இந்நெடுங்கதை இயற்றப்பட்டது.

படங்கள் உதவி - முனைவர் க. சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு. 

”உலக வரலாற்றில், ஆணுடை தரித்துப்  போர் புரிந்தமைக்காக உயிருடன் எரிக்கப்பட்ட இளநங்கை, பிரான்சின் ழான்தார்க்”

முனைவர் சிவ இளங்கோ
6, கவிஞர் புதுவைச் சிவம் வீதி,
வெங்கட்டா நகர், 
புதுச்சேரி - 605 011
கைப்பேசி: 99940 78907




No comments:

Post a Comment