Tuesday, May 7, 2019

சூளவம்சம் நூல் சொல்லும் செய்தி - பகுதி 7

*பகுதி 7 - தொடர்கின்றது.*

சூளவம்சம் - நூல் வாசிப்பு
நூலாசிரியர் - முனைவர்.க.குணராசா

பதிப்பு - கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்

-முனைவர் க.சுபாஷிணி





          இராஜசிங்கனின் ஆட்சிக்காலத்தில் சூரிய வம்சத்தைச் சார்ந்த ஒரு இளவரசன் கொழும்புக்கு வந்தான் என சூளவம்சம் குறிப்பிடுகிறது. அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்ற குறிப்பு ஏதுமில்லை. அவன் சூரியவம்சத்தைச் சார்ந்தவன் என்பது மாத்திரம் இங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. அவன் கொழும்பில் தங்காமல் இந்தியாவின் கோவாவுக்குச் சென்று அங்கு தங்கியிருந்து விட்டு பின் மீண்டும் இலங்கைக்கு வந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகின்றது. இராஜசிங்கன் இறந்ததும் இந்த இளவரசன் ஸ்ரீ வர்த்தனா நகரத்தில் விமலதர்மசூரியன் என்ற அரச பெயருடன் அரியணை ஏறினான். கண்டி நகரைச் சுற்றி பெரிய உயரமான மதில்களை அமைத்து 18 கோபுரங்களையும் அமைத்து பெரிய அரண்மனை அமைத்து அதில் அவன் வசித்து வந்தான். அதுமட்டுமன்றி லபுஜகம (டெலிகம) என்ற கிராமத்திலிருந்த புனித தந்ததாதுவைத் தனது இருப்பிடத்திற்கு வரவழைத்து தனது அரண்மனைக்குப்பக்கத்தில் ஒரு கோயிலை அமைத்து அங்கே புனித தந்ததாதுவை வைத்துப் பாதுகாத்தான் என சூளவம்சம் சொல்கிறது..

          அவனுக்குப் பின்னர் செனரத்ன என்பவன் அரசனாக முடி சூடிக்கொண்டான். அந்த சமயத்தில்தான் போர்த்துக்கீசியர்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றனர். சூளவம்சம் சரியாக எந்த ஆண்டு என்பதைக் குறிப்பிடவில்லை. போர்த்துக்கீசியர்கள் பற்றி சொல்லும்போது சக்தி வாய்ந்த சில வர்த்தகர்கள் என்று குறிப்பிடுகின்றது. இந்த பரங்கியர்கள் குரூரமான மனம் கொண்டவர்கள் என்றும், சிங்கள மக்களுக்குத் தொல்லை தருபவர்கள் என்றும், பெண்களின் கற்பை சூறையாடுபவர்கள் என்றும், சிங்கள மக்களின் வீடுகளைக் கொள்ளையிடுபவர்களாகவும், கிராமங்களை அழிப்பவர்களாகவும் விளங்கியதாக சூளவம்சம் கூறுகின்றது. இவர்கள் சில பாதுகாப்பான கோட்டைகளை ஆங்காங்கு அமைத்துக் கொண்டனர் என்ற செய்தியும் இடம் பெறுகின்றது.

          செனரத்ன பரங்கியர் நாசமாக்கிவிடாதவாறு புனித தந்ததாதுவைக் காடுகளில் மிகப் பத்திரமாக பாதுகாத்து வந்தான். அவன் தனக்கும் தனது தமையனின் மகன்களுக்கும் இலங்கை ராஜ்யத்தை எவ்வாறு பங்கிட வேண்டும் என்று மூன்று பனை ஓலைகளில் எழுதி தந்த பேழைக்குள் வைத்தான். மலைநாட்டின் பொறுப்பை தன் மகனுக்கு அளித்து இலங்கையின் அரசனாக முடி சூட்டி விட்டு இறந்தான்.

          அவனுக்குப் பின்னர் மூன்று இளவரசர்களும் பரங்கியர்களுக்கு எதிராகப் போரிட்டனர். மூன்றாவது இளவரசனான ராஜசிங்கன் இலங்கை முழுவதற்கும் மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இராஜசிங்கனை கொல்வதற்குப் பல முயற்சிகள் நடைபெற்றன. போர்த்துக்கீசியர்களை எதிர்த்து தொடர்ச்சியாக ராஜசிங்கன் போர் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருந்தது. அந்தச் சமயத்தில் கரையோரத்தில் டச்சுக்காரர்கள் வந்து தங்கி இருப்பதை அவன் கேள்விப்பட்டான். தனது மந்திரிகள் இருவரை டச்சுக்காரர்களிடம் தூது அனுப்பி ஏராளமான கப்பலுடன் தன் நாட்டிற்கு வந்து தன்னைப் பாதுகாக்கும் படி கேட்டுக் கொண்டான். போர்த்துக்கீசியர்களை டச்சுக்காரர்கள் எதிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டான். இலங்கையை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றும் பொறுப்பை ஒல்லாந்தரிடம், அதாவது டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்தான். பின்னர் மதுரையிலிருந்து இளவரசி ஒருத்தியை வரவழைத்து அவளைப் பட்டத்து ராணியாக ஆக்கிக் கொண்டான். அதன் பின்னர் 52 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது.

          அவனுக்குப் பின்னர் ராஜசிங்கனின் மகனான விமலதர்மசூரியன் ஆட்சியைக் கையில் எடுத்தான். அவனும் மதுரையிலிருந்து ஒரு அரசகுமாரியை வரவழைத்து திருமணம் செய்து கொண்டு பட்டத்துராணி ஆக்கிக் கொண்டான். இவன் மூன்று அடுக்கில் ஒரு கோயிலைக் கட்டி (தலதா மாளிகை) அதில் தந்த தாதுவைப் பிரதிஷ்டை செய்தான். ஆண்டுதோறும் புனித தந்த தாதுவிற்கு விழா எடுத்தான். பிக்குகளைப் பராமரித்தான். இவன் 22 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தான் என்று சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படும் தலதா மாளிகையே இன்று கண்டியில் நாம் காணும் புனித மாளிகை. இங்குதான் கௌதம புத்தரின் பல் இருப்பதாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆக, இது கட்டப்பட்ட காலத்தை நோக்கும் போது அனேகமாக இந்த மன்னனின் ஆட்சி கி.பி 16ம் நூற்றாண்டு என உறுதியாகக் கூறலாம்.

          அதற்குப் பின்னர் அவனது மகனான வீர பராக்கிரம நரேந்திர சிங்கன் ஆட்சிபீடம் ஏறினான். அவனும் மதுரையிலிருந்து இளவரசிகளை வரவேற்று மணந்து கொண்டான். இவனும் பௌத்த நெறிகளைப் போற்றி பாதுகாத்தான். தங்க தாது இருந்த மாளிகையின் சுவர்களில் 32 ஜாதக கதைகளையும் ஓவியமாக வரைய வைத்தான்.

          விமலதர்ம சூரியனுக்குப் பின்னர் அவனது இளைய சகோதரன் ஸ்ரீ விஜய ராஜசிங்கன் அரசனானான். அவனும் மதுரையிலிருந்து அரச குலப் பெண் ஒருத்தியை அழைத்து வந்து தனது பட்டத்து ராணியாக ஆக்கிக்கொண்டான். இவனும் பௌத்த சமயத்தைச் சிறப்புடன் பேணிவந்தான். இவன் மனைவியைப் பற்றிச் சொல்லும்போது ”பிறப்பிலிருந்து பொய்யான சமயத்தைப் பின்பற்றி வந்த மகாராணியும் நேர்மையான சமயத்திற்கு மாறினார்” என்று குறிப்பிடுகிறது. அதாவது, அனேகமாக சைவ சமயத்தில் மகாராணி இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறினார் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்.

          அந்தச் சமயத்தில் பரங்கியர்கள், அதாவது போர்த்துக்கீசியர்கள், இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி அவர்கள் பணத்தாசைக் காட்டி பொதுமக்களைத் தங்களது சமயத்திற்கு மாற்றினர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. அதாவது, போர்த்துக்கீசியர்கள் கத்தோலிக்க கிறித்தவ சமயத்திற்கு இலங்கை மக்களை மாற்றினார்கள் என்பதை சூளவம்சம் இவ்வாறு குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.

          ஸ்ரீ விஜய ராஜசிங்கன் இறந்த பிறகு அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் அரசனானான். அந்தக் காலகட்டத்தில் டச்சுக்காரர்களும் தங்களது கிருத்துவ மதத்தை இலங்கை மக்களிடையே பரப்பும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிகின்றது. அதனால் டச்சுக்காரர்களை அடக்கி வைக்க வேண்டுமென்று அவன் முயற்சி மேற்கொண்டான். அவனது படையினர் டச்சுக்காரர்களின் கோட்டைகளையும் வீடுகளையும் கைப்பற்றி அழித்தனர். ஆனால் டச்சுக்காரர்கள் இதற்குச் சளைக்காமல் தமது போர் வீரர்களுடன் மலாய்க்காரர்களைச் சேர்த்துக்கொண்டு மன்னனின் படைகளைத் தாக்கினர். மன்னன் தன் மனைவி, இளவரசர்கள், ஏராளமான சொத்துக்கள் ஆகியவற்றுடன் காட்டுப்பகுதியில் ஒளிந்திருந்தான். பிறகு டச்சுக்காரர்களுடன் சமாதானம் செய்துகொண்டு மீண்டும் ஆட்சியை நடத்தினான். தந்த தாதுவைக் கோயிலில் வைத்து பௌத்த சமயத்தைப் பாதுகாத்தான். ஒல்லாந்தர் மன்னனுடன் அவன் சமாதானம் செய்து கொண்டான்.

          கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் மரணத்திற்குப் பிறகு அவனது இளைய சகோதரனான ராஜாதி ராஜ சிங்கன் அரசனானான். அவன் காலத்தில் தாய்லாந்திலிருந்து உபாலி என்ற தேரரின் தலைமையில் இலங்கைக்குப் பிக்குகள் சிறிவர்த்தன நகருக்கு அருகில் வந்து தங்கி இருந்ததாக சூளவம்சம் கூறுகின்றது. இந்த மன்னனுக்குப் பிறகு அவனது சகோதரியின் மகனான ஸ்ரீ விக்ரம ராஜ சிங்கன் என்பவன் அரசன் ஆனான்..அவனே சூளவம்சத்தின் வரலாறு கூறும் மன்னர்கள் பட்டியலில் இறுதியானவன். அவன் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்களோடு நட்புறவு பாராட்டினான் என்றும், அமைச்சர்கள் பலரையும் சிரச்சேதம் செய்தான் என்றும், இரக்கமில்லாத கொள்ளையனாக இவன் இயங்கினான் என்றும், மக்கள் இதனால் பாடுபட்டனர் என்றும் சூளவம்சம் குறிப்பிடுகிறது. இதன் காரணமாகக் கொழும்பு மக்களால் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்றும், அதன் பின்னர் இலங்கை ராஜ்யம் ஆங்கிலேயர்களால் அபகரித்துக் கொள்ளப்பட்டது என்றும் சூளவம்சம் கூறி நிறைவு செய்கிறது.

          சூளவம்சம் கூறும் செய்திகள் வரலாற்று ரீதியாகப் பல தகவல்களை விவரிப்பதாக இருந்தாலும், ஆங்காங்கே செய்திகள் திரிக்கப்பட்டும், தகவல்களை மிகைப்படுத்தி சார்புத்தன்மையுடன் எழுதப்பட்டும் இருப்பதாகவே சிந்திக்கத் தோன்றுகிறது. உதாரணமாக, இறுதியில் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் டச்சுக்காரர்களால் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான் என்ற செய்தி சூளவம்சத்தில் இல்லை. மாறாக மக்கள் நாடு கடத்தினர் என்று செய்தி குறிப்பிடப்படுகிறது. ஆக சூளவம்சம் கூறும் வரலாற்றுச் செய்திகள் பலவற்றை ஆராயும்போது, சமகாலத்து ஆவணங்கள் பலவற்றையும் அதனோடு ஒப்பிட்டுப் பார்த்து காலங்களை நிர்ணயிப்பதோடு மட்டுமல்லாது, செய்திகளில் உள்ள நம்பகத்தன்மையையும் சோதிக்க வேண்டியது அவசியமாகின்றது. எதுவாகினும், இன்று நமக்குக் கிடைக்கின்ற முக்கிய இலங்கை பற்றிய ஆவணங்களில் சூளவம்சம் மிகமுக்கியமானதொரு வரலாற்றுக் களஞ்சியம் என்பதில் மறுப்பு ஏதும் இல்லை..

          உலகெங்கிலும் நிகழ்ந்த பண்டைய அரசுகளின் வரலாற்றை வாசிக்கும் போது இரத்தக் கறை படிந்த அரச வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவே மன்னர்களின் வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். துரோகம், கடும் தண்டனைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள், மக்கள் அரசுகளால் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்ட சூழல் என்றே வரலாறு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். இவை அனைத்தும் பெரும்பாலும் மதங்களின் பெயர்களாலேயே மன்னர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதையும் நாம் ஒதுக்கி விடமுடியாது. இலங்கையின் வரலாறும் இதற்கு விதிவிலக்கல்ல.

          இலங்கையின் பௌத்தம் வைதீக சாத்திரத்தின் ஒன்றாகிய மனு நீதியை உள்வாங்கிக் கொண்ட பௌத்தமாகவே அரசர்களால் முன்னெடுக்கப்பட்டிருப்பதை சூளவம்சம் தெளிவுடன் வெளிப்படுத்துகின்றது.

          இலங்கை இனக்குழுக்களிடையே தொடர்ச்சியான சண்டைகளையும், போர்களையும், கொடூரமான வாழ்க்கை நிலையையும் சந்தித்து வந்த நாடு. துரதிருஷ்டவசமாக அது இந்த நூற்றாண்டிலும் தொடர்கின்றது!

(புகைப்படக் குறிப்பு - ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் மனைவி. (கி.பி. 1798 - 1815) - வேங்கட ரங்கஜம்மாள் தேவி பாண்டிய மன்னர் பரம்பரை சார்ந்த தெலுங்கு இளவரசி, கடந்த அக்டோபர் 2018 நான் யாழ்ப்பாணத்தில் யாழ் அருங்காட்சியகத்தில் பதிந்த புகைப்படம்)


-  முனைவர் க. சுபாஷிணி





No comments:

Post a Comment