Monday, June 28, 2021

கரந்தைப் புலவர் கல்லூரி



-- கரந்தை ஜெயக்குமார் 


திருக்குறளும் கம்பராமாயணமும் மதுரையில் ஒருவரிடத்தும் இல்லாத நிலை கண்டு கலங்கிய இராமநாதபுரத்து அரசர், வள்ளல் பாண்டித்துரைத் தேவரால், 1901 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது மதுரைத் தமிழ்ச் சங்கமாகும்.  மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் அடியொற்றி, 1911 ஆம் ஆண்டு கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்துள்ள, கந்தப்பச்  செட்டியார் மடத்தில் தோற்றம் பெற்றது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
     
 ∙ 1913 ஆம் ஆண்டிலேயே, நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் தமிழ்த் தாய் வாழ்த்தாக அறிமுகம் செய்தது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1919 ஆம் ஆண்டிலேயே, தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி எனத் தீர்மானம் இயற்றியது, கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1921 ஆம் ஆண்டிலேயே, தமிழுக்குத் தேவை, தனியே ஒரு, தமிழ்ப் பல்கலைக் கழகம் எனத் தீர்மானம் நிறைவேற்றியதும் போராடியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1923 ஆம் ஆண்டிலேயே, ஆங்கிலேய அரசின், ஐ.சி.எஸ்., பட்டத்திற்குத் தமிழையும் ஒரு பாடமாக ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.
 ∙ 1937 ஆம் ஆண்டில், பள்ளிகளில் நுழைந்த, கட்டாய இந்தியை எதிர்த்து, முதன் முதலில் தீர்மானம் இயற்றியதும், களத்தில் இறங்கிப் போராடியதும், கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.

தமிழும், வடமொழியும் கலந்து பேசும் மணிப்பிரவாள நடையைத் தகர்த்து, தனித் தமிழ் நடையாம், கரந்தை நடையை உருவாக்கியதும், நடைமுறைப் படுத்தியதும் கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும். திரு, திருவாளர், செல்வன், செல்வி, தலைவர், செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள், திருமண அழைப்பிதழ் முதலான எண்ணற்ற தனித் தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியது கரந்தைத் தமிழ்ச் சங்கமாகும்.  இவ்வாறு தன் எண்ணற்ற தமிழ்ப் பணிகளால், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும்,  தனித் தமிழின் செழிப்பிற்காகவும், அரும் பெரும் பணிகளை முன்னெடுத்து, வெற்றி வாகை சூடிய போதிலும், நிற்க ஓர் இடம் இன்றி, வாடகை கட்டடத்திலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் காலத்தைக் கழித்தது.
    
இடம் வாங்குதல்:
கரந்தைத் தமிழ்ச் சங்கமானது, தோன்றிய நாள் தொடங்கி, நான்கு ஆண்டுகள் வரை, கந்தப்பச் செட்டியார் சத்திரத்தில் இயங்கியது. விழாக் காலங்களிலும், திருமண நாட்களிலும், கந்தப்பச் செட்டியார் சத்திரம் வாடகைக்கு விடப்படும்.  இதுபோன்ற நாட்களில், சங்கப் பணிகளைச் செய்வது இயலாத காரியம் ஆகிவிடும்.  பின்னர், 1914 ஆம் ஆண்டில், உமாமகேசுவரனார் அவர்களின் முயற்சியின் பயனாக, கரந்தை கோவிந்தராஜுலு நாயுடு மற்றும் சுப்பராயலு நாயுடு ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, தர்மாபுரம் உதவி ஆட்சியாளர், வேங்கடசாமி நாயுடு அவர்கள், கரந்தைக் கடைத் தெருவில் அமைந்திருந்த, காலஞ்சென்ற வாசுதேவ நாயக்கருக்குச் சொந்தமான சத்திரத்தை, ஆறு ஆண்டுகள், வாடகை ஏதுமின்றி, பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினார்.  இருப்பினும் சங்கத்திற்கு என்று சொந்தமான இடம் இல்லாத நிலை, உமாமகேசுவரனாரை வருத்தியது.

அமிழ்தினும் இனிய தமிழ் அன்னைக்கு, வடவேங்கடம் முதல் தென்குமரி இடைப்பட்ட இடங்கள் யாவும் உரியனவாக இருந்தும், கரந்தையம் பதியில் தமிழன்னைக்கு இல்லம் எடுக்க, ஓர் அடி நிலம் கூட சொந்தமாய் இல்லாத நிலையினை எண்ணிய உமாமகேசுவரனார் பெருங் கவலை அடைந்தார். உமாமகேசுவரனாரின் மனக்குறையினைப் போக்க எண்ணிய, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு இடம் வாங்குவதற்காக ஒரு பெருந் தொகையினை அன்பளிப்பாக வழங்க முன்வந்தார்.  சங்கத்திற்கு இடம் வாங்கும் பொருட்டு, வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், 1923ஆம் ஆண்டின் மத்தியில், உமாமகேசுவரனாரை அழைத்துக் கொண்டு, தஞ்சையில் பல இடங்களையும் சுற்றிப் பார்த்தார். இறுதியில் கரந்தை வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, ஒரு பெரும் இடத்தினை வாங்குவதென்று முடிவு செய்தனர்.  அவ்விடம் கரந்தை பாவா மடத்திற்குச் சொந்தமானதாகும். 

பாவா மடத்தினரிடமிருந்து, இவ்விடத்தினை நேரடியாக வாங்குவதற்கு உரிய பொருளில்லாத காரணத்தாலும், மேலும் மடத்திற்குச் சொந்தமான இடத்தினை விலைக்கு வாங்குவதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களையும் மனதில் நிறுத்தி ஆராய்ந்தார் உமாமகேசுவரனார்.  மாபெரும் தமிழ்ப் பணியாற்றிவரும் கரந்தைத் தமிழ்ச் சங்கம், காலூன்ற இடமின்றியும், இடம் வாங்கப் பொருளின்றியும் தவிக்கின்றது. எனவே ஆட்சியாளர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு இடம் வழங்கி உதவிட வேண்டும் என்று, அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.  வேண்டுகோள் பலித்தது. 

சென்னை மாகாண சட்டத்துறை செயலாளர் திவான் பகதூர் ராமச்சந்திர ராவ் அவர்களின் உத்தரவிற்கு இணங்க, கரந்தையில் வடவாற்றின் வடகரையில் அமைந்திருந்த, பாவா மடத்திற்குச் சொந்தமான இடம், 1894 ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி அரசால் கையகப்படுத்தப்பட்டது.  இவ்விடத்தினை சங்கத்திற்கு வாங்கும் பொருட்டு வள்ளல் பெத்தாச்சி செட்டியார் அவர்கள், சங்கத்திற்கு ரூ.1000த்தினை அன்பளிப்பாக வழங்கினார்.  மேலும் அன்றைய தினம் வரை சங்கத்தால் சேமிக்கப்பட்ட தொகை முழுவதும், இந்நிதியுடன் சேர்க்கப்பட்டு, அரசாங்கத்தினரிடம் வழங்கப்பட்டது.  அன்றைய ஆங்கிலேய அரசினர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்ட தொகை ரூ.1,807 மற்றும் 5 அணா மட்டுமே.   அவ்விடத்திற்கான மீதமுள்ள இழப்பீட்டுத் தொகையினை  அரசாங்கமே, பாவா மடத்திற்கு வழங்கியது.  இவ்வாறாக, பெத்தாச்சி செட்டியார் அவர்களின் வள்ளல் தன்மையாலும், பல அறிஞர்களின் உதவியுடனும், ஆங்கிலேய அரசாங்கத்தின் மாபெரும் உதவியோடும், ஆதரவோடும், 44,662 சதுர அடி நிலமானது, 1924ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொந்தமானது.

1931 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 14 ஆம் நாள், கரந்தை வடவாற்றிற்குத் தெற்கேயும், பழைய திருவையாறு சாலைக்கு கிழக்கேயும் உள்ள, 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய வெற்றிடத்தை ரு.3,400க்கு உமாமகேசுவரனார் விலைக்கு வாங்கினார்.   இவ்விடத்தின் ஒரு பகுதியை, மாணவர்களுக்கு உரிய விளையாட்டிடமாக மாற்றினார்.மீதம் இருந்த, பெரும் பகுதியைத் தோட்டமாக உருவாக்கினார்.  திக்கற்ற மாணவர் இல்லத்தில், தங்கிப் பயிலும் மாணவர்களுக்கான காய், கனிகள் இவ்விடத்தே பயிர் செய்யப்பட்டன.

கரந்தைப் புலவர் கல்லூரி:
தமிழ் வளர்ச்சிப் பணிகளையும், கல்வி வளர்ச்சிப் பணிகளையும் தனது இரு கண்களெனக் கருதிய கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 1916 ஆம் ஆண்டு கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியானது தொடங்கப் பெற்றது. தமிழோடு கைத் தொழில்களையும் கற்றுக் கொடுக்கும்படியான கலாசாலைகளை ஏற்படுத்துதலே பயன் விளைவிக்கும் என்று தமிழவேள் உமாமகேசுவரனார் எண்ணினார்.  இக்கல்லூரியில் பயின்று வெளிவரும் மாணவர்கள், அரசு வேலை வாய்ப்புகளை மட்டுமே நம்பியிராமல், சொந்தமாகத் தொழில் செய்து நாட்டை வளமாக்க வேண்டும் என்பதே உமாமகேசுவரனாரின் விருப்பமாகும்.   எனவே எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கப்பட்ட, இக்கல்லூரியில், நெசவு, நூல் நூற்றல், பாய் முடைதல், மரவேலைகள், நூற் கட்டு, அச்சுத் தொழில் முதலியனவும் கற்றுத் தரப்பெற்றன. கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியில் பயின்று, மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்காக, ஒரு தனித் தமிழ்க் கல்லூரியினை நிறுவிட உமாமகேசுவரனார் விரும்பினார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பெற்ற நாள் தொடங்கி, சங்கத்தை அண்டாது, அணுகாது விலகியிருந்தது செல்வம் மட்டுமே.  போதிய நிதி வசதியின்மையால், உமாமகேசுவரனாரின் கல்லூரிக் கனவானது, ஆண்டுகள் பல உருண்டோடியும் கானல் நீராகவே நீடித்தது.  சற்றும் அயராத உமாமகேசுவரனாரின் தொடர் முயற்சிகளின் விளைவாக, 1938 ஆம் ஆண்டு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் போது தனித் தமிழ்க் கல்லூரி ஒன்றினை, கரந்தைப் புலவர் கல்லூரி என்னும் பெயரில் தொடங்குவது என்று தீர்மானிக்கப் பட்டது.  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழா, 1936 ஆம் ஆண்டே நடைபெற்றிருக்க வேண்டும்.  ஆனாலும் விழா நடத்துவதற்குரிய போதிய நிதி இல்லாத காரணத்தால், சிறுகச் சிறுகப் போதுமான பொருள் சேர்த்து, இரண்டாண்டுகள் கடந்த நிலையில் 1938 ஆம் ஆண்டுதான் கொண்டாடப் பெற்றது.

தொடங்க இருக்கும், கரந்தைப் புலவர் கல்லூரியில் பணியாற்றத் தகுந்தப் பெரும் புலமை படைத்த ஆசிரியர்கள் பலர், தஞ்சையில் இருந்த  போதிலும், தக்க இளைஞர் ஒருவரையே, இக்கல்லூரியில் பணியமர்த்த எண்ணினார் உமாமகேசுவரனார்.  தனது உற்ற நண்பரான, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறைப் பேராசிரியர் நாவலர் டாக்டர் ச.சோமசுந்தர பாரதியார் அவர்களை அணுகி, தங்கள் மாணவருள் தலைசிறந்த மாணவர் ஒருவரை, கரந்தைக்கு அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். நாவலரும்  தன் மாணவர்களுள் தக்காரைத் தேர்வு செய்து, கரந்தைக்குச் சென்று பணியாற்ற அறிவுறுத்தி அனுப்பினார். அம்மாணவர், 1938 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் ஓர் நாள், விடியற்காலை 5.00 மணியளவில், சங்கத் தலைவர் அவர்களை, அவர்தம் இல்லத்தில் சந்தித்தார்.

உமாமகேசுவரனார் அவர்கள், தூய வெண்ணீரு துதைந்த பொன்மேனியராய், இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட் பாவை உளமுருகிப் பாடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டு மெய்மறந்து நின்றார். சற்று நேரத்தில், புதிய இளைஞர் ஒருவர் தன்முன் நிற்பதைக் கண்ட உமாமகேசுவரனார், முகம் மலர வரவேற்றார். அந்த இளைஞர், சோமசுந்தர பாரதியார் கொடுத்தனுப்பியக் கடிதத்தைக் கொடுத்தார். கடிதத்தினைப் படித்து மகிழ்ந்த உமாமகேசுவரனார், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின்போது, தொடங்க இருக்கும் கல்லூரிக்கு, நீங்களே ஆசிரியர். தங்களுக்கு நிறைந்த ஊதியம் கொடுக்கும் நிலையில், சங்கத்தில் பொருள் இல்லை. எனவே இயன்ற அளவு ஊதியம் கொடுப்போம். கல்லூரி வளர, வளர, உங்களுக்கும் வளர்ச்சி உண்டாகும். தற்பொழுது வெள்ளிவிழா மலரின் அச்சுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தாங்கள் பொறுப்பாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அடுத்து, தனது சிற்றன்னையை நோக்கி, இவர்கள் எப்பொழுது வந்தாலும், தாமதமின்றி உணவு படைத்து, சங்கத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்றார். இவ்வாறு, இப்புது இளைஞரையும், தன் குடும்பத்துள் ஒருவராய் தமிழவேள் இணைத்துக் கொண்டார். இந்த இளைஞர்தான்,  கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் ஆசிரியர்.  இவர்தான்,  இலக்கிய, இலக்கண நூல்கள் பலவற்றைப் படைத்து, பின்னாளில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராய் அமர்ந்து செம்மாந்தப் பணியாற்றிய பேராசிரியர் க.வெள்ளைவாரணனார் .
     
கரந்தைப் புலவர் கல்லூரியின் வளர்ச்சி: 
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவானது, 1938 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.  வெள்ளி விழாவின் இரண்டாம் நாளான 16.4.1938 சனிக் கிழமை காலை 8.00 மணிக்கு தமிழ்ப் பெருமன்றத்தில் கடவுள் வணக்கமும், தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பெற்ற பின் கரந்தைப் புலவர் கல்லூரியின் தொடக்க விழா நிகழ்வுகள் தொடங்கின.  விழாத் தலைவர் திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகள் அவர்கள், தம் பொருளுரைகளை, அழகுமிகத் திரட்டி கல்லூரியினைத் திறந்து அருளினார்கள்.   அப்போது நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள்,
             நன்மா  ணவராகும் வண்டர்  நனிபயின்று
             பன்மாண்  கலைத்தேன்  பருகுமா  -  மன்மாண்
             கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரிப்  பூங்கா
             பரந்தொளிர்ந்து  வாழியரிப்  பார்
எனப் பாடி வாழ்த்தினார்.  கல்லூரிக் கட்டிடத்தில் அலங்கரிக்கப் பெற்று வைக்கப்பெற்றிருந்த, தமிழ் நாட்டுக் கடவுள் முருகன் திருவுருவத்திற்கு வழிபாடு செய்யப் பெற்றது. 

தொடர்ந்து ஞானியாரடிகளும் மற்றவர்களும் வகுப்பறைக்குச் சென்றனர்.  நாதமுனி என்னும் பெயருடைய மாணவர் உட்பட, பத்தொன்பது மாணவர்களுடன் புதிய கல்லூரியின் முதல் வகுப்பானது தொடங்கப் பெற்றது. ஞானியார் அடிகள் அவர்கள், வித்துவான் வெள்ளைவாரணன் அவர்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, தமிழ் கற்பிக்கத் தொடங்குமாறு வேண்டினார்.  வெள்ளைவாரணன் அவர்களும், திருக்குறளின் தலைக்குறளாகிய அகர முதல என்னும் அருமைத் திருக்குறளைக் கற்பித்தார்.  அவரைத் தொடர்ந்து ஞானியாரடிகள் அவர்கள் புதிதாக தொடங்கப் பெற்றுள்ள கல்லூரியை வாழ்த்தி, அகரமுதல எனத் தொடங்கும் திருக்குறளின் பருப் பொருளும், நுண் பொருளும் இனிது விளக்கினார்.

தமிழ் வளர்ச்சிக்காகப் பெருந்தொண்டு புரிந்து வரும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களைக் கண்டு மகிழ்வடைந்த பலரும், கல்லூரியானது தழைத்து வளர, நன்கொடைகளை வழங்கினர்.  திருச்சிராப்பள்ளி திருவாளர் தி.ச. பொன்னுசாமி பிள்ளை என்பார், தாம் நடத்தி வருகின்ற அறக்கட்டளையின் வருவாயினை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் தரும சாசனம் எழுதி வழங்க விரும்புவதாக,  விழா மேடையிலேயே அறிவித்தார். மாணவர்களுக்கு இலவசக் கல்வி, இலவச விடுதி வசதி, இலவச உணவு வசதிகளும் ஏற்பாடு செய்து தரப்பெற்றன.  கரந்தைத் தமிழ்ச் சங்கச் செந்தமிழ்க் கைத் தொழில் கல்லூரியின் தலைமையாசிரியரான திரு சிவ. குப்புசாமி பிள்ளை அவர்கள், கரந்தைப் புலவர் கல்லூரியின் மேற்பார்வையாளர் பணியினை ஏற்று, தமிழ் பயிலும் மாணவர்களின் மேம்பாட்டிற்கு அயராது பாடுபட்டார்.

தமிழவேள் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, குடந்தை பாணாதுறை உயர் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தொண்டு செய்து வந்தவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பகுதியில் வரலாற்றுத் துறையில் பல ஆண்டுகள் தொண்டு செய்து ஓய்வு பெற்றவரும், தமிழ் நாட்டின் தலைசிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளருமாகிய திரு சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள், சனிக் கிழமைகள் தோறும், தனது சொந்தச் செலவிலேயே, கரந்தைக்கு வருகை தந்து, கல்வெட்டு பற்றிய விளக்கங்களை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்.  தமிழவேளும் தனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டாக்டர் கால்டுவெல் என்னும் மேல்நாட்டு அறிஞரால் எழுதப் பெற்ற, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் அரிய பெரிய ஆங்கில நூலை, மாணவர்களுக்கு மொழிபெயர்த்து தக்க விளக்கங்களோடு போதித்து வந்தார்.

கல்லூரி ஒன்றை நடத்துவது என்றால் போதிய பொருள் வருவாய் வேண்டுமல்லவா?  சங்கத்தை நடத்துவதற்கே போதிய பொருள் இல்லாதபோது, கல்லூரியினை நடத்துவது எவ்வாறு இயலும்?  ஆனாலும் தொடங்கிய பணியினை இடையிலேயே நிறுத்தி விடுவது இழுக்காகிவிடுமல்லவா?  எனவே மனம் தளராத உமாமகேசுவரனார் தமிழ்ப் பெருமக்களுக்குக் கீழ்க்கண்ட ஒரு வேண்டுகோளினை விடுத்தார்:
கரந்தைத் தமிழ்ச் சங்கம் இப்போது தமிழ்நாடு முற்றுமே மதிக்கத்தகும் அரும்பணியை மேற்கொண்டிருக்கிறது.  கரந்தைத் தமிழ்க் கல்லூரி, முதல் வகுப்புடன் அரும்பியிருக்கின்றது.  மேலும் நான்கு வகுப்புகள் நாளடைவில் தோன்றி முற்றுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறன.  இதன் இன்றியமையாத அங்கங்களாகிய இசை, ஓவியம், மருத்துவம், சிற்பம் போன்ற தொழிற் கலைகளும் ஈண்டு முகிழ்த்துப் பிஞ்சு, காய் கனிகளாகி நற்பயன் நல்க வேண்டும்.  இவ்வெண்ணங்கள் சிறு அளவிலாவது உருப்பெற வேண்டுமானால் நூறு மாணவர்களுக்காவது, உண்டியும், உறையுளும் தருதற்கான மாணவர் இல்லமும், பத்து ஆசிரியர்களாகினும் பணி செய்தற்குரிய வசதிகளும் அமைக்கப்பட வேண்டும்.  ஆண்டு தோறும் ரூபாய் ஐயாயிரத்திற்குக் குறையாத வருவாய் தட்டில்லாது வந்து கொண்டே இருத்தல் வேண்டும்.  இதுபோது தொடங்கியிருக்கும் முதல் வகுப்பில் பத்தொன்பது மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். 

திருச்சி, நெல்லை, கோவை, வட தென் ஆற்காடுகள், ஆய பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர் ஒன்பதின்மர். யாழ்ப்பாணத்து மாணவர் ஒருவர் வருவாரென்று எதிர்பார்க்கப் படுகிறது. மலேயா நாட்டிலிருந்தும் விண்ணப்பம் வந்துள்ளது.  இவர்களின் பன்னிரு மாணவர்கள் சங்கத்தார் அமைத்திருக்கும் இல்லத்தே இருந்தும், ஏனையோர் வெளியே இருந்தும் கல்வி பயின்று வருகின்றனர்.   இதனை உய்த்து நோக்குவோர், இக்கல்லூரி தமிழ் நாட்டிற்கு உரியதெனவும், இதனைப் பேணி வளர்த்தல், தத்தம் கடமை எனவும் தமிழன்பர்கள் கருதுவர் என்று எண்ணுகிறோம்.  தமிழ்ப் புலமையும், தொழிற் கலையும் ஒருங்கே பயிற்றப்படும் கல்வி முறை சாலச்சிறந்த நன்முயற்சியாகும்.  இம்முயற்சி உரம் பெறுவதற்கு, இலக்கிய இலக்கண நூல்களேயன்றிக் கலை நூல்களையும் எளிய விலைக்கு வெளியிடுதல் வேண்டும்.  இத்தகைய பொறுப்புள்ள வேலைகளை மேற்கொள்ளவும், செவ்வனம் இயற்றவும் அறிவாளிகள், செல்வர்கள், அன்பர்கள் ஆகிய அனைவரின் துணையும் இன்றியமையாது வேண்டப்படுகிறது.

இவ்வேண்டுகோள் விரும்பியவாறு பலனளிக்கவில்லை. ஆயினும் கல்லூரி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதானிருந்தது.   கல்லூரியானது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தபோது, மேலும் ஓர் ஆசிரியர் நியமனம் செய்யப் பட்டார்.  சங்கத்தின் புகழ்பாடும் நல்ல கவிஞராகவும், தமிழையும் தமிழ் நாட்டு அரசியலையும் அறியாது சோம்பிக் கிடந்த தமிழ் மக்களிடையே, உணர்ச்சி ஊற்றெடுக்கச் செய்யும் வகையில் சொற்பொழிவாற்றும் நாவன்மை உடையவருமாகிய, திரு கோ.வி. பெரியசாமிப் புலவர் அவர்கள் இரண்டாவது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார்.

பேரிடியாய் விழுந்த தடை:
1940-41 ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின் மூன்றாமாண்டில் கல்லூரியானது காலடி எடுத்து வைப்பதற்குள், பேரிடியாய் தடை என்னும் உத்தரவு ஒன்று சென்னைப் பல்கலைக் கழகத்தால் பிறப்பிக்கப் பெற்றது. கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைக்க முடியாது என்று சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்து விட்டார்.  காரணம். ரூபாய் ஐம்பதாயிரம் தொகையினை இணைப்புக் கட்டணமாய் செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ரூபாய் ஐம்பதாயிரம் பொறுமானமுள்ள சொத்துக்களுக்கு உரிய பத்திரங்களைப் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும்.  கரந்தைத் தமிழ்ச் சங்கமோ, இரண்டில் எதையுமே நிறைவேற்றும் நிலையில் இல்லை. 

கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு என்று 1924 ஆம் ஆண்டு வாங்கப்பெற்ற 44,662 அடி நிலத்தின் மதிப்பு ரூ.1,807.   1931 ஆம் ஆண்டு வாங்கப் பெற்ற 14 ஏக்கர் நிலத்தின் மதிப்பு ரூ.3,400.  இரண்டையும் சேர்த்தாலும், இடைப்பட்ட காலத்தில், நிலத்தின் மதிப்பு எவ்வளவுதான் உயர்ந்திருந்தாலும், மொத்த நிலத்தின் மதிப்பும் ரூ.10,000 ஐத் தாண்டாது என்ற நிலை.   ஒரு வருடம் கல்லூரியினை நடத்துவதற்கான, ரூபாய் ஐயாயிரத்திற்கே வழி இல்லாதபோது, ரூபாய் ஐம்பதாயிரத்திற்குச் சங்கம் எங்கே போகும்? எனவே கரந்தைப் புலவர் கல்லூரியை சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பதோ, அங்கீகாரம் வழங்குவதோ முடியாது. கல்லூரியினை உடனே மூடுங்கள் என்று சென்னைப் பல்கலைக் கழகம் உறுதியாய் அறிவித்தது.  கரந்தைப் புலவர் கல்லூரி மூடப்பட்டது.   கல்லூரியில் பயின்ற மாணவர்கள் திசைக்கொருவராய் சென்றனர்.  அகப்பட்ட தொழிலில் அமர்ந்தனர் பலர்.  சிலர் வெள்ளத்தில் அகப்பட்டவன் துரும்பைப் பிடித்துக் கரையேறுதல் போல, தனியே கல்லூரியும், ஆசிரியரும் இல்லாவிட்டாலும், தனிமையில் பயின்று தமிழ்க் கலைகளில் அறிஞராயினர்.  சிலர் வேலையின்றித் தவித்தனர். எடுத்த செயலினை, எப்பாடுபட்டாவது செய்து முடிக்கும் திறன் வாய்ந்த உமாமகேசுவரனார் மட்டும் உள்ளம் தளர்ந்தாரில்லை. 

தமிழ்ப் பெருமக்களை நோக்கி, கரந்தைப் புலவர் கல்லூரிக்குப் போதிய முதற்பொருள் இன்மையால், சென்னைப் பல்கலைக் கழகத்தார் ஒப்ப மறுக்கின்றனர்.  தமிழ் நாட்டின் எல்லைக்குள் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளின் வளர்ச்சியைக் கருதி உழைக்கும் கலைக் கூடங்கள் எத்தனை?  அவற்றிற்காகப் பணி செய்து செழுமையுடன் தருக்குற்று வாழும் கணக்கானர் எத்துணையர்?   இந்நிலையில் தமிழ் மொழி ஒதுக்கிடம் பெறுவதும், தமிழ்ப் புலவர்கள் வீணர்கட்கு எளியராய் அஞ்சி வாழ்வதும் இழிவன்றோ?  தமிழ் மக்கள் இப்புலவர் கல்லூரிக்குப் பொருளுதவி புரிந்து தம் கடனாற்றுவார்களாக என மீண்டும் ஒரு முறை வேண்டுகோள் விடுத்தார்.  தஞ்சை வட்டக் கழகத் தலைவராக, செல்வாக்குடைய பதவியினையும், சிறந்த வழக்கறிஞர் என்னும் பெயரினையும் பெற்றிருந்த தமிழவேள் அவர்களால், தம்மிடம் ஆதரவு நாடிவரும் செல்வந்தர்களிடமிருந்து, எளிதில் பெரும் பொருளைத் திரட்டியிருக்க முடியும்.  ஆனாலும் அதனைச் செய்தாரில்லை.  அதற்கும் அவரே காரணத்தைக் கூறுகிறார். கேளுங்கள்:  பொய்யும் புரட்டும் உடையவர்களால் பெறும் பொருள், நம் சங்கத்திற்கு வேண்டியதில்லை.  தமிழ் வளர வேண்டும் என்ற விருப்பத்துடன் யாரேனும் ஒரு காசு கொடுத்தாலும் அதனைப் பெரும் தொகையாக ஏற்று மகிழ்வோம் என்றார்.

      சங்கநிதி  பதுமநிதி  இரண்டுந்  தந்து
           தரணியொடு  வானாளத்  தருவ  ரேனும்
      மங்குவார்  அவர்செல்வம்  மதிப்பேம்  அல்லேம்
           மாதமிழுக்  கேகாந்தர்  அல்லராகில்

     அங்கமெலாம்  குறைந்தழுகு  தொழுநோ  யராய்
           ஆவுரித்துத்  தின்றுழலும்  புலைய  ரேனும்
     தங்குபுகழ்ச்  செந்தமிழ்க்கோர்   அன்ப  ராகில்
           அவர்கண்டீர்  யாம்வணங்குங்  கடவு  ளாரே

தமிழ் மக்களிடம் இருமுறை கோரிக்கை வைத்தும் பயனில்லை.   இப்புலவர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக் கண்டால்தான், எனது இப்பிறவி முழுமைபெறும்.   புலவர் பட்டத்துடன் வெளிவரும் மாணவனைக் கண்ட அடுத்த விநாடியே எனது உயிர் பிரியுமானால் மிகவும் மகிழ்வேன் என்று தமிழன்பர் சிலரிடம் கூறி வருந்திய உமாமகேசுவரனாருக்கு, வெள்ளி விழாவின் போது தனது உறவினரான, திருச்சி தி.ச. பொன்னுசாமி பிள்ளை அவர்கள் தனது அறக்கட்டளையின் வருவாயினை சங்கத்திற்காக எழுதி வைக்க முன்வந்தது நினைவிற்கு வரவே, திருச்சி நோக்கிப் பயணமானார்.

தி.ச.பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளை:
திருச்சி தென்னூரில் வசித்து வந்த செல்வந்தர் திருவாளர் சண்முகம் பிள்ளை அவர்களுக்கு திருமக்களாய் உதித்தோர் மூவர்.  மூத்தவர் ச. முத்துசாமி பிள்ளை, இரண்டாமவர் ச. பொன்னுசாமி பிள்ளை, மூன்றாமவர் தி.ச. பழனிசாமி பிள்ளை ஆவர். திரு தி.ச.பழனிசாமி பிள்ளை அவர்கள் வழக்கறிஞராய் பணியாற்றி பெரும் செல்வம் சேர்த்தவர். இவர் 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் காலமானார்.   இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இல்லாததாலும், மேலும் இவர் தனது இறுதிக் காலத்தில், உயில் எதனையும் எழுதி வைக்காததாலும், இவரது சகோதரர்களே, இவரின் சொத்துக்களுக்கு வாரிசுதாரர்கள் ஆனார்கள்.  அவர்கள் விரும்பியிருந்தால் சொத்துக்களை இருவரும் பங்கிட்டுக் கொண்டிருக்கலாம்.   ஆனால் அவ்வாறு செய்தார்களில்லை. 

உண்மையின் உறைவிடமாகவும், பெருந்தன்மையின் இலக்கணமாகவும் விளங்கிய இவரது சகோதரர்கள் ச. முத்துசாமி பிள்ளை மற்றும் ச. பொன்னுசாமி பிள்ளை ஆகிய இருவரும் இணைந்து, 1930 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் நாள், தங்களது தமையனாரின் சொத்துக்களை மூலதனமாக வைத்து, அவர் பெயரிலேயே,  தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவினார்கள்.  ஈஸ்வரன் கிருபையால் எங்களுக்கு வேண்டிய சொத்துக்கள் இருப்பதாலும், எங்களுடைய பிள்ளைகளும் சம்பாதிக்கத் தக்கவர்களாயிருப்பதாலும் காலஞ்சென்ற எங்கள் சகோதரர் பழனிசாமி பிள்ளை, தனக்குப் பின் தன் சொத்துக்களைத் தரும வாசக சாலையும், தரும பள்ளிக்கூடமும் Elementary Education and Industrial School, அதாவது தன்னுடைய பள்ளிக் கூடம் விட்டுப் போகும் பொழுதே  பையன்கள் 4 அணாவாவது சம்பாதிக்கும்படியான கைத் தொழில் ஏதாவதொன்று கற்றுக் கொண்டு போக வேண்டுமென்றும், Non Brahmin Hostel and Scholarship நம்முடைய வகுப்பினர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் யோசித்தார் என்பதனைப் பதிவு செய்து இவ்வறக்கட்டளையினை நிறுவினார்கள்.  இதுமட்டுமா??!!

தங்களுக்குப் பின் இவ்வறக்கட்டளையைப் பராமரிக்க தக்கவர் யார் என்பதைக் குறிப்பிடும் போது, ச. முத்துசாமி பிள்ளை மற்றும் ச. பொன்னுசாமி பிள்ளை ஆகியோரின், கறை படியாத, நேர்மையான பெருந்தன்மையான உள்ளத்தினையும், அவர்கள் தங்கள் தமையனாரிடத்தும், அறக்கட்டளையின் பேரிலும் வைத்திருந்த பற்றும் பாசமும் வெளிப்படுவதைக் காணலாம்.   எங்கள் ஆயுசுக்குப் பிறகு, எங்களில் ச. முத்துசாமி பிள்ளையின் குமாரர்களாகிய பாலசுப்பிரமணியப் பிள்ளை, அருணாசலம் பிள்ளை மற்றும் எங்களில் ச. பொன்னுசாமி பிள்ளையின் குமாரர்களாகிய ரெத்தினசபாபதி பிள்ளை, டி. இராமலிங்கம் பிள்ளை ஆகியோரை எங்களுக்குப் பிறகு தருமங்கள் நடத்திவர நியமிக்கிறோம்.   இந்த வாரிசுகளுக்குப் பின்னால் யாருடைய ஸ்தானமாவது காலியானால், அந்த ஸ்தானத்தை மற்றவர்கள் ஒருமித்து, நம்முடைய குடும்பத்தில் தரும சிந்தனையும் யோக்கியதையும் உள்ளவருமான ஒருவரை நியமிக்க வேண்டும் என்று பதிவு செய்தனர். அறக்கட்டளையினை நிறுவியவுடன், பொன்னுசாமி , முத்துசாமி இருவரும் தரும வாசக சாலையைத் தொடங்கினர்.  பள்ளிக் கூடம், தொழிற் பயிற்சிப் பள்ளியும் நிறுவிட கட்டிடம் கட்ட அஸ்திவாரம் போட்டார்களே தவிர, போதிய வருமானம் இல்லாமையால்,  அக்கல்வி நிறுவனங்களைத் தொடங்க அவர்களால் இயலவில்லை. 

இவ்வறக்கட்டளையில் சொத்துக்கள் இருந்தனவே தவிர, அச்சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்த அளவாகவே இருந்தது. மேலும் இவ்வறக்கட்டளையினை நிறுவியவர்களில் ஒருவரான ச.முத்துசாமி பிள்ளை அவர்கள் 23.11.1934 இல் காலமானார்.  இதனால் அறக்கட்டளைப் பணிகளில் பெரிதும் தொய்வு ஏற்பட்டது.  இந்நிலையில்தான், 1938 இல் நடைபெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவில் கலந்து கொண்ட ச. பொன்னுசாமி பிள்ளை அவர்கள், அறக்கட்டளையின் வருவாயினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். போதிய முதற்பொருள் இன்மையால் சென்னைப் பல்கலைக் கழகத்தார், கரந்தைப் புலவர் கல்லூரியை அங்கீகரிக்க மறுத்ததும், கல்லூரிக்கு அங்கீகாரம் பெறுவதற்கு பல்லாற்றானும் முயன்ற தமிழவேள், இறுதியாக திருச்சிக்குப் பயணம் செய்து ச. பொன்னுசாமி பிள்ளை அவர்களைச் சந்தித்தார். இச்சந்திப்பின் பயனாக தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையின் குறிக்கோளில் சில மாற்றங்களைச் செய்யவும், அம்மாற்றங்களை அதிகாரப் பூர்வமாக பத்திரப் பதிவு செய்யதிடவும் பொன்னுசாமி பிள்ளை அவர்கள் முன்வந்தார்.  

இதன்படி, ஏழை மாணவர்கட்குத் தொழிலும் கல்வியும் அளித்து அவர்களை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் தம்பி டி.எஸ். பழனிச்சாமி பிள்ளை அவர்களும், எனது அண்ணன் டி.எஸ். முத்துசாமி பிள்ளை அவர்களும், நானும் ஆகிய மூவரும், கொண்டிருந்த எண்ணமாயிருந்தும்,  இதில் கண்டிருக்கும் சொத்துக்களைக் கொண்டே, அதை முடிப்பது முடியாத கருமமாயிருப்பதாலும்,   இதே கருத்துக்களை நிறைவேற்றும் எண்ணத்துடன் தஞ்சாவூரிலுள்ள, கருந்தட்டாங்குடி, தமிழ்ச் சங்கமானது, மாணவர்களுக்கு இல்லங்கள் அமைத்து உண்டி, உறையுள் முதலியன கொடுத்து, தொடக்கக் கல்வியும், தமிழ்ப் புலவர் கல்லூரியும் ஏற்படுத்தி, மாணவர்கட்குத் தொழிற் கல்வியும் பெற, வசதிகள் செய்து நடத்தி வருகின்றமையால், அதன் வாயிலாகவே, எமது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளுதல் சாலச் சிறந்தது எனக் கருதி,  1.11.1930 இல் நானும், முத்துசாமி பிள்ளையும் எழுதி வைத்த டிரஸ்ட் பத்திரத்தை, இப்போதைய தேவைக்குத் தக்கவாறு மாறுதல் செய்து, இதுமுதல் நடந்து வர வேண்டிய தரும பரிபாலன ஏற்பாடுகளை இதன் மூலமாக எழுதி வைக்கின்றேன் என 1940 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் நாள் திருச்சி பத்திரப் பதிவு அலுவலகத்தில், மாற்றியமைக்கப் பட்ட அறக்கட்டளையானது பதிவு செய்யப்பட்டது.

உயிர் பெற்ற கல்லூரி:
 தி.ச. பழனிசாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்து, பதிவு செய்யப்பெற்ற பத்திரத்தின் நகலினை, சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு அனுப்பி, அறக்கட்டளையின் சொத்துக்களையே, ஐம்பதாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள முதற்பொருளாக ஏற்றுக் கொண்டு, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று உமாமகேசுவரனார் கடிதம் எழுதி வேண்டினார்.  அறக்கட்டளைச் சொத்துக்களை முதற்பொருளாக, ஏற்றுக் கொண்ட, சென்னைப் பல்கலைக் கழகம், 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இக்கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்தது.  கல்லூரிக்குப் புத்துயிர் வந்தது.

கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல் முதல்வர்:
தி.ச. பழனிச்சாமி பிள்ளை அறக்கட்டளையில் மாற்றங்கள் செய்ததன் மூலம், கரந்தைப் புலவர் கல்லூரிக்கு வேண்டிய முதற்பொருள் கிடைத்து விட்டது.   ஆனாலும் கரந்தைப் புலவர் கல்லூரியானது, முதல்வர் என்று ஒருவரும் இல்லாமலேயே இயங்கி வந்தது.  எனவே முதல்வராக ஒருவரை நியமித்தாக வேண்டும்.  யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று எண்ணிய உமாமகேசுவரனாரின் மனக்கண் முன், அடுத்த நொடியே தோன்றியவர் நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களாவார்.  இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற உரையாசிரியரான நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், திருச்சியிலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் பணியாற்றி, அவ்வாண்டுதான் ஓய்வு பெற்றிருந்தார். ஒரு நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நிகழ்வுற்ற நிறைவேற்றுக் கழகக் கூட்ட நாளில், சங்கத்திற்கு நாவலர் வருகை தந்தார். கூட்டம் தொடங்குவதற்கு முன், சங்கத்திலுள்ள ஒரு வேப்ப மரத்தடியில், நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.  அப்பொழுது சங்கத்திற்கு வந்த உமாமகேசுவரனார், நாவலரைக் கண்டதும், அருகில் சென்று மார்புறத் தழுவி, கண்ணீர் மல்கத், தங்களைப் பல்லாண்டுகட்கு முன்னரேயே, சங்கத்திற்கு வந்து தமிழ்ப் பணி புரிய வேண்டினேன்.  தங்கட்குரிய பதவி இதுபோழ்து காத்து நிற்கின்றது.  கரந்தைப் புலவர் கல்லூரி சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைப்பு பெற்றுவிட்டது.  இக்கல்லூரிக்குத் தலைமை தாங்கத் தக்கார், தமிழ் நாட்டில் தங்களையன்றி வேறு யாருளர்?  தாங்கள் தடுத்துரையாது ஏற்றுக் கொள வேண்டும் என உளங் கசிந்துரைத்தார்.

தமிழவேளின் உரையைச் செவிமடுத்த நாவலர், யான் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குமேல் கல்லூரிகளிலேயே நீளத் தொடர்பு கொண்டிருந்தேன். என் வாழ்நாளின் பிற்பகுதியிலும், கல்லூரியிலேயே தொடர்பு கொள்ள வேண்டுமெனத் திருவுளக் குறிப்பிருந்தால் யான் என் செயக் கடவேன்?  தாங்கள் கூறிய மொழிகளைத் தடுத்துரைக்க அஞ்சுகின்றேன்.  சிறிது காலம் யான் நடுக்காவிரிக்குச் சென்று, ஓய்வு பெற்றிருந்து மகிழ்வுறக் காலங் கழிக்க எண்ணி வந்தேன்.  தாங்கள், என்னை வழியில் வளைக்கின்றீர்கள். சில ஆண்டுகள் எனக்கு ஓய்வு தரல் ஆகாதா? என மறு மொழி கூறினார். அதனைக் கேட்ட தமிழவேள், அய்யா அவர்களே தடுத்துரைத்தால், யான் கல்லூரித் தலைவராக யாரைத் தேடிச் செல்வது?  இத்தொண்டிற்கு, உங்களை வேண்டுகிறேன்.  இது குறித்துப் பின்னர் உரையாடுவோம். கூட்டத்திற்கெனக் குறித்த காலம் இதுவாகையால், வாருங்கள் கூட்டத்திற்குச் செல்வோம் எனப் பிணைந்த கையுடன் நாவலரை அழைத்துச் சென்றார். 
செல்லும் வழியில் நாவலர் தமிழவேளைப் பார்த்து. இது என்ன? என்றுமில்லாப் பரிவுடன் இன்று சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன், கபிலர் கையை இறுகப் பற்றினார்ப் போலப் பற்றிக் கொண்டுள்ளீர்கள் எனப் புன்முறுவல் தோன்றக் கூறினார்.  அதற்குத் தமிழவேள் பழந்தனம் இழந்ததைப் பெற்றால், யான் பற்றிக் கொள்ளாது விட்டு விடுவேனா? என்றார்.

பின்னர் தமிழவேள், ஆங்குக் குழுமியிருந்த சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பிற நண்பர்கள் முன்னிலையில், நாவலர் நாட்டாரின் புலமைத் திறன், ஆராய்ச்சித் திறன் முதலியவற்றை எடுத்துக் கூறினார். நாவலரும் அக்கணமே கல்லூரி முதல்வர் பொறுப்பை மனமகிழ்வுடன் ஏற்பதாகக் கூறி உமாமகேசுவரனாரின் நட்பிற்குத் தலை வணங்கினார். நாவலர் அவர்கள் 1941 முதல் 1944 வரை நான்காண்டுகள், கரந்தைப் புலவர் கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். நான்காண்டுகளும் ஊதியமென்று ஒரு பைசா கூட பெறாமல், உமாமகேசுவரனாரிடத்து கொண்டிருந்த நட்பிற்காகவே பணியாற்றினார்.  பல்கலைக் கழகத்தோடு இப்புலவர் கல்லூரி இணைந்த பிறகு 1942இல் முதல் வித்துவான் புகு முக தேர்விலும், 1943 இல் முதல் முதனிலைத் தேர்விலும், 1945 முதல் இறுதி நிலைத் தேர்விலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாயினர்.  இறுதி நிலைத் தேர்வில் முதன்முதலாகக் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள் ஆறு பேரும் வெற்றி பெற்றனர்.  இவர்களுள் அ.மா. பரிமணம் என்பாரும், அடுத்த சில ஆண்டுகளில், இரா. கலியபெருமாள் என்பாரும், வித்துவான் இறுதி நிலைத் தேர்வில், முதல் வகுப்பில், முதல் தரத்தில் வெற்றி பெற்று, சென்னைப் பல்கலைக் கழகத்தின் தங்கப் பதக்கப் பரிசினை வென்றார்கள். ஆனால்,  இப்புலவர் கல்லூரியில் பயின்று வெளிவரும் முதல் மாணவனைக் கண்ணாரக்காணும் நாளே என் வாழ்வில் பொன்னாள், அதுவே கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்குத் திருநாள், புலவர் பட்டத்துடன் வெளிவரும் முதல் மாணவனைக் கண்ட அடுத்த நொடியே என் உயிர் பிரியுமானால், அதை விடப் பேரானந்தம் வேறொன்றுமில்லை என்று பலவாறு கனவு கண்டிருந்த உமாமகேசுவரனாரின் வாழ்க்கையில் இயற்கை விளையாடியது. 

ஆம்; வடபுலப் பயணம் மேற்கொண்டிருந்த உமாமகேசுவரனார், தமிழகம் திரும்பாமலேயே, கரந்தைப் புலவர் கல்லூரிக்கு அங்கீகாரம் கிடைத்த அடுத்த மாதமே,  அயோத்திக்கு அருகில் உள்ள பைசாபாத் என்னும் சிற்றூரில் 9.5.1941 இல் இவ்வுலக வாழ்வைத் துறந்தார். உமாமகேசுவரனாரின் அயரா முயற்சியால், தளரா உழைப்பால் தோற்றம் பெற்ற, இக்கல்லூரி, சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், தனக்கு என்று, தனியொரு கட்டிடம் இன்றியே, இயங்கி வந்தது. பதினைந்து ஆண்டுகள் கடந்த பின்னரே, தஞ்சை நகரப் பெரு வணிகர்களின் முயற்சியால், கல்லூரிக்கெனத் தனியொரு கட்டிடம் கட்டப்பெற்றது.  கரந்தைப் புலவர் கல்லூரி என்பது வெறும் செங்கற்களாலும், மணலாலும் கட்டப்பெற்றக் கல்லூரி அன்று.  தமிழவேள் உமாமகேசுவரனாரின் அயரா உழைப்பாலும், உதிரத்தாலும், உருப் பெற்றக் கல்லூரியாகும். தி.ச. பழனிசாமி பிள்ளை, தி.ச. முத்துசாமி பிள்ளை, தி.ச. பொன்னுசாமி பிள்ளை என்னும் வள்ளல்களின், வள்ளல் தன்மையால் உயிர் பெற்ற கல்லூரியாகும். நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், சிவ. குப்புசாமி பிள்ளை, கரந்தைக் கவியரசு, வெள்ளைவாரணனார், பெரியசாமி புலவர் மற்றும் எண்ணற்ற பெயர் தெரியாத தமிழன்பர்களின் உழைப்பால், நன்முயற்சியால் உயர்ந்த கல்லூரியாகும்.

கரந்தைப் புலவர் கல்லூரியும், மாணவர் இல்லங்களும் வளர, செழிக்க, தஞ்சை நகர வணிகர்கள் ஆற்றியுள்ள சேவை அளவிடற்கரியதாகும்.  நாள்தோறும் சங்க அலுவலர்கள், கடைவீதிக்கு ஒரு சாக்குப் பையுடன் செல்வார்கள். தஞ்சை நகர வணிகர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் வருவாயின் சிறு பகுதியை சங்கத்திற்கு அன்பளிப்பாய் வழங்குவார்கள்.  பணமாக மட்டுமல்ல, அரிசியாக, காய் கனிகளாக, மளிகைப் பொருட்களாக, தங்களால் இயன்றதை, ஒரு நாள், இரு நாள் அல்ல, ஒவ்வொரு நாளும் வழங்கி,  வளர்த்த கல்லுரி, இப் புலவர் கல்லூரியாகும். கரந்தையில் மட்டுமல்ல, கரந்தையைச் சுற்றியுள்ள, கூடலூர், குலமங்கலம், அரசூர், அம்மன்பேட்டை, பள்ளியக்கிரகாரம், சுங்கான்திடல், ஆலங்குடி, ஆத்தூர் போன்ற ஊர்களில் சிறு, சிறு அரிசி அரவை ஆலைகள் அதிகமாய் இருந்த காலகட்டம் அது.  அன்றைய நாளில் அறுவடை மூலம் கிடைக்கும் நெல் மணிகளை, பத்தாயம் என்றழைக்கப்படும் சேமிப்பு கலன்களில் சேமித்து வைத்து, அவ்வப்போது உணவிற்குத் தேவைப்படும் அளவிற்கு, நெல்மணிகளை அரைத்து அரிசியாக்கிக் கொள்வார்கள். தஞ்சைப் பகுதியைச் சுற்றியுள்ள அனைத்து அரிசி அரவை ஆலைகளிலும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், ஒரு சாக்குப்பை வைக்கப் பெற்றிருக்கும். தங்களின் இல்லங்களுக்குத் தேவையான அரிசியை அரைத்துச் செல்லும் அன்பர்கள், அந்த அரிசியிலிருந்து, ஒரு கைப் பிடியோ அல்லது ஒரு படி அரிசியையோ, தங்களின் வசதிக்கு ஏற்றவாறு, சங்கத்தின் சார்பில் வைக்கப் பெற்றிருக்கும் சாக்குகளில் அன்பளிப்பாய் அளித்துச் செல்வார்கள்.  சங்க அலுவலர்கள், வாரந்தோறும் அரிசி அரவை ஆலைகளுக்குச் சென்று, சங்கத்தின் சாக்குப் பைகளில் சேர்ந்திருக்கும் அரிசியை, மாணவர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்ப்பார்கள். 

இவ்வாறாகத் தஞ்சையினைச் சுற்றியுள்ள மக்கள் அனைவரும், இது நமது சங்கம், இது நமது மாணவர்களுக்கான இல்லம், இது நமது மக்களுக்கான கல்லூரி, இச் சங்கம் பாடுபடுவது நமது மக்களுக்காக என்றுணர்ந்து, தங்களது குடும்ப வளர்ச்சியும், சங்க வளர்ச்சியும் வேறுவேறல்ல, ஒன்றே எனக் கருதி உணவிட்டு வளர்த்த கல்லூரி, இப்புலவர் கல்லூரியாகும். தமிழ்ப் பெரியோர்கள், தமிழன்பர்கள், செல்வந்தர்கள், பெரு, சிறு வணிகர்கள் என அனைவரின் தன்னலமற்ற தியாகத்தாலும், உழைப்பாலும், உதிரத்தாலும் வளர்ந்த கல்லூரி, கரந்தைப் புலவர் கல்லூரியாகும்.  இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள், இன்று இவ்வுலகு முழுவதும் பரவித் தமிழ்ப் பணியாற்றி வருகின்றனர்.  அதிலொரு மாணவர், தான் பயின்ற கரந்தையைப் பற்றிக் கூறுவதைக் கேளுங்கள்.

ஏழு வயதில் நான்
இழந்த தாயைப்
பதினெட்டு வயதில்
கரந்தையில் பெற்றேன்.

தமிழ் என்பது – வெறும்
மொழியன்று –
உணர்வு என்று
கற்பித்தது கரந்தை.

கருத்தைச் சுமக்கும்
வாகனமா தமிழ்
இல்லை – அது
தமிழனைச் சுமக்கும்
கர்ப்பம் என்று
கற்பித்தது கரந்தை.

இலக்கணம் என்று
தொல்காப்பியக் கதவு
இங்குத் திறக்கப் படவில்லை
தமிழின் இதயம் என்றே
திறக்கப் பட்டது.

பேராசிரியர்
இராமநாதன் பாடம் நடத்துவார்
ஓடாத வடவாற்று
நதி நரம்பிலும் தமிழ் புரிதல்
நடக்கும்.

பாவலர் ஏறு
கிள்ளி எறியும்
வெற்றிலைக் காம்பும்
தமிழ் சொல்லிக் கொடுக்கும்.

அடிகளாசிரியர்
நாக்கு
சொல் சொல்லாய்
ஆரத்தழுவி நடக்கும்.

பிரபுலிங்கலீலையில்
உற்பத்தியான மாயை
உடம்பெல்லாம்
கற்பனைக் கதகதப்பில்
மூச்சுவிடும்.

வைணவச் சடகோபர்
வைய மாட்டாரா
என்று
வகுப்பறையே ஏங்கும்
ஏனெனில்
வையும்போதும் – தமிழ்ப்
பழமொழிகள் பெய்யும்
அவர் உதடுகள்.

சொல் சுமந்து வராமல்
வகுப்புக்குக்
கல் சுமந்து வருபவர்
கோவிந்த ராசனார்.
வெட்டு என்றால்
அரிவாளைத் தூக்காமல்
கல்வெட்டைத் தூக்குபவர்
அவர்.

இன்றும்
நினைத்தால் பணியாளர்
சாமிநாதன் சரியாக
எனக்குள் வந்து மணியடிக்கிறார்.
எங்கள் தமிழ்ப் பாடங்களில்
ஒருபகுதி சாமிநாதன்.

என்
கவிதைகளில்
கரந்தை மண்தான்
மகரந்தம்.

கரந்தைத் தமிழ்ச்சங்கம்
கண்ட கனவுகளில்
நான் இருந்தேனோ
இல்லையோ
என் நனவுகளில்
எப்போதும் கரந்தைத் தமிழ்ச் சங்கம்.

கரந்தை மண்
கந்தக மண்
தமிழுணர்வு
வெப்பமாகத்
தகிக்கின்ற மண்.

இந்தக்
கரந்தைத் தமிழ்ச்சங்க
மண்ணில்
ஒரு சிட்டிகை
உப்புக்குப் பதிலாக
உணவில் சேர்த்துக் கொண்டால்
சொரணை செத்தவர்களும்
பிழைத்துக் கொள்ளலாம்.

கரந்தையை மட்டுமல்ல, தன் பேராசிரியர்களை மட்டுமல்ல, தான் கல்லூரியில் படித்த காலத்தில், கல்லூரி மணியினை அடித்த அலுவலகப் பணியாளர் சாமிநாதனையும் நினைவில் நிறுத்திப் போற்றியவர், எல்லாவற்றிற்கும் மேலாய் கரந்தையைத் தன் தாய்க்கு நிகராய் போற்றிய, இம்மனிதர், யார் தெரியுமா?  இவர்தான் இன்றும் வாழும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களாவார். இவரைப் போலவே, உலகறிந்த எழுத்தாளுமையான சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் திரு பிரபஞ்சன் அவர்களும் இக்கல்லூரியின் மேனாள் மாணவர் ஆவார்.  பாவலர் ஏறு கிள்ளி எறியும் வெற்றிலைக் காம்பும்,  தமிழ் சொல்லிக் கொடுக்கும் என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களால் போற்றப்பெற்ற, புகழப்பெற்ற பாவலர் ச.பாலசுந்தரனார் அவர்களும் இக்கல்லூரியின், மேனாள் மாணவர் ஆவார். திரைப் படத் துறையில் பாடலாசிரியராய் விளங்கிய தஞ்சை ராமையா தாஸ் அவர்களும், திரைப்படத் துறையில் இன்றும் புகழ் பெற்ற வசனகர்த்தாவாக தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்திருக்கும் ஆரூர் தாஸ் அவர்களும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் மாணவர்கள் ஆவர்.

இவ்வாறு எண்ணற்ற தமிழறிஞர்களை உருவாக்கிய இக்கல்லூரியானது, தற்பொழுது தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி எனப் புதுப் பெயரும், புதுப் பொலிவும் பெற்று தமிழோடு, இயற்பியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல்  எனப் பலப் பலப் புதுத் துறைகளோடு இயங்கி வருகின்றது.
 





No comments:

Post a Comment