Sunday, April 12, 2020

பயத்துடன் வாழப் பணித்தாயோ

பயத்துடன் வாழப் பணித்தாயோ

 ——    கவியாழி. கண்ணதாசன்


மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே
மறந்ததை இழந்ததை அறிவாயோ
புகழ்ச்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும்
பூமியில் தினமும் வணங்குகிறோம்

இயற்கையை மனிதன் அழித்ததனால்
இளமையில் உழைக்கத் தவறியதால்
உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின்
உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ

மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு
மானிடம் மறந்ததை அறிந்தாயோ
மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை
மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ

பிழைக்கவும் வழியே தெரியாமல்
பிணமாய் மக்கள் உயிர்வாழும்
பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே
பயத்துடன் வாழப் பணித்தாயோ

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி
தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம்
நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று
நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ

தினம் பலபேர் மடிவதால்
தீங்கு செய்யும் மக்களுக்குப்
பணமும் பொருளும் பயனின்றி-மக்களின்
பாசம் நேசம்  பகிர்ந்தாயோ

அழிவுப் பாதையை அறிந்தாயோ
அழிக்கும் வேலையும் இதுவன்றோ
இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும்
இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே

பூமியின் சுழற்சியைப் புரிய வைக்கப்
புத்துயிர் மக்களைத்  தெளிய வைக்க
நித்தமும்  நிம்மதி இழக்கச் செய்து-மனிதன்
சித்தமும் கலங்கிடச் செய்தாயோ



தொடர்பு: கவியாழி. கண்ணதாசன் (https://www.facebook.com/kannadasanr)




1 comment: